இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Friday, July 19, 2024

கடைசிக்காலத்திலே.........

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,266      💚 ஜூலை 28, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே. இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே." ( யூதா 1 : 18, 19 )

கடைசிகாலத்தைப் பற்றிக் கூறும்போது இயேசு கிறிஸ்து போர்கள், பஞ்சம், கொள்ளை நோய்கள், கடல் சீற்றங்கள் போன்று பல்வேறு அடையாளங்களைக் கூறினார். மட்டுமல்ல, "அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்."  ( மத்தேயு 24 : 11 - 13 ) என்றும் எச்சரித்தார். 

"அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்" என்று இயேசு கிறிஸ்துக் கூறியதையே அப்போஸ்தலரான யூதாவும், "கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள்" என்று கூறுகின்றார். அதாவது, தேவனது சத்தியங்களைப் பரிகாசிக்கும் நூதன போதனைகளைப் போதிக்கும்  "தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர்" என்று கூறுகின்றார். 

இப்படிப் போதிப்பவர்கள், "பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே." என்கின்றார். இவர்கள் தங்கள் மனதின் தோன்றியபடி போதிக்கும் ஜென்ம சுபாவத்தார்கள், இவர்களிடமிருந்து செயல்படுவது பரிசுத்த ஆவியானவருமல்ல என்கின்றார். எனவே இவர்கள் எப்போதும் வேத வசனங்களுக்கு உலக ஆசீர்வாதத்தையே அர்த்தமாகக் கொண்டு உலக ஆசீர்வாதங்களையே போதிப்பவர்களாகவும் இருப்பார்கள். 

இறுதிக் காலம் என்பதற்கு அடையாளமாக இயேசு கிறிஸ்து கூறியபடி இன்று நூற்றுக்கு தொண்ணூறு சதம் உலக ஆசீர்வாதமே சபைகளிலும் பிரபல ஊழியர்களாலும் அவர்கள் நடத்தும் தொலைக்காட்சி வாயிலாகவும் கிறிஸ்தவ உபதேசமாகப் போதிக்கப்படுகின்றது. அன்பானவர்களே, ஆம், நாம் கடைசி காலத்தில் இருக்கின்றோம். தீர்க்கதரிசன ஊழியர்கள் பெருகி, தீர்க்கதரிசன மாநாடுகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.  எனவே வஞ்சிக்கப்படாமல் நம்மைக் காத்துக்கொள்வோம்.  

இன்றைய தியான வசனத்தை எழுதிய யூதா, தொடர்ந்து இவற்றிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள என்ன செய்யவேண்டுமென்றும் தொடர்ந்து கூறுகின்றார். "நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்." ( யூதா 1 : 21 )

நூதன பிரசங்கங்களையும் அப்படிப் போதிப்பவர்களையும் விட்டு விலகி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருக்க வேண்டியதே நாம் செய்யவேண்டியது.  "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்." ( சங்கீதம் 31 : 24 )  ஆம், "கர்த்தருக்குக் காத்திரு, திடமனதாயிரு, அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார், கர்த்தருக்கே காத்திரு." ( சங்கீதம் 27 : 14 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்        

Thursday, July 18, 2024

மேலானவைகளைத் தேடுங்கள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,265      💚 ஜூலை 27, 2024 💚 சனிக்கிழமை 💚

"நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்." ( கொலோசெயர் 3 : 1 )

பாவத்துக்கு மரித்து நீதிக்குப் பிழைத்திருக்கும் வாழ்வே இரட்சிப்பு வாழ்வு. கிறிஸ்து மரித்து உயிர்த்ததைப்போல நாமும் பாவத்துக்கு மரித்து நித்தியஜீவனுக்காக உயிர்த்திருக்கின்றோம். இப்படி நாம் கூறிக்கொள்ளவேண்டுமானால், "கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்." என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். 

ஆனால் இன்று பெரும்பாலான கிறிஸ்தவ சபைகளில் இந்த உலகத்துக்குரிய ஆசீர்வாதங்களே முன்னுரிமைப்படுத்தப்பட்டு பிரசங்கிக்கப்படுகின்றன; மேலான மகிமையான காரியங்கள் மறைக்கப்படுகின்றன. அன்பானவர்களே, இன்றைய தியான வசனம் தெளிவாகக் கூறுகின்றது, "கிறிஸ்து வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்." என்று. அதாவது இந்த உலகத்தில் நாம் வாழும் இலக்கு கிறிஸ்து வீற்றிருக்கும் அந்தப் பிதாவின் இடத்தை அடைந்து அந்த மகிமையினை அனுபவிப்பது. 

இதற்கு நாம் என்னச் செய்யவேண்டும் என்பதனை பவுல் அப்போஸ்தலர் தொடர்ந்து எழுதும்போது   கூறுகின்றார், "ஆகையால், விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்." ( கொலோசெயர் 3 : 5 ) அவயவயங்களை அழிப்பது என்பது இந்தச் செயல்களைச் செய்ய நம்மைத் தூண்டும் உறுப்புகளைக் கட்டுப்படுத்துவது. 

ஆம் அன்பானவர்களே, மேற்படி கூறப்பட்டுள்ள பாவங்களையும் நான் விடமாட்டேன் ஆனால் கிறிஸ்துவையும் ஆராதிப்பேன் என்று நாம் கூறுவோமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாக இருப்போம். அது மெய்யான கிறிஸ்தவன் செய்யும் செயலல்ல. கிறிஸ்துவை அறிவிப்பது என்பதும் ஆராதிப்பது என்பதும்  வெறுமனே, "இயேசு ஆண்டவர் என்று கூறுவதும் அல்லேலூயா" என்றும் அலறுவது அல்ல. 

மெய்யான ஆராதனை என்பது நமது வாழ்க்கையினை பரிசுத்தமாக வாழ்வது. நமது வாழ்வை அவருக்கு ஒப்புக்கொடுப்பது.  "நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை." ( ரோமர் 12 : 1 ) என்று வாசிக்கின்றோம்.

இப்படி நாம் வாழும்போது ஒருவேளை இந்த உலகத்தில் நாம் தரித்திரராக, பாடுகளோடு வாழ்ந்தாலும் பிற்பாடு அது நமக்கு மகிமையான காரியமாக இருக்கும். இதனையே "நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்." ( கொலோசெயர் 3 : 4 ) என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பவுல். 

ஆம், கிறிஸ்துவுடன்கூட எழுந்த நாம் கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளையேத்  தேடுவோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                      

Wednesday, July 17, 2024

குணமாக்கும் ஜெபங்கள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,264     💚 ஜூலை 26, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚


"நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது." ( யாக்கோபு 5 : 16 )

மனிதர்களை நோய்வாய்ப்பட பல காரணங்கள் உண்டு. உதாரணமாக, உடலுக்கு ஏற்பில்லாத உணவுகளை உட்கொள்வது; அளவுக்கு அதிக உணவு உண்பது, ஒழுக்கக் கேடான வாழ்க்கை வாழ்வது,  இவை தவிர, நாம் மற்றவர்களுக்கு எதிராகச் செய்யும் பாவங்கள், நமது அந்தரங்கப் பாவங்கள், முன்னோர்கள் செய்த செயல்களின் சாபங்கள், மற்றவர்களுக்கு எதிராக நாம் செய்யும் தகாத செயல்கள் போன்றவைச் சில. 

இந்தப் பாவங்கள் மன்னிக்கப்படும்போதுதான் நாம் குணமாக முடியும். எனவேதான் இயேசு கிறிஸ்துத் தன்னிடம் வந்த நோயாளிகளுக்கு குணமாக்குமுன் முதலில் அவர்களது பாவங்களை மன்னித்தார். (உதாரணமாக, மத்தேயு 9 : 2, மாற்கு 2 : 5  லுூக்கா 5 : 20) இதுவே யூதர்களுக்கு அவர்மேல் கோபம் வரக்  காரணமாகவும் இருந்தது. ஆம், பாவங்கள் மன்னிக்கப்படாமல் சில நோய்கள் குணமாவதில்லை.
 
இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான யாக்கோபு நமக்கு ஒரு நல்ல படிப்பினையினைத் தருகின்றார். அதாவது, நாம் மறவர்களுக்கு எதிராகத் தகாத செயல்கள் செய்திருப்போமானால் முதலில்  அவற்றுக்காக மனம் வருந்தி மன்னிப்பு வேண்டவேண்டும். நான் எனது போக்கில்தான் இருப்பேன் தேவன் என்னைக் குணமாக்கவேண்டும் என எண்ணுவதும் வேண்டுவதும் ஏற்புடைய செயலல்ல. நமது குற்றங்களை ஆவிக்குரிய நபர்களிடம் அறிக்கையிடும்போது அப்போது அவர்கள் ஜெபம் பண்ணினால் கிடைக்கும். 

ஜெபத்தின்மூலம் சுகம் கிடைக்கவில்லையானால் மறைக்கப்பட்ட பாவங்கள் நம்மிடம் ஏதாகிலும் உண்டுமா என நம்மை நாமே நிதானித்துப்பார்ப்போம். 

நாம் பிறர் மேல் கொள்ளும் பொறாமை, எரிச்சல், கோபம், செய்யும் தவறான செயல்கள் நமக்குள்ளே இருந்து உறுத்தி பல்வேறு உடல் நோய்களை உருவாக்கும் என்று இன்று மருத்துவர்களும் கூறுகின்றனர்.  மனிதர்களது பல நோய்களுக்கும் மனமே காரணம். பிறருக்கு எதிராக நாம் செய்த தவறுகளை அறிக்கையிடும்போது மன ஆறுதல் மட்டுமல்ல நோய்களிலிருந்து விடுதலையும் கிடைக்கின்றது. 

இப்படி மற்றவர்களிடம் பாவங்களை ஒளிவு மறைவின்றி அறிக்கையிட்டு வாழ்பவனே நீதிமான். எனவேதான் இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து யாக்கோபு நீதிமானாகிய எலியாவை நமக்கு உதாரணம் காட்டுகின்றார். "எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்று வருஷமும் ஆறு மாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை. மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது." ( யாக்கோபு 5 : 17, 18 )

இயற்கையையே கட்டுப்படுத்தும் ஆற்றல் எலியாவுக்கு இருந்தாதானால் அவருக்கு குணமாக்கும் ஆற்றலும் இருந்தது என்று பொருள். ஆம் அன்பானவர்களே,  அவரது வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருந்தது. 

சிலர் நோய்களுக்காக மருத்துவரிடமும் பல்வேறு ஊழியர்களிடமும் மாறி மாறிச் சென்றுகொண்டிருப்பார்கள். அன்பானவர்களே, நமக்குள் ஆத்ம சோதனை செய்து பார்ப்போம். யாருக்கு எதிராக நாம் பேசியிருந்தாலும், செயல்பட்டிருந்தாலும் உண்மையான மனஸ்தாபத்துடன் தேவனிடம் மன்னிப்பை வேண்டுவோம்.   நமது பாவங்களும், நோய்களும் அப்போது நம்மைவிட்டு அகலும்.  ஆம், குணமடையும்படிக்கு குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுவோம்.  நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Tuesday, July 16, 2024

உணவினால் தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே.

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,263       💚 ஜூலை 25, 2024 💚 வியாழக்கிழமை 💚

"பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது." ( தானியேல் 1 : 15 ) 

நேபுகாத்நேச்சார் தான்  யூதாவிலிருந்து சிறைபிடித்துக் கொண்டு வந்தவர்களில் அறிவுமிக்கவர்களைத் தனது நாட்டில் பணியமர்த்த விரும்பி அப்படித் திறமையானவர்களைக் கண்டுபிடித்தான். அவர்களுள் தானியேலும் அவரது மூன்று நண்பர்களும் உண்டு. ராஜா இந்த இனைஞர்களுக்கு ராஜ உணவைக்கொடுத்து அந்த நாட்டு மொழியையும் கற்பித்துக்கொடுத்து மூன்று ஆண்டுகளுக்குப்பின் தன்னிடம் அவர்களைக் கொண்டுவரும்படிப் பணித்தான்.

மூன்று வேளையும் ராஜ உணவு கொடுக்க ஏற்பாடானபோதும் தானியேலும்  அவரது மூன்று நண்பர்களும் ராஜாவுணவு தங்களுக்கு வேண்டாம், வெறும் பருப்பும் மரக்கறி உணவுமே போதும் என்று கூறிவிட்டனர். ஆனால் அவர்களைக் கவனிக்க நியமிக்கப்பட்ட ஊழியன் அப்படி நான் கொடுத்தால் ராஜாவுக்குமுன் நான் உங்களை நிறுத்தும்போது நீங்கள் மற்றவர்களைவிட உடல்மெலிந்து காணப்படுவீர்கள், அப்போது  ராஜா என்னிடம் கேள்விகேட்பான் என்று தானியேலின் கோரிக்கையினை நிறைவேற்றத் தயங்கினான்.  

அப்போது தானியேலும் அவரது நண்பர்களும், "பத்துநாள்வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப்பாரும்; எங்களுக்குப் புசிக்க பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து, எங்கள் முகங்களையும் ராஜபோஜனத்தில் புசிக்கிற வாலிபருடைய முகங்களையும் ஒத்துப்பாரும்; பின்பு நீர் காண்கிறபடி உமது அடியாருக்குச் செய்யும்." ( தானியேல் 1 : 12, 13 ) என்றனர்.

இப்படிச் செய்து சோதித்துப்பார்த்த "பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது." ( தானியேல் 1 : 15 ) ஆம், உணவுக்கும் நமது ஆவிக்குரிய வாழ்வுக்கும் தொடர்பு உண்டு. ஆவிக்குரிய மனிதர்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் விருந்துகளிலும்  மற்றவர்களைவிட உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டையும் நிதானத்தையும் காட்டுவார்கள்.  

"நீ ஒரு அதிபதியோடே போஜனம்பண்ண உட்கார்ந்தால், உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய்க் கவனித்துப்பார். நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியைவை. அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே; அவைகள் கள்ளப்போஜனமாமே." ( நீதிமொழிகள் 23 : 1- 3 )

ஒரு வீட்டில் மாலை நேரத்தில் ஜெபிக்கச் சென்ற ஊழியர் ஒருவர் ஜெபித்துவிட்டு வெளியே வந்தபின்னர் தன்னுடன் வந்த சகோதரர்களிடம், "வெறும் காப்பியும் மிச்சரும் தந்து அனுப்பிவிட்டார்கள்"    என்று குறைபட்டுக்கொண்டார். அப்படியானால் இவர் என்ன எதிர்பார்ப்புடன் ஜெபிக்கச் சென்றார்? இப்படிச் சில ஊழியர்கள்!!. மேலும் சிலர் உபவாசம் இருக்கிறேன் என்று சாப்பிடாமல் இருப்பார்கள், ஆனால் அதன்பின்பு ஒட்டகம் நீர் அருந்தி சேமிப்பதைப்போல  கிடைத்தமட்டும் உண்டு தங்கள் வயிற்றை நிரப்புவார்கள். இப்படிச் செய்வதை தேவன் வெறுக்கின்றார்.  நமக்குள் ஆவியானவர் இருப்பாரென்றால் இதனை நமக்கு உணர்த்தித் தருவார். 

அன்பானவர்களே, மூன்று ஆண்டுகள் ராஜ உணவை வெறுத்து வெறும் பருப்பும் காய்கறிகளையும் உண்ட தானியேலின் நண்பர்கள் நெருப்புச் சூளையினுள் போடப்பட்டபின்னரும் உயிருடன் மீண்டனர்; பசித்திருந்த சிங்கங்களின் கெபியினுள் போடப்பட்ட தானியேலை சிங்கங்கள் நெருங்கவில்லை.  மட்டுமல்ல; அனைத்து மறைபொருளையும் இந்நாள் வரையும் உலகம் முடியும்வரையும் நடக்கப்போகும் காரியங்களையும்  தேவன் தானியேலுக்கு வெளிப்படுத்திக்கொடுத்தார். காரணம், அவர்களது தேவனுக்குப் பாயந்த உண்மையுள்ள வாழ்க்கை.

"போஜனத்தினிமித்தம் தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே. எந்தப் பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான்; ஆனாலும் இடறலுண்டாகப் புசிக்கிறவனுக்கு அது தீமையாயிருக்கும்." ( ரோமர் 14 : 20 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

Monday, July 15, 2024

செய்த உதவிகளைப் பிரச்சித்தப்படுத்துவது அற்பகுணம்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,262       💚 ஜூலை 24, 2024 💚 புதன்கிழமை 💚


"மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?" ( நீதிமொழிகள் 20 : 6 )

இன்றைய தியான வசனம் மனிதர்களது அடிப்படைக் குணத்தைக் குறித்துக் கூறுகின்றது. அதாவது, அற்பப் பெருமைக்காகத் தாங்கள் பிறருக்குச் செய்த உதவிகளைப் பிரச்சித்தப்படுத்துவது.  

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் உண்டு. அவர் இப்படித்தான் தானும் தனது மனைவியும் செய்த உதவிகளைப் பெருமையாக எல்லோரிடமும் கூறிக்கொண்டிருப்பார். அதாவது, உண்மையாகத் தான் செய்ததை சற்று மிகைப்படுத்திப் பேசுவார். இப்படி இவர் பேசுவது பொய் என்று தெரிந்தாலும் பலரும் இவரிடம் நேரடியாக எதுவும் கூறுவதில்லை. எனவே இவர் தான் கூறுவதை எல்லோரும் நம்பிவிட்டார்கள் என்று எண்ணிக்கொள்வார். ஆனால் இவருக்குத் தெரியாமல் இவர் கூறியதை தங்களுக்குள் பேசிச்  சிரித்துக்கொள்வார்கள். 

உண்மையான உதவும் மனநிலையில் ஒருவர் பிறருக்கு உதவும்போது அவர் தன்னைப் பிரச்சித்தப்படுத்த மாட்டார். இன்று பலர் தாங்கள் செய்யும் சில சிறு உதவிகளையும்கூட வீடியோ பதிவுசெய்து முகநூலிலும் இதர சமூக ஊடகங்களிலும் வெளியிடுவதை நாம் பார்க்கலாம். இவர்கள் இப்படிச் செய்வதற்குத் தாங்களே அறியாத உள்நோக்கம் இருக்கும். அதாவது, மக்கள் தங்களை நல்லவர்கள் என்று எண்ணவேண்டும் அல்லது இப்படிச் செய்வதன்மூலம் தங்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என்று எண்ணுவது.  

தெரு ஓரத்தில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரருக்கு காசு கொடுப்பது அல்லது ஏதாவது பொருள் உதவி செய்வது இவற்றைக்கூட இப்படிப் பதிவு செய்து மக்களுக்குத் தெரிவிக்கின்றனர். இதனையே, "மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அதாவது, இந்த வசனம் இப்படிச் செய்பவர்கள் உண்மையற்றவர்கள் என்று கூறுகின்றது. எனவேதான், "உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?" என்ற கேள்வியோடு முடிக்கின்றது இன்றைய வசனம். 

இயேசு கிறிஸ்து இதனைக்குறித்து "ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 6 : 2 ) என்று கூறுகின்றார். 

அதாவது, இப்படித்  தாங்கள் செய்வதைப் பிரசித்திப்படுத்துபவர்கள் மாயக்காரர் என்கின்றார். மேலும், "அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." என்கின்றார். நாலுபேர் இவர்கள் சொன்னதை அல்லது செய்ததைப் பார்த்தார்களே அதுதான் இதன்மூலம் இவர்கள் பெற்ற பயன். எனவே, இனிமேல் இவர்கள் தேவனிடம் தங்கள் செயலுக்கு பலனை எதிர்பார்க்க முடியாது என்று பொருள். 

மட்டுமல்ல, எப்படித் தர்மம் அல்லது உதவி செய்யவேண்டும் என்பதனையும் இயேசு கிறிஸ்து கூறினார்.  "நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது." ( மத்தேயு 6 : 3 )

"நான் இப்படிச் செய்வதை வெளியில் கூறும்போது மற்றவர்களும் இதுபோல உதவிகள் செய்வார்கள்" என்று சிலர் உப்புச் சப்பற்ற காரணத்தைக்கூறி தங்கள் செயலுக்கு நியாயம் கற்பிப்பார்கள். அன்பானவர்களே, இந்த விஷயத்தில் தேவன் எல்லோருக்கும் மனச்சாட்சியையும்  இரக்கம் அன்பு போன்ற குணங்களையும்  கொடுத்துள்ளார். ஆகவே அவர்கள் செயலுக்கு அவர்கள் தேவனுக்குக் கணக்குக் கொடுத்துக்கொள்வார்கள். எனவே, மற்றவர்களைத் திருத்துகிறேன் என்று எண்ணி நாம் படுகுழியினுள் விழுந்துவிடக் கூடாது.  

இப்படிச்  சிறு உதவி அல்லது நல்லச் செயல் செய்ததையும் பிரசித்திப்படுத்தும் அற்பமான குணம் நமக்கு இருக்குமானால் நம்மைத் திருத்திக்கொள்வோம். தேவன் கண்டுபிடிக்கும் உண்மையான மனுஷனாக வாழ்வோம்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Sunday, July 14, 2024

எலியாவும் யோனாவும் நமக்குப் படிப்பினைகள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,261     💚 ஜூலை 23, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚


"ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக."  (1 கொரிந்தியர் 15:58)

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்வை நமக்கு வாக்களித்துள்ளார். அந்த இலக்கை அடைந்திடவே நாம் ஆவிக்குரிய வாழ்வைத் தொடருகின்றோம். நித்திய ஜீவன் என்பது அழிவுக்கேதுவான நமது உடல் மறுரூபமாக்கப்பட்டு அழியாமையையும், சாவாமையையும் தரித்துக் கொண்டு பிதாவின் ராஜ்ய மகிமையினுள் நித்தியகாலமாய் வாழ்வதைக் குறிக்கின்றது  

இதனையே அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்துக்கு முன்பு விளக்குகின்றார். இப்படி, "அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ள வேண்டும்.  அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்."  (1 கொரிந்தியர் 15: 53, 54) என்கின்றார். 

இப்படிப்பட்ட மகிமையான எதிர்காலம் நமக்கு இருப்பதால், "எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும்,   அசையாதவர்களாயும்,      கர்த்தருடைய
கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக." என்று கூறுகின்றார்.

அதாவது ஆவிக்குரியவாழ்வு வாழ்ந்தாலும்  நாம் ஒருவேளை இன்று பல்வேறு துன்பங்களைச் சுமந்துகொண்டிருக்கலாம். ஆனால் அந்தத் துன்பங்களைக்கண்டு கலங்கிடாமல் உறுதிகொண்டவர்களாக வாழவேண்டியது அவசியம். மட்டுமல்ல, தொடர்ந்து சோர்ந்துபோகாமல் கர்த்தருக்காக நாம் செய்யும் செயல்பாடுகளிலும் நாம் பெருகுகிறவர்களாகவும் வாழவேண்டியது அவசியம். 

ஆவிக்குரிய வாழ்வில் சோதனைகள் ஏற்படும்போது ஒருவித சலிப்பு எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு.  ஆனால் அந்தச் சலிப்பு கொஞ்சநாட்களுக்குத்தான் என்று நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். அப்படி எனக்கு சலிப்பே வந்ததில்லை என்று கூறுவோமானால் நாம் பொய்யர்கள். காரணம், வானத்திலிருந்து அக்கினி இறங்கச்செய்து அற்புதங்கள் பல செய்த எலியா சோர்வுற்று மனமடிவுண்டாகி, "ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி," ( 1 இராஜாக்கள் 19 : 4 ) புலம்பியதை நாம் வாசித்துள்ளோம்.

இதுபோலவே மிகப்பெரிய தீர்க்கதரிசியாக யோனாவும் மனம் சோர்வுற்று, "இப்போதும் கர்த்தாவே, என் பிராணனை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும்" ( யோனா 4 : 3 ) என்று புலம்பினார். 

ஆனால் தேவன் அவர்களை அப்படியே விட்டுவிடவில்லை. இதுபோல, தேவனுக்குள் நாம் ஆவிக்குரிய வாழ்க்கை வாழும்போது நமக்கும் சோதனைகளும் வேதனைகளும் ஏற்படும். ஆனால் தேவன் நம்மைக் கைவிடமாட்டார்.

"மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்." ( 1 கொரிந்தியர் 10 : 13 )

எனவே கர்த்தருக்குள் நாம்  படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து,  உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய  கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்போமாக. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்      

Saturday, July 13, 2024

இவைபோன்ற சாட்சிகள் மேலானவை அல்ல

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,260      💚 ஜூலை 22, 2024 💚 திங்கள்கிழமை 💚


"கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்." ( 1 பேதுரு 3 : 15 )

கிறிஸ்து இயேசுவின்மேல் நாம் நம்பிக்கைக் கொண்டுள்ளோம் என்பது மெய்யாயினும் மற்ற மத மக்களைப்போல நாம் வெறும் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தால் மட்டும் போதாது. எல்லா மதத்தினரும் தங்கள் வழிபடும் தெய்வத்தின்மேல் நம்பிக்கைக் கொண்டுதான் வாழ்கின்றனர். ஆனால் நம்மைப் பொறுத்தவரை  அந்த நம்பிக்கை நம்மைப் பரிசுத்தப்படுத்துவதாக இருக்கவேண்டியது அவசியம். எனவேதான் இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பேதுரு, "கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்"  என்று கூறுகின்றார். 

இப்படி நாம் பரிசுத்தமான ஒரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, நம்மிடம் நமது விசுவாசத்தைக் குறித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் பதில் சொல்ல  எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று கிறிஸ்தவர்கள் பலரும் கிறிஸ்து தங்கள் வாழ்வில் என்னென்ன அற்புதங்கள் செய்தார் என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். அப்படிக் கிறிஸ்துவைக் குறித்துக் கூறும் பல சாட்சிகள், புகை பிடிப்பதை விட்டுவிட்டேன், வெற்றிலை, குடிப்பழக்கம்  இவற்றிலிருந்து விடுதலையானேன் என்பதுபோலவே இருக்கின்றன. அன்பானவர்களே, இதுபோன்ற சாட்சிகளை எல்லா மதத்தினரும் கூறமுடியும். 

உண்மையாகக் கூறப்போனால், கிறிஸ்துவால் வெற்றிலை, குடி, புகைபிடித்தல் இவற்றிலிருந்து விடுதலை அடைந்தேன் என்று கூறுவது மேலான சாட்சியே அல்ல. காரணம், இயல்பிலேயே இந்தப் பழக்கவழக்கங்கள் எதுவும் இல்லாத பலர் எல்லா மதங்களிலும் இருக்கின்றனர். மட்டுமல்ல, இவற்றைச் சரியான மருத்துவ சிகிர்சை மூலமும், ஆற்றுப்படுத்தல் (Counselling) மூலமும் நிறுத்திவிடமுடியும். மெய்யான மாற்றம் என்பது  நமது உள்ளான மனிதனில் ஏற்படும் மாற்றமே; நமது தனிப்பட்டக் குணங்களில் ஏற்படும் மாற்றமே. அதனைக் கிறிஸ்து இயேசு மூலம் மட்டுமே  நாம் அடைந்திட முடியும். 

எனவே, நம்மிடம் விசாரிப்பவர்களுக்கு நமது விசுவாசத்தைக் குறித்து நாம் அளிக்கும் சாட்சிகள் வேத வசனத்தின் அடிப்படையில் இருக்கவேண்டியது அவசியம். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக." ( கொலோசெயர் 4 : 6 ) என்று கூறுகின்றார். 

எனவே நாம் வேத வசனங்களைத் தெளிவாக அறிந்து வைத்திருக்கவேண்டியது அவசியம். அப்படி அறிந்து வைத்துக்கொண்டு நம்மிடம் விசாரிப்பவர்களுக்கு  சாந்தத்தோடும் வணக்கத்தோடும் பதில் சொல்ல நாம் எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கவேண்டும்.  

எனவே, நாம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தேவையில்லாத காரியங்களில் கவனம் செலுத்திடாமல் வேத வசனங்களை உணவுபோல உட்கொள்ள ஆயத்தமாய் இருக்கவேண்டும். இப்படி நாம் உட்கொள்ளும் வசனங்கள் நமக்கு மற்றவர்களுக்குப் பதில்சொல்லக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும். மட்டுமல்ல, தேவையில்லாத உப்புச் சப்பற்ற சாட்சிகள் போல இல்லாமல் இந்த வசனங்கள் மற்றவர்களது இருதயத்தில் இறங்கி கிரியை செய்யும்.  அவர்களும் மெய்யான தேவனை அறியச்செய்யும். காரணம், அவை உயிருள்ள தேவனது வார்த்தைகள்.

எனவே வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நாம் வேதாகமத்தை வாசிக்கவேண்டியது அவசியம். அட்டவணைப் போட்டு இத்தனை நாட்களுக்குள் வேதாகமத்தை வாசித்து முடிக்கவேண்டுமென்று எண்ணாமல் நிதானமாகவும், தேவனை அறியும் ஆர்வமோடும்  ஆவியானவரின் துணையோடும்  வேதத்தைப் படித்து இருதயத்தில் வசனங்களைப் பாதுகாப்போம். நம்மிடம் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் பதில் சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிப்போம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்              

Thursday, July 11, 2024

கிறிஸ்தவ சபைகள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,259      💚 ஜூலை 21, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 9 : 31 )

வேத அடிப்படையில் பார்ப்போமானால், மீட்பு அனுபவம் பெற்ற விசுவாசிகளின் கூட்டமே சபைகள். ஆனால் இன்று இந்த நிலைமை மாறி, குறிப்பிட்டக்  கிறிஸ்தவ  போதனைகளைப் போதிக்கும் ஆலயங்களில் கூடும் மக்களையும், குறிப்பிட்ட பாஸ்டர்கள், ஊழியர்களை நாடிச் செல்லும் மக்களையும்  சபை என்று கூறிகொண்டிருக்கின்றோம். 

சபை என்பது மக்களை கிறிஸ்துவுக்கு நேராக வழி நடத்துபவையாக இருக்கவேண்டியது அவசியம். அப்படி வழிநடத்தும்போது அங்கு என்ன நடக்கும் என்பதனையே இன்றைய தியான வசனம், "சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின." என்று கூறுகின்றது. 

அதாவது மெய்யான ஒரு சபைகளுக்குச் செல்லும்போது ஒருவருக்குச் சமாதானம் கிடைக்கும். காரணம், அங்கு போதிக்கப்படும் வார்த்தைகள் தேவ வார்த்தைகளாக இருக்கும். தேவ வார்த்தைகளே ஒருவருக்குச் சமாதானத்தைக் கொண்டு வரும். இரண்டாவது, அந்தத் சபைகள் நம்மை பக்திவிருத்தி அடையச் செய்பவையாகவும் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தோடு வளரச்செய்பவையாகவும் இருக்கும். மூன்றாவது, ஆவியானவர் அளிக்கும் ஆறுதல் அந்தச் சபை மக்களுக்குக் கிடைக்கும். 

ஆனால், இன்றைய பல சபைகளில்  கேளிக்கைக் கூடாரங்களில் பாடலும் நடனமும்  முக்கியத்துவம் பெறுவதுபோல இவைகளே முக்கியத்துவம் பெற்று மெய்யான சத்தியம் புறம்தள்ளப்படுவதைக் காண்கின்றோம்.  இதனால் பெரும்பாலான கிறிஸ்தவ சபைகளில் விசுவாசிகளுக்கு மெய்யான சமாதானமோ, அவர்கள் பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தில் வளரும் வாய்ப்போ  பரிசுத்த ஆவியின் ஆறுதலோ இல்லாமலிருக்கின்றது. 

இதனால் விசுவாசிகள் ஒரு சபையைவிட்டு இன்னொரு சபைக்கு ஓடுவதும், ஊழியர்களும் சபைகளும் தங்கள் தவறுகளை உணராமல் ஒருவருக்கொருவர் மாறிமாறிக் குறைகூறி மோதிக்கொள்வதும் நடக்கின்றது. உணவு உட்கொள்ளச் செல்பவர்கள் ஹோட்டலை மாற்றுவதற்குக்  காரணம் ஹோட்டல் சாப்பாடு பிடிக்காததே முக்கிய காரணமாய் இருக்கும் என்பதனை இவர்கள் உணர்ந்து கொள்ளும்போதுதான் இந்த நிலைமைக்கு மாறுதல் உண்டாகும்.   

இன்று வேதாகம அடிப்படையிலான மெய்யான சபைகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் உள்ளன. ஆனால் ஊழியர்களும் போதகர்களும் அளவுக்கு அதிகமாகப் பெருகிவிட்டனர். எனவே இவர்கள் மக்களைத் தங்களிடம் இழுக்கவேண்டி விதவிதமான நவீன யுக்திகளைக் கையாளுகின்றனர்.  மக்களும் திரைப்பட நடிகர்களைத் தேர்வுசெய்வதுபோல தங்களுக்கு ஏற்ற நவீன ஊழியர்களைத் தெரிந்துகொள்கின்றனர். கிறிஸ்துவின் விசுவாசி என்று கூறுவதைவிட்டு குறிப்பிட்ட பாஸ்டர்களின் விசுவாசிகளாகிவிட்டனர்.

அன்பானவர்களே, குறிப்பிட்ட ஊழியர்களையும் குறிப்பிட்ட சபைகளையும் பார்க்காமல் கிறிஸ்துவை நோக்கிப்பார்க்க வேண்டும். நமக்குத் தேவ சமாதானம் அளிக்கும் சபைகள், நாம்  பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் வளர வழிகாட்டும் சபைகள் இவைகளையே நமக்காகத் தெரிந்துகொள்ள வேண்டும். அத்தகைய சபைகளை நமக்கு அடையாளம்காட்ட பரிசுத்த ஆவியானவரிடம் மன்றாடவேண்டியதுதான் இன்றைய காலத்தின் அவசியம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்       

கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,258     💚 ஜூலை 20, 2024 💚 சனிக்கிழமை 💚


"தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்." ( 2 கொரிந்தியர் 4 : 4 )

சுவிசேஷமானது தேவனுடைய சாயல் என்று இன்றைய தியான வசனம் சொல்கின்றது. அந்தச்  சுவிசேஷம் கிறிஸ்துவின் மகிமையான ஒளியாகவும் இருக்கின்றது. அந்த ஒளியை இந்த உலக மக்களது உள்ளத்தில் ஒளிரச்செய்யாதபடி இந்த  இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான் என்று இந்த வசனம் கூறுகின்றது. இந்தப் பிரபஞ்சத்தின் தேவன் என்பவன் சாத்தான் (யோவான் 14:30)

ஆனால் இந்த ஒளியைத் தேவன் நமது உள்ளத்தில் ஒளிரச்செய்துள்ளார் என்று பவுல் அப்போஸ்தலர் கூறுகின்றார். "இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்." ( 2 கொரிந்தியர் 4 : 6 )

இந்த ஒளியானது நமக்குள் இருப்பதால் நமக்கு அது பெலனைத் தருகின்றது. துன்பங்கள், நெருக்குதல்கள், கலக்கம், மனமுறிவு போன்று எந்தத் துன்பத்தையும் அது நாம் தாங்கும்படியான பெலனைத் தருகின்றது. "நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை." ( 2 கொரிந்தியர் 4 : 8, 9 )

இப்படி பெலன் அடையக் காரணம் நமக்குள் வந்திருப்பது உன்னதமான தேவனுடைய ஒளி. எனவேதான் இந்த ஒளியானது நமக்குள் வந்திடாமல் சாத்தான் தடைபண்ணுகின்றான். காரணம், நமது துன்ப நேரங்களில் நாம் தேவனைத் தூஷித்து சாகவேண்டுமென்று சாத்தான் விரும்புகின்றான். 

அன்பானவர்களே, இந்த ஒளி தங்களுக்குள் இல்லாததால்தான் சில வேளைகளில்  பெரிய பெரிய தொழிலதிபர்களும், புகழ்பெற்ற திரைப்பட நடிகை நடிகர்களும், பணம் படைத்த பல செல்வந்தர்களும் நிம்மதியின்றி தற்கொலை செய்து மடிகின்றனர். 

இந்த ஒளியை மக்களுக்கு அறிமுகப்படுத்தவே நற்செய்தி அறிவிப்பு உலகினில் நடைபெறுகின்றது. ஆனால் இதனை அறியாதவர்கள் கட்டாய மதமாற்றம் செய்கின்றார்கள் என்று கூப்பாடு போடுகின்றனர்.  கிறிஸ்தவம் உட்பட எந்த மதமும் மனிதனை இரட்சிக்காது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே ஒருவரை மீட்க முடியும். எனவே, கிறிஸ்தவம் இதற்கான வழியை மக்களுக்குக் காண்பிக்கும் ஒரு மார்க்கம் என்று கூறலாம்.  

இந்த மகிமையான ஒளியைக் குறித்துக் கேள்விப்படுவது மட்டும் போதாது, மாறாக அந்த ஒளி நமது இருதயத்தில் பிரகாசிக்க இடம்தரவேண்டும். அப்போதுதான் இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியை நம்மில் தோன்றப்பண்ணுவார். 

முரண்பாடோ வெறுப்போ இல்லாமல் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஏற்றுக்கொவோம்; அவரது ஒளியை நம்முள் பெற்று துன்பங்களையும் பாடுகளையும் சகிக்கப் பெலன் பெறுவோம்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்        

Wednesday, July 10, 2024

இப்பொழுதே அநுக்கிரக காலம், இதுவே இரட்சணியநாள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,257     💚 ஜூலை 19, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚


"அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்." ( தீத்து 2 : 14 )

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எதற்காக சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார்; கிறிஸ்துவின் சிலுவை மரணம் நமக்கு என்னென்ன பலன்களைத் தந்துள்ளது என்பதனை அப்போஸ்தலரான பவுல் தனது சீடன் தீத்துவுக்கு எழுதியுள்ள வார்த்தைகளே இன்றைய தியான வசனம்.

இந்த வசனத்தின்படி, முதலாவதாக இயேசுவின் மரணம் நமது எல்லா அக்கிரமங்கள், பாவங்களிலிருந்து நம்மை மீட்கின்றது. இரண்டாவது, நம்மை அவரது சொந்த மக்களாக மாற்றுகின்றது. மூன்றாவது, நற்செயல்கள் செய்ய நம்மைத் தகுதிப்படுத்துகின்றது, இறுதியில் தேவன்மேல் நாம் பக்தி வைராக்கியம் கொள்ளச்செய்கின்றது. 

"அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்." ( 1 யோவான்  1 : 7 ) என்று நாம் வாசிக்கின்றோம். இப்படி இயேசுவின் இரத்தத்தால் நாம் கழுவப்படுகின்றோம். இந்தக் கழுவுதல் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தால் தான் ஏற்படுகின்றது. இப்படிக் கழுவப்பட்டு நாம் அவரோடு இணைக்கப்படுகின்றோம்.

இப்படி இணைக்கப்பட்டப் பின்னர்தான் நம்மால் நற்செயல்கள் செய்யமுடியும். இதனையே இன்றைய வசனத்தில் நாம் "சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்தி வைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி" என்று வாசிக்கின்றோம். இதனால்தான் இயேசு கிறிஸ்துக் கூறினார், "என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்." ( யோவான் 15 : 4 )

ஆம் அன்பானவர்களே, நற்செயல்கள் செய்து கனிகொடுக்கும் வாழ்க்கை வாழவேண்டுமானால் நாம் கிறிஸ்துவோடு இணைந்திருக்க வேண்டியது அவசியமாய் இருக்கின்றது. இன்று பலர் நற்செயல்கள் பல செய்கின்றனர். நற்செயல்கள் செய்யும் தொண்டு நிறுவனங்கள் ஏராளம் உள்ளன. ஆனால் நல்லது செய்யும் இவர்களில் பலரும் நல்லவர்களாக இருக்க முடியவில்லை. காரணம், கிறிஸ்துவோடு இணைக்கப்படாத வாழ்வு. 

எனவே நாம் மெய்யாகவுமே நல்லவர்களாக இருக்கவேண்டுமானால் முதலில் அவரது இரத்தம்  நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொள்ளவேண்டும், நாம் அவரது சொந்த ஜனங்களாகவேண்டும். இப்படி நம்மை பாவங்களிலிருந்து கழுவி, அவரோடு ஒப்புரவாக்கி நம்மை நற்செயல் புரிய வைக்கவே கிறிஸ்து சிலுவையில் மரித்து உயிர்த்தார்.  நாம் செய்த எந்தப் பாவமாக இருந்தாலும் அவரிடம் மெய்யாகவே மனஸ்தாபப்பட்டு நாம் வேண்டுவோமானால் அவர் நம்மை மன்னித்து மகனாக / மகளாக ஏற்றுக்கொள்வார்.

ஆம் அன்பானவர்களே, "அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்." ( 2 கொரிந்தியர் 6 : 2 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்           

Monday, July 08, 2024

தேவ வசனமே அக அழுக்கைக் காட்டும் கண்ணாடி

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,256     💚 ஜூலை 18, 2024 💚 வியாழக்கிழமை 💚


"உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்." ( யோவான் 17 : 17 )

இன்றைய தியான வசனம் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிதாவை நோக்கி ஜெபித்த ஜெபமாகும். இந்த ஜெபத்தில் அவர் பிதாவிடம் அவரது சத்திய வசனத்தால் நம்மைப் பரிசுத்தமாக்கும்படி வேண்டுதல் செய்கின்றார். ஆம் அன்பானவர்களே, பரிசுத்தரான கர்த்தரது சொற்கள் பரிசுத்தமானவைகள். அவையே நம்மைச் சுத்தமாக்க முடியும். 

"கர்த்தருடைய சொற்கள் மண் உலையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கு ஒப்பான  சுத்தச் சொற்களாயிருக்கின்றன." ( சங்கீதம் 12 : 6 ) என்று வாசிக்கின்றோம். வேதாகமத்தை நாம் வாசிக்கவேண்டியதன் முக்கியத்துவம் இதுதான். நாம் நமது முகத்தை அழகுபடுத்த நம்மைக் கண்ணாடியில் பார்க்கின்றோம். அது நமது முகத்திலுள்ள சிறு அழுக்கையும் நமக்குக் காண்பித்துவிடும். அதுபோன்றவையே தேவனது வார்த்தைகள்.  அவை நமது அகத்தின் அழுக்கை நமக்கு எடுத்துக்காட்டி நாம் நம்மைத் திருத்திக்கொள்ள வழிகாட்டும்.  

தேவனது வார்த்தைகள் எப்படி நம்மைச் சுத்தப்படுத்துகின்றன என்பதனை நாம் எபிரெயர் நிரூபத்தில் வாசிக்கின்றோம். "தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது." ( எபிரெயர் 4 : 12 )

அதாவது ஜீவனுள்ள தேவனது வார்த்தைகள் நமது ஆவி, ஆத்துமா,  சரீரம், மற்றும் சரீரத்திலுள்ள ஒவ்வொரு அவயவங்களையும் தனித்தனியே  குத்திப்பிளந்து நமது இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. தேவ வசனங்களை நாம் நிதானமாக வாசிப்போமானால் நமது எந்தப் பகுதியில் குறை இருக்கின்றது என்பதனை அது நமக்கு எடுத்துக்காட்டும். 

தேவ மனிதனாகிய மோசேயிடம் தேவன் கூறியதை அவர் பின்வருமாறு பதிவுசெய்துள்ளார். "நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து, அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசுவீர்களாக. அவைகளை உங்கள் வீட்டு நிலைகளிலும் உங்கள் வாசல்களிலும் எழுதுவீர்களாக." ( உபாகமம் 11 : 19 - 21 )

ஆம், தேவனது வார்த்தைகள் எப்போதும் நமது கண்முன் இருக்கவேண்டியது அவசியம். இன்று பல்வேறு இடங்களில் தேவ வார்த்தைகள் சுவர்களில் எழுதப்பட்டுள்ளதையும் வசன ஸ்டிக்கர்களையும் நாம் பார்க்கின்றோம்,  அவற்றை பயன்படுத்துகின்றோம். காரணம், அவை எந்த வழியிலாயினும் மனிதர்களைச்  சென்று சேரவேண்டும், அவர்களது இருதயத்தில் பதிந்து வாழ்க்கை மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்பதற்காகவேதான். 

மேலும், இறுதிநாளில் தேவ வசனமே நம்மை நியாயம்தீர்க்கும். ஆம், தேவ வசனத்தின்படியே நியாயத்தீர்ப்பு. "என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.' ( யோவான் 12 : 48 ) என்கிறார் இயேசு கிறிஸ்து. 

எனவே, தேவ வார்த்தைகளை நாம் தினமும் வாசித்து நம்மைத் திருத்திக்கொள்வோம். தேவனுடைய சத்திய வசனமே நம்மைப் பரிசுத்தமாக்கும். ஆம், அவருடைய வசனமே சத்தியம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                 

Sunday, July 07, 2024

இயேசு கிறிஸ்து நமது நண்பர்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,255     💚 ஜூலை 17, 2024 💚 புதன்கிழமை 💚


"இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்." ( யோவான் 15 : 15 )

இன்றைய தியான வசனத்தில் ஆண்டவாகிய இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்துள்ள புதிதான தகுதியைப் பார்க்கின்றோம். அதாவது நாம் இனி அவரது ஊழியக்காரர்கள் அல்ல; மாறாக நண்பர்கள் என்கின்றார். 

ஒரு எஜமானின் வேலைக்காரன் அந்த எஜமான் சொல்வதை மட்டும் செய்கின்றவனாக இருப்பான். அந்த வேலைக்காரனுக்கு எஜமான்  ஏன் ஒரு காரியத்தைச் செய்யச்சொல்கின்றான் என்பது தெரியாது. உதாரணமாக, ஒரு எஜமான் வேலைக்காரனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்துத் தபால் அலுவலகம் சென்று அதனை அனுப்பி வருமாறு அனுப்புகின்றான் என்று வைத்துக்கொள்வோம். அந்த வேலைக்காரனுக்கு அந்தக் கடிதம் எதற்காக அனுப்பப்படுகின்றது எனும்  காரியம் தெரியாது. ஆனால் எஜமான் சொல்கிறபடி அதனை அனுப்பிவிட்டு வருவான். இதுதான் வேலைக்காரனுக்கும் எஜமானுக்குமுள்ள உறவு. 

ஆனால் இதே ஒரு நண்பனானால், அந்த நண்பனிடம் அவன் அந்தக் கடிதம் எதற்காக அனுப்பப்படுகின்றது, அந்தக் கடிதம் அனுப்பப்படும் காரியம் நிறைவேறினால் என்ன நடக்கும் என்பதனையெல்லாம் தெளிவாக விவாதித்திருப்பான். ஆம், இதுதான் வேலைக்காரனுக்கும் நண்பனுக்குமான வித்தியாசம். மட்டுமல்ல, ஒருவன் தனது  உண்மை நண்பனிடம் எல்லாக்  காரியங்களைக் குறித்தும் பேசி தெளிவுபடுத்துவான். நமது குடும்பத்தினரிடம் கூறாதக்  காரியங்களைக்கூட நண்பர்களிடம் நாம் பகிர்ந்துகொள்ளலாம். 

இதனையே இயேசு கிறிஸ்து, "நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்." என்கின்றார். ஆம் அன்பானவர்களே, நமது ஆண்டவர் நம்மை எவ்வளவு மேன்மையாக வைத்துள்ளார் பாருங்கள்.  அவரோடு ஒரு நண்பனைப்போல நெருக்கம் வைத்துக்கொள்ளும்போது பரலோக ரகசியங்களை நமக்கு வெளிப்படுத்தித் தருவார்.  

இதனைக் கூறும்போது ஒரு சகோதரன் கூறிய கனவு நினைவுக்கு வருகின்றது. அந்தச் சகோதரன் முகநூல் (Facebook) பார்ப்பதில் ஆர்வமுள்ளவன். அதிகநேரம் முகநூல் பார்த்துக்கொண்டிருப்பான். அதனால் ஜெபநேரம் குறைந்துபோய்விட்டது. ஒருநாள் அந்தச் சகோதரர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் உலகமக்கள் பலர் வேடிக்கைப் பார்க்கும் ஒரு அழகிய மலைப் பள்ளத்தாக்கினை மக்களோடு அவரும் நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஒருவர் வந்து அந்தச் சகோதரனின் தோள்களைத் தட்டி, "இங்கே வா, என்று கூப்பிட்டார்" அந்தச் சகோதரனை அழைத்த அந்த மனிதர்  குறுகிய தாடி வைத்து வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்த உயரமான ஒருவர்.  

அந்தச் சகோதரர் அவரோடு சென்றார். அவர் அவரை அருகிலிருந்த ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே பல பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அந்த மனிதர் இரண்டு நாற்காலிகளைத் தனியாக எதிர் எதிரே போட்டு ஒன்றில் அமர்ந்து கொண்டார். பின்னர் அந்தச் சகோதரரை எதிரே இருந்த நாற்காலியில் அமரச் சொல்லி, "நாம் பேசுவோம்" என்றார்.

அன்பானவர்களே, இந்தக் கனவு மூலம், 'உலக காரியங்களில் மற்றவர்களைப்போல் நீ வேடிக்கைப்  பார்த்து நேரத்தைத் தொலைக்காதே, என்னோடு தனி ஜெபத்தையே  நான் விரும்புகிறேன்' என்று தேவன் பேசுவதை அவர் உணர்ந்துகொண்டார். ஆம், தேவன் ஒரு நண்பனைப்  போல நம்மோடு பேசி உறவாட விரும்புகின்றார். இப்படி தேவனைத்  தனிப்பட்ட உறவில் ஒரு நண்பனாக நாம் உணர்ந்து கொள்வோமானால்,  "என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்." என்று அவர் கூறியபடி பல உண்மைகளை நமக்கு வெளிப்படுத்தித் தருவார். 

ஆம், அன்பானவர்களே, நாம் அடிமைகளோ வேலைக்காரர்களோ அல்ல; மாறாக அவரது நண்பர்கள். எனவே நமது ஜெபங்களில் ஓர் நண்பனிடம் பேசுவதுபோல அவரிடம் பேசலாம். குறிப்பிட்ட ஒரே வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்வது ஜெபமல்ல; அது பிற மதத்தினரிடமிருந்து நாம் கற்றுக்கொண்ட தேவையில்லாத விஷயம்.  தேவனிடம் நமது நண்பரிடம் பேசுவதுபோல பேசி ஜெபிக்கக் கற்றுக்கொள்வோம்; அந்த அனுபவம் ஆவிக்குரிய மேலான காரியங்களை நமக்கு வெளிப்படுத்தித் தரும்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்        

நீதியின் அடையாளமான மெல்லிய வெண்ணாடை

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,254     💚 ஜூலை 16, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚


"இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 16 : 15 )

இரட்சிப்பு அனுபவத்தைப் பெறும்போது தூய மெல்லிய வெண்ணாடை  ஒருவருக்கு அளிக்கப்படுகின்றது. இந்த வெண்ணாடையை அசுத்தம்செய்யாமலும் கிழிந்துபோகாமலும் காத்துக்கொள்ளவேண்டியது ஒவ்வொரு விசுவாசியின் கடமையாகும். "சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே." ( வெளிப்படுத்தின விசேஷம் 19 : 8 ) என்று வாசிக்கின்றோம்.

கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட அனுபவத்துக்குப்பின்பும் நாம் பாவம் செய்வோமானால்  பரிசுத்தவான்களுடைய நீதியின் அடையாளமான இந்த மெல்லிய வெண்ணாடையை அச்சுதப்படுத்துகின்றோம் அல்லது கிழித்துவிடுகின்றோம். எனவே இந்த மெல்லிய ஆடையை நாம் கிறிஸ்து வரும்வரைக் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். 

இதனையே இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்."

மேலும் நாம் வாசிக்கின்றோம், "ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 5 )

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்து எப்போது வருவார் என்று நமக்குத் தெரியாது. எனவேதான், "இதோ, திருடனைப்போல் வருகிறேன்" என்று கூறப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவும் கூறினார், "அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்." ( லுூக்கா 12 : 40 )

மேலும் இயேசு கிறிஸ்து திருமண விருந்துக்கு அழைக்கப்பட்ட ஒரு மனிதனைக்குறித்துக் கூறிய  அழகிய உவமை மூலம் இதனை விளக்கினார். "விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு: சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான். அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்." ( மத்தேயு 22 : 11 - 13 )

எனவே, "நான் இரட்சிக்கப்பட்டேன், முழுக்கு ஞானஸ்நானம் எடுத்துள்ளேன், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றுள்ளேன் என்று கூறிக்கொண்டு பாவ வாழ்க்கையும் வாழ்வோமானால்  நாம் ஆடை கிழித்து நிர்வாணமாய்க் காணப்படுபவர்களாகவே  அவர்முன் இருப்போம். எனவே, விழித்துக்கொண்டு, கிறிஸ்துவின் வருகை எப்போது இருந்தாலும் அதற்கு ஆயத்தமாக இருப்போம். நம் வஸ்திரங்களைக் காத்துக்கொள்வோம்; பாக்கியவான்களாக வாழ்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

Saturday, July 06, 2024

பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,253      💚 ஜூலை 15, 2024 💚 திங்கள்கிழமை 💚

"பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்." ( ஓசியா 6 : 6 )

நமது தேவன் மனச்சாட்சியற்ற சில மனிதர்களைப்  போன்றவரல்ல; மாறாக, அவர் அன்பும் இரக்கமும் நீதியுமுள்ள தேவன். அந்தக்கால யூதர்கள் வேத அறிவு நிரம்பியவர்களாக இருந்தாலும் தேவன் விரும்பும் இரக்கமும் தேவனை அறியும் அறிவும் இல்லாமலிருந்தனர். எனவே அவர்கள் ஆலய வழிபாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்தனரேத் தவிர இரக்கமோ அன்போ இல்லாதவர்களாக இருந்தனர். 

எனவேதான் அவர்கள் முப்பத்தியெட்டு ஆண்டுகள் நோயுற்று அவதியுற்ற மனிதன் இயேசு கிறிஸ்துவினால் அற்புதமாகக்  குணமானபோது அதனைப் பாராட்ட மனமில்லாமல் இயேசு கிறிஸ்து அந்தக் குணமாக்குதலை ஓய்வுநாளில் செய்ததற்காக அவர்மேல் குற்றஞ்சாட்டினர். (யோவான் 5 ஆம் அதிகாரம்) காரணம் அவர்களிடம் சகோதர அன்பில்லாமலிருந்தது.

ஆம் அன்பானவர்களே, பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், தேவன் விரும்புகிறார்.  இன்றைய தியான பழைய ஏற்பாட்டு வசனத்தை இயேசு கிறிஸ்துவும்  பயன்படுத்துவதைப் பார்க்கின்றோம். பாவிகளுடன் அவர் விருந்துண்பதை யூதர்கள் விமர்சித்தபோது, "பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்." ( மத்தேயு 9 : 13 )

இதுபோலவே பயிர் நிலத்தின் வழியே நடந்து சென்றபோது  இயேசுவின் சீடர்கள் பயிரைப்  பறித்துக் கைகளால் நிமிட்டித் தின்பதைக்கண்டு அவரை விமர்சனம் செய்தனர். அப்போது அவர், "பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்." ( மத்தேயு 12 : 7 ) என்று கூறினார். 

அன்பானவர்களே, இதுபோலவே இன்று பல ஊர்களில் பணக்கார ஊர்த்தலைவர்களும் அவரது ஆதரவாளர்களும்  இருக்கின்றனர். உதாரணமாக, ஊர்த்திருவிழாக்கள் கொண்டாடும்போது தேவையில்லாத ஆடம்பரச் செலவினங்களுக்காக  திருவிழா வரியை மிக அதிகமாக்கி வசூலித்து ஊரிலுள்ள ஏழைகளை அவமதிக்கின்றனர். இவர்களைப்பார்த்து தேவன் இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார், "பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்."

எனவே நாம் தேவனுக்காக என்று எதனைச் செய்தாலும் முதலில் இரக்கத்தைக் கடைபிடிப்பவர்களாக இருக்கவேண்டியது அவசியம். அந்த இரக்கம் ஒருவருக்கு எப்போது வரும்? அது தேவனை அறியும் அறிவு பெறும்போதுதான் வரும். எனவேதான் நாம் தேவனை அறியும் அறிவில் வளரவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. ஆம், பலியையல்ல; இரக்கத்தையும் தேவனை அறியும் அறிவினையுமே தேவன் நம்மிடம் எதிர்பார்க்கின்றார். 

இப்படி இரக்கமும் தேவனை அறியும் அறிவும் உள்ளவனே மெய்யான கிறிஸ்தவன். மற்றவர்கள் அனைவரும் பெயர் கிறிஸ்தவர்களே.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்