"இயேசு எப்படிப்பட்டவரோ?"

 'ஆதவன்' 💚நவம்பர் 18, 2024. 💚திங்கள்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,380


"ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன், இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். " ( லுூக்கா 19 : 2, 3 )

ஒரு மனிதனின் ஆர்வத்தைப்பொறுத்தே ஒன்றினை அவன் பெற்றுக்கொள்கின்றான். உலக காரியங்களானாலும் ஆவிக்குரிய காரியமானாலும் இதுவே உண்மையாக இருக்கின்றது. ஒரு பொருளை விரும்பாத அல்லது அது குறித்து எந்த ஆர்வமுமில்லாதவனிடம் அந்தப் பொருளைக் கொடுத்தால் அவனுக்கு அதன் மதிப்புத் தெரியாது. 

ஆம் அன்பானவர்களே, நமக்கு நமது முன்னோர்கள் தேவனைப்பற்றி பல்வேறு கருத்துக்களைக் கூறியிருக்கலாம், வேதாகமத்தை வாசிக்கும்போது தேவனைப்பற்றி பல செய்திகளை வாசித்திருக்கலாம்,  நம்மை வழிநடத்தும் குருக்கள், பாஸ்டர்கள் தேவனைப்பற்றி கூறியிருக்கலாம். ஆனால் அது முக்கியமல்ல, நாம் தனிப்பட்ட முறையில் அவரை அறிந்திருக்கின்றோமா என்பதே முக்கியம்.  அப்படி நாம் அவரை அறிய அதிக கடின முயற்சி எடுக்கவேண்டிய அவசியமில்லை. இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடிய சகேயு போன்ற மனமிருந்தால் போதும். 

சகேயு பணத்துக்காகவோ, உலக ஆசீர்வாதத்துக்காகவோ, நோய் நீங்குவதற்காகவோ அவரைத் தேடவில்லை. மாறாக "அவர் எப்படிப்பட்டவரோ" என்று அறியும்படித் தேடினான். இப்படி நாமும் இயேசு கிறிஸ்துவை வாழ்வில் தேடினால் அவரைத் தனிப்பட்ட முறையில் இரட்சகராக அறிந்துகொள்ளமுடியும். அவனது இருதய ஆர்வத்தை அறிந்த இயேசு அவன் ஏறியிருந்த அத்திமரத்தடியில் வந்து அவனை நோக்கிப்பார்த்தார். 

"என்னைக்குறித்து விசாரித்துக் கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன்." ( ஏசாயா 65 : 1 ) எனும் வசனத்தின்படி அவரைப்பற்றி எதுவும் விசாரித்து அறியாத, அவரை வாழ்வில்  தேடாத  சகேயு அவரைக் கண்டுகொண்டான். ஒரே காரணம் இயேசு எப்படிப்பட்டவரோ என்று அறிய ஆர்வம் கொண்ட அவனது மனதின் ஆசை.  

அன்பானவர்களே, வேதாகமத்தை வாசிக்கும்போது அல்லது நல்ல பிரசங்கங்களைக் கேட்கும்போது, அல்லது  பரிசுத்தவான்களது அனுபவங்களைக்  கேட்கும்போது இவற்றை நாமும் வாழ்வில் அனுபவிக்கவேண்டும், இவர்கள் கூறும் இந்த இயேசு எப்படிப்பட்டவரோ எனும் எண்ணம் நமக்கு உண்மையிலேயே இருக்குமானால் அவரை நாம் தனிப்பட்ட முறையில் கண்டுகொள்ளலாம். நான் ஏற்கெனவே பல தியானங்களில் குறிப்பிட்டபடி தேவன் தன்னை யாரிடமும் வலுக்கட்டாயமாகத் திணிப்பதில்லை. ஆனால் ஒருவருக்கு அவரை அறியவேண்டுமெனும் சிறிதளவு ஆர்வமிருந்தாலும் அவருக்குத் தன்னை வெளிப்படுத்துவார்.

இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடிய  சகேயுவைப்போல அவரை வாழ்வில் பார்க்க ஆசைகொண்டு தேடுவோமானால் அவன் கண்டுகொண்டதுபோல அவரை நாம் தனிப்பட்ட முறையில் கண்டுகொள்வோம். மட்டுமல்ல, அவன் கண்டதுபோல மெய்யான மன மாற்றத்தையும் காண்போம். "இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே." ( லுூக்கா 19 : 9 ) என்று கூறியதுபோல அவர் நம்மைப்பார்த்தும் கூறி நம்மையும்  ஏற்றுக்கொள்வார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                     

மனிதர்களை நம்புவதைவிட...

 'ஆதவன்' 💚நவம்பர் 17, 2024. ஞாயிற்றுக்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,379



"மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்." ( சங்கீதம் 118 : 8, 9 )

நாம் ஒரு சமூகமாக வாழ்வதால் பொதுவாக நம்மில் அனைவரும் பல காரியங்களில் மற்றவரைச் சார்ந்து வாழவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. எவர் துணையும் எனக்குத் தேவையில்லை என்று நாம் உலகினில் வாழ முடியாது. இன்றைய தியான வசனம் மனுஷனையும் பிரபுக்களையும் நம்பக்கூடாது என்று கூறவில்லை. மாறாக, அவர்களை நம்புவதைவிடவும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம் என்று கூறுகின்றது. 

சில காரியங்களில் நமக்கு சிலர் உதவுவதாக  உறுதி கூறியிருப்பார்கள்; வாக்களித்திருப்பார்கள். ஆனால் நாம் அதனையே நம்பி இருப்பதைவிட கர்த்தர்மேல் பற்று உள்ளவர்களாக நாம் வாழவேண்டும். காரணம், நமக்கு உதவுவதாக வாக்களித்தவர்களது எதிர்காலம் நமக்குத் தெரியாது. உதாரணமாக, வசதியுள்ளவர்களாக இருந்து நமது குழந்தைகளின் கல்விக்கு இறுதிவரை உதவுவதாக  வாக்களித்த மனிதன் ஏதோ காரணங்களால் பொருளாதாரத்தில் நலிவுற்றுப் போய்விடலாம். அல்லது ஒருவேளை திடீரென்று இறந்துபோகலாம்.  

மட்டுமல்ல, மனிதர்களது குணங்கள் எப்போது மாறும் என்று நாம் சொல்லமுடியாது. எனவேதான் வேதம் கூறுகின்றது, "நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்." ( ஏசாயா 2 : 22 ) என்று. அதாவது, நாம் மனிதர்களது தயவு உதவி இவற்றைப் பெறவேண்டுமானாலும் தேவனது கிருபை நமக்கு அதிகமாகத் தேவையாக இருக்கின்றது.  எனவேதான் இன்றைய தியான வசனம், "கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்" என்று இருமுறை கூறுகின்றது. 

ஆம் அன்பானவர்களே, தேவன் மனிதர்களைபோன்றவரல்ல. "பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?" ( எண்ணாகமம் 23 : 19 ) என்று தேவனைப்பற்றி நாம் வாசிக்கின்றோம். மட்டுமல்ல, உலகினில் கர்த்தரால் கூடாத காரியமென்று எதுவுமில்லை. "கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? " ( ஆதியாகமம் 18 : 14 ) 

எனவே, மனிதர்களிடம் நாம் உதவியையும் தயவையும் பெற்றாலும் அவர்களை முற்றிலும் சார்ந்து வாழாமல் அவர்கள்மூலம் நமக்கு உதவும் தேவனையே நாம் சார்ந்துகொள்ளவேண்டும். காரணம்,  "அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ." ( தானியேல் 2 : 21 ) எனவே எந்த எதிர்மறையான சூழ்நிலையிலும் அவர் நமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட வல்லவராய் இருக்கின்றார். 

யார் நமக்கு உதவுவதாக வாக்களித்தாலும் அதனை நாம் தேவ பாதத்தில் வைத்து ஜெபிப்போம். எந்தச் சூழ்நிலையிலும் தேவன்மேல் உறுதியான நம்பிக்கைகொண்டு வாழ்வோம். மனிதர்களது வாக்குறுதிகள் மேல் முழு நம்பிக்கைவைக்காமல் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்போம்.  ஒரு வழி அடைந்தாலும் அவரால் மறுவழி திறக்க முடியும். எந்த சூழ்நிலையிலும் அவரால் நமக்கு உதவிட முடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

ஏசாயா 41 : 17

 'ஆதவன்' 💚நவம்பர் 16, 2024. 💚சனிக்கிழமை           வேதாகமத் தியானம் - எண்:- 1,378

"சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்." ( ஏசாயா 41 : 17 )

நமது தேவன் எளிமையும் சிறுமையுமானவர்களை மறந்துவிடுபவரல்ல. மாறாக மற்ற அனைவரையும்விட அவர்களை அவர் அதிக அக்கறையுடன் கவனிக்கின்றார். தாவீது ராஜா இதனை அனுபவபூர்வமாக அறிந்திருந்தார். அவரது குடும்பத்தில் அவர் அற்பமானவராக இருந்தார். எளிமையான ஆடுமேய்ப்பவனாக வாழ்ந்தார். ஆனால் அவரைத்தான் தேவன் இஸ்ரவேலின் ராஜாவாக உயர்த்தினார். இந்த அனுபவத்தில் அவர் கூறுகின்றார், "எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை." ( சங்கீதம் 9 : 18 )

இதனையே இன்றைய தியான வசனத்தில்,  "சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்" என்று தேவனும் கூறுகின்றார். அதாவது எந்த மனித உதவியும் கிடைக்காமல் வெய்யில் காலத்தில் தண்ணீரைத் தேடி அலைந்து நாவறண்டு போனவன்போல அலையும் சிறுமையானவர்களை நான் கைவிடாதிருப்பேன் என்கின்றார் தேவனாகிய கர்த்தர்.   

நம்  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தனது மலைப் பிரசங்கத்தில், "துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்." ( மத்தேயு 5 : 4 ) என்றும் "நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது." ( மத்தேயு 5 : 10 ) என்றும் கூறவில்லையா? 

தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழும்போதும் துன்பம் நமது வாழ்வில் தொடர்கதையாக இருக்குமானால் நாம் பாக்கியவான்கள். நமக்குத் தேவன் ஆறுதல் தருவார். அதுபோல அநியாயமாக நாம் உலக மனிதர்களால் நெருக்கப்படும்போது, நமக்கு இந்த உலகத்தில் நீதி கிடைக்காமல் போகும்போது நாம் பாக்கியவான்கள் என்கின்றார். 

இந்த உலகத்தில் கோடிக்கணக்கான ஏழைகளும், நீதி மறுக்கப்பட்டவர்களும் உண்டு. ஆனால் ஏன் எல்லோரையும் தேவன் அப்படி உயர்த்தவில்லை என நீங்கள் எண்ணலாம். காரணம் என்னவென்றால், தேவனது பார்வையில் எல்லோரும் தேவனுக்கேற்ற நீதி வாழ்க்கை வாழ்பவர்களல்ல; தேவனுக்காக காத்திருப்பவர்களுமல்ல. இன்றைய தியான வசனம் தேவனுக்கேற்ற வழக்கை வாழ்பவர்களைப்பற்றி மட்டுமே குறிப்பிடுகின்றது. வேதாகம வசனங்களை நாம் எப்போதும் ஆவிக்குரிய கண்ணோட்டத்திலேயே பார்க்கப் பழகவேண்டும். உலக அர்த்தம்கொண்டு பார்ப்போமானால் அவை பார்வைக்குப் பைத்தியக்காரத்தனம்போலத் தெரியலாம். 

ஆம் அன்பானவர்களே, இதனை வாசிக்கும் நீங்கள் இன்று ஒருவேளை இன்றைய தியான வசனத்தில் கூறப்பட்டுள்ளதுபோல சிறுமையும் எளிமையுமானவர்களாகத்   தண்ணீரைத் தேடி (உலக மக்களது உதவியைத்தேடி) அது கிடையாமல்,  தாகத்தால் நாவு வறண்டவர்களாக இருக்கலாம். ஆனால், தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ்பவர்களென்றால் கர்த்தராகிய ஆண்டவர் உங்களைப்பார்த்துக் கூறுகின்றார், "கர்த்தராகிய நான் உங்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் உங்களைக் கைவிடாதிருப்பேன்". கலங்காதிருங்கள்.
 
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்              

காலத்தைப் பயன்படுத்திக்கொள்வோம்

 'ஆதவன்' 💚நவம்பர் 15, 2024. 💚வெள்ளிக்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,377


"நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்." ( எபேசியர் 5 : 16 )

இந்த உலகத்தில் வாழ்வதற்கு ஒவ்வொருவருக்கும் தேவன் குறிப்பிட்ட நாட்களைக் குறித்துள்ளார். நமது இந்த உலக வாழ்க்கையின் அடிப்படையிலேயே நமது மறுவுலக வாழ்க்கை அமையும். மேலும், இந்த உலகம் பொல்லாத உலகமாய் இருக்கின்றது. நமது ஆன்மாவை பாவத்துக்கு நேராக இழுத்து அதனைத் தீட்டுப்படுத்த உலகினில் பல காரியங்கள் உண்டு. இவை அனைத்தையும் நினைவில்கொண்டு நாம் நமக்குத் தேவன் கொடுத்துள்ள காலத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம்.

எனவே இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்." ( எபேசியர் 5 : 17 ) என்கின்றார். ஆம் அன்பானவர்களே, நாம் மதியற்றவர்களைப்போல வாழாமல் நம்மைக்குறித்த தேவச் சித்தம் அறிந்தவர்களாக வாழவேண்டியது அவசியம். "நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது." (1 தெசலோனிக்கேயர் 4;3) என்று வாசிக்கின்றோம். 

எனவே, பரிசுத்தராகவேண்டும் எனும் எண்ணம் சிறிதளவும் இல்லாமல் வாழ்வது, தேவனைக்குறித்த எண்ணமில்லாமல் வாழ்வது, பாவத்திலேயே  மூழ்கி ஆவியில் மரித்த வாழ்க்கை வாழ்வது போன்ற செயல்கள்   நமக்குக் கொடுக்கப்பட்டக் காலத்தை வீணாக்குவதாகும். "ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார். ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து" ( எபேசியர் 5 : 14, 15 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். 

ஆம் அன்பானவர்களே, எனவே நாம் நமக்குக் கொடுக்கபட்டக் காலத்தை பயனுள்ளதாக்கிக்கொள்ள வேண்டும். ஒரு மாணவன் தேர்வுக்குத் தயாராகும்போது எவ்வளவு கவனமுடன் இருப்பான் என்பது நமக்குத் தெரியும். அதுபோல காலத்தை வீணாக்கும் மாணவன் இறுதியில் எப்படி தேர்வு முடிவு வெளியாகும்போது வெட்கப்பட்டு அவமானம் அடைவான் என்பதும் நமக்குத் தெரியும். எனவே நாம் நமது ஆவிக்குரிய காரியங்களில் அதிக அக்கறையுடன் செயல்பட அழைக்கப்படுகின்றோம். 

நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய கால ஓட்டத்தில் நாம் முன்னேறிச்செல்ல நமது சுய இச்சைகளும், நமது நண்பர்களும், நமது உடன் பணியாளர்களும் மட்டுமல்ல நமது மனைவியோ கணவனோகூட தடையாக இருக்கலாம். இந்தத் தடைகளை நாம் மேற்கொள்ளவேண்டும்.  

தேவன் எப்போது வருவார் என்றோ, நமது இறுதி நாட்கள் எப்போது வருமென்றோ நமக்குத் தெரியாது. ஆனால் ஒருவரும் கெட்டுப்போகக்கூடாது என்று தேவன் விரும்புவதால் ஒவ்வொருவருக்கும் தங்களைத் திருத்திக்கொள்ள வாய்ப்பளிக்கின்றார்.   "தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." ( 2 பேதுரு 3 : 9 ) எனவே  நமக்குக் கொடுக்கபட்டக் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்வோம்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்           

குழந்தைகள்

 'ஆதவன்' 💚நவம்பர் 14, 2024. 💚வியாழக்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,376


"சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது." ( மாற்கு 10 : 14 )

இன்று நவம்பர் 14 ஆம் நாள் நாம் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகின்றோம். குழந்தைகளைப் பொதுவாக எல்லோருக்கும் பிடிக்கும்.  நாம் அவற்றின் அழகையும் கள்ளமற்ற பேச்சுக்களையும் ரசிக்கின்றோம். இதைவிட நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து குழந்தைகளை அதிகம் நேசித்தார். சிறு குழந்தைகளை அவர் தொட்டு ஆசீர்வதிக்கவேண்டுமென்று குழந்தைகளை அவரிடம்  கொண்டுவந்தவர்களைச்  சீடர்கள் அதட்டினர். அவர்களைப்பார்த்து இயேசு கூறியதே இன்றைய தியான வசனம். 

இன்றைய தியான வசனத்தில் அவர் தேவனுடைய ராஜ்ஜியம் குழந்தைகளுக்குரியது என்று கூறாமல் அப்படிப்பட்டவர்களுடையது என்று கூறுகின்றார்.   அதாவது, குழந்தையைப்போன்ற மனதை உடையவர்களே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கத் தகுதியானவர்கள் என்கின்றார். காரணம், குழந்தைகளிடம் கள்ளம் கபடம் கிடையாது, அவர்களுக்கு ஏமாற்றத் தெரியாது, பொய் தெரியாது, வஞ்சனை கிடையாது, மேலும் வளர்ந்தவர்கள் செய்யும் பல பாவ குணங்கள் கிடையாது.

பொதுவாக நாம் குழந்தைகளிடம், "நீ வளர்ந்து பெரியவன் ஆகும்போது யாராகவேண்டுமென்று  விரும்புகின்றாய்?" என்று கேட்பதுண்டு. சிலர், நீ இன்னரைப்போல வரவேண்டும் என்று சிலத் தலைவர்களைக் குறிப்பிட்டுக் குழந்தைகளிடம் "அவரைப்போல வரவேண்டும்" எனச் சொல்வதுண்டு. இப்படி மனிதர்கள் நாம் பெரியவர்களை குழந்தைகளுக்கு முன்மாதிரியாகக் காட்டுகின்றோம். ஆனால் ஆண்டவராகிய இயேசு பெரியவர்களுக்கு குழந்தைகள்தான் முன்மாதிரி என்கின்றார். பெரியவர்கள் குழந்தைகளை முன்மாதிரியாகக்கொண்டு வாழவேண்டும் என்கின்றார் அவர்.  

குழந்தைகளின் இன்னொரு குணம் எதனையும் நம்புவது. பெரியவர்கள் நாம் கூறுவதைக் குழந்தைகள் அப்படியே நம்பும். அதுபோல நாம் தேவனுடைய வார்த்தைகளைக்  குறித்து சந்தேகப்படாமல் குழந்தைகள்  நம்புவதுபோல நம்பி ஏற்றுக்கொள்ளவேண்டும். இதனையே இயேசு கிறிஸ்து, "எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உஙகளுக்குச் சொல்லுகிறேன்." ( மாற்கு 10 : 15 )  என்று கூறுகின்றார். 

இன்று மனிதர்களாகிய நாம் மூளை அறிவால் பலவற்றைச் சிந்திக்கின்றோம். ஆனால் தேவன் மூளை அறிவினால் அறியக்கூடியவரல்ல. அவரை நாம் விசுவாசக் கண்கொண்டு பார்த்து விசுவாசிக்கவேண்டும். "நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்". ( மாற்கு 9 : 23 ) என்று கூறவில்லையா? ஆம் அன்பானவர்களே, சிறு குழந்தையைப்போல வேத வசனங்களையும் வேத சத்தியங்களையும் நாம் விசுவாசத்தால் ஏற்றுக்கொண்டு வாழவேண்டியதே கிறிஸ்தவ வழிகாட்டுதல். 

இன்று நமக்கு அறுபது,  எழுபது அல்லது அதற்கும் மேலான வயதாகியிருக்கலாம். ஆனால் நாம் இந்த வயதை மறந்து கிறிஸ்துவுக்குள் மறுபடி பிறக்கவேண்டியது அவசியம். மறுபடி பிறந்து குழந்தையின் குணங்களைத் தரித்துக்கொள்ளவேண்டியது அவசியம். எனவேதான் இயேசு கிறிஸ்து நிக்கோதேமுவிடம் கூறினார், "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்." ( யோவான் 3 : 3 ) 

கிறிஸ்துவின் இரத்தத்தால் நமது பாவங்கள் கழுவப்படும்போது நாம் மறுபடி பிறக்கின்றோம். குழந்தைகளாகின்றோம். நமது பழைய பாவங்களை அவர் மன்னித்து நம்மைப் புதிதாக்குகின்றார். எனவே நமது பாவங்கள் மீறுதல்களை அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம்; குழந்தைகளாக புதுப்பிறப்பெடுப்போம். அப்போது நாம் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமில்லாதவர்களாக இருப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்        

சிறுமையடையும் சிங்கக்குட்டிகள்

 'ஆதவன்' 💚நவம்பர் 13, 2024. 💚புதன்கிழமை             வேதாகமத் தியானம் - எண்:- 1,375

"சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங்குறைவுபடாது." ( சங்கீதம் 34 : 10 )

உலகத்தில் நமது பலம் செல்வாக்கு இவற்றை நாம் முழுவதுமாக நம்பிவிடாமல் தேவனைச் சார்ந்து வாழவேண்டும் என்பதனை இன்றைய தியான வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது.  சிங்கம் மிகவும் பலம் வாய்ந்த விலங்கு. காட்டுக்கே அது ராஜா. ஆனால் அப்படி பலமுள்ளதாக இருப்பதால் எப்போதும் அவற்றுக்குத் தேவையான உணவு கிடைத்துவிடுவதில்லை. சிலவேளைகளில் உணவு கிடைக்காமல் அவை அலைந்து திரியும். அவற்றின் குட்டிகளும் பட்டினியால் வாடும். 

இதனையே தாவீது ராஜா கண்டு இன்றைய தியான வசனத்தில்  உவமையாகக் கூறுகின்றார். தனது அனுபவத்தில் கண்டு உணர்ந்ததையே  அவர் கூறுகின்றார். இன்று நாம் பணபலம், அதிகார பலம் கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் இவற்றையே நிரந்தரம் என நம்பிக்கொண்டு வாழ்வோமானால் இவை அழியும்போது நாம் தாழ்த்தப்பட்டுப்போவோம். ஆம்,  இன்று சிங்கத்தைப்போல வாழ்ந்தாலும் பலமுள்ள சிங்கத்தின் குட்டிகள் பட்டினியால் வாடுவதுபோல வாடிப்போவோம் என்கின்றார். 

ஆனால் நாம் கர்த்தரைத் தேடுபவர்களாக வாழும்போது நமக்கு எந்த நன்மையும் குறைந்துபோகாது. இன்று பல முற்காலத்துத் திரைப்பட பிரபலங்களைக் குறித்து அடிக்கடி பத்திரிகைகளில் நாம் வாசிக்கின்றோம். பெயரும், வசதியும் குறைவில்லாமல் வாழ்ந்திருந்த அவர்கள் இன்று ஒருவேளை நல்ல உணவுக்குக்கூட வகையற்றவர்களாக இருப்பதை நாம் வாசிக்கின்றோம். மட்டுமல்ல, பல முன்னாள்  பிரபலங்களின்  பிள்ளைகள் இன்று பிச்சையெடுத்துக்கூட வாழ்கின்றனர்.  ஆம், "சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங்குறைவுபடாது".

தமிழக அமைச்சராக இருந்த ஒருவரது மகன் ஒரு தனியார் நிறுவனத்தில் வெறும் 5,000 ரூபாய் மாதச் சம்பளத்தில் வேலைபார்ப்பதை ஒருமுறை கண்டேன். மட்டுமல்ல, அந்தப் பணத்தையும் குடித்துச்  சீரழித்து நல்ல குடும்ப வாழ்க்கையும் இல்லாமல் இருப்பதைக் கண்டேன். சிங்கத்தின் குட்டிதான்; ஆனால் இன்று தாழ்ச்சியடைந்து விட்டது. 

சக்கரியா தீர்க்கத்தரிசி மூலம் கர்த்தர் நமக்குக் கூறுகின்றார், "பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." ( சகரியா 4 : 6 ) என்று. மகனே, மகளே பணம், பதவி போன்ற பலமும் பராக்கிரமுமல்ல, மாறாக கர்த்தரை நம்பி வாழ்வாயானால் அவரது ஆவியினால் உன்னைக் குறைவில்லாமல்  நடத்த முடியும் என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

எனவே நாம் இன்று நல்ல நிலையில் சிங்கம்போல இருந்தாலும், நமக்கு பணம், பதவி, செல்வாக்கு மிக இருந்தாலும் நாம் நமது நம்பிக்கையை அவற்றின்மேல் வைத்திடாமல் கர்த்தர்மேல் வைக்கக் கற்றுக்கொள்வோம். அப்படி அவரையே நம்பி வாழ்வோமானால் நமக்கு எந்த நன்மையும் குறைவுபடாமல் அவர் காத்துக்கொவார். மட்டுமல்ல, நமது சந்ததிகளும் ஆசீர்வாதமாக வாழ்வார்கள். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்          

தேவனை அறியும் அறிவு

 'ஆதவன்' 💚நவம்பர் 12, 2024. செவ்வாய்க்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,374

 

"தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்." ( ரோமர் 1 : 28 )

நாம் தேவனை வெறுமனே வழிபடுகின்றவர்களாய் இராமல் அவரைத் தனிப்பட்ட விதத்தில் அறிந்து வழிபடவேண்டியது அவசியம். இந்த உலகத்தில் நாம் பல அதிகாரிகள், உயர் பதவியில் உள்ளவர்கள், அமைச்சர்கள் முதலானோரைப் பற்றி அறிந்திருக்கின்றோம். அவர்களுக்கு மரியாதை செலுத்துகின்றோம், சில காரியங்களுக்காக அவர்களை அணுகுகின்றோம்.  ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதில்லை.  குறிப்பிட்ட நேரத்தில் அவர்களுக்கு மரியாதை செய்துவிட்டுப் பின்னர் மறந்துபோகின்றோம். 

இதுபோலவே நம்மில் பலரும் தேவனது காரியத்தில் இருக்கின்றனர். ஆலயங்களுக்குச் சென்று ஆராதிப்பது, ஜெபிப்பது, வேதம் வாசிப்பது, போன்ற காரியங்களைச் செய்கின்றனர். அதனால் தேவனை அறிந்திருப்பதாக எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "தேவனை   அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்." என்று. 

தேவனை நாம் தனிப்பட்ட விதத்தில் அறியாதிருந்தால் கேடான சிந்தனைகளும் செயல்பாடுகளும்தான்  நம்மில் இருக்கும். இதனையே அவர் தேவனை அறியாதவர்கள் செய்யும் காரியங்களாகப் பட்டியலிட்டுக் கூறுகின்றார். அதாவது, தேவனை அறியாவிட்டால், சகலவித அநியாயம்,  வேசித்தனம், துரோகம், பொருளாசை, குரோதம், பொறாமை, கொலை, வாக்குவாதம், வஞ்சகம், வன்மம்,  புறங்கூறுதல், அவதூறுபண்ணுதல், தேவபகை, அகந்தை, வீம்பு, பொல்லாதவைகளை யோசித்துப்பிணைத்தல், பெற்றாருக்குக் கீழ்ப்படியாமை, பாவ  உணர்வில்லாமை, உடன்படிக்கைகளை மீறுதல், சுபாவ அன்பில்லாமை, இணங்காமை, இரக்கமில்லாமை. ( ரோமர் 1 : 29 -  31 ) இவைகள் நம்முள்  இருக்கும் என்கின்றார். 
  
வெறுமனே தேவனை ஆராதித்துக்கொண்டு மட்டுமே இருப்போமானால் மேலே குறிப்பிட்டப்  பாவ காரியங்கள் நமக்குள் இருக்கும். ஆனால் தனிப்பட்ட முறையில் அவரை அறியும்போது இந்தக் காரியங்கள் நம்மைவிட்டு அகலும். இன்றைய தியான வசனம் கூறுகின்றது அவரை அறியாத காரணத்தால், அல்லது அவரை அறியவேண்டும் எனும் எண்ணம் இல்லாத காரணத்தால்  அவரே இத்தகைய இழிவான காரியங்கள் செய்யும்படி அவர்களை ஒப்புக்கொடுத்தார் என்று. 

அன்பானவர்களே, நாம் கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு மீட்பு அடையும்போது நாம் அவரைத் தனிப்பட்ட முறையில் அறிந்தவர்களாகவும் அவரது ஆவியின் பிரமாணத்துக்கு உட்பட்டவர்களாகவும் வந்துவிடுகின்றோம். வேதம் கூறும் கட்டளைகள்  (நியாயப்பிரமாணம்) மற்றும் பாவங்களை நாம் மேற்கொண்டுவிடுகின்றோம். 

இதனையே அப்போஸ்தலரான பவுல், "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8 : 2 ) என்று கூறுகின்றார். இது எப்படிச் சாத்தியமாயிற்று என்பதனையும் பின்வருமாறு விளக்குகின்றார்:- "அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்." ( ரோமர் 8 : 3 )

ஆம் அன்பானவர்களே, கட்டளைகளால் செய்ய முடியாததை தாமே நமக்காகச் செய்து முடிக்கும்படி கிறிஸ்து பலியானார். எனவே, அவரது இரத்தத்தால் பாவங்கள் கழுவப்படும் அனுபவத்துக்குள்  வரும்போது மட்டுமே நாம் அவரைத் தனிப்பட்ட முறையில் அறிந்தவர்களாகவும்  பாவங்களுக்கு விலகினவர்களாகவும் வாழமுடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்        

2 கொரிந்தியர் 7 : 1

 'ஆதவன்' 💚நவம்பர் 11, 2024. 💚திங்கள்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,373

 

"பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்." ( 2 கொரிந்தியர் 7 : 1 )

நமது தேவன் எதிலும் முழுமையை விரும்புகின்றவர். அதனையே இங்கு பூரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆவிக்குரிய வாழ்வில் பூரணம் என்பது நாம் தேவனைப்போல பரிசுத்தமாவது. நாம் அதனை நோக்கியே பயணிக்கவேண்டும். அதற்கான வழியாக அப்போஸ்தலரான பவுல், "மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு"  என்று குறிப்பிடுகின்றார். அதாவது நாம் உடலளவிலும் ஆத்தும அளவிலும் சுத்தமாக இருக்கவேண்டும்.

உடலளவில் சுத்தம் என்பது வெறுமனே தினமும் சோப்புப்போட்டு குளிப்பதைக் குறிப்பிடவில்லை. அப்படி உலகிலுள்ள எல்லோரும் குளிக்கின்றனர். ஆனால் கிறிஸ்த வாழ்வில் உடலளவில் சுத்தம் என்பது பாவமில்லாமல் உடலைப் பேணுவத்தைக் குறிக்கின்றது. "களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம். துர்யிச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்." ( ரோமர் 13 : 13, 14 ) என்று வாசிக்கின்றோம். முதலில் இத்தகைய அழுக்கு நம்மைத் தாக்காமல் காத்துக்கொள்ளவேண்டும்.

வெறும் ஆவிக்குரிய ஆராதனைகளில் கலந்துகொள்வது மட்டுமல்ல, உள்ளான மனிதனில் நாம் தூய்மையானவர்களாக வாழவேண்டியது அவசியம். இவை அனைத்தும் நம்மில் செயல்படவேண்டுமானால் முதலில் கிறிஸ்து இயேசுவின்மேல் அசைக்கமுடியாத விசுவாசம் இருக்கவேண்டியது அவசியம். அப்படி விசுவாசம் கொண்டு "அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்." ( 1 யோவான்  1 : 7 ) என்று கூறப்பட்டுள்ளது. 

இப்படி உடல் சுத்தத்தைப் பேணுவதுமட்டுமல்ல, தொடர்ந்து, மனம்திரும்புதலுக்கான ஞானஸ்நானம் பெறவேண்டியது அவசியம். அது மாம்சஅழுக்கு நீங்குவதற்கு ஒரு அடையாளம். மேலும்  அது கிறிஸ்துவோடு நாம் செய்துகொள்ளும் நல்மனசாட்சியின் உடன்படிக்கை என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பேதுரு. "ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.  ( 1 பேதுரு 3 : 21 ) என்கின்றார்.

தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியுடன் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசம் கொள்ளும்போதுதான் நம்மில் பரிசுத்தம் ஏற்படமுடியும். எனவேதான் அப்போஸ்தலரான யோவான் கூறுகின்றார்,  " அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக் கொள்ளுகிறான்." ( 1 யோவான்  3 : 3 )  நாமும் அவர்மேல் அசைக்கமுடியாத நம்பிக்கைக் கொண்டு பாவ மன்னிப்பைப்பெற்று, அதனை உறுதிப்படுத்தும் உடன்படிக்கையான  ஞானஸ்நானத்துடன் அவரைப்போல  பூரணம் அடைந்திடுவோம்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

மாற்கு 12 : 17

 'ஆதவன்' 💚நவம்பர் 10, 2024. ஞாயிற்றுக்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,372


"இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்." ( மாற்கு 12 : 17 )

ஆவிக்குரிய வாழ்க்கை என்பது நாம் தேவனுக்குமுன்பாக உண்மையுள்ளவர்களாக இருப்பது மட்டுமல்ல, இந்த உலக வாழ்க்கையிலும் நாம் உண்மையுள்ளவர்களாக இருப்பதாகும். வரிகொடுப்பது, அதிகாரிகளை மதிப்பது, நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவது என அனைத்துக் காரியங்களிலும் நாம் கீழ்ப்படிந்து உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். 

தானியேல் இப்படித்தான்  வாழ்ந்தார். ராஜா உட்பட அனைவரும் தானியேலின் ஜெப வாழ்க்கைமட்டுமே அவருக்கு வெற்றியைத் தந்தது என்று எண்ணிக்கொண்டனர். எனவேதான் சிங்கக் கெபியினுள் போடப்பட்ட தானியேலிடம் ராஜா, "தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான்." ( தானியேல் 6 : 20 )

ராஜாவுக்குத் தானியேலின் ஜெப வாழ்க்கைதான் முக்கியமாகத் தெரிந்திருந்தது. ஆனால் ராஜாவுக்குத் தானியேல் கூறும் பதில், "சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்." ( தானியேல் 6 : 22 ) அதாவது, ஜெபித்ததால் மட்டுமல்ல;  மாறாக, தேவனுக்குமுன் நான் குற்றமற்றவனாகக் காணப்பட்டேன் அதுபோல ராஜாவுக்கு எதிராகவும் (உலக வாழ்க்கையிலும், அரசாங்க காரியங்களிலும்)  நான் நீதிகேடுசெய்யவில்லை. எனவே தேவன் என்னைச் சிங்கங்களுக்குத் தப்புவித்தார் என்கிறார்.     

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் ஒழுங்காக வரியைச் செலுத்திவந்தார். வரி வசூலிப்பவர்கள் பேதுருவிடம் வந்து வரிகேட்டபோது அதை அவர் இயேசு கிறிஸ்துவிடம் வந்து கூறினார். அவருக்கு இயேசு, "நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்." ( மத்தேயு 17 : 27 ) ஆம், ஆவிக்குரியவர்கள் மற்றவர்களுக்கு இடறலாக இருக்கக்கூடாது. 
 
அப்போஸ்தலரான பவுல் அடிகள்,  "ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்." ( ரோமர் 13 : 7 ) என்று கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, அதிகநேரம் ஜெபிப்பதும், ஆலயங்களில் ஆராதனைகளில் கலந்துகொள்வதும், ஜெபக்கூட்டங்களில் பங்குபெறுவதும்  மட்டும் ஆவிக்குரிய வாழ்க்கையல்ல; மாறாக உலக காரியங்களிலும் நாம் உண்மையுள்ளவர்களாக, பிறரை ஏமாற்றாமல், நேர்மையாகத் தொழில் செய்து,  அரசாங்க சட்டதிட்டங்களை மதிப்பவர்களாக வாழவேண்டியது அவசியம். தானியேல் கூறுவதுபோல, "தேவனுக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை" என்று வாழ்வதுதான் ஆவிக்குரிய வாழ்க்கை.  இத்தகைய ஒரு வாழ்க்கை வாழும்போதுதான்  தேவன் நம்மையும் பலருக்குப் பயனுள்ளவர்களாக மாற்றுவார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்        

லுூக்கா 4 : 4

 'ஆதவன்' 💚நவம்பர் 09, 2024. 💚சனிக்கிழமை             வேதாகமத் தியானம் - எண்:- 1,371

"மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே" ( லுூக்கா 4 : 4 )

இயேசு கிறிஸ்து நாற்பதுநாள் உபவாசமிருந்து பசித்திருக்கும்போது  அவரைச் சோதிக்கும்படி சாத்தான் அவரிடம் கற்களை அப்பமாக மாற்றும்படி கூறியது. அதாவது, உமக்குத்தான் வல்லமை இருக்கிறதே அப்படி இருக்கும்போது நீர் ஏன் பசியினால் வாடவேண்டும்? இந்தக் கற்களை அப்பங்களாக மாற்றி உண்ணும் என்றது. சாத்தானுக்கு மறுமொழியாக இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார். 

இந்த வசனம் பழைய ஏற்பாட்டு நூலிலிருந்து இயேசு எடுத்துக் கூறுவதாகும். உபாகமம் நூலில், "அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்." ( உபாகமம் 8 : 3 ) என்று நாம் வாசிக்கின்றோம். 

நாம் இன்று உலக வாழ்க்கையில் மற்றவர்களைவிட சிறுமைப்பட்டவர்களாக இருக்கலாம்.  உலக செல்வங்கள் மற்றவர்களைப்போல் நமக்கு இல்லாமலிருக்கலாம். ஆனால் நமக்கு மேலான ஆவிக்குரிய அனுபவங்களைத் தருவதற்கு தேவன் இந்தச் சிறுமையை நமக்கு அனுமதித்திருக்கலாம். உலக செல்வங்கள் மட்டும் இந்த உலகத்தில் நாம் நல்ல வாழ்க்கை வாழ போதுமானவையல்ல, மாறாக தேவனது வாயிலிருந்து வரும் வார்த்தைகள்  நம்மை உயிரூட்டவேண்டியது அதைவிட அவசியம்.  

2007 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் நாளில் நான் ஜெபித்து வேதம் வாசிக்கும்போது தேவன் உபாகமம் 8 ஆம் அதிகாரத்தை எனக்கு வாக்குத்தத்தமாகத் தந்தார். பின்னர் 2009 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் நாளில் இதனை மறுபடியும் நினைவூட்டினார்.  "உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக." ( உபாகமம் 8 : 2 ) எனும் வார்த்தைகளை வாசிக்கும்படி கூறி எனது சிறுமைக்குக் காரணத்தை எனக்குத் தெளிவுபடுத்தினார். 

பின்னர், "உன்னுடைய பின்னாட்களில் உனக்கு நன்மைசெய்யும் பொருட்டு..." ( உபாகமம் 8 : 15 ) இவைகளைச் செய்கிறேன் என்று கூறினார்.   "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" என்பதனையும்,  வேதாகமமும் தேவனுடைய வார்த்தைகளும் 100% மெய்யானவை என்பதனையும்  நான் அனுபவத்தில் உணரும்படியாக தேவன் இப்படிச் செய்தார்.  "நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்." எனும் வார்த்தையின்படி கிறிஸ்தவர்களாக இருந்தாலும் நானும் எனது தாய் தந்தையரும் அதுவரை அறியாத உயிருள்ள மன்னாவாகிய கிறிஸ்துவை நான் அனுபவிக்கும்படிச் செய்தார். 

ஆம் அன்பானவர்களே, இன்றைய நமது கஷ்டமான வாழ்க்கைச் சூழல்களே பல வேத சத்தியங்களை நாம் அனுபவித்து உணர உதவும்.  அப்பமாகிய உலகச் செல்வங்களல்ல; தேவனது வாயிலிருந்து புறப்படும்  வார்த்தைகளே நம்மை பிழைக்கச்செய்யும். சாத்தான் இயேசு கிறிஸ்துவிடம் கூறியதுபோல கற்களை அப்பமாக்கும் திடீர் ஆசீர்வாதம் நமக்குத் தேவையில்லை. அவரது வார்த்தைகளை உணவாக உட்கொள்ளும் ஆசீர்வாதமே மேலான வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக அமையும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

ஆவிக்குரிய அனுபவங்களை நம்பமாட்டார்கள்

 'ஆதவன்' 💚நவம்பர் 08, 2024. 💚வெள்ளிக்கிழமை  வேதாகமத் தியானம் - எண்:- 1,370


"அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள்". ( லுூக்கா 16 : 31 )

இன்றைய தியான வசனம் இயேசு கிறிஸ்து கூறிய கெட்ட குமாரன் (ஊதாரி மைந்தன்) உவமையில் வரும் செல்வந்தனை நோக்கி ஆபிரகாம்  கூறியதாக நாம் வாசிக்கின்றோம். 

இந்த உலகத்தில் பலர் எதனையும் கண்ணால் கண்டால்தான் நம்புவோம் என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் தங்களைப் பகுத்தறிவுவாதிகள் என்றும்  கூறிக்கொள்கின்றனர். ஆனால் எல்லாவற்றையும் கண்டுதான் நம்புவோம் என்று வாழ்வோமானால் இறுதியில் உண்மையை அறியாதவர்களாகவே வாழ்ந்து மடியவேண்டியதிருக்கும்.  இது தவறு என்று இயேசு கிறிஸ்து கூறுகின்றார். 

கிறிஸ்தவர்களில் பலர் இப்படி இருக்கின்றனர். பல ஆவிக்குரிய சத்தியங்களை முழு மனதுடன் இவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இப்படி வேதம் கூறும் பல சத்தியங்களையும் நம்பமுடியாத அதிசயம் நடந்தால்தான் நம்புவோம் எனக் கூறுவது மரித்தவர்கள் எழுந்து இந்த உலகத்தில் வந்து கூறினால்தான் நம்புவோம் என்று கூறுவதுபோல்தான் உள்ளது.  இந்த உவமையில் வரும் செல்வந்தன் அப்படி வாழ்ந்தவன்தான். வேதம் கூறும் பல்வேறு காரியங்களை வாசித்து அறிந்தவன்தான். ஆனால் அவன் அவற்றை நம்பி ஏற்றுக்கொண்டு தன்னைத் திருத்திக்கொள்ளவில்லை.  

இன்றும் கிறிஸ்துவால் இப்படி மரித்து உயிரோடு எழுப்பப்பட்டவர்கள் பலர் சாட்சி கூறியுள்ளனர். தங்களது மரித்த அனுபவத்தைக் குறித்து எழுதியுள்ளனர். ஆனால் அந்தச் சாட்சியையும் எல்லோரும் ஏற்றுக்கொள்வதில்லை. அவை புத்தி பேதலித்தவர்களின் உளறல்களாகவே பலரால் பார்க்கப்படுகின்றன. ஆம் அன்பானவர்களே, வேதத்தில் கூறப்பட்டுள்ள சத்தியங்களை விசுவாசத்தால் ஏற்றுக்கொள்ளாமல் தேவையற்ற நிபந்தனைகளை விதிப்பவர்கள் இயேசு கிறிஸ்து இந்த உவமையில் கூறுவதுபோல  மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள்.

இதுபோலவே, ஆவிக்குரிய நாம் கூறும் பாவ மன்னிப்பு,  இரட்சிப்பு அனுபவங்களை கிறிஸ்தவர்களில் பலர்கூட  நம்புவதில்லை;  ஏற்றுக்கொள்வதில்லை. காரணம் பாரம்பரியம். தங்களது சபையில் கற்பிக்கப்பட்ட பாரம்பரிய முறைமைகள் இவற்றை நம்பாதபடி அவர்களைத் தடுக்கின்றன. அப்போஸ்தலரான பவுல்,  "நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன? நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்." ( ரோமர் 8 : 24, 25 ) என்று கூறுகின்றார். 

இதுவரை உண்டிராத ஒரு புதுவித பழத்தை நாம் உண்ணும்போது  அதனை இதுவரைச்  சுவைத்திராத மற்றவர், "இந்தப்பழம் நல்லா இருக்காது......நாம் ஏற்கெனவே சாப்பிடும் பழங்கள் இதனைவிடச் சுவையாக இருக்கும்" என்று கூறுவாரானால் அவரைப்போன்ற அறிவிலி இருக்கமாட்டான். ஆவிக்குரிய அனுபவம் இல்லாதவர்கள் ஆவிக்குரிய மக்களைப்பார்த்து கூறுவது இதுபோலவே இருக்கின்றது. "எங்கள் சபையில் இல்லாததா உங்கள் அனுபவத்தில் இருக்கப்போகிறது?"  என்கின்றனர்.

ஆம், இயேசு கிறிஸ்து கூறுவதுபோல, "மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள்" தேவன் எழுதிக்கொடுத்துள்ள வேதாகமத்தை முற்றிலும்  நம்பாதவர்கள் எந்த வித மேலான ஆவிக்குரிய அனுபவங்களை அதனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் கூறினாலும் நம்பமாட்டார்கள். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்              

துன்மார்க்கன் நீதியைக் கற்றுக்கொள்ளான்

 'ஆதவன்' 💚நவம்பர் 07, 2024. 💚வியாழக்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,369


"துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்." ( ஏசாயா 26 : 10 )

தேவன் தனது இரக்கத்தின் பெருக்கத்தினால் அனைத்து மக்களுக்கும் சில நன்மைகளைச் செய்து கொண்டுதானிருக்கிறார். எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவனுக்கு மட்டுமே நான் நன்மைகள் செய்வேன் என்று அவர் கூறவில்லை. இப்படி தேவன் அனைவருக்கும் நன்மைகளைச்  செய்வதால் துன்மார்க்க வாழ்க்கை வாழ்பவர்கள் நீதி வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவதில்லை. இப்படி அவர்கள் தேவ கிருபையை புறக்கணிக்கிறார்கள். 

துன்மார்க்கன் இப்படி நன்மைகளைப் பெறும்போது அது தனது "அதிஷ்ட்டம்" (luck)  என்று கூறிக்கொள்கிறான். அல்லது தான் வணங்கும் ஏதோ ஒரு தெய்வத்தின் கருணை என்று சொல்லிக்கொள்கிறான். ஆனால் தொடர்ந்து தனது துன்மார்க்கச் செயல்களிலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான். இதனையே, தேவன்  "துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்"  என்று இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார்.    

இன்று உலகினில் வாழும் உலக ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கும் கோடிக்கணக்கான மக்களும் நீதிமான்களல்ல, மாறாக தேவனது கிருபையினால் இந்த ஆசீர்வாதங்களைப் பெற்று அனுபவிக்கின்றனர். இத்தகைய மனிதர்களை எவ்வளவு பெரிய நீதியைக் கடைபிடிக்கும் நாட்டில் கொண்டு வாழவைத்தாலும் அவர்கள் தொடர்ந்து அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறார்கள். 

இன்று உலகின் பணக்கார நாடுகளில் வாழும் மக்கள் நல்ல செலவச் செழிப்புடன் வாழ்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வதில்லை. செழிப்புடன் வாழ்கின்றனர் அவ்வளவே. இப்படி இவர்களுக்குத் தேவன் தயைசெய்திருந்தாலும் அவர்கள் தேவ நீதியை அறிந்துகொள்ளவில்லை. கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதே போகிறார்கள். ஆம் அன்பானவர்களே, உலக ஆசீர்வாதம் என்பது மட்டுமே தேவனை அறியவும் நமது துன்மார்க்கத்தைவிட்டு நாம் திரும்பிடவும் உதவாது. துன்மார்க்க மனம் உள்ளவன் எவ்வளவு நல்ல நிலையில் வாழ்ந்தாலும் தேவ நீதியை அறியாதவனாகவே இருப்பான். 

இன்றும் நாம் உலகினில் பல ஏழை மனிதர்கள் நீதியுள்ள வாழ்க்கை வாழ்வதைப் பார்க்கின்றோம். லட்சக்கணக்கான பணத்தை ஒருவர் ஆட்டோவில் தவறவிட்டுச் சென்றதை ஏழை ஆட்டோ ஓட்டுநர் அப்படியே கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தைச் செய்தி பத்திரிகைகளில் வெளிவந்ததை வாசித்திருப்பீர்கள். ஆனால் அதே நேரத்தில் அரசு பதவியில் இருந்து மாதம் எழுபதாயிரம் எண்பதாயிரம் மாதச் சம்பளம் வாங்கும் மனிதன் ஏமாற்றும் லஞ்சமும் வாங்கி பொருள் குவிக்கிறான். 

தேவனது தண்டனை உடனேயே கிடைக்காததால் தவறு செய்பவர் தன்னை தேவனுக்கேற்றவர் என எண்ணிக்கொள்ளவேண்டாம்.  என்பதையே இன்றைய தியான வசனம் அறிவுறுத்துகின்றது. ஆம், தேவன் தயைசெய்தாலும் அத்தகைய மனிதன் நீதியைக் கற்றுக்கொள்ளான்; தொடர்ந்து அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான் என்பதே உண்மை. கிறிஸ்துவின் வருகையில் இத்தகைய மனிதர்கள் அழுது புலம்புவார்கள். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                

நல்லது செய்யுமுன் நல்லவனாயிரு

 'ஆதவன்' 💚நவம்பர் 06, 2024. 💚புதன்கிழமை              வேதாகமத் தியானம் - எண்:- 1,368

 
"அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்." ( தீத்து 2 : 14 )

இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் தனது சீடன் தீத்துவுக்கு இயேசு கிறிஸ்து உலகத்தில் வந்து பாடுபட்டு மரித்ததன் நோக்கத்தை  நினைவூட்டுகின்றார்.  

அதாவது, நாம் ஏற்கெனவே செய்த பாவங்கள் அக்கிரமங்களிலிருந்து நம்மை விடுவித்து நம்மை அவரது சொந்த மக்களாக மாற்றவேண்டும் என்பதே தேவனின் பிரதான நோக்கம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னமேயே அவரது இவ்வுலக தந்தை யோசேப்புக்கு இது அறிவிக்கப்பட்டது. "அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்" ( மத்தேயு 1 : 21 )

இதனையே பவுல் அப்போஸ்தலர்  தனது சீடனான தீமோத்தேயுவுக்கும் கூறினார். "பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது" ( 1 தீமோத்தேயு 1 : 15 ) என்று. 

இன்றைய தியான வசனம் மேலும் கூறுகின்றது, பாவங்களை நீக்கி நம்மைச் சுத்திகரிப்பது மட்டுமல்ல,  "நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி" என்று. அதாவது நாம் அவர்மேல்கொண்ட பக்தியால் வைராக்கியத்துடன் நற்செயல்  செய்யவேண்டும். அதாவது, நாம் நல்லது செய்யவேண்டுமானால் முதலில் நாமே நல்லவர்களாக மாறவேண்டும். இப்படி மாற்றிடவே கிறிஸ்து உலகினில் வந்தார்.  

வெறுமனே நல்லது செய்வதால் ஒருவர் நல்லவராக முடியாது. காரணம் ஒருவன் துன்மார்க்கமாகச் சம்பாதித்தப் பணத்தைக்கொண்டு நல்ல செயல்களைச் செய்து தொடர்ந்து அதே துன்மார்க்கத்தில் விழுந்து கிடக்கலாம். துன்மார்க்கமாகச்  சம்பாதித்தப் பணத்தினால் நன்மைகள் செய்து மக்களது ஆதரவையும் அன்பையும் பெறலாம். "கொடை வள்ளல்" என்று பெயர் பெறலாம்; இப்படி இந்த உலகத்தையே ஒருவன் தனக்கு ஆதாயமாக்கிக்கொள்ளலாம். ஆனால், "மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?" ( மத்தேயு 16 : 26 ) என்கின்றார் இயேசு கிறிஸ்து. 

ஆம், பாவத்தில் தொடர்ந்து வாழ்ந்துகொண்டு நல்லது செய்வதில் அர்த்தமில்லை. உலக மார்க்கங்கள்,  "நல்லது செய்து நல்லவனாய் இரு" என்று கூறுகின்றன. ஆனால் கிறிஸ்துவோ, "நல்லது செய்யுமுன் நீயே நல்லவனாய் இரு" என்கின்றார். 

இப்படி நம்மை நமது பாவங்களிலிருந்து மீட்டு நாம் தொடர்ந்து இந்த உலகத்தில் நல்லவர்களாக வாழ்ந்து நற்செயல்கள் செய்யவேண்டும் என்பதற்கு நம்மைத் தகுதிப்படுத்தவே கிறிஸ்து இந்த உலகத்தில் வந்தார்.  ஆம் அன்பானவர்களே, வெறுமனே நல்லது செய்வதால் நம்மை நாமே நல்லவர்கள் என்று எண்ணி வாழ்ந்து ஏமாந்துபோகக்கூடாது. முதலில் நாம் மாறவேண்டும். இதனையே "நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கிய முள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. முதலில் கிறிஸ்துவின் இரத்தத்தால் பாவங்கள் கழுவப்பட்டு  நாம் சுத்திகரிக்கப் படவேண்டும்; பின்னர் நற்செயல்கள் செய்யவேண்டும். 

கிறிஸ்து உலகினில் வந்த நோக்கம் நம்மில் நிறைவேறிடத் தகுந்தவர்களாக வாழ்வோம். நமது மீறுதல்கள், பாவங்கள் அனைத்தையும் அவரிடம் அறிக்கையிட்டு அவரது மன்னிப்பை வேண்டுவோம். நல்லவர்களாய் வாழ்ந்து நாம் நற்செயல்கள் செய்ய அவரே நமக்கு உதவிடுவார்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                          

யோவான் 3:8

 'ஆதவன்' 💚நவம்பர் 01, 2024. 💚வெள்ளிக்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,363


"காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதன் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான்." (யோவான் 3:8)
ஆவிக்குரிய அனுபவத்துடன் ஒருவர் வாழ்வதை காற்று வீசுவதற்கு ஒப்பிட்டு இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து பேசுகின்றார்.

வெளிப்பார்வைக்கு மற்ற மனிதர்களைப்போல இருந்தாலும் பரிசுத்த ஆவியினால் மறுபடி பிறந்தவர்களது எண்ணங்களும் செயல்பாடுகளும் வித்தியாசமானவையாக இருக்கும். காற்று எங்கிருந்து வருகின்றது எங்கே செல்கின்றது என்று நமக்குத் தெரியாததுபோல் அதனை நாம் அறிய முடியாது. இதனைத்தான் இயேசு கிறிஸ்து இன்றைய வசனத்தில் கூறுகின்றார்.

ஆம் அன்பானவர்களே, ஒன்றைப்பற்றி நாம் முழுவதுமாக அறியவேண்டுமானால் அதுவாக நாம் மாறினால் மட்டுமே முடியும். உதாரணமாக, சாலையோரம் படுத்திருக்கும் மாடு, அல்லது நம்மைநோக்கி வரும் நாய் அல்லது எந்த மிருகமாக இருந்தாலும் அந்த மிருகங்களின் எண்ணம் நமக்குத் தெரியாது. அவை உண்ணும் உணவுகள், அவற்றின் சுவை எதுவுமே நமக்குத் தெரியாது. மிருகங்களின் எண்ணங்களும் சுவைகளும் மனிதர்களிலிருந்து வித்தியாசமானவை. நாமும் அவைகளைப்போல ஒரு மிருகமாக மாறினால்தான் அதனை நம்மால் முற்றிலும் அறிய முடியும்.

இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகளும், " மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்?அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்."( 1 கொரிந்தியர் 2 : 11 ) என்று கூறுகின்றார். "அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்." ( ரோமர் 8 : 5 ) என்று கூறுகின்றார்.

எனவே நம்மைப் புரிந்துகொள்ளாத சிலர் ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் நமது செயல்பாடுகளைக் குறித்து குறைகூறலாம். ஆனால் நாம் கவலைப்படத் தேவையில்லை. தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான் என்று கூறியுள்ளபடி தேவனுடைய ஆவிக்குரிய சித்தப்படி வாழ்பவனையும் உலக மனிதர்கள் அறிய முடியாது. சொந்த குடும்பத்தினர்கூட அறிய முடியாது.

சமாதானத்தையுண்டாக்க வந்த இயேசு கிறிஸ்து "பிரிவினை உண்டாகவே வந்தேன்" என்றும் கூறுவதை ஆவிக்குரிய அனுபவம் இல்லாதவர்கள் புரிந்துகொள்ள முடியாது. ஆம், "எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே." ( மத்தேயு 10 : 35, 36 ) என்றார் இயேசு கிறிஸ்து. இதற்குக் காரணம் ஒரே வீட்டினுள் இருந்தாலும் ஆவியில் பிறந்தவர்களும் மற்றவர்களும் மனதளவில் பல காரியங்களில் பிரிந்தவர்களாகவே இருப்பார்கள்.

ஆவிக்குரிய வழிகளை அறியவும் தேவ வழியில் நடக்கவும் உண்மையான மனதுடன் வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் தங்களை ஒப்புக்கொடுக்கும்போதுதான் இந்தப் பிரிவினை முடிவுக்குவரும். அதுவரை காற்று இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் தெரியாததுபோல நமது நடவடிக்கைகளின் உண்மைத்தன்மை தேவனுக்கு மட்டுமே தெரிவதாக இருக்கும். இதன் அடிப்படையிலேயே தேவன் மனிதர்களை நியாயம் தீர்ப்பார்.

"நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்" ( யோசுவா 24 : 15 ) என்று உறுதியெடுத்து அனைவரும் ஆவிக்குரிய அனுபவத்தினுள் வரும்போது மட்டுமே வீட்டிலுள்ள இந்தப் பிரிவினை மறையும். அதுவரை காற்றினைப்போல நாமும் மற்றவர்களுக்குப் புரியாதவர்களும் புரிந்துகொள்ள முடியாதவர்களுமாகவே இருப்போம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - ரோமர் 6 : 7 / Romans 6:7

  " ஆதவன் " தியானம் - 1951 2026 ஜூன் 11,   வியாழன்        "மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே." ...