DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Monday, April 27, 2026

🏫 வேதாகமத் தியானம் - ஏப்ரல் 2026

 


"விதைகளின் உள்ளே" 🌳

📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1880

🔆 2026 ஏப்ரல் 01, புதன்      

"வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்." ( எபிரெயர் 9 : 12 )

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக பலியானதன்  காரணம் நமக்கு பாவமன்னிப்பை பெற்றுத்தருவதற்கும், பாவத்திலிருந்து முழு விடுதலையைத் தருவதற்கும்தான். பாவ மன்னிப்பினை மட்டுமல்ல,  தொடர்ந்து நாம் பாவத்தில் விழாமலிருக்க பலத்தையும் அவர் தருகின்றார். பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பாவ மன்னிப்புக்காக மிருகங்கள் பலியிடப்பட்டன. ஆனால் அவைகளின் இரத்தம் பாவங்களிலிருந்து மக்களுக்கு முழு விடுதலையினை அளிக்கவில்லை. பல்வேறு நியாயப்பிரமாணக் கட்டளைகளையும் தேவன் அளித்திருந்தார். அந்தக் கட்டளைகளும் மனிதர்களை நல்வழிப்படுத்த முடியவில்லை. 

பாவ மன்னிப்பு பெறுவோமானால் நமது மனதுக்கு மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும். பாவத்தைக்குறித்த மனச்சாட்சியின் உறுத்தல் நீங்கிவிடும். ஆனால் மிருகங்களின் இரத்தம் இத்தகைய மன மகிழ்ச்சியையும் நிம்மதியையும் பாவங்கள் மன்னிக்கப்பட்டதன் நிச்சயத்தையும் மக்களுக்குக் கொடுக்கவில்லை. மனிதர்களைப் பூரணப்படுத்தவுமில்லை. அப்படிப், "பூரணப்படுத்துமானால், ஆராதனைசெய்கிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால், அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா?" ( எபிரெயர் 10 : 2 ) 

அதாவது, மிருகங்களின் இரத்தம் மனிதர்களது பாவங்களை முற்றிலும் கழுவிப் பூரணப்படுத்தவில்லை. எனவே, மனச்சாட்சியின் உறுத்தல் காரணமாக பலியிடுவதை நிறுத்தாமல் மீண்டும் மீண்டும் பலிசெலுத்திக்கொண்டே இருந்தனர். ஆனால் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.

பழைய ஏற்பாட்டுக்கால உடன்படிக்கையானது இப்படி பயனற்றதாகிப்போனது. மனிதர்களது அக்கிரமங்கள் அதிகரித்தன.  "ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்." ( எபிரெயர் 9 : 15 )  என்று கூறப்பட்டுள்ளது. 

இயேசு கிறிஸ்து தன்னைப் பலியாக ஒப்புக்கொடுக்க இன்னுமொரு காரணம்:- தேவன் ஏற்கெனவே பல்வேறு கட்டளைகளை மனிதர்களது நல்வாழ்வுக்காகக்  கொடுத்திருந்தார்.  ஆனால் மக்கள் அவற்றுக்குக் கீழ்படியவில்லை. எனவே, தேவன் கொடுத்திருந்த அந்த நியாயப்பிரமாணக்  கட்டளைகளால் செய்யமுடியாததை தேவனே நமக்காகச் செய்யும்படி என்று வேதாகமத்தில் நாம் வாசிக்கின்றோம். "அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்." ( ரோமர் 8 : 3 ) என்று வாசிக்கின்றோம். 

எனவே, ஒரு சோகத் திரைப்படத்தைப்  பார்ப்பதுபோல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பட்டப்பாடுகளை உருக்கமாக எண்ணிப்பார்த்து  சில நேரமட்டும் உணர்ச்சிவசப்படுவதில் அர்த்தமில்லை.  அவர் சிந்திய இரத்தம் நம்மில் செயல்படுவதற்கு நமது இருதயத்தை நாம் திறந்துவிடவேண்டியது அவசியம்.  அவர் தனது சொந்த இரத்ததால் உருவாக்கிய மீட்பு  அனுபவத்தை பெற்றுக்கொள்ள முயற்சியெடுக்காமல் நாம் வாழ்வோமானால் ஆண்டுதோறும் கடமைக்காக இந்த நாட்களைக் கடைபிடிப்பவர்களாகவே இருப்போம்.  

ஆம் அன்பானவர்களே, ஒளியான அவரோடு ஐக்கியமுள்ளவர்களாக நாம் வாழும்போது மட்டுமே நம்மால் மற்றவர்களோடும் ஐக்கியமாக இருக்கமுடியும். அப்போது மட்டுமே அவர் சிந்திய இரத்தம் நம்மைத் தூய்மையாக்கும். "அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்." ( 1 யோவான்  1 : 7 ) 

 "விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1881

🔆 2026 ஏப்ரல் 02, வியாழன்       

"அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்." ( ஏசாயா 53 : 3 )

ஏசாயா தீர்க்கத்தரிசியின் புத்தகம் கி.மு. 740-க்கும் கி.மு. 686-க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என வேதாகம அறிஞர்கள் கூறுகின்றனர்.  கிறிஸ்து பிறப்பதற்கு ஏறக்குறைய 750 ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்டிருந்தாலும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பாடுகளை தேவன் ஏசாயாவுக்கு  ஒரு திரைப்படத்தைப் போல காண்பித்திருந்தார். 

ஏசாயா இயேசு கிறிஸ்துவின் பாடுகளைக்குறித்து கண்ட தரிசனம் அப்படியே 100 சதவிகிதம் நிறைவேறியது. அவர் கண்டத்தரிசனத்தில் இயேசு கிறிஸ்து அசட்டைபண்ணப்பட்டிருந்தார், புறக்கணிக்கப்பட்டிருந்தார், துக்கம் நிறைந்தவராக இருந்தார், பாடுகள் அனுபவித்தவராக இருந்தார். மட்டுமல்ல, அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்;  அவரை எண்ணாமற்போனோம் என்று ஏசாயா கூறுகின்றார்.

இன்று கிறிஸ்து பிறந்து, பாடுகள்பட்டு மரித்து, உயிர்த்து 2026 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் ஏசாயா கண்ட தரிசனமே உலகத்தில் நடந்துகொண்டிருப்பதை நாம் மறுக்கமுடியாது. இன்றும் கிறிஸ்து அசட்டைபண்ணப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு துக்கம் நிறைந்தவராகவே இருக்கின்றார்.  நாம் இந்த நாற்பது நாள் லெந்து காலத்திலும் பெரிய வாரத்திலும் மட்டும் அவரை நினைத்து அழுவதால் மாற்றம் வந்துவிடாது. 

தேவனுக்கு எதிராகப் பாவம் செய்து, அவர் விரும்பாத அவலட்சணமான மனநிலையினையும் வாழ்கையினையும் வாழ்ந்துவிட்டு  ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கடமைக்காக ஆலய ஆராதனைகளில் கலந்துகொள்ளும்போது அவரை அசட்டைபண்ணுகின்றோம்; அவரைப் புறக்கணிக்கின்றோம்; அவரைவிட்டு நமது முகங்களை மறைக்கின்றோம் என்று பொருள். நமக்காக அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தை அவமதித்து காலால் மிதிக்கின்றோம் என்று பொருள். 

ஆம் அன்பானபவர்களே, "தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்." ( எபிரெயர் 10 : 29 )

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக்குறித்து அவர் பிறப்பதற்கு சுமார் 750 ஆண்டுகளுக்குமுன்  ஏசாயா தீர்க்கத்தரிசி கண்டதரிசனம் மெய்; நமக்காக இயேசு கிறிஸ்து பாடுபட்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தார் என்பது மெய்; அவரது இரத்தத்தால் மீட்பு உண்டு என்பது மெய்; அதுபோல இன்று மனிதர்கள் பலரும் அவரது விலையேறப்பெற்ற இந்த மீட்பினை புறக்கணிக்கின்றனர் என்பதும் மெய்.  

பெரிய வியாழன் ஆராதனை வெறும் சடங்கு அல்ல. ஆனால் நாம் மெய்யான மனஸ்தாபத்துடன் நமது பாவங்களை அறிக்கையிட்டு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்படாவிட்டால் அது வெற்றுச் சடங்காகவே இருக்கும்.  இந்தநாள் கிறிஸ்து குருத்துவத்தை ஏற்படுத்திய நாள், நற்கருணையை ஏற்படுத்திய நாள் என்று வெறுமனே கூறிக்கொண்டு குருத்துவத்தையும் நற்கருணையையும் அவமதிக்கும் வாழ்க்கை வாழ்ந்து இந்தக் கூற்றுக்களுக்குத் தகுதியற்றவர்களாக நாம் இருப்போமானால் அதனால் பயனென்ன?  

இப்படி நாம் இருப்போமானால் இன்றும் அவரை அசட்டைப்பண்ணி, புறக்கணித்து, வருகின்றோம் என்றும் அவர் இப்போதும்  துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவிக்கிறவருமாக இருக்கின்றார் என்றுதான் பொருள்;  அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம், அவரை நாம் எண்ணாமல்போனோம்  என்றுதான் பொருள். 

 "விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1882

🔆 2026 ஏப்ரல் 03, வெள்ளி 

"ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனே கூடப்பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்." ( ரோமர் 6 : 8 )

மற்ற உலக மனிதர்களின் வரலாறுபோல கிறிஸ்துவின் மரணத்துடன் அவருடைய வரலாறு முடிந்துவிடவில்லை. அவர் மரித்துப் புதைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டார். "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்." ( யோவான் 12 : 24 ) என்று அவர் உலகில் உயிரோடிருக்கும்போது கூறியதுபோல கோதுமைமணியாக அவர் விதைக்கப்பட்டார். 

எனவே, அவரது வாழ்வு அவரது மரணத்துக்குப்பின் மிகுந்த பலன் தருவதாக அமைந்தது.  "பாவம் மரணமடைந்துவிட்டது இனி பாவத்துக்கு உலகினில் பெலனில்லை" என்பதனை விளக்குவதாக அவரது மரணம் அமைந்திருக்கின்றது.  கிறிஸ்துவின்மேல் நாம் மெய்யான விசுவாசம் கொள்ளும்போது நமது பாவங்களை அவர் மன்னிக்கின்றார். பாவம் செய்யும் நமது மனித இயல்பு அவரோடுகூட மரணமடைகின்றது. எனவே, "நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்." ( ரோமர் 6 : 6 )

இதுவே கிறிஸ்துவின் மரணம் நமக்குத் தரும் செய்தி. ஆனால் இன்று பெரிய வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் ஏதோ தங்களது குடும்பத்தில் யாரோ மரித்துவிட்டது போல பலர் முகவாட்டத்துடன் காணப்படுகின்றனர். உணர்ச்சிவசப்பட்டு அழுகின்றனர். அன்பானவர்களே, கிறிஸ்துவின் மரணம் நாம் பாவத்துக்கு மரித்துவிட்டோம் என்பதனை நினைவுபடுத்துவதும் அந்த அனுபவத்தை நாம் பெறவேண்டி முயற்சிசெய்ய வேண்டிய ஒன்றுமாகும்.  

ஒரு மனிதன் மரணமடைந்துவிட்டான் என்றால் அவனது உடலின் உறுப்புக்கள் ஒன்றும் செயல்படாது  அல்லவா? அப்படி எந்தஒரு  உறுப்பும் செயல்படாத மனிதனால் பாவமும் செய்ய முடியாதல்லவா? இப்படியே கிறிஸ்துவோடு இணைக்கப்பட்ட மனிதனும்  வாழ்வான். ஆம் அன்பானவர்களே, எனவே நாம் மரணடைந்த கிறிஸ்துவின் சாயலில் நம்மை இணைக்கவேண்டியது அவசியம். "ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்." ( ரோமர் 6 : 5 )

நாம் பாவத்துக்கு மரணமடைந்துவிட்டோமானால் மட்டுமே கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த மகிமையின் சாயலில் இணைக்கப்படுவோம். ஆம், கிறிஸ்துவின் இறப்பு நாம் இன்று அழுது புலம்பவேண்டிய ஒரு காரியமல்ல.  எனவேதான் இயேசு கிறிஸ்துச் சிலுவை சுமந்து செல்லும்போது  தன்னைப் பின்தொடர்ந்து பெண்கள் அழுதுகொண்டுவந்தபோது,  "இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்." ( லுூக்கா 23 : 28 ) என்றார். 

கிறிஸ்துவின் மரணத்தால்தான் நாம் நித்தியஜீவனுக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகின்றோம். எனவே நாமும் அவரது மரணத்துடன் நம்மை இணைக்கவேண்டியது அவசியமாக இருக்கின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் உலகினில் வாழ்ந்து மரித்து உயிர்த்த கிறிஸ்து இப்போது கல்லறையில் இல்லை; அவர் பிழைத்திருக்கிறார். ஆம், "அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்." ( ரோமர் 6 : 10 )

பிழைதிருப்பவருக்காக நாம் அழவேண்டிய அவசியமில்லை. "மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 1 : 18 ) என்கிறார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. சதாகாலமும் உயிரோடிருக்கும் அவர்தான் நம்மைப் பாவங்களிலிருந்து விடுவிக்கமுடியும். 

 "விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1883

🔆 2026 ஏப்ரல் 04, சனி  

"உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாய் எண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்." (சங்கீதம் 22:24)

மனிதர்களது குணங்கள் வித்தியாசமானவை. இந்த உலகத்தில் சில மனிதர்களுக்கு மற்றவர்கள் துன்பப்படும்போது அதனைத் தங்களுக்குள் பேசி மகிழ்வதில் ஒரு இன்பம் இருக்கின்றது.  குறிப்பாக, குடும்ப உறவுகளுக்குள் இதனை நாம் பலவேளைகளில் கண்டுகொள்ளலாம். சில குடும்பங்களில் ஒரு சகோதரனோ சகோதரியோ கஷ்டப்படும்போது வசதியுள்ள மற்ற சகோதர சகோதரிகள் துன்பப்படும் சகோதரனை அற்பமாக பேசி ஒதுக்குவதுண்டு. சிலர் ஏழ்மையான தங்களது உடன்பிறப்புகளை மற்றவர்களிடம் அறிமுகம் செய்வதில்லை. ஒரு சிலர் குடும்ப விழாக்களுக்குக்கூட  அவர்களை அழைப்பதில்லை. 

இதற்குக் காரணம், உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர்கள்  அற்பமாக எண்ணுவதும் அவர்களை அருவருப்பதும்தான். ஆனால் தேவன் அப்படிப்பட்டவரல்ல. நாம் அற்பமான மனிதர்களாக இருந்தாலும் தேவன் நம்மை நினைவுகூர்கின்றார். நம்மை அவர் ஒதுக்குவதில்லை. தாவீது இப்படித்தான் ஒதுக்கப்பட்டு அற்பமாக இருந்தார். எனவேதான் இந்தச் சங்கீத ஆரம்ப வசனத்தில் கூறுகின்றார், "நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்." (சங்கீதம் 22:6) என்று. 

ஆனால் அன்பானவர்களே, தேவன் நமது ஒவ்வொரு துன்பத்தையும் பார்க்கின்றார். அவைகளிலிருந்து நமக்கு விடுதலையும் அளிக்கின்றார். காரணம், நமது துன்பவேளைகளில் நாம் அவரை நோக்கிக் கூப்பிடும் சத்தத்தை அவர் கேட்டு உடனேயே பதில்தருகின்றார். இதனையே தாவீது, "என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர்." (சங்கீதம் 22:21) என்று கூறுகின்றார். 

காரணம், நமது தேவன் ஜெபத்தைக் கேட்கின்றவர். "ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்." ( சங்கீதம் 65 : 2 ) என்று நாம் வாசிக்கவில்லையா? 

இன்று இதை வாசிக்கும் சகோதரனே சகோதரியே இதுபோல இன்று ஒருவேளை குடும்பத்திலும் சமூகத்திலும் நீங்கள் மற்றவர்களால் அற்பமாக எண்ணப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் நமது தேவன் யாரையும் அற்பமாக எண்ணி ஒதுக்குபவரல்ல. மாறாக, நம்மை உபத்திரவப்படுத்துபவர்களுக்கு உபத்திரவத்தைக் கொடுக்கிற தேவன் என்று கூறப்பட்டுள்ளது. ஆம், "உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே." ( 2 தெசலோனிக்கேயர் 1 : 6 ) என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். 

நாம் இன்று அனுபவிக்கும் உபத்திரவங்கள், துன்பங்கள், அவமானங்கள், புறக்கணிக்கப்படுதல், அருவருப்பாக எண்ணப்படுதல் போன்றவற்றை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் அனுபவித்தார். எனவே நமது மனதின் வேதனைகள் அவருக்குத் தெரியாத ஒன்றல்ல. நாம் மெய்யான தேவபக்தியுள்ளவர்களாக அவருக்கேற்ற வாழ்க்கை வாழ்வோமானால் அவரை நோக்கி நாம் கூப்பிடுகையில் நமக்கு அவர் செவிகொடுப்பார்.  

காரணம், "கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்." ( 2 பேதுரு 2 : 9 ) என்று வேதம் கூறுகின்றது. 

 "விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1884

🔆 2026 ஏப்ரல் 05, ஞாயிறு   

"கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா." ( 1 கொரிந்தியர் 15 : 14 )

"ஆதவன்" தியான வாசகர்கள் அனைவருக்கும் உயிர்ப்புத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

கிறிஸ்துவின் உயிர்தெழுதல்தான் கிறிஸ்தவத்தின் அச்சாணி. கிறிஸ்து உயிர்த்தெழவில்லையானால் அவர் சாதாரண ஒரு உலக மகான் போலவே இருந்திருப்பார். அப்படி இருந்திருப்பாரென்றால் நாம் அவரை கடவுளாக ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியமே இருந்திருக்காது. 

உலகத்தில் பல நல்ல நெறிமுறைகளைக் கூறி  பெயர்பெற்றுவிளங்கும் அறிஞர்கள் பலர் உண்டு. ஆனால் அவர்களது மரணத்துடன் அவர்களது வாழ்வு முடிந்துவிடுகின்றது. அவர்கள் கூறிய கருத்துக்களை நாம் நினைவில் கொண்டிருந்தாலும் அவர்களை மறந்துவிடுவோம்.  குறிப்பாக, தமிழில் இப்படி நீதிநெறிகளை எடுத்துக்கூறிய பல அறிஞர்கள் உண்டு. 

ஆனால் கிறிஸ்துவின் வாழ்வு இந்த அறிஞர்களின் வாழ்வுபோல அவரோடு முடிந்துவிடவில்லை. காரணம், அவரும் மரணத்துடன் அழிந்துபோய்விடவில்லை. அவர் இன்றும் உயிரோடு இருக்கின்றார். "மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 1 : 18 ) என்கிறார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. 

கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவைக்குறித்துக் கொண்டுள்ள விசுவாசம் மூட நம்பிக்கையல்ல. ஒரு மனிதன் உயிரோடு இருக்கிறானென்றால் அவன் மற்றவர்களைப்போல் பேசவேண்டும், செயல்படவேண்டும். அப்படி கிறிஸ்து இன்றும் செயல்பட்டுக்கொண்டிருப்பதால்தான்  அவர் உயிர்த்தெழுந்தார் என்பது நம்மால் உறுதியாக நம்பப்படும் உண்மையாக இருக்கின்றது. 

கிறிஸ்து இப்போதும் நம்மோடு பேசுகின்றார், நம்மை வழிநடத்துகின்றார்; நம்மிலிருந்து செயல்புரிகின்றார்.  அதனை நாம் அனுபவிக்கமுடியும்.   இதுவே அவர் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு ஆதாரம். இந்த அனுபவம் இருப்பதால்தான் கிறிஸ்தவம் 2026 ஆண்டுக்களைக் கடந்தும் இன்றும் உலகினில் நிலைபெற்று நிற்கின்றது. நடக்காத ஒரு பொய்யை இராண்டாயிரம் ஆண்டுகளாக உண்மையென்று யாராவது நம்பவைக்கமுடியுமா என்பதனை நாம் சிந்திக்கவேண்டியது அவசியம். 

மட்டுமல்ல, கிறிஸ்து உயிரோடு இருப்பதை அவர் அளிக்கும் பாவமன்னிப்பு அனுபவத்தின்மூலம் நாம் உறுதியாக நம்பலாம். குறிப்பிட்ட நதியில் அல்லது குளத்தில் அல்லது கடலில் குறிப்பிட்ட நாளில் குளித்தால் நமது பாவம் போகும் என்று சிலர் நம்புவதுபோல கிறிஸ்து அளிக்கும் பாவமன்னிப்பு வெறும் நம்பிக்கை அல்ல.  அது உண்மையாக நமது இருதயத்தில் உணரப்படும் அனுபவம்; அது ஆத்துமத்தில் ஏற்படும் அமைதியும் ஆறுதலும்.  இந்த அனுபவம்தான்  கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் உண்மை என்பதற்குச் சான்று. இது கிறிஸ்துவின் உயிர்தெழுததால் கிடைத்த கிருபை வரம். எனவேதான் அப்போஸ்தலரான பவுல்,  "கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்." ( 1 கொரிந்தியர் 15 : 17 ) என்று கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா என்று கூறப்பட்டுள்ளபடி கிறிஸ்து உயிர்த்தெழுந்திராவிட்டால்  எல்லாமே வீண். இப்படி தினசரி தியானம் எழுதுவதும் அதனை நீங்கள் வாசிப்பதும் வீண். 

எல்லாவற்றுக்கும் மேலாக கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நமக்கும் மரணத்திலிருந்து அவரைப்போல உயிர்த்தெழும் பேற்றினைத் தந்துள்ளது. ஆம், "அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்." ( ரோமர் 8 : 11 )

மட்டுமல்ல, கிறிஸ்து உயிர்த்தெழாவிட்டால் நாம் மனம்போல மிருகங்களைப்போல வாழ்ந்து சாகலாமல்லவா? "..........மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே?" ( 1 கொரிந்தியர் 15 : 32 ) உயிர்த்தெழுந்த கிறிஸ்துதான் இன்று நம்மை மனிதர்களாக வாழவைத்துள்ளார். 

கிறிஸ்துவின் உயிர்ப்பை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு அவர் அளிக்கும் பாவமன்னிப்பை பெற்றுக்கொள்பவர்களுக்கு நித்தியஜீவன் உண்டு. இல்லையானால் உண்டு, குடித்து உயிரைவிடும் மிருகங்களைப்போலவே நமது வாழ்வும்  முடிவடையும். 

 "விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1885

🔆 2026 ஏப்ரல் 06, திங்கள்    

"நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள். சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள்." ( பிலிப்பியர் 3 : 2 )

மனுக்குலத்தின் பாவங்களையும் சாபங்களையும் போக்கி அவர்களை நித்தியஜீவனுக்குத் தகுதிப்படுத்திட ஆண்டவராகிய இயேசு  கிறிஸ்து பட்டப்பாடுகள் மனுக்குலம் அறியாத ஒன்றல்ல. ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பாடுகளின் வழியாக தனது சுய இரத்தத்தைச் சிந்தி உண்டாக்கிய மீட்பினை நாம் சில வெளியரங்கமான சடங்குகளை மேற்கொள்வதன்மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று  போதிப்பவர்களை நாய்கள் என்று கோபத்தில் கூறுகின்றார் பவுல் அப்போஸ்தலர். இப்படிப் போதித்தவர்கள் பிலிப்பிய சபை விசுவாசிகளை அன்று குழப்பத்தில் ஆழ்த்தினர்.

நாய்கள் எச்சிகளையும் கெட்டுப்போன உணவினையும் உட்கொள்ளும் குணமுள்ளவைகள். பழைய ஏற்பாட்டுச் சட்டங்கள் மனிதர்களை மீட்பதற்குப் போதுமானவையாக இல்லாததால்தான் இயேசு கிறிஸ்து பூமியில் வந்து பாடுபடவேண்டியிருந்தது. இப்போது கிறிஸ்துவின் கிருபையால்தான் நாம் மீட்கப்படுகின்றோம். அந்தக் கிருபையினை நாம் மறுதலித்து இன்னும் பாவத்திலிருந்தும் சாபத்திலிருந்தும்  மீட்படைய பழைய ஏற்பாட்டு முறைமைகளையும் ஒருசில உடலை வருத்தும்  சடங்காச்சாரங்களையும்  வலியுறுத்திக்கொண்டும் அவைகளைச் செய்துகொண்டும் இருப்போமானால் நாம் நாய்களைப்போல பழைய கெட்டுப்போன உணவினை உண்பவர்கள் என்று பொருள்.

எனவே, அத்தகைய போதகர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், அந்தப் பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள்,  அத்தகைய போதனைகளைப் போதிக்கும் சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். சுன்னத்துக்காரர்கள் என்பதற்கு, உடலை வருத்தும் ஒருசில முறைமைகளைச் செய்யும்படி கூறுபவர்கள் என்று நாம் இன்று பொருள்கொள்ளலாம். இப்படியே அந்தக்காலத்தில் சிலர், மீட்படைய விருத்தசேதனம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தி போதித்துக்கொண்டிருந்தனர். 

எனவேதான் இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து அடுத்த வசனமாக அவர் கூறுகின்றார், "ஏனெனில் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்." ( பிலிப்பியர் 3 : 3 ) ஆம் அன்பானவர்களே, இன்று கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்ட நாம்தான் தேவனுக்குமுன் விருத்தசேதனமுள்ளவர்கள். எனவே, வெளியரங்கமான விருத்தசேதனம் நமக்குத் தேவையில்லை. 

புதிய ஏற்பாடு கிறிஸ்துவின் கிருபையின் அடிப்படையிலானது. இதனைப் புரிந்துகொள்ளாமல் இன்னும் பாவமன்னிப்புக்காக, சாப நிவிர்த்திக்காக தேவையில்லாத பரிகாரங்களை நாம் செய்துகொண்டும் அவைகளை நம்பிக்கொண்டும் இருப்போமானால் கிறிஸ்துவின் கிருபையினை வீணாக்குகின்றோம் என்று பொருள்.  எனவேதான் பவுல் அப்போஸ்தலர், நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே." ( கலாத்தியர் 2 : 21 ) என்கின்றார். பழைய கட்டளைகளே போதுமென்றால் கிறிஸ்து மரிக்கவேண்டிய அவசியேமேயில்லை. 

அன்பானவர்களே, கிறிஸ்துவின் கிருபையினை நம்பாமலும் விசுவாசிக்காமலும் இருந்துகொண்டு இன்னும் நாம் பழைய ஏற்பாட்டு முறைமைகளையும், போதனைகளையும் அவை கூறுவதுபோல சில சடங்காச்சாரங்களையும்  போதித்துக்கொண்டும் அவற்றின்மேல் நம்பிக்கைக் கொண்டவர்களாகவும் வாழ்வோமென்றால் நாமும் தேவனுடைய பார்வையில் நாய்கள்தான். இப்படி இருப்போமானால் நாம் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்கமுடியாது.  

இப்படி இருப்பது சூனியம் செய்தல், விபச்சாரம், கொலைபாதகம், விக்கிரகாராதனை போன்ற பாவங்களைச் செய்வதுபோன்றது. எனவேதான் வேதம் தெளிவாகக் கூறுகின்றது, "நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 22 : 15 )  என்று.  "நாய்கள்" என்று அப்போஸ்தலரான பவுல் கூறிய வார்த்தையினையே இங்கு தேவன் யோவானுக்கும் வெளிப்படுத்தி எச்சரிக்கின்றார். 

பாவம்,  சாபம் இவைகளிலிருந்து விடுபடகிறிஸ்துவின் இரத்தத்தால் உண்டாகிய கிருபையினைச் சார்ந்துகொள்ளாமல் உடலை வருத்தும் தேவையில்லாத முறைமைகளை கடைபிடிப்போமானால் அவற்றிலிருந்து விடுபடுவோம். 

 "விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1886

🔆 2026 ஏப்ரல் 07, செவ்வாய்     

"எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.  மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது." (யாக்கோபு 5:17, 18)

எலியா, எலிசா போன்ற மனிதர்களைக் குறித்து வேதாகமத்தில் வாசிக்கும்போது அவர்கள் மற்றவர்களிலிருந்து வித்தியாசமானவர்களாக இருந்தார்கள் என்று பலரும் எண்ணிக்கொள்கின்றனர். ஆனால், அப்படியல்ல. அவர்கள் தோற்றத்திலும், செயல்பாடுகளிலும், மனித பலவீனங்களிலும் நம்மைப்போல இருந்தவர்களே என்று இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார் யாக்கோபு. ஆம், இப்படி நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்கு ஜெபித்து வானத்தை அடைந்தவர் எலியா. 

தேவன் இந்த உலகத்தில் தனது செயல்பாடுகளுக்கும் பணிகளுக்கும் உலகத்திலுள்ள அற்பமான மனிதர்களைத்தான் பயன்படுத்துகின்றார்.  தேவ மனிதர்கள் மற்றவர்களிலிருந்து வித்தியாசமானவர்கள் அல்ல. மாறாக, அவர்களும் மற்றவர்களைப்போல பாடுகளும் துன்பங்களும் அனுபவிக்கும் மனிதர்கள்தான். 

வானத்திலிருந்து அக்கினியை இறக்கி கர்த்தரே மெய்யான தேவன் என்பதனை பாகால் தீர்க்கத்தரிகளுக்கு எடுத்துரைத்தவர்தான் எலியா. 450 பாகால் தீர்க்கத்தரிசிகளை வெட்டிக் கொலைசெய்தவர்தான் இவர். ஆனால் இந்த எலியா ஆகாபுக்கும் யேசபேலுக்கும் பயந்து ஓடினார் என்பதால் அவருக்கு மற்ற மனிதர்களைப்போல  உயிர் பயம் இருந்தது என்று நாம் அறிந்துகொள்ளலாம். உணவின்றி தவித்த அவருக்கு சாதாரண மனிதர்களைப்போல பசி இருந்தது. காகங்கள்மூலம் தேவன் அவருக்கு  உணவளித்தார். 

மட்டுமல்ல, தேவதூதன்மூலமும் தேவன் எலியாவுக்கு உணவளித்தார். யேசபேலுக்குப் பயந்து ஓடியபோது மனம் மடிவடைந்து "அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி, ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான்." ( 1 இராஜாக்கள் 19 : 4, 5 )

துன்பங்கள் நெருக்கும்போது வேதனையுடன் சிலர் ஜெபிப்பதுபோல, "ஆண்டவரே நான் சாகவேண்டும், என்னை எடுத்துக்கொள்ளும்" என்று ஜெபித்த சாதாரண மனிதனைவிட கீழானவராகவே இந்த எலியாவை நாம் பார்க்கின்றோம். ஆம் அன்பானவர்களே,  நம்மைப்போல பாடுள்ள சாதாரண மனிதனாகவே எலியா இருந்தார். ஆனால் அவர் ஜெபம் செய்தபோது, "மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.  மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது."

தேவன் பயன்படுத்தும் மனிதர்களாக நாம் இருக்கவேண்டுமென்றால் நாம் துன்பங்களையும் பாடுகளையும் சகிக்கிறவர்களாகவும் இருக்கவேண்டியது அவசியம். மட்டுமல்ல, பாடுகளும் துன்பங்களும் அனுபவிக்கும் மனிதர்கள் பாவிகளுமல்ல என்பதனையே இன்றைய தியான வசனம் மூலம் நாம் உணர்ந்துகொள்கின்றோம். ஒருவேளை, நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பாடுகள் அனுபவிக்கும் சிலர் தேவன் பயன்படுத்திக்கொண்டிருக்கும் எலியாவைப்போன்றவர்களாகவும் இருக்கலாம். 

எனவேதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 18 : 10 ) என்று கூறினார். 

நாம் சந்திக்கும் அற்பமான மனிதர்களை இழிவாக எண்ணாமல் இருப்போம். ஒருவேளை அவர்கள் தேவன் பயன்படுத்த ஆயத்தப்படுத்தும் பாத்திரங்களாக இருக்கலாம். அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிப்பவர்களாக இருக்கலாம்.  மழைபெய்யாமல் வானத்தை அடைக்கவும் திறக்கவும் (அரிய செயல்கள் செய்ய) தேவன் அவர்களைப் பயன்படுத்த முடியும். எனவே வெளித் தோற்றத்தைப்பார்த்து யாரையும் நாம் அற்பமாக எண்ணாதிருப்போம்.  

 "விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1887

🔆 2026 ஏப்ரல் 08, புதன்     

"பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்." (எபிரெயர் 7:26) 

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் நாம் வேலைக்கு விண்ணப்பிக்கும்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் மகன் நமக்குத் தெரிந்தவராக;  நம்மோடு ஐக்கியமுள்ளவராக இருப்பாரானால் நமக்கு அவர்  வேலைக்காகத் தந்தையிடம்  பரிந்துபேசுவாரல்லவா? அப்படியே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக பரிந்துபேசும் பரலோக ஆசாரியனாக இருக்கின்றார். அவர் தானாகத் தன்னை இந்த நிலைக்கு உயர்த்தவில்லை, மாறாக அவரது தந்தையே அவரை உயர்த்தினார். 

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஆசரிப்புக் கூடாரத்தினுள் இருக்கும் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியன் மட்டுமே செல்லமுடியும். அதுவும், முதலில் தனது பாவங்களுக்காக பரிகாரபலி செலுத்தி, பலிசெலுத்தப்பட்ட மிருகத்தின் இரத்தத்தைத் தனதுமீது தெளித்துக்கொண்டவனாக அங்கு நுழைவான். 

ஆனால், புதிய ஏற்பாட்டின் முறைமையின்படி, நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதான் நமது பிரதான ஆசாரியனாக இருக்கின்றார். அவரே பரலோகத்திலுள்ள பிதாவின் சந்நிதியில் நுழையத் தகுதிபெற்றவர்.  ஆனால், "அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்துமுடித்தார்".  (எபிரெயர் 7:27)

பழைய காலத்துப் பிரதான ஆசாரியர்களைப்போல அவர் தனது பாவமன்னிப்புக்கென்று தினசரி பலிச்செலுத்தவேண்டியதில்லை. காரணம், அவர் பரிசுத்தர்,  குற்றமற்றவர், மாசில்லாதவர், பாவிகளுக்கு விலகினவர், வானங்களிலும் உயர்ந்தவர் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. மட்டுமல்ல, இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

மட்டுமல்ல, இயேசு கிறிஸ்து பலவீனமுள்ள மனிதர்களைபோன்றவரல்ல, அவர் தேவனுடைய குமாரன். "நியாயப்பிரமாணமானது பெலவீனமுள்ள மனுஷர்களைப் பிரதான ஆசாரியராக ஏற்படுத்துகிறது; நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு உண்டான ஆணையோடே விளங்கிய வசனமோ என்றென்றைக்கும் பூரணரான குமாரனை ஏற்படுத்துகிறது." (எபிரெயர் 7:28) என்று கூறப்பட்டுள்ளது. 

இயேசு நியாயப்பிரமாணக் கட்டளைகளைக் கடைப்பிடித்ததால் உயர்த்தப்படவில்லை; மாறாக, ஒரு ஆணையினால் உயர்த்தப்பட்டார். அந்த ஆணைதான் என்ன? "நீர் என்னுடைய குமாரன்" என்பது. அதாவது, ஆண்டவராகிய இயேசுவை பிதாவாகிய தேவன் தன்னுடைய குமாரனாக ஆணையிட்டார். அவர் எந்தத் தேவதூதர்களுக்கும் இப்படி வாக்களிக்கவில்லை. "எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா?" ( எபிரெயர் 1 : 5 ) என்று கூறப்பட்டுள்ளது. 

ஆம் அன்பானவர்களே, இப்படி பிதாவாகிய தேவனால் ஒரு ஆணையினால் உயர்த்தப்பட்டவரும், பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார். 

இதனால்தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உறுதியுடன் கூறினார், "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." ( யோவான் 14 : 6 ) எனவே, அவரையே பற்றிக்கொள்வோம். பரலோகத்தில் பிதாவாகிய தேவனின் சந்நிதியை அடைந்திட நமக்கு வேறு மார்க்கமே இல்லை. 

 "விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1888

🔆 2026 ஏப்ரல் 09, வியாழன்       

"ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 5 )

எருசலேம் என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. அது  பரிசுத்த நகரம்; தாய்வீடு; தேவன் தங்கியிருக்கும் ஆலயம்; தேவனின் நகரம்; ஆவிக்குரிய அர்த்தத்தில் அது பரிசுத்த வாழ்வு,  பரலோக ராஜ்ஜியம் இவைகளைக் குறிக்கின்றது.

இன்றைய தியான வசனத்தில் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துத் தனது சீடர்களிடம், நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கூறுகின்றார். ஆம் அன்பானவர்களே, காத்திருத்தல் ஒரு ஆவிக்குரிய செயல்பாடு. காத்திருத்தலைக்குறித்து வேதாகமத்தில் பல இடங்களில் நாம் வாசிக்கின்றோம். அது பொறுமையை விளக்குவதாக உள்ளது.

மற்ற உலக மனிதர்களைப்போல அல்லாமல் ஆவிக்குரிய மக்களுக்கு நிதானம் மிக அவசியம். தேவ ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கு, தேவன் நமக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு நாம் உரிமையடைவதற்கு, நிதானமான காத்திருத்தல் அவசியம். பொதுவாக மக்கள் எதனையும் விரைவாக முடிக்கவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். மற்றவர்களுக்குமுன் நாம் சென்று முதலாவதாக எதனையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால் ஆவிக்குரிய நாம் அப்படியிருக்கத் தேவையில்லை. நாம் தேவன் நியமித்தக் காலத்துக்காகக் காத்திருக்கவேண்டியது அவசியம்; நமக்குப் பொறுமை அவசியம். 

காத்திருப்பதால் நாம் பெலனடைகின்றோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியானவரை சீடர்களுக்கு வாக்களித்திருந்தார். அந்த வாக்களிக்கப்பட்ட ஆவியானவரின் வல்லமையினை பெற்றுகொள்ளும்வரை எருசலேமைவிட்டு எங்கும் செல்லவேண்டாம் என்கின்றார். ஆம் அன்பானவர்களே, ஆவியானவரின் வல்லமையில்லாமல், அவரது வழிநடத்துதல் இல்லாமல் நாம் நமது மனம் நினைத்தபடி செயல்படக்கூடாது. அப்படிச் செயல்படுவதால் பல தோல்விகளை வாழ்வில் சந்திக்கநேரிடும். 

ஆவிக்குரிய வாழ்வில் இந்தப் பொறுமை மிக அவசியம். எபிரெய நிருப ஆசிரியர் பல தேவ மனிதர்களின் சாட்சி வாழ்கையினைக் குறிப்பிட்டுவிட்டு இறுதியில் கூறுகின்றார், "ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்" ( எபிரெயர் 12 : 1 ) என்று. 

அதாவது, நமது ஆவிக்குரிய ஓட்டம் இயேசு கிறிஸ்துவை நோக்கியதாக இருக்கவேண்டும். மட்டுமல்ல, மற்றவர்களைப்பார்த்து அல்ல, நமக்கு அவர் என்ன நியமித்துள்ளாரோ அந்தப் பாதையில் நாம் வேகமாக அல்ல; பொறுமையுடன் ஓடவேண்டும்.  இதனையே மேற்படி வசனத்தில், "இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்" என்று கூறப்பட்டுள்ளது. 

ஆகையால் நாம் எருசலேம் எனும் பரிசுத்த வாழ்க்கையினை விட்டு விலகிடாமல் தேவன் நமக்கு அளித்துள்ள வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருக்கவேண்டும். இப்படிக் காத்திருப்பது நமக்கு ஒருவேளை மனச் சோர்வினைத் தரலாம்;  மனவேதனையினைத் தரலாம். ஆனால், தேவன் தந்த வாக்குறுதி நிறைவேறும்போது நம்மில் பூரண மகிழ்ச்சி உண்டாகும். 

"நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்." ( நீதிமொழிகள் 13 : 12 )

 "விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1889

🔆 2026 ஏப்ரல் 10, வெள்ளி        

"நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புக்கூருவாயாக." ( உபாகமம் 6 : 5 )

கர்த்தரிடம் நாம் எப்படி அன்பு செலுத்தவேண்டும் என்பதற்கு இன்றைய தியான வசனம் மூன்று காரியங்களைக் கூறுகின்றது. 

அதாவது, நாம் முழு இருதயத்தோடு, முழு ஆத்துமாவோடு, முழுப் பலத்தோடு கர்த்தரிடம் அன்பு செலுத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காரியங்கள் நிறைவேறிடவும், வாழ்க்கையில் தங்களது தேவைகள்  நிறைவேறிடமும் தேவனிடம் ஜெபிப்பவர்கள் காரியவாதிகள். அவர்களிடம் மேலே குறிப்பிட்டவிதத்தில் தேவன்மேல் அன்பு இருப்பதில்லை.

முழு இருதயம் என்பது,  நமது இருதயத்தில் அவரைத் தவிர வேறு எதற்கும் இடமில்லாத நிலைமை. முழு ஆத்துமா என்பதற்கு, அவரைத்தவிர வேறு எந்த தெய்வத்தையும் இடைநிலையாளர்களையும் தேடாமல் நமது ஆத்துமா முழுவதும் கர்த்தரையே சார்ந்திருப்பது. முழு பலம் என்பதற்கு வாழ்வில் எந்தவித  இக்கட்டு இடர்பாடுகள் வந்தாலும் மனம் தடுமாறாமல் அவரையே முற்றிலுமாக நம்புவது. 

நாம் ஏற்கெனவே பல தியானங்களில் தியானித்துள்ளபடி, தேவன்மேல் நாம் கொள்ளும் அன்புக்கு உண்மையான  காதலர்களின் அன்பு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. வேதாகமத்தில் உன்னதப்பாட்டு எனும் நூல் சேர்க்கப்பட்டதே இந்த உண்மையினை நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே. உன்னத சங்கீதம் வெறும் காதல் பாடல்களல்ல; அவை பக்தன் தேவனிடம்  கொள்ளும் அன்பையும் தேவன் பக்தர்களிடம் கொள்ளும் அன்பையும் விளங்குபவை. 

நாம் முழு இருதயத்தோடு, முழு ஆத்துமாவோடு, முழுப் பலத்தோடு கர்த்தரிடம் அன்பு செலுத்துவோமானால் மற்ற எல்லாவித அன்பும் நமக்கு அர்த்தமில்லாதவையாகவே இருக்கும். எனவேதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், "உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை." ( மாற்கு 12 : 30 ) என்று பழைய ஏற்பட்டுக் கட்டளையை வலியுறுத்துகின்றார்.  

நாம் ஏன் கர்த்தரிடம் இப்படி அன்பு செலுத்தவேண்டும்? காரணம், அவர் இந்தப் பூமியில் நம்மை மற்றவர்களிடமிருந்து  பிரித்தெடுத்துத்  தனக்குச் சொந்தமானவர்களாகத்  தெரிந்துகொண்டுள்ளதால்தான். இதனையே நாம், "நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்." ( உபாகமம் 7 : 6 ) என்று வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, நாம் அல்ல, மாறாக அவர்தான் முதன்முதலில் நம்மேல் அன்பு செலுத்தினார். எனவேதான் இப்போது நாம் அவர்மேல் அன்பு செலுத்துகின்றோம். இயேசு கிறிஸ்துவின் அன்புச் சீடனாகிய யோவான் எனவேதான்,   "அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்." ( 1 யோவான்  4 : 19 ) என்று கூறுகின்றார். 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், "நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுகொள்ளுவது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்." ( யோவான் 15 : 16 ) என்று கூறினார். 

அதாவது நாம் கனியுள்ள ஒரு வாழ்க்கை வாழும்படிக்கும், அப்படி வாழ்வதன்மூலம் அவர் பிதாவிடம் வேண்டி  கேட்டுக்கொண்டவற்றை பெற்றுக்கொண்டதுபோல நாமும் பெற்று மகிழவேண்டும் என்பதற்காகவும் நம்மை முதலில் அவர் தெரிந்தெடுத்தார். அதாவது, நாமும் அவரைப்போல பிதாவிடம் உறவுள்ளவர்களாக வாழ்வதற்காக நம்மை அவர் தெரிந்தெடுத்தார். அவர் இப்படி நம்மேல் அன்பு செலுத்தியதால் நாமும் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரை அன்பு செய்யவேண்டியதுள்ளது.  அவரை மட்டுமே அன்பு செய்து வாழ்வோம். 

 "விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1890

🔆 2026 ஏப்ரல் 11, சனி         

"தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றமுதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை." ( ஏசாயா 64 : 4 )

இன்றைய தியான வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள "காத்திருத்தல்" எனும் வார்த்தைக்குத்  தேவன்மேல் விசுவாசம்கொண்டு பொறுமையாய் அவருக்கேற்ற வாழ்க்கை வாழ்தல் எனும் பொருள் கொள்ளலாம். 

இப்படி தேவன்மேல் விசுவாசம்கொண்டு அவர் செயல்படுவதற்காகப்  பொறுமையாய்க் காத்திருப்பவர்கள் தேவனது மேலான ஆசீர்வாதங்களைப் பெற்று அனுபவிப்பார்கள். ஆனால், அப்படி தேவன் அவர்களுக்கு அளிக்கவிருக்கும் மேலான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை தேவனைத் தவிர வேறு எவரும் அறியமுடியாது. இதனையே இன்றைய தியான வசனத்தில் நாம், "உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றமுதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை" என்று வாசிக்கின்றோம். 

ஆவிக்குரிய வாழ்வில் மேலான ஆசீர்வாதங்களைப்  பெற்று அனுபவித்தவர் அப்போஸ்தலரான பவுல். உயிரோடிருக்கும்போதே மூன்றாம்வானம் வரை எடுக்கப்பட்டவர் அவர். இதனை அவரே, "கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார். அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்." ( 2 கொரிந்தியர் 12 : 2, 3 ) என்று கூறுகின்றார். 

இந்த மேலான அனுபவம் இருந்ததால்,  இன்றைய தியான வசனத்தில் ஏசாயா தீர்க்கத்தரிசி கூறியபடி பவுல் அப்போஸ்தலரும்,  "எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை". ( 1 கொரிந்தியர் 2 : 9 ) என்று கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, உலக ஆசீர்வாதங்களைவிட பல ஆயிரம்மடங்கு மேலான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை தேவன் நமக்காக வைத்துள்ளார். ஆனால் நாம் அவற்றைக் காணவில்லை, கேட்கவுமில்லை, நமது இருதயத்தில் அதைப்பற்றிய எண்ணமுமில்லை.  ஆனால் நாம் அவற்றை விசுவாசிக்கவேண்டியது அவசியம் என்று இன்றைய தியான வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது. 

"விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. அதனாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்." ( எபிரெயர் 11 : 1, 2 ) என்று கூறியுள்ளபடி தேவன் நமக்கு ஆயத்தம்பண்ணியுள்ள ஆசீவாதங்களை நமது கண்ணால் காணவில்லையானாலும் நம்புவோம். அவற்றினை பெற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்களாக வாழ்வோம். நமக்குமுன் வாழ்ந்த பரிசுத்தவான்கள் அப்படி நம்பியதால்தான் நற்சாட்சி பெற்றார்கள்; இன்றும் நினைவுகூரப்படுகின்றார்கள் 

 "விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1891

🔆 2026 ஏப்ரல் 12, ஞாயிறு          

"இனிச்சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்." ( ஏசாயா 60 : 19 )

ஆதியாகமம் புத்தகத்தினை நாம் வாசிக்கும்போது, துவக்கத்தில் பூமி ஒழுங்கற்று இருளாக இருந்தது என்று கூறப்பட்டுள்ளதைக் காண்கின்றோம். ஆம்,  "பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்." ( ஆதியாகமம் 1 : 2 ) என்று கூறப்பட்டுள்ளது. 

அப்போது, "தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று." ( ஆதியாகமம் 1 : 3 )  ஆனால், நான்காவது நாளில்தான் சூரியனையும் சந்திரனையும் தேவன் படைக்கின்றார். வேதாகமத்தை விமரிசிக்கும் நாத்திகர்கள் பலர் இந்த முரண்பாட்டினை அடிக்கடிச் சுட்டிக்காட்டுவதுண்டு. சூரியன் இல்லாமல் எப்படி முதல்நாளில் ஒளி உண்டாயிற்று என்று இவர்கள் கேள்வி எழுப்புவதுண்டு. 

அன்பானவர்களே, பூமிக்கு ஒளிகொடுக்கத் தேவனுக்கு சூரியனும் சந்திரனும் தேவையில்லை. தேவனே ஒளியாக இருக்கின்றார். "தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது." ( 1 யோவான்  1 : 5 ) என்று வாசிக்கின்றோம். தேவனே ஒளியாக இருப்பதால் முதலில் அவர் சூரியனையும் சந்திரனையும் படைக்கவில்லை. எனவே,  நான்காவது நாளில் தான் "தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்." ( ஆதியாகமம் 1 : 16 ) அதுவரை தேவனது ஒளியே பூமியில் ஒளிர்ந்தது. 

சூரியன் இல்லாமலே தேவன் பூமிக்கு ஒளி கொடுக்க முடியும். ஆனால் அவர் சூரியனையும் சந்திரனையும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காக உண்டாக்கினார் என்று கூறப்பட்டுள்ளது.  "பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்." ( ஆதியாகமம் 1 : 14 )

இதுபோல, நாம் தேவனுக்கு ஏற்புடையவர்கள் ஆகும்போது நாம் தேவனின் முழுக் கட்டுப்பாட்டில் வந்துவிடுகின்றோம். அப்போது அவரே நமக்கு ஒளியாக இருப்பார். இதனையே இன்றைய தியான வசனம், "இனிச்சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்" என்று கூறுகின்றது. 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், "நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்" ( யோவான் 9 : 5 ) என்று கூறினாரே.  ஆம் அன்பானவர்களே, நமக்கு மற்ற உலக மக்களைப்போல சூரியனும் சந்திரனும் ஒளி தருவதைவிட ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மேல் ஒளிவீசுவதே மேன்மை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே நமக்கு நித்திய ஒளியாக இருக்கும்போது நாம் இருளில் நடக்கமாட்டோம். 

இதனையே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்." ( யோவான் 8 : 12 ) சூரியனும் சந்திரனும் குறிப்பிட்ட நேரத்தில் மறையும்; பூமியில் இருள் சூழும்.  ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஒளி நம்மைவிட்டு எந்நேரமும்  மறைவதில்லை. அவரையே பற்றிக்கொள்வோம்; நித்திய ஒளியில் எந்நேரமும் தொடர்ந்து நடப்போம். 

 "விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1892

🔆 2026 ஏப்ரல் 13, திங்கள்        

"சீமோன்பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றார். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படகேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை." ( யோவான் 21 : 3 )

தேவ பிள்ளைகளாகிய நாம் தேவனை அறியாத மற்றவர்களைப்போல் வாழாமல் தேவன் நமக்கு நியமித்திருக்கும் வழியினை அறிந்தவர்களாக வாழவேண்டியது அவசியம். அப்படி வாழாமல் தேவ சித்தத்துக்கு மாறாகச் செயல்படுவோமானால் வாழ்வில் நாம் வெற்றிபெற முடியாது. 

மீன்பிடிக்கிறவராக வாழ்ந்த சீமோன் பேதுருவுக்குத் தேவனால் நியமிக்கப்பட்டப் பணி மனிதர்களைப் பிடிப்பது. இதனையே இயேசு அவரிடம் தான் உயிருடன் பூமியில் வாழ்ந்தபோது, "பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார்." ( லுூக்கா 5 : 10 ) அதாவது கிறிஸ்துவின் நற்செய்தியினை மக்களுக்கு அறிவித்து அவர்களை கிறித்துவின்பக்கமாய்த் திருப்பும் பணி. 

ஆனால், இயேசு   கிறிஸ்துவோடு மூன்றரை ஆண்டுகள் பயணித்து, அவரோடு பழகி, அவரது செயல்பாடுகளைக் கண்ணால் கண்டிருந்தும் சீடர்களுக்கு கிறிஸ்துவின் மரணத்துக்குப்பின் கைவிடப்பட்டதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. அதுவரை தங்களது வாழ்வாதாரத்தைப் பற்றிய கவலை இல்லாமல் வாழ்ந்த சீடர்களுக்குத் தங்களது  பொருளாதார நிலைகுறித்து எண்ணம் ஏற்பட்டது. பழைய தொழிலும் இல்லை, நம்பியிருந்த கிறிஸ்துவும் மரித்துப்போனார் இனி வாழ்வதற்கு ஏதாவது செய்தாகவேண்டும். எனவே, பழைய மீன்பிடித் தொழிலுக்கேத் திரும்ப பேதுரு முடிவெடுத்துவிட்டார். 

எனவே, அவர்  மற்றவர்களை நோக்கி, மீன்பிடிக்கப்போகிறேன் என்றார். அதற்கு அவர்களும் நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள்.  இப்படி மற்றவர்களையும் பழைய தொழிலுக்கு நேராக நடத்தினார் பேதுரு. ஆனால், இது மனித தீர்மானமேத்  தவிர தேவ சித்தமல்ல. எனவே அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை. ஆம் அன்பானவர்களே, தேவன் நம் ஒவ்வொருவருக்கும் நியமித்திருக்கும் வழியினை நாம் புறக்கணித்து அதற்கு மாறாகச் செயல்படுவோமானால் வெற்றிபெற முடியாது. 

ஆனால் உயிர்த்தெழுந்த இயேசு சீடர்களை அப்படியே விட்டுவிடவில்லை. அவர்களது மனநிலையினை இயேசு அறிந்திருந்ததால் அவர்களுக்குத் தனது வல்லமையினை விளங்கச்செய்து அவர்களைத்  தனது சித்தம்செய்ய தயார்ப்படுத்த விரும்பினார். எனவே, மீன் கிடைக்காமல் சோர்ந்துபோய் கரைசேர்ந்த சீடர்களுக்கு இயேசு கடற்கரையில் வந்து நின்று காட்சிகொடுத்தார். மட்டுமல்ல, பிள்ளைகளே, சாப்பிடுவதற்கு உங்களிடம் ஏதாவது உண்டா? என்று கேட்கிறார். அவர்கள் இல்லை என்று கூறவே, "அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள்." ( யோவான் 21 : 6 )

ஆம் அன்பானவர்களே, இந்தச் சம்பவத்துக்குப்பின் சீடர்கள் பழைய தொழிலைச் செய்வதுகுறித்து சிந்திக்கவே இல்லை. அவர்கள் புரிந்துகொண்டார்கள். நமக்கு நியமிக்கப்பட்டப் பணி மீன்பிடிப்பதல்ல, மனிதர்களைப்பிடிப்பது. எனவே, துணிவுடன் மீண்டும் இயேசு அவர்களுக்குப் பணித்த நற்செய்திப்பணியினைச் செய்யத் துவங்கினர்.

நமது வாழ்க்கையிலும் நமக்கு தேவன் நியமித்திருக்கும் திட்டத்துக்கு எதிராகச் செயல்படுவோமானால் மீன் எதுவும் அகப்படாமல் தவித்தச் சீடர்களைப்போல நாமும் தவிக்கநேரிடும்.  இதுபோலவே  தேவ சித்தத்துக்கு எதிராக செயல்பட்ட யோனா தீர்க்கத்தரிசியின் வாழ்க்கைச் சம்பவங்களையும் நாம் அறிவோம். 

வாழ்க்கையில் பிரச்சனைகள், தோல்விகள், தவிப்புகள், சஞ்சலங்கள் ஏற்படும்போது தேவனே உமது சித்தம்தான் என்ன என்று அவரிடமே கேட்டு முடிவுகள் எடுப்போம்.  இல்லையானால் பிரச்சனைகள் தொடரவேச்  செய்யும்.  உதாரணமாக, நமக்கு உலகவேலை கிடையாது என்பது தேவ சித்தமானால் நாம் எவ்வளவுதான் பணத்தையும், நேரத்தையும் செலவழித்து வேலைக்காக அலைந்தாலும் மீன்கள் எதுவும் கிடைக்காமல் கரைக்குத் திரும்பியச் சீடர்களைப்போலவே இருப்போம். "தேவனே, என்னைக்குறித்த உமது சித்தம் என்ன?" என்று காத்திருந்து ஜெபிப்போம். அதற்கேற்பச் செயல்படுவோம். 

 "விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1893

🔆 2026 ஏப்ரல் 14, செவ்வாய்    

"என் ஜனங்கள் என்னைவிட்டு விலகுகிற மாறுபாட்டைப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை உன்னதமானவரிடத்தில்     வரவழைத்தாலும் ஒருவனும் எழும்புகிறதில்லை." ( ஓசியா 11 : 7 )

தேவன் இஸ்ரவேல் மக்களை நேசித்ததாலும் ஆபிரகாமுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகவும்  அவர்களை எகிப்தின் பார்வோனின் கையிலிருந்து விடுவித்து பாலும் தேனும் வழியும் கானானுக்கு வழிநடத்தினார். இதனை, "இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்." ( ஓசியா 11 : 1 ) என்று இன்றைய தியான வசனத்துக்குமுன் ஓசியா மூலம் தேவன் கூறுகின்றார். இந்த வசனம் மத்தேயு 2:15 இல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குப் பொருத்திக்காட்டப்படுகின்றது. 

இன்றைய தியான வசனத்துக்கு முன்பு நாம் வாசிப்போமானால், தேவன் மேலும் வேதனையுடன் கூறுகின்றார், "மனுஷரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன், அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல் இருந்து, அவர்கள் பட்சம் சாய்ந்து, அவர்களுக்கு ஆகாரங்கொடுத்தேன்" ( ஓசியா 11 : 4 ) என்று. 

அன்பானவர்களே, இன்றும் மனிதர்கள் நாம் பலவேளைகளில் இஸ்ரவேலர் இருந்த இதே மனநிலையுடன்தான் இருக்கின்றோம். தேவன் நமக்குச் செய்த உதவிகளையும் அவர் நமக்குக் காண்பித்துவரும் அன்பினையும் மறந்தவர்களாக வாழ்கின்றோம். எனவே, தேவன் இப்போதும் வேதனையுடன்தான் இதே வார்த்தைகளைக் கூறுகின்றார்,  "ஆனாலும், என் ஜனங்கள் என்னைவிட்டு விலகுகிற மாறுபாட்டைப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை உன்னதமானவரிடத்தில் வரவழைத்தாலும் ஒருவனும் எழும்புகிறதில்லை" என்று. 

நாம் கிறிஸ்தவர்கள் என்று நம்மைக் கூறிக்கொள்வதாலும் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளில் கலந்து கொள்வதாலும் தேவன் நம்மைக்குறித்து மகிழ்ச்சியடைய மாட்டார். மாறுபாடான மனநிலை நம்மை விட்டு அகலவேண்டும்.  நமது மனம் உன்னதமான தேவனுக்கு நேராகத் திருப்பப்படவேண்டும். அவரை மட்டுமே பற்றிக்கொண்டு வாழ்பவர்களாக நாம் மாறவேண்டும். இதனையே அவர் விரும்புகின்றார். இன்றைய தியான வசனம், "அவர்களை உன்னதமானவரிடத்தில்  வரவழைத்தாலும் ஒருவனும் எழும்புகிறதில்லை" என்று வேதனையுடன் கூறுகின்றது. ஆம், அவரது அழைப்பின் குரலை மக்கள் கேட்பதில்லை என்பதே இதன் பொருள். 

பெரும்பாலும் நாம் நமது உலக ஆசீர்வாதங்களுக்காகவே தேவனிடம் ஜெபித்துக்கொண்டும் அவரை ஆராதித்துக்கொண்டும் இருக்கின்றோம். இஸ்ரவேல் மக்கள் அன்றும் இப்படித்தான் இருந்தார்கள். எத்தனையோ அதிசயங்களையும் விடுதலையையும் தேவன் அவர்களுக்குக் கொடுத்திருந்தும் அவர்கள் இருதயம் தேவனுக்கு நேராகத் திரும்பவில்லை.  அப்பத்துக்காகவும் இறைச்சிக்காகவும் மட்டுமே ஆசைப்பட்டார்கள். எனவே "பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; இவர்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள்" ( யாத்திராகமம் 32 : 9 மற்றும் உபாகமம் 9:13 ) என்று கூறுவதை நாம் வாசிக்கின்றோம். 

எனவே அன்பானவர்களே, நமது மனநிலையினை மாற்றிக்கொள்வோம். உலக ஆசை, தேவைகளுக்காக ஆசைப்பட்டு ஜெபித்து தேவனை விட்டு விலகிடும் நமது மனத்தைவிட்டு முற்றிலும் அவரைச் சார்ந்துகொள்வோம். ஆம், "அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல், கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்." ( சங்கீதம் 40 : 4 )

 "விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1894

🔆 2026 ஏப்ரல் 15, புதன்     

"அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாயிருந்தபடியால், உம்முடைய வலதுகரமும், உம்முடைய புயமும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது." ( சங்கீதம் 44 : 3 )

நமது வாழ்வில் வெற்றி ஏற்படும்போது, நல்ல காரியம் நடக்கும்போது போது  நாம் தேவனை மறந்தவர்களாக, இது எனது பலத்தினால்தான் கிடைத்தது என்று எண்ணாமல், தேவனது கிருபையினால் தான் கிடைத்தது என்பதை உணர்ந்தவர்களாக நாம் வாழவேண்டியது அவசியம். 

தேவனை வாழ்வில் அறியாத மனிதர்கள் செய்யும் செயல்கள் பல வெற்றியுள்ளதாக மாறிவிடுவதை நாம் பார்க்கின்றோம். வெற்றியுள்ள தொழில் செய்பவர்கள் எல்லோரும் தேவனை அறிந்தவர்களோ, தேவனை கனம் செய்பவர்களோ அல்ல.  அவர்கள் தங்களது  திறமை, விடா முயற்சி, கடினமான உழைப்பினால் சாதனைகள் புரிகின்றனர். ஆனால், தேவன் தெரிந்துகொண்ட தேவ பிள்ளைகள் வாழ்வில் அப்படியல்ல. தேவனது சித்தமும் அவர்களது செயல்பாடுகளும் ஒன்றுபோல இருந்தால் மட்டுமே அவர்கள் வாழ்வில் வெற்றிபெற முடியும்.

இஸ்ரவேல் மக்கள் பெரிய யுத்தப்பயிற்சி பெற்றவர்கள் அல்ல. அவர்களிடம் போரிடக்கூடிய கருவிகளும் மற்ற எதிரிகளிடம் இருந்ததைவிடக் குறைவாகவே இருந்தன. கானான் நாட்டினை சுதந்தரிக்குமுன் அவர்கள் பல இராஜாக்களுடன் போரிடவேண்டியிருந்தது. ஆனாலும், பல போரிலும் அவர்கள் வெற்றிபெற்றனர். யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரருக்கு முறியடித்த இராஜாக்களின் எண்ணிக்கை முப்பத்தியொன்று என்று கூறப்பட்டுள்ளது (யோசுவா 12:24). இந்த இராஜாக்களின் பெயர் பட்டியலை யோசுவா 12:9 - 24 வரையுள்ள வசனங்களில் நாம் வாசித்து அறியலாம்.  

இன்றைய தியான வசனம் கூறுகின்றது, இப்படி இஸ்ரவேல் மக்கள் பெற்ற வெற்றிக்கு அவர்களது உடல் பலமும் ஆயுத பலமும் காரணமல்ல, என்று. ஆம், அவர்கள் தங்களது பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை; மாறாக, கர்த்தர்  அவர்கள்மேல் பிரியமாயிருந்தபடியால், அவரது வலதுகரமும், புயமும், அவருடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது. 

இதேபோன்ற அறிவுரையினை மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கூறுவதையும் நாம் பார்க்கலாம். இஸ்ரவேல் மக்களிடம் அவர் கூறுகின்றார், இன்று தாழ்நிலையில் இருக்கும் நீ பிற்காலத்தில் உயர்வடையும்போது,   "என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து, உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்." ( உபாகமம் 8 : 17, 18 )

ஆம் அன்பானவர்களே, தங்களது சுய பலத்தை மட்டுமே நம்பி வாழும் மக்களுக்கு இந்த வசனம் உணர்வூட்டும் வசனமாகவும் ஒரு அறிவுரையாகவும் உள்ளது. நாம் இதனை கருத்தில் கொள்ளவேண்டியது அவசியம். தேவன் நினைத்தால் ஒரே நொடியில் நம்மைத் தாழ்த்திடமுடியும். எனவே அவருக்கு அஞ்சிவாழவேண்டியது அவசியம். என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து, உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக என்று மோசே கூறிய அறிவுரை நமக்கும் சேர்த்துத்தான்.

நம்மிடம் அதிகமான திறமைகள் இருக்கலாம், உடல் பலம் இருக்கலாம், செல்வமும், சமூகத்தின் பெரிய மனிதர்களது தயவும்  பல அரசியல் தலைவர்களது உதவியும் இருக்கலாம். ஆனால் அவை மட்டுமே நமது வெற்றி வாழ்க்கைக்கு அடிப்படையல்ல என்பதனை உணர்ந்தவர்களாக நாம் வாழவேண்டியது அவசியம். ஆம், நமது வெற்றிக்கு எல்லாவற்றுக்கும் மேலாக, கர்த்தரது பிரியமும், அவரது கரமும் அவரது முகத்தின் பிரகாசமும் நமக்கு ஆதரவாக இருக்க வேண்டியது அவசியம்.  

"குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்." ( நீதிமொழிகள் 21 : 31 )

 "விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1895

🔆 2026 ஏப்ரல் 16, வியாழன்      

"அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்." ( 1 சாமுவேல் 7 : 12 )

அன்று சாமுவேல் தீர்க்கத்தரிசி ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தியதுபோல, நமக்கும் நமது பிரச்சனைகளுக்கும், துன்பங்களுக்கும் நடுவாக கர்த்தரை நிறுத்தி வைக்கும்போது நமக்கு விடுதலை உண்டு. கர்த்தராகிய எபெனேசர் நமக்குத் தீர்வாக அமைவார். இதனையே இன்றைய தியான வசனம் நமக்கு நினைவுறுத்துகின்றது. 

அன்பான தேவ பிள்ளைகளே, ஒருவேளை நாம் நினைத்த பல காரியங்கள் நிறைவேறாமல் போயிருக்கலாம்; பிரச்சனைகள் தீராமல் இருந்திருக்கலாம்;  பல்வேறு விண்ணப்பங்களை தேவனிடம் எழுப்பி ஜெபித்தும் பலனில்லாததுபோலத்  தெரியலாம். ஆனால், தேவன் நமக்காகச் செயல்பட்டுக்கொண்டிருப்பதை நாம் உணர்ந்துகொள்ள, அவர் இதுவரை நம்மைப் பாதுகாத்து வந்துள்ளதே சாட்சி. எத்தனையோ நெருக்கடிகள் வந்தும், வேதனைகள் தொடர்ந்தும் நாம் நிர்மூலமாகவில்லை. ஆம், இம்மட்டும் கர்த்தர் நமக்கு  உதவிசெய்துள்ளார்; எனவே இனிமேலும் உதவிடுவார். 

எபெனேசர் எனும் வார்த்தைக்கு இம்மட்டும் கர்த்தர் நமக்கு உதவிசெய்தார் என்பதே பொருள். இன்றும் அதே எபினேசர் நம்மோடு இருக்கின்றார் என்பதனை விசுவாசிக்கும்போது அவர் நமக்கு உதவி செய்திடுவார். 

இஸ்ரவேலருக்கு எதிராக பெலிஸ்தர் போரிட புறப்பட்டு வந்தபோது சாமுவேல் தீர்க்கத்தரிசி சர்வாங்கத் தகனபலி செலுத்திக்கொண்டிருந்தார். அவர் பெலிஸ்தரோடு போரிட்டுக்கொண்டிருக்கவோ அவர்களுக்கு எதிராக போரிட புறப்படவோ இல்லை. ஆனால், எபினேசரான கர்த்தரே அவர்களுக்காகப் பெலிஸ்தியருக்கு எதிராகப் போராடினார். இதனை நாம், "சாமுவேல் சர்வாங்க தகனபலியைச் செலுத்துகையில், பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ண நெருங்கினார்கள்; கர்த்தர் மகா பெரிய இடிமுழக்கங்களைப் பெலிஸ்தர்மேல் அந்நாளிலே முழங்கப்பண்ணி, அவர்களைக் கலங்கடித்ததினால், அவர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பட்டு விழுந்தார்கள்." ( 1 சாமுவேல் 7 : 10 ) என்று வாசிக்கின்றோம். மட்டுமல்ல, "இந்தப்பிரகாரம் பெலிஸ்தர் அப்புறம் இஸ்ரவேலின் எல்லையிலே வராதபடிக்குத் தாழ்த்தப்பட்டார்கள்" ( 1 சாமுவேல் 7 : 13 )

இந்தச் சம்பவம் நமக்கு ஒரு உண்மையினை உணர்த்துகின்றது. பெலிஸ்தர் போரிட வந்தபோது, சாமுவேல் சர்வாங்க தகனபலியைச் செலுத்திக்கொண்டிருந்தார் என்று கூறப்பட்டுள்ளது.   நாமும் இதுபோல நம்மைத்  தேவனுக்குமுன் சர்வாங்கப்  பலியாக ஒப்புக்கொடுத்து அவரை ஆராதிப்போமானால் எபினேசரான அவர் நமக்கும்  இதுபோல எதிரிகளான பிரச்சனைகள், துன்பங்கள், வியாதிகள் இவைகளைத் துரத்தி அவை நமது எல்லையில் வராதபடிச் செய்வார்.   

இன்று புதிய ஏற்பாட்டு மக்களாகிய நாம் சாமுவேலைபோல சர்வாங்கத் தகனபலியாக காளைகளையும் ஆடுகளையும் செலுத்தவேண்டியதில்லை. நம்மையே அவருக்கு உகந்த பலியாகச் செலுத்தி ஆராதிக்கவேண்டும். "அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை." ( ரோமர் 12 : 1 ) என்று பவுல் அப்போஸ்தலர் நமக்கு அறிவுறுத்தவில்லையா? 

பிரச்சனைகளும் துன்பங்களும் ஏற்படும்போது அவைகளையே நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்காமல், எப்படி நெருங்கிவரும் பெலிஸ்தியரை நோக்கிப்பார்க்காமல் கர்த்தரையே  சாமுவேல் நோக்கிப்பார்த்தாரோ அதுபோல நம்மையே தகன பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுப்போம். நமக்கும் நமது பிரச்சனைகளுக்கும், துன்பங்களுக்கும் நடுவாக கர்த்தரை நிறுத்தி வைப்போம்.  இம்மட்டும் உதவின எபினேசராகிய கர்த்தர்  இனிமேலும் உதவிடுவார். 

 "விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1896

🔆 2026 ஏப்ரல் 17, வெள்ளி       

"தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்." ( மீகா 2 : 13 )

நமது தேவனுக்கு இன்றைய தியான வசனம்,  "தடைகளை நீக்கிப்போடுகிறவர்" எனும் பெயரைக் கொடுத்துள்ளது. ஆம் அன்பானவர்களே, அவரை நாம் பற்றிக்கொள்வோமானால் அவரது பெயருக்கேற்ப நமது வாழ்வில் ஏற்படும் எந்தத்  தடையாக இருந்தாலும் அவருக்குமுன் நீங்கிப்போகும். அப்படி நீங்கும்போது அவரது மக்களாகிய நாம் எளிதில் வாழ்வின்  தடைகளைக் கடந்து அவரோடுகூட உட்பிரவேசித்துக் கடந்துபோகலாம்.  

இதற்கு ஆதாரமாக வேதாகமச் செய்திகள் பல உண்டு. குறிப்பாக, நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலுக்குப்பின் அப்போஸ்தலர்கள் சந்தித்த வேதனைகள், துன்பங்கள் பல. ஆனாலும் தடைகளை நீக்கிப்போடுகிறவர் அனைத்துத் தடைகளையும் நீக்கி அவர்களை தொடர்ந்து பலப்படுத்தினார். 

தடைகளை நீக்கிப்போடுகிறவர் அப்போஸ்தலர்கள் வாழ்வில் செய்த  மூன்று முக்கிய காரியங்களை (தடைகளை)  நாம் வேதாகமத்தில் பார்க்கின்றோம். முதலில், அனைத்து அப்போஸ்தலர்களும் கைதுசெய்யப்படுகின்றனர். "அப்பொழுது பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்த சதுசேய சமயத்தாரனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து, அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தார்கள். கர்த்தருடைய தூதன் இராத்திரியிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவவார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.      " ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 5 : 17-20 ) என்று வாசிக்கின்றோம். ஆம், தடைகளை நீக்கிப்போடுகிறவர் இப்படி அவர்கள்முன் சென்றார். 

இதுபோலவே, ஏரோது இராஜா பேதுருவைக் கொலைசெய்ய எண்ணி, கைதுசெய்து சிறைச்சாலையில் அடைத்துவைத்தான்.  ஆனால், பேதுரு கொலைசெய்யப்டும் நாளுக்கு முந்தின நாள் இரவு சிறைச்சாலையின் கதவுகள் அற்புதமாகத் திறந்து, பேதுருவின் கட்டுகள் அகன்று அவர் அற்புதமாக சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டார். (அப்போஸ்தலர் 12:5 -10) 

மேலும், கைதுசெய்யப்பட்ட அப்போஸ்தலரான பவுலும் சீலாவும் பிலிப்பி நகரின் சிறையில் கால்கள் தொழுமரத்தில் கட்டப்பட்டவர்களாக காவல்படுத்தப்பட்டிருந்தனர். "நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 16 : 25, 26 )

ஆம் அன்பானவர்களே, கட்டுக்கள், சங்கிலிகள், சிறைச்சாலையின் கதவுகள் இவை எதுவும் அப்போஸ்தலர்களைத் தடுத்து அவர்களது வழியை மறிக்கமுடியவில்லை. காரணம், தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோனார்;    அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போனார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோனார்.  

இதே வல்லமையுள்ள தேவன் இன்றும் ஜீவனுள்ளவராக இருப்பதால் அவர் நமக்கும் இதுபோலவேச்  செய்ய வல்லமையுள்ளவராக இருக்கின்றார். எனவே, நமது வாழ்வில் ஏற்படும் தடைகள், பிரச்சனைகள், கட்டுக்கள், வியாதிகள் இவைகளைக்குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நமது இராஜாவாக ஏற்றுக்கொண்டு அவருக்கு நம்மை அர்ப்பணித்து வாழ்வோமென்றால், நமது வாழ்வின் தடைகளை அவர் மாற்றிப்போட வல்லவராகவே இருக்கின்றார். 
 
அன்பானவர்களே, துன்பங்களையும், பாடுகளையும் கடந்து சென்றவர்கள்தான் மற்றவர்களுக்கு வழிகாட்டமுடியும். 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் வாழ்வில் இப்படித் துன்பங்களையும்  தடைகளையும்  கடந்து சென்றவர்தான். எனவே அவர்தான் நமக்குமுன் சென்று தடைகளை நீக்கி வாசலைத் திறந்து நம்மை பரலோகத்தில் உட்பிரவேசிக்கச் செய்யமுடியும்.

இதனால்தான் எபிரெய நிருப ஆசிரியர், "நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்." ( எபிரெயர் 4 : 15-16 ) என்று கிறிஸ்துவை நாம் சேருவதற்கு அறிவுறுத்துகின்றார்.  

தடைகளை நீக்கிப்போடுகிறவர் நமக்கு முன்பாக  நடந்துபோவதை நாம் விசுவாசக் கண்கொண்டு பார்க்கமுடியுமானால் அவரோடுகூட உட்பிரவேசித்து தடைகளைக் கடந்து போகமுடியும். ஆம், நமது இராஜா நமக்கு முன்பாகப் போவார், கர்த்தர் நமது முன்னணியில் நடந்துபோவார்; எனவே நாம் தடைகளைக் கடந்து செல்ல முடியும். விசுவாசிப்போம். 

 "விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1897

🔆 2026 ஏப்ரல் 18, சனி        

"என் பந்துஜனங்கள் விலகிப்போனார்கள். என் சிநேகிதர் என்னை மறந்துவிட்டார்கள். என் வீட்டு ஜனங்களும், என் வேலைக்காரிகளும், என்னை அந்நியனாக எண்ணுகிறார்கள்; அவர்கள் பார்வைக்கு நான் பரதேசியானேன்." ( யோபு 19 : 14-15 )

இன்று நாம் இந்தியாவில் காணும் அம்பானி,  அதானி போல வாழ்ந்தவர்தான் யோபு. கிழக்கு நாடுகளிலுள்ள அனைவரைவிடவும் அவர் மிகவும் பெரியவராக இருந்தார். "அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரரும் இருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்." ( யோபு 1 : 3 ) என்று கூறப்பட்டுள்ளது. 

ஆனால் இவ்வளவு பெரிய செல்வந்தனான யோபு ஒரே நாளில் பரதேசி அல்லது பிச்சைக்காரனைப்போல ஆகிவிட்டார். முன்பு திரளான பணிவிடைக்கார்கள் இருந்தார்கள் ஆனால் இன்று அதே வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும் அவரை அந்நியனாகப் பார்த்தார்கள். "நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு உத்தரவு கொடான்; என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று." ( யோபு 19 : 16 )

ஆம் அன்பானவர்களே, இந்த உலகம் பணத்துக்கு மதிப்புக் கொடுக்கின்றதே தவிர மனிதனுக்கல்ல. பணத்தையும் செல்வத்தையும் உலகம்  நேசிப்பதால் பணத்தையும் செல்வத்தையும் வைத்திருப்பவர்களை அன்பு செய்வதாக நடிக்கின்றது. உயிர் நண்பர்கள் என்று கூறிக்கொள்பவர்கள்கூட பலவேலைகளில் உண்மையான அன்புசெலுத்துபவர்களாக இருப்பதில்லை. இதனையே, "என் பிராணசிநேகிதர் எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள்; நான் சிநேகித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள்." ( யோபு 19 : 19 ) என்கின்றார் யோபு.

ஆனால் அன்பானவர்களே, யோபு நீதிமானாகவும் கர்த்தருக்குப் பயப்படும் பயமுள்ளவராகவும் இருந்ததால் தனது உத்தமத்திலிருந்து பின்வாங்கவில்லை. "கர்த்தர் கொடுத்தார்; கர்த்தர் எடுத்தார்" ( யோபு 1 : 21 ) என்பதே அவரது கூற்று. "கர்த்தரது கைகளால் நன்மைகளைப்  பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ?"  ( யோபு 2 : 10 ) என்பதுதான் அவரது  நியாயம். எனவே, தேவன் அவரை மீண்டும் உயர்த்தினார். இரெட்டிப்பான ஆசீர்வாதங்களை அவருக்கு அளித்தார். யோபு தான் இழந்துபோன அனைத்தையும் இரண்டு மடங்காகப் பெற்றுக்கொண்டார். 

இப்போது என்ன நடந்திருக்குமென்று எண்ணிப்பாருங்கள்...அவரை அந்நியராகப் பார்த்து அவரைப் புறக்கணித்த வேலைக்காரர்கள் அவரிடம் மீண்டும் வந்து வேலைக்காக கெஞ்சியிருப்பார்கள். அவரைப் புறக்கணித்த ஏமாற்று நண்பர்கள் மீண்டும் அவரிடம் வந்து அவரது பணத்தில் மகிழ்ச்சிபெறக் கூட்டம்  கூடியிருப்பார்கள். இப்போது யோபு அனைவரைக்குறித்தும் ஒரு தெளிவுள்ளவராக மாறியிருந்திருப்பார். 

யோபுவைபோல பலர் இன்றும் உலகினில் உண்டு. நல்ல வேலைகளை, செல்வத்தை, சொந்த வீடு, பிள்ளைகளை இழந்து தவிப்பவர்கள் உண்டு. நண்பர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் உண்டு.  ஆம் அன்பானவர்களே, எனவே நாம் நம்பிக்கைக் கொள்ளவேண்டியது நமது பதவியையே, உடல் பலத்தையோ, பணத்தையோ, நமக்கு உதவும் வேலைக்காரர்களையோ, போலி நண்பர்கள் கூட்டத்தையோ அல்ல. மாறாக, நம்மீது மாறாத அன்புகொள்ளும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் மட்டுமே. அவரே என்றும் மாறாதவர். 

இன்று நாம் இப்படித் தாழ்ந்துபோக என்ன காரணம் என்று காரணத்தைத் தேடாமல் கர்த்தரிடம் நம்மை ஒப்புக்கொடுப்போம். யோபுவைக் கைவிட்டதுபோல ஒரு குறுகிய காலத்துக்கே அவர் நம்மை இப்படி வைத்திருப்பார். அதற்கு அவருக்கு ஏதாவது நோக்கமிருக்கும். "இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன். அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்." ( ஏசாயா 54 : 7-8 )

உலக பொருட்கள், நமது உடல்பலம், பதவி, பணம், நமக்குள்ள செல்வாக்கு, நமக்கு உதவக்கூடிய மனிதர்கூட்டம் இவைகள்மேல் முழு நம்பிக்கை வைத்திடாமல் கர்த்தரையே முழுமையாகப் பற்றிக்கொள்வோம்; நமது வாழ்வை அவருக்கு ஒப்புக்கொடுப்போம்.  அப்போது, "நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன்" என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வாக்களித்து உறுதிகூறுகின்றார். 

 "விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1898

🔆 2026 ஏப்ரல் 19, ஞாயிறு         

"பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக்கொள்ளுகிறான்." ( மத்தேயு 13 : 44 )

தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் பொதுவாக வறட்சியான காலநிலையே நிலவுகின்றது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பயிரிடமுடியாத தரிசு நிலங்களாக இருப்பதை நாம் பார்க்கலாம். நிலத்தடி நீர் வளமும் குறைவாக இருப்பதால் நிலங்களின் விலைமதிப்பும் குறைவாகவே இருக்கும். ஆனால், சில நிலங்களில் நிலத்தடிநீர்வளம் அதிகமாக இருப்பதுண்டு. அத்தகைய நிலங்கள் மற்ற நிலங்களைவிட இரண்டு மூன்று மடங்கு விலையுள்ளவைகளாக மாறிவிடுகின்றன. 

ஆம், நிலத்தடி நீர் அந்த நிலங்களில் புதையலைப்போல மதிப்புமிக்கவையாக இருக்கின்றன. அத்தகைய நிலங்களை அவற்றின் உரிமையாளர்கள் விற்பனை செய்ய முயலும்போது அதனை வாங்கிவிடவேண்டும் எனும் ஆவலில் பலர் முயலுவதுண்டு. அவர்கள் அந்த நிலத்துக்கு அதிகவிலை கொடுக்கவும், அதனை வாங்கிட தங்களுக்குள்ள தங்க நகைகளைக்கூட விற்பனைசெய்வதும் உண்டு.  மட்டுமல்ல, அப்படி ஒரு நிலம் விற்பனைக்கு இருப்பதை அறிந்தவர்கள் மற்றவர்கள் அதனை வாங்கிவிடக்கூடாது எனும் எண்ணத்தில் அதுபற்றி வெளியில் கூறுவதில்லை. 

இதனையே ஆண்டவராகிய இயேசு பரலோக  ராஜ்யத்துக்கு உவமையாகக் கூறுகின்றார். பரலோக ராஜ்ஜியம் புதையலைவிட அதிக விலைமதிப்புள்ளது. நாம் இந்த உலகத்தை விட்டுப்பிரிந்தபின் முடிவில்லா காலமும் அங்குதான் வாழவேண்டும். எனவே, அதனை நாம் எப்படியாவது சுதந்தரித்துக்கொள்ளவேண்டும்.  நிலத்தில் புதையல் இருக்கின்றது என்று அறிந்த மனிதன் தனக்கு இருக்கும் எல்லாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்க முயல்வதுபோல நாம் உலக ஆசை இன்பங்களைத் துறந்து அதனை அடைந்திட முயலவேண்டும். 

பூமியில் நாம் சேர்க்கும் தொத்துக்களும் செல்வங்களும் இந்தப் பூமியில் நாம் வாழும் நாட்கள் வரை உதவலாம். ஆனால் அதுகூட நிச்சயமில்லை. எனவேதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறினார், "பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்." ( மத்தேயு 6 : 19 ) என்று. 

நிலத்தில் புதையலைக் கண்ட மனிதன் அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக்கொள்ளுகிறான் என்று இயேசு கிறிஸ்து கூறினார். எல்லாவற்றையும் என்று கூறுவதால், வெறும் சொத்துக்களை மட்டுமல்ல, நாம் நமக்குள் பெருமையாக; மேன்மையாகக் கருதும் அனைத்தையும் இழக்கவேண்டியது அவசியமென்று  பொருள்.  பெரிய பதவி நமக்கு இருக்குமானால் அது பற்றிய பெருமையினை நாம் விட்டுவிட்டு, மற்றவர்களை மதித்து அவர்களையும் சமமாக மதித்து வாழக் கற்றுக்கொள்ளவேண்டியது அவசியம். 

அப்போஸ்தலரான பவுல் இப்படி தேவனுக்காக தான் பலவற்றைத் தியாகம் செய்த அனுபவத்தால் கூறுகின்றார், "அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின்மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்." ( பிலிப்பியர் 3 : 8 ) என்று. 

இந்த உலகத்தில்கூட நாம் ஒன்றை இழந்துதான் இன்னொன்றைப்  பெறமுடியும். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றிபெற, விளையாட்டுகளில் சாதனை புரிய பலர் கடுமையாக உழைக்கின்றனர். மற்றவர்கள் மகிழ்ச்சி என்று கருதும் பல காரியங்களைச் செய்யாமல் ஒதுக்கி வைக்கின்றனர். அதன்பின்னரே வெற்றிபெற முடிகின்றது.  நாமும் அதுபோல புதையலாகிய பரலோகராஜ்யத்தினை சுகந்தரித்துக்கொள்ள, இயேசு கிறிஸ்து கூறியபடி  தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, நிலத்தைக்கொள்ளும் மனிதனைப்போலச் செயல்படுவோம். 

ஆம், இழக்கும்போது நாம் பெற்றுக்கொள்கின்றோம்.  

 "விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1899

🔆 2026 ஏப்ரல் 20, திங்கள்          

"துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்." ( நீதிமொழிகள் 17 : 15 )
 
இன்றைய தியான வசனத்துக்கு நாம் இன்றைய தேர்தல் சூழ்நிலையினைக்கொண்டுச்  சில விளக்கங்களைப் பார்க்கலாம். 

பொதுவாக அரசியலில் வேதாகமம் கூறும் அடிப்படையிலான நீதிமான்கள் எவரும் இருக்கமுடியாது என்பது தெரிந்த காரியம்.  ஆனால், சில காரியங்களை நாம் சிந்திக்கவேண்டியது அவசியம். நீதிமான்களாக இல்லாவிட்டாலும் நமக்கு ஆதரவாக இருப்பவர்களை நாம் மறந்துவிடமுடியாது; அவர்களைப் புறக்கணிக்க முடியாது. இன்று கிறிஸ்தவர்களாகிய நாம் தமிழகத்தில் விடுதலையுடன் தேவனை ஆராதித்து வருகின்றோமென்றால் இங்கிருக்கும் அரசியல் சூழ்நிலைதான் காரணம்; இங்கு ஆட்சியில் இருக்கும் தலைவர்கள்தான் காரணம். 

இன்றைய சூழ்நிலையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கிறிஸ்தவர்களுக்கும் இதர சிறுபான்மையின மக்களுக்கும் பாதுகாப்பான கூட்டணியாக இருக்கின்றது. அவற்றின் தலைவர்களும் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது நல்லவர்களாகவே இருக்கின்றனர்; அமைதலுள்ள குணமுள்ளவர்களாக இருக்கின்றனர்.  இந்தியாவின் வடமாநிலங்களில் நடைபெறும் கிறிஸ்தவ விரோத செயல்பாடுகளை நாம் செய்தித் தாள்களில் வாசிக்கின்றோம், தொலைக்காட்சிகளில் பார்க்கின்றோம். இதே நிலை தமிழகத்தில் ஏற்பட்டுவிட நாம் அனுமதிக்கக்கூடாது.  

இன்றைய தியான வசனத்தில் நாம் வாசிக்கின்றோம், "துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக்   குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்" என்று. நாம் வாக்களிக்கும்போது கிறிஸ்தவர்களுக்கு இடையூறாக இருப்பவர்களுக்கு வாக்களிப்போமானால் நாம் துன்மார்க்கர்களை ஆதரித்து நீதிமானாக்க முயலுகின்றோம் என்று பொருள்.  மட்டுமல்ல, இதுவரை நமக்கு ஆதரவாக இருக்கும் தலைவர்களைக்  குற்றவாளியாக்குகிறோம் என்று பொருள். 

இப்படிச் செய்கின்றவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அருவருப்பு என்றால் என்ன?  மனிதக் கழிவுகளைக் கண்டு நாம் முகம்சுழித்து ஒதுங்கிச் செல்வோமே அதுபோன்ற செயல். ஆம், இப்படிச் செய்பவர்களை கர்த்தர் அதுபோல அருவெறுப்பாகக் கருதி ஒதுக்குவார் என்று பொருள். 

இன்று திரைப்படத்தில் வீரனாக நடிக்கும் சாதாரண நடிகனின்பின்னால் தமிழகத்தில் பெரும் திரளான இளைஞர்கள் ஓடுகின்றனர். அரசியல்வேறு, திரைபடம்வேறு எனும் அடிப்படையினைப் புரிந்துகொள்ளாத நிலைமையே இதற்குக் காரணம். சினிமாவில் செய்வதுபோல மாயாஜாலத்தை நிஜ வாழ்க்கையில் ஒருவரும் செய்ய முடியாது. இப்படிப்பட்டவர்களுக்கு வாக்களிக்கும்போது நாம் நம்மை அறியாமல் நமக்கு எதிராகச் செயல்படுகின்றோம் என்று பொருள்; நமக்கு ஆதரவாக இருக்கும் தலைவர்களுக்கு எதிராக நாம் செயல்படுகின்றோம் என்று பொருள்.  மொத்தத்தில் கிறிஸ்துவின் சித்தத்துக்கு எதிராகச் செயல்படுகின்றோம் என்று பொருள். 

கிறிஸ்தவர்களுக்கு அரசியல் தேவையில்லை என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் அரசியல் நமது வாழ்க்கையுடன் இணைந்தது. நல்ல அரசியல் சூழ்நிலை இருந்தால்தான் நாம் அமைதியாக வாழமுடியும். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும்; நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்." ( 1 தீமோத்தேயு 2 : 1-2 ) என்று கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, வெறுமனே ஜெபித்துக்கொண்டிருந்தால் மட்டும்  போதாது. தேவன் நமக்குத் தரும் வாய்ப்பினை அவரது சித்தப்படி நாம் பயன்படுத்தவேண்டும். நீதிமான்களும் பரிசுத்தர்களும் நமக்கு முன் நிறுத்தப்படவில்லை என்றாலும் ஒப்பீட்டு அளவில் (comparisan)  நல்லவர்களுக்கு வாக்களிப்போம். அதுவே தேவனது சித்தம். 

 "விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1900

🔆 2026 ஏப்ரல் 21, செவ்வாய்  

"தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான்." ( 1 கொரிந்தியர் 8 : 3 )

வானத்தையும் பூமியையும் உண்டாக்கி ஆண்டுவரும் தேவனாகிய கர்த்தர் இந்த உலகத்திலுள்ள படைப்புக்கள் அனைத்தையும் அறிவார். காரணம், அவை அனைத்தும் அவரால் உண்டாக்கப்பட்டவை. ஆனால் இன்றைய தியான வசனம் தேவனில் அன்புகூருகிறவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான் என்று கூறுவது சிந்திக்கவேண்டிய ஒன்று. 

தேவன் உலகிலுள்ள அனைத்தையும் அறிந்திருந்தாலும், அவரிடம் தனிப்பட்ட அன்புகொண்டு அவரையேத் தேடுபவர்களை அவர் தனிப்பட்ட  அக்கறையுடன் கண்ணோக்குகின்றார் என்று பொருள்.  காரிருளான பகுதிகளில் மின்மினிப்பூச்சிகள் பறக்கும்போது அவை மட்டுமே நமது கண்களுக்குச் சிறப்பாகத் தெரியும். அந்தப் பகுதிகளில் மற்ற பூச்சி இனங்களும் இருக்கும். அவைகளை நாம் கவனிப்பதில்லை. இதுபோலவே, தேவன்மேல் அன்புகொள்ளும் மனிதன் அவரது பார்வைக்கு ஒரு மின்மினிப்பூச்சியைப்போல தெரிந்துகொண்டிருக்கிறான். 

காரணம், இந்த உலகத்தின் நெருக்கடிகள், பாடுகள், முட்கள் நெருக்கியபோதும் தேவன்மேல் அன்புகொள்ளும் மனிதன் மாறாமல் தனது பரிசுத்தம் கெடாமல் இருப்பதுதான். ஆம், இதனையே நாம், "முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்." ( உன்னதப்பாட்டு 2 : 2 ) என்று வாசிக்கின்றோம். தேவனுக்குப் பிரியமான மணவாட்டியான பக்தர்கள் முட்களுக்கிடையே நறுமணம் வீசிக்கொண்டிருக்கும் லீலி மலர்போல இருக்கின்றனர். 

எனவேதான் இப்படி தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான் என்று வேத வசனம் கூறுகின்றது. நாம் தேவனில் அன்புகூருகின்றோம் என்பதற்கு அடையாளம் நாம் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்வதுதான். அப்போது அவர் நம்மை அறிந்து நம்மோடு வந்து தங்குவார். இதனை நாம் நமக்குள் உணர்ந்துகொள்ள முடியும். இதனையே அப்போஸ்தலரான யோவான், "அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்." ( 1 யோவான்  3 : 24 ) என்று கூறுகின்றார். 

ஒரு நாட்டின் பிரதமரோ, முதலமைச்சரோ நம்மைத் தனிப்பட்ட விதத்தில் அறிந்து நம்மைக் கவனிக்கின்றாரென்றால் அது நமக்கு எவ்வளவு பெரிய காரியமாக இருக்குமென்று எண்ணிப்பாருங்கள். அப்போது மற்றவர்களுக்குமுன்பும் நாம் மதிப்புமிக்கவர்கள் ஆகிவிடுவோமல்லவா? அப்படியானால் சர்வலோகத்தையும் படைத்து ஆளும் தேவன் நம்மைத் தனிப்பட்ட விதத்தில் கவனிக்கின்றாரென்றால் அது எத்தனை பெரிய மேன்மையை நமக்குக் கொண்டுவரும்!!

உலகத் தலைவர்கள் நம்மை அறிவது இந்த உலகத்தில் மட்டும் நமக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால், தேவனால் நாம் அறியப்பட்டு அன்புகூரப்படும்போது இம்மையில் மட்டுமல்ல, மறுமையிலும் நாம் மதிப்புமிக்கவர்களாக மாறிவிடுகின்றோம். மேலான விண்ணக ஆசீர்வாதங்களுக்கு உரிமையுள்ளவர்களாகின்றோம். 

தேவனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து முற்றிலும் தேவனில் அன்புகூருகிறவர்களாக வாழ்வோம்; அப்போது நாமும்  தேவனால் அறியப்பட்டவர்களாக மாறி மேலான, மெய்யான ஆசீர்வாதங்களுக்கு உரிமையாளர்களாவோம். 

 "விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1901

🔆 2026 ஏப்ரல் 22, புதன்   

"நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்." ( கலாத்தியர் 6 : 9 )

இந்த உலகத்தில் நாம் நன்மை செய்வதற்காகவே தேவனால் படைக்கப்பட்டுள்ளோம். பலரும் நன்மை செய்வது என்பதை தர்மம் செய்வது என்று எண்ணிக்கொள்கின்றனர். ஆனால், நன்மை செய்வது என்பதும் தர்மம் செய்வது என்பதும் வெவ்வேறானவை. நன்மை செய்வது என்பது ஏதாவது நல்ல காரியங்களைச் செய்வது என்று பொருள்.  எனவேதான் அப்போஸ்தலரான பவுல் இவை இரண்டையும் பிரித்து, "அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்." ( எபிரெயர் 13 : 16 ) என்று கூறுகின்றார். 

தர்ம காரியங்கள் செய்யவேண்டியது முக்கியம்தான். ஆனால் இன்றைய தியான வசனம் அதனைக்குறித்துக் கூறாமல் நன்மை செய்வது குறித்துக் கூறுகின்றது. அதுவும், நம்மைப்போல கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொண்ட மக்களுக்கு நமக்குக்  கிடைக்கும் நேரத்துக்கேற்றபடி நன்மை செய்யவேண்டும்  என்கின்றார் பவுல் அப்போஸ்தலர்.  "ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்." ( கலாத்தியர் 6 : 10 )

நாம் நமது குடும்பத்துக்காக மட்டுமல்ல, நமது ஊருக்காக, சமுதாயத்துக்காக, நண்பர்களுக்காக பல நல்ல செயல்களை செய்யலாம். குடும்பத்துக்காகச் செய்யும் செயல்களை நாம் வெளியில் சொல்வதில்லை. ஆனால் மற்றவர்களுக்கும், பொதுநலனுக்கும் செய்யும் நன்மைகளைப் பலரும் விளம்பரப்படுத்தவே விரும்புகின்றனர். 

ஆனால் நாம் நன்மை செய்யவேண்டும் என்பது ஏற்கெனவே தேவனால் திட்டமிடப்பட்டது. "ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்." ( எபேசியர் 2 :10) என்று வாசிக்கின்றோம். அதாவது, நாம் நன்மை செய்வதற்காகவே படைக்கப்பட்டுள்ளோம். அது தேவனால் நமக்காக முன்குறிக்கப்பட்டது. எனவே, அப்படி நன்மை  செய்யாமல் இருப்போமானால் தவறு. 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நன்மை செய்பவராகவே இந்த உலகத்தில் சுற்றித்திரிந்தார் என்று கூறப்பட்டுள்ளது. "நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 38 ) என்று வாசிக்கின்றோம். 

மேற்படி வசனத்தில் இரண்டு காரியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது, தேவன் இயேசு கிறிஸ்துவைப் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணியிருந்தார்; தேவன் அவருடன் கூட இருந்தார்.  நம்மிலும் ஆவியின் அபிஷேகம் இருந்து தேவன் நம்மோடு இருப்பாரானால் நாமும் உண்மையாகவே நன்மை செய்கிறவர்களாகவும் செய்கின்ற நற்செயல்களை பிறருக்கு விளம்பரப்படுத்தாதவர்களாகவும்  இருப்போம். 

இறுதியாக,  இன்றைய தியான வசனம் கூறுகின்றது, நன்மை செய்வதில் சோர்ந்துபோகாமல் இருப்போமானால் ஏற்றகாலத்தில் அறுப்போம் என்று. அதாவது, நாம் கைம்மாறு கருதாமல் செய்யும் நல்ல செயல்கள் ஏற்ற  காலத்தில் நமக்கு நன்மையாக முடியும். சிலர் எப்போதும், "நான் உதவின ஆட்களுக்குக் கணக்கே இல்லை.  நான் எவ்வளவோ பேருக்கு உதவியிருக்கிறேன், எவ்வளவோ நல்ல செயல்கள் செய்துள்ளேன், ஆனால் ஒரு நன்மையும் எனக்கு ஏற்படவில்லை" என்று முறுமுறுப்பார்கள். இப்படிக் கூறிக்கொண்டிருப்பவர்கள் உண்மையான உள்ளத்துடன் பிறருக்கு உதவி செய்யவில்லை என்பது பொருள். 

எனவே அன்பானவர்களே, பிற்காலத்தில் நமக்குப் பிரதிபலனாக  நன்மை  ஏற்படும் எனும் எதிர்பார்ப்பில்லாமல் நல்லது செய்து அந்த  நல்ல செயல்களை விளம்பரப்படுத்தாமல் இருக்கவேண்டியது அவசியம். அதுவும் நம்மைப்போல விசுவாச குடும்பத்தினருக்கு நாம் அதிகமாக நன்மை செய்யவேண்டியதும் அவசியம். இப்படி  நாம் நன்மை செய்வதில்  சோர்ந்துபோகாமல் இருப்போமானால் ஏற்றகாலத்தில் நமக்கான பிரதிபலனைப் பெறுவோம். 

 "விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1902

🔆 2026 ஏப்ரல் 23, வியாழன்    

"உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்." ( ரோமர் 8 : 39 )

இந்த உலகத்தில் சிலர் தங்கள் பலத்தைக்  குறித்துப் பெருமையாக,  "என்னை எவனும் அசைக்கமுடியாது; என்னைத் தொடக்கூட முடியாது" என்று கூறுவார்கள். ஆனால் அவர்கள் தங்களைக்குறித்து எண்ணிக்கொள்வது பலவேளைகளில் நிறைவேறுவதில்லை. ஆம், தங்களை "நிரந்தர முதல்வர்" என்று கூறிக்கொண்டவர்கள் அழிந்துபோன வரலாறு உண்டு. 

ஆனால் அப்போஸ்தலரான பவுல் இத்தகைய வைராக்கியமாக பேச்சு ஆவிக்குரிய மக்களிடம் இருக்கவேண்டியது அவசியம் என்று கூறுகின்றார். "கிறிஸ்துவின் அன்பைவிட்டு எவனும், எதுவும் என்னைப் பிரிக்கமுடியாது" என்பதுதான் அவரது உறுதி. இத்தகைய ஆவிக்குரிய மனஉறுதி நமக்கு இருக்கவேண்டியது அவசியம்; அதனை அறிக்கையிடவேண்டியது அவசியம்.

சிலர் ஆவிக்குரிய ஓட்டத்தைச் சிறப்பாகத் துவங்குவார்கள். ஆனால் பொருளாதாரத்திலோ பதவியிலோ அவர்கள் சிறிது உயர்வடைந்துவிட்டாலும் பெருமை அவர்களைப் பற்றிக்கொள்ளும். இந்தப் பெருமை அவர்களை தேவனைவிட்டுப்  பிரித்துவிடும்.  இதுபோல வாழ்வில் தாழ்ச்சியடையும்போது பலர் முறுமுறுத்துத் தேவனை விட்டுப் பின்வாங்குவதுண்டு. இதுபோல, பொருளாசை எனும் இச்சை பலரை தேவனைவிட்டுப் பின்மாற்றமடையச் செய்யும். 

ஆனால் இவை எதுவும் தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்காது என்று உறுதியாகச் சொல்கின்றார் பவுல் அப்போஸ்தலர். ஆம், வாழ்வின் உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்த உலகப் பொருளாக இருந்தாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமுடியாது என்று நாமும் அவரைப்போல அறிக்கையிடவேண்டியது  அவசியம். 

நம்முடைய வாழ்வில் ஏற்படும் பல நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் நாம் பேசும் பேச்சுகளே பலவேளைகளில் காரணமாக இருக்கின்றது என்று உளவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நேர்மறையான வார்த்தைகளைப் பேசும்போது உயர்வடைகின்றோம். எதிர்மறையான பேச்சுகளும் எண்ணங்களும் நம்மை தாழ்ச்சியடையச் செய்யும். இதனையே வேதமும், "மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்." ( நீதிமொழிகள் 18 : 21 ) என்று கூறுகின்றது. 

ஆம் அன்பானவர்களே, நாமும் பவுல் அப்போஸ்தலரைப்போல இந்த உலகத்திலுள்ள எதுவும் கிறிஸ்துவின்மேலுள்ள எனது அன்பைவிட்டு என்னை விலகச் செய்யாது என்று உளமார அறிக்கையிடுவோம். நமது மேலான இந்த எண்ணத்தைத் தேவன் கனப்படுத்துவார்; தேவனுடைய ஆவியானவர் நாம் இத்தகைய உறுதியுடன் வாழ நமக்குத் துணைபுரிவார்.  இந்த உறுதியில்தான் பவுல் கூறுகின்றார்:- 

"கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய் இருக்கிறோமே." ( ரோமர் 8 : 36, 37 )

நமது வாயினால் விசுவாசத்தைக்குறித்து இத்தகைய நேர்மறையான அறிக்கையிடுவோம்; முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களான ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்வோம். 

 "விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1903

🔆 2026 ஏப்ரல் 24, வெள்ளி     

"தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்." ( சங்கீதம் 14 : 2 )

தேவனைத் தேடுகிற இருதயம் மனிதர்களுக்குத் தேவை. இந்தத் தேடுதல் உணர்வுதான் ஒருவரை உண்மையை அறிந்திட உதவும்; மெய்யான தேவனை வாழ்வில் கண்டுகொள்ள முடியும்.  இத்தகைய உணர்வுடன் தன்னைத் தேடும் மனிதர்கள் உலகினில் இருக்கிறார்களா என்று அறிய தேவன் மனிதர்களை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று இன்றைய தியான வசனத்தில் நாம் வாசிக்கின்றோம். 

இன்று பலரும் வேதாகமத்தை வாசிக்கவும்,ஜெபிக்கவும், தியானிக்கவும் தங்களுக்கு போதிய நேரமில்லை எனவும்  அதிக வேலைப்பளு இருக்கின்றது என்றும்  சாக்குப்போக்குச் சொல்வதுண்டு. அதாவது,  அவர்கள் தேவனுக்கு முன்னுரிமை கொடுப்பதைவிட தங்களது உலக வேலைகளுக்கு முன்னுரிமை கொடுப்பவர்களாக இருக்கின்றனர். இப்படியல்லாமல் தனது வேலைகளுக்கிடையே தேவனைத் தேடிய ஒரு மனிதனைக்குறித்து நாம் அப்போஸ்தலர் பணி புத்தகத்தில் வாசிக்கின்றோம்.  

"எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் பணிந்துகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து; ஊருக்குத் திரும்பிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக்கொண்டிருந்தான்." (அப்போஸ்தலர் பணி - 8: 27, 28) என்று கூறப்பட்டுள்ளது. 

அதாவது, இந்த மனிதன் எத்தியோப்பியாவின் நிதியமைச்சர். அவன் தனது நிதியமைச்சர் வேலைகளுக்கிடையே தேவனுக்கு முன்னுரிமைகொடுத்து, அவரை ஆராதிப்பதற்காக எருசலேமுக்கு வந்திருக்கிறான். மட்டுமல்ல, ஊருக்குத் திரும்பிச் செல்லும்போதுகூட அவன் தனது வேலையைப்பற்றியோ இதர காரியங்களைக்குறித்தோ சிந்திக்காமலும், வேறு உலக காரியங்களில் பொழுதைப் போகாமலும்  வேதாகம ஆகமங்களை வாசித்துக் கொண்டிருந்தான். காரணம், அவனுக்குள் தேவனைத் தேடும் ஆவல் அதிகமாக இருந்தது. 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து,  "கேட்கிறவன்   எவனும்  பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்." (மத்தேயு 7;8) என்று கூறிய வார்த்தைகளுக்கேற்ப, இப்படி ஆர்வமுடன் தேவனைத் தேடிய அந்த நிதியமைச்சருக்குத் தன்னை வெளிப்படுத்தத்  தேவன் சித்தமானார்; அதுவரை யாரென்று அறியாமல் அவன் வெறுமனே ஆராதித்துக்கொண்டிருந்த தேவன் யார் என்பதை அவனுக்கு வெளிப்படுத்தத் தேவன் சித்தமானார். எனவே பிலிப்புவை அவனிடம் அனுப்புகின்றார்.  

இங்கு அந்த நிதியமைச்சரின் இன்னொரு குணத்தை நாம் பார்க்கின்றோம். ஒரு அமைச்சர் சாதாரண மனிதனை தனக்கு நிகராக நடத்துவது கிடையாது. ஆனால் இந்த நிதியமைச்சரோ, பிலிப்புவைத் தன்னுடன் தனது இரதத்தில் ஏற்றிக்கொள்கிறான். அப்போது அமைச்சர் ஏசாயா புத்தகத்தில் இயேசு கிறிஸ்துவைவின் பாடுகள் குறித்த தீர்க்கத்தரிசன பகுதியினை  வாசித்துக்கொண்டிருந்தார்.  பிலிப்பு அவருக்கு அவற்றை விளக்கி இயேசு கிறிஸ்துவைக்குறித்துப் பிரசங்கித்தார். அதனால் மனமாற்றமடைந்து கிறிஸ்துவை அறிந்துகொண்ட அவனுக்குப் பிலிப்பு உடன்தானே ஞானஸ்நானமும் கொடுக்கின்றார்.  

ஞானஸ்நானம் பெற்று "அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 8 : 39 ) என்று கூறப்பட்டுள்ளது.  இந்த அதிசய நிகழ்ச்சியால் அமைச்சர் முழு விசுவாசமுள்ளவராக மாறியிருப்பார். 

ஆம் அன்பானவர்களே, எவ்வளவு வேலைப்பளு நமக்கு இருந்தாலும் தேவனுக்காக நேரம் ஒதுக்கவும், தேவ வார்த்தைகளைக் கேட்கவும் நேரமில்லை என்று கூறாமல் தேவனுக்கு முதலிடம் கொடுக்கக்கூடிய, தேவனைத் தேடுகிற எண்ணம் நமக்கு இருக்கவேண்டியது அவசியம். மட்டுமல்ல, அந்த அமைச்சர் தனது பதவி பெருமையை  விட்டு சாதாரண மனிதனாகிய பிலிப்பை மதித்ததுபோல மற்றவர்களை மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டியதும் அவசியம். 

இப்படி நாம் தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவர்களாக இருந்து நம்மோடு வாழும் மற்றவர்களையும் மதிப்போமானால்  தேவன் தன்னை நமக்கு அதிசயமான முறையில் வெளிப்படுத்துவார். அப்போதுதான்  நாம் பாரம்பரிய வெற்று ஆராதனைமுறைகளிலிருந்து  மாறி தேவனை அறிந்து ஆராதிக்கும் ஆவிக்குரிய கிறிஸ்தவர்களாக மாறமுடியும்.  

 "விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1904

🔆 2026 ஏப்ரல் 25, சனி      

"என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை." ( ரோமர் 7 : 18 )

பொதுவாக மனிதர்கள் எல்லோரிடமும் தவறு செய்யும்போது மனச்சாட்சியின் உறுத்தல் இருந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் சிலர் அவற்றை ஏற்றுக்கொள்கின்றனர். அப்படித் தங்களது தவறுகளை ஏற்றுக்கொள்ளும் மனிதர்கள் சில வேளைகளில் அவற்றிலிருந்து விடுபட்டுப் புதிய வாழ்க்கை வாழவும் விரும்புகின்றனர். 

ஒவ்வொரு புதிய ஆண்டு துவக்கத்திலும் பலர் தங்களிடமுள்ள ஏதாவது ஒரு தீய பழக்கத்தை இந்த ஆண்டிலாவது விட்டுவிடவேண்டும் என்று விரும்புவதுண்டு. ஆனால், ஒரு சில நாட்களில் மீண்டும் அதே தவறுக்குள் விழுந்துவிடுவதும் உண்டு. இதுபோல, கிறிஸ்தவர்கள் பலரும் தவக்கால பிரசங்கங்களைக் கேட்கும்போது அல்லது ஏதாவது ஊழியர்களின் சிறப்புக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது இப்படிச் சில பாவப் பழக்கங்களை விட்டுவிட எண்ணுவதுண்டு. ஆனாலும் அந்த முடிவில் அவர்களால் நிலைத்து நிற்க முடிவதில்லை.  

இந்தப் போராட்டம் நமக்கு மட்டுமல்ல, அப்போஸ்தலரான பவுலுக்கும்  இருந்தது. எனவேதான் இன்றைய தியான வசனத்தில்,  நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை என்று கூறுகின்றார். மட்டுமல்ல, தான் செய்வது தனக்கே உடன்பாடில்லை எனும் பொருளில், "எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்." ( ரோமர் 7 : 15 ) என்கின்றார். 

ஆம் அன்பானவர்களே, மனித முயற்சியால் இந்தக் காரியத்திலிருந்து முழு விடுதலை பெறமுடியாது. நாம் நமது மனதில் பாவத்திலிருந்தும், தேவையில்லாத சில பழக்கவழக்கத்திலிருந்தும் விடுபட விரும்பலாம் ஆனால் அப்படி விடுபட நமது முயற்சி மட்டும் போதாது. தேவனுடைய பலமில்லாமல் மனித முயற்சியால் நம்மால் இவைகளிலிருந்து முழு விடுதலை பெறமுடியாது. 

"நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது." ( யோவான் 15 : 5 ) என்று நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துக் கூறவியையா? 

ஆம் அன்பானவர்களே,  நாம் கிறிஸ்துவோடு இணைக்கப்படாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. நன்மை செய்யவேண்டும் எனும் விருப்பம் நமக்குள் இருக்கலாம் ஆனால் நாம் கிறிஸ்துவோடு இணைக்கப்படாவிட்டால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. காரணம், கிறிஸ்துவோடு இணைக்கப்படும்போது தேவனுடைய ஆவியானவர் நமக்குள் வந்துவிடுகின்றார். அப்போது நாம் உடலின் கட்டுப்பாட்டில் இல்லாமல் ஆவியானவரின் கட்டுப்பாட்டில் இருப்போம்.  

இன்றைய தியான வசனத்தில் "நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை" என்று கூறும் அப்போஸ்தலரான பவுல் இந்த உண்மையினை அறிந்துகொண்டவராதலால் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டு, தேவனுடைய ஆவியானவர் நமக்குள் வரவேண்டியது அவசியம் என்று கூறுகின்றார். ஆம், அப்படி அவரோடு இணைக்கப்பட்டு பாவத்தை மேற்கொள்ளும்போது அவருடைய மக்களாகின்றோம். "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாய் இராமல்  ஆவிக்குட்பட்டவர்களாய் இருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." ( ரோமர் 8 : 9 )

கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டு அவரது ஆவியைப் பெற்றவர்கள்தான் பாவத்தை மேற்கொள்ளமுடியும்; அத்தகையவர்களுக்கு  நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பமும் இருக்கும்  நன்மை செய்யவும் முடியும். அப்படி தேவ ஆவியைப் பெற்றவர்கள்தான் கிறிஸ்தவர்கள். இந்தக் கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.

 "விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1905

🔆 2026 ஏப்ரல் 26, ஞாயிறு       

"உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்." ( மத்தேயு 6 : 21 )

ஒரு மனிதனின் இதயத்து ஆசை எதுவோ அதில்தான் அவன் கவனம் செலுத்துவான். நாம் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மனிதர்களது வாழ்க்கை வரலாறுகளை வாசித்துப்பார்த்தால் இது புரியும். ஒரு மனிதனின் சாதனை ஒரேநாளில் நிகழ்வதல்ல. மாறாக, தொடர்ந்த ஆசை, முயற்சிகள் இவையே ஒருவரை குறிப்பிட்டத் துறையில் வெற்றிபெறச்செய்யும். 

ஒரு முறை எனக்குத் தெரிந்த ஒரு பணக்காரத் தொழிலதிபரான பெரியவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் கூறினார், "நான் எதனை சாதிக்கவேண்டுமென்று நினைத்தேனோ அதனை அடைந்துவிட்டேன்" என்று. ஆம், அவரின் சிறு வயதுமுதல் அவர் பெரிய பெரிய தொழிலதிபர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் அவர்களது முயற்சிகளையும் அறிந்துகொள்வதில் ஆர்வமுள்ளவராக இருந்தாராம். அதாவது அவரது பொக்கிஷம் அந்த இலக்குதான். அதனை அடைந்துவிட்டார். இதுபோல பல விளையாட்டு வீரர்கள், கல்வியாளர்கள் குறிப்பிட்டத் துறையில்  இருதயத்தை வைத்து வெற்றி பெற்றுள்ளனர். 

ஆனால் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இப்படி  உலக செல்வமாகிய பொக்கிஷங்களைச் சேகரிப்பதைவிட பரலோக பொக்கிஷங்களைச்  சேர்த்துவைக்க நமக்கு அறிவுறுத்தினார். காரணம் நாம் இந்த உலகத்தில் என்னவிதமான செல்வத்தை எவ்வளவுதான் சேர்த்தாலும் அவை பூரண மனமகிழ்ச்சியையும் நிறைவையும் நமக்குத் தருவதில்லை. இதனை, "பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்." ( லுூக்கா 12 : 15 ) என்று இயேசு கிறிஸ்துக் கூறுவதிலிருந்து அறியலாம். 

நமது இருதயம் பணத்தின்மேல் மட்டும் பற்றுக்கொண்டு இருக்குமானால் நித்திய ஜீவனை இழந்து தேவனால் கைவிடப்பட்டவர்களாக மாறுவோம். நான் சிறு பையனாக இருக்கும்போது எனது பாட்டி ஒரு சம்பவத்தைக் கூறியுள்ளார். அவர்களது உறவினர் ஒருவர் மிகப்பெரிய செல்வந்தர். அவர் மரணத்தருவாயில் இருந்தபோது பல நாட்கள் படுக்கையில் கிடந்தார். சிறிது உயிர் மட்டும் அவரில் பலநாட்கள் இருந்தது. அப்போது அவர் பெருமூச்சு விடுவதும், கைகளை பணம் எண்ணுவதுபோல செய்கை காட்டுவதும், அருகிலிருக்கும் மர அலமாரியைப் பார்ப்பதுமாக இருந்தார். உயிர் போகாமல் வதைத்துக்கொண்டிருந்தது. 

அப்போது அங்கு வந்த ஒரு முதியவர்,  "இவர் பணத்தைப்பற்றிய எண்ணத்திலேயே இருக்கிறார். எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் செல்கின்றோமே என்று ஏங்குகின்றார். நான் சொல்வதைபோலச் செய்யுங்கள். ஒரு துணியில் உடைந்த மண்பானைத் துண்டுகளைப் போட்டு முடிந்து அவர் கையில் கொடுங்கள்" என்றார். அவர் கூறியதுபோல உடைந்த மண்பானைத் துண்டுகளைத் துணியில் முடிச்சாகக்  கட்டி அவர் கையில் கொடுத்து, "நீங்கள் சம்பாதித்தப் பணம் எங்கும் வீணாகவில்லை. இந்தத் துணிமூட்டைக்குள் இருக்கின்றது" என்று கூறியவுடன் அதனை ஆவலுடன் வாங்கி நெஞ்சோடு அணைத்துக்கொண்டார். அத்துடன் அவர் உயிர் பிரிந்தது.

ஆம் அன்பானவர்களே, "பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே." ( பிரசங்கி 5 : 10 ) என்று கூறியுள்ளபடி அவர்கள் மாயையான வாழ்க்கை வாழ்கின்றனர். சாகும்வரை பண ஆசை அவர்களைவிட்டுச் செல்வதில்லை.

ஆனால், நமது இருதயத்தை பரலோக செல்வத்தில் வைப்போமானால் இறுதிக்காலத்தில் நிம்மதியாக தேவனை நோக்கிச் செல்லமுடியும். ஒரு முதிர்ந்த ஆவிக்குரிய ஊழியர் மரிக்கும்போது நடந்த சம்பவத்தை அவரது வரலாறு நூலில் வாசித்தேன். அவர் மரிக்கும்போது அந்த அறையில் இருந்த மக்களிடம் புன்னகையுடன், "சகோதர சகோதரிகளே, கர்த்தரைச் சந்திக்கச் செல்கிறேன். அவர் இதோ வந்திருக்கிறார். நான் போகிறேன். நாம் மறுவுலகில் சந்திப்போம்" என்று கூறி புன்னகையுடன் உயிரைவிட்டார். 

ஆம், தேவன்தான் நமது மெய்யான பொக்கிஷம். அவரை உண்மையாக நேசிப்போமானால் அவரோடு நமது இருதயமும் இருக்கும். நமது பொக்கிஷமிருக்கும் அந்த இடத்தில்  சேரும்போதுதான் நமக்கு மெய்யான அமைதியும் மகிழ்ச்சியும்  ஏற்படும். 
 
 "விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1906

🔆 2026 ஏப்ரல் 27, திங்கள்        

"என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்." ( சங்கீதம் 23 : 6 )

இன்றைய தியான வசனம் உலக ஆசீர்வாதம் மற்றும் மறுவுலக நித்திய ஜீவன் எனும்  இரண்டுவித ஆசீர்வாதங்களை தேவன் எனக்குத் தருவார் என்று பக்தன் உறுதியுடன் விசுவாசத்துடன் கூறும் வார்த்தைகளாகும்.

இந்த உலகத்தில் எத்தனை ஆண்டுகள் நாம் வாழ்கின்றோமோ அத்தனை ஆண்டுகளும் தேவனது நன்மையையும் கிருபையும் நம்மோடு இருக்கவேண்டும் அதுவே மேலான உலக ஆசீர்வாதம். கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பது ஆவிக்குரிய ஆசீர்வாதம். இன்றைய தியான வசனத்தில் இந்த இரண்டுவித ஆசீர்வாதங்களையும் தான் கர்த்தரை மேய்ப்பனாகக் கொண்டு வாழ்வதால் சுதந்தரித்துக்கொள்வேன் என்று தாவீது ராஜா கூறுகின்றார்.   

ஆடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டுசெல்லும் இடையர்களைக் கவனித்தால் அவர்கள் ஆடுகள் செய்யவேண்டிய ஒவ்வொரு செயலுக்கும் வித்தியாசமான கட்டளை ஒலிகளை எழுப்புவதை நாம் காணலாம். ஆடுகள் அந்த ஒலியின் அர்த்ததைப் புரிந்துகொண்டு அவற்றுக்குக் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளும். எங்குச்  செல்லவேண்டும், எங்குச்  செல்லக்கூடாது, இந்தப்பகுதியில் திரும்பவேண்டும் என அனைத்தையும் மேய்ப்பன் பல்வேறு குரல்களால் அவைகளுக்கு உணர்த்துவான். ஆம், மேய்ப்பனின் குரலின் பொருள் அந்த ஆடுகளுக்குத் தெரிந்திருப்பதால் அவை அதற்குக் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளும்.  

கர்த்தரை மேய்ப்பனாகக் கொள்வது என்பதும் இதுபோன்றதுதான்.  அது மேலான ஆவிக்குரிய அனுபவம். மேய்ப்பன் ஆடுகளை வழிநடத்துவதுபோல ஆவிக்குரிய தேவ பிள்ளைகளின் வாழ்வை தேவன் வழிநடத்துகின்றார். அவர் பல்வேறு விதங்களில் தனது சித்தத்தை அவர்களுக்கு வெளிப்படுத்துகின்றார். அவர்களும் தேவனது சித்தத்தைப் புரிந்துகொண்டவர்களாக அதன்படி நடப்பார்கள்.  இப்படி நடக்கும்போது நன்மையும் கிருபையும் வாழ்நாளெல்லாம் அவர்களைத் தொடரும். 

மட்டுமல்ல, தேவன் மற்றவர்களிலிருந்து வித்தியாசமான முறையில் தனக்குக் கீழ்ப்படிந்துவாழும் பிள்ளைகளை நடத்துகின்றார். அவர்களால் எனவே மற்றவர்கள் செய்யும் பல செயல்களைச் செய்யமுடிவதில்லை. இதனால் சிலவேளைகளில் மற்றவர்கள் ஆவிக்குரிய பிள்ளைகளை குறைகூறுவதுண்டு. இது இப்போது மட்டுமல்ல; பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்பே இப்படித்தான் தேவ பிள்ளைகள் மற்றவர்களால் குறைகூறப்படுகின்றனர். 

துஷ்டனான ஆமான் யூதர்களுக்கு எதிராக எழும்பி அவர்களை பூமியிலிருந்து அழித்து ஒழிக்க வகைதேடினான். அவன் அகாஸ்வேரு ராஜாவிடம் இந்தக் குற்றச்சாட்டையே கூறினான். "அப்பொழுது ஆமான் அகாஸ்வேரு ராஜாவை நோக்கி: உம்முடைய ராஜ்யத்தின் சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டு பரம்பியிருக்கிறார்கள்; அவர்களுடைய வழக்கங்கள் சகல ஜனங்களுடைய வழக்கங்களுக்கும் விகற்பமாயிருக்கிறது; அவர்கள் ராஜாவின் சட்டங்களைக் கைக்கொள்ளுகிறதில்லை; ஆகையால் அவர்களை இப்படி விட்டிருக்கிறது ராஜாவுக்கு நியாயமல்ல." ( எஸ்தர் 3 : 8 ) ஆனால் தேவ கட்டளைகளை வைராக்கியமாகப் பின்பற்றிய யூதர்களைத் தேவன் காப்பாற்றினார். 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், "நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது." ( யோவான் 15 : 19 ) என்று கூறினார். 

ஆம் அன்பானவர்களே, மற்றவர்கள் நம்மைப் பகைத்தாலும் நாம் கர்த்தரின் ஆடுகள். எனவே, கர்த்தரையே  மேய்ப்பனாகக் கொண்டு அவரது குரலுக்குச் செவிகொடுத்து வாழவேண்டியது அவசியம். மேய்ப்பனுக்குக் கீழ்ப்பட்டிருக்கும் ஆடுகள் மேய்ப்பன் குரலை அறிந்து அதற்குக் கீழ்ப்படிந்து நடப்பதுபோல தேவனது குரலைக்கேட்டு நடக்கும் அனுபவம் நமக்கு வேண்டியது அவசியம். அப்படி நாம் வாழ்வோமானால், நமது  ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும்; நாம் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாள்களாய் நிலைத்திருப்போம்.

 "விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1907

🔆 2026 ஏப்ரல் 28, செவ்வாய்         

"அவர் இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது; அவர் வலதுகை என்னை அணைத்துக்கொள்ளுகிறது." ( உன்னதப்பாட்டு 2 : 6 )

தேவனுக்கும் மனிதர்களுக்குமான அன்புறவு தாய் பிள்ளைகளுக்குள்ள உறவுபோலவும் உண்மையான காதலன் காதலிக்கிடையேயுள்ள உறவுபோலவும் கணவன் மனைவி உறவுபோலவும் ( எபேசியர் 5 : 31, 32 ) இருக்க வேண்டுமென்று வேதம் கூறுகின்றது.   

தேவனுக்கும் நமக்குமான உறவு வெறும் உலகத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் ஆர்வத்தில் உண்டாகும் உறவாக இருக்கக்கூடாது. மாறாக, நாம் முழுமையாக தேவனை அவருக்காகவே அன்பு செய்பவர்களாக மாறும் உறவாகவேண்டும்.  நாம் ஜெபிப்பது கிடைக்கின்றதா இல்லையா என்பது முக்கியமல்ல, மாறாக அவரோடு நமக்குள்ள ஐக்கியத்தை  நாம் இழக்காமல் இருப்பதே முக்கியம்.

தேவனை மணமகனாக எண்ணி அவரது அன்பை நினைத்து மணப்பெண் கூறும் வார்த்தைகளே உன்னதப்பாட்டின் இன்றைய வெளிப்பாடு. தேவன் நாம் ஒவ்வொருவரையும் அன்புசெய்கின்றார். நாம் அவரோடு எப்போதும் இருக்கவேண்டுமென்று ஆசைப்படுகின்றார். நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் இதற்காகவே பிதாவிடம் ஜெபிப்பதை நாம் பார்க்கலாம். பிதாவாகிய தேவனும் இயேசு கிறிஸ்துவும் இணைந்திருப்பதுபோல நாமும் அவர்களோடு இணைந்து இருக்க அவர் விரும்புகின்றார். "நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்." ( யோவான் 17 : 22 ) என்றே இயேசு கிறிஸ்து ஜெபித்தார்.

இந்த அன்பினால்  ஒரு தாய்போல அவர் நம்மைத் தேற்றுகின்றார். இதனையே ஏசாயா, "ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்." ( ஏசாயா 66 : 13 ) என்று கூறுகின்றார். இன்றைய தியான வசனம் இந்தத் தேற்றுதலைத்தான் கூறுகின்றது. சிறு குழந்தைகளைத் தாயானவள் இடதுகையில் அதன் தலை இருக்கும்படி வைத்துக்கொண்டு வலது கரத்தினால் குழந்தையைத்  தேற்றுவாள். இதுபோலவே "அவர் இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது; அவர் வலதுகை என்னை அணைத்துக்கொள்ளுகிறது." என்கின்றான் தேவ பக்தன். 

நாம் உலகத் தேவைகளுக்காக மட்டுமே ஜெபித்துக்கொண்டு இருப்போமானால் இத்தகைய மேலான தேவ அன்பின் அரவணைப்பினை நாம் ருசிக்கமுடியாது. வாழ்வின் கடினமான பாதையில் பயணித்தபோது தேவன் என்னைத் தேற்றி ஆறுதலடையச்செய்ய பெரும்பாலும் உன்னதப்பாட்டின் வார்த்தைகளையே பயன்படுத்தினார். 

நான் தேவனை அறிந்த  ஆரம்பக்காலத்தில் உன்னதப்பாட்டு புத்தகத்தை வாசிக்கமாட்டேன். இது வேதத்தில் தேவையில்லாமல் இணைக்கப்பட்டுள்ளது என்று கூறுவேன். எனது வேதாகமத்தில்கூட, உன்னதப்பாட்டு நூலின் ஆரம்பத்தில் "இது வெறும் யூத இலக்கியம்" என்று எழுதி வைத்திருந்தேன். ஆனால், தேவன் பல முறை கனவுகள் மூலமும்  வசனங்கள்மூலமும்  இந்த நூலிலிருந்து என்னோடு பேசி என்னைத் திடப்படுத்தினார். ஆம் அன்பானவர்களே, தேவன் நம்மை அதிகம் நேசிப்பதால் அதனை நாம் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் வேதாகமத்தில் இணைக்கப்பட்டுள்ளது. 

தேவனை நாம் உண்மையாக நேசிப்போமென்றால் "அவர் இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது; அவர் வலதுகை என்னை அணைத்துக்கொள்ளுகிறது" எனும் வசனம் நமது வாழ்வில் உண்மையாக நடப்பதை நாம் உணர்ந்துகொள்ளமுடியும். தேவனது இந்த அன்பு நம்மோடு நாம் குழந்தைகளாய் இருப்பதுமுதல் வயது முதிர்ந்து நாம் நரைமுடி உள்ளவர்களாய் மாறும்வரை இருக்கும். அதுவரை நம்மை அவர் குழந்தைகளாகவே அணைத்துக்கொள்வார். 

"யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன். உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்து வந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்." ( ஏசாயா 46 : 3, 4 ) என்கின்றார் தேவனாகிய கர்த்தர்.

"யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்" என்று அவர் கூறுவதன்படி தேவனுக்குச் செவிகொடுக்கும் வாழ்க்கை வாழ்வோமென்றால் சிறு குழந்தைகளைத் தாயானவள் பராமரிப்பதுபோல அவர் நம்மைப் பராமரித்து நடத்துவார். அப்போது அவர் இடதுகை நம் தலையின்கீழ் இருக்கும்; அவர் வலதுகை நம்மை அணைத்துக்கொள்ளும். 

 "விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1908

🔆 2026 ஏப்ரல் 29, புதன்          

"கர்த்தாவே, எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டாலும், உம்முடைய நாமத்தினிமித்தம் கிருபைசெய்யும்; எங்கள் சீர்கேடுகள் மிகுதியாயிருக்கிறது; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம்." ( எரேமியா 14 : 7 )

ஒரு வேத அறிஞர் கூறினார், "பாவமே செய்யாத பரிசுத்தவான்கள் யாருமில்லை. நாம் இன்று பரிசுத்தவான்கள் என்று கூறும் அனைவரும் முன்னாள் பாவிகளே" என்று. ஆம் அன்பானவர்களே, பாவிகளே தேவனிடம் மன்னிப்பைப் பெற்று பரிசுத்தவான்கள் ஆகின்றனர். இதனையே வேதத்தில் நாம், "ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை." ( பிரசங்கி 7 : 20 ) என்று வாசிக்கின்றோம். 

நாம் பலவீனமான மனிதர்கள் ஆதலால் அடிக்கடி பாவத்தில் விழுந்துவிடுகின்றோம். ஆனால், பாவத்தில் நாம் அப்படியே விழுந்து கிடக்காமல் தேவ மன்னிப்பைப்பெற்று எழுந்திருக்கவேண்டியது அவசியம். எனேவேதான் ஏசாயா, "துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்." ( ஏசாயா 55 : 7 ) என்று கூறுகின்றார். 

இதனையே இன்றைய தியான வசனத்தில் நாம் எரேமியாவின் ஜெபமாக வாசிக்கின்றோம். "கர்த்தாவே, எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டாலும், உம்முடைய நாமத்தினிமித்தம் கிருபைசெய்யும்" என்று தேவ கிருபைக்காக கெஞ்சுகிறார் அவர். தாவீது ராஜாவும் பாவம் செய்தபோது இதுபோல, "என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது." ( சங்கீதம் 51 : 3 ) என்று பாவ அறிக்கையிட்டார். 

ஆம் அன்பானவர்களே, தேவனிடம் அறிக்கையிடும்போது நமது "பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்." ( ஏசாயா 1 : 18 ) பூனைகளைக் கவனித்துப் பாருங்கள், அவை சிறிதளவு அழுக்கு உடம்பில் பட்டாலும் நாவினால் அதனை நக்கிச் சுத்தப்படுத்திக்கொண்டே இருக்கும். இதற்கு மாறாக, பன்றிகள் எந்த உணர்வும் இல்லாமல் சேற்றில் மகிழ்ச்சியுடன் புரண்டுகொண்டிருக்கும். நாம் பூனைகளைப்போல வாழவே அழைக்கப்பட்டுள்ளோம். 

இந்தப் பாவ மன்னிப்பை நமக்கு அளிக்கவே கிறிஸ்து இயேசு பூமியில் வந்து பாடுபட்டார். நாம் பாவம் செய்து வழிதவறிய ஆடுகளைப்போல இருந்தோம். ஆனால் தேவன் நமது அக்கிரமங்களை அவர்மேல் சுமத்தி அவரை நமது பாவங்களுக்குப் பரிகாரியாக்கினார். இதனை நாம், "நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்." ( ஏசாயா 53 : 6 ) என்று வாசிக்கின்றோம். 

மன்னிப்பைப்பற்றி கூறிய இயேசு கிறிஸ்து, நமக்கு எதிராகக் குற்றம் செய்பவர்களை ஏழெழுபதுமுறை மன்னிக்கச் சொல்லி நமக்கு அறிவுறுத்தினார். அப்படியானால் அவர் நம்மை மன்னிக்காமல் இருப்பாரா?  எரேமியாவைப்போல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் நமது பாவங்களை அறிக்கையிடுவோம். "இயேசுவே , எனது  அக்கிரமங்கள் எனக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டாலும், உம்முடைய நாமத்தினிமித்தம் கிருபைசெய்யும்; எனது சீர்கேடுகள் மிகுதியாயிருக்கிறது; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன்; என்னை மன்னியும்" என்று நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிடும்போது பாவமன்னிப்பின் நித்சயத்தையும் மகிழ்ச்சியையும் பெற்றுக்கொள்வோம்.  

ஆம், "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்." ( நீதிமொழிகள் 28 : 13 )

 "விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1909

🔆 2026 ஏப்ரல் 30, வியாழன்           
 
"பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள்.
( 1 யோவான்  2 : 28 )

நாம் படிக்கும் பள்ளிக்கு ஆய்வாளர் (Inspector) வரப்போகின்றார் என்று தெரிந்தால் நாம் எவ்வளவு கவனமாக முன்னேற்பாடுகளைச் செய்வோம் என்று எண்ணிப்பாருங்கள்.  அப்படி அவர் வரும்போது ஒரு பயம் மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கும் இருக்கும். அப்படி அளவுக்கு அதிகமாகப்  பயப்படும்போது அவர் கேட்கும் தெரிந்த சாதாரணக் கேள்விக்குக்கூடப் பலரால் சரியாகப் பதில் கூறமுடியாது. நம்மிடம் ஆய்வாளர்  ஒரு சாதாரண கேள்வியைக் கேட்கும்போது  அதற்குப் பதில்சொல்லத் தெரியாமல் நாம் இருந்தால் அது எவ்வளவு வெட்கப்படும் காரியமாக இருக்கும்!!

ஆம் அன்பானவர்களே, இதுபோல நமது ஆண்டவாகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாய் இருக்கவேண்டியது அவசியம். எனவேதான் கிறிஸ்துவின் வருகையினைக்குறித்து நாம் உணர்வுள்ளவர்களாக வாழவேண்டிய அவசியத்தை இன்றைய தியான வசனம் நமக்கு உணர்த்துகின்றது. ஆம், இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு இனிமேல் வரும்போது அவரைக்கண்டு பயப்பட்டு வெட்கப்பட்டு ஓடி கைவிடப்பட்டவர்களாய்ப்  போய்விடக்கூடாது.  

நாம் அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்வோமானால் கிறிஸ்துவின் வருகையைக்குறித்து நமக்குப் பயம் ஏற்படாது. மாறாக, அவரை எதிர்பார்த்திருந்து அவர் எப்போது வருவார் என ஆவல்கொள்ளச்செய்யும்.  

இன்றைய தியானத்துக்குரிய வசனத்தின் முந்தின வசனத்தில் அப்போஸ்தலரான யோவான், "நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக." ( 1 யோவான்  2 : 27 ) என்கின்றார்.

அதாவது தேவனைச் சார்ந்து பரிசுத்த ஆவியானவரின் துணையையே நம்பி ஏற்றுக்கொண்டு அபிஷேகத்தோடு வாழ்வோமானால்,  அனைத்தையும் அவரே நமக்கு உணர்த்திப் போதித்து  நம்மை வழி நடத்துவார். ஆவியானவர் நம்மை நடத்தும் வழி கிறிஸ்துவுக்கு ஏற்புடைய வழியாகவே இருக்கும். அதன்படி நாம் நடக்கிறவர்களாக இருப்போமானால் அவர் வரும்போது பயப்படமாட்டோம்; வெட்கப்படமாட்டோம்.

அன்பானவர்களே, இதனால்தான் நாம் அதிகமாக பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்துக்காக ஜெபிக்கவேண்டியது அவசியமாய் இருக்கிறது. அபிஷேகமில்லாத சபை ஆராதனை மட்டும் நம்மை நல்வழிப்படுத்தப் போதுமானதல்ல. காரணம், சபைப் போதகர்களல்ல, ஆவியானவரே நம்மைச் சத்தியமான பாதையில் நடத்திட முடியும். "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." ( யோவான் 16 : 13 ) என்று இயேசு கிறிஸ்துக் கூறவில்லையா? 

மட்டுமல்ல,  இன்று பெருவாரியான போதகர்கள் ஆரோக்கியமான உபதேசத்தை மக்களுக்குப் போதிக்காமல் கட்டுக்கதைகளையும், அற்புதம், அதிசயம், ஆசீர்வாதம் என்றும் போதித்துக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான மக்களும் அவர்களது போதகத்தையே விரும்புகின்றனர். இதுவே அழிவின்பாதை. இதனை அன்றே, "ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு. சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்." ( 2 தீமோத்தேயு 4 : 3, 4 ) என்று அபோஸ்தரான பவுல் எச்சரிக்கையாகக் கூறினார், 

இப்படிபட்டப் போதகர்களின் பெருக்கத்தால் இன்று பலரும் பரிசுத்த ஆவியானவர்குறித்து எந்த ஆர்வமும் தெளிவுமில்லாமல் இருக்கின்றனர். இப்படியே வாழ்வோமானால், அவர்  வெளிப்படும்போது அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போனவர்களாகவே இருப்போம். எனவேதான் ஊழியர்களின் வழிநடத்துதலுக்கு அல்ல; மாறாக ஆவியானவரின் அபிஷேகத்துக்காக நாம் காத்திருக்கவும் அதிகம் ஜெபிக்கவும் வேண்டியுள்ளது. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்,                                                      18E1, திருச்சிலுவைக் கல்லூரிச் சாலை,                                                              புன்னை நகர், நாகர்கோவில் - 629 004.

📞Contact: - 96889 33712 
🌐 Website: aathavanmonthly.blogspot.com

 "விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1910

🔆 2026 மே 01, வெள்ளி         


"ஆதவன்" வேதாகமத் தியானம் - ஏப்ரல் 2026 

by :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்