ஆசை துன்பத்துக்குக் காரணமா?

 ஆதவன் 🖋️ 555 ⛪ ஆகஸ்ட் 05, 2022 வெள்ளிக்கிழமை

"பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்." ( 1 தீமோத்தேயு 6 : 10 )

ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்றார் புத்தர். ஆனால் இது முற்றிலும் சரியென்று கூறிட முடியாது. காரணம் நியாயமான ஆசைகளும் உண்டு. அப்படி எந்த ஒரு ஆசையும் இல்லையானால் ஒருவர் உலகினில் வாழவேமுடியாது. மேலும் ஆசையே நம்மை இந்த உலகினில் நல்ல செயல்கள் செய்யவும் பல வேளைகளில் காரணமாக இருக்கின்றன. பல விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஆராய்ச்சிசெய்த விஞ்ஞானிகளின் ஆசையின் விளைவுகள்தான்.

பண உதவிசெய்து ஒரு ஏழையை படிக்கவைக்கவேண்டுமென்று பலர் எண்ணுகின்றனர். இது அநியாயமான ஆசையே. கிறிஸ்துவுக்கு உண்மையான ஊழியம் செய்யவேண்டுமென எண்ணுவது பலரது ஆசை. அன்னை தெரேசா பல தொழுநோயாளிகளைத் தொட்டு உதவினார். இதுவும் கிறிஸ்து கூறியதைப்போல எல்லோரையும் சகோதரர்களாக பார்க்கவேண்டுமென்ற ஆசையால்தான். ஆவிக்குரிய மனிதர்கள் பரலோகத்தை அடைய எண்ணுவதும் ஆசைதான். 

ஆனால் பவுல் அப்போஸ்தலர் இங்கு வித்தியாசமாகத் தெளிவாகக் கூறுகின்றார்,  "பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது" என்று. இதுவே சரியான கருத்தாக இருக்க முடியும். ஏனெனில் பண ஆசை உள்ள பணவெறியன் எந்தக் கொடூரச் செயலையும் செய்யத் தயங்கமாட்டான்; மேலும் பணத்தைச் சேர்க்கவேண்டுமெனும் வெறியில் எந்த அவலட்சணமான செயலையும் துணிந்து செய்வான். இதனால் பல்வேறு இக்கட்டுகளிலும்  மாட்டிக்கொள்கிறான். 

மிகப்பெரிய மரியாதைக்குரிய பதவிகளில் இருக்கும் சிலர் அற்பத்தனமான பண ஆசையால் பல்வேறு தில்லுமுல்லுகள் செய்து பணம் சம்பாதித்துவிட்டு இறுதியில் ஏதோ சந்தர்ப்பத்தில் போலீஸ் ரெய்டு, வருமான வரி அதிகாரிகளது விசாரணை, சிறைவாசம் என சிக்கிக்கொள்வதும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்வதும் இல்லையானால் அந்த மனவேதனையில் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி அவதிப்படுவதும் நாம் இந்த உலகினில் காணக்கூடிய நிலைமைதான். 

ஆனால், பவுல் அடிகள் இங்குக் கூறுவது விசுவாசிகளைக்குறித்து. கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொண்டு ஆவிக்குரிய வாழ்வு வாழும் சிலர் பண ஆசையால் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள் என்கின்றார். விசுவாசிகள் மட்டுமல்ல பல ஊழியர்களும் இப்படிப் பண ஆசையில் சிக்கி தங்கள் ஊழியத்தையும் ஆவிக்குரிய வாழ்வையும் இழந்து தங்கள் ஆத்துமாக்களை உருவ குத்திக்கொண்டிருக்கிறார்கள். 

நியாயமான முறையில், தேவன் நமக்கு உலகினில் அளித்துள்ள வேலைகளின் படியும், தனியாகத்  தொழில் செய்வோமென்றால், அரசு விதிகளுக்குட்பட்டும்  நாம் சம்பாதிக்கவேண்டும்.  நமது குடும்ப எதிர்கால தேவைகளுக்கு அந்தப்பணத்தில் சேர்த்துவைப்பதில் தவறில்லை. ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் நாம் பண வெறியர்களாக மாறிவிடக்கூடாது. 

என்னிடம் பணம் இருகிறது, யாரும் என்னை ஒன்றும் செய்ய முடியாது; என்னிடம் பணம் இருக்கிறது நான் நினைத்ததைச் செய்வேன்; என்னிடம் பணம் இருக்கிறது எனவே எவனையும் நான் மதிக்கத் தேவை இல்லை.  இந்தப் பணத்தால்  சொத்துக்குமேல் சொத்து வேண்டும்,   அதிகாரத்தைப் பெறவேண்டும்.......இத்தகைய எண்ணங்களே பண வெறியன்  கொண்டுள்ளது. நம்மிடம் இத்தகைய குணங்கள் இருந்தால் நாம் கிறிஸ்தவர்களும் அல்ல, கிறிஸ்துவிடம் விசுவாசம் கொண்டுள்ளேன் என்று நாம் கூறுவதும் பொய். அப்படியானால் பவுல் கூறுவதுபோல  நாம் விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே நம்மைக் குத்திக்கொண்டிருக்கிறோம் என்றே பொருள். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்