காண்டாமிருகத்துக்கொத்த பெலன் நமக்கு உண்டு.

 ஆதவன் 🖋️ 602 ⛪ செப்டம்பர் 21,  2022 புதன்கிழமை    

"இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்." ( ஏசாயா 60 : 2 )

கர்த்தருடைய பிள்ளைகளுக்கான ஆசீர்வாதத்தை இன்றைய வசனம் எடுத்துக் கூறுகின்றது. கர்த்தருக்குள் உண்மையான வாழ்க்கை வாழும்போது, நாம் மற்றவர்களிலிருந்து வேறுபிரிக்கப்படுகின்றோம். மற்றவர்கள் உலக காரியங்களைச் சிந்தித்து உலக நாட்டம்கொண்டு அலைவார்கள். ஆனால் கர்த்தருடைய பிள்ளைகள் அவரையே நம்பி வாழ்வார்கள். அவர்களை தேவனே வழி நடத்துவார். 

மோசே இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து அழைத்து வர பார்வோனுக்குமுன் அநேக அதிசயங்களையும் வல்ல செயல்களையும் செய்யவேண்டியிருந்தது. அவற்றுள் ஒரு அடையாளம் இருள். இஸ்ரவேல் மக்களை தேவன் காரிருளுக்குத் தப்புவித்து எகிப்தியரையோ இருளை அனுபவிக்கச் செய்தார். 

"மோசே தன் கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மூன்றுநாள் மட்டும் காரிருள் உண்டாயிற்று. மூன்றுநாள் மட்டும் ஒருவரை ஒருவர் காணவும் இல்லை, ஒருவரும் தம்மிடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே வெளிச்சம் இருந்தது." ( யாத்திராகமம் 10 : 22, 23 )

இதுபோல இஸ்ரவேல் மக்களை கர்த்தர் மேக ஸ்தம்பமாகவும் அக்கினி ஸ்தம்பமாகவும் இருந்து அவர்களை வழி நடத்தினார்.  

இதுபோலவே கடவுளை அறியாதவர்களையும் கடவுளுளது கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் செயல்படுபவர்களையும்  பிரச்சனைகள், துன்பங்கள் எனும் இருளானது மூடிக்கொள்ளும்போது அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்வோர்மீது கர்த்தர் தனது ஒளியைப் பிரகாசிக்கச்செய்வார். ஆம்,    "இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்." என்கிறார் கர்த்தர்.

அன்பானவர்களே, எந்தச் சூழ்நிலையிலும் கர்த்தரை விட்டுப் பிரியாத, அவருக்கு ஏற்புடைய ஒரு வாழ்க்கை வாழ்வோமானால் மற்றவர்களிலிருந்து கர்த்தர்  நம்மை வேறுபடுத்திக்காட்டுவார் என்பதே இந்த வசனத்தின் அடிப்படைக்  கருத்து.

சிப்போரின் மகனான பாலாக் ராஜா, பிலேயாமை அழைத்து இஸ்ரவேல் மக்களை சபிக்கும்படிக் கூறினான். ஏனெனில் பிலேயாம் ஆசீர்வதிப்பவன் ஆசீர்வாதம்பெறுவான் , அவன் சபிக்கிறவன் சாபமடைவான். ஆனால் மூன்று முறை முயன்றும் தேவன் பிலேயாமை இஸ்ரவேலை சபிக்க அனுமதிக்கவில்லை. (எண்ணாகமம் 22,23,24) 

மாறாக அவன், "அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்; ராஜாவின் ஜயகெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது. தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு." ( எண்ணாகமம் 23 : 21, 22 ) என்று கூறி அவர்களை ஆசீர்வதித்தான்.

ஆம், எகிப்து எனும் பழைய பாவவாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்று மீட்பு அனுபவம் பெற்றிருந்தோமானால் இதுபோலவே நம்மை தேவன் ஆசீர்வதிப்பார். 

நமது தேவனாகிய கர்த்தர் நம்மோடே இருப்பார். ராஜாவின் ஜயகெம்பீரம் நமக்குள்ளே இருக்க்கும். காண்டாமிருகத்துக்கொத்த பெலன் நமக்கு உண்டு.

"நீ நெகிழப்பட்டதும், கைவிடப்பட்டதும், ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்." ( ஏசாயா 60 : 15 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                               

குருடருக்கு வழிகாட்டுகிற குருடர்கள்

 ஆதவன் 🖋️ 601 ⛪ செப்டம்பர் 20,  2022 செவ்வாய்க்கிழமை   

"அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து, வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மை செய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரைத் தண்டிப்பேன்."( செப்பனியா 1 : 12 )

இன்றைக்கு நம்மிடையே சிலர் கடவுளையும் அவரது செயல்களையும் நம்புவதில்லை. அவர்களது எண்ணமெல்லாம் கடவுள் இல்லை என்பதே. இன்னும் சிலர் சந்தேகப் பேர்வழிகள். அவர்கள் மனதில் கடவுளைப்பற்றி குழப்பமான எண்ணம் உள்ளது. அதாவது இந்த உலகத்தில் நிகழும் நிகழ்ச்சிகளைப் பார்த்து ஏன் இப்படி நடக்கிறது? கடவுள் என ஒருவர் உண்மையிலேயே  இருக்கின்றாரா? எனும் சந்தேகம் இவர்களுக்கு எழுகின்றது. இவர்களையே இன்றைய வசனம் வண்டல்போலக் குழம்பி இருக்கிறவர்கள் என்று கூறுகின்றது.    

கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பதுபோல இப்படி உலக நிகழ்வுகளால்  கலங்கிக் குழம்பி இருக்கிறவர்களைக் கர்த்தர் கண்டுபிடிக்கின்றார். மட்டுமல்ல, கடவுள் நம்பிக்கையற்று "கடவுளா? அப்படி ஒருவரும் கிடையாது. அப்படி அவர் நன்மை செய்வதும் இல்லை, தீமை செய்வதும் இல்லை. எல்லாம் மனிதனால்தான் நடக்கின்றது." என்கின்றனர் சிலர். "மின்சாரத்தைக் கடவுளா கண்டுபிடித்தார்? செல் போன், தொலைக்காட்சி போன்ற நவீன விஞ்ஞான கருவிகளிக் கடவுளா கண்டுபிடித்தார்? எல்லாம் மனிதனது அறிவுதான் கண்டுபிடித்தது" என்பவர்களையும் கண்டுபிடிக்கின்றார்.  

இன்றைய வசனம் இத்தகைய இரண்டு மன நிலையுள்ளவர்களையும் நான் தண்டிப்பேன் என்று கூறுகின்றது. அதாவது கடவுளைப்பற்றிய சந்தேக எண்ணத்தோடு குழம்பி இருப்பவர்களையும் கடவுள் இல்லை, அவரால் நன்மையையும் தீமையையும் செய்ய முடியாது என்பவர்களையும் தண்டிப்பேன் என்கின்றார்.

அன்பானவர்களே, நானும் ஒரு காலத்தில் இப்படியே இருந்தேன். தீவிர இடதுசாரி பத்திரிகையில் ஆசிரியராக இருந்து கடவுள் மறுப்பு கட்டுரைகளையும் கருத்துக்களையும் கூறிவந்தேன்.  மனிதனால் எல்லாம் முடியும்போது கடவுள் என இல்லாத ஒன்றை நாம் ஏன் எண்ணிக்கொண்டிருக்கவேண்டும்? என்று கூறிவந்தேன். ஆனால், கர்த்தர் கிருபையாய் எனக்குத் தன்னை வெளிப்படுத்தினார். எனது வாழ்வில் கர்த்தர் வந்தபிறகான மாறுதல் பிரமிக்கத்தக்கது. 

இன்று நவீன உலகினில் கோடிக்கணக்கான இளைஞர்கள் இதுபோல கடவுள் நம்பிக்கையற்று இன்றைய வசனம் கூறுவதுபோல, கர்த்தர் நன்மை செய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லிகொண்டு அலைகின்றனர். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் இந்த இளைஞர்கள் பெரும்பாலும் இன்றைய பிரபல ஊழியர்களது செயல்பாடுகளைப்பார்த்து இப்படி மாறியுள்ளனர். 

கிறிஸ்துவை அறிவிக்கவேண்டிய ஊழியர்கள்களும் அவர்கள் நடத்தும் தொலைக்காட்சியும் கடவுளைப்பற்றிய அறிவில்லாத குருடராக இருக்கும் இளைஞர்களை மேலும் மேலும் குழப்பத்துக்குள்ளாக்குகின்றன. குருடராக்குகின்றன. ஆம், கடவுளை அறியா குருடராக இருக்கும் மக்களை மேலும்  வழிதப்பச் செய்கின்றனர் இவர்கள். இத்தகைய ஊழியர்கள் மனம்திரும்பி மக்களுக்கு இடறல் உருவாக்காமல் சத்தியத்தை அறிவிக்க  ஜெபிப்போம். குருடரை வழி தப்பச் செய்வது மகா பாவம். பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் இதனைக் கண்டிக்கின்றது.

"குருடனை வழிதப்பச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்." ( உபாகமம் 27 : 18 )

"அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே." ( மத்தேயு 15 : 14 )

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                         

முழு இருதயத்தோடு கர்த்தர்மேல் நம்பிக்கையாய் இருப்போம்

 ஆதவன் 🖋️ 600 ⛪ செப்டம்பர் 19,  2022 திங்கள்கிழமை   

"உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்." ( நீதிமொழிகள் 3 : 5, 6 )

மனிதர்கள் அனைவருக்கும் தேவன் புத்தியைக் கொடுத்துள்ளார். அந்தப் புத்தி நாம் உலகினில் அறிவுபூர்வமாக வாழ்வதற்கும், செயல்படுவதற்குமே தவிர அதனையே நம்பி வாழ்வதற்கல்ல. நமது முழு நம்பிக்கையும் கர்த்தரைச் சார்ந்தே இருக்கவேண்டும் என்கின்றது இன்றைய வசனம். நமது மனத்தின்படி முடிவுகள் எடுக்கும்போது அதனை தேவனுக்குத் தெரியப்படுத்தி அவரது சித்தத்தை அறிந்து செயல்படுவதே சிறந்தது.

இன்று உலக அறிஞர்களும் சாதாரண மக்களும் பெரும்பாலும் கர்த்தரை மறந்து தங்களது புத்தி சொல்வதன்படியே வாழ்கின்றனர். இதுவே பெரும்பாலும் பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றது. 

ஆதாம் ஏவாள் இப்படித்தான் பாவத்தில் வீழ்ந்தார்கள். அவர்கள் தேவனது வார்த்தைகளை மறந்து தங்கள் சொந்த புத்தியின்படி செயல்பட்டனர். வீழ்ச்சியடைந்தனர். சுய புத்தியில் நடக்கும் பாதை பெரும்பாலும் சரியாக அமைவதில்லை. உலக மக்களுக்கு ஒருவேளை அவை வெற்றி வாழ்க்கைபோலத் தெரியலாம். ஆனால், நமது ஆவிக்குரிய வாழ்வானது சுய புத்தியின்படி நடக்கும்போது தோல்வியையேத்  தரும். 

மேலும் சுய புத்தியால் வெற்றிபெறும்போது நம்மை அறியாமல்  கடவுளை நாம் இரண்டாம் இடத்துக்குத் தள்ளுகின்றோம். "என்னால் தான்" அல்லது, "என் கடின உழைப்பால்தால்" நான் வெற்றிபெற்றேன் எனும் பெருமை மனிதர்களுக்குள் வந்து விடும். மட்டுமல்ல, மற்றவர்களை அற்பமாக் எண்ணும்  மனநிலையும் ஏற்பட்டுவிடும். "உன் ஞானமும் உன் அறிவுமே உன்னைக் கெடுத்தது; நான்தான், என்னைத் தவிர ஒருவருமில்லையென்று உன் இருதயத்தில் எண்ணினாய்."  ( ஏசாயா 47 : 10 ) என்று ஏசாயா பாபிலோனைப்பார்த்துக் கூறுவதுபோல ஞானமும் அறிவுமே நம்மைக் கெடுத்துவிடும். 

நன்றாக படிக்கக்கூடிய பல மாணவர்கள், நல்ல மதிப்பெண் பெற்று நல்ல கல்லூரிகளில் இடம் பிடித்து, படித்து பட்டம்பெற்று, வேலையும் கிடைத்தபின்பும் அவர்களது வாழ்க்கை நன்றாக அமையாத சூழ்நிலையினை பல சாட்சிகள் மூலம் கேட்டுள்ளேன். "நன்றாகக் படிப்பான் பிரதர், பல்கலைக்கழகத்தில்  முதலிடம் (University Rank) பெற்றான்  ஆனால் அவன் வாழ்க்கை இப்படி நாசமாகி விட்டது" என்று ஒருமுறை ஒரு அம்மா அழுதார்கள். 

அன்பானவர்களே, பிறரைவிட நமக்கு அறிவும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய சக்தியும் இருக்கலாம். ஆனால் அது மட்டுமே நமது வாழ்க்கையினை சிறப்பாக மாறிட மாட்டாது. எந்தச் சூழ்நிலையிலும் நமது இருதயம் கர்த்தரைவிட்டு பின்வாங்கிடாமல் காத்துக்கொள்வோம். அவரே நமக்கு அறிவையும் ஞானத்தையும் தருகின்றவர். 

எந்த வேலையில் இருந்தாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் கர்த்தரே நமது நம்பிக்கையாக இருக்கவேண்டும். நமது முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, நமது செயல்பாடுகளையும் அவருக்கு ஏற்றதாக மாற்றி அவரையே வாழ்வில் நினைத்துக்கொள்ளும்போது அவர் நமது பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.

அப்போஸ்தலரான பவுல் கர்த்தரோடு இணைந்து அவரது சித்தத்துக்கு ஒப்புக்கொடுத்து ஊழியம் செய்ததால் தனது  ஊழியத்தில் சுய சித்தத்துக்கு இடமளிக்கவில்லை.  அவரைக் கர்த்தரே ஊழியத்தில் வழி நடத்தினார். அவர்களது சுய சித்தத்தைத் தேவனே தடைப்பண்ணி தேவ சித்தம் செய்யச் செய்தார். 

"அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு, மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப்போகப்பிரயத்தனம் பண்ணினார்கள்; ஆவியானவரோ    அவர்களைப்                        போகவொட்டாதிருந்தார். ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 16 : 6, 7 )

ஆம் அன்பானவர்களே நமது முழு இருதயத்தோடு கர்த்தர்மேல் நம்பிக்கையாய் இருப்போம்;  அவரையே நினைத்துக்கொள்வோம், அவர் நமது பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.  

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                           

தேசம் கிறிஸ்துவின் மெய்யான ஒளியைப் பெற்றுக்கொள்ள ஜெபிப்போம்

 ஆதவன் 🖋️ 599 ⛪ செப்டம்பர் 18,  2022 ஞாயிற்றுக்கிழமை  

"தேசத்துக்குடிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அதேனென்றால் தேசத்திலே உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை; தேவனைப்பற்றிய அறிவும் இல்லை. பொய்யாணையிட்டு, பொய்சொல்லி, கொலைசெய்து, திருடி, விபசாரம்பண்ணி, மிஞ்சி மிஞ்சிப்போகிறார்கள்; இரத்தப்பழிகளோடே இரத்தப்பழிகள் சேருகிறது." ( ஓசியா 4 : 1, 2 )

இன்றைய பத்திரிக்கைச் செய்திகளைப் படிக்கும்போது தேவனது இன்றைய தியானத்துக்குரிய இந்த வார்த்தைகள்தான் நினைவில் வருகின்றது. விபச்சாரம், வேசித்தனம் அதனை மறைக்கும் நோக்கத்தில் நடக்கும் கொலைகள், பொய், களவு என தேசம் தேவனது சாபத்தைப் பெறும் நிலையில்தான் இருக்கின்றது. தமிழகத்திலேயே இப்படி எனும்போது வட இந்தியா இன்னும் அதிகப் பாவ இருள் சூழ்ந்துள்ளதாக இருக்கின்றது.  குறிப்பாக வடஇந்தியாவில் விபச்சாரமும் போதைப் பழக்கமும் அதிக அளவில் உள்ளன.

ஆனால் இன்றைய ஆசீர்வாத பிரசங்கிகள் எதனைப்பற்றியும் கவலை கொள்ளாமல், தேச ஆசீர்வாத உபவாச ஜெபம் நடத்துகின்றார்கள். விபச்சாரமும் வேசித்தனமும் நிறைந்த நாட்டுக்கு எந்த உபவாச ஜெபமும் ஆசீர்வாதத்தைக் கொண்டுவராது. அப்படி ஒரு பாவ இருளான நாட்டினை தேவன் எப்படி ஆசீர்வதிக்க முடியும்?

மனம் திரும்புதலுக்கேற்ற செய்திகள் மக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டுமேயல்லாமல் ஆசீவாதச் செய்தியல்ல. ஒட்டுமொத்த தேசமும் விபச்சாரத்தில், போதை பழக்கத்திலும், லஞ்சம், ஊழல், பொய், களவு , கொலைவெறி என இருக்கும்போது ஆசீர்வாதச் செய்திகள் அர்த்தமில்லாதவையே. 

கர்த்தர் சொல்கிறார், "இதினிமித்தம் தேசம் புலம்பும்; அதில் குடியிருக்கிற அனைவரோடுங்கூட மிருகஜீவன்களும் ஆகாயத்துப் பறவைகளும் தொய்ந்துபோகும்; கடலின் மச்சங்களும் வாரிக்கொள்ளப்படும்." ( ஓசியா 4 : 3 ) ஆம், தேசம் மனம் திரும்பாதபட்சத்தில் இதுதான் நடக்கும். 

அன்பானவர்களே, இதனால்தான் நாம் அனைவருமே கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்க அழைக்கப்படுகின்றோம். தேசத்துக்காக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம். தேச ஆசீர்வாதத்துக்கு அல்ல; தேசம்  பாவ இருளைவிட்டு கிறிஸ்துவின் மெய்யான ஒளியைப் பெற்றுக்கொள்ள ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம்.

தேசத்தின் இந்தப்பாவ இருள் அகல ஜெபிக்காமல் நமது சுய ஆசீர்வாதத்துக்காகவே ஜெபித்துக்  கொண்டிருந்தோமானால்  நம்மைவிட அறிவிலிகள் கிடையாது. ஆசீர்வாத ஜெபக் கூட்டங்கள் நடத்தி காணிக்கை வசூலித்து ஆலயங்கள் கட்டுவதும், மருத்துவமனை கட்டுவதும் தேவன் காட்டும் வழியல்ல.  இருளைவிட்டு மெய்யான வழியை மக்கள் கண்டறிந்து ஒளியினிடம் வரச் செய்வதே நமது இன்றைய முக்கிய கடமை.

அன்பானவர்களே, கிறிஸ்துவின் வருகைக்குமுன் நமது தேசம் இன்றைய அலங்கோல நிலையிலிருந்து விடுபடவேண்டும். ஆளுவோர்கள் அதற்கேற்ற விதமாக நாட்டின் சட்டங்களை செயல்படுத்தவும், சட்டத்தை நிறைவேற்றும் துறைகள் உண்மையாகவும் நேர்மையாகவும் செயல்படவும் நாம் ஜெபிக்கவேண்டியது அவசியம். 

ஆசீர்வாத உபதேச ஊழியர்களை ஒதுக்கி, மனம் திரும்புதலுக்கேற்ற செய்திகளையும் வழிகளையும் காண்பிக்கும் ஊழியர்களைப் பின்பற்றி மெய்யான மனம் திரும்பிய வாழ்வு வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். 

பண ஆசீர்வாதங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வாழ்வோமானால் நாம் அழிந்துபோவது நிச்சயம். "கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும்; தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்." ( செப்பனியா 1 : 18 )

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712    

பூர்வநாட்களை நினைப்போம் அவரது செய்கைகளையெல்லாம் தியானிப்போம்

 ஆதவன் 🖋️ 598 ⛪ செப்டம்பர் 17,  2022 சனிக்கிழமை

"என் ஆவி என்னில் தியங்குகிறது; என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்." ( சங்கீதம் 143 : 4, 5 )

ஆவிக்குரிய வாழ்வில் சோர்வுகளும் மனமடிவுகளும் ஏற்படுவதுண்டு. எவ்வளவுதான் நாம் கிறிஸ்துவுக்குள் பலம்கொண்டாலும் சிலவேளைகளில் நமது பிரச்சனைகளை; துன்பங்களை  நாம் துன்மார்க்கருடைய செழிப்புடன் ஒப்பிட்டுப்பார்த்துவிடும்போது மனம் சோர்வடைந்துவிடுகின்றோம். துன்மார்க்கன் செழிப்பான என்றுதான் வேதம் கூறுகின்றது. (சங்கீதம் 73) ஆனால் அது புல்லைப்போன்ற செழிப்பு. புல்  எப்படி வெயிலால் வறண்டு போகிறதோஅதுபோல அவர்கள் வறண்டுபோவார்கள். 

ஆனால், ஆவிக்குரிய வாழ்வு வாழும்போது நமக்குள் ஏற்படும் சோர்வுகளின்போது நாம் இவைகளைச் சிந்திப்பதில்லை. நாம் இவ்வளவு நேர்மையாக, உண்மையாக வாழ்ந்து என்ன பயன்? எனும் எண்ணம் எழுந்துவிடுகின்றது. 

இதனை மேற்கொள்ள தாவீது இன்றைய தியானத்தில் வழி காட்டுகின்றார். அதாவது நாம் கிறிஸ்துவுக்குள் வளர ஆரம்பிக்கும் ஆரம்ப நாட்களில் தேவன் நமது வாழ்வில் பல்வேறு அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்திருப்பார். ஒவ்வொருவரையும் தேவன் இப்படியே வித்தியாசமாக நடத்துகின்றார். நாம் விசுவாசத்தில் வளர்வதற்காகவே  தேவன் இப்படிச் சில அதிசயங்களை நமது வாழ்வில் செய்து நம்மை வழிநடத்துகின்றார்.  

நமது வாழ்வில் சோதனைகள் ஏற்பட்டு மனம் மடியும்போது தேவன் நமக்குச் செய்த அதிசயங்களை நாம் தியானிக்கும்போது  நம்மை அவை  உயிர்ப்பிக்கும். தேவன்மேல் நமக்குள்ள விசுவாசம் குறைந்திடாமல் நம்மைப் பாதுகாக்கும். இதனையே தாவீது இங்குக் கூறுகின்றார், "என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்." என்று. 

தாவீதுக்கு ஏற்பட்டச் சோதனைகள் அதிகம். சகோதரர்கள் அவனிடம் அன்பாய் இருக்கவில்லை. பிற்காலத்தில் சவுல், சொந்த மகன் அப்சலோம் என அவனது உயிரை வாங்கத் துடித்தவர்கள் பலர். ஆனால் இந்தச் சூழ்நிலைகளில் தாவீது தனது பழைய வாழ்வை எண்ணிப்பார்த்திருப்பார்.  ஆடு மேய்த்துக்கொண்டு வனாந்தரத்தில் அலைந்த நாட்கள்..... அப்போது தான் பிற்காலத்தில் ராஜாவாக ஆவோம் என அவன் எண்ணியதில்லை. ஆனால் தேவன் அவனை உயர்த்தி வைத்தார். 

அன்பானவர்களே, தாவீதின் இந்தப் பழக்கத்தை நாமும் பின்பற்றுவோம். நமது பழைய வாழ்வை எண்ணிப்பார்ப்போம். அதிலிருந்து தேவன் நம்மை எப்படியெல்லாம் மாற்றி வழிநடத்தி வந்துள்ளார் என்பதனைச் சிந்தித்துப்பார்ப்போம். அவற்றுக்காக தேவனுக்கு நன்றி கூறுவோம். 

இப்படி நமது பழைய நாட்களை எண்ணும்போது தேவன்மேல் நமக்கு மேலும் அன்பும் விசுவாசமும் அதிகரிக்கும். 

நமது ஆவி நமக்குள் தியங்கும்போது சோர்ந்துபோகாமல் பூர்வநாட்களை நினைப்போம் அவரது  செய்கைகளையெல்லாம் தியானிப்போம் அவரது கரத்தின் கிரியைகளை யோசிப்போம். கர்த்தர் நமக்கு ஆறுதலும் மகிழ்ச்சியும் தந்து நமது சோர்வை மாற்றுவார். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                     

இயேசு கிறிஸ்துவின் உயிலின் முக்கிய சொத்து ஆத்தும இரட்சிப்பு.

 ஆதவன் 🖋️ 597 ⛪ செப்டம்பர் 16,  2022 வெள்ளிக்கிழமை

"ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார். ஏனென்றால், எங்கே மரணசாதனமுண்டோ, அங்கே அந்த சாதனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும்." ( எபிரெயர் 9 : 15, 16 )

மோசே மூலம் கொடுக்கப்பட்ட பழைய உடன்படிக்கை மக்கள் கடைபிடிக்கவேண்டிய கட்டளைகளைக் கொடுத்ததே தவிர அவைகளால் மக்களைத் தூய்மைப்படுத்தமுடியவில்லை.  மக்களது அக்கிரம சிந்தனை மாறவுமில்லை. அதாவது அந்தக்கட்டளைகளால் உள்ளான மனிதனில் எந்த மாறுதலும் செய்யமுடியவில்லை. 

கட்டளைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை மக்கள் மனிதாபிமானத்திற்கு கொடுக்கவில்லை. எனவேதான் இயேசு கிறிஸ்து ஓய்வு நாளில் மக்களுக்குக் குணமளித்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படி வாழ்வது தேவனுக்கு ஏற்புடைய மக்களாக நம்மை மாற்றிட முடியாது. எனவேதான் செயலிழந்த பழைய உடன்படிக்கையினை மாற்றி இயேசு கிறிஸ்து தனது இரத்தத்தால் புதிய உடன்படிக்கையினை ஏற்படுத்தினார். 

இதனையே, "முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்."  என்று இன்றைய வசனம் கூறுகின்றது. 

புதிய உடன்படிக்கையினை மரண சாசனம் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. மரண சாசனம் என்பது உயில். ஒரு தகப்பன் தான் மரணமடையுமுன் தனது சொத்துக்களைக்குறித்து உயில் எழுதுவதுபோல இயேசு கிறிஸ்து புதிய உடன்படிக்கையின் மக்களாகிய நமக்காக எழுதிய உயில் தான் புதிய உடன்படிக்கை.  

இங்கு எபிரெய நிருப ஆசிரியர் மேலும் ஒரு உண்மையினை விளக்குகின்றார். அதாவது தகப்பன் எழுதிய உயில் தகப்பனது மரணத்துக்குப்பின்தான் உயிர் பெறும். அதற்குமுன் அந்த உயில் செல்லாது. அதுபோல இயேசு கிறிஸ்து எழுதிய புதிய உடன்படிக்கையின் உயிலானது அவரது மரணத்தினால் உயிர் பெற்று இன்றும் அதனை விசுவாசித்து ஏற்றுக்கொள்பவர்களை உயிர்ப்பிக்கின்றது. இதனையே இன்றைய வசனத்தில்  "ஏனென்றால், எங்கே மரணசாதனமுண்டோ, அங்கே அந்த சாதனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும்." ( எபிரெயர் 9 : 16 ) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அன்பானவர்களே, பழைய ஏற்பாட்டின் (உடன்படிக்கையின்) மூலம் மக்களை முற்றும் முடிய இரட்சிக்க முடியாததால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இரத்தம் சிந்தி வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நாம் எல்லோரும் நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புதிய உடன்படிக்கையின் உயிலை எழுதியுள்ளார். அவரது மரணத்தால் அதனை உயிர்பெறச் செய்தார்.

தகப்பன் எழுதிய உயிலில் சில நிபந்தனைகளை விதித்திருந்தால் அந்த நிபந்தனைக்கு உட்பட்டவர்களுக்கே உயிலில் குறிப்பிடப்பட்டவைகள் சொந்தமாகும். இயேசு கிறிஸ்துவின் உயிலின் முக்கிய சொத்து ஆத்தும இரட்சிப்பு. அதனை பெற்றுக்கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் ஒரு நிபந்தனை விதித்துள்ளார். அது:- 

"என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்." ( ரோமர் 10 : 9,10 )

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                     

கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்

 ஆதவன் 🖋️ 596 ⛪ செப்டம்பர் 15,  2022 வியாழக்கிழமை


"என் சிநேகத்துக்குப் பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோ ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கிறேன்." (சங்கீதம் 109:4)

இன்றைய வசனம் நமக்கு எதிராகச்  செயல்படுபவர்களிடம் நாம் நடந்துகொள்ளவேண்டிய முறைமையைக் கூறுகின்றது. உலக மனிதர்கள் எதிராகச் செயல்படுபவர்களிடம் பழிக்குப் பழி வாங்கத் துடிக்கின்றார்கள். இன்றையப்  பத்திரிக்கைச் செய்திகளை நாம் படிக்கும்போது பல கொலைகள் வைராக்கியத்தினாலும் பழிக்குப்பழி வாங்கும் எண்ணத்தினாலும் தான் நடக்கின்றன என்பது புரியும். 

ஆனால் இங்குத் தாவீது, என்  சிநேகத்துக்குப்  பதிலாக என்னை விரோதிக்கிறார்கள் என்று கூறுகின்றார்.  ஆம், இப்படியும் சிலவேளைகளில் நமக்குச் சம்பவிக்கலாம். அதாவது நாம் நம்பி அன்புடன் பழகும் சிலர் நமக்கு விரோதமாக எழும்புவதுண்டு. இதனைத்தான் துரோகம் என்கின்றோம். இப்படிப்பட்டத் துரோகிகள் சிலரையும் நாம் வாழ்வில் சில வேளைகளில் நாம் சந்திக்கலாம். இயேசு கிறிஸ்துவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் ஒரு துரோகி. இயேசு கிறிஸ்துவின் சிநேகத்துக்குப் பதிலாக அவன் அவரை விரோதித்தான். 

இப்படிப்பட்ட வேளைகளில் நாம் உலக மனிதர்களைப்போல செயல்படாமல் ஜெபிக்கவேண்டுமென்று வேதம் இங்கு அறிவுறுத்துகின்றது. தாவீது அதைத்தான் செய்கின்றார். "என் சிநேகத்துக்குப் பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோ ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கிறேன்."  என்கின்றார். அப்போஸ்தலராகிய பவுல் அடிகளும், "நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்." ( பிலிப்பியர் 4 : 6 ) என்கின்றார். 

எதற்கும் கவலைப்படாமல் ஸ்தோத்திரத்தோடு எல்லாவற்றையும் தேவனுக்குத் தெரியப்படுத்தும்போது கர்த்தரே நமக்காக யுத்தம் செய்வார். நாம் நினைப்பதற்கு அப்பாற்பட்ட மரண அடி துரோகிகளுக்கு கிடைக்கும். அல்லது அவர்களை நமக்கு நண்பர்களாக மாற்றுவார். 

எனக்குத் தெரிந்த உண்மையுள்ள ஒரு பாஸ்டர் மிகவும் சிரமப்பட்டு ஒரு நான்கு சென்ட் நிலம் வாங்கியிருந்தார். அவருக்கு ஆண்  பிள்ளைகள் கிடையாது. அந்த ஊரிலிருந்த ஒரு ரௌடி அவரது அந்த நிலத்தை ஆக்கிரமித்து எல்லைக் கல்லை மாற்றி நாட்டி நிலத்தின் ஒருபகுதியை தனக்குரியதாக மாற்றிவிட்டான். அவனோடு சண்டைபோட பாஸ்டரால் முடியவில்லை. அன்று இரவு அவர், "ஆண்டவரே நீர் எனக்கு ஆண் பிள்ளையைத் தரவில்லை. எனது சிறிய வருமானத்தில் குருவி சேகரிப்பதுபோல பணம் சேர்த்து இந்த நிலத்தை வாங்கினேன். இன்று அதுவும் எனக்கு இல்லாமல் போய்விட்டதே. என்னால் அவனோடு சண்டைபோடவும் முடியாது. நீரே எனக்கு உதவும்" என்று  கண்ணீரோடு ஜெபித்தார். 

மறுநாள் காலை ஐந்து ஐந்தரை மணிக்கு அந்த ஊரிலிருந்து ஒருவர் பாஸ்டரிடம் வந்து, "ஐயா, உங்க நிலத்தை அபகரித்த அந்த ரௌடி இரவு ஹார்ட் அட்டாக் வந்து இறந்துவிட்டான்" என்றார். இந்தச் சம்பவத்தை என்னிடம் கூறிய அந்த பாஸ்டர் சொன்னார், "உண்மையில் நான் அவனுக்காக வருந்துகிறேன். அவன் சாகவேண்டுமென்று நான் எண்ணவில்லை; அப்படி ஜெபிக்கவும் இல்லை. அவனை நினைத்தால் மனதுக்கு சங்கடமாக இருக்கிறது. ஏன் ஆண்டவரே அவனுக்கு இப்படி ஒரு தண்டனையைக் கொடுத்தீர்? என்றுதான் நான் ஆண்டவரிடம் வருந்தி மன்றாடுகிறேன்" என்றார்.  ஆம், அன்பானவர்களே, எல்லாவற்றையும் ஜெப விண்ணப்பங்கள் மூலம் தேவனுக்குத் தெரியப்படுத்துவோம். அவரே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்.

"கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்." ( யாத்திராகமம் 14 : 14 )   

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712         

"எனக்குள்ளதைத் தந்துவிட்டாய், இந்த ஏழை குழந்தைகளுக்கு ஏதாவது தா"

 ஆதவன் 🖋️ 595 ⛪ செப்டம்பர் 14,  2022 புதன்கிழமை 

"நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்." (1 பேதுரு 4:14)

இன்றைய காலகட்டங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரானச் செயல்பாடுகளும் அவதூறானச் செய்திகளும் அதிகமாகப் பரவியுள்ளன. ஆனால் இத்தகைய செயல்பாடுகளுக்கு நாம் பதிலளிக்கவோ மற்ற உலக மனிதர்கள் செய்வதுபோல எதிர்ச்செயல் செய்யவோ வேதம் நமக்கு அறிவுறுத்தவில்லை.  

இப்படி நிந்திக்கப்படுவது நம்மை பாக்கியவானாக மாற்றுகின்றது என்கின்றது இன்றைய வசனம். அது ஏன்? எப்படி?

கிறிஸ்துவுக்கு உரிமையானவர்களாகிய நம்மேல் தேவனுடைய ஆவியானவர் குடிகொண்டுள்ளார். எனவே நம்மை ஒருவர் தூஷிப்பது, அவமானப்படுத்துவது, கேவலமாய் நடத்துவது இவை நம்மையல்ல நம்முள் இருக்கும் ஆவியானவரையே அப்படிச் செய்கின்றார்கள். இப்படி அவர்கள் நம்மை இழிவாய் நடத்தும்போது நாம் அமைதியாக இருந்தோமானால் நமது அமைதிச் செயல்பட்டு நம்மூலம் ஆவியானவர் மகிமைப்படுத்தப்படுகின்றார்.

இயேசு கிறிஸ்து துன்பங்களை சகித்தார். மட்டுமல்ல நமக்கும் அவ்வாறு சகிக்கவேண்டுமென்று அறிவுறுத்தினார். ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு மறுகன்னத்தையும் காட்டு என்பதே அவரது போதனை. அந்தப் போதனையின்படி வாழும்போது தேவன் மகிமைப்படுகின்றார். இப்படி வாழ்வது  சிரமமான காரியம்தான். ஆனால், நாம் அன்றாட ஜெபத்தில் தேவனிடம் பெலத்தைப் பெற்று இருப்போமானால் இந்தக்காரியத்தில் ஜெயம் பெறலாம். 

அன்னை தெரசா அவர்கள் ஒருமுறை கல்கத்தா நகரில் ஏழைகளுக்காக கடைகளில்  பணம் சேகரிக்கச் சென்றார். ஒரு கடைக்காரன் கோபத்தில் அவரது மேல் காறித்துப்பி விட்டான். அன்னை அவர்கள் சிரித்துக்கொண்டே அவனிடம், "எனக்குள்ளதைத் தந்துவிட்டாய், இந்த ஏழை குழந்தைகளுக்கு ஏதாவது தா" என்றார். இந்தச் செய்கை அவனை அழச் செய்தது. அன்னையிடம் மன்னிப்புக்கேட்டு அவர்களுக்கு உதவினான். 

ஒரு பள்ளியில் குறிப்பிட்ட ஒரு ஆசிரியருக்கு வேண்டப்படாதவர் ஒருவர் தனக்கு ஆதரவாகச் சிலரைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு எப்போதும் அவரைப்பற்றி பள்ளி நிர்வாகத்துக்கு குறைகூறி மனு அனுப்பிக்கொண்டிருந்தார். அந்தப் பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியரைக் கூப்பிட்டு விசாரித்து அந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று அறிந்ததால் அவர்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் அந்தக் குறிப்பிட்ட ஆசிரியர் பள்ளிக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் உண்மையுள்ளவராகப்  பணியாற்றிவந்தார். 

அந்த ஆசிரியர் நல்ல எழுத்தாற்றல் உள்ளவர். அவர் ஓய்வு நேரங்களில் கதைகள், நாவல்கள் எழுதிவந்தார்.  அவர் எழுதிய நாவலுக்கு இந்திய அரசு சாகித்ய அகாடமி விருது வழங்கி கௌரவித்தது. மறுநாள் அனைத்துப் பத்திரிகைகளிலும் , வானொலி , தொலைக்காட்சிகளிலும் அவரைபற்றியும் அவர் பணிபுரியும் பள்ளி பற்றியும் செய்திகள் வெளியாயின. பள்ளி நிர்வாகத்தின் பேட்டியும் தொலைக்காட்சிகளில் வெளியாயின.  ஆம், அந்த ஆசிரியரால் அந்தப்பள்ளி மகிமை அடைந்தது. இன்னொரு செய்தி, அவர் அந்தப் பரிசு பெற்ற நாவலில் தனது பள்ளி அனுபவத்தை, தான்  நிந்திக்கப்பட்ட அனுபவத்தையே கதையாக்கியிருந்தார்.

அன்பானவர்களே, இந்த ஆசிரியரைப்போலவே நாம் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; அந்த ஆசிரியர் அந்த நிந்தனையையே கதையாக்கி வெற்றிபெற்றதுபோல தேவன் நமக்கும்  ஜெயம் தருவார்.  ஆம், ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் நம்மேல்  தங்கியிருக்கிறார்; மற்றவர்களால் தூஷிக்கப்பட்டாலும் நம்மால் மகிமைப்படுகிறார்.

நமக்கு எதிரான நிந்தனைகளைச் சகித்து வாழ பெலன் வேண்டி ஜெபிப்போம். கர்த்தர்தாமே நம்மை ஆசீர்வதிப்பார். 

 தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                   

பிறர் ஏற்றுக்கொள்ளவேண்டுமானால், கனியுள்ள வாழ்க்கை நமக்கு இருக்கவேண்டும்.

 ஆதவன் 🖋️ 594 ⛪ செப்டம்பர் 13,  2022 செவ்வாய்க் கிழமை 

"தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி, நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்." ( பிலிப்பியர் 1 : 10, 11 )

இன்றைய வசனம் ஒரு கிறிஸ்தவன்  எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டுமென்று விளக்குகின்றது. மட்டுமல்ல, ஒரு ஊழியன் தன்னை நாடிவரும் மக்களுக்கு எதற்கு முன்னுரிமை கொடுத்து ஜெபிக்கவேண்டுமென்றும் விளக்குகின்றது. 

அப்போஸ்தலனாகிய பவுல் தனது செய்கையின்மூலம் நமக்கு வழிகாட்டுகின்றார். அதாவது ஒரு கிறிஸ்தவன் அல்லது கிறிஸ்துவின் விசுவாசி கிறிஸ்துவினால் வருகின்ற நீதியின் கனிகளால் நிரம்பியவனாக இருக்கவேண்டும். கனியற்ற வாழ்க்கை நம்மை பிறருக்கு எடுத்துக்காட்டாது. கனியுள்ள வாழ்வே நம்மை பிறருக்கு வெளிச்சமிட்டுக் காட்டும். அப்படிக்  கனியுள்ள வாழ்க்கை வாழும்போதுதான் தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும் என்கின்றார் பவுல் அடிகள். 

மேலும் இப்படி ஒரு கிறிஸ்தவ விசுவாசி வாழ்வதே அவனை கிறிஸ்துவின் நாளுக்கு, அதாவது கிறிஸ்துவின் வருகையின்போது அவருக்குமுன் தூய்மையானவர்களாகவும் இடறலற்றவர்களாகவும் இருக்கச் செய்யும்.  என்று கூறுகின்றார் பவுல் அடிகள். 

கனியற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டு நாம் கிறிஸ்துவை அறிவிக்க முடியாது. ஒரு சாதாரண சினிமா நடிகன்கூட மக்களால் ரசிக்கப்படுபவனாக இருக்கவேண்டுமானால் அவனுக்குச் சிலத் தனித் தகுதிகள் வேண்டும். அப்போதுதான் மக்கள் அவனை ஏற்றுக்கொள்வார்கள். அதுபோல கிறிஸ்தவர்களை பிறர் ஏற்றுக்கொள்ளவேண்டுமானால், வித்தியாசமான கனியுள்ள வாழ்க்கை நமக்கு இருக்கவேண்டும்.  

இன்றைய வசனம் ஊழியர்களுக்கும் ஒரு படிப்பினையாக உள்ளது. அதாவது இங்கு அப்போஸ்தலனாகிய பவுல் தனது சபை மக்கள் இப்படிக் கனியுள்ளவர்களாக, தூய்மையுள்ளவர்களாக, கிறிஸ்துவின் வருகைக்குத் தகுதியுள்ளவர்களாக இருக்கவேண்டுமென்று விண்ணப்பம் பண்ணுகின்றார்.

அவர் வெறும் போதனையும், ஆடலும், பாடலும், துள்ளலும் செய்பவராக இருக்கவில்லை. தனது சபை மக்கள் மேற்படி தகுதியுள்ளவர்களாக விளங்கவேண்டுமென்று அவர்களுக்காக தேவனிடம் விண்ணப்பம் பண்ணுபவராக இருந்தார்.   தனது சபைக்கு வருபவர்கள் எல்லோரும் உலக ஆசீர்வாதம் பெற்றவர்களாகவும், செழிப்பானவர்களாகவும் மாறவேண்டுமென்று அவர் ஜெபித்துக்கொண்டிருக்கவில்லை. 

என்னை ஆவிக்குரிய வழியில் நடத்திய பாஸ்டர் ஜான்சன் டேவிட் ஐயா அவர்கள் இப்படிப்பட்டவராக இருந்தார். மிகப்பெரிய தீர்க்கதரிசியாகவும் இருந்தார் அவர். நாம் ஏதாவது தவறோ, விசுவாசக் கேட்டுக்கான காரியங்களோ செய்துவிட்டால் அது அவருக்குத் தெரிந்துவிடும். ஞாயிறு ஆராதனை முடிந்து அவரிடம் ஜெபிக்கச் செல்லும்போது கண்டித்துக் கூறுவார். "தம்பி , எச்சரிக்கையாயிருங்கள் ஆண்டவர் தொலைத்துவிடுவார் " என்று பயமுறுத்தும் விதமாக எச்சரிப்பார். தனிப்பட்ட விதத்தில் நல்ல நண்பனாக இருந்தாலும் ஆண்டவர் கூறிய காரியத்தை நம்மிடம் எச்சரித்துக் கூறாமல் இருக்கமாட்டார். 

ஆனால் ஆசீர்வாதத்தைத் தேடிவரும் விசுவாசிகள் அவரை விரும்புவதில்லை. அவர் எல்லோரையும் சபிப்பதாகக் குறை சொல்வார்கள். அவரது சபைக்கு அருகிலுள்ள பல விசுவாசிகள் அந்த சபையைவிட்டு பேருந்து ஏறி தொலைவிலுள்ள வேறு சபைகளுக்குச் செல்வார்கள். ஆம், விசுவாசிகளுக்கு தங்கள் பாவங்கள் குத்தப்பட்டு சூடு உண்டாக்கும் சபைகளைவிட ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட குளுகுளு சபைகள் பிடித்துள்ளது. அங்கு சென்று கைதட்டிப்பாடி நடனம் செய்வதே அவர்களுக்குப் பிடித்துள்ளது.  

எனது இன்றைய நிலைமையைச் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே அவரால் கூறமுடிந்தது. அதுவே இன்றும் தேவன்மேல் அசைக்க முடியாத விசுவாசத்தை என்னுள் வளர்ந்துள்ளது. ஆனால் இத்தகைய ஊழியர்கள் எண்ணிக்கையில் மிகமிகக் குறைவாகவே இன்று உள்ளனர். 

அன்பானவர்களே, இதனை வாசிக்கும் நீங்கள் விசுவாசிகளாக இருந்தால், கனியுள்ள வாழ்க்கை வாழ ஒப்புக்கொடுங்கள். ஊழியராக இருந்தால் பவுலைப்போல உங்கள் சபை விசுவாசிகளின் உலக ஆசீர்வாதத்துக்காக அல்ல,  அவர்கள்  பரிசுத்தமும் கனியுள்ளவர்களுமாக மாறிட ஜெபியுங்கள்.  

 தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                       

ஐந்து காரியங்கள்

 ஆதவன் 🖋️ 593 ⛪ செப்டம்பர் 12,  2022 திங்கள் கிழமை

"கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள்; ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்." ( 2 கொரிந்தியர் 13 : 11 )

ஆவிக்குரிய பல்வேறு அறிவுரைகளைக் கொரிந்திய சபைக்கு இரண்டு நிரூபங்கள்  மூலம் கூறிய பவுல் அடிகள், இறுதியாக ஐந்து  காரியங்களைக் கூறுகின்றார். அவையே இன்றைய தியானத்துக்குரிய வசனம். 

ஆவிக்குரிய மக்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டாலும், சிலர் எப்போதும் துக்க முகத்துடனேயே இருப்பார்கள். காரணம், இவர்கள் எப்போதும் தேவனிடம் எதையாவது கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அவை கிடைக்கவில்லை எனும் கவலைதான் இவர்களை முக வாட்டத்தோடு இருக்கச் செய்கின்றது. எப்போவாவது முகவாட்டம் நமக்கு ஏற்படலாம், கவலை ஏற்படலாம். ஆனால் ஆவிக்குரிய மனிதன் முகத்தின் நாம் சந்தோஷத்தைக் காணவேண்டும். தேவனிடம் விசுவாசமாக இருக்கும்போது மட்டுமே துக்கம் மாறி சந்தோஷம் வரும். எனவேதான் சகோதரரே சந்தோஷமாய் இருங்கள் என்று கூறுகின்றார்.

நாற்சீர் பொருந்துங்கள் என்பது நல்ல பண்புகளோடு வாழுங்கள் என்று பொருள்.   நல்ல கிறிஸ்தவ பண்புகளோடு வாழும்போதுதான் கிறிஸ்துவை நம்மூலம்  பிறர் அறிந்திடமுடியும். 

மன ஆறுதலோடு வாழுங்கள் (என் அறிவுரைக்குச் செவி சாயுங்கள் என்று ஒருங்கிணைந்த மொழிபெயர்ப்பில் கூறப்பட்டுள்ளது) ஆறுதலான சமாதான வாழ்க்கையே கிறிஸ்தவ வாழ்க்கை.

ஏக சிந்தையாயிருங்கள் என்பது, நீங்கள் எல்லோரும் ஓர் மனம் உள்ளவர்களாய் இருங்கள். மட்டுமல்ல, உங்கள் சிந்தனையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மட்டுமே ஏக எண்ணமாய்க் கொண்டிருங்கள் என்று பொருள்.

எல்லோரிடமும் மன சமாதானமாய் இருங்கள். சண்டைச் சச்சரவுகள் வேண்டாம். 

இப்படி வாழும்போது, அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார். என்கின்றார் பவுல் அடிகள். இங்கு முக்கியமாக நாம் கவனிக்கவேண்டியது, ஜெபியுங்கள் என்றோ, வேதாகமத்தை வாசியுங்கள் என்றோ, காணிக்கை கொடுங்கள் என்றோ, ஆலய வழிபாடுகளிலும் ஜெபக்கூட்டங்களிலும் கலந்துகொள்ளுங்கள் என்றோ பவுல் அடிகள் கூறவில்லை. இவைகளை அவரது நிரூபங்களில் அவர் கூறியிருந்தாலும் இங்கு நிறைவாக, அவர்களைவிட முக்கியமாக இவைகளைக் குறிப்பிடுகின்றார். 

அதாவது ஆவிக்குரிய மனிதன், ஜெபிப்பதுடனும் வேதம் வசிப்பதுடனும் நில்லாமல் கூடவே, மகிழ்ச்சியாகவும், நற்குணங்கள் உள்ளவனாகவும், ஆறுதலுள்ளவனாகவும், ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் மற்றவர்களுடன் ஒரே சிந்தையுள்ளவனாகவும்,. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே - அவரது வசனங்களையே சிந்திப்பவனாகவும், எல்லோருடனும் சமாதானமுள்ளவனாகவும் வாழ்பவனாக இருக்க வேண்டும் என்கின்றார்.  

இப்படி வாழும்போது மட்டுமே அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணரான தேவன் உங்களோடுகூட இருப்பார் என்று இந்த வசனம் கூறுகின்றது. இன்று நம்மில் பலரும் ஜெபிக்கும்போது , "பவுலோடும் பேதுருவோடும் உமது அப்போஸ்தலர்களோடும் இருந்ததுபோல எங்களோடும் இரும் " என்று ஜெபிக்கின்றோம். அதற்கு முதல்படி பவுல் கூறும்  இந்த ஐந்து காரியங்களையும் நம்மில் ஆராய்ந்து சீர்படுத்தவேண்டியதுதான். 

அன்பானவர்களே, நாம் எல்லோருமே இவற்றை முதலில் நம்மிடம் உருவாக்குவோம். அப்போது சமாதானத்தின் தேவன் நம்மோடுகூட இருப்பார். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                                                

"அதிகம் காணிக்கைக் கொடுப்பவனுக்கு தேவன் அதிகம் கொடுப்பார்" என்பது சாத்தானின் உபதேசம்.

  ஆதவன் 🖋️ 592 ⛪ செப்டம்பர் 11,  2022 ஞாயிற்றுக் கிழமை


"ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்." ( 2 கொரிந்தியர் 11 : 3 )

ஆதியில் ஏதேன் தோட்டத்தில்  பாம்பு ரூபத்தில் வந்த சாத்தான் ஏவாளை வஞ்சித்தது. தேவனது வார்த்தையினை மாற்றிப்பேசி அவளைத் தான் சொல்லுவதுதான் சரி என்று நம்பச் செய்தது. இங்குத்  தவறான உபதேசங்களை பவுல் அடிகள் சாத்தானின் வஞ்சக உபதேசத்துக்கு ஒப்பிட்டுப் பேசுகின்றார். 

கிறிஸ்துவின்மேலான உண்மையான விசுவாசத்துக்குத் தடையான உபதேசங்கள், கிறிஸ்துவின்மேல் மெய்யான அன்பு ஏற்படுத்துவதற்குத் தடையான உபதேசங்கள் எல்லாமே சாத்தானின் வஞ்சக உபதேசங்கள்தான்.  

வேதத்தில் சொல்லப்படாத கிறிஸ்துவைப் பிரசங்கிப்பது சாத்தானின் வஞ்சக உபதேசம். ஒருவேளை இத்தகைய போதனைகளைக் கேட்க மக்கள்  கூட்டம் அதிகம் சேரலாம், மற்றபடி இது வேறொரு கிறிஸ்துவைப் போதிப்பதே,  "எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால்,  ( 2 கொரிந்தியர் 11 : 4 )  அது சாத்தானின் உபதேசம்.

புதிய ஏற்பாட்டின்படி  நமது உள்ளத்தையும் உடலையும் பரிசுத்தமாகப்  பாதுகாத்து உயிருள்ள  ஜீவ பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுப்பதே புத்தியுள்ள மெய்யான ஆராதனை. (ரோமர் 12:1) இதுவே ஆவிக்குரிய ஆராதனை. மட்டுமல்ல, இதுவே ஆவிக்குரிய ஆசீர்வாதத்தின் முதல் படி. ஆனால் ஒருவன், "நீ ஆயிரம் ரூபாய் காணிக்கைக் கொடுத்தால் உனக்கு பத்தாயிரமாகத் தேவன் திருப்பித் தருவார், அதிகம் காணிக்கைக் கொடுப்பவனுக்கு தேவன் அதிகம் கொடுப்பார்" எனப் பிரசங்கித்தால் அது ஏவாளை வஞ்சித்த சாத்தானின் உபதேசம்.  

ஏவாள் இப்படித்தான் வஞ்சிக்கப்பட்டாள்.  "தோட்டத்தின் நடுவிலிருக்கும் மரத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை புசிக்கும் நாளில் சாகவே சாவாய்" என்று தேவன் ஆதாம் ஏவாளிடம் கூறியிருந்தார். ஆனால் இன்று ஆசீர்வாத போதகர்கள் ஆசீர்வாதத்தின் அர்தத்தினையும் அதனைப் பெறும் வழிகளையும் மறைத்துப் பிரசங்கிப்பதுபோல சாத்தானும் ஏவாளிடம் மாற்றிப் போதித்தான்.  

"அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது." ( ஆதியாகமம் 3 : 4, 5 )

இதனைத்தான் அப்போஸ்தலரான பவுல் அடிகள் இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில், "ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்." என்று குறிப்பிடுகின்றார்.

அன்பானவர்களே, பவுல் அடிகள் பயப்பட்டதுபோலவே இன்று நடைபெறுகின்றது. பிற மதத்து மக்கள்  இன்றைய பல ஊழியர்களது போதனைகள், அவர்களது செயல்பாடுகளால் கிறிஸ்தவ மார்க்கத்தின்மேல் சரியான புரிதல் கொள்ளமுடியாமல் இருக்கின்றனர். ஆம், சத்தியத்தை இப்படித் திரித்துப் போதிப்பது சாத்தானுக்கு ஏற்புடையதாக இருப்பதால் சாத்தான் இவர்களது ஊழியங்களைப் பரிபூரணமாக ஆசீர்வதித்திருக்கின்றான். 

தேவனுடனான நமது தனிப்பட்ட  உறவில் நாம் வளர்ந்தால் மட்டுமே நாம் இந்த வஞ்சக போதனைகளுக்குத் தப்பி சத்தியத்தை அறிய முடியும்.  ஆலயங்களுக்குச் செல்வது, வேதாகமம் வாசிப்பது, ஜெபக்கூட்டங்களில் பங்கு பெறுவது மட்டும் போதாது. நமது தனி ஜெபம்தான் தேவனோடுள்ள உறவைப் பலப்படுத்தும். அந்த உறவு பலப்படும்போது மட்டுமே சாத்தானின் தந்திரங்களுக்குத் தப்பி ஒரு மெய்யான ஜெயமுள்ள ஆவிக்குரிய  வாழ்வு வாழ முடியும்.   

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712   

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

குணமாக்கும் ஜெபங்கள்

  'ஆதவன்'  📖✝  வேதாகமத் தியானம் - எண்:- 1,264      💚  ஜூலை 26, 2024  💚 வெள்ளிக்கிழமை  💚 "நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள...

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்