"நான் தனித்திரேன், கிறிஸ்து என்னுடனேகூட இருக்கிறார்"

 ஆதவன் 🖋️ 533 ⛪ ஜுலை 14, 2022 வியாழக்கிழமை


"இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்." ( யோவான் 16 : 32 )

தனித்திருத்தல் என்பது மிகுந்த துன்பம் தரக்கூடியது. இந்தத் துன்பம் அனைவருக்குமே ஏதோ ஒரு காலத்தில் வரக்கூடும். எல்லாவிதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவும் இந்தத் தனித்திருத்தலை அனுபவித்தார். 

அதனையே அவர், "நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது". என்று குறிப்பிட்டார். உலக மனிதர்கள் இந்தத் தனித்திருத்தலை எளிதில் தாக்கிக்கொள்ளமுடியாது. மகன் இறந்த துக்கம், மனைவி இறந்த துக்கம், கணவன் இறந்த துக்கம் தாங்க முடியாமல்  பலர் தற்கொலை செய்வதுண்டு. நாம் பத்திரிகைச் செய்திகளில் பல நேரங்களில் இதனை வாசித்திருக்கலாம். 

ஆனால் இயேசு கிறிஸ்து எல்லோராலும் கைவிடப்பட்டவராக, தனித்திருப்பவராக,  உலகத்துக்குத் தெரிந்தாலும் அவர் உண்மையில் தனித்திருக்கவில்லை. அவரோடு பிதாவாகிய தேவன் எப்போதும் இருந்தார். எனவேதான்  "நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்." என்று கூறுகின்றார். எல்லோராலும் கைவிடப்பட்டாலும் பிதா அவரைக் கைவிடவில்லை. 

அன்பானவர்களே, இன்று ஒருவேளை உலகப்பிரகாரமான தனித்திருத்தலில் இதை வாசிக்கும் நீங்கள் இருக்கலாம். பெற்ற பிள்ளைகள்  ஒருவேளை கைவிட்டு இனி என்ன செய்வது எனக் கலங்கிக்கொண்டிருக்கலாம்.  கை பிடித்தக் கணவன் கைவிட்டிருக்கலாம்.  ஆனால் நம்மைப் படைத்து நம்மோடு இருக்கும் தேவன் நம்மைத் தனித்திருக்க விடமாட்டார். அவர் கூடவே இருக்கிறார் என்று விசுவாசியுங்கள். 

"நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்." ( ஏசாயா 41 : 10 ) என்கிறார் கர்த்தராகிய தேவன்.

"நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்" என்று இயேசு கிறிஸ்துவுக்கு வந்ததுபோல நமக்கும் ஒரு காலம் வரும் என்பதால் தேவனோடு நாம் எப்போதும் நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்ளவேண்டும். அப்போது நாமும் இயேசுவைப்போல துணிவுடன் கூறலாம், "நான் தனித்திரேன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னுடனேகூட இருக்கிறார்" என்று. 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

நாம் தேவனின் மக்களா இல்லை பிசாசின் மக்களா?

 ஆதவன் 🖋️ 532 ⛪ ஜுலை 13, 2022 புதன்கிழமை

"தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் ". ( யோவான் 8 : 47 )

இந்த உலகத்தில் படைக்கப்பட்ட அனைவருமே தேவனால் உண்டானவர்கள்தான். ஆனால் ஆவிக்குரிய விளக்கத்தின்படி இது சரியல்ல. இயேசு கிறிஸ்து தேவனால் உண்டானவனுக்கும் பிசாசானவனால் உண்டானவனுக்குமுள்ள வேறுபாட்டை இங்குக் குறிப்பிடுகின்றார். 

தேவனுடைய வசனத்தைக் கேட்டு அதன்படி நடப்பவனே தேவனால் உண்டானவன். தேவனுடைய வசனத்தை அறியாமலும் அதன்படி வாழாமலும் இருப்பவன் பிசாசானவனால் உண்டானவன். 

தனது வார்த்தைகளை விசுவாசியாமலும் தனக்கு எதிராகவும் நின்ற யூகர்களைப்பார்த்து இயேசு கிறிஸ்துக்  கூறினார்,  "நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்"  ( யோவான் 8 : 44 )

கிறிஸ்துவின் வார்த்தைகளை விட்டுவிட்டு, அல்லது அதனை விசுவாசியாமல் அவற்றுக்கு எதிரான செயல்பாடுகளை நாம் செய்யும்போது பிசாசின் விருப்பத்தினை நிறைவேற்றுகின்றோம். இதனைத்தான் இயேசு கிறிஸ்து,  "உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்" என்று குறிப்பிட்டார்.

நாம் தேவனால் உண்டானவர்கள் என்று கூறிக்கொண்டு வெறும் ஆராதனையில் மட்டும் அவரைப் புகழ்ந்து துதித்துவிட்டு உலக காரியங்களில் அவரது கற்பனைகளுக்கு முரணாக வாழ்வோமானால் நாம் பிசாசானவனால் உண்டானவர்கள்.

"தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்" என்று இயேசு கிறிஸ்து கூறுவது வெறுமனே பிரசங்கத்தில் அவரது வார்த்தைகளை காதால் கேட்பதைக் குறிக்கவில்லை. வசனங்களுக்குச் செவிகொடுத்தல் என்பது அவரது வார்த்தைகளை வாழ்வாக்குவது.  

நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போம். நாம் எப்படி இருக்கின்றோம்? வெறும் ஆராதனைக் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோமா? கன்வென்சன் பிரசங்கங்களை காதால் கேட்பதற்கு ஓடி வாழ்க்கையில் சாட்சியற்றவர்களாக இருக்கின்றோமா ? 

நாம் தேவனால் உண்டானவர்களென்றால் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுப்போம் இல்லாவிட்டால்  நம்மைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும் தேவனால் உண்டாயிராதபடி பிசாசின் மக்களாகவே வாழ்வோம்.   

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

தண்ணீர் நிற்காத வெடிப்புள்ள தொட்டிகள்

 ஆதவன் 🖋️ 531 ⛪ ஜுலை 12, 2022 செவ்வாய்க்கிழமை


"எந்த ஜாதியாவது தேவர்களல்லாத தங்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்."( எரேமியா 2 : 11 )


இஸ்ரவேலர் செய்த தேவனுக்குப் பிரியமில்லாத மிகப்பெரிய காரியம் அல்லது பாவம்,  அவர்கள் அந்நிய தெய்வங்களை வழிபடத் துவங்கியதுதான். இஸ்ரவேலர் நடுவே வேறு இனத்து மக்கள் பலர் இருந்தனர். அவர்கள் வெல்வேறு தெய்வங்களை வழிபட்டனர். ஆனால் அவர்கள் தங்கள் மதத்தில் உறுதியாக இருந்து அவற்றையே வழிபட்டனர்.  

இஸ்ரவேல் மக்களுக்குத் தேவன் பல்வேறு விதங்களில் தன்னை வெளிப்படுத்தினார். பல்வேறு அதிசயங்களைச் செய்து தானே மெய்யான தேவன் என்பதை அவர்கள் உணரத்தக்கவிதமாக அவர்களை வழிநடத்தினார். இவைகளைத் தங்கள் முன்னோர்கள் கூற அறிந்து  உணர்ந்திருந்தும் அவர்கள் தங்கள் உலகத் தேவைகளுக்கு தங்களைச் சுற்றியுள்ள மக்கள் வழிபட்ட அந்நிய தேவர்களை வணங்கவும் ஆராதிக்கவும் துவங்கினர். 

பிற இனத்தவர் வணங்கியது மெய்யான தேவனல்ல எனவேதான் இங்கு தேவன்  "தேவர்களல்லாத தங்கள் தேவர்களை அவர்கள்  மாற்றினது உண்டோ?" என்று கேட்கின்றார். ஆனால் வீணான அந்த தேவர்களுக்காக இஸ்ரவேலர் தங்கள் மெய் தெய்வத்தை மாற்றினார்கள்.  

 "என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்." ( எரேமியா 2 : 13 )  என்றும் எரேமியா புத்தகத்தில் வாசிக்கின்றோம். 

அந்நிய தெய்வங்களே வெடிப்புள்ள தொட்டிகள். வெடிப்புள்ள தொட்டியில் நீரைச் சேகரித்து பயன்படுத்த முடியாததுபோல அந்தத் தெய்வங்களால் வேறு எந்த பயனும் இல்லை.

இன்றும் மக்கள் இந்தத் தவறையே செய்கின்றனர். பணத்தையும், சொத்துச்  சுகங்களையும்,  பதவியையும், பெருமையையும் தெய்வங்களாக எண்ணி அவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து கிறிஸ்துவுக்குச் செலுத்தவேண்டிய கனத்தைச் செலுத்தாமல் போகின்றனர். ஆம், வெடிப்புள்ளத் தொட்டிகளைக் கட்டிக்கொண்டிருக்கின்றனர். 

அன்பானவர்களே, வீணான தெய்வங்களை வழிபட்ட இஸ்ரவேலரைப்போல நாம் இருப்பது முறையல்ல. வீணான உலகத் தேவைகளை தெய்வங்களாக எண்ணி அவற்றைத் தேடி ஓடுவதில் கிறிஸ்துவை, அவர் காட்டிய நெறிகளை  விட்டுவிடக்கூடாது. அப்படி விட்டுவிடுவது வெடிப்புள்ளத் தொட்டிகளைக் கட்டும் மூடத்தனம் போன்றதாகும்.

இஸ்ரவேலர் அடிமைபட்டுபோகக் காரணம் அவர்கள் தேவனை விட்டுவிட்டதுதான். இன்று அற்பகால இன்பத்துக்காக தேவனை விட்டுவிடுவது நமது வாழ்வில் நம்மை பல்வேறு அடிமைத்தனத்துக்குள்தான் கொண்டுபோய்ச்  சேர்க்கும். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

 

ஆவிக்குரிய வாழ்வில் நமக்கும் தினசரி போராட்டம் உண்டு

 ஆதவன் 🖋️ 530 ⛪ ஜுலை 11, 2022 திங்கள்கிழமை



"அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( எரேமியா 1 : 19 )

எதிரி நாட்டு ராஜாக்கள் உனக்கு எதிராக யுத்தம் செய்ய வருவார்கள்; ஆனால் உன்னை மேற்கொள்ள மாட்டார்கள். காரணம், சர்வ வல்லவரான நான் உன்னோடுகூட  இருக்கிறேன் என   மக்களைத் திடப்படுத்த எரேமியா தீர்க்கதரிசி யூதாவுக்குக் கூறிய வார்த்தைகள் தான் இன்றைய தியானத்துக்குரிய வசனம். 

தங்களது மீறுதலால் தேவ கோபத்துக்கு உள்ளாகி யூதா மற்றும் இஸ்ரவேலர்கள் பல்வேறு ராஜாக்களின் அடிமைத்தனத்துக்கு உள்ளானார்கள். ஆனால் தேவன் தெரிந்துகொண்ட மக்கள் இனமானதால் தேவன் அவர்கள்மேல் பரிவு கொண்டார். மக்கள் தங்கள் தவறான வழிகளைவிட்டு தன்னிடம் திரும்பிட தேவன் தீர்க்கதரிசிகள் மூலம் மக்களுக்கு அறிவுரைகள் கூறினார்.  

உங்களுக்கு எதிராக யுத்தம் பண்ணுவார்கள் ஆனால் உங்களை  மேற்கொள்ள மாட்டார்கள் என்பதே செய்தி. 

அன்பானவர்களே, இதுவே ஆவிக்குரிய வாழ்வில் ஈடுபடும் நமக்கும் பொருந்தக்கூடிய செய்தி. ஆவிக்குரிய வாழ்வில்  நமக்கும் தினசரி போராட்டம் உண்டு. "ஏனெனில், மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு." ( எபேசியர் 6 : 12 ) என்கின்றார் பவுல் அடிகள். 

ஆனால் தேவனுடைய ஆவியானவர் நம்மோடுகூட இருப்பதால் அந்தப் போராட்டங்கள் நம்மை மேற்கொள்ளாது. ஒருவேளை நமக்கு எதிராக யுத்தம்செய்வது பாவங்களாக இருக்கலாம். ஆனால் அவை நம்மை மேற்கொள்ளாது. காரணம், தேவன் நம்மோடு இருக்கின்றார்.  

ஆவிக்குரிய வாழ்வில் போராடி வெற்றிபெறுவதற்குத் தேவன் பல்வேறு ஆவிக்குரிய போராயுதங்களைத் தந்துள்ளார். சத்தியம் , நீதி, சமாதானத்தின் சுவிஷேஷத்துக்குரிய ஆயத்தம், விசுவாசம், இரட்சிப்பு எனும் இவைகளே பல்வேறு ஆவிக்குரிய ஆயுதங்கள். எபேசியர் 6:14-17 இல் நாம் இதுகுறித்து விபரமாக  வாசிக்கலாம். 

ஆவிக்குரிய வாழ்வில் இந்த ஆயுதங்களை நாம் சரியாகப் பயன்படுத்துவோமானால், நமக்கு விரோதமாக யுத்தம்பண்ணும் பாவங்களும் நமக்கு எதிராகச் செயல்படும் வல்லமைகளும், எதிரிகளும் நம்மை மேற்கொள்ளமாட்டார்கள்; நம்மை இரட்சிக்கும்படிக்குத் தேவன் நம்மோடே கூட இருப்பார். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை!

 

ஆதவன் 🖋️ 529 ⛪ ஜுலை 10, 2022 ஞாயிற்றுக்கிழமை


"இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை." ( ஏசாயா 64 : 8 )

மனிதர்களாகிய நாம் அனைவருமே கடவுளது கரத்தின் செயல்பாடுகளாய் இருக்கின்றோம். மனிதர்களைக் கடவுள் வித்தியாசமான குணங்கள் உள்ளவர்களாகப் படைத்துள்ளார். ஒவ்வொருவருமே வித்தியாசமானவர்கள். ஆனால் எல்லோருமே தேவ நோக்கம் நிறைவேற்றவே படைக்கப்பட்டுள்ளோம். 

ஒரு தாய் தந்தையருக்குப் பிறக்கும் எல்லா குழந்தைகளும் ஒன்றுபோல இருப்பதில்லை. ஒரு குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றுபோல இருப்பதில்லை. 

ஒரு வீட்டில் பல்வேறுவித பாத்திரங்கள் இருக்கும். வொவ்வொன்றையும் நாம் தேவைக்கேற்ப பயன்படுத்துவோம். அதுபோலவே தேவன் மனிதர்களை பயன்படுத்துகின்றார். மேலும், பாத்திரத் தொழிற்சாலையில் வெவ்வேறுவிதமான் பாத்திரங்கள் உற்பத்திச் செய்யப்படுகின்றன. எல்லாமே ஒவ்வொரு தேவைக்குப்   பயன்படுகின்றன.  

இதனையே அபோஸ்தரான பவுலும் கூறுகின்றார். "மிதிபட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?" ( ரோமர் 9 : 21 )

எனவே நாம் பிறரோடு நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும். பிறரிடம் இல்லாத ஏதோ ஒன்று நிச்சயம் நம்மிடம் இருக்கும். அதற்காக தேவனுக்கு நன்றி கூறவேண்டும். ஏதோ ஒரு நோக்கத்திற்காகவே தேவன் நம்மை இப்படிப் படைத்துள்ளார் எனும் உணர்வு வரும்போது நாம் தேவனிடம் குறைபட்டுக்கொள்ளமாட்டோம். 

வெறுமனே ஆராதனைகளில் கலந்துகொண்டு கடமையை நிறைவேற்றுவதல்ல கிறிஸ்தவம். அது தேவனோடு உறவை வளர்த்துக்கொண்டு அவரோடு வாழ்வது. தேவனோடு நெருங்கிய உறவுகொள்வோமானால் நம்மைக் குறித்த தேவநோக்கத்தை அவர் நமக்கு வெளிப்படுத்துவார். அந்த நிலைக்கு நாம் வரும்போது மட்டுமே தேவன் ஏன் நம்மை இப்படிப் படைத்துள்ளார் என்பது புரியும். நமது துன்பங்கள்,  துயரங்கள், பிரச்சனைகள் எல்லாமே தேவ நோக்கத்தோடுதான் நடக்கின்றன.  

கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை என்பதை உணர்ந்துள்ளேன். எனக்கு என்னைக்குறித்த தேவ நோக்கத்தை வெளிப்படுத்தும் என விசுவாசத்துடன் வேண்டுவோம். கர்த்தர் அதனை நமக்கு வெளிப்படுத்துவார்.  

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

அவரது சித்தமில்லாது நாம் எதனையும் செய்யமுடியாது.

 

ஆதவன் 🖋️ 528 ⛪ ஜுலை 09, 2022 சனிக்கிழமை


"மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்." ( சங்கீதம் 94 : 11 )


மனிதன் பலவீனமானவன். ஆனால் இந்த பலவீனமான உடலைக்கொண்டு அவன் நினைக்கும் காரியங்களையும் செய்யும் செயல்பாடுகளையும் பார்க்கும்போது அவை என்றைக்கும் அழியாமல்  நிலைத்திருக்கும் என்று அவன் எண்ணுவதையே காட்டுகின்றது. காரணம், தனது வலுவற்ற தண்மையைஅவன் உணருவதில்லை. இந்த உலகினில் நிரந்தர முதல்வர், நிரந்தர பிரதமர்  என்று கூறிக்கொண்டவர்களது  நிலைமையை நாம் அறிவோம்.

இந்த உலகத்தில் பலரும் செய்யும் காரியங்கள் அவர்கள் இந்த உலகத்தில் நிரந்தரமாக வாழப்போவதாக எண்ணுவதையே நமக்கு உணர்த்தும். ஆனால் மனிதனது இத்தகைய செயல்பாடுகள் தேவனுக்குச் சிரிப்பையே வரவழைக்கும். காரணம், "மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்." 

"வானத்தினளவு கோபுரம் கட்டி நமக்குப் பெயர் உண்டாகப் பண்ணுவோம்" என்று எண்ணி கோபுரம்கட்ட முயன்ற மக்களைப் பார்த்தக்  கர்த்தர்   "தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபட மாட்டாது என்று இருக்கிறார்கள்" என்று கூறி அவர்கள்  பேசும் மொழியைத் தாறுமாறாக்கினார்.  பாபேல் என்ற கோபுரம் பாதியில் நின்றுபோனது (ஆதியாகமம் - 11)

நாம் என்னதான் உடல் வலுவுள்ளவர்களாக இருந்தாலும், அதிகாரபலம், பணபலம் உள்ளவர்களாக இருந்தாலும் அது நிறைவேறுவது கர்த்தரது கிரியை இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். "மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்." ( நீதிமொழிகள் 19 : 21 ) என்று நீதிமொழிகள் கூறுவது கவனிக்கத்தக்கது.

அன்பானவர்களே, நாம் எப்போதும் பெருமைகொண்டு என்னால் முடியும் என்று எண்ணுவதைவிட கர்த்தரது கிருபையினைச் சார்ந்துகொள்வதே நமக்கு வெற்றியைத் தரும். காரணம் அவரது சித்தமில்லாது பலவீனமான நாம் எதனையும் செய்யமுடியாது. படுக்கைக்குச் செல்லும் மனிதன் மறுநாள் எழுந்திருப்பதே நிச்சயமில்லை.

"நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே. ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்." ( யாக்கோபு 4 : 14, 15 ) என்று அருமையான யோசனையைத் தருகின்றார் அப்போஸ்தலரான யாக்கோபு.

கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதுதான் மனித வாழ்வு. எனவே நாம் கர்த்தரை முன்வைத்தே நமது திட்டங்களை வகுப்போம். கர்த்தரை மறந்து நாம்  எடுக்கும் செயல்திட்டங்கள் வீணானவையே. 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

நாம் நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல.....

 

ஆதவன் 🖋️ 527 ⛪ ஜுலை 08, 2022 வெள்ளிக்கிழமை


"கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்." ( 1 கொரிந்தியர் 6 : 20 )

கிறிஸ்தவ விசுவாச சத்தியத்தின்படி நாம் நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல. ( 1 கொரிந்தியர் 6 : 19 ) கிறிஸ்து நம்மைத் தனது சுய இரத்தத்தைச் சிந்தி கிரயத்துக்கு (விலைக்கு) வாங்கியுள்ளார். எனவே நாம் தேவனுக்கு உடைமையானவர்கள். நாம் நமக்குச் சொந்தமல்லாதவர்களாக தேவனுக்குச் சொந்தமானவர்கள் ஆனபடியால் நமது உடலாலும் ஆவியினால் அவரை மகிமைப் படுத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

எப்படி நமது உடலாலும் ஆவியினால் அவரை மகிமைப்படுத்துவது ? இதற்குப் பதிலாக அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை." ( ரோமர் 12 : 1 )

அதாவது, நமது சரீரங்களை பரிசுத்தமுள்ளவையாக பாதுகாக்கவேண்டும், பாவங்களுக்கு விலக வேண்டும். அப்படி நாம் நமது உடலைப் பரிசுத்தமாகக்  காத்துக்கொள்வதே அவரை நாம் மகிமைப்படுத்துவதற்கு அடையாளம். 

இருபத்திநான்கு மணி நேரமும் தேவ பயமும் அவரைப்பற்றிய எண்ணமும் இல்லாமல் தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்துவிட்டு ஞாயிற்றுக் கிழமைகளில் ஆலயத்தில் சென்று ஆராதிப்பதில் அர்த்தமில்லை.  

நாம் தேவனுக்கு உடைமையானவர்கள் எனும் எண்ணம் நமக்குள் வரும்போது மட்டுமே நாம் நமது உடலைப் பாதுகாப்போம். ஏனெனில் நமது உடல் தேவனால் கிரையம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளதால் அவர் நமக்குள் இருக்கின்றார்; நாம் அவரது ஆலையமாக இருக்கின்றோம்.

அன்பானவர்களே, இந்த எண்ணத்துடனேயே வாழ்வோமானால் நமது வாழ்க்கை வித்தியாசமானதாக மாறும்.

"உங்கள் சரீரமானது நீங்கள் தேவனால் பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலையமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்ல என்றும் அறியீர்களா? ( 1 கொரிந்தியர் 6 : 19 )

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

ஆவிகுரியார்களே ஆவிக்குரிய சத்தியங்களை அறிய முடியும்.

 

ஆதவன் 🖋️ 526 ⛪ ஜுலை 07, 2022 வியாழக்கிழமை


"தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்." ( 1 கொரிந்தியர் 2 : 9, 10 )


மறு  உலக வாழ்வு, பரலோகம், நித்திய ஜீவன் இவைகளை தேவன் ஏற்கெனவே தம்மை விசுவாசித்து ஏற்றுக்கொள்பவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ளார்.  ஆனால் இவைகளை நாம் நமது ஊனக்கண்ணால் காணமுடியாது.  இதுபோல நமக்காக இயேசு கிறிஸ்து ஒரு இடத்தை ஆயத்தம் பண்ணுவதற்குத் தான் செல்வதாகக் கூறினார். இதனையும் நாம் காணவில்லை. 

"என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்." ( யோவான் 14 : 2, 3 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

இவைகள் எல்லாமே தேவனிடம் அன்புகூருகிறவர்களுக்காக அவர் ஏற்பாடு செய்தவை என்று இன்றைய வசனம் கூறுகின்றது. ஆனால், எதையுமே நாம் காணவில்லை. தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் நமக்கு இவைகளை வெளிப்படுத்தித் தருகின்றார். அவர் அப்படி வெளிப்படுத்தித் தருவதால் நமக்குள் இவைகுறித்த விசுவாசம் ஏற்பட்டுள்ளது. 

ஆனால் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பலருக்கும் கூட இவைகளில் விசுவாசம் இல்லை. அவர்கள் தேவனை ஆராதிக்கின்றார்கள், பல்வேறு பக்திபூர்வமான காரியங்களில் ஈடுபடுகின்றனர். ஆனால்  பெரும்பாலான கிறிஸ்தவர்களுக்கும் இவற்றைப்பற்றிய அறிவும் இல்லை தெளிவும் இல்லை. 

இதற்குக் காரணம் அவர்கள் தேவனைத் தேடுவது இவற்றுக்காக அல்ல. அவர்கள் தங்கள் உலகத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும்  அவை பற்றி வேண்டுதல் செய்வதற்கும் மட்டுமே தேவனிடம் வருகின்றனர். 

ஆவிகுரியார்களே ஆவிக்குரிய சத்தியங்களை அறிய முடியும். "மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்."(ரோமர்-8:5).

அன்பானவர்களே, "நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்." என்று கூறியுள்ளபடி ஆவிக்குரிய மக்களாக நாம் மாறும்போதே இவைகளை அறியவும் முடியும்; சுதந்தரிக்கவும் முடியும்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

நாம் படைக்கப்பட்டதே நற்செயல்கள் செய்வதற்காகத்தான்

 

ஆதவன் 🖋️ 525 ⛪ ஜுலை 06, 2022 புதன்கிழமை


"ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்." ( எபேசியர் 2 : 10 )

கடவுள் மனிதனை ஏன் படைத்தார் என்று ஒரு கேள்வியைச் சிலர் எழுப்புவதுண்டு. கடவுளைப் புகழ்வதற்கு என்று சிலர் இந்தக் கேள்விக்குப் பதில் கூறுவார்கள். அதாவது மனிதரைப் படைத்து அவன் தன்னைப் புகழ்ந்துகொண்டிருக்கவேண்டும் என்று கடவுள் விரும்புவாரா? 

நாம் உலகினில் படைக்கப்பட்டதே நற்செயல்கள் செய்வதற்காகத்தான் என்கின்றார் பவுல் அடிகள்.  அதாவது கடவுள் நல்லவராகவே இருக்கின்றார். அவர் தான் படைத்த மனிதர்களும் தன்னைப்போல நற்செயல்கள் செய்பவர்களாக இருக்கவேண்டுமென்று விரும்புகின்றார். "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்." ( ஆதியாகமம் 1 : 27 ) என்று வேதம் கூறுகின்றது.

"தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக "( ஆதியாகமம் 1 : 26 ) என்று கூறுவதைப் பார்க்கின்றோம். சாயல் என்பது குணத்தைக் குறிக்கின்றது. அதாவது தனது சாயலை மனிதன் வெளிப்படுத்தவேண்டும் என அவர் எண்ணினார். ரூபம் என்பது உருவம். அதாவது கடவுள் மனித உருவில் இருக்கின்றார் (கடவுளுக்கு உருவமில்லை என்று கூறுவது சரியான  வேத படிப்பினை அல்ல) ஆனால் மனிதன் பாவம் செய்தபோது அந்த தேவச் சாயலை இழந்துவிட்டான். 

இன்றைய வசனம் கூறுகின்றது, "நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்". ஆம் அந்த தேவ சாயலை நாம் இழந்துவிடாமல் நடக்கும்படி முன்னதாகவே சரியான வழியை ஆயத்தம் பண்ணியிருக்கின்றார். ஆனால் மனிதன் அந்த வழியில் நடக்கவில்லை.

எனவேதான் கர்த்தராகிய இயேசு உலகினில் வந்தார். "நானே வழி " என்று அறிக்கையிட்டு ஏற்கெனவே ஆயத்தம்பண்ணய சரியான வழியை நமக்குக் காண்பித்தார். 

அன்பானவர்களே, கிறிஸ்து இயேசு உலகினில் வந்து நமக்கு வழியைக் காட்டியது மட்டுமல்ல, அந்த வழியில் நாம் நடந்திட  பரிசுத்த ஆவியானவரை நமக்குத் துணையாளராகத் தந்துள்ளார். நற்செயல்கள் செய்து கிறிஸ்து காட்டிய இந்த வழியில் நடக்கவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.  துணையாளரான பரிசுத்த ஆவியானவர் நம்மை கிறிஸ்து காட்டிய வழியில் நடத்திட அவரது துணையினை எந்நாளும் வேண்டுவோம்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

மேய்ப்பனிடம் வளரும் ஆடுகளுக்கு நல்ல பாதுகாப்பு உண்டு.

 

ஆதவன் 🖋️ 524 ⛪ ஜுலை 05, 2022 செவ்வாய்க்கிழமை 


"கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டுபோய்விடுகிறார்." ( சங்கீதம் 23 : 1, 2 )

ஆடுகளை மேய்க்கும் மேய்ப்பர்களை நாம் கிராமங்களில் பார்த்திருக்கலாம். செம்மறியாடுகளை மந்தையாக மேய்ச்சலுக்குக் கூட்டிச்செல்வார்கள். அப்போது அவர்கள் பல்வேறு வித ஒலிகளை எழுப்புவார்கள். அந்த ஆடுகள் அவற்றைப் புரிந்து மேய்ப்பனின் குரலுக்குச் செவிகொடுக்கும். 

மலைகளில் ஆடுமேய்க்கும் மேய்ப்பர்களுக்கு எங்கெங்கு ஆபத்து இருக்கும் , விஷச்செடிகள் எங்கெங்கு இருக்கும் எல்லாம் தெரியும். அவர்கள் ஓர் கட்டுப்பாட்டுடன் ஆடுகளை மேய்ப்பார்கள். ஆடுகள் விருப்பினாலும் சில இடங்களுக்கு அவை செல்வதை மேய்ப்பர்கள் அனுமதிப்பதில்லை. 

ஆனால் மலைகளில் காட்டு ஆடுகளும் உண்டு. அவைகளுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இருப்பதில்லை. அவை தாங்கள் விரும்பும் இடங்களுக்குச் செல்லும்; விரும்பியவற்றை உண்ணும்.  காட்டு ஆடுகள் மேய்ப்பன் வளர்க்கும் ஆடுகளைவிட நன்கு கொழுத்து திடகாத்திரமாக இருக்கும்.

மேய்ப்பனால் கட்டுப்பாட்டுக்குள் வளரும் ஆடுகள் என்ன நினைக்கும்? "ஆஹா, இந்தக் காட்டு ஆடுகள் கொடுத்துவைத்தவை. அவை விருப்பம்போல சுதந்திரமாக சுற்றிவருகின்றன. நாமோ இந்த மேய்ப்பனிடம் அகப்பட்டு அற்பமான உணவை உண்டு வாழ்கின்றோம்". 

ஆனால் உண்மை அதுவல்ல, மேய்ப்பனிடம் வளரும் ஆடுகளுக்கு நல்ல பாதுகாப்பு உண்டு. காட்டு ஆடுகளை எந்த நேரத்திலும் சிங்கமோ, கரடியோ. புலியோ அடித்துச் சாப்பிட்டுவிடும் வாய்ப்பு இருக்கின்றது. இந்த உண்மையினை  ஆடுகளை மேய்த்து அனுபவப்பட்டத் தாவீது நன்கு அறிந்திருந்தார். எனவேதான் அவர் கர்த்தரைத் தனது மேய்ப்பராகக் எண்ணி அவர் என் மேய்ப்பராயிருப்பதால் தான்  தாழ்ச்சியடைவதில்லை என்று உறுதியாகக் கூறுகின்றார். 

உலகினில் துன்மார்க்கமாக பொருள்சேர்த்து செழித்து வாழும் மக்களைப்பார்த்து நாம் கர்த்தரிடம் விசுவாசமாக இருந்தும் அத்தகைய செழிப்பு நமக்கு இல்லையே என  நமது அற்ப நிலைமையை எண்ணி  வருந்திட வேண்டாம். 

"கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்." என விசுவாசமாய்க் கூறி தொடர்ந்து கர்த்தரது குரலுக்குச் செவிகொடுக்கும் ஆடுகளைப்போல அமைதியாக செவிகொடுத்து வாழ்வோம்.  அவர்  நம்மை அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டுபோய்விடுவார். அதாவது பூரண சமாதானத்துடன் நாம் வாழ்ந்திடச் செய்வார்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

"நான் செய்த பாவம்தான் என்ன? "

 

ஆதவன் 🖋️ 523 ⛪ ஜுலை 04, 2022 திங்கள்கிழமை 


"என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? என் மீறுதலையும் என்பாவத்தையும் எனக்கு உணர்த்தும். நீர் உமது முகத்தை மறைத்து, என்னை உமக்குப் பகைஞனாக எண்ணுவானேன்?"( யோபு 13 : 23, 24 )

யோபு தேவனிடம் உரிமையோடு தனது பாவங்களுக்காக மன்றாடும் விண்ணப்பம் தான் இன்றைய தியானத்துக்குரிய வசனம். தனது தொடர்ந்த துன்பங்களுக்குத் தனது பாவங்கள்தான் காரணமாக இருக்குமோ என்று யோபு அஞ்சினார். ஏனெனில் அவரைப் பார்த்து ஆறுதல் கூறவந்த நண்பர்கள் எலிப்பாசும், பில்தாதும், சோப்பாரும் யோபுவைக் குற்றப்படுத்தியே பேசினர். 

நீர் உமது முகத்தை மறைத்து, என்னை உமக்குப் பகைஞனாக ஏன் எண்ணுகின்றீர் ? நான் செய்த பாவம்தான் என்ன? பாவத்தின் அளவுதான் என்ன? அதை எனக்கு உணர்த்தும். என்று யோபு தேவனிடம் கேட்கின்றார்.

யோபுவின் துன்பத்துக்குக் காரணம் அவரது பாவங்கள் அல்ல. யோபுவின் மனச்சாட்சியிலும் பாவ உணர்த்துதல் இல்லை. அவர் தேவனுக்குமுன் உத்தமனும், சன்மார்க்கனும் , தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகின்றவராகவும் வாழ்ந்துவந்தார் (யோபு - 1:1) எனவேதான் தைரியமாக தேவனிடம் கேட்கின்றார்,  "என்னை உமக்குப் பகைஞனாக ஏன் எண்ணுகின்றீர் ? நான் செய்த பாவம்தான் என்ன? பாவத்தின் அளவுதான் என்ன?" என்று.

அன்பானவர்களே, இன்று நம்மை நாம் நிதானித்துப் பார்ப்போம். யோபு கேட்டதுபோல நம்மால் தேவனிடம் கேட்க முடியுமா? எப்படிப் பார்த்தாலும் நாம் அனைவருமே பல்வேறு பாவங்களைச் செய்கின்றோம். எனவே நம்மால் இப்படிக் கேட்க முடியாதுதான். ஆனால், நாம் இந்த மேலான நிலைமைக்கு வரவேண்டும் எனும் உணர்வாவது நமக்கு இருக்கின்றதா என்று எண்ணிப் பார்ப்போம்.

திருமண வீடுகளிலோ  அல்லது பொது இடங்களிலோ தெரிந்தவர்கள் சிலர் நம்மைக் கவனிக்காததுபோலச் செல்லும்போது "என்ன? கண்டும் காணாததுபோல செல்லுகிறீர்களே  என்னை கோபம் உங்களுக்கு என்மேலே? என யோபு தேவனிடம் கேட்டக்  கேள்விபோல மனிதர்கள் தங்களது சக நண்பர்களிடம் கேட்பதுண்டு.  

ஆம், கர்த்தருக்கும் யோபுவுக்கும் அவ்வளவு நெருங்கியத் தொடர்பு இருந்தது. எனவேதான் கர்த்தர் யோபுவின் நண்பன் எலிப்பாசை நோக்கிக்  கூறினார், "உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை." ( யோபு 42 : 7 ) 

என் தாசனாகிய யோபு என்று கர்த்தர் யோபுவைக் குறித்துக் கூறினார். இந்த நிலைமைக்கு நம்மை உயர்த்துவதுதான் மேலான ஆன்மீக அனுபவம். ஆனால் பெரும்பாலான கிறிஸ்தவர்களும் தேவனிடம் அற்ப உலக ஆசீர்வாதங்களுக்காகவே ஜெபித்துக்கொண்டிருக்கின்றனர். நாம் அவர்களைப்போலல்லாமல்  மேலானவைகளையே நாடுவோம்.  

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

விசுவாசத்தில் உறுதிப்படும்போதே நமது வாழ்வு கனியுள்ளதாக மாறும்.

 ஆதவன் 🖋️ 522 ⛪ ஜுலை 03, 2022 ஞாயிற்றுக்கிழமை 

"ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக." ( கொலோசெயர் 2 : 6, 7 )

நாம் நமக்கு இருக்கும் விசுவாசத்தில் பெருகவேண்டும் என்பதே இன்றைய செய்தி கூறும் கருத்து. இதனாலேயே சீடர்கள் இயேசு கிறிஸ்துவிடம் தங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்று வேண்டினர். ( லுூக்கா 17 : 5 ) காரணம், "விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாக இருப்பது கூடாத காரியம்" (எபிரெயர் - 11:6). 

நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் நமக்கு விசுவாசம் இருந்ததால்தான் இரட்சகராக ஏற்றுக்கொண்டோம். ஆனால் அந்த நிலையிலேயே நாம் நின்றுவிடக் கூடாது. அவருக்குள் வேர்கொண்டு வளரவேண்டும்; அவர்மேல் கட்டப்படவேண்டும் என்கின்றது இன்றைய வசனம்.

நாம் இரட்சிக்கப்படும் ஆரம்பகாலத்தில் தேவன் பல அதிசயங்களை நமது வாழ்வில் செய்து நமது விசுவாசம் வளர்ந்திட உதவி செய்கின்றார்.   மெய்யான மீட்பு அனுபவம் பெற்றவர்கள் இதனை அறிவார்கள். ஆனால், அந்த அதிசயங்களை உணர்ந்துகொள்ளும் கண்கள் நமக்கு வேண்டும். 

"நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக" என்று இந்த வசனம் கூறுகின்றது. அதாவது கிறிஸ்துவின் இரட்சிப்பை நமக்கு பிறர் எடுத்துச்சொல்லி போதித்தபோதுதான் நாம் அவர்மேல் விசுவாசம்கொள்ள ஆரம்பித்தோம். ஆனால் அந்த ஆரம்ப நிலையிலேயே நில்லாமல்  அதில் நாம் உறுதிப்படவேண்டும். விசுவாசத்தில் பெருகிட ஸ்தோத்திரம் பண்ணவேண்டும் என்று இந்த வசனம் மூலம் அறிகின்றோம்.

எல்லாவற்றுக்காகவும் ஸ்தோத்திரம் செலுத்தும் நிலைக்கு நாம் வந்துவிட்டால் விசுவாசத்தில் வளர்ந்துள்ளோம் என்று பொருள். இப்படி வாழ்வதே அவர்மேல் கட்டப்படுவது. 

சிலர்  என்றோ தாங்கள்  பெற்றுக்கொண்ட மீட்பு அனுபவத்தையே எப்போதும்  கூறிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களது வாழ்வில் எந்த கிறிஸ்தவ கனியையும் காண முடியாது. காரணம் அவர்கள் விசுவாசத்தில் வளரவில்லை; கட்டப்படவில்லை என்று பொருள். 

நாளுக்குநாள் விசுவாசத்தில் வளர்ந்து உறுதிப்படும்போதே நமது கிறிஸ்தவ வாழ்வு கனியுள்ளதாக மாறும். ஆம், இத்தகைய வளர்ந்த  "விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாக இருப்பது கூடாத காரியம்" 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

மீட்பினை எல்லா மனிதர்களும் பெறவேண்டும்

 

ஆதவன் 🖋️ 521 ⛪ ஜுலை 02, 2022 சனிக்கிழமை 

"அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன்சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்." ( எபேசியர் 3 : 3 )

யூதர்கள் மேசியா, அவர் அளிக்கும் மீட்ப அனுபவம் இவை எல்லாம் தங்களுக்கு மட்டுமே உரிமை என்று எண்ணிக்கொண்டார். ஆனால் கிறிஸ்து இயேசு தனது சுய இரத்தத்தால் உண்டாக்கிய மீப்பு அனுபவம் யூதர்களுக்கு மட்டுமல்ல, அவரை விசுவாசித்து ஏற்றுக்கொண்டவர்கள் அனைவருக்கும் சொந்தமாகும். இதனையே தனக்கு வெளிப்படுத்தப்பட்ட ரகசியம் என்கின்றார் பவுல் அடிகள். 

ஆனால், "இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை."( எபேசியர் 3 : 6 ) 

கிறிஸ்துவின் மீட்பினை எல்லா மனிதர்களும் பெறவேண்டும் என்பதுதான் தேவனுடைய சித்தம்.  "எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்." ( 1 தீமோத்தேயு 2 : 4 )

இப்படி மீட்பு அனுபவம் பெற்றவர்கள் அனைவரும் உடன்சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களும் கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்கள்.

இன்று கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாம் அனைவருமே யூதர்கள்தான்; ஆவிக்குரிய யூதர்கள். கிறிஸ்துவின் மீட்பு அனுபவத்தைப் பெறாதவர்கள் புறஜாதிகள். ஆனால் அவர்கள் கிறிஸ்துவின் மீட்பினைப் பெறும்போது நம்மோடுகூட பங்காளிகளாகின்றனர். அதாவது நமக்கு தேவனிடமுள்ள அதே அளவு உரிமை அவர்களுக்கும் சொந்தமாகின்றது.

இதனால் நாம் யாரையும் அற்பமாக எண்ணாதிருப்போம். இன்று புறஜாதியாயிருப்பவர்கள் நாளையே நமது பங்காளிகளாக மாறிடும் வாய்ப்பு இருக்கின்றது. கிறிஸ்துவே அதனை அவர்களுக்கு வழங்குவார். எனவே அனைவரையும் மதிப்போம்; அனைவருக்கும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவித்து நமது சொந்தமாக்குவோம்.  


தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                   தொடர்புக்கு- 96889 33712

விதைப்பதையே அறுப்போம் !!


 ஆதவன் 🖋️ 520 ⛪ ஜுலை 01, 2022 வெள்ளிக்கிழமை 

"...........மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்." ( கலாத்தியர் 6 : 7, 8 )

நெல் விதைத்துவிட்டு கோதுமையை அறுவடை செய்ய முடியாது. இது நாம் எல்லோரும் அறிந்ததே. இதே இயற்கையின் விதிதான் மனிதர்களது வாழ்க்கைக்கும் பொருந்தும். 

இந்த உலகத்திலேயே சிலவேளைகளில் அப்பட்டமாக இது வெளிப்படும். ஒரு முறை ஒரு சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டேன். ஒரு குறிப்பிட்ட நகரத்தில் சாலை ஓரம் ஒரு முதியவர் பல நாட்களாக வசித்து வந்தார். அவர் சொந்த குடும்பத்தால் கைவிடப்பட்டு அவலமான நிலையில் இருந்தார். ஆனால் அவரது முகத்தில் ஒரு சிரிப்பு இருக்கும். தர்மம் கொடுப்பவர்களை வாழ்த்துவார்.

நகரத் தூய்மை பணிக்காக சாலை ஒர மக்களை அப்புறப்படுத்தினர் அதிகாரிகள். அப்போது ஒரு முரட்டு அதிகாரி கோபத்துடன், "பிச்சைக்கார பயலே, இங்கிருந்து ஓடுடா.." என்றும் , கெட்டவார்த்தைகள் பேசியதுமல்லாமல்  தனது காலால் அந்த முதியவரையும் அவரது உடைமைகளையும் மிதித்துத் தள்ளினார். சரியாக மூன்றாம் நாள் அதே இடத்தில் நடந்த ஒரு விபத்தில் அந்த அதிகாரியின் கால் பேருந்து சக்கரத்தில் சிக்கி நசுங்கித் துண்டானது. இதனைப் பார்த்தப் பலரும் , "ஆணடவன் உண்மையிலேயே இருக்காரு...." என மனித முறைமையில் சொல்லிக்கொண்டனர். 

"சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்." ( 1 தீமோத்தேயு 5 : 24 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல்.

சிலருடைய பாவங்கள் என்று கூறப்பட்டுள்ளதால் எப்போதுமே இப்படி நடைபெறும் என்று சொல்லமுடியாது என்பது தெளிவு. 

இதுபோல "ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்." எனவே அன்பானவர்களே, நாம் இந்த குறுகிய உலக வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுத்து நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்க்கையினை இழந்துவிடக் கூடாது. 

நாம் எதை விதைக்கின்றோமோ அதையே அறுப்போம்  எனும் உண்மையினை உணர்ந்துகொண்டோமானால் நமது வாழ்க்கை வித்தியாசமானதாக மாறும். குறுகிய உலக ஆசைகளுக்காகப் பாவ காரியங்களில் ஈடுபடமாட்டோம்.  


சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse -யூதா 1 : 21 / Jude 1:21

" ஆதவன் " தியானம் - 1955 ஜூன் 15,   திங்கள் 2016       "தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்மு...