இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Sunday, August 11, 2024

Deaf and Dumb

 


“Thus, I was as a man that heareth not, and in whose mouth are no reproofs. For in thee, O LORD, do I hope: thou wilt hear, O Lord my God.”( Psalms 38 : 14, 15 )

This verse is taken from a psalm called a psalm of remembrance by David. If we look at why David sang this song, many people tried to take his life. Especially Saul, Saul's commanders, and David's own son were waiting to kill David like this.

But I am like a deaf and dumb person who does not care about any of these things, says David. The reason is because David believed that the Lord would answer them. Therefore, says David, I am like a man who is deaf and has no words in his mouth. That is, it can be said that this is an expression of David's faith in God.

And in the two verses preceding these verses, he says, “They also that seek after my life lay snares for me: and they that seek my hurt speak mischievous things, and imagine deceits all the day long. But I, as a deaf man, heard not; and I was as a dumb man who did not open his mouth. (Psalms 38: 12, 13)

Yes, beloved, if we remain silent when some act against us, the world may call us cowards and helpless, but as David says, if we remain deaf and dumb and wait on the Lord, the Lord will answer for us. Then the response of the Lord to the enemies will be very severe.

The Israelites were afraid of Pharaoh's forces trying to destroy the Israelites. Then Moses said to them, “Fear ye not, stand still, and see the salvation of the LORD, which he will shew to you today: for the Egyptians whom ye have seen today, ye shall see them again no more for ever. The LORD shall fight for you, and ye shall hold your peace”. (Exodus 14: 13, 14) Similarly, we read in the scriptures that Pharaoh's destruction was very severe.

The same thing happens in our lives. Yes, dear ones, this is the truth that I have experienced and known. “Dearly beloved, avenge not yourselves, but rather give place unto wrath: for it is written, Vengeance is mine; I will repay, saith the Lord.” (Romans 12: 19) the apostle Paul says.

“For we know him that hath said, Vengeance belongeth unto me, I will recompense, saith the Lord. And again, The Lord shall judge his people.” (Hebrews 10: 30) So when some people act against us, let us remain mute and deaf and wait for the Lord to answer.

Bro. M. Geo Prakash

கண்ணீர் சிந்தாதே, உன் செயல்களுக்கு பலன் உண்டு

 'ஆதவன்' ஆகஸ்ட் 18, 2025. ஞாயிற்றுக்கிழமை 💚   வேதாகமத் தியானம் - எண்:- 1,287   

"நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலனுண்டென்று கர்த்தர் சொல்லுகிறார்". (எரேமியா 31:16)

ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்ந்தும் பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் மக்கள் பலர் உண்டு. ஆம், சில வேளைகளில் நாம் எவ்வளவுதான் உண்மையும் உத்தமுமான வாழ்க்கை வாழ்ந்தாலும் நெருக்கடிகளும் பாடுகளும் நம்மைத் துரத்துவதுண்டு. யோபுவின் வாழ்க்கையைப் பாருங்கள், "அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்." (யோபு 1:1) என்று வாசிக்கின்றோம். 

ஆனால் யோபு பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளானார். '..ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது. சர்வவல்லவரின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாய் நிற்கிறது." ( யோபு 6 : 3, 4 ) என்று அவர் புலம்பினார். அவரது நண்பர்கள் யோபுவின் துன்பத்துக்குக்  காரணம் அவர்தான்;  அவரது பாவம்தான் என்று அவர்மேல் பழிசுமத்தினார்கள்.  ஆனால், இறுதியில் அவரது நண்பர்களைத் தேவன் கடிந்துகொண்டதை நாம் வாசிக்கின்றோம். 

ஆம், ஆவிக்குரிய வாழ்வில் வரும்  சில துன்பங்கள் நம்மால் புரிந்துகொள்ளமுடியாதவை.  ஆனால் தேவன் நமது கண்ணீரைப் பார்க்கின்றார். அதனை அவர் புறக்கணிப்பதில்லை. எசேக்கியா ராஜா நோய்வாய்ப்பட்டபோது  "ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்." ( 2 இராஜாக்கள் 20 : 3 ) என்று கூறப்பட்டுள்ளது. எசேக்கியா தேவனுக்காக   வைராக்கியம்கொண்டு பல நல்ல செயல்களைச் செய்தவர்தான். 

இதுபோலவே இன்று நாம் ஆவிக்குரிய வாழ்வைச் சிறப்பாக வாழ்ந்துகொண்டிருந்தாலும் துன்பங்கள் வருமானால் நம்மைப்பார்த்தும் தேவன் சொல்கின்றார், "நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்; உன் கிரியைக்குப் பலனுண்டு"

நேர்மையாக வாழ்பவர்களின் கண்ணீரைத் தேவன் புறக்கணிப்பதில்லை.  பிளவை நோய் முற்றியதால் ஏசாயா தேவ அறிவிப்புப்  பெற்று   எசேக்கியா ராஜாவிடம்  "நீர் உயிர் பிழைக்கமாட்டீர், எனவே உமது வீட்டின்  காரியங்களை ஒழுங்குபடுத்தும்"  என்று கூறினார்.  ஆனால், "ஏசாயா பெரிய தீர்க்கதரிசியல்லவா? அவரே கூறிவிட்டாரே இனி நான் பிழைக்கமாட்டேன்" என்று எசேக்கியா எண்ணவில்லை; மனம் தளரவில்லை. 

நமது தேவனிடம் இரக்கங்கள் உண்டு எனபதனை உணர்ந்திருந்த எசேக்கியா தேவனை நோக்கிக் கண்ணீருடன் விண்ணப்பித்தார்.  எசேக்கியாவின் நற்செயல்களை அறிந்திருந்த தேவன்,  "உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய். உன் நாட்களோடே பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன்." ( 2 இராஜாக்கள் 20 : 5, 6 ) என்று வாக்களித்து அதனை நிறைவேற்றினார். 

ஆம் அன்பானவர்களே, "அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலனுண்டு" என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                              

Friday, August 09, 2024

புதிய ஏற்பாட்டுக்கால கண்டுபிடிப்புகள் சில

கப்பர்நாகூமில் உள்ள ஜெப ஆலயம் 

இயேசு பேசி அற்புதம் செய்த முதல் நூற்றாண்டு யூத ஜெப ஆலயத்தின் எச்சங்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. ஜெப ஆலயம் அவருடைய பொது ஊழியத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. 19 ஆம் நூற்றாண்டில் சர் சார்லஸ் வாரன் என்பவரால் இந்த தளம் முதலில் கண்டறியப்பட்டது. மேலும் ஆராய்ச்சி அதன் அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளது.



கயபாவின் எலும்புக்கூடு 

1990 ஆம் ஆண்டில், ஒரு கட்டுமானக் குழு ஜெருசலேமுக்கு அருகே நீர் பூங்காவைக் கட்டிக்கொண்டிருந்தது, அவர்களின் புல்டோசர் தோண்டியபோது முதல் நூற்றாண்டு கல்லறையின் கூரை கண்டுபிடிக்கப்பட்டது.  தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வரவழைக்கப்பட்டு, ஆராய்ந்துபார்த்ததில்  "காய்பாவின் மகன் ஜோசப்" என்று பொறிக்கப்பட்ட ஒரு அலங்கரிக்கப்பட்ட எலும்பு உட்பட பலவிதமான எலும்புக்கூடுகள் (முதல் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட எலும்புப் பெட்டிகள்) கண்டுபிடிக்கப்பட்டன. 60 வயது முதியவரின் எலும்புகள் உட்பட ஆறு பேரின் எலும்புகள் உள்ளே இருந்தன, அவை கயபாவின் எச்சங்கள் என்று அறிஞர்கள் நம்புகிறார்கள்.

நற்செய்திகளின்படி இயேசுவின் விசாரணைக்கு தலைமை தாங்கிய தலைமைக் குரு கயபா ஆவார் (மத் 26:3, 57; லூக்கா 3:2; யோவான் 11:49). பழங்கால வரலாற்றாசிரியரான ஜோசஃபஸ், கயபாஸின் முழுப் பெயர் ஜோசப் கயபாஸ் என்றும், கி.பி. 18-36 வரை அவர் இந்தப் பதவியை வகித்தார் என்றும் பதிவு செய்கிறார். ஏரோதின் பல மகன்கள் ஏரோது (அதாவது. ஹெரோட் ஆன்டிபாஸ், ஹெரோட் ஆர்கெலாஸ், முதலியன) என்று அழைக்கப்பட்டதைப் போலவே, அவர் தனது குடும்பப்பெயர் / குடும்பப் பெயரான காய்பாஸ் மூலம் பரவலாக அறியப்பட்டதாகத் தெரிகிறது.

இது இயேசுவின் விசாரணையில் முக்கிய பங்கு வகித்த பிரதான ஆசாரியரின் எலும்புக்கூடு என்று பல அறிஞர்கள் நம்புகிறார்கள். அவரது எலும்புக்கூடு மற்றும் உடல் எச்சங்கள் புதிய ஏற்பாட்டில் ஒரு முக்கிய நபரின் இருப்பை உறுதிப்படுத்தும் தொல்பொருள் சான்றுகளை வழங்குகின்றன. கயபாவின் எலும்புக்கூடு தற்போது ஜெருசலேமில் உள்ள இஸ்ரேல் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.


சிலோவாம் குளம் 

சிலோம் பழைய ஏற்பாட்டுக் காலத்தைச் காலத்தைச் சார்ந்தது (ஏசா 8:6 & 22:9-11), மேலும் குருடனாகப் பிறந்த ஒரு மனிதனை இயேசு குணப்படுத்தியதைப் பற்றிய நன்கு அறியப்பட்ட செய்தியின் இருப்பிடமும் இதுவாகும். (யோவான் 9:1-12)  இது 2004 இல் ஜெருசலேமில் இஸ்ரேலிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் எலி ஷுக்ரோனால் கண்டுபிடிக்கப்பட்டது, தொழிலாளர்கள் கழிவுநீர் பாதையை நிறுவும் போது இதனைக் கண்டுபிடித்தனர்.



Thursday, August 08, 2024

கிதியோன் பெயர் பொறித்த மட்பாண்டஓடு

கிர்பெட் எர்-ராயின் இந்த ஆஸ்ட்ராகான் எழுத்து ஜெருபால் (Jerubbaal) என்ற பெயரைக் கொண்டுள்ளது, விவிலிய நியாயாதிபதி கிதியோனுக்கு வழங்கப்பட்ட அதே புனைப்பெயர். (புகைப்படம்: Dafna Gazit / இஸ்ரேல் தொல்பொருள் ஆணையம்)

பழங்கால நகரமான லாச்சிஷுக்கு அருகில் அமைந்துள்ள கிர்பத் எர்-ராயில் யெருபாகால் (ஜெருபால்) என்ற பெயரைக் கொண்ட ஒரு ஆஸ்ட்ராகான் எழுத்து கொண்ட  மட்பாண்ட ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யெருபாகால் என்பது பாகாலின் பலிபீடத்தை அழித்தபின் கிதியோனுக்கு வழங்கப்பட்ட புனைப்பெயர் (நியாயாதிபதிகள் 6:32). ரேடியோகார்பன் டேட்டிங் அடிப்படையில் அது கண்டுபிடிக்கப்பட்ட அதே தொல்பொருள் அடுக்கில் இருந்து எடுக்கப்பட்ட கரிம மாதிரிகள் சோதிக்கப்பட்டதில் இவை வேதாகமம் கூறும் காலத்துக்கு ஒத்தவையாக உள்ளன. யெருபாகால் என்ற பெயர் வேதாகமத்தில் கிதியோனுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.  மேலும் இது தொல்பொருள் சூழலில் முதல் கண்டுபிடிப்பு ஆகும். பெயரின் தனித்தன்மை மற்றும் அரிதான தன்மை காரணமாக, சில அறிஞர்கள் இது கிதியோனைக் குறிப்பதாக நம்புகின்றனர். மற்றவர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். ஆனால் இந்தக்  கண்டுபிடிப்பு குறிப்பிடத்தக்கது, இது வேதாகமம் விவரிக்கும் காலத்தில் யெருபாகால் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது.

திருவசனமாகிய ஞானப்பால்

 'ஆதவன்' 💚ஆகஸ்ட் 17, 2025. 💚சனிக்கிழமை 💚     வேதாகமத் தியானம் - எண்:- 1,286   


"நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்." ( 1 பேதுரு 2 : 3 )

சிறு குழந்தைகள் பாலைத்தவிர வேறு எதனையும் உணவாக உட்கொள்வதில்லை. ஆனால் அப்படிப் பாலை உட்கொண்டுதான் அவை வளர்கின்றன. தேவனை அறியும் அறிவில் வளருவதும் இப்படித்தான். நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளரவேண்டுமானால் தேவனுடைய வார்த்தைகளை நாளும் உட்கொள்பவர்களாக இருக்கவேண்டும். 

"புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்." என்கின்றார் அப்போஸ்தலராகிய பேதுரு. திருவசனத்தை களங்கமில்லாத ஞானப்பால் என்று குறிப்பிடுகின்றார். வசனம்தான் பாலேத்தவிர வசனத்துக்கு அளிக்கப்படும் எல்லா விளக்கங்களும் பால் என்று நாம் கொள்ளமுடியாது. 

ஆனால் இன்று திருவசனமாகிய இந்த ஞானப்பாலினை விசுவாசிகள் உட்கொள்ளாதபடி பல உண்மையில்லாத ஊழியர்களைச் சாத்தான் பயன்படுத்துகின்றான்.  எனவே அவர்கள் தேவ வார்த்தைகள் கூறும் மெய்யான பொருளை மக்களுக்குப் போதிக்காமல் அனைத்து வேத வசனங்களுக்கும் உலக ஆசீர்வாத பொருள்கொண்டு விசுவாசிகளை வஞ்சித்து வைத்துள்ளார்கள்.

ஆதவன் தினசரி தியானத்தில் நான் அடிக்கடி வலியுறுத்துவது என்னவென்றால் ஆலய ஆராதனைகளில் கலந்துகொண்டு அங்கு அளிக்கப்படும் செய்திகளை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டாம் என்பதுதான். ஆதவன் செய்திகளைக்கூட நீங்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நான் கூறுவதில்லை. யார் என்ன சொன்னாலும் அதனை வேத வெளிச்சத்தில் ஆவியானவரின் துணையோடு ஆராய்ந்துபாருங்கள். தேவையில்லாத, வேதத்துக்குப் புறம்பான போதனைகளை யார் சொன்னாலும் அவைகளை விட்டு விலகுங்கள்.  

இன்று அதிக கூட்டம் சேர்க்கும் பிரபல ஊழியர்கள் பலரும் வேத வசனங்களுக்கு மெய்யான பொருளைக் கூறுவதுமில்லை மக்களை சத்தியத்துக்கு நேராக நடத்துவதுமில்லை. எனவே அத்தகைய ஊழியர்களைப் பின்பற்றும் பலரும் ஆவிக்குரிய எந்த வளர்ச்சியுமின்றி சாதாரண உலக மனிதர்களைப்போலவே இருக்கின்றனர். 

திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருக்கும் மனிதர்கள் இயல்பிலேயே சத்தியத்தைத் தேடுபவர்களாக இருப்பார்கள்.  அவர்கள் ஆவிக்குரிய வாழ்வில்  வளருவார்கள். மற்றவர்களோ, எதெற்கெடுத்தாலும், "எங்கள் பாஸ்டர் சொன்னார்.... கன்வென்சன் கூட்டத்தில் பேசக் கேட்டேன் .." என்று கூறிக்கொண்டு தேவனுக்கும் தங்களுக்கும் தனிப்பட்டத் தொடர்பின்றி வாழ்பவர்களாக இருப்பார்கள். 

ஆம் அன்பானவர்களே, நாம் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். அப்போதுதான்  வேதாகமத்தை நாம் வாசிக்கும்போது ஆவியானவர் நம்மோடு பேசுவதையும் பல ஆவிக்குரிய சத்தியங்களை நமக்கு உணர்த்துவதையும் நாம் அனுபவிக்கமுடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

இயேசு குழந்தைப்பருவத்தில் செய்த அற்புதம்

ல நூறு ஆண்டுகளாக பாப்பிரஸ் துண்டு ஒன்று 1011 ஹாம்பர்க் கார்ல் வான் ஒசிட்ஸ்கி மாநிலம் மற்றும் பல்கலைக்கழக நூலகத்தின் காப்பகத்தில்  கவனிக்கப்படாமல் கிடந்தது. இந்த பாப்பிரஸ் துண்டு சமீபத்தில் ஹம்போல்ட்-யுனிவர்சிட்டாட் ஜூ பெர்லினில் இருந்து பாப்பிராலஜிஸ்டுகள் டாக்டர் லாஜோஸ் பெர்க்ஸ் மற்றும் பெல்ஜியத்தின் லீஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கேப்ரியல் நொச்சி மாசிடோ ஆகியோரால் புனித தாமஸின் நற்செய்தியின் ஆரம்பகால நகல் என அடையாளம் காணப்பட்டது.

கி.பி 2 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட புனித தாமஸின் நற்செய்தி, பைபிள் அபோக்ரிபாவின் ஒரு பகுதியாகும், இது நியமன பைபிளில் சேர்க்கப்படாத நூல்களின் தொகுப்பாகும். 

ஹம்போல்ட்-யுனிவர்சிட்டட்டில் உள்ள இறையியல் சங்கத்தின் விரிவுரையாளரான டாக்டர் பெர்க்ஸ் கூறுகையில், "இந்த பாப்பிரஸ் துண்டு ஆராய்ச்சிக்கு அசாதாரண ஆர்வத்தை கொண்டுள்ளது. இந்த துண்டு 4 முதல் 5 ஆம் நூற்றாண்டுக்கு முன்னுள்ளது. கிரேக்க மொழியில் எழுதப்பட்ட அசல் உரையுடன் அதன் சீரமைப்பு ஒத்துபோகின்றது. இது நற்செய்தியின் ஆரம்பகால இருப்பு மற்றும் பரவல் பற்றிய முக்கிய ஆதாரங்களை வழங்குகின்றது, இந்த கண்டுபிடிப்பு புனித தாமஸின் நற்செய்தி முதலில் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது என்ற தற்போதைய அறிவார்ந்த மதிப்பீட்டை ஆதரிக்கிறது.

உத்தேசமாக 11 x 5 சென்டிமீட்டர்கள் (4.3 x 2 அங்குலம்) அளவுள்ள இந்த பாப்பிரஸ் துண்டு, ஒரு வரிக்கு பத்து எழுத்துக்களைக் கொண்ட பதின்மூன்று வரிகள் கிரேக்க உரையைக் கொண்டுள்ளது. இது பழங்கால எகிப்தின் பிற்பகுதியில் உருவானது மற்றும் அதன் உள்ளடக்கம் முக்கியமற்றதாகத் தோன்றியதால் (ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட ஆவணத்தின் ஒரு பகுதியாகத் தோன்றியதால்) ஆரம்பத்தில் கவனிக்கப்படவில்லை.

"இது ஒரு தனிப்பட்ட கடிதம் போன்ற அன்றாட ஆவணத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது, ஏனெனில் கையெழுத்து மிகவும் விகாரமாக தெரிகிறது," என்று டாக்டர் பெர்க்ஸ் விளக்குகிறார்.

"இயேசு" என்ற வார்த்தை உரையில் அடையாளம் காணப்பட்டபோது திருப்புமுனை ஏற்பட்டது. மேலும் எண்ணற்ற டிஜிட்டல் பாப்பிரிகளுடன் ஒப்பிடுகையில், ஆராய்ச்சியாளர்கள்  அதன் உண்மையான தன்மையை வெளிப்படுத்தினர். இதில் குறிப்பிடப்பட்டுள்ள "கூவுதல்" மற்றும் "கிளை" போன்ற முக்கிய சொற்களைப் பயன்படுத்தி, அவர்கள் பிற ஆரம்பகால கிறிஸ்தவ நூல்களை குறுக்கு-குறிப்பிட்டு, இதனை புனித தாமஸின் நற்செய்தியின் நகலாக உறுதிப்படுத்தினர். 

இந்தப் பாப்பிரஸ்  துண்டின் உள்ளடக்கம் புனித தாமஸின் நற்செய்தியில் விவரிக்கப்பட்டுள்ள இயேசுவின் குழந்தைப் பருவத்திலிருந்து ஒரு அத்தியாயத்தைச் சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக, அவரது நற்செய்தியில் இரண்டாவது அதிசயமாகக் கருதப்படும் "சிட்டுக்குருவிகளின் உயிர்ப்பித்தல்" தொடக்கத்தை இது விவரிக்கிறது. இந்த அத்தியாயத்தில், இளம் இயேசு களிமண்ணிலிருந்து பன்னிரண்டு சிட்டுக்குருவிகள் வடிவமைத்து, ஒரு ஓடையின் அருகே விளையாடுகிறார். ஓய்வுநாளில் இதைச் செய்ததற்காக அவருடைய தந்தை ஜோசப் அவரைக் கண்டித்தபோது, ​​இயேசு கைதட்டி களிமண் உருவங்களை உயிர்ப்பிக்கிறார்.

விகாரமான கையெழுத்து மற்றும் ஒழுங்கற்ற கோடுகள் காரணமாக, இந்த நற்செய்தி நகல் ஒரு பள்ளி அல்லது மடாலயத்தில் எழுதும் பயிற்சிக்காக உருவாக்கப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இத்தகைய நடைமுறைகள் கல்வி நோக்கங்களுக்காக பழங்காலத்தில் பொதுவானவை, இந்த துண்டு மத முக்கியத்துவத்தை வைத்திருப்பது மட்டுமல்லாமல், அந்தக் காலத்தின் கற்பித்தல் முறைகளைப் பற்றிய ஒரு பார்வையையும் வழங்குகிறது.

இந்த பாப்பிரஸ் துண்டின் கண்டுபிடிப்பு விவிலிய அறிஞர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்களுக்கு ஒரு மைல்கல் ஆகும், இது கிறிஸ்தவ நூல்களைச் சுற்றியுள்ள ஆரம்பகால பரிமாற்றம் மற்றும் கல்வி நடைமுறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இது ஆரம்பகால கிறிஸ்தவ இலக்கியத்தின் ஆற்றல்மிக்க தன்மையையும் பல்வேறு பகுதிகள் மற்றும் காலகட்டங்களில் அதன் பரவலையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Wednesday, August 07, 2024

"தேவன் நம்மை பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்."

 'ஆதவன்' ஆகஸ்ட் 16, 2024. வெள்ளிக்கிழமை 💚        வேதாகமத் தியானம் - எண்:- 1,285   

"நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து....." ( 1 தெசலோனிக்கேயர் 4 : 3 )

தேவன் நம்மை உலகத்தில் படைத்தது வெற்று வாழ்க்கை வாழ்வதற்கல்ல; மாறாக அவரைப்போல நாமும் பரிசுத்தராக வாழவேண்டும் என்பதற்காகவே.  உலக உதாரணம்கொண்டு இதனை நாம் புரிந்துகொள்ளலாம். ஒரு புகழ் பெற்ற மருத்துவர் ஒருவர் இருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். அவர் தனது மகனும் தன்னைப்போல ஒரு சிறந்த மருத்துவராகவேண்டும் என்றுதான் விரும்புவார். அந்த மகனுக்காகப்  பல முன்னேற்பாடுகளைச்  செய்துவைப்பார்.   

அதுபோலவே தேவனும் தன்னைப்போன்ற பரிசுத்தமுள்ளவர்களாக நாம் மாறவேண்டும் என்று விரும்புகின்றார். நாம் பரிசுத்தமாய் வாழ்வதற்கு உதவியாக பரிசுத்த ஆவியானவரை ஏற்பாடுசெய்துள்ளார். ஆம் அன்பானவர்களே, "தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்." ( 1 தெசலோனிக்கேயர் 4 : 7 )

நாம் தொடர்ந்து ஆவியானவரின் விருப்பத்துக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருப்போமானால் நாம் அவரை அசட்டைப் பண்ணுகின்றோம் என்று பொருள். எனவே தான் அப்போஸ்தலரான பவுல்,   "ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்." ( 1 தெசலோனிக்கேயர் 4 : 8 ) என்று கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, நாம் பரிசுத்தக் கேடான வாழ்க்கை வாழும்போது "நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது..." எனும் வசனத்தை நாம் மீறுபவர்களாக இருப்போம்; தேவ சித்தத்தை மீறுகின்றவர்களாக இருப்போம். 

இன்றைய தியான வசனம்,  "அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து....." என்று கூறுகின்றது.  அதாவது விபச்சார பாவத்தையே பரிசுத்தக் கேட்டுக்கு ஒரு உதாரணமாக இந்த வசனம் கூறுகின்றது. தேவன் அருவருக்கும் இரண்டு பாவங்கள் விபச்சாரம் மற்றும் விக்கிரக ஆராதனை.  விக்கிரக ஆராதனை என்பது சிலைகளை வணங்குவது மட்டுமல்ல, தேவனுக்கு அளிக்கும் முன்னுரிமையை உலகப் பொருட்களுக்குக் கொடுப்பதும் விக்கிரக ஆராதனையே. 

எனவே நாம் இவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கும் போது பரிசுத்தத்தை மீறுகின்றோம் என்று பொருள். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "விபச்சாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே."( எபேசியர் 5 : 5 ) என்று எச்சரித்துக் கூறுகின்றார். தேவன் விரும்பும் பரிசுத்தத்தைக் காத்துக்கொள்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்            

சுதந்திரம்

'ஆதவன்' 💚ஆகஸ்ட் 15, 2024. வியாழக்கிழமை 💚     வேதாகமத் தியானம் - எண்:- 1,284


"கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்." ( சங்கீதம் 16 : 5 )

அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்களைக் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.  

சுதந்திரம் என்பதற்குப் பலரும் பல்வேறு பொருள் கொள்ளலாம். பொதுவாக நாம் எண்ணியத்தைச் செய்யும் உரிமை நமக்கு இருக்குமானால் அதுவே சுதந்திரம் என்று பலரும் கூறுவார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியக் குடிமக்களுக்குப் பல்வேறு உரிமைகளைக் கொடுத்துள்ளது. அந்த உரிமைகளில் பல நாம் ஆங்கிலேயரது ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதால் நமக்கு உரிமையானவை. 

அதுபோலவே ஆவிக்குரிய வாழ்விலும் நமக்குச் சில சுதந்திரங்கள் உண்டு. இன்றைய தியான வசனத்தில் தாவீது ராஜா, "கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்." என்று கூறுகின்றார். அதாவது, நமது வீட்டில் நாம் அனுபவிப்பதுபோல கர்த்தரும் நம்மோடு இருந்து நம்மில் சுதந்திரமாகச் செயல்படுபவர் என்று பொருள். பாத்திரத்தின் பங்கு என்று கூறும்போது,  ஒரே வீட்டில் குடியிருப்போர் ஒரே பாத்திரத்தில் சமைத்துப் பங்கிட்டு உண்பதுபோல அனைத்துக் காரியங்களிலும் கர்த்தர் நம்மோடு குடியிருக்கும் குடும்ப உறுப்பினர் போன்றவர் என்று பொருள். 

தாவீது கூறுவதுபோல நாம் கர்த்தரை நமது சுதந்திரத்தைக் காப்பவராகவும் நம்மோடு நமது வீட்டில் வசிப்பவராகவும் கருதிச் செயல்படுகின்றோமா?  சிந்தித்துப்பார்ப்போம். அப்படி இல்லையானால் இனியாவது அப்படி இருக்க முயற்சிச் செய்வோம். 

அடுத்து, "என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்" என்று கூறப்பட்டுள்ளது. ஆம் நமது நாட்டில் நமக்குள்ள உரிமைகளை தேவனே காப்பாற்றுகின்றார்.  கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழும்பியுள்ள பல்வேறு அமைப்புகளும் மக்களும் எந்த நாளைவிடவும் இப்போது அதிகம். ஆனால் அவர்களால் நமக்கு எதிராக முற்றிலுமாகச் செயல்படமுடிவதில்லை. காரணம், நமது சுதந்தரத்தை தேவனே காப்பாற்றுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, இப்போது மட்டுமல்ல கிறிஸ்தவத்தின் ஆரம்ப நாட்கள் முதல் பல்வேறு அரசுக்கள், ராஜாக்கள் கிறிஸ்தவத்தை அழிக்க முயன்று ஆழிந்துபோயுள்ளனர். வேறு எந்த மதத்தையும்விட கிறிஸ்தவ மார்க்கத்துக்கு எதிரிகள் அதிகம். ஆனாலும் இன்றும் கிறிஸ்தவம் வளர்ந்துகொண்டிருக்கிறது. காரணம், கர்த்தர்  நம் சுதந்தரத்தை காப்பாற்றுகிறார் என்பதால்தான். 

மேலும், பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடைவதே வேதாகம அடிப்படையில் நாம் அடையும் ஆவிக்குரிய சுதந்திரம்.  நாம் பாவம் செய்யும்போது பாவத்துக்கு அடிமைகளாகின்றோம். பாவத்திலிருந்து முழு விடுதலை அளிக்கத்   தேவனது ஆவியினால்தான் முடியும். ஆம், "கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு." ( 2 கொரிந்தியர் 3 : 17 )

நாம் யாரை நம்முன்  வைத்துள்ளோம்? நமது குடும்பத்தில் கர்த்தரை ஒரு உறுப்பினராகக் கொண்டுள்ளோமா? பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுபட பரிசுத்த ஆவியானவர் நம்மில்  செயல்பட அனுமதிக்கின்றோமா? சிந்திப்போம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Tuesday, August 06, 2024

போரடிக்கிற புதிதும் கூர்மையுமான இயந்திரம்

 ✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 14, 2024. 💚புதன்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,283   

"உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்." ( ஏசாயா 41 : 12 )

பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் அதிக வித்தியாசம் உண்டு. இன்றைய வசனத்துக்கு நாம் பழைய ஏற்பாட்டு முறையில் பொருள்கொண்டு நம்மை எதிர்த்தவர்கள் எல்லோரும் அழிந்துபோகவேண்டும் என்று எண்ணுவோமானால் நாம் மெய்யான கிறிஸ்தவர்கள் அல்ல. 

ஏனெனில், நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எதிரிகளுக்காகவும், நம்மை அவமதிப்பவர்களுக்காகவும் வேண்டுதல்செய்ய நமக்கு அறிவுறுத்தியுள்ளார். மட்டுமல்ல, அவரே தனது பாடுகளின்போது அதனையே செய்தார். "பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" ( லுூக்கா 23 : 34 ) என்று தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களுக்காக பிதாவிடம் மன்னிப்பு வேண்டினார். 

எனவே இன்றைய தியான வசனம் நம்மோடு போராடுபவர்கள் யுத்தம் செய்பவர்கள் என்று கூறுவது நம்மைப் பாவத்தில் விழவைக்கும்  சத்துருவானவனையே. ஆம் அன்பானவர்களே, நாம் பாவத்தை எதிர்த்து போராடி அதனை மேற்கொள்வதுதான் ஆவிக்குரிய வளர்ச்சி. அப்படி உன்னோடே போராடின பாவக் காரியங்களைத்  தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின பழைய பாவங்கள் அனைத்தும் ஒன்றுமில்லாமல் இல்பொருளாகும் என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

அப்படிப் பாவத்தை மேற்கொள்ள "உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்." ( ஏசாயா 41 : 13 ) என்கிறார் கர்த்தர். 

இப்படிப் பாவங்களை நாம் மேற்கொள்ளம்போது தான் தேவன் நம்மைப் பயன்படுத்த முடியும். "இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள இயந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்." ( ஏசாயா 41 : 15 ) என்று இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து கூறப்பட்டுள்ளது. 

ஆம்  அன்பானவர்களே, நமது சுய பலத்தால் பாவங்களை நாம் மேற்கொள்ள முடியாது. தேவனது ஒத்துழைப்பு நமக்குத் தேவையாயிருக்கிறது. தேவனிடம் உண்மையான விருப்பத்தோடு வேண்டுவோமானால் தேற்றரவாளரான பரிசுத்த ஆவியானவரை அவர் நமக்குத் தருவார். "அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்". ( யோவான் 16 : 8 ) இப்படி உணர்த்தி நம்மைப் பாவத்தை மேற்கொள்ளச் செய்வார். 

அப்போதுதான் நாமும் இதுவரை நம்மை அடிமையாக்கி வைத்திருந்த மலைபோன்ற பாவங்களை மிதித்து நொறுக்கி, அவைகளை பதருக்கு ஒப்பாக்கி போரடிக்கிறதற்கு உதவும் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள இயந்தரமாக்கப்பட்டு கர்த்தருக்கென்று பயன்படமுடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்        

Monday, August 05, 2024

இழந்துபோனதைத் தேட வந்தவர்

 ✉'ஆதவன்' ஆகஸ்ட் 13, 2024. செவ்வாய்க்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,282   

"இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்" (லூக்கா 19:10)

கடவுள் என்றால் அவர் தீயவர்களை அழித்து நல்லவர்களை வாழவைப்பவர் என்று நம்மில் பலரும் எண்ணிக்கொண்டிருக்கின்றோம். காரணம், மனிதர்களாகிய நாம் அத்தகைய குணம் உள்ளவர்களாக இருப்பதால்தான். நம்மை அன்பு செய்பவர்களை மட்டும் நாமும் அன்பு செய்கிறோம்; நமக்கு நன்மை செய்பவர்களுக்கு மட்டும் நாமும் நன்மை செய்கின்றோம். 

ஆனால் தேவன் இப்படிக் குறுகிய எண்ணம் உள்ளவரல்ல; மாறாக அவர் தீயவர்களையும் பாவிகளையும் அன்பு செய்கின்றார். காரணம், இந்த உலக வாழ்க்கைக்  குறுகியது. இந்த உலகமே பெரிதென வாழ்ந்து எதிர்காலத்தில் முடிவில்லா அக்கினியில் ஆத்துமாக்கள் அழிந்துபோவது தேவனுக்குச் சித்தமல்ல. எனவேதான் தேவன் பாவிகளை உடனேயே அழித்து ஒழிக்காமல் விட்டுவைக்கின்றார். அவர்கள் மனம்திரும்ப சந்தர்ப்பம் அளிக்கின்றார்.

"தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்;  ஒருவரும்  கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." (2 பேதுரு 3:9) என்று நாம் வாசிக்கின்றோம். ஒரு ஆத்துமாகூட அழிவது தேவனுக்குச் சித்தமல்ல. எல்லோரும் மனம்திரும்பவேண்டும் என்று அவர் விரும்புகின்றார். ஆம் அவர் எதிலும் 100% எதிர்பார்ப்பவர். 

அன்று பாவி என்று கருதப்பட்ட சகேயு வீட்டில் இயேசு தங்கச் சென்றபோது யூதர்கள் மனித முறைமையின்படி சிந்தித்ததால், " இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்."  (லூக்கா 19:7) ஆனால் இயேசு சகேயுவின் ஆத்துமாவைப் பார்த்தார். அது பாவத்துக்கு வருந்தும் தன்மை உள்ள ஆத்துமாவாக இருந்ததை அவர் அறிந்திருந்தார். 

அதுபோலவே "சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே." (லூக்கா 19: 8, 7) என்றார். 

ஆம் அன்பானவர்களே, இழந்துபோனதை தேடுவதற்கே இயேசு கிறிஸ்து உலகினில் வந்தார். சகேயுவைபோல பாவத்துக்கு வருந்தி பரிகாரம்செய்யும் குணம் நமக்கு இருக்குமானால் நாம் அவருக்குத் தொலைவில் இல்லை. இழந்துபோன நம்மை தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரனான கிறிஸ்து உலகினில்  வந்திருக்கிறார். அவரிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டு நம்மை ஒப்புக்கொடுப்போம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்

 ✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 12, 2024. 💚திங்கள்கிழமை 💚   வேதாகமத் தியானம் - எண்:- 1,281        


"மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?" ( ரோமர் 6 : 16 )

இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான  பவுல் இரண்டு வித  அடிமைத்தனத்தைக் குறித்துக் கூறுகின்றார்.  ஒன்று, மரணத்துக்கு ஏதுவாக நம்மைச் சிறைப்படுத்தும் பாவ   அடிமைத்தனம். இன்னொன்று, நீதிகேதுவான தேவனுக்கு கீழ்ப்படியும் அடிமைத்தனம்.   

இந்த இரண்டில் எதற்கு நம்மை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கின்றோமோ அதற்கே நாம் அடிமைகளாக  .இருப்போம். நாங்கள் யாருக்கும் அடிமைகள் அல்ல என்று   வாதிட்ட யூதர்களைப்பார்த்து இயேசு  கிறிஸ்து கூறினார், "பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( யோவான் 8 : 34 ) என்று. 

பாவம் நம்மை அடிமைப்படுத்துவது  மட்டுமல்ல அது ஆத்தும மரணத்தையும் ஏற்படுத்துகின்றது. இதனையே நாம் "பாவத்தின் சம்பளம் மரணம்" (ரோமர் 6:23) என்று வாசிக்கின்றோம்.    ஆம் அன்பானவர்களே, இதனாலேயே இன்றைய தியான வசனம் நமக்கு இந்த இரண்டு அடிமைத்தனத்தையும் எடுத்துக்கூறி வாழ்க்கையில் நாம் நமக்கேற்றதை தேர்வு செய்யக் கூறுகின்றது. இந்த இரண்டில் எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா? என்று கேள்வியும் எழுப்புகின்றது. 

மட்டுமல்ல, அப்போஸ்தலராகிய பவுல் நாம் எதனைத் தேர்வுசெய்ய வேண்டும் என்றும் ஆலோசனைக் கூறுகின்றார். ஆம்,  "அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்." ( ரோமர் 6 : 19 ) என்கின்றார். 

ஆலயங்களுக்குச் சென்று ஆராதனை செய்யுமுன் நாம் நம்மையே சீர்தூக்கிப் பார்த்துக்கொண்டு ஆராதனைகளில் கலந்துகொள்ளவேண்டும். பாவத்துக்கு அடிமைகளாக இருந்துகொண்டு ஆராதனையும் செய்வோமானால் அது அர்த்தமற்ற ஆராதனையாகவே இருக்கும். நீதிக்கேதுவான தேவனுக்குக் கீழ்ப்படிதலுள்ளவர்களாக நம்மைத் தேவனுக்கு அடிமைகளாக்கி ஆலய ஆராதனைகளில் கலந்துகொள்வோம். 

ஆம், இப்பொழுது "பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்." 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Saturday, August 03, 2024

வானம் எனக்குச் சிங்காசனம்

 'ஆதவன்' 💚ஆகஸ்ட் 11, 2024.  ஞாயிற்றுக்கிழமை 💚  வேதாகமத் தியானம் - எண்:- 1,280        


"வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதப்படி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது?" ( ஏசாயா 66 : 1 )

இன்றைய தியான வசனம் நாம் பல்வேறுமுறை கேட்ட வசனம்தான். எனினும், இந்த வசனத்தை இதன் முழு அர்த்தம் தெரிய தொடர்ச்சியாக அடுத்த வசனத்தையும் நாம் வாசிக்கவேண்டியது அவசியம். 

அடுத்த வசனம் சொல்கின்றது, "என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்." ( ஏசாயா 66 : 2 ) அதாவது வானம், வானத்திலுள்ள அனைத்துப் படைப்புகளான விண்மீன்கள், கோள்கள், அண்டவெளிகள் இவை அனைத்தையும் நான்தான்  படைத்துள்ளேன். இவை எனக்குச் சிம்மாசனம்போல இருக்கின்றன.  

"ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்." என்று இந்த வசனம் சொல்கின்றது. இதன்பொருள், இப்படி இவையெல்லாம் எனக்குச் சிம்மாசனம்போல இருந்தாலும் இவைகள் அனைத்தையும்விட சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன் என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

இப்படித் தேவன் மனிதர்களை நோக்கிப்பார்க்கக் காரணம், தேவன் மனிதர்களை அவரது மற்ற படைப்புக்களைவிட மேலானவர்களாகக்  கருதுவதால்தான். எனவே தேவனது ஆகாயப் படைப்புக்கள் தேவனுக்குச் சிம்மாசனம்போல இருந்தாலும் அவர் மனிதர்களுக்குள் வசிக்கவே ஆசைப்படுகின்றார். ஆம், "ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 7 : 48 ) அவர் ஆகாயத்திலோ மனிதர்களால் கட்டப்படும் ஆலயங்களில் வசிப்பதையோவிட மனிதர்களுக்குள் வசிக்கவே ஆசைப்படுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, எனவேதான் நாம் நமது உடலை தேவன் வாழும் வகையில் பரிசுத்தமாகக் காத்துக்கொண்டு  வாழவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. 

நினைத்துப்பாருங்கள், பெரிய பெரிய விஞ்ஞானிகளாலும் பகுத்து உணரமுடியாத அண்டசராசரங்களைவிட தேவன் மனிதர்களை அதிகம் விரும்புகின்றார். பூமி அவரது பாதப்படியாக இருந்தாலும் அதில் வாழும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, அவரது வசனத்துக்கு நடுங்குகிறவர்களையே நோக்கிப்பார்க்கின்றார்.  எனவே, நொறுக்கப்பட்ட இதயத்தோடு தேவனது வசனத்துக்கு நடுங்கி வாழ்வோமானால் தேவன் நமக்குள் வந்து தங்குவார். 

தேவன் விண்ணுலகமான சிங்காசனத்தில் அமர்ந்துகொண்டு அதிகாரத்தோடு ஆட்சி செய்வதைவிட பாதப்படியான பூமியில் நம்முடன் வாசிக்கவிரும்புவது எத்தனைப் பெரிய  ஆச்சரியம். அவரது விருப்பத்தை நிறைவு செய்யும் வாழ்க்கை வாழ்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்            

Friday, August 02, 2024

பூரணம்

 ✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 10, 2024. 💚சனிக்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,279                                


"நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவானவளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும் வரைக்கும்,....." ( எபேசியர் 4 : 11 )

சுவிசேஷம் ஏன் உலகுக்கு அறிவிக்கப்படவேண்டும் என்பதனை இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அதாவது இந்த உலகத்தில் வாழக்கூடிய அனைவரும் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசத்தினால் பற்றிக்கொண்டு கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியைப்போல நாமும் வளர்ந்து பூரண மனிதர்களாக வேண்டும். பூரணம் என்பது நிறைவைக் குறிக்கின்றது. நாம் அனைவருமே நம்மில் எந்தக் குறைவுமின்றி கிறிஸ்துவைப்போல மாறவேண்டும். 

எனவேதான், "...சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்." ( எபேசியர் 4 : 12, 13 )

அதாவது, எப்படியாவது மக்கள் கிறிஸ்துவை அறிவதன்மூலம் பூரணம் அடையவேண்டும் என்பதற்காக, அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள் மற்றும் போதகர்கள் என ஐந்துவகை ஊழியங்களை தேவன் ஏற்படுத்தினார் என்று கூறப்பட்டுள்ளது. 

கிறிஸ்துவை வாழ்வில் அறிந்திடாத மக்கள் பலர் இந்த ஐந்து வகை ஊழியங்களில் ஏதாவது ஒன்றினாலும் தொடப்பட்டு கிறிஸ்துவுக்கு நேராகத் திரும்பியுள்ளதை நாம் உலகினில் பார்க்கலாம். அப்போஸ்தல அடையாளங்களான அற்புதங்கள் மூலம் பலரும், தங்கள் உள்ளத்திலுள்ளதை தீர்க்கதரிசனங்களால் வெளிப்படுத்துவதன் மூலம் சிலரும் சுவிசேஷகர்களின் நற்செய்தி  அறிவிப்புகள் மூலம் மற்றும்  மேய்ப்பர்கள், போதகர்கள் இவர்களின் வழிகாட்டுதலின் மூலம் பலரும் கிறிஸ்துவிடம் திரும்பியுள்ளனர். 

ஆம் அன்பானவர்களே, தேவன் எப்படியாவது மக்கள் தன்னை அறிந்து  தன்னைப்போல பூரணர்களாக மாறவேண்டும் என்று இப்படிச் செய்துள்ளார். எனவே இத்தகைய சுவிசேஷ அறிவிப்புகளை நாம் புறக்கணித்துக்கொண்டே இருப்போமானால் நிச்சயம் தண்டனைக்கு நாம் தப்பமுடியாது. 

"முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்." ( எபிரெயர் 2 : 3, 4 )

ஆம் அன்பானவர்களே, சுவிசேஷ அறிவிப்புகளை அற்பமாக எண்ணாமல் அறிவிக்கப்படும் செய்திக்கு நேராக நமது இருதயத்தைத் திரும்புவோம்; கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியைப்போல நாமும் வளர்ந்து பூரண மனிதர்களாவோம்.   

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Thursday, August 01, 2024

உண்மை நட்பு

 ✉'ஆதவன்' ஆகஸ்ட் 09, 2024. வெள்ளிக்கிழமை 💚   வேதாகமத் தியானம் - எண்:- 1,278                                             


  
  

"என் சகோதரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன்; நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய்; உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது; ஸ்திரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது." ( 2 சாமுவேல் 1 : 26 )

தனது நண்பனான யோனத்தான் இறந்துபோனான் என்று கேள்விப்பட்டபோது தாவீது வெளிப்படுத்தின வேதனையின் வார்த்தைகள்தான் இன்றைய தியான வசனம். 

வேதாகமத்தில் உண்மையான நட்புக்கு உதாரணமாக இருந்த இரு நண்பர்கள்தான் தாவீதும் சவுலின் மகன் யோனத்தானும். யோனத்தான்  சவுல் அரசனின் மகன் என்பதால் தகப்பனுக்கு அடுத்தபடி ராஜாவாக  ஆட்சிப்பொறுப்பை ஏற்கும் நிலையில் இருந்தவன். தாவீது சவுலிடம் பணி செய்தவன். ஆனால் சவுல் தாவீதை மிகவும் வெறுத்தான். தாவீதை அழித்து ஒழிக்க முயன்றுகொண்டிருந்தான். காரணம், தாவீதுக்கு இருந்த தைரியம், பலம், அறிவு இவை சவுலைக் கலங்கச் செய்தன. தனக்குப்பின் தனது மகனுக்குப்பதில் ஆட்சிப்பொறுப்பைத் தாவீது கைப்பற்றிவிடுவான் என்று சவுல் அஞ்சினான். 

ஆனால் சவுலின் மகன் யோனத்தான் தாவீதை "தன் உயிரைச் சிநேகித்ததுபோல சிநேகித்தான்." ( 1 சாமுவேல் 20 : 17 ) என்று கூறப்பட்டுள்ளது. இது முரண்பாடுகளுக்குள் எழுந்த நட்பு. ராஜாவான தகப்பன் தாவீதைக் கொன்று ஒழிக்க முயல, அவன் மகனோ அவனைத் தன் உயிரைப்போல நேசிக்கிறான். 

ஒருமுறை சவுல் தனது மகன் யோனத்தானிடம், "ஈசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும், உன் ராஜ்யபாரமானாலும் நிலைப்படுவதில்லை; இப்போதே அவனை அழைப்பித்து, என்னிடத்தில் கொண்டுவா; அவன் சாகவேண்டும் என்றான்." ( 1 சாமுவேல் 20 : 31 ) ஆனால் யோனத்தானோ அப்படி நினைக்கவில்லை. தாவீது அரசன் ஆவான் அப்போது நான் அவனுக்கு அடுத்த நிலையில் இருக்கவும் தயார் எனும் மனநிலையில் இருந்தான் யோனத்தான். இந்த மனநிலையை நாம் நினைத்தும் பார்க்க முடியவில்லை. தனது ராஜ மேன்மையை நண்பனுக்காக விட்டுக்கொடுக்கும் மனநிலை கொண்ட உயரிய நட்பு தாவீதுமேல் யோனத்தான் கொண்ட நட்பு. 

எனவே தன் தகப்பன் சவுலுக்குப் பயந்து காட்டில் ஒளிந்திருந்த தாவீதிடம் சென்று அவனைத் திடப்படுத்தினான் யோனத்தான். "அப்பொழுது சவுலின் குமாரனாகிய யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையைத் திடப்படுத்தி: நீர் பயப்படவேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்கமாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்; அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார் என்றான்." ( 1 சாமுவேல் 23 : 16, 17 )

யோனத்தான் எனும் உலக மனிதனின் அன்பு இப்படி இருக்குமானால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பு எவ்வளவு மேலானதாக இருக்குமென்று எண்ணிப்பாருங்கள். அன்பானவர்களே, இதனைவிட மேலான நட்போடு கூடிய அன்புடன்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மிடம் வந்தார். பரலோக மேன்மையைத் துறந்து நமக்காகத் தனது உயிரையும் கொடுத்தார்.  நம்மைத் தன்னைப்போல உருமாற்ற; பிதாவோடு அவர் கொண்டிருந்த அதே உறவோடு நாமும் அவரோடும் பிதாவோடும்  ஒன்றாக அமர்ந்திட.  (யோவான் 17:20 - 26) அவரையே நாமும் அன்பு செய்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

இரண்டு சாட்சிகள்

 ✉'ஆதவன்' ஆகஸ்ட் 08, 2024. வியாழக்கிழமை          வேதாகமத் தியானம் - எண்:- 1,277                                       


 

"நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்." ( ரோமர் 8 : 16 )

இந்தக் காலத்திலும்கூட எதற்கும் சட்டபூர்வமாக இரண்டு சாட்சிகள் தேவைப்படுகின்றன. ஒரு பத்திரம் பதிவுசெய்யும்போதுகூட இறுதியில் சாட்சிகள் என்று இரண்டுபேர் கையெழுத்திடுவார்கள். திருமண ஒப்பந்தத்திலும்கூட  மணமகன் மணமகள் கையொப்பமிட்ட பின்னர் இரண்டு சாட்சிகள் இறுதியில் கையொப்பமிடுவார்கள். இதற்குப் பொருள் என்னவென்றால், இங்கு கூறப்பட்டுள்ளது அல்லது நடந்தது அனைத்தையும் நாங்கள் பார்த்தோம். அதற்கு நாங்கள்தான் சாட்சிகள் என்று பொருள். 

இப்படியே, நாம் தேவனுடைய பிள்ளைகளாய்த்தான்  இருக்கிறோம் என்பதற்கு இரண்டு சாட்சிகளை அப்போஸ்தலரான பவுல் குறிப்பிடுகின்றார். ஒன்று ஆவியானவர் இன்னொன்று  நம்முடைய சொந்த ஆவி என்று குறிப்பிடுகின்றார். 

நாம் தேவனுக்கேற்ற பிள்ளைகளாக நடக்கின்றோமா என்பதனை ஆவியானவர் நமக்கு முதலில் உணர்த்துகின்றார். நம்மைத் திருத்திக்கொள்ள வழி காட்டுகின்றார். அப்படி நாம் நம்மைத் திருத்திக்கொள்ளாவிட்டால் அவர் துக்கமடைகின்றார். இதனை அப்போஸ்தலரான பவுல், "அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்." ( எபேசியர் 4 : 30 ) என்று குறிப்பிடுகின்றார். 

ஆவியானவரின் உணர்த்துதலின்படி நாம் நம்மைத் திருத்திக்கொள்ளும்போது  நமது ஆவியும் குற்ற உணர்ச்சி இல்லாமல் நாம் தேவனுடைய பிள்ளைகளாய்த்தான் இருக்கின்றோம் என்பதனை உறுதி செய்யும். இப்படி இரண்டு சாட்சிகளும் சரியாக இருக்குமானால் நாம் மெய்யாலுமே தேவனுக்கேற்றவர்கள் ஆகின்றோம்; அவரது பிள்ளைகளாகின்றோம். 

இதனையே இதற்கு அடுத்த வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் குறிப்பிடுகிற்றார். "நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்." ( ரோமர் 8 : 17 )

அதாவது நாம் அவரது பிள்ளைகளாகி ஒரு மகன் அல்லது மகள் எப்படித் தகப்பனது சொத்துக்களில் உரிமை பெறுவார்களோ அதுபோன்ற உரிமையினைப் பெறுவோம். அப்படி உரிமைப்பேறு கிடைக்க நமக்கு மேற்படி இரண்டு சாட்சிகளும் தேவைப்படுகின்றன. நமக்கு இந்த இரண்டு சாட்சிகளும் உண்டுமா என்பதனை நாம் நிதானித்துக்கொள்வோம்.

ஆவியானவர் நம்மைக்குறித்து என்னச் சொல்லுவார்? நமது சொந்த ஆவி நம்மைக் குறித்து என்ன உணர்த்துகின்றது?

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்           

Tuesday, July 30, 2024

1947 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட தாவீதின் புதிய சங்கீதம்

ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் :- 

                              சகோ. எம்.ஜியோ பிரகாஷ் 

1947 ஆம் ஆண்டு கும்ரன் குகையில் ஆடுமேய்த்த சிறுவர்கள் கண்டுபிடித்த மண்பாண்டங்களில் பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட வேதாகம  தோல்சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் தாவீது எழுதிய சங்கீதம் ஒன்றும் இருந்தது. வேதாகமத்தில் இல்லாத அந்தச்  சங்கீதம் இதோ:-  


நிச்சயமாக ஒரு புழு உம்மைத் துதிக்க முடியாது; கல்லறைப் புழு உம்  இரக்கத்தைப் புகழ்ந்திடாது. ஆனால் ஜீவனுள்ளோர் உம்மைத் துதிக்கமுடியும்!!. தள்ளாடுகிறவன்கூட உம்மைப் போற்றிப் புகழ முடியும். 


உமது இரக்கத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தி உமது நீதியால் அவர்களை மகிழ்விக்கின்றீர். ஏனெனில் ஜீவனுள்ளோரின் ஆன்மாக்கள் உமது கரங்களில் உள்ளன. மாம்சமான அனைத்துக்கும் உயிரளித்தவர் நீரே. 


உமது நன்மைக்கேற்ப, உமது இரக்கம் நீதிக்கேற்ப எம்மிடம் செயல்புரியும்.


கர்த்தரின் நாமத்தின்மேல் பற்றுதல் கொள்வோரின் குரலை அவர் கேட்கிறார். தனது இரகத்தினால் அவர்களைக் கைவிடாமல் காக்கின்றார். 


நீதியை நடப்பிக்கும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவரே பரிசுத்தவான்களை  தனது அன்பினாலும் இரகத்தினாலும் முடிசூட்டுகின்றார். 


என் ஆன்மா கர்த்தரது நாமத்தை  உயர்த்திப் போற்றுகின்றது. அவரது அன்பின் கிரியைகளை புகழ்ந்து பாடுகின்றது. உமது நீதியைப் போற்றிப் புகழ்ந்து பாடுவதற்கு முடிவே இல்லை. 


எனது பாவங்களும் மீறுதல்களும் என்னை  மரணத்துக்குச் சமீபமாக இழுத்துச் சென்றன. ஆனால் கர்த்தாவே, உமது மகா கிருபையினாலும்  நீதியினாலும் நீரே என்னை மீட்டுக்கொண்டீர்.


தேவனே! உண்மையிலேயே உமது நாமத்தை நான் நேசிக்கிறேன். உமது பாதுகாப்பில் அடைக்கலம் காண்கிறேன். உமது வல்லமையினை நினைவுகூரும்போது எனது இருதயம் தைரியம் கொள்கின்றது. உமது இரக்கத்தின்மேல் சாய்ந்துகொள்கிறேன்.


என் பாவங்களை மன்னியும், கர்த்தாவே என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். என் ஆத்துமாவை உமது உண்மையிலும் நீதியிலும்  காத்து நான் அழிந்திடாமல் பாதுகாத்தருளும். 


அலகை என்னை மேற்கொள்ளாமலும், அசுத்தஆவி என்னை வேதனைப்படுத்தி  என் எலும்புகளை மேற்கொள்ளாமலும் இருப்பதாக! தேவனே, நீரே என்புகழ்ச்சி; நாள்முழுதும் நீரே என் நம்பிக்கை.


உமது இரக்கத்தின் மேன்மையைக்கண்டு ஆச்சரியப்படும் என் சகோதரர்கள் என்னோடும் என் தகப்பன் வீட்டாரோடும் அக்களிப்பார்களாக. 


தேவனே! நான் எப்போதும் உம்மிலே மகிழ்ந்திருப்பேன்.!

ஓட்டையான தொட்டி

 ✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 07, 2024. 💚புதன்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,276                               

     

"என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்." ( எரேமியா 2 : 13 )

மெய்தேவனாகிய கர்த்தரை அறிந்தபின்பு நாம் அவரைவிட்டுப்  பின்மாறிப் போவோமானால் இன்றைய தியான வசனம் கூறும் நிலையில் நாம் இருக்கின்றோம் என்று பொருள். அதாவது அப்படி நாம் பின்மாறும்போது இரண்டு தீமைகளை செய்தவர்களாகின்றோம். முதலில்,   ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய தேவனை விட்டுவிடுகின்றோம் அடுத்து, தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளை நமக்காக உருவாக்கிக்கொண்டவர்கள் ஆகின்றோம்.      

அதாவது, தமிழில் ஒரு பழமொழி உண்டு. "கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்தாளாம் ஒருத்தி." அன்பானவர்களே, நமது கையில் வெண்ணையான தேவன் இருக்கும்போது அதனைப் பாதுகாத்து உபயோகப்படுத்திடாமல் நாம் நெய்க்காக அலைந்து திரியும் முட்டாள்களாக இருக்கக்  கூடாது. இஸ்ரவேல் மக்கள் இப்படித்தான் செய்தனர். ஜீவத்தண்ணீர் அவர்கள் நடுவில் இருந்தும் அதனை விட்டுவிட்டு தண்ணீர் நிரப்ப வெடிப்புள்ள ஓட்டையான தொட்டிகளைத் தங்களுக்காக உருவாக்கிக்கொண்டனர். 

அன்று இஸ்ரவேலர் செய்த அதே தவறையே இன்றும் கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்வோரில் பலரும் செய்து கொண்டிருக்கின்றனர். ஆம், ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய அவரை முழுமையாகப் பற்றுவதை விட்டுவிட்டு முட்டாள் பெண் நெய்க்கு அலைந்ததுபோல ஏமாற்று ஊழியர்களை நோக்கி ஓடுகின்றனர். ஆம், நாம் பற்றிக்கொள்ளவேண்டியது கிறிஸ்துவையே தவிர ஊழியர்களையல்ல. இவர்களைப்பார்த்து வேதனையுடன் தேவன் கூறுகின்றார், "என் ஜனங்கள் ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள். "

இதுபோலவே கிறிஸ்துவின்மேலுள்ள முழுமையான விசுவாசத்தை விட்டுவிட்டு வேதம் கூறாத முறையில் பல்வேறு புனிதர்களை நாடிப்போகும்போது நாம் ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய அவரை விட்டுவிடுகின்றோம் என்று பொருள். 

அன்பானவர்களே, நமது வீட்டில் தண்ணீர் நிற்காத ஒரு ஓட்டையான தொட்டி இருக்குமானால் அதனால் என்ன பயன்? அது இருப்பதும் ஒன்றுதான் இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான். வேதனையுடன் தேவன் கூறும் இன்றைய வார்த்தைகளுக்குச் செவி கொடுப்போம். நல்ல பலமான ஓட்டையில்லாத தொட்டியை நமக்குத் தந்து அதனை ஜீவத் தண்ணீரால் நிரப்பிட ஆவலுடன் காத்திருக்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அவரிடம் முழு மனதுடன் திரும்புவோம்.

"சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்." ( எபிரெயர் 3 : 12 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்