நமது உள்ளங்கள் உடைக்கப்படவேண்டும்;

 ஆதவன் 🖋️ 578 ⛪ ஆகஸ்ட் 28, 2022 ஞாயிற்றுக்கிழமை


"பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்." ( சங்கீதம் 51 : 16, 17 )

மனம் திரும்புதல் இல்லாத பலிகள் கர்த்தருக்கு ஏற்புடையதல்ல என்று இன்றைய வசனம் நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. நொறுங்குண்ட எளிய இதயத்திலிருந்து வரும் வேண்டுதல்கள் பலிகளைப் பார்க்கிலும் மேலானவை. தனது அனுபவத்திலிருந்து இதனை உணர்ந்துகொண்டதால் தாவீது இந்த வார்த்தைகளைப்  பேசுகின்றார்.  

பழைய ஏற்பாட்டுக்காலத்தில்;  காளைகளும், எருதுகளும், ஆடுகளும் பலியிடபட்டக் காலத்தில் தாவீது இதனைக் கண்டுகொண்டது தேவனது கிருபையால்தான். 

நியாயப்பிரமாண காலத்துப் பலிகள் செல்வாக்கு மிக்கவர்களால் தங்களது அந்தஸ்து பகட்டை வெளிப்படுத்தப் பலவேளைகளில் செலுத்தப்பட்டன. "இத்தனை ஆடு மாடுகளை பலி செலுத்தினேன்" என்று கூறுவது சில மக்களுக்குப் பெருமையாக இருந்தது. ஆம், உண்மையான தேவ அன்பு இல்லாமல் சமூகத்தில் தங்களது பெருமையை நிலைநாட்டவும், பிறர் தங்களைப் புகழவேண்டும் எனும் உள்நோக்கம் கொண்டவையாகவும் பலிகள்  மாறிவிட்டன. 

எனவேதான் தாவீது கூறுகின்றார், "நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்." ( சங்கீதம் 34 : 18 ) . அதிகமான ஆடு மாடுகளைப்  பலி செலுத்தியவர்களையல்ல, மாறாக நொறுங்கிய உள்ளமுள்ளவர்களுக்கும் நறுங்குண்ட ஆவியுள்ளவர்களுக்கும் கர்த்தர் சமீபமாக இருந்து அவர்களை இரட்சிக்கின்றார்.


இயேசு கிறிஸ்துவும் கூறினார், "ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது." ( மத்தேயு 5 : 3 )

அன்பானவர்களே, இன்றும் பல மனிதர்கள் திருந்தாமல் தங்கள் பெருமைகளையும் பண, பதவி அந்தஸ்தையும் ஆலயங்களில் வெளிக்காட்டுவதை பல இடங்களில் நாம் காண முடியும். தேவன் ஒன்றுமில்லாதவரோ, நாம் கொடுத்துதான் நிறைவடைய வேண்டியவரோ அல்ல. அதிகமான பொருட்களை ஆலயங்களுக்குச் செலுத்துவதால் தேவன் நமது பாவங்களை மன்னிக்கப்போவதுமில்லை. 

நமது உள்ளங்கள் உடைக்கப்படவேண்டும்; ஐயோ..நான் இப்படிபட்டப் பாவத்தைச் செய்துவிட்டேனே என உள்ளம் குத்தப்பட்டு உள்ளத்தில் நமது ஆவியில் வேதனைப்படவேண்டும். அதனை தேவன் விரும்புகின்றார். பலர் இரட்சிப்பு அனுபவத்தைப் பெறாமல் இருக்கக் காரணம் உள்ளத்தில் பெருமைகொண்டு, தங்கள் ஆவிக்குரிய நிலைமையை உணராமல் இருப்பதால்தான். 

அன்பானவர்களே, தேவன் பலியையும் காணிக்கைகளையும்  விரும்புகிறதில்லை. மாறாக அவர் விரும்புவது  நொறுங்குண்ட ஆவிதான். தவறான சிந்தனைகளோ செயல்பாடுகளோ நம்மிடம் இருந்திருக்குமேயானால் மெய் மனஸ்தாபத்துடன் தேவனிடம் திரும்புவோம். 

நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தைத் தேவன் புறக்கணிப்பதில்லை. 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்