"ஆதவன்" தியானம் - 1955
இன்று பலரும் பாவ மன்னிப்பு அனுபவத்தைப் பெற்றுக்கொண்டவுடன் நேராக நித்தியஜீவனுக்குத் தாங்கள் தகுதிப்பட்டுவிட்டதாக எண்ணிக்கொள்கின்றனர். குறிப்பாக பல ஆவிக்குரிய சபை என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சபைகளின் விசுவாசிகள் இப்படி நினைத்துக்கொள்கின்றனர். காரணம், அவர்களை வழிநடத்தும் சில போதகர்கள் அவர்களுக்கு அப்படித்தான் போதிக்கின்றனர். இத்தகைய மனிதர்களது சுவிசேஷ அறிவிப்புகள் வித்தியாசமானதாக இருக்கும். இவர்கள் தங்களை பரலோகத்துக்குத் தகுதியானவர்கள் எனவும் மற்றவர்கள் எல்லோரும் நரகத்தின் மக்கள் எனவும் எண்ணிக்கொள்கின்றனர்.
அன்பானவர்களே, ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறினார், இறுதிவரை நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான்" என்று. இரட்சிக்கப்படுவது ஒருநாள் அனுபவமல்ல, மாறாக அன்றாடம் சிலுவை சுமக்கும் அனுபவம். எனவேதான், இன்றைய தியான வசனத்தில் தேவனுடைய அன்பிலே நம்மைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருக்க வேண்டும் என்கின்றார் அப்போஸ்தலரான யூதா.
ஆம், கிறிஸ்துவின் இரகத்தைப் பெறுவதற்கு நாம் காத்திருக்கவேண்டும். அதாவது நம்மில் தேவ அன்புள்ளவர்களாய் பொறுமையாய் வாழ்ந்து வரவேண்டும். தேவ அன்பு நம்மில் இருக்குமேயானால் நாம் யாரையும் அற்பமாக எண்ணமாட்டோம், யாரையும் நரகத்தின் மக்கள் என்று நியாயம்தீர்க்கமாட்டோம்.
பாவ மன்னிப்பும் இரட்சிப்பும் வேறுவேறு காரியங்கள். இரட்சிப்பு எனும் புத்திரசுவிகாரமும் நித்திய ஜீவனும் என்றோ ஒருநாள் பெற்ற பாவ மன்னிப்பு அனுபவத்தினால் கிடைப்பதல்ல; அது ஒரு தொடர் அனுபவம். எனவேதான் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்." ( ரோமர் 8 : 23 ) ஆம் அது காத்திருந்து, தவித்து பெறவேண்டிய அனுபவம்.
வெறுமனே தேவன்மேல் விசுவாசம் கொள்வதல்ல, அந்த விசுவாசம் நம்மை உறுதியுடன் நிலைநிறுத்துவதாக இருக்கவேண்டியது அவசியம். ஆவிக்குரிய வாழ்வில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளையும், இக்கட்டுகளையும் இன்னல்களையும் நாம் சந்திக்கவேண்டியதுண்டு. இந்த உலகத்தின் வாழ்க்கைப் பிரச்சனைகளோடு அவற்றை சகித்து நாம் ஆவிக்குரிய வாழ்வில் பின்மாறிடாமல் வாழவேண்டியது அவசியம். அப்போஸ்தலரான பவுல் இப்படித் தான் பல்வேறு வாழ்க்கைப் போராட்டங்களைச் சந்தித்து அவைகளை மேற்கொண்ட அனுபவத்தால் நமக்குக் கூறுகின்றார்:-
"ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்கு மாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. நீங்கள் என்னிடத்திலே கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு." ( பிலிப்பியர் 1 : 29, 30 )
ஆம் அன்பானவர்களே, பாவ மன்னிப்பு அனுபவத்தைப் பெற்றால் மட்டும்போதாது, தேவனுடைய அன்பிலே நம்மைக் காத்துக்கொண்டு தொடர்ந்து நாம் அதில் நிலைநிற்கவேண்டியது அவசியம். மட்டுமல்ல, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தை நாம் பெறவேண்டும்.
சுருக்கமாகச் சொல்வதானால், பாவ மன்னிப்பு அனுபவம், அதனைத் தொடர்ந்த சோதனைகளைச் சகித்து மேற்கொள்ளும் விசுவாசமான ஆவிக்குரிய வாழ்வு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கம் இவைகள் அனைத்துமே நம்மை நித்தியஜீவனுக்கேதுவாக நடத்திச்செல்ல முடியும்.
✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

No comments:
Post a Comment