இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Monday, January 16, 2023

சபிப்பவர்கள் மேலேயே அந்த சாபங்கள் வந்து தங்கும்.

ஆதவன் 🌞 720 🌻 ஜனவரி 17,  2023 செவ்வாய்க்கிழமை

"அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்து போவதுபோலும், காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது." ( நீதிமொழிகள் 26 : 2 )

சாபமிடுதல்  சிலருக்கு எப்போதுமே அவர்களை அறியாமலேயே வாயில் வரும். எதற்கெடுத்தாலும் மற்றவர்களைச் சபிப்பார்கள். இது ஒரு வியாதிபோல அவர்களுக்கு.

ஒருமுறை ஒரு சகோதரன் என்னிடம், "பிரதர் எங்களது பக்கத்து வீட்டுகார பெண்மணி எதற்கெடுத்தாலும் சாபம்போடுகின்றார். காலை எழும்பியதுமுதல் கேட்கும் "விளங்கமாட்டான்", "நாசமாய்ப்போவான்" எனும் வார்த்தைகளே எங்களை மிகவும் மனம் நோகச்  செய்கின்றது.  எங்களுக்கு இது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது" என்று கூறினார். 

இதுபோல பலர் இந்த உலகத்தில் உண்டு. ஆனால் இந்தச் சாபத்தைக்கேட்டு பலரும் பயப்படுகின்றார்கள். இன்றைய தியானத்துக்குரிய வசனம் நாம் இப்படி காரணமில்லாத சாபங்களை எண்ணிக் கலங்கவேண்டியதில்லை என்று கூறுகின்றது. "அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்து போவதுபோலும், காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது." என்று இன்றைய வசனம் கூறுகின்றது. எனவே தேவ பிள்ளைகளான நாம் இத்தகைய சாபமிடுபவர்களைக்கண்டு பயப்படவேண்டிய அவசியமில்லை. 

நாம் உண்மையாய்ப் பயப்படவேண்டியது கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்க நாம் தவறும்போது மட்டுமே. ஏனெனில் வேதம் கூறுகின்றது, "அப்படி அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்." ( உபாகமம் 28 : 15 ) என்று.  

மட்டுமல்ல, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவை மரத்தில் வெற்றிச்சிறந்து  நமது சாபங்களையெல்லாம் இல்லாமலாக்கிவிட்டார். நாம் இயேசு கிறிஸ்துவுக்கு ஏற்புடையவர்களாக வாழும்போது அவருடைய பிள்ளைகள் ஆகின்றோம். எனவே,   எந்த சாபமும் நம்மை அணுகாது.

மற்றவர்கள் இடும் சாபத்தைப்பற்றி கூடும் வேதம் நமக்கும் பின்வருமாறு அறிவுறுத்துகின்றது:-  "உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள்." ( ரோமர் 12 : 14 ). ஆம், தேவனுக்கு உகந்தவர்களாக வாழும்போது மற்றவர்கள் இடும் சாபம் நம்மேல் பலிக்காது. நாமும் பிறரை சபியாமல் இருக்கவேண்டும். 

அப்படி நாம் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழும்போது காரணமில்லாமல் நமக்குக் கூறப்படும் சாபம் ஆசீர்வாதமாக மாறும். மட்டுமல்ல, நம்மைச் சபிப்பவர்கள் மேலேயே அந்த சாபங்கள் வந்து தங்கும்.  

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Saturday, January 14, 2023

தேவனுக்குப் பிரியமில்லாத செயல்பாடுகளைத் தவிர்ப்போம்

ஆதவன் 🌞 719 🌻 ஜனவரி 16,  2023 திங்கள்கிழமை

"நீ மிகவும் பிரியமானவன், ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது," ( தானியேல் 9 : 23 )

ஜெபத்தைக்குறித்தும் அதற்குத் தேவன் பதில் தருவது குறித்தும் இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் வாசிக்கின்றோம்.  நமது ஜெபத்துக்குத் தேவன் பதில்கொடுக்க நாம் என்னச் செய்வது என்பதை இந்த வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது.  தேவனை நோக்கித் தானியேல் ஜெபித்தபோது அவரது ஜெபத்துக்குப் பதிலை உடனேயே காபிரியேல் தூதன் கொண்டு வருகின்றான். காபிரியேல் தூதன் தானியேலுக்கு அறிவித்த வார்த்தைகளே இன்றைய தியானத்துக்குரிய வசனம்.

இந்த வசனத்தில் தானியேலை, "நீ மிகவும் பிரியமானவன்" என்று தூதன் கூறுகின்றான். அப்படிப் பிரியமானவனாக இருந்ததால் அவன் வேண்டிக்கொண்ட அதேசமயத்தில் தேவனது பதில் அவனுக்கு அனுப்பப்படுகின்றது.

தானியேலின் ஜெப வாழ்க்கை, தேவனுக்காக தானியேல் காட்டிய பக்தி வைராக்கியம், உயிரே போனாலும் போகட்டும் தேவனுக்கு எதிரான செயல்பாடுகளைச் செய்யமாட்டேன் எனும் உறுதி இவைகளை நாம் தானியேல் புத்தகத்தில் படித்தறியலாம். தானியேலின் அந்த விசுவாசத்தையும் பக்திவைராக்கியத்தையும் தேவன் கனம் பண்ணத் தவறவில்லை.   

அன்பானவர்களே, நமக்கு ஒரு பரலோக அரசாங்கம் உண்டு. நமது தேவைகள் அனைத்தையும் நாம் தெரிவிக்கவேண்டியது அந்த அரசாங்கத்திடம்தான். அங்கிருந்தே நமக்கு அனைத்தும் கிடைக்கின்றன. "நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை." ( யாக்கோபு 1 : 17 ) என்று எழுதுகின்றார் யாக்கோபு.

யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லாத தேவனிடம் நாமும் தானியேலைபோல உண்மையாய் உத்தமமுமாய் இருந்து வேண்டுதல் செய்வோமானால்,  நாமும் தானியேலைப் போல தேவனுக்கு மிகவும் பிரியமானவர்கள் ஆவோம். அப்போது நமது வேண்டுதலுக்கும் தேவன்  உடனடி பதில் தருவார். 

மட்டுமல்ல, தேவன் தானியேலுக்கு பல்வேறு வெளிப்பாடுகளையும் அருளினார். அந்தத் தீர்க்கதரிசனங்கள் இன்றளவும் நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. 
.
நாம் வாழும் சமூகத்தில் பல செயல்பாடுகள் தேவனுக்கு ஏற்புடையவை அல்லாதவையாக இருக்கின்றன. சமூக நல்லிணக்கம், மத நல்லிணக்கம் எனும் போர்வையில் நம்மை அவைகளைப் பின்பற்றச் செய்திட  சாத்தான் முயற்சிப்பான். நாம் எனவே கவனமாக இருக்கவேண்டும். 

அனைவரையும் அன்பு செய்வது என்பது வேறு அனைவரது செயல்பாடுகளையும் பின்பற்றுவது என்பது வேறு. தேவனுக்குப் பிரியமில்லாத செயல்பாடுகளைத் தவிர்ப்போம்; அனைவரையும் அன்புசெய்வோம். தானியேலைபோல தேவனுக்கு ஏற்புடையவர்களாக  வாழ்ந்து அவருக்கு மிகவும் பிரியமானவன் என்று பெயர் எடுப்போம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Thursday, January 12, 2023

கர்த்தரோடு நம்மை இணைத்துக்கொள்ளும் அனுபவம் வேண்டுவோம்

ஆதவன் 🌞 718 🌻 ஜனவரி 15,  2023 ஞாயிற்றுக்கிழமை

"கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்." ( சங்கீதம் 31 : 24 )

கர்த்தருக்குக் காத்திருத்தல் என்பது உறுதியான விசுவாசத்தோடு கர்த்தரையே சார்ந்துகொல்வதைக்  குறிக்கின்றது. நாம் ஏதும் செய்யாமல் வெறுமனே ஒரு பேரூந்துக்காகக் காத்திருக்கும் பயணியைப்போல இருக்கவேண்டும் என்று பொருளல்ல, மாறாக கர்த்தரிடம் நாம் உறுதியாகத் தரித்திருப்பதையே குறிக்கின்றது. காத்திருத்தல் என்று கூறப்படும் இந்த வார்த்தைக்கு எபிரேய மூல மொழியில் கூறப்பட்ட வார்த்தை QUVAH  என்பது என்று எபிரேயம் தெரிந்த எனது நண்பர் ஒருவர் கூறினார். 

இதற்கு, பின்னுதல், ஒட்டுதல் (bind) என்ற பொருளும் உண்டு என்று கூறினார் அவர். அதாவது கர்த்தரோடு கர்த்தராகத் தங்களைப் பின்னிக்கொண்டவர்கள் அல்லது கர்த்தரோடு தங்களை ஒட்டிக்கொண்டவர்கள் என்று பொருள். 

இப்படிக் "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்." ( ஏசாயா 40 : 31 )

இன்றைய வசனம் கூறுகின்றது இப்படிக் "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்" என்று. அதாவது இப்படிக் கர்த்தரோடு ஒரு ஒட்டுதலான வாழ்க்கை வாழ்ந்தால் அவர் நமது இருதயத்தை உறுதிப்படுத்துவார். இந்த வசனம், நாம் கேட்பதையெல்லாம் அவர் தருவார் என்று கூறாமல் "உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்" என்று கூறுகின்றது. நமது இருதயம் உறுதிப்படும்போது நாம் கேட்பது கிடைக்காவிடினும் அவரது சித்தத்தை ஏற்றுக்கொள்ளும் பலத்தை நமக்குத் தரும்.

இதற்கொத்த வேத வசனங்கள் பல சங்கீத புத்தகத்தில் உண்டு. 

"கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு" ( சங்கீதம் 37 : 7 )

"கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்." ( சங்கீதம் 37 : 9 )

அன்பானவர்களே, கர்த்தரோடு நம்மை இணைத்துக்கொள்ளும் அனுபவம், கர்த்தரோடு கர்த்தராக நம்மைப் பின்னிக்கொள்ளும் அல்லது ஒட்டிக்கொள்ளும் அனுபவத்தில் நாம்  வளரவேண்டியது அவசியம். அப்படி வளரும்போது மட்டுமே நாம் உலகத் துன்பங்களையும் வேதனைகளையும் தாங்கிக்கொள்ளும் மனப் பக்குவதைப் பெற முடியும். உலக ஆசீர்வாதங்களையல்ல, கர்த்தரையே முதன்மையாக வேண்டுவோம். அப்போது நமது இருதயம் கர்த்தரில் உறுதிப்படும்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

வாழ்க்கையாலும் பிறருக்கு உதவுவதன்மூலமும்

ஆதவன் 🌞 717 🌻 ஜனவரி 14,  2023 சனிக்கிழமை

"இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம்." ( யோவான் 6 : 9 )

இயேசு கிறிஸ்து ஒருமுறை மக்களுக்கு வனாந்தரமான இடத்தில போதனை செய்துகொண்டிருந்தார். மிகுதியான மக்கள்கூட்டம் சேர்ந்துவிட்டது. பொழுதும் அதிகநேரம் ஆகிவிட்டது. அந்த மக்களை அப்படியே அனுப்பிவிட இயேசு கிறிஸ்து விரும்பவில்லை. அவர்களது பசியை ஆற்றவேண்டும் என்று விரும்பினார். எனவே தனது சீடர்களில் ஒருவராகிய பிலிப்புவிடம், " இவர்கள் சாப்பிட அப்பங்களை நாம் எங்கே வாங்கலாம்? என்று கேட்டார். அப்போது பிலிப்பு, "ஒவ்வொருவருக்கும் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்தாலும் இருநூறு பணத்துக்கு அப்பம் வாங்கினாலும் போதாதே?" என்று  கைவிரித்தார். 

அப்போது இன்னொரு சீடனான அந்திரேயா என்பவர் இன்றைய தியானத்துக்குரிய வசனத்தைக் கூறினார்.  இயேசு கிறிஸ்து அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் வாங்கி ஆசீர்வதித்து அவைகளை வர்த்திக்கப்பண்ணி ஐயாயிரம்பேருக்கு உணவளித்தார். 

இன்று நம்மிடம் இருக்கும் திறமைகளும், பணமும் கொஞ்சமாக இருக்கலாம். இவற்றைக்கொண்டு நாம் தேவனுக்கென்று  என்னதான் பெரிதாகச் செய்துவிடமுடியும் என நாம் எண்ணலாம். ஆனால், தேவனது கரம் நம்மோடு இருக்கும்போது எந்தச் சிறியச் செயலாக இருந்தாலும் அது மிகப்பெரிய தாக்கத்தைக் கொண்டுவரும். அந்தச் சிறியச் செயல் பல ஆயிரம் மக்களது ஆவிக்குரியப் பசியைத் தணிக்கமுடியும்.  

மேலும், இன்றைய வசனம் கூறப்பட்ட சூழ்நிலையையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். இயேசு கிறிஸ்து மக்களுக்குப் போதனைச் செய்தபின்பு அவர்களது பசியைத் தணித்தார். இன்று நாமும் வெறும் சுவிசேஷ அறிவிப்பு செய்துவிட்டு மக்களது உலகுசார்ந்த தேவைகளைக் கவனிக்காமல் இருந்தால் அதில் அர்த்தமிருக்காது. நம்மால் இயன்றவரை மக்களது உலகத் தேவைகளைச் சந்திக்க முயலவேண்டும்.  
  
"ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அனுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன?" ( யாக்கோபு 2 : 15, 16 ) என்கிறார் அப்போஸ்தலரான  யாக்கோபு.

நாம் நமது வார்த்தையால் கிறிஸ்துவை அறிவிப்பதோடு வாழ்க்கையாலும் பிறருக்கு உதவுவதன்மூலமும் கிறிஸ்துவை அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். பெரிய அளவில் இவற்றைச் செய்ய இயலாவிட்டாலும் இரண்டு மீன்கள் ஐந்து அப்பங்களைப்போல சிறிய அளவில் செய்தாலும் தேவன் அதனை மிகப்பெரிய ஆசீர்வாதமாக மாற்றி பலருக்குப் பயனுள்ளதாக்குவார்.   இத்தனை ஜனங்களுக்கு நாம் செய்யும் உதவி எம்மாத்திரம் எனத் தயங்கிடாமல் நமது பணியைத் தொடர்ந்து செய்வோம். கர்த்தர்தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Tuesday, January 10, 2023

கல்வாரி நாதரான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் போ

ஆதவன் 🌞 716 🌻 ஜனவரி 13,  2023 வெள்ளிக்கிழமை

"நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப்போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்கு கட்டளையிட்டேன்." ( 1 இராஜாக்கள் 17 : 9 )

இக்கட்டு இடர்களில்  தனது ஊழியர்களையும் தனக்கு ஏற்புடையவர்களாக வாழும் மக்களையும் தப்புவிக்க தேவன் உதவிசெய்கிறார்.  தேவனது அந்த உதவியைப் பெறுவதற்கு நாம் தகுதியுள்ளவர்களாக மாறவேண்டியதே அவசியம்.  இன்றைய வசனம் பஞ்சகாலத்தில் தனது ஊழியக்காரனாகிய எலியாவுக்கு தேவனால் அருளப்பட்டதாகும். 

ஐயோ பஞ்சம் வந்துவிட்டதே, பணமோ உணவோ இல்லையே எனக் கலங்கிடாதே, நான் உனக்காக, உனக்கு உணவளிக்க  ஒரு விதவையை ஏற்கெனவே ஏற்பாடுசெய்துவிட்டேன் என்று எலியாவைத் திடப்படுத்தி அனுப்புகின்றார் தேவன்.

தேவன் அனுப்பும்போது எந்தக் குறைவும் இன்றி அவர் வாக்களித்த உணவு  எலியாவுக்குக் கிடைத்ததுபோல நமக்கும்  கிடைக்கும். ஆனால் சரியான இடத்துக்கு நாம் செல்லவேண்டும். இந்தப் பஞ்சகாலத்தில் பணக்காரர்களே உணவில்லாமல் தவிக்கிறார்கள் ஏழை விதவை எப்படி நமக்கு உணவுத்தருவாள்? என்று எலியா எண்ணியிருந்தால் உணவு கிடைத்திராது. 

இன்று இதுபோல ஆவிக்குரிய வாழ்வில் நாம் சோர்ந்துபோயிருக்கலாம், அல்லது ஆவிக்குரிய உணவு நமக்குப் போதுமான அளவு கிடைக்காமல் இருக்கலாம். அல்லது இத்தனை வயதாகியும் நமக்கு ஆவிக்குரிய உணவைக்குறித்து அறிவில்லாமலிருக்கலாம். பல்வேறு தேவர்களையும் பல்வேறு ஊழியர்களையும் தேடி ஓடி சலிப்படைந்திருக்கலாம். ஆனால் நாம் தயங்கிடத் தேவையில்லை. 

"நானே வானத்திலிருந்திறங்கின ஜீவஅப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே" ( யோவான் 6 : 51 ) என்று வாக்களித்த இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதியை நம்புவோம். அன்று யூதர்கள் இயேசுவின் வார்த்தையால் இடறலடைந்தார்கள். "நமக்கு இவன்  எப்படித் தனது உடலைத் தரமுடியும்? என்றனர். இது கடினமான உபதேசம் என்று பலர் அவரைவிட்டுப் பிரிந்தனர். 

தேவனுடைய வார்த்தையை நம்பி சாறிபாத் விதவையைநோக்கி எலியா சென்றதுபோல கல்வாரி நாதரை நோக்கி நாம் செல்லவேண்டியது அவசியமாய் இருக்கிறது. 

விருந்துகளில் சற்று தாமதமாக நாம் சென்றால் சில உணவு வகைகள் நமக்குக் கிடைக்காமல்  போகும். சிலவேளைகளில் எதுவுமே கிடைக்காமல் போகலாம். ஆம், உலக விருந்துகளுக்கு  காலம், இடம், நேரம் முக்கியம். சரியான காலத்தில், சரியான வேளையில் சென்றால்  மட்டுமே உணவு கிடைக்கும். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எவரையும் புறம்தள்ளுவதில்லை. நமது வயது நமக்குத் தடையல்ல. எனவே தைரியமாக அவரை நோக்கிச் செல்வோம்.

"நானே வானத்திலிருந்திறங்கின ஜீவஅப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான். " ( யோவான் 6 : 51 ) என்று வாக்களித்துள்ளார் அவர்.

"வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான்." ( யோவான் 6 : 58 )

அவரைப் புசிப்பது என்பது, நமது பாவங்களுக்காக அவர் தனது இரத்தத்தைச் சிந்தி பலியானார் அவரது இரத்தம் நமது பாவங்களைக் கழுவி சுத்திகரிக்கும் என்பதை விசுவாசித்து ஏற்றுக்கொள்வதுதான். 

நீ எழுந்து, கல்வாரி நாதரான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் போ. அவரோடே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அவரே உன்னோடு இருந்து நடத்துவார்.  

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்

ஆதவன் 🌞 715 🌻 ஜனவரி 12,  2023 வியாழக்கிழமை

"என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை. நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர்"( சங்கீதம் 44 : 6, 7 )

கர்த்தரை நம்பாமல் தங்களது சுய பலத்தையே நம்பி வாழ்கின்றனர் பலர்.  தங்களது வாழ்வின் செழிப்பெல்லாம் தங்களது சுய பலத்தினால்தான் என்று எண்ணுகின்றனர். எனக்கு நல்ல வேலை இருக்கின்றது, நான் சம்பாதிக்கிறேன் என்று கூறிக்கொள்கின்றனர்.  இந்த வேலையும் சம்பாதிக்கும் திறனும் தேவன் கொடுத்தது என்று அவரை மகிமைப்படுத்தத் தவறிவிடுகின்றனர். 

என்னதான் நல்ல வேலை இருந்தாலும் நல்ல உடல் நலம் தேவன் கொடுப்பதுதான். நல்ல உடல் சுகம் இருந்தால் மட்டுமே நமது வேலையாலும் சம்பாத்தியத்தாலும் பலன் உண்டு. 

அன்பானவர்களே, நமக்கு எவ்வளவு அதிக அறிவும், நல்ல வேலையும் சம்பாதிக்கும் திறமையும் இருந்தாலும் நாம் அவற்றின்மீது நம்பிக்கை வைக்காமல் தேவன்மேலேயே நம்பிக்கை வைக்கவேண்டும். இன்றைய உலகினில் நாம் பல விஷயங்களை நேரடியாகப் பார்க்கின்றோம். நல்ல வேலையில் இருபவர்களது வேலை திடீரென்று இல்லாமல் போய்விடுகின்றது. உலகின் முன்னணி நிறுவனங்களில் பெருமையோடு உயர் பதவி வகித்தவர்களின் பதவிகள் ஒரு நொடியில் இல்லாமல்போய்விடுகின்றன.

"அவர் வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்." ( சங்கீதம் 46 : 9 ) என வசனம் கூறுகின்றது. அதாவது தனது ஈட்டியையும் இரத்தங்களையும் பெருமையாக எண்ணுபவர்களை தேவன் அழித்து ஒழியப்பண்ணுகின்றார். 

"ஆண்டவரே, என் வேலையை நான் நம்பேன், என் வேலையும் திறமையும் என்னை இரட்சிப்பதில்லை. நீரே எங்கள் வாழ்க்கையினைச் செழிக்கச் செய்பவர்." என்று உண்மையான தாழ்மையுடன் அறிக்கையிடவேண்டும். ஆண்டவர் இதனையே விரும்புகின்றார்.   பலருக்கு இந்த எண்ணம் இல்லாததால் பெருமையும் மற்றவர்களை அற்பமாக எண்ணும் குணமும்  ஏற்படுகின்றது.

நமக்கு எவ்வளவு பெரிய பதவி இருந்தாலும் அதனைவிட மகா பெரிய தேவையே நாம் நம்பவேண்டும்.  "பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்." ( லுூக்கா 1 : 52, 53 ) எனும் வேத வசனங்கள் நமக்கு எப்போதும் ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

தாழ் நிலையிலுள்ளவர்களை ஒரே நொடியில் உயர்த்தவும், உயரத்தில் இருப்பவர்களை ஒரேநொடியில் தாழ்த்தவும் தேவனால் கூடும். எனவே, "என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை. நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சிக்கிறவர் " என்று நமது வாயினால் அறிக்கையிடுவோம்.   

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Monday, January 09, 2023

கர்த்தரிடத்தில் திரும்புவோம்

ஆதவன் 🌞 714 🌻 ஜனவரி 11,  2023 புதன்கிழமை

"கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்." ( ஓசியா 6 : 1 )

பிள்ளைகள் தவறு செய்யும்போது பெற்றோர்கள் அவர்களைத் தண்டிப்பதுண்டு. இது பிள்ளைகள் நல்லவர்களாக வளரவேண்டும் என்பதற்காகவேதானே தவிர குழந்தைகளைப் பழிவாங்குவதற்காக அல்ல.  சிலவேளைகளில் தாய்மார்கள் கோபத்தில் தங்கள் குழந்தைகளை அடித்துவிட்டு மனம் வருந்தி அவர்களே அழுவதுண்டு. ஆம், நமது தேவனும் இப்படிப்பட்டவர்தான். நம்மைக் கண்டிக்கும்போது அவரும் மனம் வருந்துகின்றார். 

நாம் நமது மீறுதல்களினால் தேவனுக்கு எதிரான காரியங்களில் ஈடுபடும்போது நம்மைத் திருத்துவதற்காக தேவன் நம்மைத் தண்டிப்பதுண்டு. இது ஒரு தாய் தனது குழந்தைகளைத் திருத்துவதற்குத் தண்டிப்பதைப்போலதான்.   "அவர் காயப்படுத்திக் காயங்கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது." ( யோபு 5 : 18 )

நமது தாய் தகப்பன்மார் அவர்கள் நல்ல வழி எனக் கருதும் வழிகளில் நாம் வளரவேண்டும் என்பதறகாகக் சிறிதுகாலம் நம்மைத் தண்டிக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட அளவு  வளர்ந்தபின் அவர்கள் நம்மைத் தண்டிப்பது கிடையாது. இதனையே எபிரேய நிருபத்தில் நாம்,  "அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்." ( எபிரெயர் 12 : 10 ) என்று வாசிக்கின்றோம்.

இன்றைய தியான வசனத்தில், "அவரே  நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்." என வாசிக்கின்றோம். அன்பானவர்களே, எனவே நாம் துன்பங்களை, பாடுகளை அனுபவிக்கும்போது நம்மை நாமே நிதானித்துப் பார்க்கவேண்டியது அவசியம். மட்டுமல்ல, நம்மிடம் குற்றங்கள் இருக்குமேயானால் அவரிடம் மன்னிப்பு வேண்டுவது அவசியம். "அடிக்கிற கைதான் அணைக்கும்" என்பதற்கேற்ப நம்மை அடித்த அவரே நம்மை அணைத்துக்கொள்வார், அமைத்து காயங்களைக் கட்டுவார், நம்மைக் குணமாக்குவார்.  

"கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்" என்று இன்றைய வசனம் நமக்கு அழைப்புவிடுக்கின்றது. நாம் ஒவ்வொருவரும் இன்று அவரிடம் திரும்பவேண்டியது அவசியமாயிருக்கின்றது.  தினமும் பாவ அறிக்கை செய்யவேண்டியது அவசியமாயிருக்கின்றது. ஏனெனில் நாம் அனைவருமே பல விஷயங்களில் தவறுகின்றோம். (யாக்கோபு 3:2)

நாம் மனித அறிவால் பாவம் என்று உணர்ந்திராத பல விஷயங்கள் தேவ பார்வையில் பாவமாக இருக்கலாம். எனவே தினமும் நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு வேண்டுவோம். தேவனது கண்டிப்புக்குத் தப்பி நமது உடலையும் ஆத்துமாவையும் வாழ்வையும் காத்துக்கொள்வோம்.

தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Saturday, January 07, 2023

என்னை நோக்கிக் கூப்பிடு

ஆதவன் 🌞 713 🌻 ஜனவரி 10,  2023 செவ்வாய்க்கிழமை

"பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்." ( மத்தேயு 9 : 6 )

இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்தபோது நன்மைகள் செய்தவாறு சுற்றித் திரிந்தார் என்று வேதம் கூறுகின்றது. அவர் பல்வேறு அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்தது இரண்டே காரணத்தினால்தான். ஒன்று அவரது மனதுருக்கம், இன்னொரு காரணம் பாவங்களை மன்னிக்கத் தனக்கு அதிகாரம் உண்டு என்பதை மக்களுக்கு உணர்த்தி தான் காட்டும் வழியில் மக்கள் அவரைப் பின் செல்லவேண்டும் என்பதற்காகத்தான்.  ஏனெனில் இந்த உலக வாழ்க்கைக்குப்பிறகு நாம் நித்திய வாழ்வைத் சுதந்தரிக்கவேண்டுமானால் நாம் பாவமற்றவர்களாக இருக்கவேண்டடியது அவசியமாயிருக்கிறது. 

ஆத்தும மரணமில்லாத வாழ்வு - அதுதான் நித்தியஜீவன் எனும் நிலைவாழ்வு.   அதனை அடையும் வழியை இயேசு கிறிஸ்துக் காட்டினார். அதனை அடைந்திட முதல்படி நமது பாவங்கள் மன்னிக்கப்படுவதுதான். ஆனால் மக்கள் அவருக்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு என்பதை எப்படி உணர்ந்துகொள்வார்கள்? எனவே, மக்களது  பாவங்களை மன்னிக்கத் தனக்கு  அதிகாரம் உண்டு என்பதை உணர்த்தவே அவர் பல அற்புதங்களைச் செய்தார்.    

ஒருமுறை ஒரு திமிர்வாதக்காரனைக் குணப்படுத்துமுன் இயேசு கிறிஸ்து அவனிடம் "உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன" என்று கூறியபோது யூதர்கள், "இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்." ( மாற்கு 2 : 7 )

இப்படி, பாவங்களை மன்னிக்க இவன் யார்? என்று எண்ணிய மக்களுக்குத் தான் தேவன்தான்; தனக்கு பாவங்களை மன்னிக்க அதிகாரம் உண்டு என்பதை உணர்த்தவே இயேசு கிறிஸ்து அற்புதங்கள் செய்தார். 

"நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்." ( 1 யோவான்  2 : 2 ) என எழுதுகின்றார் அவரது அன்புச்  சீடர் யோவான். 

அன்பானவர்களே, நமக்கு உடலில் பல்வேறு நோய்கள் இருக்கலாம், பல ஆண்டுகளாக அந்த நோயின் தாக்கத்தால் நாம் தவித்துக்கொண்டு ஆயிரக்கணக்கான பணத்தை மருத்துவர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கலாம். எல்லா நோய்க்கும் மருத்துவரான பரம வைத்தியராகிய அவரைப் பற்றிக்கொண்டு ஜெபிப்போம்.

"அன்பு ஆண்டவரே, நான் உமக்குப் பிரியமில்லாத எந்தப் பாவம் செய்திருந்தாலும் அவற்றை மன்னியும். (ரகசியப் பாவங்கள் செய்திருந்தால் அந்தப் பாவத்தை அறிக்கையிட்டு ஜெபியுங்கள்) நான் இனிமேல் உமக்கு ஏற்புடையவனாக, உமக்கு மட்டுமே சொந்தகமானவனாக வாழ முடிவெடுக்கிறேன். எனது பாவங்களை மன்னியும்; எனது தீராத நோயைக் குணமாக்கும். இனிமேல் உமக்குச் சாட்சியுள்ள ஒரு  வாழ்க்கையை  வாழ்வேன்". என நாம் ஜெபிக்கும் ஜெபத்துக்கு அவர் நிச்சயம் பதில் தருவார்.  "ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்."( சங்கீதம் 50 : 15 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

நித்திய வழியிலே என்னை நடத்தும்

ஆதவன் 🌞 712 🌻 ஜனவரி 09,  2023 திங்கள்கிழமை

"தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்." ( சங்கீதம் 139 : 23, 24 )

தன்னை முற்றிலும் தேவ வழி நடத்துதலுக்கு ஒப்புக்கொடுத்து தாவீது பாடிய இந்தச் சங்கீதம் நமக்கு ஒரு நல்ல முன்மாதிரியான ஜெபத்தைக் கற்றுத் தருகின்றது. 

நாம் மனிதர்கள்;  பலவீனமானவர்கள். நம்மால் நமது குறைகளைக்கூட அறிந்திட முடியாது. எனவேதான் பலரும் தாங்கள் எந்தப் பாவமும் செய்யவில்லை என எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் நம்மில் தேவனது பரிசுத்த ஆவியானவர் வரும்போதுதான் நமக்கு நமது பாவங்கள் தெரியவரும். இதுவரை நாம் பாவம் என்று எண்ணிடாத பல காரியங்கள் தேவனுடைய பார்வையில் பாவமாக இருப்பதை  நாம் உணர்ந்துகொள்ள முடியும்.    

நமது இருதயச் சிந்தனைகளை தேவன் அறிவார். எனவே, வெளிப்படையாக நாம்  பாவம் செய்யாதவர்களாக இருந்தாலும் சிந்தனையில் பாவியாக இருக்கமுடியும். சமுதாயத்துக்குப் பயந்தும்,  வாய்ப்புக் கிடைக்காததாலும் சிலர் பெரிய பாவம் செய்யாமல் வாழ்கின்றனர். ஆனால் உள்ளான மனதில் பாவ அழுக்கு மனிதனுக்குள் இருந்தாலே தேவனது பார்வையில் அது பாவம்தான். எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "ஒரு ஸ்திரீயை இச்சையோடுபார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று." ( மத்தேயு 5 : 28 ) என்று. 

இன்றைய தியான வசனத்தில் தாவீது கூறுகின்றார், "வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்." என்று. நாமும் இப்படி ஜெபிக்கவேண்டியது அவசியம்.  இப்படி நம்மை தேவ வழியில் நடத்துவதற்குத்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு பரிசுத்த ஆவியானவரை வாக்களித்து அருளியுள்ளார். "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." ( யோவான் 16 : 13 )

அம்  சத்திய ஆவியான பரிசுத்த ஆவியானவர் ஒருவரை அலறி ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அருளப்படவில்லை. அவர் நம்மைச் சகல சத்தியத்துக்குள்ளும் வழிநடத்தும்படி அருளப்பட்டுள்ளார்.  இன்று ஆவியின் அபிஷேகம் பெற்றுள்ளேன் என்று கூறிக்கொள்வோர் எண்ணிப்பார்க்கவேண்டிய சத்தியம் இது. 

பாவத்தைக்குறித்த அருவெறுப்பு உங்கள் உள்ளத்தில் இருக்கின்றதா? 

பாவத்தை வெறுத்து ஒதுக்குகின்றிர்களா ?

இன்னும் நான் பரிசுத்தமாகவேண்டும் எனும் எண்ணம் உங்களுக்குள் இருக்கின்றதா? 

தேவ சமூகத்தில் அதிகநேரம் செலவிட உங்களுக்குள் ஆர்வமிருக்கின்றதா?

இந்தக் கேள்விகளுக்கு ஆம் என்று பதில் இருக்குமேயானால் நம்மிடம் பரிசுத்த ஆவியானவர் இருந்து செயல்படுகின்றார் என்று பொருள்.  இல்லையானால் நாம் வெற்றுக்கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றோம் என்று பொருள். 

தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும். எனத் தினம்தோறும் வேண்டுதல் செய்வோம்.  அவரே நம்மை நீதியின் பாதையில் நடத்துவார். 

தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Friday, January 06, 2023

வசனங்கள் நம்மில் செயல்பட அனுமதிக்கும்போதுமட்டுமே நாம் அனலுள்ளவர்களாக மாறமுடியும்.

ஆதவன் 🌞 711 🌻 ஜனவரி 08,  2023 ஞாயிற்றுக்கிழமை

"இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 16 )

ஆவிக்குரிய வாழ்வின் மூன்று நிலைகளை இன்றைய வசனம் எடுத்துக் கூறுகின்றது. ஒன்று ஆவியில் குளிர்ந்த நிலை. அதாவது, ஆவிக்குரிய வாழ்வு என்றால் என்ன என்று தெரியாமல் அல்லது அந்த நிலையினை அதிகம் உணராது உள்ள மக்களது நிலைமை.  இத்தகைய மக்கள் தங்களது சுய பக்தி முயற்சியில் தேவனைத் தேடுபவர்கள். தேவனிடம் உண்மையான ஆவிக்குரிய  அன்பு இல்லாவிட்டாலும் சிறந்த  பக்தியுள்ளவர்கள்.  இத்தகைய மனிதர்கள் ஒருவேளை தேவனை தங்களது வாழ்க்கையில் பிற்பாடு அறிந்துகொண்டு சிறந்த ஆவிக்குரிய மக்களாக மாறிட முடியும்.

இன்னொன்று ஆவியில் அனலாய் இருக்கும் நிலைமை. ஆவிக்குரிய வைராக்கியமாக, தேவனிடம் உண்மையான அன்புசெலுத்தி ஆவிக்குரிய வாழ்வு வாழ்பவர்கள். ஆம், நாம் ஆவிக்குரிய வாழ்வில் வைராக்கியமாக அனலுள்ளவர்களாய் இருக்கவேண்டியது அவசியம். இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்." ( ரோமர் 12 : 11 ) என்று கூறுகின்றார். அனலுள்ள ஆவிக்குரிய வாழ்கையினையே தேவன் விரும்புகின்றார். இவர்கள் ஆவிக்குரிய மக்கள்.

மூன்றாவது இன்றைய வசனம் கூறுவது ஆவிக்குரிய வாழ்வில் வெதுவெதுப்பான நிலைமை. இத்தகைய மக்கள் இரண்டும்கெட்டான் ரகத்தைச் சார்ந்தவர்கள். அதாவது ஆவிக்குரிய சத்திய வசனங்களை வெறுமனே வசனங்களாக மட்டுமே அறிந்துகொண்டு அதுபற்றிய எந்த ஆர்வமும் இல்லாமல் ஏனோதானோ என்று வாழ்பவர்கள். 

இவர்கள் மாய்மாலக்காரர்கள். இவர்களிடம் நாம் சுவிசேஷம் அறிவிக்க முடியாது. ஏனெனில் வசனங்களை கணித பார்மலாப்போல அறிந்துள்ளதால் நாம் இவர்களிடம் பேச முற்பட்டால் நாம் துவங்குமுன் வசனத்தை ஒப்புவிப்பார்கள். ஆனால் அந்த வசனத்தின் வல்லமை அல்லது அதன் உண்மையான அனுபவபூர்வமான தன்மை இவர்களுக்குத் தெரியாது  தெரிந்துகொள்ளவும் முயற்சிக்கவுமாட்டார்கள்.   சிறுவயதுமுதல் அறிந்துள்ள வசனத்தைக் கிளிப்பிள்ளைபோலச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். 

அன்பானவர்களே, ஆவிக்குரிய அனலுள்ள வாழ்வையே தேவன் விரும்புகின்றார். அதேநேரம் ஆவிக்குரிய குளிர்ந்த நிலையில் உள்ளவர்கள் சரியான சத்தியத்தை அறிந்து அனலுள்ளவர்களாக மாறிட வாய்ப்புமுண்டு.  ஆனால், வெதுவெதுப்பான வாழ்க்கை வாழ்பவர்கள் தேவனை அறிந்திட வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. எனவேதான் இன்றைய வசனம் கூறுகின்றது, "இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்." என்று.

ஆவிக்குரிய அனலுள்ள வாழ்க்கை வாழ்பவர்கள் அந்த அனல் குறைந்திடாமல் தக்கவைத்துக் கொள்ளவேண்டியும் அதனை இன்னும் அதிகரிக்க வேண்டியதும் அவசியம்.  குளிர்ந்த நிலையில் நமது ஆவிக்குரிய வாழ்க்கை இருக்குமேயானால்  ஆண்டவரே, நான் உம்மை அறிந்து ஆவிக்குரிய அனலுள்ள வாழ்க்கை வாழ எனக்குக் கிருபையைத் தாரும் என வேண்டுதல் செய்யவேண்டியது அவசியம். 

ஒருவேளை இதனை வாசிக்கும் மக்களது வாழ்க்கை நாம் மேலே பார்த்ததுபோல அனலுமின்றி குளிருமின்றி வெதுவெதுப்பாக இருக்குமேயானால், மாய்மால எண்ணங்களைவிட்டுவிட்டு தேவனிடம் திரும்பவேண்டியது அவசியம். "ஆண்டவரே, நான் படித்து அறிந்துள்ள வசனங்களின் உண்மையினை நான் ருசிக்கும்படி எனக்குக் கிருபைதாரும். மெய்தேவனாகிய வார்த்தையான தேவனை நான் அறிந்துகொள்ளக் கிருபைதாரும் என தங்கள் ஆவிக்குரிய அறியா நிலைமையை ஒத்துக்கொடு ஜெபிக்கவேண்டியது அவசியம்.  வசனங்கள் மட்டும் நம்மை இரட்சிக்காது; வசனங்கள் நம்மில் செயல்பட அனுமதிக்கும்போதுமட்டுமே நாம் அனலுள்ளவர்களாக மாறமுடியும்.  

குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருந்து வசனங்களை மட்டுமே வாயினால் கூறிக்கொண்டிருந்தால்  உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன் என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Thursday, January 05, 2023

எங்களுடனே தங்கியிரும்

ஆதவன் 🌞 710 🌻 ஜனவரி 07,  2023 சனிக்கிழமை

"நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்." ( லுூக்கா 24 : 29 )

இயேசு கிறிஸ்து பாடுபட்டு மரித்து உயிர்த்தபின்பு எருசலேமிலிருந்து எம்மாவு எனும் கிராமத்துக்குச் சென்ற தனது இரண்டு சீடர்களோடு ஒரு வழிப்போக்கனைப்போல பேசிக்கொண்டு நடந்து சென்றார். அந்தச் சீடர்களுக்கு அவர் யார் என்று  தெரியவில்லை. கிறிஸ்து பாடுபட்டு மரிக்கவேண்டியது குறித்து வேதத்தில் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களை அவர்களுக்கு எடுத்துக்கூறி விளக்கியபடி நடந்து சென்றார். அவர்கள் போய்ச் சேரவேண்டிய இடம் வந்ததும் அவர் மேலும் எங்கோ செல்லவேண்டியதுபோல காட்டிக்கொண்டார். 

அப்போது அந்தச் சீடர்கள் அவரிடம், "நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்." ( லுூக்கா 24 : 29 )

அன்பானவர்களே, இன்று நமக்கு இது ஒரு செய்தியைக் கூறுகின்றது. வழியில் இயேசு கூறிய செய்திகளும் விளக்கங்களும் சீடர்களது மனதை அனல்கொள்ளச் செய்தன. எனவேதான் அவர்கள், "ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டார்கள். ( லுூக்கா 24 : 32 ) என வாசிக்கின்றோம்.

இன்று நமது வாழ்வும் ஒருவேளை சீடர்கள் இயேசுவை அழைத்த அந்த மாலைநேரத்தைப்போல பொழுதுபோனதாக இருக்கலாம். ஒருவேளை நமது வயது இப்போது அறுபத்தைந்து, எழுபது, எழுபத்தைந்து என பொழுதுபோனதாக இருக்கலாம். நமது வாழ்வின் அந்திவேளையில் நாம் இருக்கலாம். ஆனால் நாம் சீடர்களைப்போல அவரை அழைக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது.  "நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று" என்று அந்தச் சீடர்களைப்போல அவரை நமது வாழ்வில் அழைப்போம். 

ஒரு பரிசுத்தவானுடைய  சாட்சியை நான் வாசித்துள்ளேன். அவர் தனது அறுபத்தைந்தாவது வயதுவரை குடியிலும் கேளிக்கைகளிலும் செலவழித்து துன்மார்க்க வாழ்வு வாழ்ந்தார். ஆனால் அவரது அந்தி வேளையில் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டபோது கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டார். அற்புதமாகக் குணமானார். அவரது வாழ்வு கிறிஸ்து நிறைந்த வாழ்வாக மாறியது. அதன்பின்னர் அவர் இருபது ஆண்டுகள் கிறிஸ்துவுக்காக வைராக்கியமாக ஊழியம்செய்தார். 

நமது வாழ்வில் வயது அதிகமாகிவிட்டது எனக் கலங்கவேண்டாம். இனி வாழ்க்கை அவ்வளவுதான் என எண்ணவேண்டாம். வேத வார்த்தைகளை ஆவலுடன் வாசித்துத் தியானிப்போம். சீடர்களது இருதயம் கொழுந்துவிட்டு எரிந்ததுபோல நமது இருதயமும் எரியட்டும்.  "நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று" என்று உண்மையான மனதுடன் அழைப்போம். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்என்று கூறியுள்ளபடி நமது உள்ளத்திலும் வருவார். 

ஆபிரகாமின் வாழ்க்கையில் அவர் ஏறக்குறைய நூறு வயதுள்ளவராகவும் அவரது மனைவி சாராள் வயது முதிர்ந்து கர்ப்பம்தரிக்க இயலாத நிலையில்  உள்ளவராகவும் இருந்தபோது தேவன் ஈசாக்கை மகனாகக் கொடுத்து ஆசீர்வதித்ததைப் பார்க்கின்றோம்.  

ஒருமுறை ஒரு பெரியவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது வேதத்தைக்குறித்த உண்மைகளை எடுத்துக்கூறி மீட்பு அனுபவம் பற்றி விளக்கும்போது அவர் கூறினார், "எனக்கு வயது எழுபதாகப்போகிறது. இவ்வளவுநாள் வாழ்ந்ததுபோலவே வாழ்ந்துவிட்டுப்போகிறேன்" என்றார். அன்பானவர்களே, இத்தகைய எண்ணம் நமக்கு இருந்தால் கிறிஸ்துவை வாழ்வில் அறியாதவர்களாகவே மரிக்க நேரிடும். தேவனுக்கு வயது பெரிதல்ல;  எந்த வயதினரையும் அவரால் உருமாற்றி உபயோகப்படுத்த முடியும். "நீர் எங்களுடனே தங்கியிரும், எனது வாழ்க்கை சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று" என்று உண்மையான மனதுடன் அழைப்போம்.

தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Wednesday, January 04, 2023

யார் அந்திக்கிறிஸ்து (Anti Christ) ?

ஆதவன் 🌞 709 🌻 ஜனவரி 06,  2023 வெள்ளிக்கிழமை

"மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக் கிறிஸ்துவுமாயிருக்கிறான்." ( 2 யோவான்  1 : 7 )

நாம் ஒருவரது கொள்கைகள் கோட்பாடுகள் இவற்றை ஏற்றுக்கொள்வோமானால் அவற்றைக் கடைபிடிப்போம். அவர்களது கொள்கைகளை மாற்றிப்  புரட்டாமல் பேசுவோம். இன்று நாட்டில் கம்யூனிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள், காந்தீயவாதிகள் என்று பல கொள்கைப் பிடிப்புள்ளவர்கள் உண்டு. அவர்கள் பெரும்பாலும் இந்தக் கொள்கைகளின்படி வாழ்வதில்லை. ஆனால், தாங்கள் போற்றி புகழும் இந்தத் தலைவர்கள் கூறிய கொள்கைகளை மாற்றி பேசுவது கிடையாது. அதாவது அவர்கள் தாங்கள் பேசும் கொள்கைகளின்படி வாழாவிட்டாலும் கொள்கையினை மாற்றிப்  பேசுவதுகிடையாது.  

ஆனால் இன்று கிறிஸ்தவத்தில் இதற்கு மாறுபாடான நிலை உள்ளது. பெரும்பாலான கிறிஸ்த ஊழியர்கள் இயேசு கிறிஸ்துவின் மைய போதனையினையும் அவர் உலகத்தில் வந்த நோக்கத்தையும் மாற்றி, திரித்து போதிக்கின்றனர். "எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே ஒரு புண்ணியனின் மடியினிலே புதல்வனாகினார்" என தப்பும் தவறுமாக பாடுகின்றார்கள். அதிசயம் செய்யும் மந்திரவாதியாகத் தன்னைக் காட்டவா கிறிஸ்து உலகில் வந்தார்?திருச்சபைத் தலைவர்களும் இதனைக் கண்டுகொள்வதில்லை.  

"பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது"
( 1 தீமோத்தேயு 1 : 15 ) என்றல்லவா வேதம் கூறுகின்றது? இங்கு அதிசயம் அற்புதம் எப்படி நுழைந்தது?

மனிதனாக உலகினில் வந்த தேவகுமாரனான கிறிஸ்துவை மறுதலிப்பது என்பது இதுதான். கிறிஸ்துவின் பெயர் பிரசித்தமாகின்றதோ இல்லையோ  தங்களைக்குறித்தும் தங்களது வல்லமையினைக்குறித்தும் ஆளுயர போஸ்டர்களும் பேனர்களும் வைத்துத் தங்களைத்  தாங்களே புகழ்வதும் "விசுவாசிகள்" எனும் அப்பாவி மக்களைக்கொண்டு தங்களைப் புகழ்ந்து சாட்சிகூற வைப்பதும்தான் கிறிஸ்துவை மறுதலிப்பது. கிறிஸ்துவின் இரத்தத்தால் உண்டாகும் பாவமன்னிப்பையும் மீட்பு அனுபவத்தையும் எடுத்துக்கூறாமல் ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் ஆசீர்வாதம் என உலக ஆசீர்வாதங்களையே கூறுவதுதான்  கிறிஸ்துவை மறுதலிப்பது. 

எனவேதான், இப்படி "மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்." ( 2 யோவான்  1 : 7 ) என்கின்றார் அப்போஸ்தலனாகிய யோவான். 

கிறிஸ்துவின் போதனையினை ஏற்றுக்கொள்ளாமல் திரித்துப்பேசும் இவர்களே வஞ்சகனும் அந்திகிறிஸ்துவும் (எதிர்க்கிறிஸ்து)  என வேதம் மிகத் தெளிவாகக் கூறியிருந்தும் இத்தகைய வஞ்சகர்களைக்கொண்டுதான் பெரும்பாலான நற்செய்தி கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. "ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்." ( 2 யோவான்  1 : 10 ) என யோவான் கூறுகின்றார். 

அன்பானவர்களே, நற்செய்தி கூட்டங்களில் கலந்துகொள்வது நல்லதுதான். ஆனால் அங்கு யார் செய்தி அளிக்கிறார் என்று பார்த்து பிரபலங்களை நோக்கி ஓடி நமது ஆத்துமாவை இழந்துபோய்விடக்கூடாது.  

இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத வஞ்சக அந்திக்கிறிஸ்து ஊழியர்களுக்கும் போதனைகளுக்கும் நம்மைக் காத்துக்கொள்வோம்.  

தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Tuesday, January 03, 2023

மனிதர்களின் நிந்தனைக்குப் பயப்படாமலும், தூஷணங்களால் கலங்காமலும் இருப்போம்.

ஆதவன் 🌞 708 🌻 ஜனவரி 05,  2023 வியாழக்கிழமை

"நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்." (ஏசாயா 51:7)

இன்றைய தியானத்துக்குரிய வசனம் தேவனுக்கு ஏற்புடையவர்களாக வாழும் மக்களுக்கு கூறப்பட்டுள்ள ஆறுதல் வார்த்தைகள். நமது நம்பிக்கை வீண்போகாது, ஏற்றவேளையில் தேவன் நமக்குத்  தனது ஒத்தாசையினை அளிப்பார் எனும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள்.  

இந்த உலகத்தில் துன்பங்களும், துயரங்களும், பிரச்சனைகளும் எல்லோருக்கும் பொதுவானவை. ஒருவர் தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்ந்தாலும் துன்பங்கள் உண்டு. "எல்லாருக்கும் எல்லாம் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்" (பிரசங்கி 9:2) இயேசு கிறிஸ்துவும், "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு" என்றுதான் கூறினார். ஆனாலும் அவர் துணிவுடன் நின்று உலகை ஜெயித்ததுபோல நாமும் ஜெயிக்கவேண்டும். 

சில வேளைகளில் பல்வேறு துன்பங்களோடு மனிதர்கள் நம்மைக்குறித்துப் பேசும் நிந்தையான பேச்சுக்களையும் நாம் எதிர்கொள்ளவேண்டியது இருக்கும். கிறிஸ்துவுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்ந்து நாம் துன்பப்படும்போது, "என்ன இவன் பெரிய பரிசுத்தவான்போல பேசினான், கர்த்தர் கர்த்தர் என்று கூறிக்கொண்டிருந்தான்....இவனைவிட நாம் நன்றாகத்தானே இருக்கிறோம்?"  என்று பிறர் கூறலாம், எண்ணலாம். ஆவிக்குரிய வாழ்வு வாழும்போது அந்த அனுபவம் இல்லாத நமது உறவினர்களே இப்படிப் பேசுவார்கள். இது நாம் அனுபவிக்கும் துன்பங்களை மேலும் அதிகரிக்கச்செய்யும். 

இந்த நிலையில் இருக்கும் மக்களுக்கு தேவன் அளிக்கும் ஆறுதல் வார்த்தைகள், "நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்."

அதாவது, மனிதர்கள் நம்மைக்குறித்துப் பேசும் நிந்தையான பேச்சுக்களை நினைத்து நாம் பயப்படக்கூடாது, கலக்கமடையக்கூடாது. 

திருவிழா காலங்களில் பலூன் விற்பவர்கள் சாதாரண காற்றடைத்த பலூனோடு சில வேளைகளில் ஹீலியம் வாயு அடைத்த பலூனையும் விற்பனைச் செய்வார்கள். பார்ப்பதற்கு இரண்டும் ஒன்றுபோலவே தெரியும். ஆனால் கட்டிவைக்கப்பட்ட நூலை நாம் அறுத்துவிடுவோமானால் சாதாரண காற்றடைத்த பலூன் தரையில் கிடக்கும். ஹீலியம் வாயு அடைத்த பலூனோ உயர உயர வானத்தில் எழும்பிச் சென்று எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும்.   

அன்பானவர்களே, நமக்குள்ளே இருக்கும் ஆவியானவரைப்பற்றி வெளிப்பார்வைக்கு மக்களுக்குத் தெரியாது. ஆனால் ஏற்றகாலத்தில் அந்த ஆவியின் வல்லமை வெளிப்படும்போது மற்றவர்களைவிட நாம் விசேஷித்தவர்கள் என்பது உலகுக்குப் புரியும். 

எனவே, நீதியை அறிந்து, வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களாகிய நாம் மனிதர்களின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருப்போம். 

தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Sunday, January 01, 2023

பிற வழிபாடுகளுக்கும் கர்த்தராகிய இயேசுவின் ஜீவ வழியில் நடப்பதற்கும் உள்ள வித்தியாசம்

ஆதவன் 🌞 707 🌻 ஜனவரி 04,  2023 புதன்கிழமை

"தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்". (1 யோவான் 5:18)

கிறிஸ்து இயேசுவினால் உண்டாகும் மீட்பு அனுபவம் பற்றி இன்றைய வசனம் கூறுகின்றது.  இயேசு கிறிஸ்துவினால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவரை அறியும்போது நாம் தேவனால் பிறந்தவர்கள் ஆகின்றோம். இப்படி தேவனால் பிறந்தவன் பாவம் செய்வதில்லை. "ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்."  (1 யோவான் 3:9) இப்படி தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கின்றான். பொல்லாங்கனாகிய பிசாசு அவனைத் தொடமாட்டான். 

பிற தெய்வங்களை வழிபடுவதற்கும், கர்த்தராகிய இயேசுவின் ஜீவ வழியில் நடப்பதற்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் இதுதான். கிறிஸ்தவம் வெற்று வழிபாடுகளையும் ஒருசில சடங்குகளையும் கடைபிடிப்பதல்ல.  அது உள்ளான மனிதனில் கிறிஸ்துவினால் ஏற்படும் மாற்றத்தை ஏற்படுத்துவது.  அது உலக ஆசீர்வாதங்களை மட்டுமல்ல,  ஆவிக்குரிய ஆசீர்வாதமான பாவத்திலிருந்து விடுதலையையும் அதன் நிறைவான நித்திய ஜீவனையும் நமக்கு அளிக்கின்றது. 

அன்பானவர்களே, நாம் இந்த அனுபவத்தைப் பெறுவதற்கே அழைக்கப்பட்டுள்ளோம். குறிப்பிட்ட மந்திரங்களை ஜெபிப்பதல்ல, வழிபாடுகளை பக்தியுடன் செய்வதல்ல; கிறிஸ்து நமக்குள் இருபத்தையம் அவர் நம்மோடு பேசி வழிநடத்துவதையும் அறிவதே கிறிஸ்தவம். நாம் பாவங்களிலிருந்து முற்றிலும் ஜெயம்பெற அவர் நமக்கு உதவுகின்றார். அதற்கு நாமும் நமது நிலைமைக்கேற்ப ஒத்துழைக்கவேண்டும். எனவேதான் அப்போஸ்தலரான் பவுல்,  "நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்." (கொலோசெயர் 1:29) என்கின்றார். ஆம், அவர் நமக்குள்ளே வல்லமையாய்ச் செயற்படுகின்றார்.

மேலும்,  இப்படிக் கிறிஸ்துவுக்கேற்ப வாழும்போது நாம் சாத்தானின் வல்லமைகளுக்கு நீங்கி விடுதலை அடைகின்றோம்.  எனவே, நாம் இந்த அனுபவங்களைப்  பெறவேண்டியது அவசியமாயிருக்கின்றது. அதற்கு முதலில் நமக்கு இதுகுறித்த ஆர்வம் இருக்கவேண்டும். 

தேவன் நமது ஆழ்மன எண்ணங்கள் ஏக்கங்கள் இவற்றை நன்கு அறிவார். உண்மையாகவே நாம் அவரை அன்பு செய்வோமெனில் வெற்றுச் சடங்குகளை விட்டு அவரை அறியவேண்டும் எனும் எண்ணத்தோடு அவரைத் தேடுவோம். 

"அன்பான ஆண்டவரே, நான் உம்மை அறிந்து உமக்கேற்ற வாழ்க்கை வாழவும் உம்மால் வழிநடத்தப்படும் உன்னத அனுபவங்களையும் பெற்று மகிழ விரும்புகின்றேன். இதற்குத் தடையாக இருக்கும் எனது பாவங்களை மன்னியும்.  மறுபடி பிறக்கும் அனுபவத்தை எனக்குத் தாரும். நான் வெற்று ஆராதனைக் கிறிஸ்தவனாக வாழ விரும்பவில்லை. உம்மை அறிந்து உம்மோடு நடக்கும் உயிருள்ள மேலான ஆவிக்குரிய வாழ்வு வாழ விரும்புகின்றேன். அத்தகைய வாழ்வு வாழ என்னை முற்றிலும் ஒப்புக்கொடுக்கின்றேன். " என வேண்டுவோம்.

தேவனால் பிறந்த மேலான அனுபவத்தையும் பொல்லாங்கனுக்கு நீங்கலாகி முழு விடுதலையும் பெறுவோம்.

தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712


நான் உபத்திரவப்பட்டது நல்லது

ஆதவன் 🌞 706 🌻 ஜனவரி 03,  2023 செவ்வாய்க்கிழமை

"நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதனால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்." ( சங்கீதம் 119 : 71 )

உபத்திரவங்கள் தேர்வு போலானவைகள். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்துவார்கள். தேர்வுகள் ஒரு சோதனை. இந்த மாணவன் அல்லது மாணவி மேற்கொண்டு மேற்படிப்புக்குத் தகுதியானவர்தானா என சோதிக்கும் சோதனை. ஒரு சோதனையினை நாம் மேற்கொள்ளும்போது வாழ்வின் அடுத்தக் கட்டத்துக்கு முன்னேறுகின்றோம். 

மேலும் இந்தத் தேர்வுகள் நம்மை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்லும்போது நமது மகிழ்ச்சி அதிகமாகும். உதாரணமாக, நாம் வேலைக்கு விண்ணப்பிக்கும்போது நடக்கும் பல்வேறு தேர்வு நிலைகள், நேரடித் தேர்வுகள் ஒரு துன்பமாக நமக்குத் தெரியும். ஆனால் அந்தத் தேர்வுகளை நாம் வெற்றிகரமாக முடித்துவிட்டோமெனில் நல்ல வேலைக்குத் தகுயுள்ளவர்கள் ஆகின்றோம். 

இதனையே பக்தனான யோபுவும், "அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன் " (யோபு 23:1) என்று கூறுகின்றார்.  தங்கச் சுரங்கத்தில் இருந்து வெட்டியெடுக்கப்படும் தங்கம் முதலில் சாதாரண மண்போலவே இருக்கும். அதனையே நெருப்பிலிட்டு உருக்கி தங்கமாக மாற்றுகின்றனர்.  நகைக் கடைகளில் அழகுடன் மின்னும் தங்க நகைகள் கடந்துவந்த துன்பத்தின் பாதைகள் நமக்குத் தெரியாது. அக்கினியில் புடமிடப்பட்டு, அடித்து வளைத்து நகையாக உருவாக்கப்படுகின்றன. அதன்பின்னரே அவை அழகுடன் நகைக்கடைகளில் பார்வையாளர்களைக் கவரும்வண்ணம் மின்னுகின்றன. 

நமது ஆவிக்குரிய வாழ்விலும் நாம் தேவனுக்கு ஏற்புடையத் தகுதியுள்ளவர்கள் ஆகவேண்டுமானால் தேவன் தரும் சோதனைகளில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.  இதனையே அப்போஸ்தலரான யாக்கோபு, "சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்." ( யாக்கோபு 1 : 12 ) என்று கூறுகின்றார்.

இதனை உணர்ந்ததால் சங்கீத ஆசிரியர் "நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்." என்று கூறுகின்றார். தேவனது பிரமாணங்களை அதாவது கட்டளைகளைகளுக்குக்  கீழ்ப்படியும் முறைகளை  நாம் உபாத்திரங்களின்மூலம் கற்றுக்கொள்கின்றோம்.  எனவே அப்படி நான் உபத்திரவப்பட்டது நல்லது என்கின்றார் இந்தச் சங்கீத ஆசிரியர். 

அன்பானவர்களே, நாம் துன்பங்கள், துயரங்களில் அகப்படுவது இயற்கை. ஆனால் நாம் மற்றவர்களைப்போல் துன்பங்களைக்  கண்டு சோர்ந்துபோகாமல் அந்தத் துன்பங்கள் மூலம் தேவன் நமக்கு அளிக்கும் செய்திகளை அறிந்துகொள்ள முயலவேண்டும். நமது வாழ்க்கைப் பாதைகளைத் திருத்திக்கொள்ள முயலவேண்டும். ஆம், நாம் உபத்திரவப்படுவது நல்லது, அதனால் தேவனது பிரமாணங்களைக் கற்றுக்கொள்கின்றோம், நித்திய ஜீவனுக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகின்றோம். 

தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

தீர்க்கத்தரிசிக்கும் தீர்க்கத்தரிசியை நாடுபவனுக்கும் தண்டனை

ஆதவன் 🌞 705 🌻 ஜனவரி 02,  2023 திங்கள்கிழமை

"தீர்க்கதரிசியினிடத்தில் விசாரிக்கிறவனுடைய தண்டனை எப்படியோ அப்படியே தீர்க்கதரிசியினுடைய தண்டனையும் இருக்கும். இஸ்ரவேல் வம்சத்தார் இனி என்னைவிட்டு வழிதப்பிப்போகாமலும், தங்கள் எல்லா மீறுதல்களாலும் இனி அசுசிப்படாமலும் இருக்கும்பொருட்டாக இப்படிச் சம்பவிக்கும்; அப்பொழுது அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்." (எசேக்கியேல் 14 : 10, 11 )


புத்தாண்டு துவங்கிவிட்டதால் கிறிஸ்தவ ஊழியர்கள் பலரும் ஆசீர்வாத தீர்க்கதரிசனம் கூறத்துவங்கி விடுகின்றனர். இன்னும் ஒரு சில வாரங்கள் ஆசீர்வாதச் செய்திகளும், வாக்குத்தத்தங்களும் அனல் பறக்கும். ஆண்டுக்கு ஆண்டு நடக்கும் இந்தக் கூத்தைப் பல கிறிஸ்தவர்களும் தவறு என்று உணர்வதில்லை. ஊழியர்களும் பணம் சேர்க்கும் காலமாக இதனைப் பயன்படுத்தித் தீர்க்கதரிசனம் என்று ஏதேதோ கூறிக்கொண்டிருக்கின்றனர்.  

அன்பானவர்களே, மனிதர்கள் தன்னை நாடி, தனது சித்தம்செய்து தனக்காக வாழவேண்டுமென்றும் தன்னிடம் பேசி உறவாடி தன்னிடமே  அனைத்துக் காரியங்களையும் குறித்து விசாரிக்கவேண்டுமென்றும்  தேவன் விரும்புகின்றார்.  ஆனால் இன்று மனிதர்களுக்கு காத்திருந்து தேவனிடம் பேசி அவரது சித்தம் அறிய மனமும் பொறுமையும் இல்லை. எனவே, மனிதர்கள் குறுக்கு வழிகளாக ஊழியர்களை  நாடுகின்றார்கள். ஊழியர்களும் மக்களுக்கு தேவனிடம் பேசி உறவாடி அன்புறவில் வளரும் அனுபவத்தைச் சொல்லிக்கொடுப்பதும் இல்லை. காரணம், பெருவாரி ஊழியர்களுக்கும்கூட அந்த அனுபவம் இல்லை. 

இப்படி  தேவ உறவை விரும்பாமல் ஊழியர்களிடம் தீர்க்கதரிசனம் கேட்பதை தேவன் விரும்புவதில்லை. அதனையே இன்றைய வசனம் கூறுகின்றது, "தீர்க்கதரிசியினிடத்தில் விசாரிக்கிறவனுடைய தண்டனை எப்படியோ அப்படியே தீர்க்கதரிசியினுடைய தண்டனையும் இருக்கும்." என்று. ஆம், இப்படி விசாரிப்பது தவறு என்பதால் தண்டனையும் உண்டு. 

இதனைத் தொடர்ந்து இந்த வசனம் கூறுகின்றது, "இஸ்ரவேல் வம்சத்தார் இனி என்னைவிட்டு வழிதப்பிப்போகாமலும், தங்கள் எல்லா மீறுதல்களாலும் இனி அசுசிப்படாமலும் இருக்கும்பொருட்டாக இப்படிச் சம்பவிக்கும்." அதாவது, இஸ்ரவேல் மக்கள் தேவனை விட்டு வழிதப்பித் போகாமலிருக்க தேவன் இந்தத் தண்டனையைக் கூறுகின்றார்.

இப்படித் தீர்க்கதரிசன ஊழியர்களை நாடாமல் தேவனையே நாடி, அவர் சித்தம்கொண்டு நமக்கு வெளிப்படுத்தும் வெளிப்படுத்தல்களைப் பெற்று, அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழும்போது, "அவர்கள்  என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்." 

அன்பானவர்களே, தேவனிடம் நாம் அன்புறவில் வளரும்போது நமக்கு தேவனே போதும் என்ற நிறைவும், அவர் நமக்குத் தருவதை ஏற்றுக்கொள்ளும் மன நிறைவும் ஏற்படும். இந்த அனுபவம் இருந்ததால் தான் தாவீது கூறுகின்றார்,  "அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்." ( சங்கீதம் 23 : 3, 4 )

நமக்கு ஆறுதலும் தேறுதலும் உலக ஊழியர்களால் தர முடியாது. இன்று ஒரு சில உண்மையான தேவ ஊழியர்கள் உலகில் உண்டு. ஆனால் அவர்கள் வெறும் ஆசீர்வாதத்தை மட்டும் தீர்க்கதரிசனமாகக்  கூறுவதில்லை. அவர்கள் நாம் தேவ வழியில் நடந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள வழி காட்டுவார்கள். 

இன்றைய வசனம் குறிசொல்வதுபோல தீர்க்கதரிசனம் கூறும் ஊழியர்களுக்கும் அவர்களை நாடி ஓடும் அப்பாவி விசுவாசிகளுக்கும் ஒரு எச்சரிக்கை. திருந்திக் கொள்வோம்.  "தீர்க்கதரிசியினிடத்தில் விசாரிக்கிறவனுடைய தண்டனை எப்படியோ அப்படியே தீர்க்கதரிசியினுடைய தண்டனையும் இருக்கும்." என்கிறார் கர்த்தராகிய ஆண்டவர். கர்த்தரையே நாடுவோம்; தண்டனைக்குத் தப்பித்துக்கொள்வோம் 

தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Friday, December 30, 2022

எந்நாளுமே அவருடைய உடனிருப்பையும் அதிசயமான வழிநடத்துதலையும் நாம் அனுபவிக்கலாம்.

ஆதவன் 🌞 704 🌻 ஜனவரி 01,  2023 ஞாயிற்றுக்கிழமை

"சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 15 : 3 )


அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!! 

நம் தேவனாகிய கர்த்தர் சர்வ வல்லவர் என்று வேதம் கூறுகின்றது. அவரால் கூடாத காரியம் எதுவுமே இல்லை. அவர் மனிதர்களாகிய நமக்குள் செயல்படும் விதம் ஆச்சரியமானதாகும். நமக்கு  பிரச்சனையோ தேவையோ ஏற்படும்போது தேவனை நோக்கி வேண்டுகின்றோம். அப்படி வேண்டும் நாம் ஜெபத்துக்குப் பதிலளிக்க அவருக்குக் காத்திருக்கவேண்டும்.  அவர் நமது ஜெபத்துக்குப் பதிலளிக்கும் விதம் ஆச்சரியமானதாக  இருக்கும். அதனை ருசிக்கும் அனுபவம் நமக்கு வேண்டும்.

இங்கிலாந்து தேசத்தில் வாழ்ந்த  ஜார்ஜ் முல்லர் (1805 - 18980) எனும் தேவ மனிதரைக்குறித்தும் அவரது விசுவாசம் குறித்தும்  பல செய்திகளை நாம் அறியலாம். விசுவாசமாக ஜெபிப்பது மட்டுமல்ல, ஜெபித்துவிட்டு எப்படியும் தேவன் இந்த ஜெபத்துக்குப் பதில் தருவார். ஆனால், இந்த இக்கட்டான சூழ்நிலையில் எந்த அதிசய முறையில் தேவன் அதனைச் சந்திக்கபோகிறார் என்று ஆவலுடன் அதிசயத்துக்குக் காத்திருக்கும் அனுபவமும் அதனைப் பெற்றுக்கொள்ளும் அருளையும் பெற்றிருந்தார் அவர். ஆயிரக்கணக்கான அனாதைக் குழந்தைகளை வெறும் விசுவாச ஜெபத்தால்  மட்டுமே தேவ உதவி பெற்று ஆதரித்து வந்தார் அவர்.

அவரது வாழ்வில் நடந்த பல  சம்பவங்களில் ஒன்று...

ஒரு முறை அவரது ஆசிரமத்துக் குழந்தைகளுக்கு காலை உணவுக்கு கொடுப்பதற்குப் பால் வாங்குவதற்கு அவரிடம் பணம் இல்லை. இங்கிலாந்து நாட்டில் பொதுவாக பாலும் ரொட்டியும்தான் முக்கிய உணவு. முல்லர் அதிகாலையிலேயே எழுந்து தேவனிடம் தனது தேவையினை முறையிட்டார். "ஆண்டவரே,உமது வார்த்தையின்படியே இந்தக் குழந்தைகளை ஆதரித்து வருகின்றேன். இன்று இக்குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு பால் வாங்குவதற்குக்கூட என்னிடம் பணமில்லை. அன்பான ஆண்டவரே நீரே இந்தத் தேவையைப் பொறுப்பெடுத்துக்கொள்ளும். இந்தக் குழந்தைகளை உமது  பாதத்தில் ஒப்படைக்கிறேன்; பசியில்லாமல் பாதுகாத்துக்கொள்ளும்"  என்று ஜெபித்துக்கொண்டிருந்தார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.

அப்போது அவரது ஜெப அறையின் கதவு தட்டப்பட்டது. முல்லர் எழுந்து வந்து கதவைத் திறந்து அங்கே  நின்ற மனிதனிடம் என்ன என விசாரித்தார். அந்த மனிதன் கூறினான், "ஐயா, நான் பால் வண்டி (Milk Van)  ஓட்டக்கூடியவன்.  பக்கத்து நகருக்கு எனது பால் வண்டியில் தினசரி  பால் கொண்டு செல்கின்றேன்.  இன்று எனது வண்டியின் அச்சாணி சரியாக உங்களது இந்த ஆசிரமத்து கேட் எதிரே வரும்போது உடைந்துவிட்டது. வண்டியைச் சரிசெய்ய வேண்டுமானால் வண்டியின் எடையினைக் குறைக்கவேண்டும்; எல்லா பாலையும் இறக்கவேண்டும். உங்களது ஆசிரம பெயர் பலகையினைப்   பார்த்தேன். இந்த ஆசிரமம் அருகில் இருப்பதால் உங்களிடம் வந்தேன். பெரிய பாத்திரங்களைக் கொண்டுவந்து பாலைப் பிடித்துக்கொள்ளுங்கள்" என்றான். முல்லர் முழங்கால் படியிட்டு தேவனுக்கு நன்றி கூறினார்.

அன்று அவரது ஆசிரமத்துக் குழந்தைகளுக்கு வழக்கத்துக்கு  அதிகமான பால் கிடைத்தது. இதுபோல முல்லரின் ஆசிரமத்துப் பலத் தேவைகளை தேவன் அதிசயமாகச் சந்தித்து நடத்தினார். "காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதை" என்று இதனைத் தள்ளிவிட முடியாது. காரணம், ஒருமுறையல்ல பல முறை பல அதிசயங்கள் இதுபோல நடந்தன.  

அன்பானவர்களே, நமது தேவன் சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர், அவருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள். இந்தப் புத்தாண்டில் இதனை நாம் நினைவில்கொண்டு அவர்மேல் விசுவாசம்கொண்டு உறுதியாக நிற்போம். அவருக்கேற்ற வாழ்க்கை வாழ்ந்து அவரையே சார்ந்து வாழ்வோமானால் இந்த ஆண்டு மட்டுமல்ல, எந்நாளுமே அவருடைய உடனிருப்பையும் அதிசயமான வழிநடத்துதலையும் நாம் அனுபவிக்கலாம். 

தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712