God's supreme blessings are ours when we are with Him

AATHAVAN 🖋️ 629 ⛪ October 18, 2022 Tuesday

"Son, you are always with me, all that I have is yours." (Luke 15:31)

These are the words of the father to his eldest son in Jesus Christ's parable of the prodigal son. The younger son separated from his father and destroyed his property. The eldest son is with his father. But when the estranged younger son returns to his senses, the father organizes a feast to celebrate the joy. This gives grief to the eldest son.

He said to his father, "All these years I have served you and never disobeyed your command, but you never gave me a single lamb so that I could be happy with my friends. As soon as this son of yours comes, who destroyed your property among prostitutes, slaughter the fatted calf for him." ( Luke 15 : 29, 30 ) The Father says today's verse as an answer to him.

Beloved, this is the greatest blessing we receive when we are with God in the spiritual life. But we also fail to notice it like this elder son. Because we do not have wealth or worldly blessings like other worldly people, we wrongly think that God has done injustice to us. 

This father says to his eldest son, it is like a worldly rich man telling us that "all that I have is yours". But, most of the time we don't realize this. The scriptures say that we are aliens in this world. Our permanent abode is heaven. Jesus Christ has promised us as He said to the eldest son who lived to obey the Father in truth.

Yes, He wants us to be with Him in His glory. The sufferings of this world are not worthy of the glory to come. This is why apostle Paul wrote, "For I reckon that the sufferings of this present time are not worthy to be compared with the glory which shall be revealed in us."( Romans 8 : 18 )"

Jesus Christ also prays for us to attain that glorious bliss. Yes, "Father, I will that they also, whom thou hast given me, be with me where I am; that they may behold my glory, which thou hast given me: for thou lovedst me before the foundation of the world." ( John 17 : 24 )

Not only that, He prayed, "That they all may be one; as thou, Father, art in me, and I in thee, that they also may be one in us" ( John 17 : 21 ). What a great blessing these are!!!

Like the sad elder son, we are regretting that our worldly desires are not fulfilled and say, "you never gave me a lamb so that I could be happy with my friend."  Beloved, we are blessed to the full when we are always with Him. Because we are his sons and daughters. All that in his is ours. Therefore, looking at us, he says, "son, daughter, you are always with me, all that I have is yours".

Yes, God's supreme blessings are ours when we are with Him.

Message :- Bro. M. Geo Prakash,  Contact- 96889 33712

இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்

 ஆதவன் 🖋️ 630 ⛪ அக்டோபர் 19,  2022 புதன்கிழமை

"நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்." ( 2 பேதுரு 3 : 18 )

இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பேதுரு இரண்டு காரியங்களில் நாம் வளரவேண்டும் என்று கூறுகின்றார். 

1. கிறிஸ்துவின் கிருபையில் வளரவேண்டும் 

2. கிறிஸ்துவை அறியும் அறிவில் வளரவேண்டும்.

இங்கு நாம் கவனிக்கவேண்டியது, பேதுரு நம்மிடம்  கிறிஸ்துவைப் பற்றி அறியும் அறிவில் என்று கூறாமல், கிறிஸ்துவை அறியும் அறிவில் என்று கூறுகின்றார். ஒருவரை அறிவதற்கும் ஒருவரைப்பற்றி அறிவதற்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. 

உதாரணமாக நமது முதலமைச்சரை எடுத்துகொள்வோம். நாம் எல்லோரும் அவரைப்பற்றி அறிந்துள்ளோம். பத்திரிகை செய்திகள் மூலமும், தொலைக்காட்சி செய்திகள் மூலமும் அவரைப்பற்றி அறிந்துள்ளோம். அவர் யாருடைய மகன், அவரது பழைய அனுபவம் என்ன, அவரது திறமைகள் என்ன போன்ற செய்திகள் நமக்குத் தெரியும். எப்படி? அவரைப்பற்றி நாம் பல்வேறு முறைகளில் அறிந்துகொண்ட தகவல்கள். 

இதுபோலவே இன்று நம்மில் பலரும் தேவனைப்பற்றி அறிந்துள்ளோம். வேதாகமத்தை வாசிப்பதன்மூலம், பல்வேறு பிரசங்கங்களைக் கேட்பதன்மூலம், ஞாயிறு மறைக்கல்வி வகுப்புகளில் நமக்குக் கற்றுக்கொடுத்ததன்மூலம் நாம் தேவனைப்பற்றி அறிந்துள்ளோம்.

ஒருவரை அறிவது என்பது இதிலிருந்து வித்தியாசமானது. அதாவது நாம் முன்பு பார்த்த நமது முதலமைச்சர் உதாரணத்தில், நம்மைவிட அவரது மனைவி, மகன் இவர்கள் அவரை தனிப்பட்ட முறையில் அறிந்திருப்பார்கள் அல்லவா?. அவரது தனிப்பட்ட குணங்கள், தனிப்பட்ட அன்பு, இவற்றை அனுபவித்து அறிந்திருப்பார்கள். அதாவது நாம் அவரைப்பற்றி அறிந்துள்ளோம்; அவர்கள் அவரை அறிந்துள்ளனர்.

இதுபோல நாம் கிறிஸ்துவை தனிப்பட்ட முறையில் அறியவேண்டும் என்கின்றார் பேதுரு. அதுவே தேவனை அறிதல். தேவனது தனிப்பட்ட அன்பு நமது வாழ்வில் செயல்படுவது, அவரது விருப்பம் என்ன என்பதை அறிந்து வாழ்வது, அவரோடு ஒன்றித்து இருப்பது....இவையே தேவனை அறிவது.  

இன்று கிறிஸ்தவர்களில் பலரும் நாம் முன்பு பார்த்த உதாரணத்தில் முதலமைச்சரைப் பற்றி  நாம் அறிந்துள்ளதுபோல தேவனைப்பற்றி அறிந்து வைத்துள்ளனரேத் தவிர தேவனை அறியவில்லை. அதாவது தேவனைப்பற்றி தங்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்ட சத்தியங்களையும்,    வாசித்து புரிந்துகொண்ட சத்தியங்களையும் தெரிந்துவைத்துக்கொண்டுள்ளனர். ஆனால், தேவனோடு தனிப்பட்ட தொடர்புல்லை.  தேவனை அறியும்போது மட்டுமே நாம் அவரது அன்பை பூரணமாக உணர்ந்துகொள்ள முடியும்.

இன்றைய வசனத்தில் அப்போஸ்தலரான பேதுரு இந்த அறிவில் வளருங்கள் என்று கூறுகின்றார். தனது நிருபத்தின் இறுதி வசனமாக இப்படி எழுதியுள்ள பேதுரு,   இந்த நிருபத்தின் துவக்க வசனமாக கூறுகின்றார், "தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது." ( 2 பேதுரு 1 : 2 ). அதாவது பேதுரு கூறவருவது, இப்படி தேவனையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் நாம் அறியும்போது தான் கிருபையும் சமாதானமும் நமது வாழ்வில் பெருகும். 

அன்பானவர்களே, வெறுமனே பெயரளவில் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதல்ல, கிறிஸ்துவை அறிந்து அவரது அன்பில் நாம் வளரவேண்டும். அதற்கு முதல்படிதான் அவரோடு ஒப்புரவாகி மீட்பு அனுபவம் பெறுவது. நமது பாவங்கள், மீறுதல்கள் இவற்றை கிறிஸ்துவிடம்  அறிக்கையிட்டு கிறிஸ்துவுக்கு நம்மை முற்றிலும் ஒப்படைத்துவிடும்போது அவர் தன்னை நமக்கு வெளிப்படுத்துவார்.  அப்போதுதான் நாம் அவரை அறியமுடியும். இந்த அனுபவத்தைப்பெற ஒப்புக்கொடுத்து வேண்டுவோம். மேலான ஆவிக்குரிய வாழ்வில் அவர் நம்மை நடத்துவார்.   

கிறிஸ்து அனுபவத்துடன் "நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்." என வாழ்த்துகின்றேன்.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

அவரோடு இருக்கும்போது நமக்கு நிறைவான ஆசீர்வாதமுண்டு.

 ஆதவன் 🖋️ 629 ⛪ அக்டோபர் 18,  2022 செவ்வாய்க்கிழமை

"மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது." ( லுூக்கா 15 : 31 )

இயேசு கிறிஸ்து கூறிய ஊதாரிமைந்தன் உவமையில் வரும் தகப்பன் தனது மூத்த மகனிடம் கூறும் வார்த்தைகளே இவை. இளைய மகன் தகப்பனைவிட்டுப் பிரிந்து சென்று சொத்துக்களையும் அழித்துவிட்டான். மூத்த மகனோ தகப்பனோடேயே இருக்கிறான். ஆனால் தகப்பனை விட்டுப் பிரிந்துசென்ற இளைய மகன் மனம் திரும்பி வரும்போது அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட  தகப்பன் விருந்து ஏற்பாடுசெய்கிறான்.  இது மூத்த மகனுக்கு மன வருத்தத்தைக் கொடுக்கின்றது.

அவன் தகப்பனிடம், "இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை. வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்." ( லுூக்கா 15 : 29, 30 ) அவனுக்குப் பதிலாகத்தான் இன்றைய வசனத்தைத் தகப்பன் கூறுகின்றான்.

அன்பானவர்களே, இதுதான் ஆவிக்குரிய வாழ்வில் நாம் தேவனோடு இருக்கும்போது கிடைக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதம். ஆனால் நாமும் இந்த மூத்த மகனைப்போல அதனைக் கவனிக்கத் தவறிவிடுகின்றோம். மற்ற உலக மனிதர்களைப்போல நமக்குச் செல்வமோ உலக ஆசீர்வாதமோ இல்லாததால் தவறுதலாக எண்ணி தேவனை நொந்துகொள்கின்றோம். 

எனக்குள்ளதெல்லாம்உன்னுடையதாயிருக்கிறது என்று உலகப் பணக்காரர் ஒருவர் நம்மிடம் சொல்வதைப்போல உள்ளது இந்தத்  தகப்பன் மூத்த மகனிடம் கூறுவது. ஆனால், பெரும்பாலான நேரங்களில் நாம் இதனை உணர்வதில்லை. இந்த உலகத்தில் நாம் பரதேசிகள் என்று வேதம் கூறுகின்றது. நமது நிரந்தரக் குடியிருப்பு பரலோகம்தான். உண்மையாய் தகப்பனுக்குக் கீழ்படிந்தது வாழ்ந்த மூத்தமகனுக்குக் கூறியதுபோல இயேசு கிறிஸ்து நமக்கும் வாக்களித்துள்ளனர். 

ஆம், அவரது மகிமையில் அவரோடுகூடநாம் இருக்க அவர் விரும்புகின்றார். இந்த உலகத்தின் பாடுகள் இனி வரும் மகிமைக்கு ஈடானவையல்ல. அப்போஸ்தலரான பவுல் அடிகள் இதனால்தான், "இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்." ( ரோமர் 8 : 18 ) என்று கூறுகின்றார்.

அந்த மகிமைப் பேரின்பத்தை நாம் அடைந்திட இயேசு கிறிஸ்துவும் நமக்காக வேண்டுதல் செய்கின்றார். ஆம், "பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன்." ( யோவான் 17 : 24 ) என்று நமக்காக ஜெபித்துள்ளார் இயேசு கிறிஸ்து. 

மட்டுமல்ல, "நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்." ( யோவான் 17 : 21 ) என்று வேண்டுகின்றார். இவை எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்!!!

"என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை. "என வருத்தப்பட்ட மூத்தமகனைப்போல நாம் உலக ஆசைகள்  நிறைவேறவில்லை என வருந்திக்கொண்டிருக்கிறோம். அன்பானவர்களே, நாம் எப்போதும் அவரோடு இருக்கும்போது நமக்கு நிறைவான ஆசீர்வாதமுண்டு. காரணம், நாம் அவரது மகனாக, மகளாக இருக்கின்றோம். அவருக்குள்ளவைகளெல்லாம் நமக்குரியவைகளே.  எனவே, நம்மைப்பார்த்தும் அவர் கூறுகின்றார், மகனே, மகளே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது. 

ஆம், தேவனுக்குரிய உன்னத ஆசீர்வாதங்கள் அவரோடு இருக்கும்போது நமக்கு நிச்சயமாக உண்டு.  

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

அருமையான இரண்டு கருத்துக்கள்

 ஆதவன் 🖋️ 628 ⛪ அக்டோபர் 17,  2022 திங்கள்கிழமை

"இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே." ( 1 கொரிந்தியர் 5 : 10 )

கொரிந்து சபையில் விபச்சார பாவத்தில் ஈடுபட்ட ஒருவன் உறுப்பினராக இருந்ததை அப்போஸ்தலரான பவுல் கடிந்து கொண்டு அவனைக்குறித்துப் பல விஷயங்களைக் கூறிவிட்டுத் தொடர்ந்து  எழுதும்போது இன்றைய தியானத்துக்குரிய வசனத்தைக் கூறுகின்றார். 

இந்த உலகத்தில் விபச்சாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் எல்லோருமே நிறைந்திருக்கிறார்கள். ஆவிக்குரிய அனுபவத்தோடு வாழ்பவர்கள் குறைவானவர்களே. எனவே நாம் மற்ற எல்லோரையுமே பாவிகள் என்று கருதி ஒதுக்கினால் இந்த உலகத்திலே நாம் வாழமுடியாது; நாம் உலகத்தைவிட்டு ஒதுங்கிப்போகவேண்டியிருக்கும்.  அப்படி ஒதுக்கினால் நாம் யாருக்கும் சுவிசேஷம் அறிவிக்கவும் முடியாது. எனவே அவர்களை ஒதுக்கவேண்டாம்.

இயேசு கிறிஸ்து பாவிகளோடும் ஆயக்காரரோடும்தான் அதிகநேரம் இருந்தார். "அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதை வேதபாரகரும் பரிசேயரும் கண்டு, அவருடைய சீஷரை நோக்கி: அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்." ( மாற்கு 2 : 16  மற்றும் மத்தேயு 9:11, லூக்கா 5:30) "நோயாளிகளுக்கே மருத்துவர் தேவை" என்றார் இயேசு கிறிஸ்து.

அதாவது பவுல் அப்போஸ்தலர் கூற விரும்பும் கருத்து என்னவென்றால், நம் கருத்தை ஏற்காதவர்கள், பாவ வாழ்க்கை வாழ்பவர்கள் இவர்களோடுதான் இந்த உலகத்தில் நாம்வாழவேண்டும். எனவே, அவர்களை ஒட்டுமொத்தமாக ஒத்துக்கிடவேண்டாம். அப்படி ஒதுக்கினால் நாம் இந்த உலகத்தில் வாழமுடியாது.

ஆனால் தொடர்ந்து பவுல் அடிகள் எழுதுகின்றார், "நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது." ( 1 கொரிந்தியர் 5 : 11 )

அன்பானவர்களே, பவுல் அடிகள் கூறவருவது இரண்டு கருத்துக்கள்.

1. இந்த உலகத்தில்  விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் எல்லோருமே நிறைந்திருக்கிறார்கள். அவர்களை ஒதுக்க வேண்டாம்.  அவர்கள் ஒருவேளை நம்மூலம் கிறிஸ்துவை அறிந்து மீட்பு பெறலாம்.

2.  சகோதரன் என்று கூறப்படும் ஒருவன் - அதாவது நான் இரட்சிக்கப்பட்டேன் மீட்பு பெற்றுள்ளேன் எனக் கூறும் ஒருவன் நமது சபையில் இருந்துகொண்டு அவன்  விபச்சாரம், பொருளாசை, கொள்ளை, விக்கிரகாராதனை செய்பவனாக இருந்தால் அவனோடு சேர்ந்திருக்கக்கூடாது , அவனோடு சாப்பிடக்கூடாது. சுருக்கமாகக் கூறுவதென்றால், கிறிஸ்துவை அறிந்தஒருவன் இத்தகைய பாவங்கள் செய்பனாக இருந்தால் அவனை முற்றிலும் நம்மைவிட்டு ஒதுக்கவேண்டும்.  

இப்படிப் பவுல் அடிகள் அவர்களை விலக்கச் சொல்லும் காரணம், புளிப்பு மாவு போன்ற அவர்கள் நம்மோடு இருப்பார்களானால் நம்மையும் அவர்களைப்போல பாவத்தினால் புளிக்க வைத்துவிடுவார்கள். 

"ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்தமாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள்." ( 1 கொரிந்தியர் 5 : 7 )

பவுல் அடிகள் கூறும் கருத்துக்களை நாம் கடைபிடித்தால், துன்மார்க்கருக்கு சுவிசேஷம் அறிவிக்க முடியும்; அத்துடன் அழுக்காகிப்போன நமது சபையைச்  சுத்தமாக்க முடியும். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

" யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? "

 ஆதவன் 🖋️ 627 ⛪ அக்டோபர் 16,  2022 ஞாயிற்றுக்கிழமை

"என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை." ( யோவான் 8 : 46 )

இயேசு கிறிஸ்துத் தன்னைக் குற்றப்படுத்திய யூதர்களைப்பார்த்து  இன்றைய தியானத்துக்குரிய வசனத்தைக் கூறுகின்றார். இயேசு கிறிஸ்து கூறியதுபோல கூறக்கூடிய வாழ்வு வாழ நம்மால் முடியுமானால் நாம் அவரது அடிச்சுவட்டில் நடக்கிறோம் என்பதை அதன்மூலம் புரிந்துகொள்ளலாம். 

"எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்." (எபிரெயர் 4:15) என்று இயேசு கிறிஸ்துவைக் குறித்து எழுதுகின்றார் எபிரெய நிருப ஆசிரியர். 

"அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை" ( 1 பேதுரு 2 : 22 ) என்கின்றார் அப்போஸ்தலரான பேதுரு.

இயேசு கிறிஸ்துவை அவரது காலத்தில் வாழ்ந்த மக்களில் சிலர் பல்வேறு விதங்களில் குற்றப்படுத்தினார்கள். போஜனப்பிரியன், பிசாசு பிடித்தவன், பாவிகளின் நண்பன், புத்தி பேதலித்தவன் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் அவரை எவரும் பாவி என்று கூறமுடியவில்லை. "என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? " என்று துணிந்து கேட்டார் அவர். 

ஆவிக்குரிய வாழ்வு வாழும்போது நம்மால் உலகத்தாரோடு பல வேளைகளில் ஒத்துபோகமுடிவதில்லை. எனவே அப்படி நாம் அவர்களைவிட்டு வேறுபடும்போது இயேசுவைக் குறைகூறியதைப்போல  நம்மையும் பல்வேறு அடைமொழிகளைக் கொடுத்துச் சிலர் பேசக்கூடும். ஆனால் அது பற்றி நாம் கவலைப்படாமல் பாவத்துக்கு மட்டும் விலகி வாழவேண்டியது அவசியம்.   

இயேசுவின் கிருபையினால் மீட்பு அனுபவம்பெறும்போது நாம் ஆவியின் பிணமானத்துக்கு உட்பட்டவர்களாகின்றோம். எனவே பாவம் நம்மை மேற்கொள்ள முடியாது. தேவனுடைய ஆவியானவர் நமக்குள்ளிருந்து நம்மை எச்சரித்து வழிநடத்துவார். என்வேதான் அப்போஸ்தலரான பவுல் அடிகள், "நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது." ( ரோமர் 6 : 14 ) என்று எழுதுகின்றார்.

ஆவியின் பிரமாணத்துக்குள் நாம் வரும்போது பாவத்துக்குவிடுதலை ஆகின்றோம். எனவேதான் பவுல் அடிகள், "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8 : 2 ) என்கின்றார். 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பிதாவாகிய தேவன் தனது ஆவியை அளவில்லாமல் பொழிந்திருந்தார். எனவே அவர் பாவம் செய்யமுடியாதவராக, பாவத்தை அருவெறுப்பவராக இருந்தார். எனவே, "என்னிடம் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?"  என்று அவரால் கேட்க முடிந்தது. 

நாமும் இதுபோல பாவமற்ற வாழ்வு வாழ உதவிட அவர் வல்லவராயிருக்கிறார். இன்றைய வசனத்தின் இறுதியில் இயேசு கேட்கிறார், "நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை?" அன்பானவர்களே, இயேசுவின் வார்த்தைகளை நாம் விசுவாசிக்கவேண்டும். நம்மை பாவத்திலிருந்து முற்றுமுழுதும் இரட்சிக்க அவர் வல்லவராயிருக்கிறார். பாவம் செய்யும்போது நாம் பாவத்துக்கு அடிமைகளாயிருக்கிறோம். குமாரனான இயேசுவே நம்மை பாவ பழக்கத்திலிருந்து விடுவிக்கமுடியும்.

"குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்." ( யோவான் 8 : 36 ) என்று அவர் கூறவில்லையா?

இயேசு கிறிஸ்துவுக்கு  நம்மை முற்றிலும் ஒப்புவித்து வாழும்போது அவர் நம்மைத் தம்மைப்போல மாற்றுவார். அப்போது நாமும் அவர் கேட்டதுபோல "என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? என்று கேட்க முடியும்.  

கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம்; அவரைப்போல உருமாறிட வேண்டுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

தேவ அன்புடன் தனக்காகக் காத்திருப்பவர்களையே தேவன் விரும்புகின்றார்

 ஆதவன் 🖋️ 626 ⛪ அக்டோபர் 15,  2022 சனிக்கிழமை

"எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது." ( சங்கீதம் 130 : 6 )

நமக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது சிலவேளைகளில் தூக்கம் வருவதில்லை. எப்போது விடியும் என்று எதிர்பார்ப்போடு காத்திருப்பிப்போம். ஆம், விடியலை எல்லோரது மனமும் ஆவலாய் எதிர்பார்க்கின்றது; துன்மார்க்கரைத் தவிர. துன்மார்க்கர்கள் தங்களது அவலட்சண காரியங்களுக்கு இருளையே விரும்புகின்றனர். இறுதியில் இருளான இடத்துக்கே செல்கின்றனர். 

இன்றைய தியான வசனத்தில் ஆண்டவருக்குக் காத்திருப்பதை ஜாமக்காரர்கள் எப்போது விடியும் என விடியலை எதிர்பார்த்துக் காத்திருப்பதற்கு ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது. ஜாமக்காரர்கள் என்பது இரவு காவலர்களைக் குறிக்கின்றது. பெரிய பெரிய கடைகளுக்கு முன்பும் ஏ.டி.எம் மையங்களிலும் காவல் செய்யும் காவலர்களை எண்ணிப்பாருங்கள். மழையோ குளிரோ அவர்கள் அங்குப் பணியாற்றுவார்கள். நிம்மதியாகத் தூங்க முடியாது. அவர்களது இருதயம் எப்போது விடியும் என்றுதானே ஏங்கும்?  அதைவிட அதிகமான ஏக்கத்துடன் கர்த்தருக்காக காத்திருக்கிறேன் என்கின்றார் இந்தச் சங்கீத ஆசிரியர்.

விடியலுக்காகக் காத்திருப்பது என்பது, கர்த்தர் நம் வாழ்வில் வந்து ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவார் என எதிர்பார்த்திருப்பதைக் குறிக்கின்றது. 

இந்தச் சங்கீதம் ஒரு ஆரோகண சங்கீதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  அதாவது, யாத்திரை செல்லுகிறவர்கள் பாடிய பாட்டு. வருடாந்த பண்டிகைகளைக் கொண்டாடுவதற்காக மலைகளில் ஏறி ஏறி எருசலேமை நோக்கி யாத்திரை செய்யும்போது மக்கள் இப் பாடல்களைப் பாடுவார்கள். யாத்திரீகர்கள் தனிமையான, மக்கள் இல்லாத பல இடங்களைக் கடந்துசெல்ல வேண்டியது நேரிடும். அத்தகைய வேளைகளில் பாடப்படுவதால் இவை ஆரோகண சங்கீதம் என்று கூறப்படுகின்றது. 

இன்று பலரும் கர்த்தரைத் தேடுவதைவிட, கர்த்தாரிடமிருந்துவரும் ஆசீர்வாதங்களையே அதிகமாய்த் தேடுகின்றனர். ஆனால் உண்மையான அன்பு இப்படிப் பொருள்களைத் தேடி ஓடாது. 

நான் சிறுவனாக இருந்த போது எனது தந்தை பெரும்பாலான நாட்களில் பணி  நிமித்தமாக வெளி ஊரில்தான் இருப்பார்.  நானும் எனது சகோதரிகளும் எனது அம்மாவின் பராமரிப்பில் நாகர்கோவிலில் இருந்தோம். இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அப்பா ஊருக்கு வருவார். அவர் வரும் நாளை கடிதம் மூலம் அறிவிப்பார். நாங்கள் அந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருப்போம். அவர் வருவதற்கு முந்தின நாள் சரியாக தூக்கம் வராது. எப்போது விடியும் என்று காத்திருக்கும் மனது. இது அப்பாவைப் பார்க்கவேண்டும் எனும் எண்ணத்திலேயே தவிர அவர் கொண்டுவரும் பொருட்களுக்காக அல்ல. 

இன்று பல சபைகளில் நள்ளிரவு உபவாச ஜெபங்கள் என்று நடத்துகின்றார்கள். ஒருமுறை ஒரு போதகர் அழைத்தார் என்று ஒரு இரவு  ஜெபக் கூட்டத்துக்கு நான் சென்றிருந்தேன். ஆனால் அங்கு ஏன் சென்றேன் என்று எண்ணுமளவுக்கு கேலிக்கூத்தான காரியங்கள் நடந்தன. ஆராதனையின் இடையில் துள்ளுவதும் ஆடுவதும் உடற்பயிற்சிபோல பயிற்சியும் நடந்தன. நான் அந்தப் போதகரிடம் தனிமையில், "ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர்  கூறினார்:- "இல்லாவிட்டால் மக்கள் உறங்கிவிடுவார்கள்"  

தேவ அன்புடன் தேவனுக்காக காத்திருப்பவனுக்கு ஏன் உறக்கம் வருகிறது? உறக்கம் வருபவர்கள் வீட்டிற்குச் சென்று உறங்கவேண்டியதுதானே? தேவ அன்பற்று துள்ளிக் குதித்து உறக்கத்தைக் கலைப்பதில் என்ன பக்தி அல்லது தேவ அன்பு இருக்கிறது?

அன்பானவர்களே, நள்ளிரவு உறங்காமல் இருப்பதை தேவனுக்குக் காத்திருத்தல் என்று முற்றிலும் கூறிட முடியாது. பகல்பொழுதிலும்கூட நமது இருதயம் தேவ நாட்டம்கொண்டு அவருக்காகக் காத்திருக்க முடியும்.  அதாவது, தேவன் நமக்குள் வந்து நம்மை ஆளுகைசெய்ய காலம், நேரம், இடம் இவை தடையல்ல. எனவே, தேவ  அன்புடன் நாம் தேவனுக்காகக்  காத்திருக்கின்றோமா?  உண்மையான தேவ அன்புடன் தனக்காகக் காத்திருப்பவர்களையே தேவன் விரும்புகின்றார். அந்த அன்புடன் அவரைத் தேடுவோம்; அவருக்காகக் காத்திருப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

பூரணராகும்படி கடந்து போவோமாக.

 ஆதவன் 🖋️ 625 ⛪ அக்டோபர் 14,  2022 வெள்ளிக்கிழமை

"நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்." (13:11) 

இயேசு கிறிஸ்துவினால் உண்டாகும் மீட்பு அனுபவத்தைப் பெறும்போது நாம் மறுபடி பிறந்தவர்களாகின்றோம். இந்த மறுபடி பிறக்கும் அனுபவமே தேவனுடைய ராஜ்யத்தில் நாம் நுழைவதற்கு முதல்படி. எனவேதான் இயேசு கிறிஸ்துக்  கூறினார், "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" ( யோவான் 3 : 3 ) இந்த வார்த்தைகளை இயேசு கிறிஸ்து நிக்கோதேமு எனும் யூத போதகரிடம் கூறினார். தேவனுடைய வார்த்தைகளைக் கற்று போதிக்கும் போதகர்களுக்கும்கூட மறுபடி பிறக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது.  

இப்படி நாம் மறுபடி பிறக்கும்போது குழந்தைகளாய் மாறுகின்றோம். இந்த அனுபவத்துக்குப்பின் வேத வசனங்கள் நாம் இதுவரை வாசித்துப் புரிந்துகொண்டதைவிட  வித்தியாசமான முறையில் நமக்குப் புரியத் துவங்கும். 

இன்றைய வசனம் இப்படி ஆவிக்குரிய மறுபிறப்பு அனுபவம் பெற்றவர்களுக்கு அப்போஸ்தலரான பவுல் அடிகள் கூறுவதாகும்.

மறுபிறப்படைந்து  நாம் புதிதாய்ப்பிறந்த குழந்தையாகும்போது முதலில் முற்றிலும் ஆவிக்குரியச் சத்தியங்களை அறிந்து அதன்படி வாழ முடியாமல் குழந்தைகள்போலத்தான் இருப்போம். எனவே நாம் இப்படிக்  குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசி, குழந்தையைப்போலச் சிந்தித்து, குழந்தையைப்போல யோசித்துக் கொண்டிருப்போம்.  ஆனால் நாம் இதே குழந்தைகள்போல எப்போதும் இருக்கக்கூடாது. நமக்கு ஆவிக்குரிய வளர்ச்சி வேண்டும். அப்போது மட்டுமே நாம் முழுமையான  புருஷர்களைப்போலாகி ஆவிக்குரிய வளர்ச்சியடைந்து குழந்தைக்கேற்றவைகளை ஒழிக்கமுடியும். 

இதனையே எபிரெயர் நிருபத்திலும் நாம் வாசிக்கின்றோம். "பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான்." ( எபிரெயர் 5 : 13 )

ஆவிக்குரிய வளர்ச்சி நாம் எடுக்கும் முயற்சியில்தான் இருகின்றது. வெறுமனே ஆராதையில் கலந்துகொண்டு ஒருசில பக்தி காரியங்களில் ஈடுபடுவது போதாது. நாம் தேவன் அருளும் ஞானப் பாலின்மேல் ஆர்வமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். அப்போதுதான் நம்மில் ஆவிக்குரிய வளர்ச்சி இருக்கும். எனவேதான் அப்போஸ்தலரான பேதுரு, "நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்." ( 1 பேதுரு 2 : 3 ) என்று அறிவுறுத்துகின்றார். 

"சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்." ( 1 கொரிந்தியர் 14 : 20 ) என்கின்றார் பவுல் அடிகள். 

குழந்தைகளாய் இருக்கும் நாம் அப்படியே இருந்துவிடாமல் பூரணமாகவேண்டும்.  மனம்திரும்புதல், விசுவாசம், ஞானஸ்நானம், ஆவியின் வரங்கள், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நியாயத்தீர்ப்பு போன்ற அடிப்படை சத்தியங்களுக்கும் மேலாக நாம் வளரவேண்டும். இந்த சத்தியங்கள் கிறிஸ்தவத்தின் அடிப்படை அஸ்திபாரமானவை. ஆனால் நாம் இதற்குமேல் கட்டப்படவேண்டும். இதற்குமேல் நாம் வளரும்போது மட்டுமே பாவத்தை மேற்கொண்டு வெற்றிச்சிறக்க முடியும். நமது பரிசுத்த பிரதான ஆசாரியனான இயேசு கிறிஸ்துவோடு மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைய முடியும். 

இதனையே எபிரெய நிருப ஆசிரியர் கூறுகின்றார், "கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேசவசனங்களை நாம்விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக."  ( எபிரெயர் 6 : 1,2 )

ஆம் அன்பானவர்களே, மறுபடி பிறந்த அனுபவத்தைப் பெற்றிடத் தேவனிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டு வேண்டுவோம்.  அப்படி மறுபடி பிறந்து குழந்தைகளாக மாறியபின் தேவ வசனமாகிய பாலை உண்டு ஆவிக்குரிய வளர்ச்சி பெறுவோம்.  கிறிஸ்தவத்தின் அஸ்திபார உபதேசக் கட்டளைகளை நிறைவேற்றி அடுத்தகட்டமாக பூரண மனிதர்களாக மாறி  கிறிஸ்துவோடு மகா பரிசுத்த ஸ்தலத்தினலுள் நுழைந்திடத் தகுதி பெறுவோம்.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்.

ஆதவன் 🖋️ 624 ⛪ அக்டோபர் 13,  2022 வியாழக்கிழமை

"இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்" ( ஓசியா 8 : 14 )

இன்று ஆலயங்களை பகட்டாகக்  கட்டுவதற்கு கோடிக்கணக்கான பணம் செலவழிக்கப்படுகின்றது. ஆலயக் கோபுரங்கள் அருகிலுள்ள பிற ஊர்களிலுள்ள கோபுரங்களைவிட உயரமாக இருக்கவேண்டுமென்று போட்டிபோட்டு உயர்த்தப்படுகின்றன.  ஆலய கட்டுமானத்துக்கு நன்கொடை சேகரிப்பதில் ஆலயக் கமிட்டியினர்   கடினமாக உழைக்கின்றனர். சேர்க்கப்படும் நன்கொடையில் ஒரு பகுதி, அதை சேகரிக்கும் குழுவினரின் உணவுக்காகச்  செலவிடப்படுகின்றது. ஆம், கடினமான உழைப்புத்தான்!. 

ஆனால், இப்படி நன்கொடை சேகரிப்பதில் நாட்டம்கொண்டு அலைபவர்களும் அதற்கு உடந்தையாக இருக்கும் ஊழியர்களும் தங்களது தனிப்பட்ட வாழ்வில் கிறிஸ்துவை அறிந்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறியே. நன்கொடை சேகரிப்பதிலும் ஆலயப் பணிகளிலும் காட்டும் ஆர்வத்தைத் தேவனை அறியும் அறிவில் வளரவேண்டும் என்று எத்தனைபேர் முயலுகின்றனர்?

இப்படி தனிப்பட்ட முறையில் தேவனை அறியாமல் இருந்துகொண்டு ஆலயப்பணிகளுக்காக உழைப்பதையே இன்றைய வசனம் வேதனையோடு குறிப்பிடுகின்றது, "இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்" என்று. 

அன்பானவர்களே, புதிய ஏற்பாட்டு காலத்தில் வாழும் கர்த்தருடைய விசுவாசிகளான நாம் தான் ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள். நமது உடல்தான் பரிசுத்த ஆவியின் ஆலயமாயிருக்கிறது. "உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?" ( 1 கொரிந்தியர் 6 : 19 ) என எழுதுகின்றார் பவுல் அடிகள். 

ஆம், நாம் நம்முடையவர்களல்ல; தேவனுக்கானவர்கள். தேவனுக்கு உரியதான நமது உடல் பரிசுத்தமாக இருக்கவேண்டியது அவசியம்.  

"நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?"( 1 கொரிந்தியர் 3 : 16 )

நாம் முதலில் கட்டவேண்டியது நமது உடலான ஆலயத்தை. உடலால் பாவிகளாக இருந்துகொண்டு வானுயர ஆலயம் கட்ட முயலுவதிலோ, கட்ட உதவுவதிலோ அர்த்தமில்லை. அதனை தேவன் விரும்புவதுமில்லை. தன்னை உண்டாக்கினவரை மறந்து ஆலயத்தைக் கட்டுவோர் தங்களது சுய பெருமைக்காகவே சில, பல  செயல்களைச்  செய்கின்றனர். நாம் மண்ணினாலல்ல கிறிஸ்து இயேசுவின்மேல் நமது சரீரமாகிய ஆலயத்தைக் கட்டவேண்டும். அதாவது,  போடப்பட்ட அஸ்திபாரமாகிய கிறிஸ்துவின்மேல் நாம் நமது ஆவிக்குரிய வாழ்வைக் கட்டவேண்டும். (1 கொரிந்தியர் 3:11,12) என்கிறார் பவுல் அடிகள். 

நாம் நமது உடலான ஆலயதைக் காட்டாமல் பெருமைக்காகவும் மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெறவேண்டியும் மண்ணாலான ஆலயத்தைக் கட்டுவதில் கவனம் செலுத்திக் கொண்டு நமது உடலான ஆலயத்தை கட்டாமல் இருந்து அதனைக் கெடுத்துவிட்டோமானால் அது நமது ஆத்துமாவுக்குப் பெரிய அழிவையே கொண்டுவரும். எனவேதான் அப்போஸ்தலரான பவுல் அடிகள் பின்வருமாறு எச்சரிப்பு கலந்த அறிவுரைகூறுகின்றார்:- "ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்." ( 1 கொரிந்தியர் 3 : 17 )

 தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

அவரது வருகை சமீபம்

 ஆதவன் 🖋️ 623 ⛪ அக்டோபர் 12,  2022 புதன்கிழமை

"உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்." ( மத்தேயு 24 : 42 )

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைக்குறித்து இன்றைய வசனம் கூறுகின்றது. இயேசு கிறிஸ்து தனது வருகையினைக் குறித்தும் தனது வருகைக்கு முன் என்னென்ன அடையாளங்கள் நடக்கும் என்பதனையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் பல அடையாளங்கள் நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. இவை  இயேசு கிறிஸ்துவின் வருகை சமீபமாய் இருக்கின்றது என்பதை நமக்கு உணர்த்துகின்றன. ஆனால் எப்போது அவர் வருவார் என்பது ஒரு மறைபொருளாகவே இருக்கின்றது. 

இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு முக்கியமான ஒரு முன்னடையாளம் கள்ளத்  தீர்க்கதரிசிகளின் பெருக்கம். அது இன்று மிக அளவில் இருப்பது அவரது வருகை சமீபம் என்பதை உணர்த்துகின்றது.  

வருகைக்குமுன், "கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்." ( மத்தேயு 24 : 24 ) என்று இயேசு கிறிஸ்துக்  கூறினார். கிறிஸ்துவோடு நெருங்கிய உறவோடு நாம் வாழாமல் இருப்போமானால் இந்தக்  கள்ளத்  தீர்க்கதரிசிகளை அடையாளம் காண முடியாது.

இயேசு கிறிஸ்து தனது வருகைக்கு முன்னதான சில அடையாளங்களைக் கூறினாரேத் தவிர தான் எப்போது வருவேன் என்பதைக் கணக்குப்பார்க்கச் சொல்லவில்லை. இன்று பல ஊழியர்கள் இயேசு கிறிஸ்துவின் வருகை எப்போது இருக்கும் என்பதைத் தங்களது மூளை அறிவினால் கணக்குப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.  விசுவாசிகளை அறிவுறுத்துவதாக எண்ணிக்கொண்டு பல்வேறு பட விளக்கங்களையும் கொடுக்கின்றனர். 

அன்பானவர்களே, அந்தநாள் நமக்கு முன்னமேயே அறியக்கூடிய நாள் அல்ல. அதனை தேவன் மறைவாகவே வைத்துள்ளார். "அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்." ( மத்தேயு 24 : 36 ) என்று இயேசு கிறிஸ்து தெளிவாகக் கூறிவிட்டார். இதற்குமேல் அவரது வருகையை ஆராய்ச்சி பண்ணுவது அறிவுடைமையல்ல. 

இயேசு கிறிஸ்து கூறினார், "நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்." ( மத்தேயு 24 : 44 ) ஆயத்தமாய் இருப்பது என்பது கிறிஸ்துவின் கட்டளைகளைக் கடைபிடித்து, பரிசுத்தமான ஒரு வாழ்வு வாழ்வதைக் குறிக்கின்றது. 

அப்போஸ்தலரான பேதுருவும், "கர்த்தருடைய நாள் இரவில் திருடன் வருகிறவிதமாய் வரும் " (2 பேதுரு 3:10) என்று எச்சரித்துக்  கூறுகின்றார். 

இயேசு கிறிஸ்து கூறினார், "திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள்." ( மத்தேயு 24 : 43 ). தனது வருகையினைக்குறித்து கிறிஸ்துவே அறியார் என்றும் கூறப்பட்டுள்ளது. ".......................... பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்." ( மாற்கு 13 : 32 )

பிதாவிடம் கேள்விப்பட்ட அனைத்தையும் சீடர்களுக்கு அறிவித்த இயேசு கிறிஸ்து நமக்கு இது தேவையென்றால் சொல்லாமல் இருந்திருப்பாரா? எனவே குருவுக்கு மிஞ்சிய சீடனாக நாம் விரும்பவேண்டாம். கிறிஸ்துவின் வருகைக்குறித்து நாள் கணக்கிடுபவனும் கள்ளதீர்கதரிசிகளில் ஒருவனே. கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழ மக்களை வழிநடத்தவேண்டியது அவசியமேத்தவிர வருகையைக் குறித்த ஆராய்ச்சி தேவையில்லாதது. ஆனால், இன்று ஆவிக்குரிய சபை என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சில சபைகளில் இதுவே முக்கிய ஆராய்ச்சியும் போதனையுமாய் இருக்கின்றது. 

ஆவியானவரின் வழிநடத்துதலின்படி வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். பரிசுத்தமுள்ள வாழ்க்கை வாழ அவரது துணையை நாடுவோம். ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருந்து அவரை அண்டிக்கொள்வோம்; கிறிஸ்து எப்போது வந்தாலும் அவரைச் சந்திக்க ஆயத்தமாய் இருப்போம்.  

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

பரிதானம் (லஞ்சம்)

 ஆதவன் 🖋️ 622 ⛪ அக்டோபர் 11,  2022 செவ்வாய்க்கிழமை

"பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்; பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்". ( நீதிமொழிகள் 15 : 27 )


பரிதானம் என்பது லஞ்சம் வாங்குவதைக் குறிக்கின்றது. லஞ்சம் வாங்குவதன் காரணம் பொருளாசையாகும். சிலர் குறைந்த வருமானத்திலும் நேர்மையாக வாழுகின்றனர். ஆனால் பலர் நல்ல வேலை, நல்ல உயர்ந்த பதவி, நல்ல சம்பளம் இருந்தும் லஞ்சம் வாங்கி வாழுகின்றனர். இன்றைய வசனம் கூறுகின்றது, பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான். அதாவது பொருளாசைப்பிடித்து குறுக்கு வழியில் செல்கிறவனது வீடு சமாதானமின்றி கலைந்துபோகும். லஞ்சத்தை வெறுக்கிறவனோ பிழைப்பான். 

யோவான் ஸ்நானன் ஞானஸ்நானம் கொடுத்துவந்தபோது பலரும் அவரிடம் வந்தனர். அப்போது, "போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும்  இருங்கள் என்றான்." (லூக்கா 3:14) இந்தக்காலத்தில் போலீசார் செய்யும் பணியை அந்தக்காலத்தில் போர் சேவகர்கள் செய்து வந்தனர். அவர்களிடம்தான் யோவான் "பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும்  இருங்கள்" என்று கூறுகின்றார். லஞ்சம் வாங்குவதற்காக காவல்துறையில் உள்ள சிலர் இப்படிப் பொய் குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர்.

பழைய ஏற்பாட்டிலும்கூட பல வசனங்கள் பரிதானம் எனும் லஞ்சம் வாங்குவதைக் கண்டிக்கின்றன.. "பரிதானம்  வாங்காதிருப்பாயாக;  பரிதானம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும்." (யாத்திராகமம் 23:8)

"நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; முகதாட்சிணியம் பண்ணாமலும், பரிதானம் வாங்காமலும் இருப்பாயாக; பரிதானம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும்". (உபாகமம் 16:19)

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறினார், "பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல." ( லுூக்கா 12 : 15 ) பொருளாசை பிடித்து அதிகமான பணத்தைக் குறுக்கு வழியில் சேர்பவனுக்கு அது எந்த விதத்திலும் உதவாது. அது அவனுக்கு வாழ்வு அல்ல. அது நமது ஆத்துமாவை நரகத்துக்கு நேராக இழுத்துச் சென்றுவிடும்.

அப்போஸ்தலரான பவுல் அடிகளும், "திருடனும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை."( 1 கொரிந்தியர் 6 : 10 ) என்று கூறுகின்றார். 

இதனை வாசிக்கும் அன்புச்  சகோதரனே சகோதரியே, தெரிந்தோ தெரியாமலோ இதுவரை நீங்கள் இந்தக்காரியத்தில் ஈடுபட்டிருந்தால் தேவனிடம் மன்னிப்புக்கேட்டு மனம் திரும்புங்கள். தொடர்ந்து இதே காரியங்களில் ஈடுபட்டுக்கொண்டு எவ்வளவு ஜெபித்தாலும் தேவன் அதனைக் கேட்பதில்லை; குடும்ப சமாதானமும் வருவதில்லை. இன்றைய வசனம் கூறுவதுபோல பரிதானம் வாங்கி கலைந்துபோன குடும்பங்கள்   ஒன்று இரண்டல்ல, பல்வேறு சாட்சிகளை நான் கேட்டுளேன்; பார்த்துள்ளேன். கர்த்தருடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுத்துக் கீழ்ப்படிவோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.  

"நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்" (எபிரெயர் 13:5)

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே

 ஆதவன் 🖋️ 621 ⛪ அக்டோபர் 10,  2022 திங்கள்கிழமை

"நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது." ( எபேசியர் 4 : 26 )

இன்று நாம் தினசரி செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சிச் செய்திகளிலும் பல்வேறு கொலைகள், கொலை முயற்சிகள், கற்பழிப்புகள், ஏமாற்று போன்ற செய்திகளை அதிகமாகப் படிக்கின்றோம்; பார்க்கின்றோம். இதுவரை நாம் கேள்விப்படாத புதிய புதிய முறைகளில் கொலைகள் நடக்கின்றன. பெரும்பாலான மூர்க்கமான காரியங்கள் நடைபெறுவதற்குக் காரணம் கோபம்தான். 

கோபம் வராத மனிதர்கள் உலகினில் இல்லை. ஆவிக்குரிய மனிதர்களும் கோபமடைவது தவிர்க்கமுடியாதது. இயேசு கிறிஸ்துவும் சில வேளைகளில் கோபமடைந்தார்.  அனால் மற்றவர்களைவிட நாம் இந்தக் கோப விஷயத்தில் வித்தியாசமாக இருக்கவேண்டும். அதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள் இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார். அதாவது, "கோபம் கொண்டாலும் பாவ காரியங்களில் ஈடுபடாதிருங்கள்" என்கின்றார்.  மேலும் அந்தக் கோபத்தை இருதயத்தில் வைத்துக்கொண்டு இருக்காதிருங்கள். நீங்கள் கோபமடைந்தாலும் சூரியன் மறைவதற்குள் அது தணியக்கடவது என்கின்றார். 

ஏனெனில், இரவு நேரங்களில்தான் மனமானது பல தேவையில்லாத விஷயங்களைச்  சிந்திக்கும். அது பல்வேறு பாவக்  காரியங்களில் ஈடுபடச் செய்யும். சூரியன் மறைவதற்குள் கோபம் தணியாவிட்டால் எப்படிப் பழிவாங்கலாம் என்று மனம் சிந்திக்கும்.   எனவேதான் பகல் பொழுதைவிட இரவு நேரங்களில் கொலைகளும் இதர சட்டத்துக்குப் புறம்பானச் செயல்களும் அதிகமாக நடக்கின்றன.  

நீதிமொழிகள் புத்தகத்தில், "உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது" ( நீதிமொழிகள் 27 : 4 ) என்று வாசிக்கின்றோம். ஆம், கோபம் நிஷ்டூரமானச் செயல்களைச் செய்ய நம்மைத் தூண்டிவிடும்.

"உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்." ( பிரசங்கி 7 : 9 ) என்கின்றது பிரசங்கி. அதாவது இந்த வசனம் கோபம் கொள்பவன் மூடன் என்று கூடுகின்றது. "மூடனுக்குக் கோபம் மூக்கின்மேலே" என்று ஒரு தமிழ் பழமொழியே உண்டு. பொதுவாக இந்த உலகத்தில் கிறிஸ்துவை அறியாத ஞானிகள்கூட  அதிக பொறுமையுடன் இருக்கின்றனர். ஆம், ஞானம் பொறுமையை உண்டாக்கும்.

சரி, ஆவிக்குரிய நாம் இந்தக் கோபத்தை அடக்குவது எப்படி? அது அப்போஸ்தலரான பவுல் அடிகள் கூறுவதுபோல எல்லாவற்றுக்காகவும் ஸ்தோத்திரம் செய்யும்போது மட்டுமே அடங்கும். ஏனெனில் அப்படிச் செய்யும்போது கோபம் தணிந்து தேவ சமாதானம் நமக்குள் வரும். அப்போது இன்றைய வசனம் கூறுவதுபோல சூரியன் மறைவதற்குள் நமது கோபம் நம்மைவிட்டு மறையும்.  ஆம், "எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 18 )  

மேலும், கோபத்தை அடக்காமல் இருந்தோமானால் நாம் தேவ நீதி செயல்பட விடாமல்  தடுப்பவர்களாக இருப்போம். தேவன் ஒவ்வொரு காரியத்தையும் நீதியாய் நடப்பிக்கின்றார். நாம் கோபம் கொண்டு விரைந்து செயல்படும்போது தேவன் செயல்படமுடியாமல் போகின்றது. "மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே."( யாக்கோபு 1 : 20 )

அன்பானவர்களே, கூடுமான மட்டும் கோபத்தைத் தவிர்ப்போம். அப்படி கோபம் கொண்டாலும் பவுல் அடிகள் கூறுவதுபோல அதனை வைராக்யமாகக் கொள்ளாமல் இரவு விடிவதற்குள் மறந்துவிடுவோம். அப்படி மறப்பதற்கு பவுல் அடிகள் கூறுவதுபோல அனைத்துக்காகவும் ஸ்தோத்திரம் செய்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

ஆபிரகாம் விசுவாசித்து ஒரு பரதேசியைப்போல அங்கு வாழ்ந்திருந்தார்

 ஆதவன் 🖋️ 620 ⛪ அக்டோபர் 09,  2022 ஞாயிற்றுக்கிழமை

"விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போல சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்." ( எபிரெயர் 11 : 9 )

ஆபிரகாமுக்குத் தேவன் மிகப்பெரிய ஆசீர்வாதத்தை வாக்களித்திருந்தார். ஆபிரகாம் அதனை முழு விசுவாசத்தோடு ஏற்று வாழ்ந்தார். தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் என்ன? "நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்." ( ஆதியாகமம் 17 : 8 ) என்பதே அது. 

ஆராமில் குடியிருந்தபோது "கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். ( ஆதியாகமம் 12 : 1, 2 ) என்று வாக்களித்தார். அந்த தேவ வாக்குறுதியை நம்பி தனது வீடு வாசல், சொத்துக்களை விட்டுவிட்டு ஆபிரகாம் பயணமானார். தான் போகுமிடம் எது என்பது தெரியாமலே ஆபிரகாம் புறப்பட்டுப் போனார். (எபிரெயர் 11:8)

ஆனால் தேவன் வாக்களித்த வாக்குறுதி உடனேயே நிறைவேறிடவில்லை. தேவன் அளித்த வாக்குத்தத்தை ஆபிரகாம் விசுவாசித்து ஒரு பரதேசியைப்போல அங்கு வாழ்ந்திருந்தார். அவரோடு வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கும்  யாக்கோபும்  கூடாரங்களிலே குடியிருந்தார்கள். 

பரதேசி என்பதற்கு வீடு வாசல் அற்றவன் என்று பொருள். ஒரு உதாரணத்துக்கு இப்படி எண்ணிப்பாருங்கள்... பேருந்து நிலையங்களின் அருகில் கூடாரம் அடித்துத் தங்கியிருக்கும் பரதேசியாகிய நரிக்குறவர் ஒருவரிடம், "இந்த நகரத்தை உனக்குச் சொந்தமாகத் தருவேன்". என்று கூறுவதுபோல உள்ளது தேவன் கூறுவது. இப்படிக் கூறுவதை எளிதில் நம்பிவிடமுடியாது. ஆனால், தேவனிடம் அசைக்க முடியாத விசுவாசமுள்ளவனாகிய ஆபிரகாம் அதனை நம்பினார்.  

அப்படி நம்பியதால், "தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்." ( எபிரெயர் 11 : 10 ) என்று கூறப்பட்டுள்ளது. 

தனது தேசத்தை விட்டுவிட்டு வந்த ஆபிரகாம் இங்குள்ளச் சூழ்நிலைகளைப்  பார்த்து தேவனது வாக்குறுதியைச் சந்தேகித்து  மீண்டும் தனது சுய தேசத்துக்குத் திருப்பிச்செல்ல எண்ணவில்லை. அப்படி எண்ணியிருந்தால் அவரால் திரும்பிச் சென்றிருக்கமுடியும். இதனையே,  "தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்குச் சமயங்கிடைத்திருக்குமே. அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்." ( எபிரெயர் 11 : 15,16 ) என்று கூறப்பட்டுள்ளது. 

ஆனால் ஆபிரகாமுக்குத் தேவன் அளித்த வாக்குத்தத்தம் நிறைவேற ஏறக்குறைய  450 ஆண்டுகள் ஆயின. அதனைப் பார்ப்பதற்கு ஆபிரகாம் உயிரோடு இல்லை. மரணமட்டும் ஆபிரகாம் தேவனது வாக்குறுதியை விசுவாசித்து பின்மாறாமல் இருந்து தனது சந்ததிகள் ஆசீர்வாதமான தேசத்தை சுதந்தரிக்கக் காரணமானார். அன்பானவர்களே, கர்த்தரது வாக்குறுதிகளை நம்பி பொறுமையோடு காத்திருப்போம். பொய் சொல்ல தேவன் மனிதனல்ல. 

"கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்." ( ஏசாயா 40 : 31 )

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

அதிசயங்களையே போதிக்கும் ஊழியர்கள் கிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று அறியாதவர்களே

 ஆதவன் 🖋️ 619 ⛪ அக்டோபர் 08,  2022 சனிக்கிழமை

"சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்." ( மத்தேயு 16 : 16 )

இன்று கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் அனைவருமே கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இப்படித் தன்னை அறிக்கையிட்ட பேதுருவை நோக்கிக் கூறினார்:- 

"யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்." ( மத்தேயு 16 : 17 )

மேற்படி வசனத்தின்மூலம் நாம் அறிந்துகொள்வது கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிடவேண்டுமானால் நமக்குப் பிதாவாகிய தேவன் அருளும் ஆவிக்குரிய வெளிப்பாடு வேண்டும். இயேசு கிறிஸ்துவோடு இருந்த சீடர்களுக்கே இப்படி வெளிப்பாடு தேவையாயிருக்கும்போது நமக்கு அது எவ்வளவு அதிகம் தேவை!

இயேசு கிறிஸ்துவைப் பலரும் பலவிதமாக எண்ணியிருந்தார்கள். சிலர் யோவான் ஸ்நானகன் என்றும், வேறு சிலர் எரேமியா அல்லது எலியா என்றும்  அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் எண்ணிக்கொண்டனர். (மத்தேயு 16:14) மற்றபடி அவரைப் பார்த்த பலரும் மரியாளின் மகனாக யோசேப்பின் மகனாகத்தான் பார்த்தனர்.

இன்றும் இயேசு கிறிஸ்துவிடம் அதிசய அற்புதங்களை எதிர்பார்த்து வரும் விசுவாசிகளும், அற்புத அதிசயங்களையே போதிக்கும் ஊழியர்களும் இப்படிக் கிறிஸ்துவை  தேவனுடைய குமாரனென்று அறியாதவர்களே. இயேசு கிறிஸ்துவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கவேண்டுமானால் அவர் உலகினில் வந்த நோக்கத்தை அறிந்திருக்கவேண்டும். அதனை அப்போஸ்தலரான யோவான் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். 

"இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது." ( யோவான் 20 : 31 ) ஆம், நித்திய ஜீவனுக்காக கிறிஸ்துவைத் தேடுபவர்கள் மட்டுமே இயேசுவை தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று அறிந்தவர்கள். இயேசு கிறிஸ்து மந்திரவாதம்போல அதிசயங்களைச் செய்துகாட்ட வரவில்லை. அவர் அதிசயங்களை செய்தது மக்கள் தான் சொல்வதை நம்பி ஏற்றுக்கொள்ளவேண்டும் ; அதனால் மீட்பு அனுபவம் பெறவேண்டும் என்பதகற்காகவே.

உலக ஞானத்தினாலும் கல்வி அறிவினாலும் ஒருவேளை தேவனைப்பற்றி அறியலாம் ஆனால் தேவனை அறியமுடியாது. இதுபோல பரலோக ராஜ்ய ரகசியங்களை அறிந்தவர்களே கிறிஸ்துவை தேவனுடைய குமாரனாக அறியமுடியும். அதற்கு சிறு குழந்தைக்ளுக்குள்ள கபடமற்ற இருதயம் தேவை. எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்"( மத்தேயு 11 : 25 ) என்று. 

அன்பானவர்களே, எல்லோரும் சொல்வதாலோ அல்லது நமக்குச் சிறு வயதில் ஞாயிறு மறைக்கல்வி வகுப்பில் சொல்லிக்கொடுத்ததாலோ நாம் இயேசு தேவனுடைய குமாரன் என்று கூறிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அவரை வாழ்வில் உணர்ந்து அனுபவித்து பேதுருவைப்போல அறிக்கையிடும் நிலைமைக்கு வரவேண்டும். கிறிஸ்துவின் ஜீவன் நமக்குள் இருந்தால் மட்டுமே நாமும் பேதுருவைப்போல இயேசுவை "ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து." என்று உறுதியாக உண்மையாக அறிக்கையிடமுடியும்.  இல்லாவிட்டால் நாம் சாதாரண ஒரு மதவாதியாக நமக்குச் சொல்லிக்கொடுத்ததை மட்டும் கிளிப்பிள்ளைபோலத் தான்  கூறிக்கொண்டிருப்போம். 

கிறிஸ்துவை வாழ்வில் அறிந்து, அவர் தேவனுடைய குமாரன் என்று  அறிக்கையிட வேண்டிய கிருபைக்காக வேண்டுவோம்.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

நாம் தேவனைப்பார்க்கிலும் நீதிமானாக முடியாது

 ஆதவன் 🖋️ 618 ⛪ அக்டோபர் 07,  2022 வெள்ளிக்கிழமை   

"மனுஷன் தேவனைப்பார்க்கிலும் நீதிமானாயிருப்பானோ? மனுபுத்திரன் தன்னை உண்டாக்கினவரைப்பார்க்கிலும் சுத்தமாயிருப்பானோ?" ( யோபு 4 : 17 )

யோபு சாத்தானால் சோதிக்கப்பட்டு அனைத்துச் செல்வங்களையும் உடல் நலத்தையும் இழந்து இருந்ததைக் கேள்விப்பட்டு அவரைப் பார்க்கவந்த தேமானியனாகிய எலிப்பாஸ் எனும் நண்பனைப்பார்த்து தேவன் இன்றைய வசனத்தைக் கூறுகின்றார்.

இன்றைய வசனம், மனுஷன் தேவனைப்பார்க்கிலும் நீதிமானாயிருப்பானோ? மனுபுத்திரன் தன்னை உண்டாக்கினவரைப்பார்க்கிலும் சுத்தமாயிருப்பானோ? என்று சந்தேக கேள்வி எழுப்புகின்றது. இதற்குப் பதில் மனிதன் தேவனைவிட நீதிமானாகவும் சுத்தமானவனாகவும் முடியாது என்பதுதான். ஆனால் புதிய ஏற்பாடு,  நீதிமானாகவும்  சுத்தமானவனாகவும்  இல்லாதவனையும் தேவன் தன்னோடு தனக்கு ஒப்பாகச்  சேர்த்துக்கொள்ள விரும்புவதைக் கூறுகின்றது. இதற்காக இயேசு கிறிஸ்து பின்வருமாறு  ஜெபிக்கவும் செய்தார்.

"பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்." ( யோவான் 17 : 21 )  அதாவது, நீதியும் பரிசுத்தமும் இல்லாத மனிதர்களும் பிதாவோடும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடும் ஒன்றாக இருக்க முடியும். இந்த மேன்மை மனிதனுக்கு இயேசு கிறிஸ்துவினால் கிடைத்தது.

ஆனால் இன்று பல கிறிஸ்தவ ஊழியர்கள் தங்களை மிஞ்சிய நீதிமானாகக் காட்டிக்கொள்ள விரும்புகின்றனர். அந்த மிஞ்சுதல் அவர்களை கடவுளைவிடத் தாங்கள் மேலானவர்கள் என எண்ணும் நிலைமைக்குக் கொண்டுபோய்விடுகின்றது.  இன்று இதுபோல பல ஊழியர்கள் இருக்கின்றனர். தங்களது பலவீனங்களை மறைத்து; தங்களது பாவங்களை மறைத்து வாழ்ந்துகொண்டு அவை வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக நீதிமான்கள்போல நடிக்கின்றனர். அந்த நடிப்பு தங்களை தேவனைவிட நீதிமானாக அவர்களை வெளிக்காட்டிகொள்ளச் செய்கின்றது. 

ஒருமுறை நாங்கள் சிலர் ஒரு ஊழியரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது ஏதோ ஒரு காரணத்துக்காக, "நடிகர் விஜய் இருக்கிறாரே....." என்று எனது நண்பரான ஊழியர் ஒருவர் பேசத் துவங்கவும் அந்த ஊழியர், "விஜய்யா? எனக்கு அப்படி ஒருவரைத் தெரியாது" என்றார். அதாவது நடிகர் பெயரைத் தெரியுமென்று கூறினால் இவரை  உலக ஆசையை விடாதவர் என்று மற்றவர்கள் எண்ணிக்கொள்வார்களாம். இத்தகைய ஊழியர்களே தேவனைவிட தங்களை மேலானவர்களாக காட்டிக்கொள்ள விரும்புபவர்கள்.    

ஆபாசப் படங்களைத் தங்கள் கைபேசியில் பார்த்து ரசிக்கும் ஊழியர்கள் பலர் உண்டு. ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து ரசிக்கும் ஊழியர்கள் உண்டு. ஆனால் இவர்களது பிரசங்கங்களில் தங்களைத் தேவ தூதர்கள்போலவும் சபைக்குவரும் விசுவாசிகளை மகா பாவிகள்போலவும் கருதி பேசுவார்கள். இத்தகைய ஊழியர்கள் மனம் திரும்பி தேவனின் இரகத்தைக் கெஞ்சவேண்டியது அவசியம். 

இயேசு கிறிஸ்து கூறினார், "சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல." ( மத்தேயு 10 : 24 ) என்று. மேலும், "சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும்." என்றார். எனவே நாம் கிறிஸ்துவைப்போலவே வாழ அழைக்கப்பட்டுள்ளோம். 

அன்பானவர்களே, இன்றைய வசனம் கூறுகின்றபடி நாம் தேவனைப்பார்க்கிலும் நீதிமானாக முடியாது; நம்மை உண்டாக்கினவரைப்பார்க்கிலும் சுத்தமானாக முடியாது; ஆனால் கிறிஸ்து இயேசுவின் கிருபையினால் அவருக்கு ஒப்பானவர்களாக மாற முடியும். அப்படி நம்மை மாற்றிடவே கிறிஸ்து இயேசு உலகினில் வந்தார். நம்மை கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்து மீட்பு அனுபவம் பெற்று வாழும்போது அவர் நம்மை அதற்குத் தகுதி ஆக்குவார். கிறிஸ்துவைப்போல  அவர் நம்மை மாற்றிட வேண்டுவோம். இத்தகைய வேண்டுதல்மேல் அவர் அதிக பிரியமுள்ளவராய்  இருக்கிறார். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

நமது உடலானது பாவ பழுதற்றதாக இருக்கவேண்டியது அவசியம்

 ஆதவன் 🖋️ 617 ⛪ அக்டோபர் 06,  2022 வியாழக்கிழமை   

"துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்." ( எபிரெயர் 10 : 22 )

பழைய ஏற்பாட்டு முறைமையின்படி ஆசாரியன் மட்டுமே மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் பிரவேசிக்கமுடியும். ஆனால் இன்று புதிய ஏற்பாட்டின் முறைமையில் நாம் எல்லோருமே ஆசாரியர்கள்தான். எனவே நாம் அனைவருமே  பரலோக மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைந்திட கிறிஸ்துவே தனது இரத்தத்தால் வழி உண்டாக்கியுள்ளார்.  

இதனையே இன்றைய தியான வசனத்துக்கு முந்தின வசனங்கள் பின்வருமாறு கூறுகின்றன:-  "ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமானமார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்," ( எபிரெயர் 10 : 19, 20 ) என்று. 

தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினால்  ( எபிரெயர் 10 : 21 ) நாம் பரலோக மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைய உரிமை பெற்றுள்ளோம். ஆனால் அப்படி நுழைந்திட இன்றைய தியான வசனம் இரண்டு நிபந்தனைகளை கூறுகின்றது. அவை:- 

1. துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயம் 

2. சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரம் 

ஆம் அன்பானவர்களே, முதலாவது, நமது இருதயம் இயேசு கிறித்துவின் இரத்தத்தால் தெளித்து துப்புரவாக்கப்பட்ட சுத்த இருதயமாக இருக்கவேண்டியது அவசியம். "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்" (மத்தேயு 5:8) என்று இயேசு கிறிஸ்து கூறியுள்ளாரே? இருதயத்தில் சுத்தமில்லாமல் நாம் செய்யும் வழிபாடுகளோ, ஆராதனைகளோ, நாம் செலுத்தும் காணிக்கைகளோ நம்மைத் தேவனிடம் சேர்க்காது.  

அதுபோல நமது உடலானது பாவ பழுதற்றதாக இருக்கவேண்டியது அவசியம். அதனையே சுத்த ஜாலத்தால் கழுவப்பட்ட சரீரம் என்று வசனம் கூறுகின்றது. இதனையே  அப்போஸ்தலரான பவுல் அடிகள்,  "நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை." ( ரோமர் 12 : 1 ) என்று எழுதுகின்றார். 

உடலால் பாவச் சேற்றில் வாழ்ந்துவிட்டு அதனைப்பற்றி எந்தக்  குற்ற உணர்வும்  இல்லாமல் நாம் செய்யும் ஆராதனைகள் தேவனால் அங்கீகரிக்கப்படுவதில்லை. நமது உடலை தேவனுக்கு ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும்.  ஆடு மாடுகளைப் பலியிடுவதில்கூட பழுதற்றவைகளையே பலியிடவேண்டுமென்று  பழைய ஏற்பாட்டு முறைமையில் கூறப்பட்டுள்ளது. அதுபோல நமது உடலை தேவனுக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கும்போது அது பரிசுத்தமானதாக, பாவமில்லாததாக இருக்கவேண்டியது அவசியம். 

அன்பானவர்களே, நமக்கு ஏற்கெனவே மகாபரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைந்திட  நமது பிரதான ஆசாரியனாகிய இயேசு கிறிஸ்து தனது சொந்த இரத்ததால் வழியமைத்துக் கொடுத்துள்ளார். அவரது இரத்ததால் உண்டாக்கப்பட்ட மீட்பினை நாம் விசுவாசிக்கவேண்டும்.  அவரது இரத்தத்தால் நாம் கழுவப்பட நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். அவர் நம்மைத் தூய்மையாக்கி மகாபரிசுத்த ஸ்தலத்தினுள் நுழையத் தகுதிப்படுத்துவார். 

அப்போதுதான்  நாம்  இயேசுவின் இரத்தம் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் பரலோகத்தில் சேரமுடியும். 

உள்ளத்திலும் உடலிலும் தூய்மையில்லாமல் நாம் செய்யும் எந்த ஆராதனையும், சடங்குகளும், காணிக்கைகளும் நம்மைப்  பரலோகம் கொண்டு செல்லாது.  

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - ரோமர் 6 : 7 / Romans 6:7

  " ஆதவன் " தியானம் - 1951 2026 ஜூன் 11,   வியாழன்        "மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே." ...