DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Saturday, September 28, 2024

நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்.

 'ஆதவன்' 💚செப்டம்பர் 30, 2024. திங்கள்கிழமை        வேதாகமத் தியானம் - எண்:- 1,330


"அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்." ( 1 சாமுவேல் 8 : 7 )

இஸ்ரவேல் மக்களை தேவனே வழிநடத்தி வந்தார். பல்வேறு நியாயாதிபதிகள், தீர்க்கத்தரிசிகள்  அவர்களை வழிநடத்தினர். காரணம், தேவன் தனது மக்கள் மற்றவர்களிலிருந்து வித்தியாசமானவர்களாக, தனது நேரடி பராமரிப்பில் வாழவேண்டுமென்று விரும்பினார். ஆனால் இஸ்ரவேல் மக்களைச் சுற்றிலும் இருந்த பல்வேறு இன  மக்களுக்கு அரசர்கள் இருந்தனர். அந்த அரசர்கள் அவர்கள் வழிநடத்தி அவர்களுக்காக யுத்தங்களையும் செய்தனர். 

இவைகளைப் பார்த்த இஸ்ரவேலின் மூப்பர்களுக்கு ஒரு ஆசை ஏற்பட்டது. மற்ற மக்களுக்கு இருப்பதுபோல நமக்கும் தனி ராஜா இருக்கவேண்டும், அவர் நம்மை ஆட்சிசெய்யவேண்டும் என்று விரும்பினர். இதற்கு காரணம் சாமுவேலுக்குப்பின் அவர்களை வழிநடத்திய அவரது புதல்வர்கள் நல்லவர்களாக இல்லை. 

"இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகலஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள்." ( 1 சாமுவேல் 8 : 5 ) என்று கூறப்பட்டுள்ளது. இங்கு நாம் இந்த மூப்பர்கள் செய்த தவறினை கவனிக்கவேண்டியது அவசியம். தேவன் இஸ்ரவேல் மக்களை தானே ஆட்சி செய்யும்படி விரும்பி தீர்க்கதரிசிகளையும் நியாதிபதிகளையும் ஏற்படுத்தினார். அவர்களிடம் தவறு இருக்குமானால் அதனை அவர்கள் தேவனிடம்தான் சொல்லி தீர்வு கண்டிருக்கவேண்டும். 

ஆனால் இஸ்ரவேலின் மூப்பர்கள் தேவனை நோக்கிப் பார்க்காமல் தங்களைச் சுற்றிலுமிருந்த மற்ற மக்கள் இனங்களைப் பார்த்தனர். அவர்களைபோலத் தங்களுக்கும் ஒரு ராஜா இருக்கவேண்டுமென்று விரும்பினர். எனவே அவர்கள் கடைசி நியாயாதிபதியான சாமுவேலிடம் வந்து தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டுமென்று கூறினர்.  மக்கள் இப்படிக் கூறியது தேவனுக்கும் சாமுவேலுக்கும்  மன வருத்தத்தை ஏற்படுத்தியது. எனவே தேவன் சாமுவேலிடம் வேதனையுடன் கூறினார், "அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்." என்று. 

ஆம் அன்பானவர்களே, இதனையே இன்றும் நம்மில் பலரும் செய்துகொண்டிருக்கின்றோம். தேவன் நம்மை வழிநடத்த அனுமதிக்காமல் நம்மைச் சுற்றிலுமிருக்கும் மக்களைப்போல நாமும் வாழவேண்டுமென்று விரும்பி தேவனுக்குப் பிரியமில்லாத செயல்களைச்  செய்துகொண்டிருக்கின்றோம்; அவரைப் புறக்கணிக்கின்றோம். இப்படி வாழும் மக்களைப்பார்த்துத்  தேவன் அன்று சாமுவேலிடம் கூறியதுபோலவே   "நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத் தள்ளினார்கள்." என்று வேதனையுடன் கூறுகின்றார்

உலக மக்களின் செழிப்பு, பகட்டு இவைகளைப்பார்த்து நாம் தேவனைவிட்டு விலகிப்போகும்போது தேவன் மனதில் வருத்தமடைகின்றார். காரணம் அப்படி விலகும்போது நாம் அவரது ஆளுகையைவிட்டு விலகிப்போகின்றோம். தேவனை விட்டு விலகிய இஸ்ரவேல் மக்கள் பட்டப்பாடுகளும் பல்வேறு அந்நிய ராஜாக்களுக்கு அடிமைகளாகி அவதிப்பட்டதும் நமக்கு ஒரு எச்சரிப்பு. எனவே அன்பானவர்களே, எந்தச் சூழ்நிலையிலும் தேவனது கரத்தின் ஆட்சிக்கு விலகி நாம் சென்றுவிடாமல் நம்மைக் காத்துக்கொள்வோம். அவரே நம்மை எப்போதும் ஆளுவாராக. !!

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                 

Wednesday, September 25, 2024

கனிகளோடுகூடிய நற்செயல்கள்

 'ஆதவன்' செப்டம்பர் 29, 2024. ஞாயிற்றுகிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,329


"ஏனெனில் நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்." ( எபேசியர் 2 : 10 )

இன்றைய தியான வசனம் "ஏனெனில்", எனும் வார்த்தையோடு ஆரம்பிக்கின்றது. அப்படியானால் இதற்குமுன் ஏதோ ஒன்று கூறப்பட்டுள்ளது, அத்தனையும் சேர்த்து வாசித்தால்தான் உண்மை விளங்கும். அது என்ன? இன்றைய வசனத்துக்கு முந்தின வசனங்கள் கூறுகின்றன, "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" ( எபேசியர் 2 : 8, 9 )

அதாவது, கிறிஸ்துவின்மேல் கொண்டிருந்த விசுவாசத்தாலும்  கிருபையாலும் நாம் இரட்சிக்கப்பட்டுள்ளோம். இதுதேவனால் உண்டானது. இப்படி நாம் கிருபையால் இரட்சிக்கப்பட்டது ஏனென்றால், நற்செயல்கள் செய்கிறதற்கு.  அப்படி நாம் நற்செயல்கள்  செய்து நடக்கும்படி அவர் முன்னதாக இந்த மீட்பு அல்லது இரட்சிப்பை நமக்கு ஆயத்தம் பண்ணியிருக்கிறார்.

ஆம் அன்பானவர்களே, எல்லோரும் நற்செயல்கள் செய்யலாம். பலரும் செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால், மீட்பு அனுபவம் பெற்று ஒருவர் நற்செயல் செய்யும்போது அது மற்றவர்கள் செய்வதிலிருந்து வித்தியாசமாக இருக்கும். இப்படி நாம் வித்தியாசமானவர்களாக இருக்கும்படிக்கே - அவைகளில் நாம் நடக்கும்படிக்கே - அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.

கிறிஸ்துவோடு இணைந்த வாழ்க்கை இல்லாமல் நாம் கனியுள்ள ஒரு வாழ்க்கை வாழ முடியாது. நற்செயல்கள் செய்வது என்பது வேறு; கனியுள்ள வாழ்க்கை வாழ்வது என்பது வேறு. கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது மட்டுமே நாம் கனிகளோடு சேர்ந்து நற்செயல்கள் செய்ய முடியும். இதனையே இயேசு கிறிஸ்து கூறினார், "என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்." ( யோவான் 15 : 4 )

மட்டுமல்ல, தொடர்ந்து அடுத்த வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறினார், "நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது." ( யோவான் 15 : 5 ) ஆம் அன்பானவர்களே, அவர் நமக்குள் இல்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இப்படி நாம் கனியுடன் கூடிய வாழ்க்கையுடன் நற்செயல்கள் செய்யவே அவர் மீட்பு அல்லது இரட்சிப்பு அனுபவத்தை ஏற்பாடு செய்துள்ளார்.  

மேலும் இன்றைய வசனம் சொல்கின்றது, நாம்  படைக்கப்பட்டதே கிறிஸ்துவுக்குள் வாழ்ந்து நற்செயல்கள் செய்வதற்காகவே. எனவேதான் எபிரெயர் நிருப ஆசிரியர் கூறுகின்றார், "அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்." ( எபிரெயர் 2 : 4 )

அன்பானவர்களே, கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து நமது பாவங்களை அறிக்கையிட்டு அவரது மன்னிப்பை வேண்டுவோம்.  அப்போதுதான்  நாம் கனிகளோடுகூடிய நற்செயல்கள் செய்து தேவனை மகிமைப்படுத்த முடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

Tuesday, September 24, 2024

என் நீதியின்படி எனக்கு நியாயஞ்செய்யும்

 'ஆதவன்' செப்டம்பர் 28, 2024. 💚சனிக்கிழமை           வேதாகமத் தியானம் - எண்:- 1,328


"கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ் செய்வார்; கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும்." ( சங்கீதம் 7 : 8 )

நமது தேவன் நீதியின் தேவனாக இருக்கின்றார். அவர் செய்யும் செயல்கள் பலவும் பலவேளைகளில் நமக்குப் புரியாதவையாக இருந்தாலும் அவர் செயலுக்கு நீதியான ஒரு காரணம் இருக்கும். இதனையே இன்றைய தியான வசனத்தில் தாவீது கூறுகின்றார். 

இப்படி அவர் நீதியுள்ள தேவனாக இருப்பதால் ஜனங்களுக்கு நியாயஞ் செய்வார் என்றும், எனவே என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும் என்றும் தாவீது கூறுகின்றார். ஆம் அன்பானவர்களே, நாம் நீதியுள்ள ஒரு வாழ்க்கை வாழவே அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து தாவீது கூறுகின்றார், "துன்மார்க்கனுடைய பொல்லாங்கு ஒழிவதாக; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர்." ( சங்கீதம் 7 : 9 ) என்று. நீதியில்லாத வாழ்க்கை வாழும் துன்மார்க்கர்களின் வாழ்க்கை ஒழிந்துபோகின்ற வாழ்க்கையாகவே இருக்கும். 

நீதியைச் செய்பவனே தேவனுக்கு உகந்தவன். அன்று கொர்நேலியு வீட்டில் பிரசங்கிக்கும்போது அப்போஸ்தலரான பேதுரு கூறினார், "எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 35 ) என்று. தேவன் மதம், இனம் ஜாதி, நிறம், அழகு பார்த்து ஒருவரைத் தனக்கு உகந்தவனாக தேர்ந்துகொள்வதில்லை. மாறாக ஒருவரது நீதியுள்ள வாழ்க்கையையே பார்க்கின்றார். அப்படி வாழ்ந்த பிற இனத்தானாகிய கொர்நேலியுவுக்கு அவர் தன்னை வெளிப்படுத்தினார். 

ஆனால் இன்று பலருக்கு உண்மை,  நீதி, இவர்களைப்பற்றி பேசுவது பிடிப்பதில்லை. பலமணிநேரம் ஜெபிப்பார்கள், வேதம் வாசிப்பார்கள் ஆனால் வாழ்க்கையில் உண்மை நேர்மை இருக்கவேண்டுமென்று கூறினால் சலிப்பார்கள்; அல்லது பயப்படுவார்கள். ஒரு ஆலயத்தில் செய்தி கொடுக்கச் சென்றிருந்த எனது நண்பர் சகோதரர் ஒருவர் பேசி முடித்ததும் அங்கிருந்த குருவானவர், "உங்க மெசேஜ் நன்றாக இருந்தது... ஆனால் இவ்வளவு விரிவாக  பாவத்தையும் குறித்து நீங்கள் விளக்கியிருக்கவேண்டாம்" என்றாராம்.  எனது நண்பர் அன்று பேசியது, "பண விஷயத்தில் உண்மை" என்பது குறித்து.  

குறிப்பிட்ட குருவானவர் பணவிஷயத்தில் பல்வேறு தில்லுமுல்லு செய்பவர் என்று பிற்பாடுதான் அந்தச் சகோதரருக்குத் தெரிந்ததாம். இப்படியே அப்போஸ்தலரான பவுல் பேசும்போது பேலிக்ஸ் பயமடைந்தான். காரணம் அவனிடம் நீதி, நேர்மை இல்லாமலிருந்தது. இதனை நாம் "அவன் (பவுல்), நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 24 : 25 ) என்று வாசிக்கின்றோம். 

அன்பானவர்களே, தேவனுக்குப் பயந்த நீதியும் உண்மையுமுள்ள வாழ்க்கை வாழ்வோம். அப்போதுதான் நமது ஜெபங்கள் அர்த்தமுள்ளவைகளாக தேவனால் ஏற்றுக்கொள்ளப்படும் ஜெபமாக அமையும். அப்போது தாவீதைப்போல நாமும் துணிவுடன் தேவனை  நோக்கி,  "கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும்."  என்று தைரியமாக ஜெபிக்கமுடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்           

வாழ்க்கையில் உண்மையில்லா ஜெபம் அர்த்தமற்றது

 'ஆதவன்' செப்டம்பர் 27, 2024. வெள்ளிக்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,327


"பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை." ( மத்தேயு 7 : 21 )

வாழ்க்கையில் உண்மையில்லாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்துகொண்டு - தேவ சித்தத்துக்கு முரணான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு - ஒருவர் எவ்வளவு ஜெபித்தாலும் அது அர்த்தமற்றது என்பதனை இன்றைய தியான வசனத்தில்  இயேசு கிறிஸ்து கூறுகின்றார். 

இன்று பலரும் "ஜெபமே ஜெயம்" என்று கூறிக்கொள்கின்றனர். ஆனால் இந்த வார்த்தைகள் வேதத்தில் கூறப்படவில்லை. காரணம் ஜெபம் மட்டுமே ஒருவருக்கு வெற்றி தருவதில்லை. ஆவிக்குரிய வாழ்வில் ஜெபம் முக்கியம் என்றாலும் தேவ ஐக்கியதோடு கூடிய ஜெபம்தான்  தேவன் விரும்புவது. 

"நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.  உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்" (ஏசாயா 1:15, 16) என்று ஏசாயா மூலம் தேவன் கூறுவதை நாம் வாசித்திருகின்றோம்.  

இதனையே "பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை" என்று இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறுகின்றார். அதாவது கர்த்தரை நோக்கி ஜெபிப்பது மட்டும் முக்கியமல்ல, நமது வாழ்க்கையும் அவருக்கு ஏற்ற வாழ்க்கையாக இருக்கவேண்டியது அவசியயம். 

ஆனால் இந்தச் சத்தியத்தை பெரும்பாலான ஊழியர்கள் கூறுவதில்லை. என்ன பிரச்சனைக்கு விசுவாசிகள் அவர்களை அணுகினாலும், "ஜெபியுங்கள்....ஜெபியுங்கள்...நானும் ஜெபிக்கிறேன்" என்று கூறி மக்கள் தங்கள் வாழ்க்கையின் செயல்பாடுகளைத் திருத்திக்கொள்ள வழி கூறாமல் தடுக்கின்றனர். மட்டுமல்ல, "ஆசீர்வாத உபவாச ஜெபம், நள்ளிரவு ஜெபம், வெள்ளிக்கிழமை ஜெபம், வாலிபர் ஜெபம், பெண்கள் உபவாச ஜெபம்......" போன்று பல்வேறு ஜெப அறிவிப்புகளை அறிவித்து ஜெபிக்கின்றனர். அந்த ஜெபங்கள் தேவனுக்கு ஏற்றதாக முதலில் நாம் நம்மைத் திருத்திக்கொள்ளவேண்டும் என்பதை பெரும்பாலும் கூறுவதில்லை. 

ஆம் அன்பானவர்களே, ஆவிக்குரிய வாழ்வில் ஜெபமும் வாழ்க்கையும் இரு கண்களைபோன்றவை. இரண்டு கண்களும் தெளிவாக இருக்கவேண்டியது அவசியம். வாழ்க்கை சரியில்லாத ஜெபம் ஒருவரை ஒற்றைக்கண்ணனாகவே மாற்றும். 

"பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே" என்று இயேசு கிறிஸ்து கூறுவதன்படி நம் அனைவரைக்குறித்தும் தேவனுக்கு ஒரு பொதுவான சித்தமுண்டு. இது தவிர நம் ஒவ்வொருவரைக்குறித்தும் பிதாவாகிய தேவனுக்கு ஒரு சித்தமுண்டு. அந்தச் சித்தத்தை நாம் அறிந்து அதன்படி வாழவேண்டும். அப்படி வாழும்போது மட்டுமே நமது ஜெபம் அர்த்தமுள்ள ஜெபமாக இருக்கும். வெறுமனே "கர்த்தாவே! கர்த்தாவே!" கூப்பாடுபோட்டு ஜெபிப்பதில் அர்த்தமில்லை. 

நமது ஜெபங்கள் பிதாவுக்கு ஏற்புடையதாக இருக்க முதலில் அவரது சித்தம் அறிந்து அதன்படி வாழ்பவர்களாக மாறுவோம்.  தேவ சித்தத்துக்கு எதிராக நாம் செய்யும் பாவ காரியங்களுக்கு மன்னிப்பு வேண்டுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்      

Sunday, September 22, 2024

அந்த நாளை பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்

 'ஆதவன்' 💚செப்டம்பர் 26, 2024. வியாழக்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,326



"அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்." ( மாற்கு 13 : 32 )

இன்றைய தியான வசனம் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைக் குறித்து அவர் கூறியது. இயேசு கிறிஸ்து வருவார் என்பது நிச்சயமேத் தவிர, எப்போது வருவார் என்பது இன்னும் வெளிப்படுத்தப்படாத சத்தியம். அதனை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டிய அவசியமில்லை. 

தனது வருகைக்கு முன்அடையாளமாக இயேசு பல காரியங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவைகளில் பலவும் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவர் வருகை எப்போது என்பது இரகசியமான சத்தியம். அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான் என்று இயேசு கிறிஸ்து கூறிவிட்டார். 

ஆனால் இன்று ஆவிக்குரிய போதகர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள்  சிலர் தங்கள் மேதாவித்தனத்தைக் காண்பிக்க வேத ஆராய்ச்சி என்று பல்வேறு வேத வசனங்களை எடுத்து கணக்குப்பார்த்து இயேசு எப்போது வருவார் என்று கணித்துக்கொண்டிருக்கின்றனர். பொதுவாக ஆவிக்குரிய போதகர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்களே இத்தகைய மூடத்தனத்தைச் செய்துகொண்டிருக்கின்றனர். பிற பாரம்பரிய சபைகளில் இந்தக் கணக்குப்பார்த்தல் இல்லை.

தானியேல் புத்தகத்தின் சில வசனங்களை எடுத்து  தங்கள் கணித அறிவைப் பயன்படுத்தி இயேசுவின் வருகைக்கு நாள்குறிக்கின்றனர் இவர்கள்.  இத்தகைய ஆராய்ச்சி தேவையற்றது என்பதையே இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 'முகநூல்', 'யூடியூப்', 'இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக ஊடகங்களில் இத்தகைய கணித அறிவு ஊழியர்களின் வீடியோக்களை நாம் அதிகம் பார்க்க முடிகின்றது. ஆனால் இவை அனைத்தும் தேவையற்ற குப்பைகளே. ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவுக்கே தெரியாத இரகசியத்தை நாம் அறிய முயற்சிப்பது குப்பையைக் கிளறுவதுபோலத்தான்.

கிறிஸ்துவின் வருகை எப்போது நிகழ்ந்தாலும் வருகையின்போது அவர்  நம்மைத்  தன்னோடு சேர்த்துக்கொள்ளத்  தகுதியாக வாழவேண்டியதே நாம் செய்யவேண்டியது.  மக்களை அதற்குத் தகுதிப்படுத்தவேண்டியதே உண்மை ஊழியர்களின் கடமை.  ஆனால் இன்று இத்தகைய கணிதமேதை ஊழியர்களின் போதனைகளைக்கேட்டு பல விசுவாசிகள் அதனை மற்றவர்களுக்கு விளக்கிக் கொடுப்பதில் பெருமைகொள்கின்றனரேத் தவிர தங்களைத் திருத்திக்கொள்ள முயல்வதில்லை. இவர்களில் சிலர் என்னிடம், "சகோதரரே, கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குறித்து எழுதுங்கள்" என்கின்றனர். 

அன்பானவர்களே, நாம் தேவனுக்கேற்றபடி வாழவேண்டிய வழிமுறைகள் வேதத்தில் ஏற்கெனவே கூறப்பட்டுள்ளன. அவற்றின்படி வாழ்வதே கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தப்படுதல். அப்படி வாழும்போது அவர் எப்போது வந்தாலும் நாம் அவரை எதிர்கொள்ளமுடியும். எனவே நாம் அவர் எப்போது வருவார் என்று கணக்குப் போடாமல் எச்சரிக்கையோடு வாழ்வோம். "அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்." ( மாற்கு 13 : 33 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

காத்திருப்போம்

 'ஆதவன்' 💚செப்டம்பர் 25, 2024. 💚புதன்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,325


"நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது." ( எபிரெயர் 10 : 36 )

மனிதர்கள் நாம் எதிலும் அவசரமாகச் செயல்படுகின்றோம். எனவே அதுபோன்ற அவசரத்தை நாம் தேவனிடமும் எதிர்பார்க்கின்றோம். ஆனால் தேவன் நம்மைப்போல எதையும் அவசரகதியில் செய்பவரல்ல. தேவனிடம் நாம் எதையாவது பெறவேண்டுமானால் முதலில் நாம் அவரது சித்தத்தின்படி வாழவேண்டும். இரண்டாவது பொறுமையாக அவர் செயல்படுவதற்குக் காத்திருக்க வேண்டும். 

தேவன் நமக்குச் சில வாக்குறுதிகளைத் தந்திருக்கலாம். ஆனால் அவை நிறைவேறுமளவும் நாம் காத்திருக்கவேண்டும். நாம் ஒரு காரியத்துக்காக ஜெபிக்கும்போது தேவன் அதற்கு பதில் தருவாரேத் தவிர எப்போது நாம் கேட்பதைத் தருவேன் என்று பெரும்பாலும் சொல்வதில்லை. ஆபிரகாமுக்கு எழுபத்தைந்து வயதானபோது தேவன் அவருக்கு ஒரு மகனை வாக்களித்தார். ஆனால் எப்போது அந்த மகனைத் தருவேன் என்பதை அவர் கூறவில்லை. அந்த வாக்குத்தத்தம் நிறைவேற ஆபிரகாம் இருபத்தைந்து வருடங்கள் காத்திருக்கவேண்டியதிருந்தது. 

தேவன் இப்படி நம்மைக் காத்திருக்கச் செய்வது நமது விசுவாசத்தைச் சோதிக்கவும் உறுதிப்படுத்தவுமே. இதனையே இன்றைய தியான வசனம்,  "நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது." என்று கூறுகின்றது. ஆம் அன்பானவர்களே, பொறுமையோடிருந்து நாம் தேவனிடமிருந்து நமது விண்ணப்பங்களைப்  பெறவேண்டியதாயிருக்கின்றது. 

இதனையே அப்போஸ்தலரான யாக்கோபு, "இதோ, பொறுமையாய் இருக்கிறவர்களைப் பாக்கியவான்கள் என்கிறோமே! யோபின் பொறுமையைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே." (யாக்கோபு 5:11) என்று கூறுகின்றார். 

கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கின்ற படியால்  இப்படி நம்மைப் பொறுமையாக காத்திருக்கச் செய்து தனது வாக்குத்தத்ததை நமக்கு அருளுகின்றார். காரணம்,  இப்படித் தேவனுக்காகக் காத்திருந்து அவர் வாக்களித்ததைப் பெறும்போதுதான் மேலான மகிழ்ச்சி நமக்குக் கிடைக்கின்றது.   ஒரு தகப்பனிடம் மகனோ மகளோ ஒரு பொருளை ஆசைபட்டுக் கேட்கும்போது அந்தத் தகப்பன் உடனே அதனை வாங்கிக்கொடுக்காமல் அதனை வாங்குவதற்கான பணத்தைச் சம்பாதித்துத் தாமதமாக அந்தப் பொருளை வாங்கிக்கொடுக்கும்போது அந்தப் பிள்ளைகள் அதிக மகிழ்ச்சியடையும்.  

"நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்." ( நீதிமொழிகள் 13 : 12 ) என்று வேதம் கூறுகின்றது.  ஆம் அன்பானவர்களே, தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, அவர் நமக்கு வாக்குத்தத்தம் பண்ணியதை  பெறும்படிக்குப் பொறுமையாகக் காத்திருப்போம். அப்போது அது நிறைவேறும்போது பூரணமான மகிழ்ச்சி நமக்கு ஏற்படும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

Saturday, September 21, 2024

எங்களுக்குப் பெலனில்லை

 'ஆதவன்' செப்டம்பர் 24, 2024. செவ்வாய்க்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,324


".....எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கின்றன." ( 2 நாளாகமம் 20 : 12 )

இன்றைய தியான வசனம் யூதாவின் ராஜாவாகிய யோசபாத் கர்த்தரை நோக்கி ஜெபித்த ஜெபமாகும். மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ண வந்தார்கள். அதனை அறிந்த யோசபாத் நாடெங்கும் உபவாசத்தை அறிவித்தார். எல்லோரும் கர்த்தரை நோக்கி கூக்குரலிட்டார்கள். அப்போது யகாசியேல் என்னும் ஆசாப்பின் புத்திரரில் ஒருவன் மேல் கர்த்தரது ஆவி வந்ததால் அவன் தீர்க்கதரிசனம் சொன்னான். 

"யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்து நின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள; கர்த்தர் உங்களோடே இருக்கிறார்" ( 2 நாளாகமம் 20 : 17 ) என்றான் அவன். அவன் கூறியதுபோல கர்த்தர் யோசபாத்தோடு இருந்து யூதாவுக்கு வெற்றியளித்தார். யோசபாத்துக்கு தேவன் பதிலளிக்க அவன் செய்த மேற்கூறிய ஜெபமே காரணமாக இருந்தது. 

இன்றைய தியான வசனமான  ஜெப விண்ணப்பத்தில் யோசபாத் மூன்று காரியங்களை தேவனுக்கு முன்பாக அறிக்கையிடுவதை நாம் பார்க்கின்றோம். அவை:-

1. இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை;
2. நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை;
3. எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கின்றன.

பெலவீனத்தில் தேவனது பெலன் விளங்கும் (2 கொரிந்தியர் 12;9) எனும் உண்மையை யோசபாத் அறிந்திருந்தார். எனவே அதனை தேவனிடம் வாயினால் அறிக்கையிட்டார். ஆண்டவரே இந்த ஏராளமான கூட்டத்துக்கு முன்பாக நிற்பதற்கு எங்களுக்குப் பெலனில்லை. எனவே, நீரே எங்களை பொறுப்பெடுத்துக்கொள்ளும் என்கிறார். 

இரண்டாவது, நாங்கள் இந்தச் சூழ்நிலையில் என்ன செய்வது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. என்கின்றார். ஆம், நமது வாழ்க்கையிலும் சில பிரச்சனைகள் ஏற்படும்போது அதற்கு என்ன செய்வது என்பது நமக்குத் தெரியாமலிருக்கும். எப்படி பிரச்சனையிலிருந்து வெளிவருவது? எனவே, அதனை யோசபாத் தேவனது கரத்தில் விட்டுவிடுகின்றார். 

மூன்றாவது, எங்கள் கண்கள் உம்மையே நோக்கிகொண்டடிருக்கின்றன என்கிறார். ஆம், தேவனைவிட்டு தனது பார்வையை அவர் அகற்றவில்லை. பிரச்சனையைப் பார்க்காமல் தேவனை நோக்கிப் பார்த்தார். 

ஆம் அன்பானவர்களே, இதுவே இன்று நாம் பின்பற்றவேண்டிய சரியான வழியாகும். பிரச்சனைகள், துன்பங்கள் வாழ்வில் ஏற்படும்போது யோசபாத் ஜெபித்ததுபோல தேவனிடம் நமது பலவீனத்தை அறிக்கையிடுவோம். பிரச்சனையிலிருந்து வெளிவர என்ன செய்வது என்பது நமக்குத் தெரியாததால் அதனை தேவனிடம் விட்டுவிடுவோம். இறுதியாக பிரச்சனையையே எண்ணிக் கலங்காமல் தேவனைநோக்கி நமது கண்களைத் திருப்பி அவரையே நம்பிக்கையோடு நோக்குவோம்.  கர்த்தர் அதிசயமாக நம்மை விடுவித்து நடத்துவார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்      

Friday, September 20, 2024

நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகள்

 'ஆதவன்' 💚செப்டம்பர் 23, 2024. திங்கள்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,323


"சகோதரரே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம்." ( கலாத்தியர் 4 : 28 )

ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம் அளித்தபடி அவரது நூறாவது வயதில் பிறந்தவன் ஈசாக்கு.  ஆனால், அவருக்கு  பிள்ளை இல்லாததால் அவர் மனைவி சாராள் தனது அடிமைப்பெண்ணான ஆகாரை அவருக்கு மறுமனைவியாகக் கொடுத்ததால் அவள்மூலம் பிறந்தவன் இஸ்மவேல்.  இதனைக்கொண்டு அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில் ஒரு சத்தியத்தை விளக்குகின்றார். 

நாம் கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படும் மீட்பு அனுபவத்தைப் பெறும்போது நாம் ஈசாக்கைபோல வாக்குத்தத்தத்தின்படி பிறந்தவர்கள் ஆகின்றோம். ஆம், கிறிஸ்துவின் வாக்குத்தத்தத்துக்கு உரிமையாளர்கள் ஆகின்றோம். அந்த அனுபவத்தைப் பெறாதவர்கள் இஸ்மவேலைபோல மாம்சத்தின்படி பிறந்தவர்கள். இப்படி மாம்சத்தின்படி பிறந்தவர்களுக்கும் ஆவியின்படி பிறந்தவர்களுக்கும் முரண்பாடு இருந்துகொண்டே இருக்கும். 

இதனையே அப்போஸ்தலரான பவுல், "ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது. அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது." ( கலாத்தியர் 4 : 29, 30 ) அதாவது, மீட்பு அனுபவம் இல்லாதவர்கள் கிறிஸ்துவோடு சுதந்தரவாளியாயிருப்பதில்லை. 

எனவே, ஈசாக்கைபோல வாக்குத்தத்தத்தின்படி பிறந்த ஆவிக்குரியவர்களுக்குத்தான் வேதத்திலுள்ள வாக்குத்தத்த வசனங்கள் உரிமையாகுமேத்  தவிர அவரோடு எந்தத் தொடர்புமின்றி வெறும் மாம்ச சிந்தைகொண்டு உலக ஆசீர்வாதங்களையேத் தேடி அலைபவர்களுக்கு அவை உரிமையாவதில்லை. 

ஆம் அன்பானவர்களே, மீட்பு அனுபவம் பெற்றவர்களே ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம். மெய்யான ஆசீர்வாதம் அவர்களுக்கே உரியது. இதனையே நாம், "ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைவிதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்; அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்." ( ஆதியாகமம் 26 : 12, 13 ) என்று வாசிக்கின்றோம். 

இஸ்மவேலைப்போன்ற உலக மனிதர்கள் நம்மை நெருக்கலாம். நமது செயல்பாடுகளை விமர்சிக்கலாம், நமக்கு எதிராகச் செயல்படலாம். ஆனால் மெய்யான தேவ ஆசீர்வாதம் ஈசாக்கைபோல வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளாக வாழ்பவர்களுக்கே உரியது.  கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு அவரது புதிய உடன்படிக்கையின் மக்களாக வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். எனவே, அந்த அழைப்பைப் புறக்கணிக்காமல் நம்மை அவருக்கு ஒப்புக்கொடுத்து பாவங்கள் மன்னிக்கப்பட்டு வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளாவோம். மெய்யான ஆசீர்வாதத்தினைச் சுதந்தரித்துக்கொள்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்      

என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.

 'ஆதவன்' செப்டம்பர் 22, 2024. ஞாயிற்றுக்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,322


"நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை." ( யோவேல் 2 : 26 )

இன்றைய தியான வசனம் தேவனுடைய பிள்ளைகளுக்குரிய வாக்குத்தத்த வசனமாக உள்ளது.  அதாவது கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு பாவமன்னிப்பு நிச்சயத்தைப் பெற்றவர்களே அவரது மக்கள். இந்த "என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை." என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

இப்படி தேவனது மக்களாக இருப்பவர்கள், சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, தங்களை அதிசயமாய் நடத்திவந்த தங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அவர்கள் ஒரு திருப்தியான வாழ்க்கை வாழ்வார்கள். காரணம் தேவனாகிய கர்த்தர் அவர்களை அதிசயமாக நடத்திவந்துள்ளார் என்று இந்த வசனம் கூறுகின்றது. 

பல்வேறு நெருக்கடிகள் போராட்டங்கள் வாழ்வில் வந்தாலும் தேவனால் மீட்கப்பட்டவர்கள் தேவனால் தனி அன்போடு கவனிக்கப்படுவார்கள். எனவே, தேவ ஜனங்கள் துன்பப்படும்போது மற்றவர்கள் அவர்களை அற்பமாகப் பார்த்தாலும் முடிவில் அப்படி அற்பமாகப் பார்த்தவர்கள் வெட்கப்படுவார்கள். தேவன் ஒருபோதும் தனது மக்களை வெட்கப்பட விடமாட்டார்.   

நமது ஆரம்பத்தில் நாட்கள் மற்றவர்களைவிட அற்பமானதாக இருக்கலாம். ஆனால், அந்த நாளிலும் பிறர் நம்மைப் பார்ப்பதைவிட கர்த்தரது கண்கள் சந்தோஷமாய் நம்மைப் பார்க்கின்றன. அவரது கரங்கள் நம்மை வழிநடத்துகின்றன. ஆம், "அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது". ( சகரியா 4 : 10 )

எனவே நாம் எந்தச் சூழ்நிலையிலும் கர்த்தரைத் துதிக்கக் கற்றுக்கொள்வோம். "ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்". (எபிரெயர் 13:15) எப்போதும் என்று கூறும்போது வாழ்வில் நல்லது கெட்டது எது நடக்கும்போதும் என்று பொருள்.

எனவே தேவனுடைய பிள்ளைகளே, வாழ்வில் நமது இன்றைய குறைகளை எண்ணி வேதனைப்படாமல் மகிழ்ச்சியாக இருப்போம். தேவனுக்கேற்ற வாழ்வைத் தொடர்வோம். எப்போதும் நமது உதடுகள் தேவனைத் துதிக்கும் உதடுகளாக இருக்கட்டும்.  "நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை." என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                 

Wednesday, September 18, 2024

நல்ல மேய்ப்பன்

 'ஆதவன்' 💚செப்டம்பர் 21, 2024. 💚சனிக்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,321


"என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்." ( எசேக்கியேல் 34 : 15 )

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நல்ல மேய்ப்பனாய் இருக்கின்றார். இந்த நல்ல மேய்ப்பரைக்குறித்து எசேக்கியேல் தீர்க்கதரிசி தீர்க்கதரிசனமாகக் கூறும் வார்த்தைகளே  இன்றைய தியான வசனம். "அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும் இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும்." ( எசேக்கியேல் 34 : 14 ) என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

இந்த உலகத்தில் வாழ்ந்தபோது கிறிஸ்துவும் இதனையே கூறினார். "நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்." ( யோவான் 10 : 14, 15 ) என்றார் அவர். 

இன்றைய தியான வசனத்தில் ஆடுகள் என்று வெறுமனே கூறாமல், 'என் ஆடுகள்" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, நல்ல மேய்ப்பனாம் கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கேட்டு அவற்றின்படி நடப்பவர்களே அவரின் ஆடுகள். அப்படி அவரது வார்த்தையின்படி வாழும் மக்களை அவரே மேய்த்து வழிநடத்துவார். "அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும்" எனும் தீர்க்கதரிசன வார்த்தைகள் கிறிஸ்து அருளும் ஆசீர்வாதங்களையும் சமாதானத்தையும் கூறுகின்றது. 

அன்பானவர்களே, நாம் நல்ல மேய்ப்பனாம் கிறிஸ்துவின் குரலுக்குக் கீழ்படியும்போது  மட்டுமே அவரை அறிந்திருக்கின்றோம் என்று கூறமுடியும். அப்படி அறியும்போது மட்டுமே அவரது இரத்தத்தாலான மீட்பினை நாம் அனுபவிக்கமுடியும். இதனையே அவர், "நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்." என்று கூறுகின்றார். ஆம், அவர் சிலுவையில் நமக்காக பலியானதையே இது குறிக்கின்றது. 

மட்டுமல்ல, இந்த மீட்பு அனுபவத்தை உலக மக்கள் அனைவரும் பெற்று அனுபவிக்கவேண்டுமென்று கிறிஸ்து விரும்புகின்றார். அதனையே அவர் கூறினார், "இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்." ( யோவான் 10 : 16 ) 

ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனும் ஏற்படவேண்டுமானால் உலகிலுள்ள மக்கள் அனைவரும் முதலில் அந்த நல்ல மேய்ப்பனை அறியவேண்டியது அவசியம். அதற்கு அவரை அறிந்தவர்கள் அவரை மற்றவர்களுக்கு அறிவிக்கவேண்டியது அவசியம். எனவே அன்பானவர்களே, நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்க்கையினாலும் வார்த்தைகளினாலும் அவரை மற்றவர்களுக்கு அறிவிப்பவர்களாக வாழ்வோம்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்             

Monday, September 16, 2024

"என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் ?"

 'ஆதவன்' 💚செப்டம்பர் 20, 2024.வெள்ளிக்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,320


"அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்." ( மத்தேயு 16 : 15 )

தன்னை ஏற்றுக்கொள்பவர்கள் வெறுமனே தன்னிடம் அன்புகூராமல் தான் யார் என்பதனை அறிந்து அன்புகூரவேண்டுமென்று இயேசு கிறிஸ்து விரும்புகின்றார். இன்று கிறிஸ்துவை அறியாத பிறமத அன்பர்களும் பலர் இயேசுவை அன்புசெய்கின்றனர். ஆனால் அவர்கள் மற்ற தெய்வங்களைப்போல அவரும் ஒருவர் என்று எண்ணிக்கொள்கின்றனர். எனவே தங்களது தொழில் நிறுவனங்களில் பிறமத தெய்வங்களது படங்களுடன் இயேசு கிறிஸ்துவின் படத்தையும் வைத்து மாலை அணிவித்து நறுமண தூபம் காட்டுகின்றனர். ஆனால் இவை கிறிஸ்துவைத் திருப்திச் செய்யாது என்பதனை அவர்கள் உணர்வதில்லை. 

இதுபோலவே இயேசு கிறிஸ்து உயிருடன் இருந்த காலத்தில் வாழ்ந்த யூதர்கள் பலரும் அவரை மதித்தனர். ஆனால் அவர் யார் என்பதனை அவர்கள் உணர்ந்து மதிக்கவில்லை. மாறாக, முற்காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற தீர்க்கதரிசி உயிர்பெற்று எழுந்து வந்துள்ளதாக எண்ணிக்கொண்டனர். சிலர்  அவரை யோவான் ஸ்நானகன் என்றனர், சிலர் எலியா என்றனர், வேறுசிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்று எண்ணிக்கொண்டனர். எனவே, முதலில் தனது சீடர்களிடம் இயேசு, "மக்கள் என்னை யார் என்று கூறுகின்றனர்?" என்று கேட்டபோது சீடர்கள் இந்தப் பதிலையே கூறினர்.

ஆனால் இயேசு கிறிஸ்து, மக்கள் கூறுவது இருக்கட்டும், "நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டார். ஏனெனில் நீங்கள் ஆரம்பம்முதல் என்னோடு இருக்கிறீர்கள், என்னோடு பழகியிருக்கிறீர்கள் எனவே மக்கள் எண்ணத்துக்கும் உங்கள் எண்ணத்துக்கும் வித்தியாசம் இருக்கவேண்டும் என்பதனை உணர்த்துவதற்குத்தான் இப்படிக் கேட்டார்.  அப்போது, "சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்." ( மத்தேயு 16 : 16 )

ஆம் அன்பானவர்களே, இன்று நாம் கிறிஸ்துவை எப்படிப் பார்க்கின்றோம்.? நம்மில் சிலர் அவரை நோய்தீர்க்கும் மருத்துவராக, கடன் தீர்க்க உதவும் நிதிஉதவி செய்பவராக, வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது வீட்டைக் காக்கும் காவல்காரராக, அனைத்துவித உலக ஆசீர்வாதங்களையும் வழங்குபவராகவே பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.  இது யூதர்கள் அவரைப் பார்த்ததுபோன்ற பார்வையாகும்.   

அப்போஸ்தலரான சீமோன் பேதுரு கூறியபடி அவரை நாம்  ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவாகப் பார்ப்போமானால் மட்டுமே நமக்கும் அவருக்கும் உறவு சரியாக இருக்கின்றது என்று பொருள். அப்போதுதான் நமது பாவங்களை அவரால் மன்னிக்கமுடியுமென்ற உறுதி நமக்கு ஏற்படும். இப்படி பாவங்கள் மன்னிக்கப்படும்போது நாம் கிறிஸ்துவோடு நெருங்கிய உறவினர்களாக மாறிவிடுகின்றோம். அப்போது நாம் அவரை ஒரு தகப்பனாக, தாயாக, நண்பனாக, சகோதரனாகப் பார்க்கமுடியும். 

இப்படி நாம் அவரை ஏற்றுக்கொள்வதையே கிறிஸ்து விரும்புகின்றார். எனவே அன்பானவர்களே, இதுவரை அவரை நாம் யூகர்களைப்போல பார்த்திருப்போமானால் அந்தப் பார்வையை மாற்றுவோம். அவரை ஆத்தும இரட்சகராக,  ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவாகப் பார்க்கப் பழகுவோம். அப்போது நமது ஆவிக்குரிய வாழ்க்கை அடுத்த உயர்ந்த நிலைக்குச் செல்வதை கண்டுகொள்ளலாம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Monday, September 09, 2024

பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? நீ சமபூமியாவாய்.....".

 'ஆதவன்' 💚செப்டம்பர் 19, 2024. வியாழக்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,319


பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்....." 

பாபிலோனில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலரை கோரஸ் ராஜா (King Syrus ) விடுவித்து நேபுகாத்நேச்சார் எருசலேம் ஆலயத்திலிருந்து  கைப்பற்றிச்சென்ற பொருட்களையும் திருப்பிக்கொடுத்து ஆலயத்தைத் திரும்பவும் கட்ட அனுமதியளித்தான். அப்போது செருபாபேல் தலைமையில் ஆலயம் கட்டப்பட்டது. ஆலயம் கட்டத் துவங்கியபோது யூதருக்கு எதிரானவர்கள் ஆலயம் கட்டுவதை எதிர்த்தனர்; தடைசெய்தனர். ஆலயப்பணி பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுக் கிடந்தது. 

அப்போது சக்கரியா தீர்க்கதரிசிமூலம் கர்த்தரது வார்த்தை வந்தது.  அப்போது அவர் கூறியதுதான் இன்றைய தியான வசனம். மட்டுமல்ல, கர்த்தர் தொடர்ந்து கூறுகின்றார், "செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்; அதினால் சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிவாய்." ( சகரியா 4 : 9 )

ஆம் அன்பானவர்களே, இன்று நாமே தேவனுடைய ஆலயமாய் இருக்கின்றோம். ஒருவேளை நமது உடலாகிய ஆலயம் சந்துருவின் முயற்சியால் இன்று தேவனற்றதாக மாறிப்போயிருக்கலாம். அல்லது நமது ஆவிக்குரிய வாழ்க்கையினை நாம் இழந்துபோயிருக்கலாம். பெரிய மலைபோன்ற பிரச்சனைகள் நம்மை நெருக்கலாம். நாம் எப்படி வாழ்வைத தொடருவோம் என அங்கலாய்த்துக் கொண்டிருக்கலாம். நம்மைப்பார்த்து தேவன் கூறுகின்றார், "பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்.....". எந்த மலைபோன்ற பிரச்சினை நம்மை நெருக்கினாலும்  அது நொறுங்கி சமபூமியாகும். 

ஆனால் செருபாபேலுக்கு இருந்ததுபோன்ற ஆர்வம் நமக்கு இருக்கவேண்டியது அவசியம்.   சும்மா இருந்துகொண்டு தேவனே எல்லாம் செய்வார் என்று எண்ணிடாமல் நம்மை அவரது பலத்தக்  கரத்தினுள் ஒப்புக்கொடுத்து நமது உடலாகிய ஆலயத்தைக் கட்டி எழுப்ப ஒப்புக்கொடுக்கவேண்டும். 

பலமில்லாத நம்மைக்கொண்டே தேவன் இதனை நமது வாழ்வில் செய்துமுடிப்பார். இதனையே, "செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்" என்கிறார் தேவனாகிய கர்த்தர். இன்றைய வசனத்தில் செருபாபேல் எனும் பெயர் வருமிடத்தில் உங்கள் பெயரைச் சேர்த்துச் சொல்லி இதனை விசுவாச அறிக்கையாகக் கூறுங்கள். எந்தப் பெரிய பர்வதமானாலும் அது எம்மாத்திரம்? நமக்கு முன்பாக அது சமபூமியாகிடும். 

தேவனது அற்புதமான ஆற்றல்மூலம் எருசலேம் ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டதை நாம் எஸ்றா நூலில் வாசிக்கலாம். சகரியா தீர்க்கத்தரிசி மூலம் தேவன் கூறிய வார்த்தைகள் நிறைவேறின. ஆம், "செருபாபேலுக்குச் (நமக்கு) சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." ( சகரியா 4 : 6 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்               

Sunday, September 08, 2024

ஏழைகளைப் பரிகாசம் பண்ணுகிறவன்

 'ஆதவன்' 💚செப்டம்பர் 18, 2024. 💚புதன்கிழமை      வேதாகமத் தியானம் - எண்:- 1,318



"ஏழையைப் பரியாசம்பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்..." ( நீதிமொழிகள் 17 : 5 )

பரிகாசம் பண்ணுதல் என்பது வெறுமனே கேலி கிண்டல் செய்வதைமட்டுமல்ல, ஏழைகளை அற்பமாக எண்ணுவது, அவர்களைப்  புறக்கணிப்பது, அவர்களோடு பேசத் தயங்குவது, மற்றவர்களோடு அவர்களை ஒப்பிட்டு அற்பமாகப் பேசுவது போன்ற அனைத்துக் காரியங்களையும் குறிக்கும். 

ஒருமுறை ஏழைப் பெண் ஒருவர் வழக்கமாக அவர் அணிவதைவிட நல்ல ஆடை அணிந்து ஆலயத்துக்கு  வந்தார். அன்று ஆராதனை முடிந்து ஆலய வளாகத்தில் பேசிக்கொண்டிருந்த இரு பெண்கள் அந்தப் பெண்ணைக்குறித்துப் பேசும்போது ஒருத்தி, "இன்றைக்கு இன்னாரது மகளைப் பார்த்தாயா?"  என்று அந்தப் பெண்ணின் தகப்பன் பெயரைச்சொல்லி  ஒருவிதக் கேலியாகக் கேட்க,  மற்றவள், " யாராவது தர்மம்  செய்திருப்பார்கள்" என்றாள். 

இந்தமாதிரி பேச்சுக்களைச்  சம்பந்தப்பட்ட அந்தப்பெண்  கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவரைப் பரிகாசம் பண்ணுவதுதான்.  இதுபோல சிலர் தங்கள் வீட்டில் வேலைசெய்யும் வேலைக்காரர்களை எண்ணுவதுண்டு. கெட்டுப்போன உணவுகளை வேலைக்காரர்களுக்குக் கொடுப்பது, அவர்களுக்கான சம்பளத்தை ஏற்ற காலத்தில் கொடுக்காமல் இழுத்தடிப்பது, ஒருநாள் அவர்கள் வேலைக்கு வரவில்லையானால் சம்பளம் கொடுக்கும்போது ஒருநாள் கூலியைக் கணக்குப் பார்த்துக் குறைப்பது இவைபோன்றவை ஏழைகளை பரிகாசம்பண்ணுவதுதான்.

பெரும்பாலும் அரசு வேலைகளில் இருப்போர் இப்படிச் செய்கின்றனர். அரசாங்கம் எத்தனைநாள் தங்களுக்கு விடுமுறை அளிக்கின்றது, இதுதவிர பணி நாட்களில் எத்தனை நாட்கள் எத்தனை வகை விடுமுறை அளிக்கப்படுகின்றது என்பதனை இவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை.  

கடுமையான வார்த்தைகளால் வேலைக்காரர்களைத் திட்டுவதும் அவர்களைப் பரிகாசம்பண்ணுவதுதான்.   அவர்கள் ஏன் நம்மிடம் வேலைக்கு வந்திருக்கின்றார்கள்? அவர்களது ஏழ்மை நிலையால்தானே? எனவேதான் வேதம் சொல்கின்றது, "எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரருக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லையென்றும் அறிந்து, கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்." ( எபேசியர் 6 : 9 )

நான் ஆவிக்குரிய விசுவாசி என்று கூறிக்கொள்வதாலோ, ஆவிக்குரிய ஆராதனையில் கலந்துகொண்டு கூச்சலிடுவதாலோ, வேதாகமத்தை தினமும் வாசிப்பதாலோ, பல மணிநேரம் உபவாச ஜெபம் செய்வதாலோ நாம் தேவனது பார்வையில் நல்லவர்களல்ல. எனவே பெரிய அளவில் ஏழைகளுக்குத் தானதர்மங்கள்  செய்யாவிட்டாலும் பரவாயில்லை, இத்தகைய குறைகள் நம்மிடம் இருந்தால் திருத்திக்கொள்வோம்.  

"தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயைசெய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்." ( நீதிமொழிகள் 14 : 31 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்