இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Thursday, March 16, 2023

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்

ஆதவன் 🌞 780🌻 மார்ச் 18,  2023 சனிக்கிழமை 

"ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறிய விரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதனாலே ஆவியைப் பெற்றீர்கள்? ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா? (கலாத்தியர் 3:2,3) 

காலாத்திய சபையில் அப்போஸ்தலரான பவுலின் உபதேசத்தைக்கேட்டு விசுவாசிகளானவர்களிடம் சில ஊழியர்கள் வந்து பல்வேறு யூத பாரம்பரியங்களைப் பின்பற்றவேண்டுமென்று கற்பித்தனர். மோசேயின் நியாயப்பிரமாணக் கட்டளைகளை அவர்கள் மேன்மையாக எண்ணிக்கொண்டனர். 

இன்றும் இதுபோலவே பல கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். பத்துக் கட்டளைகளுக்கு எதிரான பாவம் நான் செய்யவில்லை என்று கூறித் தங்களைத்  தாங்களே ஏமாற்றிக்கொண்டு வாழ்கின்றனர். அன்பானவர்களே, கட்டளைகளுக்குக் கீழ்படிவந்தால் மட்டும் எவரும் தேவனுக்குமுன் நீதிமானாவதில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான கிருபையின் பிரமாணம் நியாயப்பிரமாணக் கட்டளைகளைவிட வேலானது. ஆம், இயேசு கிறிஸ்து பத்துக் கட்டளைகளைவிட மேலான கட்டளைகளை நமக்குத் தந்துள்ளார். அவற்றுக்குக் கீழ்படியும்போதே நாம் தேவனுக்கு ஏற்புடையவர்கள் ஆகின்றோம்.  எனவேதான் அப்போஸ்தலரான பவுல்,  "நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே." (கலாத்தியர் 2 : 16 ) என்று கூறுகின்றார். 

மேலும், மோசேயின் கட்டளைகளே போதுமென்றால் இயேசு கிறிஸ்து உலகத்துக்கு வந்திருக்கவேண்டிய அவசியமேயில்லை. அவர் பாடுபட்டு மரித்ததும் வீண். கட்டளைகள் பெலனற்றுப் போனதாலேயே இயேசு கிறிஸ்து உலகினில் வந்து  பாடுகள் பட்டு நித்திய மீட்பினை ஏற்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனையே, "நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே." ( கலாத்தியர் 2 : 21 ) என்று அப்போஸ்தலரான பவுல் அடிகள் எழுதுகின்றார். 

நாம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு மீட்பு அனுபவத்தைப் பெறும்போது புதிய மனிதர்கள் ஆகின்றோம்.  ஆவிக்குரிய மனிதர்கள் ஆகின்றோம். அதே ஆவிக்குரிய நிலையில் நாம் தொடர்ந்து பயணிக்கவேண்டும். காலத்திய சபையினர் தவறான உபதேசத்தால் ஆவிக்குரிய வழியைவிட்டுத் தடம் மாறினார்கள். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், கட்டளைகளுக்குக் கீழ்படிந்ததினாலா அல்லது விசுவாசத்தினாலா, எதனாலே ஆவியைப் பெற்றீர்கள்? ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா? என்று கேட்கின்றார். 

"நியாயப்பிரமாணமானது (கட்டளைகள்) ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே (விசுவாசத்தினாலே) தேவனிடத்தில் சேருகிறோம்." ( எபிரெயர் 7 : 19 )

கட்டளைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை கிறிஸ்துவின்மேல் வைக்கும் விசுவாசத்துக்கு நாம் மொடுக்கவேண்டும். அப்போது கிறிஸ்துவின் ஆவியானவர் நம்மை ஆவிக்குரிய மேலான வழியில் நடத்துவார்.  "நியாயப்பிரமாணத்தினாலே (சட்டம் சார்ந்த செயல்களால்)  ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே." ( கலாத்தியர் 3 : 11 )

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Wednesday, March 15, 2023

கிறிஸ்துவின் வசனத்தின்படி வாழ்ந்துகொண்டு கிறிஸ்துவை அறிவிக்கவேண்டும்.

ஆதவன் 🌞 779🌻 மார்ச் 17,  2023 வெள்ளிக்கிழமை 

"விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்." ( ரோமர் 10 : 17 )

"So then faith cometh by hearing, and hearing by the word of God." ( Romans 10 : 17 )

இன்றைய தியானத்துக்குரிய வசனம் சற்று குழப்பமான வசனம்போலத் தெரிந்தாலும் பொது மொழிபெயர்ப்பு வேதாகமத்தில் பின்வருமாறு தெளிவாக உள்ளது.  "ஆகவே, அறிவிப்பைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும்; கிறிஸ்துவைப்பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டால்தான் அதைக் கேட்க வாய்ப்புண்டு". அதாவது ஒருவருக்கு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் ஏற்படவேண்டுமானால் முதலில் கிறிஸ்துவைப்பற்றிய செய்தி அறிவிக்கப்படவேண்டியதும் அவர் அதனைக் கேட்கவேண்டியதும்  அவசியம். 

கிறிஸ்துவைப்பற்றிய செய்தியை ஊழியர்கள் மட்டும்தான் அறிவிக்கவேண்டுமென்று அவசியமில்லை. கிறிஸ்துவின் அன்பை ருசித்த அனைவருக்குமே அதனைப் பிறருக்கு அறிவிக்கவேண்டிய கட்டாயம் உண்டு. 

நான் கம்யூனிச சிந்தனைகொண்டு கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்தபோது என்னைவிட சுமார் 10 வயது இளையவரான ஒரு சகோதரன் எனக்குக் கிறிஸ்துவை அறிவித்தார்.  பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து சுமார் முப்பத்தியாறு ஆண்டுகள் கடந்தபின்னர் - இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பன் ஆனபின்னரே நான் கிறிஸ்துவை அறிந்துகொண்டேன். அதுவரை ஆலயங்களில் பல்வேறு பிரசங்கங்களைக் கேட்டிருந்தாலும் நான் கிறிஸ்துவை அறியாதவனாகவே இருந்தேன். 

கிறிஸ்துவைப்பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டால்தான் அதைக் கேட்க வாய்ப்புண்டு; விசுவாசம் வளர வாய்ப்புண்டு என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அப்படியானால் எனது முப்பத்தியாறு வயதுவரை எனக்குக் கிறிஸ்துவைப்பற்றிய செய்தி முறையாகச் சரியாக அறிவிக்கப்படவில்லை என்றுதானே பொருள்? 

எனவே நாம் ஒவ்வொருவருமே கிறிஸ்துவை அறியாதவர்களுக்கும் மீட்பு அனுபவம் பெறாத கிறிஸ்தவர்களுக்கும் கிறிஸ்துவை முறையாக அறிவிக்கவேண்டியது அவசியம். அதாவது நாம் கூறும் செய்தியை பிறர் ஏற்றுக்கொள்ளவேண்டுமானால் நம் முதலில் கிறிஸ்துவுக்கேற்ற வாழ்க்கை வாழவேண்டும். அவரது வசனம் நமது வாழ்வில் நிலைகொண்டிருக்கவேண்டும். அப்போது மட்டுமே நாம் கூறும் கிறிஸ்துவின் செய்தி மற்றவர்களது விசுவாசத்தை வளர்க்க உதவும். 

இதனையே அப்போஸ்தலரான பவுல் தனது சீடன் தீமோத்தேயுவுக்குப் பின்வருமாறு  எழுதுகின்றார்:- "உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்." ( 1 தீமோத்தேயு 4 : 16 ). ஆம், கிறிஸ்துவின் வசனத்தின்படி வாழ்ந்துகொண்டு நாம் கிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்கவேண்டும்.

அன்பானவர்களே, கிறிஸ்துவைப்பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டால்தான் அதைக் கேட்க வாய்ப்புண்டு. ஆனால், அப்படி அறிவிக்குமுன் நாமே நமது வாழ்க்கையினை கிறிஸ்துவுக்கேற்ற வாழ்க்கையாக மாற்றிக்கொள்வோம். அப்போது நம்மையும் நம் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்வோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Tuesday, March 14, 2023

பெற்றோருக்கு எல்லாவிதத்திலும் கீழ்படிய வேண்டுமா?

ஆதவன் 🌞 778🌻 மார்ச் 16,  2023 வியாழக்கிழமை 

"பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்." ( எபேசியர் 6 : 1 )


தாய் தகப்பனை மதித்து நடக்கவேண்டியது நமது கடமை. ஆனால், அப்படி நாம் மதித்து நடப்பதிலும் கர்த்தருக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று இன்றைய தியான வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது.  

மோசேமூலம் தேவன் அளித்த பத்துக் கட்டளைகளில் ஒன்று,  "உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக." ( யாத்திராகமம் 20 : 12 ) என்பது. அதாவது, நாம் தாய் தகப்பனை மதித்து அவர்களை கனம் பண்ணும்போது நமது வாழ்நாள் அதிகரிக்கும். 

ஆனால், நமது தாய் தகப்பன் தேவனுக்கு ஏற்பில்லாத அல்லது பாவமான காரியங்களில் நம்மை ஈடுபடச் செய்யும்போது அல்லது சொல்லும்போது நாம் அவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டிய அவசியமில்லை. அதனையே இன்றைய வசனத்தில்,  "உங்கள் பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்." என்று கூறப்பட்டுள்ளது. 

கர்த்தருக்குள் கீழ்ப்படிதல் என்பது கர்த்தர் பாவம் என்று விலக்கியுள்ள காரியங்களைத் தவிர்த்து மற்ற காரியங்களில் மட்டும் அவர்களது சொல்லைக் கேட்பது.  சில தகப்பன்மார் தங்களது பிள்ளைகளையே மது வாங்கிவர கடைகளுக்கு அனுப்புகின்றனர். அல்லது முக்கியமான சில காரியங்களில் உலக நன்மைகளை பெறுவதற்காக பிள்ளைகளை பொய்ச்சொல்லச் சொல்லி வற்புறுத்துகின்றனர்.  மேலும் சில பத்திரிகை செய்திகளில் தாயும் தகப்பனுமே தங்கள் பெண் குழந்தைகளை விபச்சாரம் செய்யத் தூண்டும செய்திகளை நாம் வாசிக்கின்றோம். இத்தகைய காரியங்களில் நாம் பெற்றோருக்குக் கீழ்படியவேண்டிய அவசியமில்லை.  

சில குடும்பங்களில் சொத்துத் தகராறுகள் ஏற்படும்போது அல்லது பிறரது சொத்துக்களை அநியாயமாக அபகரிக்க முயலும் சில தகப்பன்மார் தங்களது திருமணமான மகன் அல்லது மகள்களை தங்களுக்குச் சாதகமாக பொய்கூறும்படி வற்புறுத்துவதுண்டு.

அன்பானவர்களே, நாம்  பெற்றோரை மதிக்கவேண்டும், அவர்களைப் பராமரிக்கவேண்டும் இது கட்டாயம். ஆனால் அவர்கள் கர்த்தருக்கு ஏற்பில்லாத பாவ காரியங்களைச் செய்யும்படி நம்மைத் தூண்டும்போது   நாம் அவர்களுக்குக் கீழ்படியவேண்டிய அவசியமில்லை. 

குறிப்பாக, எந்த காரியத்தை நம் பெற்றோர்கள் நம்மை செய்யச்சொல்லி கேட்டுக்கொண்டாலும் நாம் கர்த்தருக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும். அதாவது அவர்கள் நம்மைச் செய்யச்சொல்லும் காரியம் கர்த்தரின்முன் நியாயமாக இருக்குமா என்று சிந்தித்து அப்படி நியாயமாய் இருந்தால் மட்டுமே நாம் செய்யவேண்டும். 

வயது எத்தனை ஏறினாலும் சிலர் திருந்தாத ஜடங்களாகவும் அல்லது மனிதநேயமற்றவர்களாகவும் இருக்கின்றனர். அத்தகைய பெற்றோரை, நம் பெற்றோர் என்பதால்  வீட்டில் ஏற்றுக்கொள்வோம்; அவர்களைப் பராமரிப்போம். ஆனால் அவர்களது அநியாய சிந்தனைக்கும் அறிவுரைக்கும் கீழ்படியாமலிருப்போம். நமது  பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படிவோம், இது நியாயம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

பின்மாறிடாமல் நமது உரிமைப்பேறை காத்துக்கொள்வோம்.

ஆதவன் 🌞 777🌻 மார்ச் 15,  2023 புதன்கிழமை 

"சகோதரரே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம்." ( கலாத்தியர் 4 : 28 )

இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட மக்களைப்பார்த்து  வாக்குத்தத்தத்தின் பிள்ளைகள் என்று குறிப்பிடுகின்றார். 

கர்த்தரால் மீட்கப்பட்ட மக்கள் கிறிஸ்துவைப்போல வாக்குறுதியின் பிள்ளைகள். வேதத்தின் வாக்குத்தத்தங்கள் அவர்களுக்கே உரிமையானவை. மீட்பு அனுபவம் பெறாதவர்களை அடிமையின் பிள்ளைகள். அவர்கள் இன்னும் நியாயப்பிரமாண கட்டளைகளுக்கே அடிமைகளாகவும் ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு உட்படாதவர்களுமாவார்கள்.. 

"ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன் ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் (உரிமைப் பெண்ணிடம்) பிறந்தவன்." ( கலாத்தியர் 4 : 22 ) 

தேவன் அளித்த வாக்குத்தத்தத்தின்படி பிறந்தவனே ஈசாக்கு. ஆனால் ஆகார் எனும் ஆபிரகாமின் அடிமைப்பெண்ணிடம் பிறந்தவன் இஸ்மவேல் (இஸ்மாயில்). வாக்குத்தத்தத்தின்படி பிறந்தவனே ஆசீர்வாதத்தைப் பெறமுடியும்.  இது குறித்து ஆதியாகமத்தில் ஆபிரகாமின் மனைவியாகிய சாராள் கூறுவது கவனிக்கத்தக்கது. அவள் ஆபிரகாமை நோக்கி: "இந்த அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்திரவாளியாயிருப்பதில்லை என்றாள்." ( ஆதியாகமம் 21 : 10 )

ஆபிரகாமுக்கு இது வருத்தமாக் இருந்தது. ஆனால் தேவன் சாராள் சொல்லியதையே அங்கீகரித்தார். 

"அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்." ( ஆதியாகமம் 21 : 12 ) என்றார். ஆம், அடிமையின் மகன் மேலான ஆசீர்வாதத்தினைப் பெறத்  தகுதியற்றவன் ஆகிவிட்டான். 

அன்பானவர்களே, நாம் பாரம்பரிய சடங்கு சம்பிரதாயங்கள்,  வழிபாட்டு முறைமைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருப்போமானால் நாம் அடிமையான ஆகாரின் பிள்ளையைப்போலவே இருப்போம். கிறிஸ்தவ பெற்றோருக்கு பிள்ளைகளாகப் பிறந்துவிட்டதால் மட்டுமே நாம் அவருக்கு உரியவர்கள் ஆக முடியாது. அவரது சந்ததி ஆகிடமுடியாது. 

கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்படும்போது மட்டுமே அவரோடு நெருங்கிய உறவுகொண்டு வாக்குத்தத்தத்தின்  பிள்ளைகளாகின்றோம். அதாவது, அவரோடு மகன், மகள் உறவைப் பெறுகின்றோம். "அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள்." ( ரோமர் 9 : 8 ) என்கின்றார் பவுல்  அடிகள். 

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவால் மீட்கப்பட்ட நாமே உரிமைப்பெண்ணின் பிள்ளைகள். மகன், மகளுக்குள்ள உரிமை நமக்கே உண்டு. "இப்படியிருக்க, சகோதரரே, நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாயிராமல், சுயாதீனமுள்ளவளுக்கே (உரிமைப் பெண்ணின்)  பிள்ளைகளாயிருக்கிறோம்." ( கலாத்தியர் 4 : 31 ) கிறிஸ்துவைவிட்டு பின்மாறிடாமல் நமது உரிமைப்பேறை காத்துக்கொள்வோம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Monday, March 13, 2023

எதார்த்தமாக இருக்கப் பழகுவோம்.

ஆதவன் 🌞 776🌻 மார்ச் 14,  2023 செவ்வாய்க்கிழமை 

"நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற நிருபங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ அப்படிப்பட்டவர்களாகவே சமீபத்திலிருக்கும்போதும் கிரியையிலும் இருப்போம் என்று சிந்திக்கக்கடவன்." ( 2 கொரிந்தியர் 10 : 11 )


பொதுவாக இந்த உலகத்தில் மனிதர்கள் பேசுவது ஒன்று செய்வது ஒன்று என  வாழ்கின்றனர். தொலைபேசியில் பேசும்போது அன்பொழுகப் பேசுவார்கள். ஆனால் அவர்களது இடத்தில சென்று தங்கும்போது அவர்களது செயல்பாடுகள் வித்தியாசமானதாக இருக்கும்.  

நாம் எவ்வளவுதான் நண்பர்களாக இருந்தாலும் தொலைவில் இருக்கும்வரைதான் நமது உறவுகள் சிறப்பாக இருக்கும். ஒரே அறையில் சேர்ந்து தங்கும்போது பல்வேறு மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. காரணம், தொலைவிலிருந்து பேசும்போது நட்புக்காக நமது சில குணங்களை மற்றவர்களிடம் மறைத்துவிடுகின்றோம். சேர்ந்து வாழும்போதுதான் நமது குறைகள் நம்மை அறியாமலேயே வெளிப்படும்.  "ஐயோ, இவரை நாம் எப்படியெல்லாமோ நினைத்தோமே, இவர் இப்படிப்பட்டவராக அல்லவா இருக்கின்றார்" என எண்ணுவோம். 
\
ஆனால் பவுல் அடிகள் தான் அப்படிப்பட்டவன் அல்ல என்று கூறுகின்றார். எனவேதான், "நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற நிருபங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ அப்படிப்பட்டவர்களாகவே சமீபத்திலிருக்கும்போதும் கிரியையிலும் இருப்போம்" என்கின்றார். 

பவுலின் நிரூபங்களும் போதனைகளும் கடினமானவை; ஆனால் வல்லமையுள்ளவை. பவுலின்  உடல் பலவீனமான உடல். அவரது எழுத்தாற்றலோடு ஒப்பிடும்போது பேச்சாற்றல் குறைவுள்ளது. ஆனால் இவைகளை மாய்மாலமாக மக்களிடம்  மறைக்காமல் தொலைவிலிருக்கும்போது இருப்பதுபோலவே அவர்களோடு இருக்கும்போதும் இருப்பேன் என்கின்றார். இதனையே இன்றைய தியான வசனத்தின் முந்தின வசனத்தில், "அவனுடைய நிருபங்கள் பாரயோசனையும் பலமுமுள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமுமாயிருக்கிறதென்கிறார்களே." ( 2 கொரிந்தியர் 10 : 10 ) என்று குறிப்பிடுகின்றார். 

ஆனால் இன்று ஆவிக்குரிய சபைகளில் ஊழியர்களிடம் இந்தக் குணம் பொதுவாக இருப்பதில்லை. அவர்கள் சபைக்கு நாம் செல்லும்போது மாய்மால அன்புடன்,  வித்தியாசமான பேச்சுவழக்கில் நம்மோடு பேசுவார்கள். இவர்கள் பேசும் தமிழே வித்தியாசமாக இருக்கும். இப்படிப்பேசுவதே ஆவிக்குரிய பேச்சு என எண்ணிக்கொள்கின்றனர். ஆம், சுய முகங்களை மறைத்து தங்கள் சபைகளுக்கு மக்கள் வரவேண்டுமென்பதற்காகவே இந்த மாய்மாலம். 

அன்பானவர்களே, பவுல் அடிகள் கூறுவதுபோல எதார்த்தமாக இருக்கப் பழகுவோம். நமது பேச்சும் செயல்பாடுகளும் எப்போதும் ஒரேபோல இருக்கட்டும். நய வசனிப்பாலும், மாய்மால பேச்சினாலும் அரசியல் கட்சிகளுக்கு ஆள் சேர்பதுபோல நாம் ஆள் சேர்க்கவேண்டிய அவசியமில்லை. 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Saturday, March 11, 2023

அநீதியுள்ளவரல்ல நமது தேவன். ...

ஆதவன் 🌞 775🌻 மார்ச் 13,  2023 திங்கள்கிழமை 

"கர்த்தருக்குள் நீங்கள் படுகிறபிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக."( 1 கொரிந்தியர் 15 : 58 )


பொதுவாக இந்த உலகில் மனிதர்கள் பிறர் அவர்களுக்குச் செய்யும் உதவிகளை உடனேயே மறந்து விடுவார்கள். எவ்வளவு பெரிய உதவி செய்தாலும் அதனை நினைவுகூர்ந்து வாழ்பவர்கள் வெகுசிலர்தான். ஆனால் நமது கர்த்தர் அப்படிப்பட்டவர் அல்ல; அவற்றை அவர் மறந்துவிடுவதுமில்லை என்று இன்றைய வசனம் கூறுகின்றது. கர்த்தருக்காக என்று நாம் செய்யும் செயல்கள் வீணானவை அல்ல என்பதால் உறுதியுடன் அப்படி கர்த்தருக்காக என்று செய்யும் செயல்களைச் செய்து அவற்றில் பெருகவேண்டும் என்கின்றார் பவுல் அடிகள்.

கர்த்தருக்காக என்று ஆர்வமுடன்  நாம் செய்யும் தர்ம காரியங்கள், உதவிகள், அவருக்கென்று செய்யும் ஊழியங்கள் இவை விளம்பர நோக்கத்திற்காக அல்லாமல், உண்மையான அன்புடன் செய்யப்படுமேயானால் கர்த்தர் அவற்றை நினைவுகூர்ந்து நமக்குப் பதில் செய்வார். மேலும், அப்படிக் கர்த்தர் பதில் செய்வார் என்று எண்ணிக்கூட நாம் செய்யக்கூடாது. மாறாக கர்த்தருக்கென்று செய்வது இயற்கையாக நம்மில் உருவாகவேண்டும். 

இதற்கு ஒரு உதாரணம் கூறலாம். நாம் காற்றை சுவாசிக்காவிட்டால் உயிர்வாழ முடியாது.  ஆனால் நாம் அப்படி நினைத்துக்கொண்டு சுவாசிப்பதில்லை. மாறாக, நம்மை அறியாமல் நாம் சுவாசித்துக்கொண்டிருக்கின்றோம். இதுபோலவே நாம் கர்த்தருக்கென்று நற்செயல்களை இயற்கையாகவே செய்யவேண்டியது அவசியம். அத்தகைய நமது செயல்களை கர்த்தரும் மறக்கமாட்டார். 

அப்படி நாம் கர்த்தரது பெயருக்காகச்  செய்யும் அன்புள்ள செயல்களை மறந்துவிடுவதற்கு அவர் அநீதியுள்ளவரல்ல என்று வேதம் கூறுகின்றது. "உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே." ( எபிரெயர் 6 : 10 ) நீதி, நேர்மையற்று வாழும் சில உலக மக்களைப்போல அநீதியுள்ளவரல்ல நமது தேவன். 

சிலர் தங்கள் செய்த நல்லச்  செயல்களை விளம்பரப்படுத்திச்  சொல்லிச் சொல்லி வாழ்வார்கள். வேறு சிலரோ, "நான் எவ்வளவோ நல்லது செய்தேன் எனக்கு ஆண்டவர் ஒண்ணுமே செய்யமாட்டேன் என்கிறார்" எனப் புலம்புவார்கள். அன்பானவர்களே, உண்மையும் உத்தமத்தோடும் செய்த எந்த செயலையும் தேவன் மறக்கமாட்டார். தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தை மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்ல. மட்டுமல்ல கர்த்தர் எவருக்கும் கடன்பட்டவரல்ல. இந்த உண்மை நமக்குள் உறுதியாக இருக்குமானால் எந்த எதிர்பார்ப்புமின்றி கர்த்தருக்கென்று நற்செயல்கள் செய்பவர்களாக இருப்போம்.

எனவே கர்த்தருக்குள் நாம்  படுகிற முயற்சிகள் வீணானவையல்ல  என்று  அறிந்து, நாம்  உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருக்கென்று செய்யும் செயல்களில் எப்போதும் பெருகுகிறவர்களாக  இருக்கவேண்டியது அவசியம் என்று கூறும் பவுலடிகளின் வார்த்தைகளின்படி வாழ முயற்சிப்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

கடவுளை அறிதலும் கடவுளைப்பற்றி அறிதலும்

ஆதவன் 🌞 774🌻 மார்ச் 12,  2023 ஞாயிற்றுக்கிழமை 


"ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?" ( 1 கொரிந்தியர் 1 : 20 )

தேவனைப் பற்றி  அறிதல்; தேவனை அறிதல்  இவை இரண்டும் வெவ்வேறானவை என்று ஏற்கெனவே பல முறை தினசரி தியானங்களில் விளக்கியுளேன். தேவனைப்பற்றி நாம் வேதாகத்தை வாசிப்பதன் மூலமும், மறைக்கல்வி வகுப்பகள்மூலமும் அல்லது பிரசங்கங்கள் கேட்பதன்மூலமும் அறிந்துகொள்ளலாம். ஆனால் தேவனை இப்படிப் படித்து  அறிய முடியாது. தேவனை அறிதல் என்பது வேறான மேலான அனுபவம். அது கடவுளோடு தனிப்பட்ட உறவில் வளருவது. அதனை  மத வழிபாடுகள்மூலமும் மதச் சடங்குகளைக் கடைபிடிப்பதன்மூலமும் பெறமுடியாது.  

கண் தெரியாத முருடர்களுக்கும்  பல்வேறு நிறங்களின் பெயர்கள் தெரியும் ஆனால் அந்த நிறங்கள் எப்படி இருக்கும் எனும் நிறங்களின் மகிமை அவர்களுக்குத்  தெரியாது. கண்பார்வை உள்ளவர்களே நிறங்களைப் பகுத்து அறிய முடியும். இதுபோலவே இறையியல் கல்விகளோ, வேத பண்டிதர்கள் ஆவதோ   தர்க்க சாஸ்திரங்களோ கடவுளை அறிய உதவாது. ஆனால் மனிதர்கள் இந்த முறையில் கடவுளை அறிய முயன்று பைத்தியமாகியுள்ளனர் என்கின்றார் பவுல் அடிகள். எனவேதான், "ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?" ( 1 கொரிந்தியர் 1 : 20 ) என்கின்றார்.

தேவனை அறிதல் என்பது மேலான ஆவிக்குரிய அனுபவம். அது தேவனால் வழிநடத்தப்படும் அனுபவம். தகப்பன் மகன்/மகள் உறவில் தேவனது உடனிருப்பை அறியும் அனுபவம். 

ஆனால் இன்று இதனை விளக்கிக் கூறி இரட்சிப்பு அனுபவத்தை மக்களுக்கு எடுத்துக் கூறுபவர்களை பைத்தியக்காரர்கள் என்று எண்ணுகின்றனர்  உலகத்து ஞானிகளும், இறையியல் கல்லூரி படிப்பாளிகளும். ஆனால் இத்தகைய ஆவிக்குரிய பிரசங்கங்கள் மூலமே விசுவாசிகளை தேவன் இரட்சிக்கின்றார். 

"எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று." ( 1 கொரிந்தியர் 1 : 21 )

அன்பானவர்களே, வேதாகமக் கல்லூரி படிப்புகள் தேவனைப்பற்றி மட்டுமே அறிய உதவுகின்றன; ஆனால் தேவனோடு நாம் வளர்த்துக்கொள்ளும் உறவுகளே தேவனை அறிய உதவும். அதுவே நாம் இரட்சிப்படைந்திட வழிகாட்டும். 

வேதாகமத்தை ஆவியானவரின் துணையோடு வாசித்து தியானிக்கும்போது மட்டுமே நாம் தேவனை அறியும் அறிவில் வளரமுடியும். இறையியல் கல்லூரி படிப்புபடித்த  மேதைகளது பிரசங்கங்களைக் கேட்பதைவிட ஆவிக்குரிய அனுபவம் பெற்ற தேவ மனிதர்களது பிரசங்கங்களைக் கேட்கும்போது  மட்டுமே தேவனைப்பற்றி அதிகம் அறிய முடியும். 

உலக ஞானி எங்கே? உலக அறிவுபெற்ற வேதபாரகன் எங்கே? தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?. உலக ஞானத்தையல்ல, ஆவிக்குரிய ஞானத்தையே விரும்புவோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Friday, March 10, 2023

கொடுக்கப்பட்ட வேலைகளை உண்மையோடும் உத்தமத்தோடும் செய்வோம்.

ஆதவன் 🌞 773🌻 மார்ச் 11,  2023 சனிக்கிழமை 

"நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்." ( பிலிப்பியர் 3 : 12 )

நாம் ஒவ்வொருவரைப் பற்றியும் தேவனுக்கு ஒரு நோக்கமுண்டு. நம்மை அவர் இரட்சித்ததற்கும் ஒரு நோக்கமுண்டு. கிறிஸ்து எல்லோருக்கும் தன்னை வெளிப்படுத்தவில்லை. குறிப்பிட்டச் சிலருக்கே வெளிப்படுத்தினார். அப்படி கிறிஸ்து எவர்களுக்குத் தன்னை வெளிப்படுத்தி அழைத்தாரோ அவர்கள் அந்தப்பணியைத் தொய்வில்லாமல் செய்யவேண்டியது அவசியம். 

கிறிஸ்துவோடு நாம் தொடர்புகொண்டு வாழும்போது கிறிஸ்து நம்மைகுறித்த நோக்கத்தை நமக்கு வெளிப்படுத்துவார். கிறிஸ்துவின் சுவிசேஷப்பணியினைச் செய்ய நாம் அழைக்கப்பட்டிருந்தோமானால் அந்தப் பணியினை நாம் மனப்பூர்வமாகச் செய்யவேண்டும். "கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ" என  அப்போஸ்தலரான பவுல் அடிகள் தேவன் தன்னை ஊழியத்துக்கு அழைத்ததைக் கூறுகின்றார். ஆம், கிறிஸ்து ஒவ்வொருவரையும் இப்படியே ஒவ்வொரு பணியினைச்  செய்யுமாறு பிடிக்கின்றார்.  பவுலடிகளைப் பிடித்தபோது  தேவன் கூறினார்:-    

"அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்."( அப்போஸ்தலருடைய நடபடிகள் 26 : 18 )

அதாவது மெய்யான ஒளியான  தேவனை அறியாமல் இருளில் வாழும் மக்களை அந்த ஒளியினிடத்திற்குக் கொண்டுவரவும், சாத்தானின் அதிகாரத்தைவிட்டு மக்களைத்  தேவனிடம் திரும்புவதற்கும், குருடாகிப்போன மக்களது மனக்கண்களைத் திறப்பதற்க்கும் தேவன் பவுலைத் தெரிந்துகொண்டார்.  இது பவுல் அடிகளுக்கு மட்டுமல்ல, தேவனது வேலைக்காக அழைக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட பணி இதுதான்.  இதனை நாம் சிறப்பாகச் செய்யவேண்டும். 

இந்தப் பணியை நான் செய்து முடித்துவிட்டேன் , அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன் என்கின்றார் பவுல் அடிகள்.

அன்பானவர்களே, தேவன் நம்மை எந்தப் பணிக்கு அழைத்திருந்தாலும் அதனை நாம் சிறப்பாகச் செய்யவேண்டும். பவுல் அடிகள் கூறுவதுபோல நமக்கு நாம் செய்த பணியில் நிறைவு ஏற்படக்கூடாது. இன்னும்.....இன்னும்.....இன்னும்.....என எண்ணவேண்டும். அப்படி எண்ணி நாம் செயல்படும்போது நமது பணி சிறப்பாக அமையும்.  

இதனையே, "நான் அடைந்தாயிற்று என எண்ணாமல் அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்." என்கின்றார் பவுல் அடிகள். தேவனால் நமக்குக் கொடுக்கப்பட்ட எந்தப் பணியாக இருந்தாலும் இதே மன நிலையுடன் தொடர்வோம். நல்ல உலக வேலைகளைத் தேவன் தந்திருந்தால் அந்த வேலையினை உண்மையோடும் உத்தமத்தோடும் செய்வோம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Wednesday, March 08, 2023

விசுவாசத்தின் பலனாகிய ஆத்தும இரட்சிப்பு

ஆதவன் 🌞 772🌻 மார்ச் 10,  2023 வெள்ளிக்கிழமை 


"அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து, உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்." ( 1 பேதுரு 1 : 8, 9 )

இன்றைய தியான வசனத்தின் இறுதியில், விசுவாசத்தின் பலனாகிய ஆத்தும இரட்சிப்பு எனும் வார்த்தைகள் வருகின்றன. அதாவது, இரட்சிப்பு ஏற்பட முதலாவது விசுவாசம் வேண்டும் என்பது இதன்மூலம் தெரிகின்றது. விசுவாசம் என்பது நாம் காணாததை நம்புவது. அதில் உறுதியாக இருப்பது. "விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது." ( எபிரெயர் 11 : 1 ) என்று வாசிக்கின்றோம். 

நாம் காணாமல் விசுவாசத்தினாலே இரட்சிப்பட்டுள்ளோம். எல்லாவற்றையும் கண்டால்தான் நம்புவேன் என்று கூறிக்கொண்டிருக்கமுடியாது. காணக்கூடியதை நம்புவது பெரிதல்ல. "நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டியதென்ன?" ( ரோமர் 8 : 24 )

பனிப் பகுதிகளில் பனிக்கட்டியினால் பாலம்போல நீர் உறைந்திருக்கும். அதன் அடியில் நீரானது ஓடிக்கொண்டிருக்கும். நாம் பனிப்பாலத்தில் நடக்கலாம். இதனை நாம் எல்லோரும் பார்த்ததில்லை. ஆனால் அதனைப் பார்த்த மனிதர்கள் நம்மிடம் கூறும்போது அவற்றை நம்புகின்றோம். அதுபோலவே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் கண்டதில்லை. அவர் செய்த அற்புதங்களைப் பார்த்ததில்லை. ஆனால் அவரோடு இருந்து அவற்றைப் பார்த்து எழுதிவைத்துள்ள வேதாகமச் செய்திகளைக் கேட்டு; பார்த்து அவரை  நாம் நம்பும்போது இரட்சிக்கப்படுகின்றோம்.

இதனையே அப்போஸ்தலரான பேதுரு இன்றைய தியான வசனத்தில், "அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து, உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்." என்று கூறுகின்றார். 

நமது அன்பு ஆண்டவரும் அப்போஸ்தலனாகிய தோமாவிடம், "தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்." ( யோவான் 20 : 29 ) ஆம் அன்பானவர்களே, இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளின்படி பார்ப்போமானால் இன்று அவரைக் காணாமலிருந்தும் விசுவாசிக்கும் நாம் அனைவருமே பேறுபெற்றவர்கள்தான். 

இன்று கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலருக்கும்கூட   கிறிஸ்துவிடம் முழு விசுவாசம் இல்லை. ஊழியம் செய்யும் பலரும்கூட பிழைப்புக்கான ஒரு தொழிலாக இதனைச் செய்கின்றார்களே  தவிர கிறிஸ்துவின் அன்பை உணர்ந்து; அவரை அறிந்து செய்யவில்லை.  உண்மையாய்க் கிறிஸ்துவிடம் விசுவாசம்கொண்டு அவரை அறிந்துகொள்ளும்போதே நாம் இன்றைய வசனத்தில் பேதுரு கூறுவதுபோல  விசுவாசத்தின் பலனாகிய ஆத்தும இரட்சிப்பை அடைய முடியும்; மட்டுமல்ல, அப்போது வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள வசனங்கள் நமது வாழ்க்கையில் செயல்பட்டு மாபெரும் மாற்றத்தை நமது வாழ்வில் கொண்டுவரும். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

பாக்கியமுள்ளவர்களாகவே நமது ஆவிக்குரிய வாழ்வைத் தொடர்வோம்.

ஆதவன் 🌞 771🌻 மார்ச் 09,  2023 வியாழக்கிழமை 

"கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது."( சங்கீதம் 33 : 12 )

இன்றைய வசனம் இரண்டு வித மக்களை பாக்கியமுள்ளவர்களாகக் குறிப்பிடுகின்றது. . 

1. கர்த்தரைத் தங்களுக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்டவர்கள் 

2. கர்த்தர் தனக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்டவர்கள்.

கர்த்தரைத் தங்களுக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்டவர்கள்  என்பது வெறும் பெயரளவில் அவரை வழிபடுபவர்களை அல்ல; மாறாக, கர்த்தரைத்  தனது  சொந்த தாயைப்போலும் தகப்பனைப் போலும் சொந்த சகோதரனாகவும் சகோதரியாகவும்  தெரிந்துகொண்டு அத்தகைய உறவில் கர்த்தரோடு வாழ்பவர்கள். அப்படி வாழ்பவர்களை கர்த்தரும் தனக்குச் சொந்தமாக அங்கீகரிப்பார்.  

கர்த்தர் தெரிந்துகொள்வது என்பது ஒரு அரசாங்கம் ஒருவரை வெளிநாட்டிற்கு தனது தூதுவராகத் (Ambassador) தேர்வு செய்கின்றது போல தெரிந்துகொள்வது.  இப்படி தனது தூதுவரை தேர்வு செய்து பிற நாடுளில் பதவியில் அமர்த்துகின்றது உலக அரசாங்கம். இப்படித் தேர்வு செய்யப்படும் நபருக்கு அந்த நாட்டில் உள்ள அனைத்துச் செலவுகளையும் அரசாங்கமே செய்யும். பல சலுகைகளும் வழங்கும். ஆனால் அந்த நபர் அரசாங்கத்துக்கு விசுவாசமுள்ளவராக, உண்மையுள்ளவராக இருக்கவேண்டியது அவசியம். இல்லையானால் சட்டப்படி அவர் தண்டிக்கப்படுவர்.

இதுபோலவே தனது பிரதிநிதிகளாகத் தேவன் சில மக்களைத் தெரிந்து கொள்கின்றார். அப்போஸ்தலரான பவுலைத் தேவன் இப்படி ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் தெரிந்துகொண்டார். இஸ்ரவேல் மக்களையும் தேவன் இப்படியே தெரிந்துகொண்டார். உலகினில் பல்வேறு மக்கள் இனங்கள் இருந்தாலும் தேவன் இஸ்ரவேல் மக்களைத் தனது தூதுவர்களாகக் குறிப்பாகத் தேர்வு செய்தார். அது உண்மையிலேயே யூதர்களுக்கு ஒரு மேன்மையான காரியம்தான். அப்போஸ்தலரான பவுல் இதுபற்றி கூறும்போது, "இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன? அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே." ( ரோமர் 3 : 2 ) என்கின்றார்.

அன்பானவர்களே, இன்றைய உலகினில் இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம்கொண்டு தேவனைத் தெரிந்துகொண்டவர்களையும்  தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் யூதர்கள் என்று வேதம் குறிப்பிடுகின்றது (ரோமர் -2:28,29). ஆம், நாம்தான் ஆவிக்குரிய யூதர்கள். எனவே நாம் தான் பாக்கியமுள்ளவர்கள்.

அப்போஸ்தலரான பேதுரு, "நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்." ( 1 பேதுரு 2 : 9 ) என்கின்றார். 

இப்படி நாம் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாக இருந்தாலும், "அதிகம் கொடுக்கப்பட்டவனிடம் அதிகம் கேட்கப்படும்" என்று இயேசு கிறிஸ்து கூறியதையும்  நாம் மறந்துவிடக்கூடாது. தெரிந்துகொள்ளப்பட்ட யூதர்கள் தேவனது வார்தைகளைப் பெற்றிருந்தாலும் அவர்கள் தேவனுக்கு விரோதமான பாவம் செய்தபோது தேவன் அவர்களைக் கடுமையாகத் தண்டித்தார். பிற ராஜாக்களிடம் அடிமைகளாக ஒப்புக்கொடுத்தார். இதுவே இன்றைய ஆவிக்குரிய யூதர்களாகிய நமக்கும் பொருந்தும்.

எனவே தேவன் நம்மைத் தெரிந்துகொண்டாலும் நாம் தேவனைத் தெரிந்துகொண்டாலும் அவருக்கேற்றபடித் தொடர்ந்து வாழவேண்டும். விலையேறப்பெற்ற இரட்சிப்பை நமக்குத் தந்து நம்மை  அலங்கரித்த தேவன் அதனை நாம் காத்துக்கொள்ளத் தவறினால் கடுமையாக நம்மைத் தண்டிப்பார் என்பதனையும் மறந்துவிடக் கூடாது. எனவே நாம் மற்றவர்களைவிட அதிக கவனமுள்ளவர்களாக இருக்கவேண்டும். பெற்றுக்கொண்ட இரட்சிப்பைக் கவனமுடன் காத்துக்கொள்வோம். தேவன் நமக்கு தகப்பனாக இருந்தாலும் அவர் பட்சிக்கிற அக்கினியாகவும் இருக்கின்றார் என்ற உண்மையினை நாம் மறந்துவிடாமல் கவனமுடன் பாக்கியமுள்ளவர்களாகவே நமது ஆவிக்குரிய வாழ்வைத் தொடர்வோம்.


தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Monday, March 06, 2023

ஆவியானவரின் வழிநடத்துதல்

ஆதவன் 🌞 770🌻 மார்ச் 08,  2023 புதன்கிழமை 

"நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைப்பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்." ( ஆகாய் 2 : 5 )

பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டுக்கு நிழலாட்டமாயிருக்கிறது. அன்று எகிப்திலிருந்து கானானை நோக்கி இஸ்ரவேலர் புறப்பட்டபோது  தேவன் அக்கினி ஸ்தம்பத்திலும் மேக ஸ்தம்பத்திலியுமிருந்து அவர்களை வழிநடத்தினார். இஸ்ரவேல் மக்கள் தனது வழிநடத்துதலை விட்டுத் திரும்பி மீண்டும் எகிப்துக்குச் சென்று பழையபடி அடிமையாகாமலிருக்கவேண்டும் என்று கருதி  எகிப்துக்குச் செல்லவேண்டாம் என்று பலமுறை தேவன் கட்டளையிட்டார். இன்று எகிப்து என்பது நாம் கிறிஸ்துவுடன் ஒப்புரவாகுவதற்கு முன்வாழ்ந்த  பாவ வாழ்கையினைக் குறிக்கின்றது.  அந்த எகிப்தைவிட்டு  வெளி வந்தால்தான் ஆவியானவரின் வழிநடத்துதல் தொடரும். 

இன்று கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு நாம் பரம கானானை நோக்கிப் பயணிக்கின்றோம். பழைய பாவ வாழ்க்கையிலிருந்து விடுபட்டு வாழும் நமக்குத் துணையாகப் பரிசுத்த ஆவியானவர் இருக்கின்றார். ஆம், பழைய எகிப்து வாழ்க்கையிலிருந்து விடுபட்டு பரம கானானை நோக்கிப் பயணிக்கும் நம்முடன் கிறிஸ்து உடன்படிக்கை  பண்ணின வார்த்தையின்படியே, ஆவியானவரும்  நம் நடுவில் தொடர்ந்து நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள் என்று இன்றைய தியான வசனம் நம்மைத் திடப்படுத்துகின்றது. எனவே நாம் பழைய எகிப்து எனும் பாவ வாழ்கைக்குச் சென்றுவிடக்கூடாது. 

நம்மைச் சரியான வழியில்  நடத்திடப்  பரிசுத்த ஆவியானவரை இயேசு கிறிஸ்து வாக்களித்து இன்று அளித்துள்ளார். "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார். " ( யோவான் 16 : 13 ) என்று கூறினாரே?

இன்று பரிசுத்தமாய் வாழ முடியவில்லை என எண்ணம் உங்களுக்குள் ஏற்படுகின்றதா? அப்படியானால் நிச்சயமாக ஆவியானவர் அதற்கு உதவுவார். ஆம், "அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்." ( யோவான் 16 : 8 ) என்று இயேசு கிறிஸ்துக் கூறியுள்ளார். 

மேலும், "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்."  ( யோவான் 16 : 13 ) என்றும் கூறியுள்ளார். 

எனவே அன்பானவர்களே, நம்மால் பாவத்தை மேற்கொண்டு மேலான ஆவிக்குரிய வாழ்வு வாழ முடியும். அதற்கு நாம் அன்றாட ஆலய வழிபாடுகளுக்கும் மேலாக தனிப்பட்ட முறையில் கிறிஸ்துவோடு நமது உறவை வளர்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். அப்போது, "நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைப்பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்." என்றபடி ஆவியானவர் நம்முடன் இருப்பார். 

"இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்." ( மத்தேயு 28 : 20 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

எதிரிகளை மன்னிக்கும் மேலான குணம்

ஆதவன் 🌞 769🌻 மார்ச் 07,  2023 செவ்வாய்க்கிழமை 

"அவன் எனக்குச் செய்தபிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்த செய்கைக்குத்தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே." ( நீதிமொழிகள் 24 : 29 )

ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு (மத்தேயு 5:39) என்று போதித்தது மட்டுமின்றி அதனைச் செயலிலும் காட்டியவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அதாவது பழி வாங்குதல் கூடாது என்பதே வேதம் நமக்குக் கற்றுத்தரும் பாடம். 

இன்று உலகில் மனிதர்கள் பிறர் தங்களுக்கு எதிராகச் செய்யும் செயலை மன்னிப்பது என்பது அரிதிலும் அரிதாகிவிட்டது. தினசரி பத்திரிக்கைச் செய்திகளைப் படித்தால் பழிக்குப் பழி வாங்கும் கொலைகள் நடைபெறாத நாளே இல்லை என்று எண்ணத் தோன்றுகின்றது. இந்தச் செயல்பாடுகளில் ஈடுபடும் பலர் கிறிஸ்தவர்களாகவும் இருக்கின்றனர்.  

"பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார்....." ( ரோமர் 12 : 19 )

"ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்." ( எபேசியர் 4 : 32 )

பழிவாங்குதல் பிசாசின் குணம்; மாறாக மன்னித்து மறப்பது தெய்வீக குணம். எதிரியை மன்னித்து அவனுக்கு நாம் நன்மை செய்யும்போது அதுவே அவனுக்குத் தண்டனையாகின்றது. எனவேதான் அப்போஸ்தலனாகிய பவுல் அடிகள், "அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்கு போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்." ( ரோமர் 12 : 20 ) என்று கூறுகின்றார். 

இந்த உலக அரசியல்வாதிகளைப் பார்த்தாலே பல உண்மைகள் நமக்குப் புரியும். மன்னிக்கும் குணமின்றி பழிவாங்கும் நடவடிக்கைகளிலேயே காலத்தைக் கழித்த அரசியல் தலைவர்கள் தடமிழந்து போன வரலாறுகள் பல உண்டு. அதேநேரம் அமைதியாக நேர்மையாக நடந்து எதிரிகளுக்கும் பதவிகள் கொடுத்து நிலைத்த பெயர் பெற்றவர்களும் உண்டு.

சாதாரண உலகத் தலைவர்களே இப்படி இருக்கும்போது கிறிஸ்துவை பிரதிபலிக்க அழைக்கப்பட்ட நாம் எவ்வளவு சிறப்பாக இந்தக் குணத்தைக் கொண்டவர்களாக இருக்கவேண்டும்?

நாம் நம்மையே சோதித்து நமது தவறுகளை எண்ணிப் பார்ப்போம். உலக ஆசீர்வாதங்களுக்கே ஜெபிக்கும் நாம் எதிரிகளை மன்னிக்கும் மேலான குணம் நமக்கு கிடைக்கவேண்டி ஜெபிப்போம். இத்தகைய ஜெபங்களே  தேவனது பார்வையில் மேலான ஜெபங்கள். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712


Sunday, March 05, 2023

உயிருள்ளவனே கனி கொடுப்பான்; கனிகொடுப்பவனே கிறிஸ்தவன்

ஆதவன் 🌞 768🌻 மார்ச் 06,  2023 திங்கள்கிழமை 

 
"குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்." ( 1 யோவான்  5 : 12 )

தேவன்  மனிதரை எப்படிப் பார்க்கின்றார் என்பதைக்குறித்து இன்றைய வசனம் கூறுகின்றது. நாம் நம்மை உயிருள்ளவர்கள் என எண்ணிக்கொண்டாலும் தேவனது பார்வையில் மரித்தவர்களாக இருக்கக்கூடும். அதாவது கிறிஸ்து இல்லாத வாழ்க்கை செத்த வாழ்க்கை என்று இன்றைய வசனம் கூறுகின்றது. 

ஒருவர் பெயரளவில் கிறிஸ்தவராக இருக்கலாம். கிறிஸ்தவ ஆலய காரியங்களிலும், பல்வேறு ஊழியங்களிலும் ஈடுபட்டிருக்கலாம். நற்செய்தி அறிவிக்கிறேன் என்று கூறிக்கொண்டு வேதாகமத்தைச் சுமந்துகொண்டு ஊர் ஊராகச் சுற்றி வரலாம், கன்வென்சன் கூட்டங்களில் அழகாகப் பிரசங்கிக்கலாம்; ஆனால் அவரிடம் கிறிஸ்துவின் குணங்கள் இல்லையானால் அவர் கிறிஸ்து இல்லாதவர். ஜீவனில்லாதவர்.    

அதாவது எந்தச் செயலையும் தேவனுக்கு ஏற்றபடிச் செய்யவேண்டுமானால், திராட்சைச் செடியில் இணைக்கப் பட்டக் கொடிபோல கிறிஸ்துவோடு நாம் இணைக்கப்படவேண்டியது அவசியம். இப்படி இணையாமலும் சில பல காரியங்கள் செய்யலாம். அப்படிச் செய்வது சுய விளம்பரத்துக்கும் லாபத்துக்குமாக இருக்குமேயல்லாமல் கிறிஸ்துவுக்கு ஏற்புடையதாகாது. எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது." ( யோவான் 15 : 5 )

"நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்" என்று இயேசு கிறிஸ்து மேற்படி வசனத்தில்  கூறுகின்றார். அதாவது, மரமானது கனி கொடுக்கவேண்டுமானால் அதற்கு உயிர் இருக்கவேண்டும். அந்த உயிர் கிறிஸ்துவில் இருக்கின்றது. அப்படி உயிருள்ளவனே கனி கொடுப்பான்; கனிகொடுப்பவனே கிறிஸ்தவன்; கிறிஸ்துவின் சீடன். 

இந்த உலக வாழ்க்கைக்குப்பின் முடிவில்லா வாழ்வு எனும் நித்திய ஜீவன் ஓன்று உள்ளது. கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு அவரோடு இணைக்கப்பட்டு வாழும்போது மட்டுமே நமக்கு நித்திய ஜீவன் உண்டு. ஆம், "நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்." ( 1 யோவான்  2 : 25 )

அப்படிக் கிறிஸ்துவோடு  இணைக்கப்பட்ட வாழ்வு வாழ்பவன் இந்த உலகில் மரித்தாலும், அல்லது மரிப்பதற்கொத்த தாழ்ந்த வாழ்வு வாழ்ந்தாலும் தேவனுக்குள் பிழைத்திருப்பான்.  "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்" ( யோவான் 11 : 25 ) என்று கிறிஸ்து கூறியிருக்கின்றாரே?

அன்பானவர்களே, ஆலயங்களுக்குச் செல்வது, ஊழியங்கள் செய்வது நல்லதுதான்; ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக நாம் கிறிஸ்துவுடன் இணைக்கப்படவேண்டியது அவசியம். "குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்." என்று வசனம்கூறுவதற்கேற்ப குமாரனாகிய கிறிஸ்து நமக்கு உடையவராகவேண்டும். அப்படி ஆனால் மட்டுமே நமது செயல்களுக்கு மதிப்பும் அங்கீகாரமும் தேவனிடம்  உண்டு. 

அவரோடு ஒப்புரவாகி புதிய மனிதனாகும்போது மட்டுமே நாம் குமாரனாகிய அவரோடு இணைக்கப்படுகின்றோம்; அப்போது மட்டுமே நாம் ஜீவனுள்ளவர்கள் ஆக மாறி நித்திய ஜீவனுக்குத் தகுதியுள்ளவர்கள் ஆக முடியும். நமது பாவங்களை அறிக்கையிட்டு கிறிஸ்துவோடு ஒப்புரவாகி அவரோடு இணைக்கப்பட முயலுவோம். அப்படிக் குமாரனாகிய கிறிஸ்துவோடு இணைக்கப்படும்போது மட்டுமே நாம் ஜீவனுள்ளவர்களாகின்றோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Saturday, March 04, 2023

சாதாரண மதவாதியாக இருப்போமானால் அதுவே ஒரு வியாதியாகிவிடும்.

ஆதவன் 🌞 767🌻 மார்ச் 05,  2023 ஞாயிற்றுக்கிழமை 

"கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம் பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்." ( 1 பேதுரு 3 : 15 ) 

அப்போஸ்தலரான பேதுரு கிறிஸ்தவர்களுக்கு இருக்கவேண்டிய முக்கியமான ஒரு குணத்தை இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் கூறுகின்றார். 

அதாவது நம்மிடம் நமது கிறிஸ்தவ நம்பிக்கையினைக்குறித்து யாராவது விளக்கம் கேட்கும்போது, அல்லது கிறிஸ்துவைக்குறித்து தங்களது சந்தேகத்தைக் கேட்கும்போது அவர்களுக்கு ஏற்ற பதிலைக் கூறும்படி நாம் எப்போதும் ஆயத்தமாய் இருக்கவேண்டும். அப்படி நாம் பதில் கூறும்போது அமைதியோடும் வணக்கத்தோடும்; அதாவது நம்மிடம் கேட்பவர்களை மதித்து அவர்களுக்குப் பதில் கூறவேண்டும். 

இப்படி அவர்களுக்கு நாம் கூறும் பதில் அவர்களுக்கு உள்ளத்தில் செயல்புரியவேண்டுமானால் முதலாவது நாம் நமது இருதயத்தைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். நமது இருதயத்தில் கிறிஸ்து குடியிருக்கவேண்டும்.   அதனையே இன்றைய வசனத்தின் துவக்கமாக பேதுரு,   "கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம் பண்ணுங்கள்." என்று கூறுகின்றார். 

மத வெறியுடன் அல்லது நமது நம்பிக்கையே உயர்ந்தது எனும் பெருமையோடு அல்லது நமது வாழ்க்கையில் பரிசுத்தம் இல்லாமல் இருக்கும்போது நாம் பிறருக்கு கிறிஸ்துவை அறிவிக்க முடியாது. அத்தகைய சுவிசேஷ அறிவிப்பு அரசியல் கட்சித் தலைவர்களது பேச்சுபோலவே இருக்கும். 

இன்று சிலர் வேதாகமத்தை முழுவதுமாக இதனை நாட்களில் வாசித்துமுடித்துவிட்டேன் என்றும், இன்றுமுதல் ஆறாவது முறையாக வேதாகமத்தை வாசிக்கத் துவங்குகிறேன் என்றும்  முகநூலிலும் இதர சமூக வலைத்தளங்களிலும் பதிவிடுகின்றார்கள். இதனை நாம் புரிந்துகொள்ள முடியவில்லை. அதாவது இத்தனை முறை படித்தும் இவர்களுக்கு இந்தக் காரியத்தை தேவனுக்கு மட்டுமே தெரியும்படி வைத்துக்கொள்ளவேண்டுமென்றும், இது முகநூலில் பதிவிட்டு பெருமைப்பட வேண்டிய விஷயமல்ல எனும் அடிப்படைகூட புரியவில்லையே!!. பின் இவர்கள் எத்தனைமுறை வேதாகமதைப்  படித்துதான் என்ன பயன்.?

இதுபோல சிலர் தாங்கள் பிறருக்குச் செய்யும் தர்ம காரியங்களைப் புகைப்படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். உனது வலது கை செய்வது இடதுகைக்குத் தெரியாமலிருக்கட்டும் என்றல்லவா கிறிஸ்து கூறினார்?

அன்பானவர்களே, நமது ஜெபம், வேத வாசிப்பு இவை அனைத்துமே அந்தரங்கமாக இருக்கவேண்டியவை. அப்படி நாம் இருக்கும்போதே நமது இருதயம் பரிசுத்தமடையும். அப்படிப்  பரிசுத்தமடையும்போது மட்டுமே நாம் பிறருக்குச் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் கிறிஸ்துவைக்குறித்து விளக்கிக்கூற முடியும். இல்லாவிட்டால் நாம் சாதாரண ஒரு மதவாதியாகவே இருப்போம். அதுவே ஒரு வியாதியாகிவிடும்.

தேவனோடு நமது தனிப்பட்ட உறவை மேம்படுத்துவோம். அதற்கு நமது தனிப்பட்ட ஜெபம், வேத வாசிப்பு, தர்ம காரியங்கள், காணிக்கை கொடுத்தல் இவற்றை அந்தரங்கமாக நமக்கும் தேவனுக்கும் மட்டும் தெரியும்படி காத்துக்கொள்வோம். இப்படிக் காத்துக்கொண்டு நமது விசுவாசத்தைக்குறித்து விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் பதில்கூற நாம் எப்பொழுதும் ஆயத்தமாயிருக்க முயலுவோம். அப்போதுதான் நாம் கிறிஸ்துவை பலருக்கும் அறிவிக்கமுடியும்; பிறரும் அதனை  ஏற்றுக்கொள்வார்கள்.
 
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Thursday, March 02, 2023

ஐந்துவகை ஊழியங்கள்

ஆதவன் 🌞 766🌻 மார்ச் 04,  2023 சனிக்கிழமை 

"அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்." ( எபேசியர் 4 : 13 )

திருச்சபையில் அப்போஸ்தல ஊழியம், தீர்க்கதரிசன ஊழியம், சுவிசேஷ ஊழியம், மேய்ப்பர் ஊழியம், போதக ஊழியம் எனும்  ஐந்துவகை ஊழியங்கள் உண்டு என்று இந்த வசனம் கூறுகின்றது. 

ஐந்துவகை ஊழியங்களாய் இருந்தாலும் இவை அனைத்தின் நோக்கமும் ஒன்றே.  ஆனால், இன்று அந்த நோக்கத்தைச் சரியாக    நிறைவேற்றுகின்றார்களோ இல்லையோ ஒவ்வொருவருக்கும் வீண் பெருமைகளுக்கு   மட்டும் குறைவில்லை. 

சரி இந்த ஐந்துவகை ஊழியங்களின் நோக்கம்தான் என்ன? அதனை அப்போஸ்தலரான பவுல் இன்றைய வசனத்தைத் தொடர்ந்து எழுதும்போது கூறுகின்றார். அதாவது, "நாம் குழந்தைகள்போல  பல்வேறு தந்திரமான போதகங்களால் அடிபட்டு அலையாமல் தலையாகிய கிறிஸ்து இயேசுவுக்குள் வளரவேண்டும் என்பதற்காகவே" என்கின்றார்.

"நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்." ( எபேசியர் 4 : 14, 15 )

எனவே இந்த ஐந்து வகை ஊழியமும் ஒரே நோக்கம் கொண்டவையே. இறையியல் கல்லூரியில் படித்த ஒருவர் இந்த நோக்கத்தை நிறைவேற்றாமல் உலக காரியங்களைப் போதிப்பவராக, சமூக மேம்பாடு எனக் கூறிக்கொண்டு பிசாசின் வலையில் வீழ்ந்து கிடக்கலாம்.  சமூக மேம்பாட்டுக்காக ஒருவன் இறையியல் படிக்கத் தேவையில்லை.  அதேசமயம் உண்மையாய் இயேசு கிறிஸ்துவை வாழ்வில் ருசித்து அறிந்தவர் கிறிஸ்துவின் நோக்கத்தை நிறைவேற்றுபவராகஇருக்கக்கூடும்.  

மேலும், இந்த ஐந்து  வகை ஊழியங்களின்  நோக்கமாகிய "தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படி" என்பது நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. அதாவது, கிறிஸ்துவுக்குள் நாம் எல்லாவற்றிலும் வளர வேண்டும்.எல்லாவிதத்திலும் கிறிஸ்துவைப்போலாகவேண்டும். இந்த ஊழியங்களைச் செய்பவர்கள் இதனையே மனதில் கொண்டு செயலாற்றவேண்டும். 

அன்பானவர்களே, ஊழியர்களோ ஊழியங்களோ உயர் பதவிகளோ ஒருவரை மகிமைப்படுத்தாது. அது உலக மக்கள்முன் மதிப்புமிக்கதாக இருக்கலாம். ஆனால், கிறிஸ்து மனிதர்கள் பார்ப்பதுபோல பார்ப்பதில்லை. ஒருவர் மக்களுக்கு எப்படிக் கிறிஸ்துவை அறிவிக்கின்றார், எப்படி கிறிஸ்துவுக்குள் விசுவாசிகள் வளர்ச்சியடைய உதவுகின்றார் என்பதையே அவர் பார்க்கின்றார். அதற்கு இந்த ஐந்து வகை ஊழியம் செய்பவர்களும் கிறிஸ்துவை தனிப்பட்ட விதத்தில் அறிந்தவர்களாக இருக்கவேண்டியது அவசியம். ஆனால் இன்று பெரும்பாலும் இந்த ஊழியங்களைச் செய்பவர்கள் அப்படி இல்லை என்பது வருந்தத்தக்க விஷயம். 

கிறிஸ்துவின் ஊழியத்தைச் செய்யும் இந்த ஊழியர்கள் கிறிஸ்துவையும் சத்தியத்தையும்  அறிந்திடவேண்டி ஜெபிக்கவேண்டியது விசுவாசிகளின் கடமையாக இருக்கின்றது. காரணம்,  இன்று இந்த ஊழியர்களைவிட பல விசுவாசிகள் கிறிஸ்துவை அதிகம் அறிந்தவர்கள்; கிறிஸ்துவோடு அதிக நெருக்கமாக உள்ளவர்கள். ஊழியர்களுக்காக ஜெபிப்போம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Wednesday, March 01, 2023

'ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்"

 ஆதவன் 🌞 765🌻 மார்ச் 03,  2023 வெள்ளிக்கிழமை 

"ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்." ( எபிரெயர் 13 : 15 )

இன்றைய வசனத்தில்,  ஸ்தோத்திரம் செய்வதை உதடுகளின் கனி என்று கூறப்பட்டுள்ளது. நமது உதடுகளால் நாம் பல வேளைகளில் தேவையில்லாத காரியங்களை பேசிவிடுகின்றோம். சிலரது வாயில் எப்போதும் அடுத்தவரைக்குறித்து குறைகூறுவதும் சாபங்களும் புறப்பட்டுவரும். இவை உண்மையில் நம்மை தேவனைவிட்டுப் பிரித்துவிடுகின்றன.   ஆனால் நமது உதடுகள் தேவனைத் துதிக்கப் பழகிவிட்டால்  அது நமக்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாக மாறும். 

சிலவேளைகளில் நாம் ஜெபிக்கமுடியாத அளவுக்குத் துன்பங்களும் பிரச்சனைகளும் நம்மை நெருங்கிவிடுவதுண்டு. அத்தகைய வேளைகளில் நாம் துதிக்கமட்டுமே முடியும். ஆனால் துன்பவேளையில் தேவனைத் துதிக்கும்  அத்தகைய துதி மிகுந்த வல்லமையுள்ளதாக இருக்கும். காரணம், இத்தகைய இக்கட்டிலும்  எனது பிள்ளை என்னை மறக்காமல் இருக்கின்றானே (ளே) என எண்ணுவதுதான்.  இத்தகைய நேரத்தில் தேவன் விரைந்து செயல்படுகின்றார். 

நமது கர்த்தருக்கு ஒரு பெயர், "துதிக்குத் தகுதியுள்ளவர்" என்பது. "ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி இரட்சிக்கப்படுவேன்." ( 2 சாமுவேல் 22 : 4 ) என்று கூறப்பட்டுள்ளது. 

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த பவுலும் சீலாவும் நடு ராத்திரியில் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 16 : 25, 26 )

"கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது." ( சங்கீதம் 147 : 1 ) என்கின்றார் சங்கீத ஆசிரியர். எனவே அவரது படைப்புகளை அனைத்தும் அவரது செயலைத் துதிக்கும் என்று வசனம்  கூறுகின்றது.  "கர்த்தாவே, உம்முடைய கிரியைகளெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மை ஸ்தோத்திரிப்பார்கள்." ( சங்கீதம் 145 : 10 )

அன்பானவர்களே, துன்பங்கள், மனச் சோர்வுகள் ஏற்படும்போது, ஜெபிக்கமுடியாத தருணங்கள் ஏற்படும்போது வேறு எதுவும் செய்யவேண்டாம், ஸ்தோத்திரம் சொன்னாலே போதும். கர்த்தர் மிகப்பெரிய விடுதலையினைத் தருவார். சங்கீதம் 136 துதியின்  சங்கீதமாகும். அதில் 23 ஆம் வசனம்  கூறுகின்றது, "நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது." ( சங்கீதம் 136 : 23 ) 

ஆம், தாழ்வில் நம்மை நினைக்கின்ற அருமையான கர்த்தர் நமக்குண்டு. அவரையே துதிப்போம். மேலும் நமது ஜெபங்களில் ஸ்தோத்திரபலிக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டியது அவசியம். அப்போஸ்தலனாகிய பவுல் அடிகள் இப்படியே ஜெபித்தார். எனவேதான் அவர் கூறுகின்றார், "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்." ( கொலோசெயர் 1 : 5 ) என்று.

அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம். 'ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்" ( சங்கீதம் 50 : 23 ) என்கின்றார் பரிசுத்தராகிய கர்த்தர்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Tuesday, February 28, 2023

பாலைவனச் சோலைபோல.....

ஆதவன் 🌞 764🌻 மார்ச் 02,  2023 வியாழக்கிழமை 

"கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்." ( ஏசாயா 58 : 11 )

கர்த்தருக்கு நம்மை ஒப்புக்கொடுத்து அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது கிடைக்கும் மேலான ஆசீர்வாதத்தை இன்றைய வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது. 
 
கர்த்தருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது, கர்த்தரே நம்மை நடத்துவார். நமது வாழ்க்கை தேவனால் நடத்தப்படுகின்ற  வாழ்க்கையாக இருக்குமானால் நாம் எதனைப்பற்றியும் கவலையோ நிம்மதியின்மையோ படமாட்டோம்.  ஆம், அவரே நமது வறட்சியான காலங்களில் நமது ஆத்துமாவைத் திருப்தியாகி நமது எலும்புகளை வலிமையுள்ளவையாக்குவார். 

மிகக் கொடிய பாலைவனத்திலும் சில இடங்கள் செழிப்புள்ளதாக இருக்கும். அவைகளைப் பாலைவனச் சோலை என்பார்கள். அன்பானவர்களே, நாம் கர்த்தரைச் சார்ந்து வாழும்போது எத்தகைய கொடிய துன்பங்கள், வருத்தங்கள் நமக்கு வந்தாலும் பாலைவனச்  சோலைபோல துன்பங்களுக்கிடையிலும் நமது ஆத்துமாவுக்கு  இனிய இளைப்பாறுதல் உண்டு.

இன்று அப்படி கர்த்தருக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்பவர்களைப்பார்த்துக்   கர்த்தர் கூறுகின்றார், "நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்." என்று.

உலகத்தில் தேவனற்று வாழும் பெரிய செல்வந்தர்களை நாம் பார்க்கின்றோம். புகழும் பணமும் அதிகமுள்ள பல மனிதர்களை பார்க்கின்றோம். ஆனால் அவர்களது வாழ்க்கை இருளானதாக, நிம்மதியற்றதாக, மெய்யான செழிப்பு இல்லாததாக இருக்கக் காண்கின்றோம். சமாதானமற்ற வாழ்க்கைதான் பலருக்கு. எனவேதான் குடியிலும், இதர பாவச் செயல்களிலும் ஈடுபட்டு பலர் எந்த நிம்மதியுமின்றி தற்கொலை செய்து மடிகின்றனர். 

கர்த்தருக்கு ஏற்புடையவன் அவருக்கேற்ற காரியங்களைச் சிந்திப்பான், அவரது வார்த்தைகளைத் தியானிப்பான். அப்படிக் கர்த்தரது  வார்த்தைகளை ஒருவன் இரவும் பகலும் தியானித்து வாழ்வானானால்,  "அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்." ( சங்கீதம் 1 : 3 ) என்று வசனம் கூறுகின்றது.

அன்பானவர்களே, வேத வசனங்கள் தேவனால் அனுப்பப்பட்டவை. அந்த வார்த்தைகள் பொய்ச்சொல்லாது. அவற்றை விசுவாசிக்க வேண்டும். அப்படி விசுவாசித்து அவருக்கேற்ற வாழ்க்கை வாழ்ந்து அவரது வார்த்தைகளைத் தியானித்து வாழ்வாக்கும்போது இன்றைய வசனம் கூறும் ஆசீர்வாதம் நமக்கு உண்டு. கர்த்தர் நித்தமும் நம்மை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் நமது ஆத்துமாவைத் திருப்தியாக்கி, நமது எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நாம் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்போம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Monday, February 27, 2023

நமது பாவங்களை, முதுகுக்குப் பின்னாக எறிந்துவிடுகின்றார்.

ஆதவன் 🌞 763🌻 மார்ச் 01,  2023 புதன்கிழமை 

"உங்கள் பொல்லாத வழிகளுக்குத்தக்கதாகவும், உங்கள் கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் நான் உங்களுக்குச் செய்யாமல், என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்." ( எசேக்கியேல் 20 : 44 )

தேவன் நமது பாவங்களை நினைப்பாரானால் நம்மில் ஒருவருமே அவர்முன் நிற்க  முடியாது. ஏனெனில்  மனிதர்கள் நாம் அனைவருமே பாவம்செய்து தேவ மகிமையை இழந்தவர்கள்தான். ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையினால் பாவங்கள் கழுவப்பட்டு மீட்பு அனுபவத்தைப் பெறுகின்றோம். இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,  இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்" ( ரோமர் 3 : 23, 24 ) என்று குறிப்பிடுகின்றார். 

இன்றைய தியானத்துக்குரிய வசனமும்  இதனையே, "உங்கள் பொல்லாத வழிகளுக்குத்தக்கதாகவும், உங்கள் கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் நான் உங்களுக்குச் செய்யாமல், என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்." என்று குறிப்பிடுகின்றது. அதாவது நமது பாவங்கள்மன்னிக்கப்படும்போதுதான் நாம் கர்த்தரை அறிய முடியும்.  

இந்த உலகத்தில் நமக்கு  ஒருவரது தவறோ கெட்ட குணமோ தெரிய வருமானால் அதனையே பிறரிடம் கூறிக்கொண்டிருப்போம். மட்டுமல்ல அந்த மனிதனைப் பார்க்கும்போது நாம் கேள்விப்பட்ட அவரது பாவ காரியமே நமக்கு நினைவில் வரும். ஆனால் நமது தேவன் பாவத்தை மன்னிக்கிறவர் மட்டுமல்ல அவற்றை மறந்துவிடுகின்றவர்.   நாம் மனம்திரும்பி அவரிடம் வந்தபின்பு மீண்டும் மீண்டும் அதனை நினைவுகூரமாட்டார். "நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்." ( எரேமியா 31 : 34 ) என்கின்றார்.

தேவன் நமது பாவங்களை மன்னிக்கும்போது, "மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்குகின்றார். ( சங்கீதம் 103 : 12 ) நமது பாவங்களை, "முதுகுக்குப் பின்னாக எறிந்துவிடுகின்றார்."( ஏசாயா 38 : 17 )

தேவன் நமது பாவங்களை மன்னிக்கும்போது நாம் அவரை அறிந்துகொள்கின்றோம். அவர் நமது பாவங்களை மறந்துவிடுகின்றார். ஆனால் பாவியாகிய நமக்கு நமது பழைய வாழ்க்கை நினைவில் இருக்கும். நமது பாவங்கள் நினைவில் இருக்கும். "ஐயோ,, நான் எவ்வளவு பெரிய பாவியாக இருந்திருக்கிறேன் என்று உணரும்போதும் இவ்வளவு பெரிய பாவியாகிய என்னை மன்னித்துத் தன்னை எனக்கு வெளிப்படுத்தியுள்ளாரே  என்று எண்ணும்போது அவரிடம் நமது அன்பு அதிகரிக்கும். அப்போது நாம் கர்த்தரையும் அவரது அன்பையும் அதிகமாக அறிந்துகொள்ள முடியும். 

நமது பாவங்களுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைக்குமானால் நாம் அவரை அறிய  முடியாது. எனவேதான் நாம் இந்த உலகத்தில் பாவ வாழ்க்கை வாழும் பலரும் தண்டனை அடையாமல் இருப்பதைப் பார்க்கின்றோம். நாம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு கிறிஸ்துவை அறிந்துகொண்டதுபோல அவர்களும் ஒருநாளில் கிறிஸ்துவை அறியலாம். 

"பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன்". ( மத்தேயு 9 : 13 ) என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712