கிறிஸ்து நமக்குள் வரும்போது நாம் ஜீவனுள்ளவர்கள் ஆகின்றோம்.

 ஆதவன் 🖋️ 569 ⛪ ஆகஸ்ட் 19, 2022 வெள்ளிக்கிழமை

"குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்." ( 1 யோவான்  5 : 12 )

இந்த உலகத்தில் உயிருள்ள பொருட்கள் உயிரில்லாத பொருட்கள் என பல்வேறு பொருட்கள் உள்ளன. உயிருள்ள பொருட்கள் உணவு உட்கொள்ளும், வளரும்,  தனது இனத்தைப் பெருக்கச்செய்யும், பலன்தரும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். ஆனால், உயிரில்லாதவை எதனையும் செய்யாது. கிடந்த இடத்தில கிடக்கும்.

ஒரு கல், வீட்டிலுள்ள மேஜை, நாற்காலி போன்ற பொருட்கள் ஒரு இடத்தில எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் மற்றவர்கள் அதனை மாற்றினாலொழிய அதே இடத்தில்தான் கிடக்கும்.

இன்றைய வசனத்தில் தேவன் குமாரன் இல்லாத வாழ்க்கை உயிரில்லாத வாழ்க்கை என்பதனைக்  கூறுகின்றார். அதாவது குமாரனான இயேசு கிறிஸ்து ஒருவனுக்குள் இல்லையானால் அவன் உயிரில்லாத பொருளுக்குச் சமம் என்கின்றார். 

கிறிஸ்து இல்லாத மனிதன் வெளிப்பார்வைக்கு வளர்ச்சியடைந்தவன் போலவே தெரிவான். பொருளாதாரத்திலும், பதவியிலும் கிறிஸ்து இல்லாத மனிதன் செழிப்படைந்தவன்போலத் தெரிவான். ஆனால், கிறிஸ்துவின் ஜீவன் உள்ளவன் வெளிப்பார்வைக்கு வளர்ச்சியில்லாதவன் போலத் தெரிந்தாலும்   உள்ளான தேவனுக்கேற்ற வளர்ச்சி பெற்றவனாக வாழ்வான். 

குமாரனில்லாத மனிதன் உயிரற்ற பொருள்போல, வளர்ச்சியற்றவனாக, தன்னைக்கொண்டு மற்றவர்களுக்கு பலனில்லாமல், கனிகொடுக்கும் ஒரு வாழ்க்கை இல்லாமல், பாவ உணர்வில்லாதவனாக இருப்பான்.  

இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கும்போது அவர் நமக்குள் வருகின்றார். நமது பாவங்களை மன்னித்து நம்மைத் தனக்கு ஏற்புடையவன் (ள் ) ஆக்குகின்றார். இப்படி தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து நமக்குள் வரும்போது நாம் ஜீவனுள்ளவர்கள் ஆகின்றோம். 

உயிரில்லாத பொருட்கள் ஒரே இடத்தில கிடக்கும்போது அவை துரு ஏறி கெட்டுப்போகலாம், மரப் பொருட்கள் என்றால் உளுத்துப் போகலாம். ஆனால், நமக்குள் குமாரனான கிறிஸ்து வரும்போது நாம் பெலனுள்ளவர்கள் ஆகின்றோம். அந்த பலத்தால் இந்த உலகத்தை ஜெயித்தவர்களாக மாறுகின்றோம். "இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?" ( 1 யோவான்  5 : 5 ) என்று கேள்வி எழுப்புகின்றார் யோவான். 

அன்பானவர்களே, நாம் ஜீவனுள்ளவர்களாக உலகத்தில் வாழ்ந்து கனிகொடுப்பவர்களாக, மற்றவர்களுக்கு பயன்தருபவர்களாக வாழவே அழைக்கப்பட்டுளோம். இப்படி வாழும்போது நாம் உலக மக்களின் பார்வைக்கு அற்பமாகத் தெரிந்தாலும், தேவனது பார்வையில் வலுவானவர்களாக, இந்த உலகத்தை ஜெயிப்பவர்களாக இருப்போம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்