அதிக கனிகளைக் கொடுக்கும்படி சுத்தம்பண்ணுகிறார்.

 ஆதவன் 🖋️ 581 ⛪ ஆகஸ்ட் 31,  2022 புதன் கிழமை


"என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்." ( யோவான் 15 : 2 )

வாழ்வில் கனி கொடுக்கும் அனுபவமே கிறிஸ்தவ அனுபவம். கனிகளால்தான் மரத்தை அறிய முடியும் என்று இயேசு  கிறிஸ்து கூறினார். கனியுள்ள ஒரு வாழ்க்கை வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். எனவேதான் அப்போஸ்தலரான பவுல் அடிகள், "தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி," ( பிலிப்பியர் 1 : 10 ) என்று எழுதுகின்றார். 

ஆவியின் கனிகளைப்பற்றி பவுல் அடிகள், "ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்."( எபேசியர் 5 : 9 ) என்கின்றார். மேலும், "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." ( கலாத்தியர் 5 : 22, 23 )

ஆனால், இப்படிக் கனி கொடுக்கும் வாழ்க்கை வலி தரக்கூடியது, சிறு வேதனை தரக்கூடியது. அதனையே இன்றைய வசனம் கூறுகின்றது, "கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்" என்று. மரங்களை கவ்வாத்து செய்வது பற்றி விவசாயிகளுக்குத் தெரியும்.  நன்றாக காய்க்கக்கூடிய பழ மரங்கள் இன்னும் அதிகக்  கனிகள் கொடுக்கும்படி அவற்றின் சிறு சிறு ஊடு கிளைகளை வெட்டி அகற்றி சுத்தம் செய்வார்கள். இப்படிச் சுத்தம் செய்யும்போது அந்த மரங்கள் மேலும் அதிகக் கனிகளைக் கொடுக்கும். இதனைத்தான் இயேசு கிறிஸ்து, "கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்." என்று கூறுகின்றார். 

இப்படி மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றும்போது மரங்களுக்கு வலிக்கும். மரங்கள் அந்த  வலியைத் தாங்கித்தான் ஆகவேண்டும். அப்படித் தங்கும்போதுதான் அதிகக் கனிகளை அவை கொடுக்க முடியும். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஏற்ற வாழ்வு வாழ விருப்புபவர்களுக்குத் துன்பங்கள் வருவதற்கு இதுதான் காரணம். ஆனால், இது அதிகக் கனிகொடுக்க உதவியாக இருக்கும்.

இன்றைய வசனம் மேலும் கூறுகின்றது, "என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்"  என்று. அதாவது கனியற்ற வழக்கை வாழ்வோமென்றால் மரத்திலிருந்து வெட்டப்பட்டக் கிளைகளைப்போல நாம் வெட்டி எறியப்படுவோம். அதாவது கிறிஸ்துவுக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் அற்றவர்களாக மாறிவிடுவோம். அப்படி வெட்டப்பட்டக் கிளைகள் வெய்யிலில் காய்ந்து உலர்ந்துவிடுவதுபோல நமது வாழ்க்கையும் உலர்ந்த வாழ்க்கையாக மாறிவிடும். வெட்டி எறியப்பட்டு உலர்ந்த கிளைகள் எரிப்பதற்குத்தான் பயன்படும். 

அன்பானவர்களே, நாம் ஆவிக்குரிய கனிகள் உள்ளவர்களாக மாறும்போதுதான் மற்றவர்கள் நம்மூலம்  கிறிஸ்துவை அறிந்துகொள்ள முடியும்.  எனவே ஆவிக்குரிய வாழ்வில் துன்பங்கள்  வரும்போது நாம் சோர்ந்துபோய்விடக்கூடாது. தேவன் நம்மைச் சுத்திகரிக்கின்றார் என்பதே அதன் பொருள். இந்தச் சுத்திகரிப்பு நம்மில் மேலும் அதிகக் கனிகள் தோன்றிட வகை செய்யும்.

கனியற்றவர்களாக செழிப்புடன் வாழ்ந்து அறுப்புண்டு போவதைவிட வேதனைகளைத் தாங்கி கனிகொடுப்பவர்களாக நிலைத்திருப்பது ஏற்றதல்லவா? கிறிஸ்துவோடு நிலைத்திருக்கும்போதே நாம் கனி கொடுக்க முடியும். 

மேலும், அவரில் நிலைத்திருப்பது மட்டுமல்ல, கிறிஸ்து நம்மைச் சுத்திகரிக்க இடம்கொடுப்போம். அந்தச் சுத்திகரிப்பு வேதனை தருவதாக  இருந்தாலும் தேவன்  வேதனையோடுகூட அதனைத் தாங்கத்தக்க பலத்தையும் தருவார். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                              

நம்மை அவர் ஜீவவழியில் நடத்துவார்

 ஆதவன் 🖋️ 580 ⛪ ஆகஸ்ட் 30, 2022 செவ்வாய்க்கிழமை

"இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே". (ஏசாயா 48:17)

நம் தேவனாகிய கர்த்தர் வெறுமனே நாம் ஆராதிக்கும் ஒரு உருவமோ உயிரற்றவரோ அல்ல. நம்மிடமிருந்து ஆராதனையையும் புகழ்ச்சியையும் பெறுவதில் குறியாக இருபவரல்ல. மாறாக,  நாம் அவரைப்போல பரிசுத்தராகவும் அவரது சாயலாக மாறவும் நமக்கு உதவுபவர். இன்றைய வசனத்தில் அதனைத்தான் கூறுகின்றார், "பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே" என்று. 

அவரது வழி நடத்தலுக்கு நம்மை நாம் ஒப்புக்கொடுக்கவேண்டியது அவசியம். மனிதர்களது உபதேசங்கள் கொஞ்சகாலம் கைகொடுக்கலாம். அல்லது மனிதர்கள் வேதாகம வசனங்களுக்கு வெல்வேறு அர்த்தம் சொல்லி நம்மை நம்பவைக்கலாம். ஆனால், கர்த்தரது வழிநடத்தலுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது நம்மை அவர் ஜீவவழியில் நடத்துவார். 

"நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்."( சங்கீதம் 32 : 8 ) என்று வாசிக்கின்றோம். நடக்கவேண்டிய வழியைக் காண்பிப்பதோடு ஆலோசனையும் சொல்வேன் என்கின்றார் தேவனாகிய கர்த்தர்.

இஸ்ரவேல் மக்களை தேவன் அக்கினித் தூணினாலும் மேகத் தூணினாலும் வழிநடத்தினார். அந்த அக்கினி ஸ்தம்பமும் மேக ஸ்தம்பமும் அவர்களைச் சரியாக வழிநடத்தியது. அந்த வழி நடத்தலுக்கு அவர்கள் கீழ்ப்படிந்து பயணம் செய்ததால் தான் எதிரி ராஜாக்களை முறியடித்து கானான் தேசத்தில் நுழைய முடிந்தது. இதனை நாம் யாத்திராகமம் புத்தகத்தில் வாசிக்கலாம். 

"வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணப் புறப்படுவார்கள். மேகம் எழும்பாதிருந்தால், அது எழும்பும் நாள்வரைக்கும் பிரயாணம்பண்ணாதிருப்பார்கள்." ( யாத்திராகமம் 40 : 36, 37 )

ஆம், பிரயோஜனமாயிருக்கிறதை நமக்குப் போதித்து, நாம்  நடக்கவேண்டிய வழியிலே நம்மை நடத்துகிற தேவனாகிய கர்த்தர்  அவரே. இந்த உலகத்தில் வாழ்ந்த பல பரிசுத்தவான்களும் இப்படி தேவ வழிநடத்துதலின்படி நடந்து வாழ்வில் வெற்றிபெற்றவர்கள்தான்.

ஜார்ஜ் முல்லர் எனும் தேவ மனிதனது வாழ்க்கை வரலாற்றினை வாசித்தபோது அவர் எப்படி அனைத்துக் காரியங்களுக்கும் தேவ வழிநடத்துதலை எதிர்பார்த்து வாழ்ந்தார் என்று அறிய வியப்பாக இருந்தது. பல ஆயிரக்கணக்கான குழந்தைகளை எந்த உதவியுமின்றி தேவ வழிநடத்துதலின்படி அவர் காப்பாற்றி நடத்தினார். ஒவ்வொரு நாளிலும் தேவனது வழிநடத்துதல் அவரையும் அவரது ஆசிரமத்துக் குழந்தைகளையும் வாழ வைத்தது. 

அன்பானவர்களே, நாம் ஆலயங்களுக்குச் செல்லலாம், ஜெபக்கூட்டங்களில் பங்கு பெறலாம், ஆலயப் பணிகள் செய்ய உழைக்கலாம் ; ஆனால், தேவனோடு நமக்குத் தனிப்பட்ட உறவு இல்லையானால் எல்லாம் வீண்தான். அவரது வழிநடத்தலுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து வாழும்போதுதான் தேவனது அருகாமையையும் அவர் நம்மை வழிநடத்துவதையும் வாழ்வில் கண்டுணர முடியும். 

"கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி."( நீதிமொழிகள் 6 : 23 ) எனும் வசனத்துக்கிணங்க தேவ கட்டளைகளின்படி வேத வெளிச்சத்தில் நடக்க நம்மை ஒப்புக்கொடுப்போம். ஜீவவழியில் அவர் நம்மை நித்தம் வழி நடத்திடுவார். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது.

 ஆதவன் 🖋️ 579 ⛪ ஆகஸ்ட் 29, 2022 திங்கள்கிழமை












"துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன்." ( சங்கீதம் 18 : 3 )

நமது தேவன் ஒருவர் மட்டுமே துதிக்கத் தகுந்தவர். நமது தேவன் துதிகளின் மத்தியில் வாசம்செய்யும் தேவன். கர்த்தரைத் துதிக்கும்போது நாம் பெரிய ஆசீர்வாதங்களைப் பெறலாம். ஜெபிக்க முடியாத சூழ்நிலைகள், எந்த வார்த்தையும் வரதா மனம் வெறுமையாக இருக்கும் சூழ்நிலைகள் இப்படிப்பட்ட நேரங்களில் வெறுமனே ஸ்தோத்திரம் செய்தாலே போதும். 

நமக்கு எதிராகச் செயல்படுபவர்களையும் எதிர்த்து நிற்கும் பிரச்சனைகளையும் தேவனை நோக்கி ஸ்தோத்தரித்து நாம் முறையிடும்போது தேவன் மாற்றி நம்மை விடுவிப்பார். "என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்." ( சங்கீதம் 18 : 17 ) என்கின்றார் தாவீது. 

நாம் முதல்முதல் நோக்கிப்பார்க்கவேண்டியது கர்த்தரது முகத்தைத்தான். ஆனால், இன்று பெரும்பாலான மக்களும் அவர்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் வரும்போது முதலில் நோக்கிப் பார்ப்பது தங்களுக்குத் தெரிந்த நல்ல பதவிகளில் உள்ளவர்களைத்தான். நமது பிரச்சனைக்கு இவர்மூலம் தீர்வு கிடைக்கும் என்று மக்கள் நம்பி தங்களுக்குத் தெரிந்த பதவியில் உள்ளவர்களையும் அல்லது தெரிந்தவர்கள் மூலம் அரசியல் தலைவர்களையும் உதவிக்கு நாடுகின்றனர். 

ஆனால் இது எப்போதும் கைகொடுப்பதில்லை. மேலும் பலரும் கொடிய நோய்க்களால் அவதிப்படும்போது கர்த்தரைத் தேடுகின்றனர். அவரது ஊழியர்களைத் தேடி ஓடுகின்றனர். தாங்கள் வெறுத்து ஒதுக்கும் கிறிஸ்தவ சபைப் பிரிவு ஊழியர்களையும் இப்படிப்பட்ட இக்கட்டான வேளைகளில் ஜெபிக்க அழைக்கின்றனர்.  பல வேளைகளில் விடுதலையும் பெறுகின்றனர்.

அன்பானவர்களே, நமது தேவன் துதிக்குப் பயப்படும் தேவன் என்று வசனம் சொல்கின்றது. அதாவது பரிசுத்த வாழ்க்கை வாழும் ஒருவர்  துதிக்கும்போது அது நமக்கு ஏதாவது உதவி செய்துதான் ஆகவேண்டும் என்று தேவனைப்  பயமுறுத்துகின்றதாம். "கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?" ( யாத்திராகமம் 15 : 11 )

தேவனுக்கு ஏற்புடைய ஒரு பரிசுத்தமான வாழ்க்கை வாழும்போது நமது துதிகள் நறுமண தூபப் புகையாக எழும்பி தேவனை அடைந்து அவர் நமக்கு உதவிசெய்யத் தூண்டுகின்றது. எனவேதான் சங்கீதக்காரன், "கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது." ( சங்கீதம் 147 : 1 ) என்று கூறுகின்றார். 

இப்படித் துதிப்பது நம்மைத் துன்பங்களுக்குத் தப்புவித்து மட்டுமல்ல நமது ஆவிக்குரிய மற்றும் உலக காரியங்களிலும் நாம் சிறப்படைய வழியாக இருக்கின்றது. சங்கீதம் 136 துதியின் சங்கீதம் என்று சொல்லப்படுகின்றது. ஜெப தியானத்தோடு அதனை வாசிக்கும்போது நமக்குப் புத்துணர்ச்சியும், தேவன்மேல் மிகப்பெரிய விசுவாசமும் ஏற்படும்.  

ஆம், துதித்தலே கர்த்தருக்கு ஏற்புடைய செயல். இப்படிக் கர்த்தரை நோக்கித் துதித்துக் கூப்பிடும்போது நம் சத்துருக்களுக்கு (அதாவது பிரச்சனைகளுக்கு)   நீங்கலாகி இரட்சிக்கப்படுவோம்.  துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

நமது உள்ளங்கள் உடைக்கப்படவேண்டும்;

 ஆதவன் 🖋️ 578 ⛪ ஆகஸ்ட் 28, 2022 ஞாயிற்றுக்கிழமை


"பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்." ( சங்கீதம் 51 : 16, 17 )

மனம் திரும்புதல் இல்லாத பலிகள் கர்த்தருக்கு ஏற்புடையதல்ல என்று இன்றைய வசனம் நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. நொறுங்குண்ட எளிய இதயத்திலிருந்து வரும் வேண்டுதல்கள் பலிகளைப் பார்க்கிலும் மேலானவை. தனது அனுபவத்திலிருந்து இதனை உணர்ந்துகொண்டதால் தாவீது இந்த வார்த்தைகளைப்  பேசுகின்றார்.  

பழைய ஏற்பாட்டுக்காலத்தில்;  காளைகளும், எருதுகளும், ஆடுகளும் பலியிடபட்டக் காலத்தில் தாவீது இதனைக் கண்டுகொண்டது தேவனது கிருபையால்தான். 

நியாயப்பிரமாண காலத்துப் பலிகள் செல்வாக்கு மிக்கவர்களால் தங்களது அந்தஸ்து பகட்டை வெளிப்படுத்தப் பலவேளைகளில் செலுத்தப்பட்டன. "இத்தனை ஆடு மாடுகளை பலி செலுத்தினேன்" என்று கூறுவது சில மக்களுக்குப் பெருமையாக இருந்தது. ஆம், உண்மையான தேவ அன்பு இல்லாமல் சமூகத்தில் தங்களது பெருமையை நிலைநாட்டவும், பிறர் தங்களைப் புகழவேண்டும் எனும் உள்நோக்கம் கொண்டவையாகவும் பலிகள்  மாறிவிட்டன. 

எனவேதான் தாவீது கூறுகின்றார், "நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்." ( சங்கீதம் 34 : 18 ) . அதிகமான ஆடு மாடுகளைப்  பலி செலுத்தியவர்களையல்ல, மாறாக நொறுங்கிய உள்ளமுள்ளவர்களுக்கும் நறுங்குண்ட ஆவியுள்ளவர்களுக்கும் கர்த்தர் சமீபமாக இருந்து அவர்களை இரட்சிக்கின்றார்.


இயேசு கிறிஸ்துவும் கூறினார், "ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது." ( மத்தேயு 5 : 3 )

அன்பானவர்களே, இன்றும் பல மனிதர்கள் திருந்தாமல் தங்கள் பெருமைகளையும் பண, பதவி அந்தஸ்தையும் ஆலயங்களில் வெளிக்காட்டுவதை பல இடங்களில் நாம் காண முடியும். தேவன் ஒன்றுமில்லாதவரோ, நாம் கொடுத்துதான் நிறைவடைய வேண்டியவரோ அல்ல. அதிகமான பொருட்களை ஆலயங்களுக்குச் செலுத்துவதால் தேவன் நமது பாவங்களை மன்னிக்கப்போவதுமில்லை. 

நமது உள்ளங்கள் உடைக்கப்படவேண்டும்; ஐயோ..நான் இப்படிபட்டப் பாவத்தைச் செய்துவிட்டேனே என உள்ளம் குத்தப்பட்டு உள்ளத்தில் நமது ஆவியில் வேதனைப்படவேண்டும். அதனை தேவன் விரும்புகின்றார். பலர் இரட்சிப்பு அனுபவத்தைப் பெறாமல் இருக்கக் காரணம் உள்ளத்தில் பெருமைகொண்டு, தங்கள் ஆவிக்குரிய நிலைமையை உணராமல் இருப்பதால்தான். 

அன்பானவர்களே, தேவன் பலியையும் காணிக்கைகளையும்  விரும்புகிறதில்லை. மாறாக அவர் விரும்புவது  நொறுங்குண்ட ஆவிதான். தவறான சிந்தனைகளோ செயல்பாடுகளோ நம்மிடம் இருந்திருக்குமேயானால் மெய் மனஸ்தாபத்துடன் தேவனிடம் திரும்புவோம். 

நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தைத் தேவன் புறக்கணிப்பதில்லை. 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

மக்களால் பாராட்டப்பட்டாலும் நமது ஆத்துமாவை இழந்தோமானால் பலனில்லை.

 ஆதவன் 🖋️ 577 ⛪ ஆகஸ்ட் 27, 2022 சனிக்கிழமை















"கர்த்தராகிய இயேசுவின் உயிர்தெழுதலைகுறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்கள் எல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது". (அப்போஸ்தலர் 4:33)

நாம் கிறிஸ்துவைப் பிறருக்கு அறிவிக்கவேண்டுமானால், கர்த்தரது பூரண கிருபையால் நாம் நிரம்பியிருக்கவேண்டியது அவசியம். கிருபையோடு நாம் கிறிஸ்துவை அறிவிக்கும்போதுதான் அது மற்றவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். 

பூரண கிருபை என்பது அற்புதங்கள் செய்யக்கூடிய சக்தி என்று பலரும் எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் அது முற்றிலும் சரியல்ல. பூரணகிருபை என்பது நாம் பரிசுத்தமாக வாழ உதவும் தேவனது அன்பு உதவி. மட்டுமல்ல, பூரண கிருபை மற்றவர்களிடமிருந்து நம்மை வேறுபடுத்திக்காட்டும். அது, நமது பேச்சு, செயல்களில் தேவன் நம்மை வித்தியாசப்படுத்தியிருப்பதை  மற்றவர்கள் உணரச்செய்யும்.   

இப்படிப் பூரண கிருபையோடு அந்தியோகியாவில் பிரசாங்கம் செய்த சீடர்களை அங்கிருந்த மக்கள்  வித்தியாசமாகக் கண்டதால் அவர்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்தனர். அதாவது கிறிஸ்தவர்கள்  பெயர் கிறிஸ்துவின் உபதேசத்தின்படி வாழ்ந்த மக்களுக்கு மற்றவர்கள் அளித்தப் பெயர். "அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று". ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 11 : 26 )

இது எப்படிச் சாத்தியமாயிற்று என்றால் தேவனது பூரண கிருபை அவர்கள்மேல் இருந்ததால்தான். 

இன்று நாம் வொவொருவரும் வேதாகமத்தைத் தூக்கிக்கொண்டு கிறிஸ்துவை அலைந்துதான் கிறிஸ்துவை அறிவிக்கவேண்டும் என்று கட்டாயமில்லை. நாம் இருக்கும் இடத்தில, வாழும் ஊரில், சமுதாயத்தில் கிறிஸ்துவைப் பிரதிபலிப்பவர்களாக வாழ்ந்தாலே போதும். 

அனால் பல கிறிஸ்தவ சபைகளில் சில ஊழியர்கள் சமூக பணியாற்றுவதே கிறிஸ்துவின் பணி எனத் தவறான போதனைகளைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். முதலில் நாம் பரிசுத்தமுள்ளவர்களாக வாழவேண்டியது அவசியம். சமூக பணியை ஊழல் அரசியல்வாதியும் செய்யலாம், ஊழல் தொண்டு நிறுவனங்களும் செய்யலாம். 

சமுதாயப் பணி  செய்து ஆயிரக்கணக்கான மக்களால் பாராட்டப்பட்டாலும் நமது சொந்த ஆத்துமாவை இழந்தோமானால் அதனால் பலனில்லை.  ஆம், ஒருவன் உலகமனைத்தையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தனது சொந்த ஆத்துமாவை இழந்தால் அதனால் பயனென்ன? என்று இயேசு கிறிஸ்து கேட்கவில்லையா? 

"மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?" ( மத்தேயு 16 : 26 )

ஆம் அன்பானவர்களே, அப்போஸ்தலர்கள்போல மிகுந்த பலமான சாட்சிகளாக நாம் வாழ தேவனதுகிருபையினை வேண்டுவோம். தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பரிசுத்த வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடும்போம். அப்போது கர்த்தர் நம்மை நிறைவாய் ஆசீர்வதிப்பார். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

நமது தாழ்ந்த நிலையே நாம் உயர்த்தப்படுவதற்கான முதல் நிலை.

 ஆதவன் 🖋️ 576 ⛪ ஆகஸ்ட் 26, 2022 வெள்ளிக்கிழமை

"அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்." ( சங்கீதம் 113 : 7 )

பொதுவாக இந்த உலகத்தில் அரசாங்கமோ அல்லது பெரிய பெரிய தொழில் நிறுவனங்களோ தங்களுக்குப் பணியாளர்களைத் தேர்வு செய்யும்போது மிகத் திறமையானவர்களையே தேர்வுசெய்வார்கள். ஆனால் நமது தேவன் திறமையில்லாதவர்களையும், எதுவும் இல்லாதவர்களையும், அற்பமும் குப்பையுமானவர்களையும் தேர்ந்தெடுத்து தனக்கு ஏற்றவர்களாக மாற்றி பயன்படுத்துகின்றனர்.  

"உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்." ( 1 கொரிந்தியர் 1 : 28 ) என எழுதுகின்றார் பவுல் அடிகள். இப்படி அற்பமானவராக இருந்து உயர்த்தப்பட்டவர்தான் தாவீது. "தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார்." ( சங்கீதம் 78 : 70 )

"கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய ஜனமாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார்." ( சங்கீதம் 78 : 71 )

அன்பானவர்களே, இன்று இதனை வாசிக்கும் பலர் தங்களை இந்த உலகம் அற்பமாக எண்ணுவதாக எண்ணிக் கலங்கலாம். ஆனால், இன்றைய தியானத்துக்குரிய வசனம்  நாம் அப்படி எண்ணிக் கலங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நமக்கு உணர்த்துகின்றது. 

மீன்பிடித்துக்கொண்டிருந்த பேதுரு, யோவான், யாக்கோபு இவர்களைத்தான் இயேசு கிறிஸ்து தெரிந்துகொண்டு  வல்லமையாகப் பயன்படுத்தினாரேத்  தவிர, அந்தக்காலத்தில் இருந்த செல்வந்தர்களையோ, படிப்பறிந்த அறிஞர்களையோ அல்ல. 

இப்படி தேவன் பயன்படுத்துவதற்குக் காரணங்கள்  உண்டு. ஒன்று, இல்லாமையில், நொறுக்குதலில் வாழ்ந்து பழகியவர்களுக்கு இயல்பிலேயே தாழ்மைக்குணம் இருக்கும். தேவன் தாழ்மையுள்ளவர்களுக்கே கிருபை அளிக்கின்றார்.  மேலும்,  "பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்." ( லுூக்கா 1 : 52 ) என்று வாசிக்கின்றோம். தாழ்மைக்குணமே  தேவன் விரும்புவது.

இரண்டாவது காரணம், திறமையானவர்கள் திறமையாய்ச் செயல்படுவது இயற்கை. ஆனால் ஒன்றுக்கும் உதவாத திறமையற்றவர்கள் சிறப்பாகச்  செயல்படுவதில்தான் தேவனது வல்லமை வெளிப்படுகின்றது. 

அன்பானவர்களே, நாம் நம்மில் பெருமை வந்துவிடாமல் காத்துக்கொள்வோம்.  பெருமை என்பது பிசாசின் குணம். அந்தக் குணமுள்ளவர்களை தேவன் பயன்படுத்தவோ உயர்த்தவோ முடியாது. எனவே, தாழ்மை குணத்தை மட்டும் நம்மைவிட்டு விலகிடாமல் காத்துகொண்டு வாழ்வோம். கர்த்தர் நம்மை நிச்சயமாக பயன்படுத்துவார்; ஆட்டுத் தொழுவதிலிருந்த தாவீதை அரியணையிலேற்றி அழகுபார்த்ததுபோல நம்மையும் உயர்த்தி அழகுபடுத்துவார்.  தற்போதைய நமது தாழ்ந்த நிலையே நாம் உயர்த்தப்படுவதற்கான முதல் நிலை. 

ஆம், நமது தேவன் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டாலும் தேவன் கூறிய வார்த்தைகள் பொய்க்காது. 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்ததினால்தான் அன்பு உண்டாயிருக்கிறது.

 ஆதவன் 🖋️ 575 ⛪ ஆகஸ்ட் 25, 2022 வியாழக்கிழமை

"நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது." ( 1 யோவான்  4 : 10 )

உலகத்திலுள்ள எல்லா மதத்தினரும் தங்கள் தங்கள் தெய்வத்தினை அன்பு செய்கின்றார்கள். அப்படி அன்பு செய்வதால்தான் அந்தத் தெய்வங்களுக்கு வழிபாடுகளும் பல்வேறு சடங்குகளும் செய்கின்றனர். கிறிஸ்தவர்கள் நாமும் இப்படியே இருப்போமானால் நமக்கும் அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது.

ஒருவரை நாம் முழுமையாக அன்பு செய்யவேண்டுமானால் முதலில் அவரைப்பற்றி நாம் அறிந்திருக்கவேண்டும். அவர் நம்மை அன்புசெய்வது நமக்குத் தெரிந்திருக்கவேண்டும். இந்த உலகத்திலேகூட காதல் உணர்வைப் பாருங்கள், காதலிக்கும் இருவரும் (உண்மையான காதலர்கள்) ஒருவரைப்பற்றி மற்றவர் நன்கு அறிந்திருப்பார்கள். தனது காதலன் அல்லது காதலி தன்னை அன்புசெய்வதை அறியாவிட்டால் அதில் அர்த்தமே இருக்காது. அந்தக்  காதல் முழுமையானதாகவும்  இருக்காது. 

ஒருவர் தான் வணங்கும் தெய்வத்தை இந்த பரஸ்பர அன்புணர்வில்லாமல் வணங்கி வழிபடுவது அர்த்தமில்லாதது. எந்த அன்புணர்வும் இல்லாத ஒரு ஜடப்பொருளை ஒருவர் உண்மையாய் அன்புசெய்வது எப்படி சாத்தியமாகும்?  நாமும் இதுபோல கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் உண்மையான அன்பு செலுத்தவேண்டுமானால் முதலில் அவர் நம்மை அன்பு செய்ததும், அவர் நமது பாவங்களை மன்னித்து மீட்டுக்கொண்டதும், அனுபவபூர்வமாக நமக்குத் தெரிந்திருக்கவேண்டும்.

கணிதத்தில் கூறப்படும் வெறும் வாய்ப்பாடுபோல, "கிறிஸ்து எனக்காக இரத்தம் சிந்தியுள்ளார், கிறிஸ்து எனது பாவங்களை மன்னித்துள்ளார்"  என்று வெறுமனே கூறுவதல்ல. அனுபவப்பூர்வமாக அந்தப் பாவ மன்னிப்பின் நிச்சயத்தை நாம் பெற்றுகொள்ளும்போது மட்டுமே அவரது அன்பை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியும்.  

கிறிஸ்துவின்மேல் உண்மையான அன்பு ஏற்படும்போது நாம் பிற மதத்தினர் தங்கள் தெய்வத்திற்குச் செய்வதுபோல இயேசு கிறிஸ்துவின் படத்துக்கு மாலை, பூ, வாசனைத் திரவியங்கள் என  மரியாதை செய்யமாட்டோம். அவரது அன்பு நமக்குள்ளே  இருந்து நம்மை மனதளவில் அவர்மேல் அன்பு பெருக்கச்செய்யும். இந்த அனுபவம் இல்லையானால் நாம் இன்னும் இரட்சிப்பு அனுபவம் பெறவில்லை என்றே பொருள். காதலிக்கும் எவரும் தங்கள் காதலரின் படத்துக்கு மாலை, பூ அகர்பத்தி ஏற்றி அன்பை வெளிப்படுத்துவதில்லையே ?. 

ஆம், அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. பிற மத்தினருக்கும் கிறிஸ்தவர்களுக்குமுள்ள வித்தியாசம் இதுதான். வேறு எந்த உலக தெய்வங்களும் தங்களை வழிபடும் மக்களுக்காக உயிர் தியாகம் செய்யவில்லை.

அன்பானவர்களே, நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு கிறிஸ்துவின் இந்த உன்னத மீட்பு அனுபவத்தை அவரிடம் வேண்டுவோம். 

நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்ததினால்தான்  அன்பு உண்டாயிருக்கிறது. அவரது அன்புக்கு நாம் பிரதிபலன் காட்டவேண்டாமா?  ஆம், "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்" ( 1 யோவான்  5 : 3 ) 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                  

கிறிஸ்துவே நமது ஆவிக்குரிய வாழ்வின் அஸ்திபாரம்.

 ஆதவன் 🖋️ 574 ⛪ ஆகஸ்ட் 24, 2022 புதன்கிழமை

"என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்; நீரோட்டம் அதின்மேல் மோதினவுடனே அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்." ( லுூக்கா 6 : 49 )

எந்த ஒரு கட்டிடத்துக்கும் அஸ்திவாரம்தான் பிரதானம். கட்டிடத்தின் உயரம் , அதாவது எத்தனை மாடி கட்டப்போகின்றோம் என்பதன் அடிப்படையிலேயே அஸ்திபாரம் போடுகின்றோம். பலமாடி கட்டிடங்களுக்கு மிக ஆழமான அஸ்திபாரம் இடப்படுகின்றது. வேர் மரத்தைத் தாங்கிப் பிடிப்பதுபோல அஸ்திபாரங்கள்   கட்டிடத்தைத் தாங்கிப்பிடிக்கின்றன. 

இதுபோலவே நமது ஆவிக்குரிய வாழ்க்கை இருக்கின்றது. நாம் எவ்வளவு ஆழமாக கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொண்டு பலப்படுகின்றோமோ அவ்வளவு சிறப்பாக நமது ஆவிக்குரிய வாழ்க்கை இருக்கும். ஆம், கிறிஸ்துவே நமது ஆவிக்குரிய வாழ்வின் அஸ்திபாரம்.

"என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்" என்கின்றார் இயேசு கிறிஸ்து. அதாவது அவரது வார்த்தைகளைக் கேட்கவேண்டும்; அவற்றின்படி செய்யவேண்டும். அப்படி இல்லையானால் நாம் மணல்மேல் வீடு கட்டுபவர்களாக இருப்போம்.

அஸ்திபாரமில்லாமல் மணல்மேல் வீடு கட்டுவது அறிவுகெட்டத் தனமல்லவா? கிறிஸ்துவை உண்மையாய் அறிவிக்கும் ஊழியர்கள்தான் சரியான அஸ்திபாரம் போடுபவர்கள். இப்படிப்   "போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது." ( 1 கொரிந்தியர் 3 : 11 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல் அடிகள். 

மேலும் அவர் கூறுகின்றார், "எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம் போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்." ( 1 கொரிந்தியர் 3 : 10 )

அதாவது கிறிஸ்துவை அஸ்திபாரமாகக்கொண்டு ஒவ்வொருவரும் கட்டலாம். அவரவருக்குத்  தேவன் அளித்தக் கிருபையின்படி நமது ஆவிக்குரிய வாழ்வை நாம் கட்டவேண்டும். ஆனால் எக்காரணம்கொண்டும் நமது அஸ்திபாரத்தைவிட்டு விலகிடாமல் கட்டவேண்டும். சிலர் தங்கள் ஆவிக்குரிய வாழ்வின் ஒருபகுதியைச் சிறப்பாகக் கட்டுவார்கள்; மறுபகுதி அஸ்திபாரமில்லாத பகுதியாக இருக்கும்.

ஒரு வீட்டின் ஒருசில அறைகள்மட்டும் பலமான அஸ்திபாரத்துடனும் மற்றப்பகுதிகள் அஸ்திபாரமில்லாமலும் இருந்தால் ஆபத்தல்லவா?

எனவே அன்பானவர்களே,  கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தை விட்டு விலகிடாமல் உறுதியாக அவர்மேல் நமது ஆவிக்குரிய வாழ்வைக் காட்டுவோம். அப்போதுதான் தேவன் அதனைப் பரிசோதித்துப் பார்க்கும்போது நமக்கு ஏற்ற கைமாறு கிடைக்கும். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

மக்களுக்கு கிறிஸ்துவின் புளிப்பினை அளித்துச் சுவையூட்டுவோம்

 ஆதவன் 🖋️ 573 ⛪ ஆகஸ்ட் 23, 2022 செவ்வாய்க்கிழமை

"வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும்வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கிவைத்தாள் என்றார்." ( மத்தேயு 13 : 33 )

நமக்கு மோர் புளிக்கவைப்பதைப்பற்றி நன்கு தெரியும்.  பாலைக் காய்ச்சி அப்படியே ஆறவைத்தால் அது கெட்டுப்போகும். எதற்கும் பயன்படாமல் நாற்றமெடுத்துவிடும். மாறாக அதனோடு சிறிது உறைமோரை (புளித்த மோர்) விட்டுவைத்தால் அது மறுநாளில் நல்ல தயிராகக்கிடைக்கும்.  இதுபோலவே ஆப்பம் சுடுவதற்கும் நாம் முந்தின நாளிலேயே அது புளிப்பதற்கு சிறிது சோறு, பழம் இவற்றைச் சேர்க்கின்றோம். இதுபோல ஏற்கெனவே புளித்த மாவினை புதுமாவுடன் சேர்ந்து புளிக்கவைக்கலாம்.   

மாவானது புளிக்கவைக்கும்போதுதான் ஏற்ற பலனைத் தரும். இட்லி, தோசை மாவை நாம் முந்தின நாளே ஆட்டி புளிக்கவைத்து பயன்படுத்துகின்றோம். இங்கு இயேசு கிறிஸ்து பரலோக ராஜ்யத்தை புளித்த மாவுக்கு ஒப்பிடுகின்றார். 

நாம் பரலோக ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகவேண்டுமானால் நம்மிடம் புளிப்புத் தன்மை இருக்கவேண்டும். அதாவது, தேவ சுபாவங்கள் இருக்கவேண்டும். அப்படி  நம்மிடம் இருக்கும் புளிப்பு நம்மைமட்டும் சுவையூட்டுவதாக இல்லாமல், எப்படி புளித்த மாவு தன்னோடு இருக்கும் மற்ற மாவினையும்  புளிப்புள்ளதாக மாற்றுகின்றதோ அதுபோல நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் புளிப்புள்ளவர்களாக மாற்றும். இதுவே கிறிஸ்துவின் ராஜ்யத்தை அறிவித்தல். 

வேதாகமத்தில் புளிப்பு பாவத்துக்கு உவமையாகவும் கூறப்பட்டுள்ளது. "ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்." ( 1 கொரிந்தியர் 5 : 8 ) என்கின்றார் பவுல் அடிகள்.

அப்போஸ்தலரான பவுல் புளிப்பைத் தவறான உபதேசத்துக்கும் ஒப்பிட்டுள்ளார். தவறான கிறிஸ்தவ உபதேசம் மொத்த சபையினையும் பாழாக்கிவிடும். "புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும்." ( கலாத்தியர் 5 : 9 ) என்கின்றார் அவர். 

நல்ல புளிப்பு ஆப்பமாவு, உறைமோர் போல நன்மை தரும். கெட்ட புளிப்பு பனங் கள் போல கேடுண்டாக்கும். 

அன்பானவர்களே, கிறிஸ்தவர்கள் நாம்  இந்த நாட்டில் குறைவான எண்ணிக்கையில்  இருந்தாலும்,  சரியான புளிப்புள்ளவர்களாக இருப்போமானால், கிறிஸ்து கூறுவதுபோல நாம் மற்றவர்களையும் நம்மைப்போல புளிப்புள்ளவர்களாக மாற்றி பரலோக ராஜ்யத்துக்கு உரிமையானவர்களாக மாற்று முடியும். ஆனால், பாவம், தவறான போதனை எனும் புளிப்பு இருக்குமானால் நமது ஆன்மாவையே இழந்துவிடுவோம்.

இந்திய நாட்டிற்கு வந்த மிஷனெரிகள் நல்ல புளிப்பைக் கொண்டு வந்ததால் நமது நாடு அதனைப்பெற்று இன்றும் அதன் பலனை அனுபவித்துவருகின்றது. நாமெல்லோரும் கிறிஸ்தவர்களாக இன்று இருப்பது அவர்கள் கொண்டுவந்த நல்ல புளிப்பினால்தான். நாமும் நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கு கிறிஸ்துவின் புளிப்பினை அளித்துச் சுவையூட்டுவோம் 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

தேவனைத் தேடாத வாழ்க்கை அமைதியும் ஆறுதலும் தருவதாக இருக்காது.

 ஆதவன் 🖋️ 572 ⛪ ஆகஸ்ட் 22, 2022 திங்கள்கிழமை


"அவர் அந்தகாரத்தை வரப்பண்ணுவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் இடறுவதற்கு முன்னும், நீங்கள் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள்." ( எரேமியா 13 : 16 )

தேவனில்லாத வாழ்க்கை,  தேவனைத் தேடாத வாழ்க்கை எப்போதும் அமைதியும் ஆறுதலும் தருவதாக இருக்காது. காரணம், அமைதியாக மகிழ்ச்சியாக இருக்கும்போதே வாழ்வில் அந்தகார இருள் ஏற்படலாம். நல்ல ஒரு காரியம் நடக்கும் என எண்ணி எதிர்பாத்திருக்கும்போது அந்தகார இருள் ஏற்பட்டு வாழ்க்கையின் மகிழ்ச்சி போய்விடலாம். ஆனால், கர்த்தருக்குக் காத்திருப்பவர்களுக்குத் திட நம்பிக்கை உண்டு. 

இன்றைய வசனம் தேவனைத்  தேடி அவருக்கேற்ற ஒரு வாழ்க்கை வாழவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.  

நமது வாழ்வில் அந்தகாரத்தை தேவன் வரப்பண்ணுவதற்கு முன்,  இருண்ட மலைகளில் நம் கால்கள் இடறுவதற்கு முன், நாம் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன் நாம் நம்  தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தவேண்டியது அவசியம். 

ஒரு பேரிடர் வருவதற்குமுன் மக்களைக் காப்பாற்ற இந்த உலகில் அரசாங்கம் பல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்கின்றது. மட்டுமல்ல, தனது நாட்டு மக்களுக்கு அவர்கள்  என்னென்ன முன்னேற்பாடுகள் செய்யவேண்டும் என்று அறிவுறுத்துகின்றது. கடந்த கொரோனா காலத்தில் அரசாங்கம் அறிவித்த அறிவிப்புகளை நாம் அறிவோம்; அரசு செய்த முன்னேற்பாடுகளை நாம் அறிவோம். மருத்துவ மனைகளில் அதிக அளவில் படுக்கைகளும், மருந்துகளும் தயாராக வைக்கப்பட்டிருந்தன. 

இதுபோல நாம் ஆவிக்குரிய வாழ்வில் சில தயாரிப்புகளைச் செய்யவேண்டியது அவசியம். பெரிய இடர்பாடாக நமது வாழ்வில் அந்தகாரத்தை தேவன் வரப்பண்ணுவதற்கு முன்,  இருண்ட மலைகளில் நம் கால்கள் இடறுவதற்கு முன், நாம் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன் நாம் நம்  தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தவேண்டியது அவசியம். நமது வாழ்க்கையை கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து ஒரு மகிமையான வாழ்வு வாழவேண்டியது அவசியம்.

கர்த்தருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது நமது வாழ்வில் துன்பமே வராது என்று அர்த்தமல்ல, ஆனால் துன்பத்தோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் தேவன் உண்டாக்குவார் என்று வேதம் கூறுகின்றது. (1 கொரிந்தியர் 10:13)

ஆனால், துன்மார்க்கமாய் வாழ்ந்து, தேவனை மறந்த்து அவருக்கு மகிமைச் செலுத்தாமல் வாழும்போது  எரேமியா கூறுவதுபோல பல்வேறு இடர்கள் நம்மை நெருக்கித் துன்புறுத்தும்.  

அன்பானவர்களே, தேவ வசனத்துக்கு நடுங்குவோம். கேடான சம்பவங்கள் வாழ்வை வருத்துமுன் கர்த்தருகேற்ற மகிமையை அவருக்குச் செலுத்தி பரிசுத்தமான வாழ்வு வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

குணமாக்கும் ஜெபங்கள்

  'ஆதவன்'  📖✝  வேதாகமத் தியானம் - எண்:- 1,264      💚  ஜூலை 26, 2024  💚 வெள்ளிக்கிழமை  💚 "நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள...

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்