கர்த்தராகிய ஆண்டவர் நமக்கு சகாயம் செய்பவராக இருக்கின்றார். தன்னை விசுவாசித்து தனக்கு ஏற்புடைய மக்களாக வாழ்பவர்களுக்கு அவர் சாகயம் செய்யும் கேடகமாக இருக்கின்றார். எனவே, நாம் தைரியமாக இந்த உலகத்தில் வாழமுடியும். நமக்கு எதிராக மனிதர்கள் எதுவும் செய்திடமுடியாது.
இன்றைய இந்த வசனத்தை மேலும் தெளிவாக அறிந்துகொள்ள நாம் இதன் முந்தின வசனத்தையும் சேர்த்து வாசிக்கவேண்டியது அவசியம். அதில் நாம், "நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே." ( எபிரெயர் 13: 5 & யோசுவா 1:5) என்று வாசிக்கின்றோம். அதாவது, நான் உன்னை விட்டு விலகமாட்டேன், உன்னைக் கைவிடமாட்டேன் என்று அவர் ஏற்கெனவே கூறியிருக்கிறாரே அதனை நாம் விசுவாசிப்போமானால் கர்த்தர் எனது சகாயர் என்று கூறி தைரியமாக இந்த உலகத்தில் வாழமுடியும்.
இப்படி முயன்று நாம் கிறிஸ்துவை நமது வாழ்வில் ஆதாயமாக்கிக் கொள்வோமானால் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாம். இதுவே மேலான ஆவிக்குரிய வாழ்வு. இந்த அனுபவத்துக்காக வேண்டுதல் செய்வதையே தேவன் மேலான ஜெபமாக எண்ணுகின்றார்; அதற்கு உடனடியாக பதிலும் கொடுக்கின்றார்.
"மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது." (1 யோவான் 4 : 3)
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் அப்போஸ்தலரான யோவான் எழுதிய இந்த தியான வசனம் இன்றும் நிஜமாக இருக்கின்றது. உலக ஆசீர்வாதங்களை மட்டுமே போதித்து கிறிஸ்துவை விட்டு மக்களைப் பிரிக்கும் கிறிஸ்தவ போதகர்களை நாம் ஏற்கெனவே அறிவோம். ஆனால், இன்றைய தியானம் அதனைப்பற்றியதல்ல.
கிறிஸ்துவை வாயினால்கூட அறிக்கைபண்ணாத அந்திக்கிறிஸ்துவின் சபை இப்போதும் இருக்கின்றது என்று நீங்கள் நம்புகிறீர்களா? யெகோவா சாட்சி சபைகளைப்பற்றி நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் அதனைவிட வித்தியாசமான உபதேசங்களைக்கொண்ட, வெளிப்பார்வைக்கு கிறிஸ்தவ சபைகள் போலவே இருக்கும் சபைகள் இருக்கின்றன. இங்கு போதிக்கப்படும் உபதேசங்கள் சாத்தானின் உபதேசங்கள்.
மிகச் சமீபத்தில், கடந்த மார்ச் 1 ஆம் தேதி ஒரு அந்திக் கிறிஸ்து சபை ஊழியனை அவனது சபையின் முன்வைத்து சந்திக்க முடிந்தது. எனது நண்பர் ஒருவர் என்னிடம், "ஒரு நல்ல மனிதர் இருக்கிறார். உனது ஊழியத்துக்கு அவரும் பயனுள்ளவராக இருப்பார். நான் அவரது சபைக்குச் சென்றதில்லை. ஆனால் அவர் எனக்குத் தினமும் வேத வசனங்களை அனுப்புவார்; அவற்றைப் படிக்கச் சொல்லுவார். உனக்கு விருப்பமானால் அவரைச் சென்று ஒருமுறை பார்த்துப் பேசு" என்று என்னிடம் கூறியதால் அவரைப் பார்க்கச் சென்றேன்.
பொதுவாகவே கிறிஸ்தவ போதகர்கள் என்றால் எனக்கு அவர்களுடன் நட்புகொள்ள விருப்பமுண்டு. எனவேதான் அவரைப் பார்க்கச் சென்றேன். "தேவர்களுக்கெல்லாம் தேவனாகிய மகா சர்வ வல்லமையுள்ள கர்த்தர்" என்று அங்குள்ள அறிவிப்புப் பலகையில் எழுதியிருந்தது. ஆனால் அங்கு சென்று அவரிடம் பேசியபோது அவர் கூறிய கருத்துக்கள் அவர் ஒரு அந்திக்கிறிஸ்து என்பதனை வெளிப்படுத்தியது. அவர் கூறி போதிக்கும் சில கருத்துக்களை சுருக்கமாகக் கீழே தருகின்றேன்:-
பழைய ஏற்பாடு மட்டுமே தேவ ஆவியால் எழுதப்பட்டது, எனவே அதனை மட்டுமே வாசிக்கவேண்டும். புதிய ஏற்பாடு, இயேசு எனும் ஒரு சாதாரண மனிதனை கடவுளாகக் காண்பிக்கவேண்டி புராணக் கதைகளைப்போல எழுதப்பட்டுள்ள கட்டுக்கதைகள். ஆண் துணை இல்லாமல் உலகினில் ஒருவரும் பிறக்கமுடியாது; செத்தவன் எவனும் உயிருடன் எழும்பவும் முடியாது. சர்வ வல்லவரான கர்த்தருக்கு உலகத்தை மீட்பதற்கு ஒரு மகன் தேவையில்லை. அவர் ஒரு வார்த்தைச் சொன்னாலே நாம் இரட்சிக்கப்பட்டுவிடுவோம்." இன்னும் என்னென்னவோ பேசினார். நான் அவரிடம், "நீங்கள் பிரசங்கம் செய்வீர்களா?" என்று கேட்டேன். "ஆம், இங்கு பலர் வருவார்கள்" என்றார். அதற்குமேல் அவரிடம் பேசுவது அறிவீனம் என்று வந்துவிட்டேன்.
அன்பானவர்களே, கிறிஸ்தவ வசனங்களை சுவரில் எழுதிப்போட்டு மக்களைக் கவரும் அனைவரும் மெய்யான கிறிஸ்தவ உபதேசத்தைப் போதிப்பார்கள் என்று கூறமுடியாது. எனவே நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம். கிறிஸ்தவர்கள் அதிகம் இருக்கும் பகுதியிலேயே அந்திக்கிறிஸ்து சபை இருக்குமென்று நான் நினைத்துகூடப் பார்த்ததில்லை. எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் வேத வசனங்கள் உண்மை என்பதை எனக்கு இது மேலும் உறுதிப்படுத்துவதாக இருந்தது.
"பிள்ளைகளே, இது கடைசிக் காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்." (1 யோவான் 2:18)
"இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து". (1 யோவான் 2:22)
"தேவர்களுக்கெல்லாம் தேவனாகிய மகா சர்வ வல்லமையுள்ள கர்த்தர்" என்று இந்தச் சபையில் எழுதப்பட்டிருந்தாலும் இங்கு கர்த்தர் இருக்கவில்லை. காரணம் அப்போஸ்தலரான யோவான் கூறுகின்றார், "குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவை உடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான்." (1 யோவான் 2:23) என்று.
வஞ்சக உபதேசங்களைப் போதித்து, சாத்தானைக்கொண்டு நோய்களைத் தாற்காலிகமாகக் குணமாக்கி அதன்மூலம் மக்களைக் கவர்ந்து நரகத்துக்கு நேராக நடத்தும் இத்தகைய ஊழியர்களிடம் சென்று சிக்கிக்கொள்ளாமல் இருப்பதுடன் இங்கு செல்லும் மக்கள் சத்திய சபைகளுக்குச் செல்லவும், இவர்கள் சத்தியத்தை அறிந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவும் ஜெபிக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
"மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக் கிறிஸ்துவுமாய் இருக்கிறான்" (2 யோவான் 1:7)
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1855
🔆 2026 மார்ச் 07, சனி
"நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோம் என்றும் அறிந்திருக்கிறோம்." (1 யோவான் 5 : 15)
வேதாகமம் நமது உலக ஆசீர்வாதங்களுக்காக எழுதப்படவில்லை. மாறாக, இந்த உலக வாழ்க்கைக்குப்பின் உள்ள நித்திய ஜீவனை நாம் சுதந்தரித்துக்கொள்ள வழிகாட்டவே எழுதப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவும், "என்னுடைய ராஜ்ஜியம் இவ்வுலகத்துக்குரியதல்ல" என்றுதான் கூறினார். ஆனால் மனிதர்கள் நாம் வேத வசனங்களுக்கு உலகப்பொருள் கொண்டு உலக ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக வேதாகமம் எழுதப்பட்டதாக எண்ணிக்கொள்கின்றோம். கேளுங்கள், தட்டுங்கள், தேடுங்கள் என்பன உலக ஆசீர்வாதங்களைத் தேடுவதைக் குறிப்பதல்ல. வேதாகம வசனங்கள் அனைத்துமே ஆவிக்குரிய பொருள்கொண்டவை.
வேதாகமம் எழுதப்பட்டபோது அவை தோல் சுருள்களில் எழுதப்பட்டன. அப்போது அவை தொடர்ச்சியாக எழுதப்பட்டிருந்தன. அதிகாரங்கள், வசன எண்கள் அப்போது கொடுக்கப்படவில்லை. 1227 ஆம் ஆண்டில் பழைய ஏற்பாடும் 1551 ஆம் ஆண்டில் புதிய ஏற்பாடும் அதிகாரங்கள் வசனங்களாகப் பிரிக்கப்பட்டன. இவை குறிப்பிட்ட வேதப்பகுதிகளை நாம் எளிதில் கண்டுகொள்ள மட்டுமே உதவுகின்றன. நாம் வேதாகமத்தை வாசிக்கும்போது அவை எழுதப்பட்ட முறையின்படி அதிகார எண்களையும் வசன எண்களையும் மறந்து தொடர்ச்சியாக வாசிக்கவேண்டியது அவசியம். அப்போதுதான் பல வசனங்களை நாம் புரிந்துகொள்ள முடியும்.
இதை விடுத்து நமக்கு வேண்டிய குறிப்பிட்ட வசனத்தை மட்டும் நாம் வாசித்தோமானால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் நிலைமை ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. இன்றைய தியான வசனம், அவரிடம் எதைக்கேட்டாலும் அவர் நமக்குச் செவி கொடுக்கிறாரென்று கூறுவதால் இன்று பலரும் எதனையும்; எந்த உலக ஆசீர்வாதத்தையும் அவரிடம் கேட்கலாம் என்று எண்ணிக்கொள்கின்றனர். அப்படித்தான் பல ஊழியர்களும் குருக்களும் போதிக்கின்றனர்.
ஆனால், இன்றைய வசனத்துக்கு முந்தின வசனத்தில் நாம் வாசிக்கின்றோம், "நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்." (1 யோவான் 5 : 14) அதாவது, எதனையும் கேட்பதல்ல, மாறாக நாம் கேட்பது அவரது சித்தத்துக்கு உகந்ததாக இருக்கவேண்டியது அவசியம். தேவனை அறிந்தவன்தான் தேவனது சித்தமறிந்து கேட்கக்கூடியவன்.
இயேசு கிறிஸ்துவும் இப்படித்தான் ஜெபித்தார். இதனை நாம், "சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்". (மத்தேயு 26:39) என்று வாசிக்கின்றோம்.
உலக ஆசீர்வாத போதகர்கள் குறிப்பிடும் இன்னொரு வசனம், "அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங்கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்ளுவது எதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக் கொள்ளுவீர்கள்." ( யோவான் 16: 23, 24)
இயேசு குறிப்பிடும் கேளுங்கள், மகிழ்ச்சி போன்ற வார்த்தைகள் ஆவிக்குரிய அர்த்தம் கொண்டவை. மகிழ்ச்சி என்பது ஆவிக்குரிய நிறைவின் மகிழ்ச்சியைக் குறிக்கின்றது. எனவேதான் இயேசு இந்த வசனத்தின் தொடர்ச்சியாக, "இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன்." ( யோவான் 16: 25) என்கின்றார். அதாவது, பிதாவிடம் நாம் ஜெபிக்கவேண்டியதை அவர் இங்கு உவமையாகக் கூறுகின்றேன் என்கிறார். உலக ஆசீர்வாதங்களுக்காக இப்படி கேளுங்கள் என்று கூறவில்லை.
இயேசு கற்பித்த ஜெபத்தில்கூட, "உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக." ( மத்தேயு 6: 10) என்றுதான் கூறினார். அதாவது உமது பரலோக சித்தம் என்னவோ அதுவே எனக்கு இந்த பூமியில் செய்யப்படட்டும் என்று கற்பித்தார்.
ஆம் அன்பானவர்களே, எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார் என்பது உண்மை. அதுபோல, நாமும் அவரது சித்தமறிந்து கேட்கவேண்டும் என்பதும் உண்மை. இப்படி அவரது சித்தம் அறிந்து கேட்போமானால் அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்பதும் உண்மை.
"விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1856
🔆 2026 மார்ச் 08, ஞாயிறு
"குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்." (1 யோவான் 5 : 12)
ஒரு மனிதனுக்கு உயிர் இருக்கின்றதா இல்லையா என்பதனை நாம் அவனது சுவாசத்தைக் கொண்டு அறியலாம். மருத்துவர்கள் கைநாடி பிடித்துப் பார்ப்பார்கள். அது இதயத்துடிப்பை வெளிப்படுத்தும். இப்படித் துடிப்பு இருக்குமானால் அந்த மனிதனுக்கு உயிர் இருக்கின்றது என்று பொருள். இந்த உயிர்த்துடிப்பு மிகவும் குறைவாக இருக்குமானால் அவனைக் காப்பற்றிட அவனது இதயத்துடிப்பை அதிகரிக்க வகைபார்ப்பார்கள்.
இதுபோலவே கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும் ஒருவருக்குள் கிறிஸ்து எந்த அளவுக்கு இருந்து செயல்படுகின்றார் என்பதைப்பொறுத்தே அவரது ஆவிக்குரிய உயிர் இருக்கும். "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." ( யோவான் 14: 6) என்று இயேசு கிறிஸ்துக் கூறவில்லையா? ஆம், அவரே சத்தியமும் ஜீவனும்.
"தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்." (1 யோவான் 5 : 11) ஆம் அன்பானவர்களே, நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்வு கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கின்றது. அதை ஏற்கெனவே நமக்கு ஆயத்தமாய் வைத்திருக்கின்றார். அதனை நாம் சுதந்தரித்துக்கொள்ள முயலவேண்டியது அவசியம். எனவேதான் இன்றைய தியான வசனம், "குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்" என்று கூறி நம்மை அறிவுறுத்துகின்றது.
ஒருவனுக்குள் கிறிஸ்துவின் ஜீவன் இருக்கின்றது என்பதை நாம் எப்படி அறிந்துகொள்வது? அது மருத்துவர்களைப்போல நாடித்துடிப்பை வைத்து நாம் கண்டுபிடிக்கமுடியாது. மாறாக, நமது மாறுபட்ட வாழ்க்கைதான் அதனை வெளிப்படுத்தும். ஆலயங்களுக்குச் செல்வது, காணிக்கைகள் கொடுப்பது, வேதாகமத்தை வாசிப்பது, போன்ற செயல்கள் நம்மை வெளிப்பார்வைக்கு உயிருள்ளவர்கள்போலக் காண்பிக்கும். ஆனால், தேவன் இவற்றுக்கு மேலாக நம்மிடம் எதிர்பார்க்கின்றார்.
கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த வேதபாரகரும் பரிசேயர்களும் மேற்கூறிய அனைத்து நியமங்களையும் கடைபிடித்தவர்கள்தான். ஆனால் இயேசு அவர்களுக்கு "ஐயோ கேடு" என்று கூறுவதை நாம் வாசிக்கின்றோம் (மத்தேயு 23:13 - 32) இப்படி அவர்களை சபிக்கக் காரணம் என்ன என்பதனையும் இயேசு கிறிஸ்து கூறுகின்றார்:-"அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்." ( மத்தேயு 23: 28)
அதாவது, வெளியே இந்தச் செயல்களை அவர்கள் செய்தாலும் அவர்களது உள்ளமோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கின்றது என்கிறார் இயேசு கிறிஸ்து. அதாவது, உயிரற்ற உடல் எப்படி அசுத்தமான புழுக்களால் நிறைந்து நாற்றமெடுக்குமோ அதுபோல கிறிஸ்துவாகிய உயிர் இல்லையானால் வெளிச்செயல்கள் இப்படியே தேவனுக்குமுன் நாற்றமெடுப்பதாக இருக்கும். கிறிஸ்து நமக்குள் வரும்போது மட்டுமே மாயமும் அக்கிரமமும் நம்மை விட்டு அகலும்.
ஆம், கிறிஸ்து நமக்குள் வரும்போது மட்டுமே நமது பரிசேய குணங்கள் மாறும். காரணம், அவர் நமக்குள் வரும்போது மட்டுமே நமக்குள் உயிர் உண்டாகும். நாம் அவருக்குள் உயிரடையும்போது மட்டுமே நமக்குள் இருக்கும் அசுத்தங்கள் வெளியேறும். மரித்து நான்கு நாட்கள் கடந்தபின் நாற்றமெடுத்த லாசரின் உடல் இயேசு கிறிஸ்துவின் வார்த்தையால் உயிர்பெறவில்லையா? "அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்." (ரோமர் 8:11)
சாவுக்கேதுவான நமது சரீரங்கள் உயிர்ப்பிக்கப்பட கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து அவர் நமக்குள் வரும்படி வேண்டுதல் செய்யவேண்டியது அவசியம். காரணம், அவர் நமக்குள் வரும்போது மட்டுமே நாம் உயிரடைந்து அவருக்குச் சாட்சிகளாக வாழமுடியும். ஆம், "குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்." நமக்குள் ஜீவன் இருக்கின்றதா என்பதை நாமே நிதானித்துப் பார்ப்போம்.
"விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1857
🔆 2026 மார்ச் 09, திங்கள்
"காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ?" ( சங்கீதம் 94: 9)
இன்று தங்களது ஜெபங்களுக்குத் தேவனிடமிருந்து பதில் கிடைக்கவில்லையானால் சிலர் தேவனைக் குற்றப்படுத்துவதுண்டு; முறுமுறுப்பதுண்டு. "எனது பாடுகள், துன்பங்களுக்காக நான் எவ்வளவோ ஜெபிக்கிறேன், இந்தக் கடவுளுக்குக் கண்ணும் தெரியவில்லை, காதும் கேட்கவில்லை" என்பார்கள். இப்படித் தங்களது தவறை மறைத்து மற்றவர்களைக் குற்றப்படுத்துவது மனிதர்களது இயற்கைக் குணம்.
இத்தகைய மனிதர்களைப்பார்த்து இன்றைய தியான வசனம் கேட்கின்றது, "காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ?" மனிதனே, உனது காதையும் கண்ணையும் உண்டாக்கியவர் தேவன்தான். அப்படியிருக்க அவர் எப்படி உனது துன்பங்களைப் பார்க்காமலும், உனது ஜெபத்தைக் கேட்காமலும் இருப்பார்? ஆம், "கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார்." ( நீதிமொழிகள் 20: 12)
மனிதர்களது தேவனைக் குற்றப்படுத்தும் முமுறுப்புக்குத் தேவன் ஏசாயா தீர்க்கத்தரிசி மூலம் பதில் கூறுகின்றார்:- "இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது." ( ஏசாயா 59: 1, 2)
அதாவது, நீ நினைப்பதுபோல எனது செவி மந்தமாகவுமில்லை, எனது கண் குருடாகவுமில்லை, எனது கை உனக்கு உதவமுடியும் குறுகிப்போகவுமில்லை என்கிறார் தேவனாகிய கர்த்தர். நமது பாவங்களே தேவனுக்கும் நமக்கும் இடையேத் தடுப்புச் சுவராக நின்று அவர் நமக்கு உதவிடமுடியாதபடி தடுக்கின்றன என்கிறார் அவர்.
ஒரே வீட்டிற்குள் இருந்தாலும் நாம் வீட்டின் மற்ற அறையினுள் இருப்பவர்களைப் பார்ப்பதற்கு இடையிலிருக்கும் சுவரானது எப்படித் தடையாக இருக்கின்றதோ, அதுபோல நமது பாவங்கள் சுவராக எழும்பி தேவனுக்கும் நமக்கும் பிரிவினை உண்டாக்கிவிடுகின்றது.
"என் கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன் வழிகளுக்குத்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவேன்; உன் அருவருப்புகளுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்." ( எசேக்கியேல் 7: 4) என்கிறார் தேவனாகிய கர்த்தர்.
எனவே அன்பானவர்களே, நமது ஜெபங்களுக்குப் பதில் தரவில்லை என்று தேவனைக் குற்றப்படுத்துவதை விட்டுவிட்டு நாம் முதலில் நம்மைப் பரிசோதித்துப்பார்ப்போம். நம்மிலுள்ள குற்றங்கள், பாவங்களை அவரிடம் ஒளிவின்றி அறிக்கையிடுவோம். தேவனுக்கும் நமக்கும் இடையிலான தடுப்புச் சுவர் தகர்க்கப்படும்போது மட்டுமே தேவனுக்கும் நமக்குமிடையிலான உறவு வலுப்படும். காதையும் கண்ணையும் உண்டாக்கினவர் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1858
🔆 2026 மார்ச் 10, செவ்வாய்
"என்னை விருந்துச்சாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே." ( உன்னதப்பாட்டு 2: 4)
விருந்து என்பது நாம் நமது உறவினர்களோடு கொண்டாடும் ஒரு அன்புப்பகிர்வு. நாம் நமக்குத் தெரிந்த எல்லோரையும் விருந்துக்கு அழைப்பதில்லை. அதுபோல எல்லோரிடமும் விருந்து உண்பதற்குச் செல்வதுமில்லை. ஒருவரோடு நாம் விருந்து உண்கின்றோமென்றால் அவர்களோடு நமக்கு நல்ல உறவு இருக்கின்றதென்று பொருள்.
இன்றைய தியான வசனத்தில் எனது அத்தும நேசர் என்னை விருந்துச் சாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார் என்று பாடுகின்றாள் அவருக்குப் பிரியமான ரூபவதி (அழகுள்ள பெண்). காரணம், அவரது அன்பு கொடிபோல என்மேல் பறந்துகொண்டிருக்கின்றது என்கின்றாள் அவள். தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழும் அவரது விசுவாசிகளைத்தான் ரூபவதி என்று இங்குக் குறிப்பிடப்படுகின்றது.
மேலும், தேவனுடைய ராஜ்யத்தில் திராட்சை ரசத்துடன் கூடிய விருந்து உண்டு என்பதை இயேசு கிறிஸ்துவும் சீடர்களிடம் கூறினார். "நான் தேவனுடைய ராஜ்யத்தில் நவமான ரசத்தைப் பானம்பண்ணும் நாள்வரைக்கும் திராட்சப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்." ( மாற்கு 14: 25) என்று நாம் வாசிக்கின்றோம்.
ஆம் அன்பானவர்களே, நாம் அவரது பிள்ளைகளாக இருப்போமானால் அவர் நம்மோடும் விருந்து உண்பதற்கு ஆசையாக இருக்கின்றார். அதற்காக நமது இருதயத்தின் கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கின்றார். "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்." (வெளிப்படுத்தின விசேஷம் 3: 20) என்று கூறப்படவில்லையா? கதவைத் தட்டும் நேசருக்கு நாம் இருதயத்தைத் திறக்கவேண்டியது மட்டுமே அவசியமாய் இருக்கின்றது.
வெளிப்படுகின விசேஷத்தில் கூறப்படும் இந்த அனுபவத்தை நாம் உன்னதப் பாட்டிலும் வாசிக்கின்றோம். "நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்." ( உன்னதப்பாட்டு 5: 2) ஆம், உறங்கிக்கொண்டிருந்தாலும் கதவைத் தட்டும் நேசரின் சத்தத்தைக் கேட்பதற்கு இதயமானது விழித்துக்கொண்டிருந்தது என்று இங்கு வாசிக்கின்றோம்.
இங்கு வேதாகமம் கூறும் விருந்து, உலக விருந்தினைப்போல வயிற்றை நிரப்பும் விருந்தல்ல. மாறாக, இருதயத்தை தேவ அன்பினால் நிரப்பும் விருந்து. தேவன் நம்மோடு கூடவே இருந்து, தாய், தகப்பனைபோல உறவோடு குடும்பமாக வாழும் விருந்து. தாயைப் பிரிந்திருக்கும் ஒரு இரண்டு வயது குழந்தைக்கு உண்பதற்கும், விளையாடுவதற்கும் நாம் எதனைக் கொடுத்தாலும் அந்தக் குழந்தை திருப்தியடையாது. மாறாக, அந்தக் குழந்தை தாயின் அரவணைப்பையே பெரிதாகக் கருதும். அதுபோல தேவனோடு ஐக்கியமாக நிரந்தரமாக வாழ்வதே பரலோக விருந்து.
இந்த உலகினில் நாம் தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழும்போது அவர் நம்மை இந்த விருந்துச்சாலைக்கு அழைத்துக்கொண்டுபோவார். அவரது அன்புக் கொடி நேசம் நம்மேல் பறக்கும்.
"விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1859
🔆 2026 மார்ச் 11, புதன்
"மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்." ( எபேசியர் 4: 24)
நீதி, நியாயம் குறித்துப் பலரும் பேசுவதை நாம் பார்த்திருக்கலாம். பிரச்சனைகள் ஏற்படும்போது, "நீ செய்வது உனக்கே சரியாகத் தெரிகிறதா?" என்று மற்றவர்களைப் பார்த்துச் சிலர் சிலவேளைகளில் கோபத்தில் கேட்பதுண்டு. அதற்கு மற்றவர், "நான் நியாயமாகத்தான் செய்கின்றேன்" என்பார்கள். அதாவது, இரண்டுபேரும் நீதி நியாயத்தைத் தாங்கள் கடைபிடிப்பதாகக் கூறிக்கொள்கின்றனர். அப்படியானால் எதுதான் மெய்யான நீதி? யார் கூறுவது உண்மை?
மேலும் சிலர் தங்களுக்குப் பிடித்தமானவர்கள் செய்யும் தவறையும் நியாயப்படுத்துவார்கள். சமீபத்தில், டீ கடை ஒன்றில் டீ அருந்திக் கொண்டிருக்கும்போது இருவர் பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்தேன். சொந்த மனைவியைத் தள்ளிவிட்டு வேறொரு நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் நடிகர் ஒருவரது விசுவாசி அந்த நடிகருக்கு ஆதரவாக, "இதில் என்னத் தவறு இருக்கின்றது? அவருக்குப் பிடித்தவருடன் வாழ அவருக்கு உரிமை இல்லையா?" என்று கூறினார். அதற்கு மற்றவர், "உங்கள் மருமகன் இப்படி உங்கள் மகளைத் தள்ளிவிட்டு வேறொரு பெண்ணை மணந்துகொள்ள முயன்றால் இதுபோல பேசுவார்களா?" என்று கேட்டார். அதற்கு மற்றவர் பதில் பேசாமல் இருந்தார்.
ஆம் அன்பானவர்களே, மனிதர்களது நீதிகள் இப்படி ஆளுக்கு ஆள் வேறுபடும் நீதியாகவே இருக்கின்றது. ஒரு நீதிபதி குற்றவாளி என்று அறிவித்த மனிதன் மேல் முறையீடு செய்து இன்னொரு நீதிபதியால் விடுதலை பெறுவதை நாம் பார்க்கின்றோம். எனவே, மனிதர்களது நீதி தேவனுக்குமுன் அழுக்கான கந்தைபோலவே இருக்கின்றது. "நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது" (ஏசாயா 64:6)
இன்றைய தியான வசனம் மெய்யான நீதி மற்றும் பரிசுத்தத்தைக் குறித்துக் கூறுகின்றது. தேவன் ஒருவரே நீதியும் பரிசுத்தமும் உள்ளவராக இருக்கின்றார். "ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்."(1பேதுரு 3:18). எனவே, அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய் மரித்து உயிர்த்தவரே நம்மை மெய்யான நீதியுள்ளவர்களாக மாற்ற முடியும்.
இன்றைய தியான வசனம், "தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்" என்று அறிவுறுத்துகின்றது. நமது பாவங்களுக்காக மரித்து உயிர்த்த கிறிஸ்து நமக்குள் வரும்போது மட்டுமே நாம் அவரைத் தரித்துக்கொண்டவர்கள் என்று கூறமுடியும். இப்படி நாம் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டால் மட்டுமே மெய்யான நீதியும் பரிசுத்தமுமுள்ளவர்களாக மாறமுடியும்.
நாம் நீதியுள்ளவர்களாய் வாழ்கின்றோமென்றால் நாம் கிறிஸ்துவுக்குள் பிறந்தவர்கள் என்பது அதன்மூலம் விளங்கும். ஆம், "அவர் நீதியுள்ளவராயிருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்." (1 யோவான் 2 : 29) கிறிஸ்து இயேசுவை வாழ்வில் தரித்துக்கொண்டு மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் வாழ்வோம்; அதாவது, பவுல் அப்போஸ்தலர் கூறுவதுபோல தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்வோம்.
நீதியும், பரிசுத்தமும் இல்லாமால் ஒருவனும் தேவனை அறிவதும் இல்லை; அவரிடம் சேர்வதுமில்லை.
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1860
🔆 2026 மார்ச் 12, வியாழன்
"சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது." (1 நாளாகமம் 21: 1)
தேவனுடைய பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட தேவ மனிதன் தாவீது. வல்லமையான சங்கீதங்களை நாம் இன்றும் பாடி மகிழ்ந்து தேவனைத் துதிக்கத்தக்கதாக பாடி அதனை எழுதிவைத்தவர். ஆனால், இங்கு அவர் சாத்தானால் வழிநடத்தப்படுவதை நாம் பார்க்கின்றோம்.
ஆட்டுத்தொழுவத்திலிருந்து எடுத்து அரசனாக தேவன் தாவீதை உயர்த்தியிருந்தார். தேவனே அவனை பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளில் தப்புவித்துக் காத்துவந்தார். ஆனால், சாத்தான் தாவீதின் உள்ளத்தில் பெருமையைத் தோன்றச்செய்தது. தனக்குக் கீழ் எத்தனை மக்கள் இருக்கின்றனர் என்று கணக்குப்பார்த்து அதனால் பெருமைகொள்ள அவன் சாத்தானால் ஏவப்பட்டான்.
"அப்படியே ராஜா தன்னோடிருக்கிற சேனாபதியாகிய யோவாபைப் பார்த்து: ஜனங்களின் இலக்கத்தை நான் அறியும்படிக்கு நீ தாண்முதல் பெயெர்செபா மட்டுமுள்ள இஸ்ரவேலரின் கோத்திரமெங்கும் சுற்றித்திரிந்து ஜனங்களைத் தொகையிடுங்கள் என்றான்." (2 சாமுவேல் 24: 2)
தாவீதின் சேனாதிபதியான யோவாப் தேவ மனிதனல்ல. ஆனால் அவன் தாவீதின் ஒவ்வொரு உயர்வினையும் கண்டுவந்தவன். மக்களைக் கணக்கிடுவது தவறு என்று அவன் மூலம் தேவன் தாவீதுக்கு உணர்வுறுத்தினார். "அப்பொழுது யோவாப் ராஜாவைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனுடைய கண்கள் காணும்படி உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஜனங்களை இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும், நூறுமடங்கு அதிகமாய் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் என் ஆண்டவனாகிய ராஜா இந்தக் காரியத்தை விரும்புகிறது என்ன என்றான்." (2 சாமுவேல் 24: 3) ஆனாலும் தாவீது மக்களைக் கணக்குப்பார்க்க யோவாபை ஏவினான்.
இதுவரை தேவனது கிருபையைச் சார்ந்து வாழ்ந்த தாவீது அந்தக் கிருபையினைத் தள்ளித் தனது சுயபலத்தை நம்பத் துவங்கினான். ஆனாலும், அவன் தேவ மனிதனாக இருந்ததால் தேவன் அவனைக் கைவிட்டுவிடவில்லை. அவன் செய்த தவறை ஆவியானவர் அவனுக்கு உணர்த்தினார். எனவே, "இவ்விதமாய் ஜனங்களை எண்ணினபின்பு, ராஜாவின் இருதயம் அவனை வாதித்தது; அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: நான் இப்படிச் செய்ததினாலே பெரிய பாவஞ்செய்தேன்; இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; நான் மகா புத்தியீனமாய்ச் செய்தேன் என்றான்." (2 சாமுவேல் 24: 10)
ஆனாலும் தேவன் அவன்மேல் கோபம்கொண்டார். அவன் கணக்குப்பார்த்து மகிழ்ந்த மக்களது எண்ணிக்கையைக் குறைவுப்படச் செய்தார். "ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே கொள்ளை நோயை வரப்பண்ணினார்; அதினால் இஸ்ரவேலில் எழுபதினாயிரம்பேர் மடிந்தார்கள்." (1 நாளாகமம் 21: 14)
ஆம், தனது தாசனாகிய தாவீதுக்குப் பதிலாக இவ்வளவு பெரிய மக்களை தேவன் அழித்தார். தாவீதுக்குத் தேவன் ஏற்கெனவே வாக்களித்திருந்ததால் அவனை அழிக்காமல் பாதுகாத்தார். இதுவும் தேவனது கிருபையே. அன்பானவர்களே, தேவன் நம்மை நடத்திவந்த பழைய காலங்களை நாம் தாவீதைப்போல மறந்துவிடக்கூடாது. நமது உயர்வு நமது சுய பலத்தால் வந்ததல்ல, மாறாக தேவனது கிருபையினால் கிடைத்தது எனும் உணர்வு நமக்கு எப்போதும் இருக்கவேண்டியது அவசியம். நமது உயர்வைக்குறித்த பெருமை நமக்கு ஏற்படுமானால் நாம் எவ்வளவுதான் பெரிய தேவ மனிதனாக இருந்தாலும் சாத்தான் நம்மை வஞ்சிக்க முடியும். எனவே எச்சரிக்கையாக இருப்போம்.
"சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே." (2 கொரிந்தியர் 2:11)
"விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1861
🔆 2026 மார்ச் 13, வெள்ளி
"நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது." ( யோவான் 4: 34)
இந்த உலகத்தில் உயிர்வாழ்வதற்காக உணவு உண்பவர்களும் உண்டு உண்பதற்காகவே உயிர்வாழும் போஜனப்பிரியர்களும் உண்டு. இதுபோலவே, தேவனை அறியவேண்டும் என ஆர்வமுடன் தேவனைத் தேடுபவர்களும் உண்டு, தேவனிடமிருந்து எப்போதும் எதையாவது கேட்டுப் பெற்றுக்கொள்ளவேண்டும் எனும் உலக ஆசைகளால் நிறைந்து ஜெபிப்பவர்களும் உண்டு.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துத் தனது சுய சித்தத்தைத் தேடாமல் தன்னைக்குறித்த பிதாவின் சித்தம் அறிந்து செயல்படுத்துபவராக இருந்தார். உலகத்தின் மீட்புக்காக தனது உயிர் பலியாகவேண்டும் என்பதே பிதாவின் சித்தம் என்பதனை அவர் அறிந்திருந்தார். அந்தப் பிதாவின் சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது என்று கூறுகின்றார்.
ஆம் அன்பானவர்களே, நாம் ஒவ்வொருவரைக் குறித்தும் தேவனுக்கு ஒரு சித்தமுண்டு. முதலில் நாம் நம்மைக்குறித்தத் தேவ சித்தத்தை அறியவேண்டியது அவசியம். அப்படி அறிந்துகொண்டோமானால் நமது வாழ்வில் நடக்கும் காரியங்களுக்காக நாம் அளவுக்கு அதிகமாக மகிழ்ச்சியோ துக்கமோ அடையமாட்டோம். அப்போஸ்தலரான பவுல் கிறிஸ்து தன்னை அவருக்கு வெளிப்படுத்தினவுடன், "நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்." (அப்போஸ்தலர் நடபடிகள் 9:6) என்று வாசிக்கின்றோம்.
இதனால்தான் அவர் நமக்கும், "நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்." (ரோமர் 12:2) என்று அறிவுறுத்துகின்றார். அதாவது, உலகம் செல்லும் வழியில் அதற்கேற்றபடி நடவாமல் நமது மனம் புதிதாகி நாம் தேவனுக்கேற்றவர்களாக மறுரூபமாகவேண்டும் என்கிறார். அப்போது தேவ சித்தம் இன்னதென்று நமக்குத் தெரியவரும். சுருக்கமாகக் கூறுவதானால் நாம் முதலில் மறுபடி பிறக்கவேண்டியது அவசியம்.
இன்று பெரும்பாலான மக்கள் தங்களது சுய சித்தத்தையே செய்து முடிக்க எண்ணுகின்றனர்; அதற்காகவே உழைக்கின்றனர். மருத்துவராக, பொறியியல் வல்லுனராக, வங்கி அதிகாரியாக, அல்லது IAS, IPS பணி அதிகாரியாக மாறவேண்டும் என்று சித்தமுள்ளவர்களாக இருக்கின்றனர். வேறு சிலர், அரசியலில் உயர்ந்த பதவி அடையவேண்டும் அல்லது மிகப்பெரிய தொழிலதிபராக வேண்டுமென்று எண்ணுகின்றனர். இவர்களில் ஒருசிலர் தங்களது இலக்கை அடைந்தும் விடுகின்றனர்.
ஆனால் அன்பானர்களே, தங்களைக்குறித்த தேவ சித்தத்தைப் பெரும்பாலானவர்கள் அறிய விரும்புவதுமில்லை, அதனை அடைய முயற்சிப்பதுமில்லை. "என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது" என்று கூறிய இயேசு கிறிஸ்து அதனை அடைந்து மேன்மையடைந்தார். உலக ஆசைகளை நிறைவேற்ற அவரைத் தேடாமல் அவர்மேல் மெய்யான அன்புடன் அவரைத் தேடுவோமானால் நம்மைக் குறித்த அவரது சித்தத்தைக் கண்டுகொள்ளமுடியும். இயேசு கூறுவதுபோல அதனைச் செய்து முடிப்பதே நம்முடைய மெய்யான போஜனமாயிருக்கிறது.
மட்டுமல்ல, பிதாவின் சித்தமறிந்து நாம் வாழும்போது நாமே கிறிஸ்துவுக்குச் சகோதரனும் சகோதரியாக இருக்கின்றோம். இதனையே இயேசு கிறிஸ்து, "பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்." (மத்தேயு 12: 50) தேவ சித்தம் அறிந்து வாழ முயற்சி செய்வோம்.
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1862
🔆 2026 மார்ச் 14, சனி
"எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது." (2 கொரிந்தியர் 3: 5)
மனிதர்கள் நாம் பலவீனமானவர்கள். மட்டுமல்ல, நமது வாழ்நாளைக்குறித்துக் கூட நாம் எதுவும் கூறமுடியாது. ஆனால் பலரும் இவற்றை எண்ணிப்பார்ப்பதில்லை. எதிர்காலத்தைக்குறித்து பல்வேறு கற்பனைகளையும் முயற்சிகளையும் செய்துகொண்டிருக்கின்றனர். இன்றைய தியான வசனம், நம்மால் இது முடியும் என்று ஒன்றையும் யோசிப்பதற்குக்கூட நாம் தகுதியற்றவர்கள் என்று கூறுகின்றது. உலக மனிதர்கள் இது முட்டாள்தனமான எண்ணம், இப்படி எண்ணிக்கொண்டிருந்தால் நாம் வாழ்வில் முன்னேறமுடியாது என்று கூறிக்கொள்கின்றனர்.
அன்பானவர்களே, நாம் எதிர்காலத்தைக்குறித்துத் திட்டமிடுவதில் தப்பில்லை, ஆனால் அந்தத் திட்டமிடுதல் தேவனுக்கு உகந்ததாக இருக்கவேண்டியது அவசியம். மட்டுமல்ல, நாம் நமது எதிர்காலத்தை; நமது குழந்தைகளது எதிர்காலத்தை, தேவ கரத்தினுள் ஒப்புவித்து ஜெபிக்கவேண்டியது அவசியம். காரணம், நம்மால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாம் தகுதியானவர்கள் அல்ல. நமது திட்டங்களும் கற்பனைகளும் தேவன் நினைத்தால் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும்.
ஒரு மிகப்பெரிய செல்வந்தனாகிய மனிதன் ஒருவன் இருந்தான். அவனுக்கு மூன்று ஆண்பிள்ளைகள். அதுவே அவனுக்கு ஒரு பெரிய பெருமையாக இருந்தது. மூன்று மகன்களையும் நன்றாகக் படிக்கவைத்தான் மூன்று மகன்களும் மருத்துவக் கல்லூரியில் படித்தனர். அவர்கள் படிப்பு முடிக்கும் காலத்தில் அவன் அவர்களுக்காக மருத்துவமனை ஒன்றையும் கட்டினான். ஆனால், மூத்த மகன் ஒரு பெண்ணைக் காதலித்து அவளோடு சென்று மாமனார் வீட்டில் தங்கிவிட்டான். இரண்டாவது மகன் கஞ்சா, மற்றும் போதைக்கு அடிமையாகி மருத்துவ படிப்பை முடிக்காமல் போனான். மூன்றாவது மகனோ ஒரு விபத்தில் இறந்துபோனான்.
எனவேதான் அப்போஸ்தலரான யாக்கோபு நமக்கு ஒரு தகுந்த அறிவுரைக் கூறுகின்றார்:- "நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம்பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே." ( யாக்கோபு 4: 13, 14) ஆம் அன்பானவர்களே, நமது தகுதி தேவனால் நிச்சயிக்கப்படுகின்றது.
எனவே, நாம் தேவனது கிருபைக்கு வேண்டுதல்செய்து அடங்கியிருக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. யாக்கோபு கூறுகின்றார், "ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்." ( யாக்கோபு 4: 15)
ஆனால், நாம் தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வோமானால் தேவன் நம்மை நிச்சயமாக ஆசீர்வதிப்பார். நமக்கு எதிராகச்செயல்படும் செயல்பாடுகளையும் நமக்கு ஆதரவாக மாற்றுவார் அவர். நாம் யோசிப்பதற்கும் மேலான உயர்வு தேவனால் நமக்கு உண்டாகும். யோசேப்பின் வாழ்வில் அவருக்கு வந்தத் துன்பங்களை தேவன் ஆசீர்வாதமாக மாற்றவில்லையா? "நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்." ( ஆதியாகமம் 50: 20) என்று மகிழ்ச்சியோடு அவனைக் கூறவைத்தார்.
யோசேப்பு தான் எகிப்துக்கு பிரதமராக வரவேண்டும்; பார்வோனுக்கு இணையானவனாக வரவேண்டும் என்று எண்ணவில்லை. ஆனால் தேவன் அப்படி எண்ணினார். ஆம், நமது தகுதி நம்மால் அல்ல, தேவனால் மட்டுமே உண்டாகியிருக்கின்றது. இதனை நாம் உணர்த்துக்கொண்டோமானால் தேவனே நமக்கு எல்லாமானவர் என்று எண்ணி அவரது கிருபைக்குக் காத்திருப்போம். நமது சுய பலத்தின்மேல் நம்பிக்கைகொள்ளாமல் கர்த்தரது கிருபைக்குக் காத்திருப்பதை சங்கீத ஆசிரியர் உணர்ந்திருந்ததால் கூறுகின்றார்:-
"அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார். தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்." ( சங்கீதம் 147: 10, 11)
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1863
🔆 2026 மார்ச் 15, ஞாயிறு
"கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று. நீ இப்பொழுது காண்பாய்." ( எண்ணாகமம் 11: 23)
No comments:
Post a Comment