எல்லோருக்கும் தேவன் தனது சித்தத்தை வெளிப்படுத்துவார்

 ஆதவன் 🖋️ 582 ⛪ செப்டம்பர் 01,  2022 வியாழக்கிழமை

என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்." ( எரேமியா 33 : 3 )

இன்று பெரும்பாலும் மக்கள், அதுவும் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மக்கள், தங்கள் எதிர்காலங்களை அறிந்துகொள்ளவும், தற்போதைய பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் ஊழியர்களைத் தேடி ஓடும் அவலம் உள்ளது. இது பணம் சம்பாதிக்கும் எண்ணமுள்ள ஊழியர்களுக்குச் சாதகமாக உள்ளது. இதுவே இன்றைய கிறிஸ்தவத்தின் சாபக்கேடாகவும் இருக்கின்றது.

நமது தேவன் பாரபட்சம் காட்டும் தேவனல்ல. எல்லோரையும் ஒரேபோல அன்பு செய்யும் தெய்வம் அவர். குறிப்பிட்டச் சிலருக்கு தேவன் சில காரியங்களை வெளிப்படுத்தலாம். அது அவர்கள் தேவனோடு கொண்டுள்ள உறவைப் பொறுத்ததே தவிர வேறு அதிசயமல்ல. தேவனோடுள்ள இந்த உறவை எல்லோரும் பெறலாம், பெறவேண்டுமென்று தான் தேவனும் விரும்புகின்றார். தேவனோடு உறவுள்ள வாழ்க்கை வாழ்வோமானால் அப்படி வாழும் எல்லோருக்கும் தேவன் தனது சித்தத்தை வெளிப்படுத்துவார்.  

இப்படி தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்து வருவோமானால், இன்றைய வசனம் கூறுவதுபோல அவர் நமக்குப் பதில் தந்து நாம் அறியாததும் நமக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை அறிவிப்பார். 

தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை என்றவுடன் அது நம்மால் முடியாது என்று பலரும் திகைக்கின்றனர். எனவேதான் இவர்கள் தற்காலிக விடுதலைவேண்டி ஊழியர்களை நாடுகின்றனர். பெரும்பாலான தீர்க்கதரிசன ஊழியர்கள் தங்களை தேவனோடு நெருங்கிய உறவுள்ளவர்கள் எனக் காட்டிக்கொள்ளவேண்டி போலியான அல்லது வேதத்துக்கு முரணான செயல்களில் ஈடுபட்டு மக்களைக் கவர்கின்றனர். 

வேதாகமத்தில் இயேசு கிறிஸ்து மக்களுக்குச் சுகம் அளிக்குமுன் பல இடங்களில் முதலில், "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றுதான் கூறுகின்றார்.  அதாவது நாம் நமது பிரச்சனைகளையும் நோய்களையும் பிரதானமாகப் பார்க்கின்றோம், ஆனால் தேவனோ நமது பாவங்களையே பிரதானமானதாகப் பார்க்கின்றார். 

ஆனால் இன்றைய எந்த ஊழியக்காரனும் இதனை மக்களுக்குச் சொல்வதுமில்லை, மக்களது பாவங்களை உணர்த்திக் கொடுப்பதுமில்லை. அவர்களே பாவங்களில் மூழ்கியிருப்பதால் அதுபற்றி மக்களிடம் தைரியமாக எடுத்துக்கூற அவர்களது மனச் சாட்சியே அவர்களைக் குத்துவதும் இப்படிக் கூறாமல் இருக்கக் காரணமாக இருக்கலாம். எனவே இவர்கள் கூறுவது தேவ வாக்கு என நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவேதான் தேவன் கூறுகின்றார், "உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." ( எரேமியா 23 : 16 )

இந்த வசனத்தை வாசிக்கும்போது எந்த தீர்க்கதரிசியையும் நாம் நம்பவேண்டாம் என்று பொருளாகின்றது. ஆனால், உண்மையான தீர்க்கதரிசிகளும் உள்ளனர். (அவர்கள் விசுவாசிகளிடம் பணம் பறிக்கும்  திட்டங்களைச் செயல்படுத்த மாட்டார்கள்) அவர்கள் கூறுவது தேவனோடு உறவுகொண்டு வாழும் விசுவாசிகளுக்கு தேவன் ஏற்கெனவே கூறிய வார்த்தைகளை அவர்களுக்கு உறுதிப்படுத்துவதாக இருக்கும்.

அன்பானவர்களே, தீர்க்கதரிசன ஊழியர்களைத் தவிர்த்து, தேவனுக்கு ஏற்ற ஒரு வாழ்க்கை வாழ்ந்து, இன்றைய வசனம் கூறுவதுபோல,  அவரை நோக்கிக் கூப்பிடுவோம், அப்பொழுது அவர் நமக்கு உத்தரவு கொடுத்து, நாம் அறியாததும் நமக்கு  எட்டாததுமான பெரிய காரியங்களை நமக்கு அறிவிப்பார்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                               

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்