DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Tuesday, July 29, 2025

🏫 வேதாகமத் தியானம் - ஜூலை 2025

               - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1606                                                                      ஆதவன் 01.07.2025 செவ்வாய்   

"எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 16 )

நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமென்று வேதம் நமக்கு பல்வேறு இடங்களில் வலியுறுத்துகின்றது. எப்போதும் துக்கமுகமாய் இருப்பதை மனிதர்கள் மட்டுமல்ல, தேவனும் விரும்புவதில்லை. காரணம், சந்தோஷமாய் இருப்பது நாம் விசுவாசமாக இருக்கின்றோம் என்பதனை வெளிப்படுத்துவதாகும்.  

அன்னாளுக்கு குழந்தையில்லாத ஏக்கம் மனமடிவைத் தந்தது. அவள் தேவனிடம் ஒரு குழந்தைக்காக விண்ணப்பம் பண்ணினாள். அவள் ஆலயத்தில் ஜெபித்தபோது அவளது உதடுகள் மட்டுமே அசைந்தன; அவளது குரல் கேட்கப்படவில்லை. அவளது ஜெபத்தைக் கவனித்துக்கொண்டிருந்த ஆசாரியனான ஏலி அவள் மது மயக்கத்தால் உளறுகின்றாள் என எண்ணி அவளிடம் அதுகுறித்துக் கேட்டபோது அவள் தனது குழந்தையில்லாத ஏக்கத்தையும் அதற்காக ஜெபித்ததையும் கூறினாள். 

அப்போது ஏலி,  "சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்." ( 1 சாமுவேல் 1 : 17 ) அப்பொழுது அவள்: "உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை." ( 1 சாமுவேல் 1 : 18 ) என்று வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, அன்னாள் அதன்பின்பு  துக்கமுகமாயிருக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது காரணம், நான் எனது விண்ணப்பத்தைத் தேவனிடம் தெரிவித்துவிட்டேன், அவர்  அதனை நிறைவேற்றித்தருவார் எனும் விசுவாசம் அவளுக்கு இருந்தது. இதிலிருந்து நாம் எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்கவேண்டுமானால் நமக்கு விசுவாச வாழ்க்கை தேவை என்பது புரிக்கின்றது. "கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்". ( நெகேமியா 8 : 10 ) என்று நாம் வாசிக்கின்றோம். நமது விசுவாசமே அந்தப் பெலன். 

அப்போஸ்தலரான பவுலும் "கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்." ( பிலிப்பியர் 4 : 4 ) என்று நமக்கு வலியுறுத்துகின்றார். 

கவலைகள், துன்பங்கள், பாடுகள், இழப்புக்கள் நமக்கு வாழ்வில் சோகத்தைக் கொண்டுவரலாம். அந்தச் சோகத்திலேயே நமது எஞ்சிய வாழ்வை நாம் இழந்துவிடக்கூடாது. எல்லாவற்றையும் நாம் தேவனது பாதத்தில் இறக்கிவைக்கும்போது தேவ சமாதானம் நம்மை நிரப்பும். அப்போது நாம் தொடர்ந்து துக்க முகத்துடன் இருக்கமாட்டோம். 

"நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்." ( பிலிப்பியர் 4 : 6, 7 ) என்று நமக்கு ஆலோசனைத் தருகின்றார் பவுல் அப்போஸ்தலர். 

ஆம் அன்பானவர்களே, தேவனை முழு பெலனாக நம்புவோம். அப்போது எந்த இழப்பிலும் நாம் மனமகிழ்ச்சியாக இருக்கமுடியும். ஆபகூக் தீர்க்கத்தரிசி இப்படி எல்லாமே நான் இழந்தாலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று பாடுகின்றார். "நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன். ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார். " ( ஆபகூக் 3 : 18, 19 ) எனத் தனது விசுவாசத்தை அறிக்கையுமிடுகின்றார். 

எனவே, அப்போஸ்தலரான பவுல் கூறுவதுபோல ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து நமது விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துவோம்.  அன்னாளைப்போல அதன்பின்னர் நாம் துக்கத்தை விட்டுவிட்டு தேவன்மேல் விசுவாசமாக இருப்போம்; அவரே நமக்கு ஆறுதலும் தேறுதலும் மனமகிழ்ச்சியும் தந்து நமது ஆத்துமாவை உயிர்ப்பிப்பார். 

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1607                                                                      ஆதவன் 02.07.2025 புதன்    

"உமது காட்டுப்புறாவின் ஆத்துமாவைத் துஷ்டருடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடாதேயும்; உமது ஏழைகளின் கூட்டத்தை என்றைக்கும் மறவாதேயும். உம்முடைய உடன்படிக்கையை நினைத்தருளும்; பூமியின் இருளான இடங்கள் கொடுமையுள்ள குடியிருப்புகளால் நிறைந்திருக்கிறதே." ( சங்கீதம் 74 : 19, 20 )

புறா வேதாகமத்தில் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்படும் பறவையாகும். புதிய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவருக்கு உருவாக அடையாளமாக புறா குறிப்பிடப்படுகின்றது. அதுபோல காட்டுப்புறாவைப் பற்றியும் வேதாகமத்தில் சில இடங்களில் குறிப்பிடப்படுவதை நாம் காணலாம். Turtledove, Wilddove என ஆங்கிலத்தில் இவை குறிக்கப்படுகின்றன. 

வேதாகமத்தில் தேவனுடைய மக்கள் காட்டுப்  புறாக்களுக்கு ஒப்பிடப்படுகிறார்கள்; இது ஏனென்றால் ஆவிக்குரிய மக்களின் பலவீனம் ஆபத்தான உலகில் பாதுகாப்பிற்கான அவர்களது தேவை இவை காட்டுப்புறாக்களின் நிலைமைக்கு ஒப்பாக இருக்கின்றது. மனிதர்களிடையே வசிக்கும் புறாக்களுக்குப் பாதுகாப்பு உண்டு. ஆனால் காட்டுப்புறாக்களுக்கு கழுகு, பைரி, ஆந்தை, வல்லூறு போன்ற எதிரி பறவைகளால் ஆபத்து எப்போதும் உண்டு. இதுபோலவே, ஆவிக்குரிய காட்டுப்புறா மக்களுக்கு பல்வேறு உலக நாட்டங்களும் பாவ காரியங்களும் எதிராக நின்று அவர்களது ஆவிக்குரிய வாழ்வைக் கெடுக்க முயல்கின்றன. 

மட்டுமல்ல, மனிதர்களிடையே வசிக்கும் புறாக்களுக்கு உணவுப்பஞ்சம் ஏற்பட வாய்ப்பில்லை.  அவைகளுக்கு எளிதாக உணவு கிடைக்கும். மட்டுமல்ல, வீடுகளிலேயே அவற்றை உணவுகொடுத்து வளர்ப்பார்கள். ஆனால் காட்டுப்புறாக்களின் நிலைமை அப்படியல்ல, அவை எதிரிப் பறவைகளிடமும் சிக்கிக்கொள்ளாமல் தங்களுக்கான உணவினைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும்.  ஆவிக்குரிய மக்களின் உலகத் தேவைகளும் இதுபோலவே பல்வேறு சமயங்களில் சிக்கலானதாகவே இருக்கின்றன. தங்களுக்கான ஆவிக்குரிய ஏற்ற உணவை அவர்கள் தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டும்.

எனவேதான் இன்றைய தியான வசனத்தில் சங்கீத ஆசிரியர், உமது காட்டுப்புறாவின் ஆத்துமாவைத் துஷ்டருடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடாதேயும்; உமது ஏழைகளின் கூட்டத்தை என்றைக்கும் மறவாதேயும், பூமியின் இருளான இடங்கள் கொடுமையுள்ள குடியிருப்புகளால் நிறைந்திருக்கிறதே என்று வேண்டுதல் செய்கின்றார். தேவனுக்கேற்றவர்களை அவர் ஏழைகளின் கூட்டம் என்று கூறுகின்றார். ஆம்,  கிறிஸ்து இல்லாத இடங்களாக பூமியானது கொடுமையுள்ள குடியிருப்புகளால் நிறைந்திருக்கிறது. இவற்றிலிருந்து காட்டுப்புறாக்களான ஏழைகளின் கூட்டமாகிய நாம் தப்பவேண்டும். 

ஆனால் நாம் உன்னதப்பாட்டில் இந்த நிலைமைக்கு மாறுதல் உண்டு, நமது தேசம் காட்டுப்புறாக்களான தேவனுடைய விசுவாசிகளால் நிரப்பப்பட்டு அவர்களது வேண்டுதலால் நிறையும் ஆவிக்குரிய எழுப்புதல் ஏற்படும் என்பதனையும்  நமக்குக் கூறுகின்றது. "பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது; குருவிகள் பாடுங்காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது." ( உன்னதப்பாட்டு 2 : 12 ) என்று நாம் வாசிக்கின்றோம். பூமியிலே மலர்கள் பூத்து குருவிகள் பாடும் வசந்த எழுப்புதல்காலம் வரும்போது தேசத்திலே காட்டுப்புறாவின் சத்தமும் கேட்கப்படும். 

ஆம் அன்பானவர்களே, காட்டுப்புறாவாகிய நமது ஆத்துமாவைப்  பாவம் சாபம் போன்ற துஷ்டருடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடாமல் இருக்கவும், ஏழைகளின் கூட்டமாகிய நம்மை அவர் என்றைக்கும் மறவாமலிருக்கவும் வேண்டுதல் செய்வோம். காரணம், இந்த பூமி இருளான இடங்களாகவும்  கொடுமையுள்ள குடியிருப்புகளாலும் நிறைந்திருக்கின்றது. மட்டுமல்ல, நமது தேசத்தில் வசந்தகால ஆவிக்குரிய எழுப்புதல் ஏற்பட்டுக் காட்டுப்புறாக்களின் சத்தம் எங்கும் கேட்டிடவும் வேண்டுதல் செய்வோம்.  தேவன்தாமே நமது தேசத்தை ஆசீர்வதிப்பாராக. 

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1608                                                                      ஆதவன் 03.07.2025 வியாழன்     

"ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?" ( 1 கொரிந்தியர் 1 : 20 )

இந்த உலகத்தில் பல்வேறு துறைகளில் ஞானிகள் இருக்கின்றனர். இறையியல் கல்லூரிகளில் படித்து பட்டம்பெற்ற வேத அறிஞர்கள் உள்ளனர்.  பல்வேறு துறைகளில் தர்க்கம் (debate) செய்து தங்களது கருத்துக்களை வலியுறுத்தும் திறமையுள்ள தர்க்கஞானிகள் உள்ளனர். ஆனால் வாழ்வில் மெய்தேவனை  அறியாதவரை இவர்களது அறிவும் திறமைகளும் பைத்தியக்காரர்களின் அறிவுக்கு ஒத்தது என்கின்றது இன்றைய தியான வசனம்.  

அதாவது மேற்குறிப்பிட்டவகை மக்கள் சுய ஞானத்தால் இவைகளை அறிந்துள்ளனர். அதாவது, தங்களது மனித அறிவால் ஞானம் பெற்றுள்ளனர். தேவ ஞானம் என்பது இதற்கு அப்பாற்பட்டது. மேலும், தேவனை வாழ்வில் தனிப்பட்ட விதத்தில் அறியாமல் தாங்கள் அறியாத தேவனை மற்றவர்களுக்குப் போதிக்க முயல்கின்றனர் பலர். எல்லா மதங்களிலும் கடவுளை அடைந்திட வழிகாட்டும் கடவுளை அறியாத இத்தகைய உலக ஞானிகள் உண்டு. அவர்களைப் பின்பற்றக்கூடிய மக்கள்கூட்டமும் உண்டு.

இத்தகைய மனிதர்களுக்கு வேதம் கூறும் வழிகளும் பிரசங்கங்களும் பைத்தியமாகத் தோன்றுகின்றது. ஆனால் இந்த உலக ஞானிகள் பைத்தியமாகக் கருதும் சத்தியமான பிரசங்கங்களே விசுவாசிகளை இரட்சிப்புக்கு நேராக நடத்துகின்றன. இதனையே,  "எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று." ( 1 கொரிந்தியர் 1 : 21 ) என்கின்றார் பவுல். 

இன்று ஏதாவது ஒரு துறையில் ஒருவர் சாதனை புரிந்துவிட்டால் அவர் கூறும் அனைத்துக் கருத்துக்களும் பலரால் பாராட்டப்படுகின்றன; பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இப்படியே இன்று இசை மேதைகளும், திரைப்பட இயக்குனர்களும், நடிக நடிகைகளும் தாங்கள் அறியாத கடவுளைப்பற்றி கூறும் கருத்துக்களும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இப்படி உலக ஞானத்தின்பின் ஓடும் மக்களைப்பார்த்து இன்றைய தியான வசனம் கேட்கின்றது, "ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா? என்று. 

தேவனை அறியாத ஒருவர் உலக அறிவால் பேசும் வார்த்தைகளை ஞானம் என்று அதனைக் கேட்கவும் அதனைப் பின்பற்றவும்  முயல்வதும் அறிவீனம்.  ஒன்றான மெய் தேவனாகிய பிதாவாகிய தேவனை நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு வெளிப்படுத்திக் தந்துள்ளார். அவரது வார்த்தைகளை நாம் பின்பற்றுவதே அறிவுடைமை. காரணம்,  "அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்." ( 1 கொரிந்தியர் 1 : 31 )

எனவே, உலக ஞானத்தால் ஏதோ சாதனை படைத்துவிட்ட மனிதர்களை நம்பி அவர்கள் கூறுவதை ஏற்றுக்கொண்டு நமது வாழ்வைத் தொலைத்திடாமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தால் கிடைக்கும் மெய்யான ஞானத்தை அடைந்திட முயற்சியெடுப்போம். அப்போஸ்தலரான பவுல் தனது சீடனான தீமோத்தேயுவுக்கு கூறிய பின்வரும் வார்த்தைகள் நமக்கும் சேர்த்துத்தான். "ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு" ( 1 தீமோத்தேயு 6 : 20 ) ஞானமென்று பொய்யாய் பேர்பெற்றிருக்கின்ற ஞானத்தையும் கொள்கைகளையும் விட்டு விலகுவோம்; தேவ ஞானத்தைப் பெற்றிட முயல்வோம். 

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1609                                                                      ஆதவன் 04.07.2025 வெள்ளி    

"தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது." ( 1 கொரிந்தியர் 4 : 20 )

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துத் தனது சீடர்களுக்குக் கற்றுக்  கொடுத்த  ஜெபத்தில், "உம்முடைய ராஜ்ஜியம் வருக" என்று ஜெபிக்கக் கூறினார்.  இந்த தேவனுடைய ராஜ்ஜியம் வேறு    எங்கும் அல்ல, அது நமக்குள்தான் இருக்கின்றது என்றும் சீடர்களிடம் அவர் கூறினார்.  "இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே." ( லுூக்கா 17 : 21 ) என்று இயேசு கூறுவதை நாம் வாசிக்கின்றோம். 

இயேசு கூறும் நமக்குள் இருக்கும் இந்தத் தேவனுடை ராஜ்ஜியம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது என்கின்றார் அப்போஸ்தலரான பவுல்.  அதாவது, வெறுமனே தேவனுடைய ராஜ்ஜியம்  பற்றி பேசுவதிலல்ல, மாறாக அதன் வலிமை நம்மாலும் மற்றவர்களாலும் உணரப்படும் வலிமையுள்ளதாக இருக்கும்போதுதான் அது பயனுள்ளதாக இருக்கும் என்று பொருள். 

இந்த தேவனுடைய ராஜ்யத்தின் பெலன், தேவனுடைய பரிசுத்த ஆவியினால் நமக்குக் கிடைக்கின்றது. எனவேதான்  இன்றைய தியான வசனம் கூறுகின்றது, தேவனுடைய ராஜ்ஜியம் வெறும் பேச்சிலல்ல மாறாக பரிசுத்தஆவியானவர் தரும் பலத்தால் உண்டாகின்றது என்று. எனவே, தேவனுடைய ஆவியானவர் நமக்குள் வரும்போது நமக்குள் உலகம் கொடுக்க முடியாத மகிழ்ச்சி உண்டாகின்றது. 

ஆம், தேவனுடைய ராஜ்ஜியம் வெறுமனே உண்பது, நல்ல உடைகளை அணிவது, உலக செல்வங்களை அனுபவிப்பதிலல்ல, மாறாக பரிசுத்த ஆவியானவர் நமக்குள் அளிக்கும் மகிழ்ச்சியில் இருக்கின்றது. "தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது." ( ரோமர் 14 : 17 ) என்று கூறப்பட்டுள்ளது.

இன்றைய தியான வசனம், தேவனுடையராஜ்யம் வெறுமனே ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவதிலல்ல, மாறாக பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வந்து செயல்படுவதில்தான் உள்ளது என்பதையே எடுத்துக் கூறுகின்றது. இத்தகைய  ராஜ்ஜியம் வருவதாக என்றுதான் இயேசு தனது சீடர்களுக்கு ஜெபிக்கக்  கற்றுக்கொடுத்தார்.  ஏனெனில், ஆவியானவர் நமக்குள் வந்து செயல்படும்போது ஆவிக்குரிய வலிமை விளங்கும். 

இந்த ஆவியானவரின் வலிமையை நாம் பெற்றுக்கொள்ளும்போதே நாம் வெற்றியுள்ள ஆவிக்குரிய வாழ்வை வாழ முடியும். இந்தப் பெலன் நமக்குள் வரும்போதுதான்  நாம் பாவங்களை மேற்கொள்ளும் வலிமைபெற்றவர்களாகவும் கிறிஸ்துவுக்குச் சாட்சிபகரும் வாழ்க்கை வாழ்பவர்களாகவும் மாறமுடியும். எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 8 ) என்று. 

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1610                                                                      ஆதவன் 05.07.2025 சனி 

"உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்." ( மத்தேயு 6 : 21 )

மனிதர்களது இருதயம்தான் தேவன் வாழும் மெய்யான இல்லமாக உள்ளது. ஆனால் பொதுவாக பலரும் இந்தச் சத்தியத்தை மறந்தவர்களாக ஆலயங்களுக்குச் சென்று கடவுளை வழிபட்டால் தங்களது அனைத்துத் தேவைகளும் சந்திக்கப்படும் என நம்பிகொண்டிருக்கின்றனர்; அவ்வாறே ஆலயங்களைத் தேடி ஓடி ஜெபிக்கின்றனர். 

நமது இதயமானது உலகப்  பொருளாசை ஒன்றை மட்டுமே விரும்பி வாழுமானால் நமது இறை வேண்டுதல்களும் உலகப்பொருட்களை மையப்படுத்தியே இருக்கும். இதனையே இன்றைய தியான வசனத்தில் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்." என்று கூறினார். 

நாம் தேவனை உண்மையாக அன்பு செய்வோமானால் அவரை மட்டுமே விரும்புவோம். அவர் நம்மோடு இருக்கவேண்டும், நம்மை வழிநடத்தவேண்டும், நம்மைவிட்டு அவர் விலகாமல் இருக்கவேண்டுமானால் நாம் எத்தகைய வாழ்வு வாழவேண்டும் போன்ற எண்ணங்கள் நமக்குள் இருக்கும். அவரது பிரசன்னம் நம்மைவிட்டு விலகும்போது நமக்கு வேதனையாக இருக்கும். நம்மை அறியாமல் அவருக்கு எதிராக ஏதாவது பாவம் செய்துவிட்டோமோ என நம்மை நாமே ஆராய்ந்து பார்க்கின்றவர்களா இருப்போம்.

ஆனால் வெறும் உலக பொருளுக்காகவும், உலக ஆசீர்வாதங்களுக்காகவும் தேவனைத் தேடுபவர்களுக்கு இத்தகைய எண்ணங்கள் ஏற்படாது.  "ஆண்டவரே, எனக்கு நீர் இந்தக் காரியத்தை வெற்றியடையச் செய்வீரானால் நான் உமக்கு எனது ஒருமாத சம்பளப்  பணத்தைக் காணிக்கையாகத் தருவேன்" என்பதுபோன்று கடவுளிடம் பேரம்பேசி பொருத்தனை செய்யும் அற்பமான எண்ணம்தான் அத்தகைய மனிதர்களுக்கு இருக்கும். 

இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறுவதுபோல பணத்தையே தனது பொக்கிஷமாகக் கருதுபவன் பணத்தின் அடிப்படையிலேயே அனைத்தையும் பார்ப்பவனாக இருப்பான். இத்தகைய மனிதர்கள் தேவனை வாழ்வில் அறிய முடியாது. எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது". ( லுூக்கா 16 : 13 )

ஆனால் இயேசு கிறிஸ்து தெளிவாகக் கூறிய சத்தியத்தை பண ஆசைகொண்ட பரிசேயர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவேதான், "இவைகளையெல்லாம் பொருளாசைக்காரராகிய பரிசேயரும் கேட்டு, அவரைப் பரியாசம் பண்ணினார்கள்." ( லுூக்கா 16 : 14 )

இதனை வாசிக்கும் அன்பான சகோதரனே, சகோதரியே, உங்களது பொக்கிஷம் எங்கே இருக்கின்றது என்பதனை ஆராய்ந்து பார்த்து கிறிஸ்துவுக்கு உகந்த இருதயமாக அதனை மாற்றவேண்டியது  அவசியம் என்று ஆவியானவர் கட்டளையிடுகின்றார்.  பணத்துக்காகவும் உலக ஆசீர்வாதங்களுக்காகவும் தேவனைத் தேடுகின்கிறீர்களா அல்லது தேவனுக்காக, தேவன்மேலுள்ள அன்பினால் அவரை மேலும் அறிந்து அவரோடு ஐக்கியமாக வாழவேண்டுமென்று தேடுகிறேர்களா? பொருளாசைக்காரராகிய பரிசேயர்  அவரைப் பரியாசம் பண்ணினதுபோல பரியாசம்பண்ணாமல் ஆவியானவரின் குரலுக்குச் செவிகொடுக்க தேவன் உங்களை அழைக்கின்றார்.  

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1611                                                                      ஆதவன் 06.07.2025 ஞாயிறு 

"விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாள் சுற்றிவரப்பட்டு விழுந்தன." ( எபிரெயர் 11 : 30 )

பிரச்சனைகள்  இல்லாத வாழ்க்கை இல்லை. தடைகளும் தடைக்கற்களும் எல்லோரது வாழ்விலும் ஏற்படுவதுண்டு. ஆனால், மற்றவர்கள் அவற்றைக் கையாள்வதற்கும் ஆவிக்குரிய மக்களாகிய நாம் கையாள்வதற்கும் வித்தியாசம் இருக்கவேண்டியது அவசியம். அதனையே இன்றைய தியான வசனம் நமக்கு உணர்த்துகின்றது.

இஸ்ரவேலர்கள் கானானுக்குள் நுழையும்போது அவர்களுக்கு முதலில் ஏற்பட்டத் தடை எரிகோவின் பெரிய மதில் சுவர்தான். தேவன் கானானை இஸ்ரவேலருக்கு வாக்களித்திருந்தாலும் அதனை அடைந்திட அவர்கள் பல்வேறு தடைகளையும், நீண்ட காலத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அதுவே  தேவனுடைய சித்தமாகவும்  இருந்தது.  இஸ்ரவேலரின் இந்த எரிகோ அனுபவம் இன்று நமக்கும் ஒரு ஆவிக்குரிய படிப்பினையாக உள்ளது. 

தொல்பொருள் அகழ்வாராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி  எரிகோ நகரின் சுவரின் பரிமாணங்கள் சுமார் 12 முதல் 17 அடி  உயரமும், 6 அடி  அகலமும் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தனைப் பெரிய மதிலைத் தாண்டுவதோ உடைத்துக்கொண்டு உள்ளே செல்வதோ  அன்றைய இஸ்ரவேலருக்குச் சாத்தியமற்றதே. அதற்கான சக்தியும் உபகரணங்களும் அவர்களிடம் இல்லை. ஆனால் தேவன் மட்டுமே அவர்களுக்குத் துணையாக இருந்தார்.  ஆம் அன்பானவர்களே, தேவனை நாம் துணையாகக் கொள்ளும்போது சாத்தியமற்றதும்  சாத்தியமாகும் என்பதனை எரிகோவின் வீழ்ச்சி நமக்கு உணர்த்துகின்றது. 

மேலும் இந்த மதில் சுவரின்  தடையானது இஸ்ரவேலர் தேவன்மேல் விசுவாசம்கொள்வதற்கு ஒரு காரணமாகவும் இருந்தது. அதாவது தேவன் நமது வாழ்வில் எந்தத் தடையையும் காரணமில்லாமல் ஏற்படுத்துவதில்லை.  அவரையேச் சார்ந்து பொறுமையுடன் இருந்தால் தடைகளை மேற்கொள்ளலாம் என்பதனையும் தேவன் இதன்மூலம் நமக்கு உணர்த்துகின்றார்.

இன்னொரு முக்கிய  உண்மை, தேவனது உதவியில்லாமல் நமது சுய பலத்தால் நாம் எதனையும் சாதித்துவிட முடியாது. நமது முயற்சி, விசுவாசம், தேவனது வல்லமை இவை சேரும்போது மிகப்பெரிய சாதனையை நாம் நிகழ்த்திட முடியும். ஆம், தேவனது சித்தமும் உதவியுமில்லாமல் நம்மால் மனித முயற்சியால் வாழ்வின் தடைகளை மேற்கொள்ள முடியாது. 

இறுதியாக, தேவனது அற்புதத்தைப் பெறவேண்டுமானால் அவரது வார்தையை  நாம் சந்தேகிக்காமல் அதற்குக் கீழ்படியவேண்டும் என்பதனை நாம் உணரவேண்டும். ஏழுநாட்கள் வெறுமனே எரிகோவின் மதிலைச் சுற்றிவந்தபோது மக்களுக்கு அது தேவையற்ற அர்த்தமற்ற செயலாகத் தெரிந்திருக்கலாம்.  இத்தனைப் பெரியமதில்ச் சுவர் வெறுமனே சுற்றி நடப்பதால் எப்படி இடிந்து விழும்? என எண்ணியிருக்கலாம்.   ஆனால் அதுதான் யோசுவா மூலம் தேவன் கொடுத்தக்  கட்டளை. ஆம் அன்பானவர்களே, தேவ கட்டளைக்கு நாம் சந்தேகிக்காமல் கீழ்ப்படியும்போது தேவன் நமக்காகச் செயல்புரிவார்.  

ஏழாம்நாளில் "எக்காளங்களை ஊதுகையில், ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்து விழுந்தது; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப் பிடித்து...." ( யோசுவா 6 : 20 ) என வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, இன்றைய தியான வசனம் உணர்த்தும் உண்மைகள்:- நமது வாழ்வில் வரும் பிரச்சனைகள், தடைகள் எவ்வளவு பெரியவை என அவற்றைக்கண்டு நாம் கலங்கிட வேண்டாம்;  நமது வாழ்வில் தடைகள் தேவ சித்தமில்லாமல் வருவதில்லை; அவற்றை தேவனது துணையை நாடி நாம்  எதிர்கொள்ளவேண்டும். தேவையற்ற அவிசுவாச எண்ணங்களைத் தகர்த்து தேவ வார்த்தைகளை நம்பி பொறுமையாகச்  செயல்படவேண்டும். பிரச்சனைகளின் மத்தியிலும் தேவனை எப்போதும் துதித்து மகிழவேண்டும்.

ஆம் அன்பானவர்களே, நமது வாழ்வின் பல்வேறு கட்டங்களில் மதில் சுவராக எழுந்து வரும் எரிகோவை வென்றெடுக்கும் முறை இதுதான்.  விசுவாசமுடன் தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவரையேச் சார்ந்துகொள்வோம்.      

6.  "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1612                                                                      ஆதவன் 07.07.2025 திங்கள்  

"அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய, கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்." ( எபிரெயர் 4 : 13 )

ஒருவரிடம் நாம் சில பொறுப்புக்களை ஒப்படைத்திருப்போமானால் அவரிடம் நாம் அதுகுறித்து விளக்கம் கேட்கும்போது நமக்கு அவர் விளக்கமளிக்கவேண்டியது அவசியம். நாமும் அதுபோலவே  நம்மிடம் ஒப்படைக்கபட்டப் பொறுப்புகளுக்கு நம்மிடம் பொறுப்பு ஒப்படைத்தவருக்குக்  கணக்குக் கொடுக்கவேண்டும்.  

ஒரு பெரிய நிறுவனம் அதற்கு வரும் வரவுகளையும் செலவுகளையும் குறித்து அரசாங்கத்துக்குக் கனக்குக் கொடுக்கவேண்டும்.  பணம் பெற்றுக்கொண்டு சமூக சேவை செய்யும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்துக்குப் பணம் கொடுக்கும் நன்கொடையாளருக்குக்  (donor) கனக்குக் கொடுக்கவேண்டும்.

இதுபோலவே இந்த உலக வாழ்க்கையை நமக்குக் கொடுத்துள்ள தேவனுக்கு நாம் கனக்குக் கொடுக்கவேண்டும்.  இந்த உலக வாழ்க்கை தேவன் நமக்குக் கொடுத்துள்ள ஒரு வரம் என்று சொல்லலாம். இந்த வாழ்க்கையை அவருக்கேற்றபடி, அவர் சித்தப்படி வாழ்ந்து முடிப்பதே நமது பணி. எனவே, அவர் நமது வாழ்க்கையைக் குறித்துக்  கனக்குக் கேட்கும்நாளில் அவருக்கு நாம் நம்மைக்குறித்த கணக்கை ஒப்புவிக்கவேண்டும்.  

பொதுவாக பணம் பெற்றுக்கொண்டு வேலைசெய்யும் நிறுவனங்கள் பெற்றுக்கொண்ட பணத்துக்கு உண்மையாக இருப்பதில்லை. எனவே, பட்டயத்தணிக்கையாளர்கள் (Chartered Accountant) மூலம் கணக்குகளை ஆய்வுசெய்து அந்த அறிக்கையைத் தங்களுக்கு அனுப்பவேண்டுமென்று பணம் கொடுத்தவர்கள் விதி நியமித்துள்ளார். பல நிறுவனங்கள் தணிக்கையாளர்களுக்கு கையூட்டுக்கொடுத்து தங்களுக்குச் சாதகமான நிதிநிலை அறிக்கையினைப்பெற்று சம்பந்தப்பட்டத் துறைகளுக்கு அனுப்புகின்றனர். 

ஆனால் அன்பானவர்களே, இந்த உலக நடைமுறைப்படி நாம் நமது வாழ்கையினைக்குறித்து தேவனை ஏமாற்றிட முடியாது. இதனையே இன்றைய தியான வசனம், "அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய, கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது" என்று கூறுகின்றது. நாம் பிறந்ததுமுதல் மரிப்பது வரையிலான நமது வாழ்வின் மொத்த காரியங்களும் அவருக்குமுன் தெளிந்த கண்ணாடிபோல இருக்கின்றது. அவரை நாம் ஏமாற்றிட முடியாது. 

இந்த உலகத்தில் பலரும் தங்கள் செய்த தவறுகளையும் ஏமாற்றுக்களையும் பாவகாரியங்களையும் பணம்கொடுத்து நிவர்த்திசெய்கின்றனர்.  நீதிமன்றங்களும் நீதிபதிகளும் பலவேளைகளில் பணத்துக்கும்  அதிகாரத்துக்கும் அடிமையாகின்றனர். எனவே குற்றவாளிகள் பலர் எளிதில் தப்பித்துக்கொள்கின்றனர். ஆனால் தேவனது நியாயத்தீர்ப்புக்குமுன் வெள்ளியும் பொன்னும் அதிகாரமும் நம்மை அவரது தண்டனைக்குத் தப்புவிக்கமுடியாது.  

"கர்த்தருடைய சினத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களை விடுவிக்கமாட்டாது; அவர்கள் அதினால் தங்கள் ஆத்துமாக்களைத் திருப்தியாக்குவதும் இல்லை, தங்கள் வயிறுகளை நிரப்புவதும் இல்லை; அவர்கள் அக்கிரமமே அவர்களுக்கு இடறலாயிருந்தது." ( எசேக்கியேல் 7 : 19 ) என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

திருடர்கள் திருடவரும்போது அவர்களைக் கண்காணிக்கும் CCTV மேகராக்களைவிட சக்திவாய்ந்தவை தேவனுடைய கண்கள். அவை நமது ஒவ்வொரு செயலையும் பதிவு செய்கின்றன. கேமரா பதிவுகளை குற்றவாளிகளும் குற்றத்துக்குத் துணை நிற்பவர்களும் அழித்து ஒழிப்பதுபோல தேவனது கண்களை நாம் மறுக்கமுடியாது எனும் சத்தியத்தை உணர்த்தவர்களாய் அவருக்கு அஞ்சிய வாழ்க்கை வாழ்வோம். 

"மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 20 : 12 )

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1613                                                                      ஆதவன் 08.07.2025 செவ்வாய்   

"தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரைமுளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுவதற்கு ஏற்றதாகவும் இருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதன் முடிவு." ( எபிரெயர் 6 : 7,8 )

மனிதர்களது இருதயத்தை இன்றைய தியான வசனம் நிலத்துக்கு ஒப்பிடுகின்றது. நிலத்தின்மேல் மழைபெய்து நிலத்தைப் பயிர்ச்செய்வதற்கு ஏற்றதாக்குகின்றது. அதுபோலவே, மனிதர்களது இருதயமானது தேவ வார்த்தைகளை தனக்குள்வாங்கி விளைச்சலைக் கொடுக்க தகுதியுள்ளதாக மாற்றவேண்டியது அவசியமாய் இருக்கின்றது.

ஆனால்,  இந்த உலகத்தில் எல்லா நிலங்களும் பயிரை முளைப்பிப்பதில்லை. மாறாக, சில நிலங்கள் பயனற்ற தரிசுநிலமாகவும் சில முட்களையும் தேவையற்ற காட்டுச் செடிகளை முளைப்பிக்கும் நிலமாகவும் இருக்கின்றன. இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரைமுளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுவதற்கு ஏற்றதாகவும் இருக்கிறது" என்று.

அதாவது, தேவ வார்த்தைகள் நம்மில் இறங்கி அது பலன்தருவதாக இருக்கவேண்டியது அவசியம். அப்படியானால்தான் அது தேவ ஆசீர்வாதத்தினைக் கொண்டுவரும். ஓடி ஓடி பல பிராங்கிமார்கள் பேசுவதையும் நோட்டில் குறிப்புகளான எழுதி எடுப்பதில் அர்த்தமில்லை. நோட்டுப்புத்தகத்தில் எழுதப்படும் குறிப்புக்கள் நமது உள்ளத்தில் எழுதப்பட்டு நமது வாழ்க்கையாக மாறவேண்டியது அவசியம். காரணம், தேவனது வார்த்தைகள் மெய்யாகவே நமக்குள் இறங்குமேயானால் அது அதற்கேற்ற பலனைத் தராமல் போகாது.

"மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும் புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்." ( ஏசாயா 55 : 10, 11 ) என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

நாம் மேம்போக்காக தேவ வார்த்தைகளைக் கேட்பதல்ல முக்கியம், அந்த வார்த்தைகள் நமது இருதயத்தை மாற்றவல்லவைகளாக இருக்க நாம் இடம்கொடுக்கவேண்டும். பல்வேறு பிரசங்கங்களைக் கேட்டும் நாம் தொடர்ந்து மனம்திரும்பாத வாழ்க்கை வாழ்வோமானால் நமது இருதயம் முள் செடிகளை முளைப்பிக்கும் தகாத நிலமாக இருக்கின்றது என்று பொருள். அத்தகைய வாழ்க்கை ஆசீர்வாதத்தைக் கொண்டு வராது. இதனையே இன்றைய தியான வசனம், "முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுவதற்கு ஏற்றதாகவும் இருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதன் முடிவு" என்று கூறுகின்றது. 

இன்றைய தியான வசனத்தில், "தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரைமுளைப்பிக்கும் நிலமானது" என்று வாசிக்கின்றோம். இருதயத்தில் பயிரிடுபவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான். விதை விதைக்கின்றவன் உவமையை அவர் கூறும்போது வசனமாகிய விதையினையே குறிப்பிட்டார் (மாற்கு 4: 3-8). சில விதைகள் வழியருகிலும், சில பாறை நிலத்திலும், சில முட்களின் நடுவிலும் விழுந்து பயனற்றதாகிவிட்டன. நல்ல நிலத்தில் விழுந்தவைகள்தான் ஏற்ற பலனைத் தந்தன. அதுபோலவே, நாம் அவருக்கேற்ற விளைச்சலைக் கொடுக்க வேண்டியது அவசியம். 

எனவே அன்பானவர்களே நாம் பல்வேறு ஆவிக்குரிய கூட்டங்களில் கலந்துகொண்டு,  "இந்த ஊழியர் நன்றாக பேசினார், அந்தப்பிரசங்கி நன்றாக பிரசங்கம் செய்தார்" என்று கூறிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. நாம் கேட்ட தேவ வார்த்தைகள் நமது இருதயத்தில் இறங்கி முப்பது, அறுபது, நூறாகப் பயன்தரவேண்டியது அவசியம். அந்த மனநிலையுடன் தேவ வார்தைகளைக் கேட்டு வாழ்வாக்கும்போது  இன்றைய தியான வசனம் கூறுவதன்படி கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார். 

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1614                                                                      ஆதவன் 09.07.2025 புதன்    

"அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்." ( 1 யோவான்  3 : 24 )

மற்றவர்கள் தேவனை வழிபடுவதற்கும் ஆவிக்குரிய வாழ்வு வாழும் ஒருவர் தேவனை வழிபடுவதற்கும் வித்தியாசம் உண்டு. மற்றவர்கள் தங்களது பாரம்பரியத்தில் தங்களது முன்னோர்கள் காட்டியுள்ள முறைமைகளின்படி வழிபடுகின்றனர். ஆனால் தேவனை ஆவிக்குரிய முறையில் வழிபடுபவர்கள் அவர் தங்களுக்குள் இருப்பதை உறுதியாக உணர்ந்து வழிபடுகின்றனர். 

இதனை நாம் இயேசு கிறிஸ்துவுக்கும் சமாரிய பெண்ணுக்குமிடையே  நடைபெற்ற உரையாடல்மூலம் தெளிவாக உணர்ந்துகொள்ளலாம். அந்தப் பெண் இயேசு கிறிஸ்துவிடம், "எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள்". ( யோவான் 4 : 20) அதாவது அவளது முன்னோர்கள் சொல்லிக்கொடுத்த முறை அதுதான். அந்த முறையில் அவள் தேவனை வழிபட்டுவந்தாள். 

"அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது. நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்." ( யோவான் 4 : 21 - 24 )

தேவனை ஆவியோடும் உண்மையோடும்  தொழுதுகொள்ள வேண்டும் என்று இயேசு கூறுகின்றார். தேவன் நமக்குள் இருப்பதை நாம் உணர்ந்துகொண்டால் மட்டுமே அவரை நாம் ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள  முடியும். "அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்." என்று இன்றைய தியான வசனம் சொல்கின்றது. நாம் பரிசுத்த ஆவியானவரை வாழ்வில் பெற்றுக்கொள்ளும்போது என்ன நடக்கின்றது என்பதனை இயேசு கிறிஸ்து, "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." ( யோவான் 16 : 13 ) என்று கூறியுள்ளார்.  

ஆம் அன்பானவர்களே, இதுதான் ஆவியானவர் நமக்குள் இருக்கின்றார் என்பதற்கு அடையாளம். வெறுமனே சில சடங்குகளைக் கைக்கொண்டு பரிசுத்த ஆவியானவரை நாம் பெற்றுக்கொண்டுள்ளோம் என எண்ணிக்கொண்டு வாழ்வோமானால் உண்மையை அறியாதவர்களாகவே  இருப்போம். கிறிஸ்தவம் வெறும் கற்பனை போதனைகளைக் கொண்ட மார்க்கமல்ல, மாறாக அது அனுபவ மார்க்கம்; உயிருள்ள தேவனைக் கொண்டுள்ள மார்க்கம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் சொல்லப்பட்ட, சீடர்கள் அனுபவித்த,  அனுபவங்கள் இன்றும் உண்மையாக நடப்பதை நாமும் அனுபவிக்கவேண்டும். 

"உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்." ( யோவான் 14 : 17 ) என்றார் இயேசு கிறிஸ்து. ஆம் அன்பானவர்களே, ஆவியானவர் நமக்குள் இருப்பதை நாம் தெளிவாக அறிய முடியும். வேத    வசனங்கள் வெறுமனே வாசிப்பதற்கல்ல,  வாழ்வாக்குவதற்கு.

பரிசுத்த ஆவியானவரை வேண்டுமென்று "கேளுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்." என்றார் இயேசு கிறிஸ்து. ஆவியானவரை கேட்கச்சொல்லி இயேசு சொல்லிக்கொடுத்த இந்த வார்த்தைகளை உலகப்பொருட்களை கேட்கும்படி மக்களை பயிற்சிவித்துள்ள ஊழியர்கள் தெளிவடையவேண்டும். வேதாகமத்தில் நமக்கு வேண்டிய வார்த்தைகளை மட்டும் துண்டாக பொறுக்கியெடுத்து அர்த்தம் கொள்ளாமல் முழுமையாக வேத வசனங்களை வாசிக்கப் பழகுவோம். இந்த வசனங்களை இயேசு எப்படிச் சொல்லி முடிக்கின்றார் பாருங்கள் ;- "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்." ( லுூக்கா 11 : 13 )

இன்றைய தியான வசனம் கூறுவதன்படி அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளும்போது நாம்  அவரில் நிலைத்திருக்கின்றோம் என்று பொருள்.  இதுவே உண்மையான கிறிஸ்தவ  அனுபவம். இதுவரை இந்த அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளவில்லையானால் இதனை பெற்றுக்கொள்ள முயற்சியெடுப்போம். "கேளுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்." என்கிறார் இயேசு கிறிஸ்து.

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1615                                                                      ஆதவன் 10.07.2025 வியாழன்     

"மனுஷன்மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( எரேமியா 17 : 5 )

கர்த்தரைத் தேடாமல்  தனது சுய பலத்திலும் தனக்கு உதவிசெய்யும் அதிகாரபலம் கொண்ட மனிதர்கள் இருப்பதால் அவர்கள் மேலும் நம்பிக்கைக்கொண்டு காட்டுக்கழுதை போன்ற வாழ்வு வாழும் மனிதர்கள் பலர் இந்த உலகத்தில் இருக்கின்றனர். இவர்கள் தங்களது உடல்பலம், பணபலம், ஆள்பலம்  இவற்றைக்கொண்டு எந்த அநியாயத்தையும் செய்யத் தயங்குவதில்லை. இப்படி வாழும் மனிதன் சபிக்கப்பட்டவன் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.  

இது ஏனென்றால் இத்தகைய மனிதன் தனது நலனுக்காக எந்தத் துணிகர பாவ காரியத்தையும் செய்திடத் தயங்கமாட்டான்.  இன்று உலகினில் நாம் காணும் துன்மார்க்கச் செயல்கள் பலவும் இப்படிக் கர்த்தரைத் தேடாமல் வாழும் மனிதர்களால்தான் நடைபெறுகின்றன. துன்மார்க்கர்களுக்குத் துணையாக அரசியல்வாதிகளும், பணபலம் படைத்தவர்களும் பலவேளைகளில் இருக்கின்றனர். அவர்களது பலத்தால் துன்மார்க்கர்கள் துணிகரமாகத் தங்களது செயலைச் செய்து முடிக்கின்றனர். 

எனவேதான் இப்படிக் கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார். மனிதர்கள் பலவேளைகளில் இப்படித் துன்மார்க்கச் செயல்களில் ஈடுபடக் காரணம் எளிதில் பணம் சம்பாதித்துப் பணக்காரராகவேண்டும் எனும் எண்ணத்தில்தான். ஆனால் இத்தகைய மனிதர்கள் தங்களது ஆத்துமாக்களை அக்கினி நரகத்துக்கு இரையாக்குகின்றனர். 

அன்பானவர்களே, நாம் குறுகிய எண்ணமுடன் எளிதில் சாதிக்கவேண்டும் எனும் எண்ணம் கொள்ளும்போது பல்வேறு தேவனுக்கு ஏற்பில்லாத செயல்களில் நம்மை அறியாமல் ஈடுபட்டுவிடுகின்றோம். 

ஆனால் நாம் சங்கீத நூலில்,  "யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்." ( சங்கீதம் 146 : 5 ) என்று வாசிக்கின்றோம். "கர்த்தர்மேல் நம்பிக்கைகொண்டிருப்பவன் செல்வந்தனாவான்"  என்று இந்த வசனம் கூறவில்லை. மாறாக, "அவன் பாக்கியவானாக இருப்பான்" என்று கூறுகின்றது. நாம் கர்த்தர்முன் பாக்யவான்களாக வாழ்வே அழைக்கப்பட்டுள்ளோம். 

இப்படித் தேவனுக்குமுன் நாம் பாக்கியவான்களாக வாழவேண்டுமானால் அவரது வேதம் நமது இருதயத்தில் ஊடுருவிச் செயல்படவேண்டும். "கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்." ( சங்கீதம் 1 : 2-3 ) என்று வேதம் கூறுகின்றது. 

நீரோடையின் அருகில் வாழும் செழிப்பான மரம்போன்ற வாழ்வு வாழ  மனிதர்களோடு அல்ல, மாறாக நமது நம்பிக்கை வேர்கள் தேவனோடு இணைக்கப்படவேண்டியது அவசியம்.  இதற்குப் பெரிய ஆராய்ச்சித் தேவையில்லை. நமது வாழ்வில் நமது ஊர்களில் நமக்குத் தெரிந்த துன்மார்க்க வாழ்வு வாழ்ந்த மனிதர்களை எண்ணிப்பார்த்தாலே போதும்.  அவர்களது முடிவினையும் நாம் கண்டிருப்போம்.  வேத வசனம் ஒருபோதும் பொய்ச்சொல்வதில்லை. 

மனுஷன்மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் நமது புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகிடாமல் தேவனையேத் துணையாகக் கொண்டு தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து  பாக்கியவான்களாக வாழ்வோம்.  அப்போது, நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்போம்; நாம்  செய்வதெல்லாம் வாய்க்கும். 

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1616                                                                      ஆதவன் 11.07.2025 வெள்ளி      

"ப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்புநாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம்என்று சொல்லுங்கள்." ( லுூக்கா 17 : 10 )

இயேசு கிறிஸ்து இங்கு ஆவிக்குரிய வாழ்வில் தேவ ஊழியர்கள் கடைபிடிக்கவேண்டிய முக்கியமான குணத்தைப்பற்றிக் குறிப்பிடுகின்றர்இது ஊழியர்களுக்குக் கூறப்பட்ட அறிவுரையாக இருந்தாலும் நாம்  னைவருமே    வாழ்வில்    பின்பற்றவேண்டிய   ஒரு பண்புஅதாவது  தாங்கள் வாங்கும் சம்பளத்துக்கு வேலைசெய்துவிட்டுப் பலர்   அதனைப் பெரிதாக விளம்பரப்படுத்துவதுண்டுஆனால்  அப்படிச்  செய்வது     தேவனுக்கு ஏற்புடைய   செயலல்ல என்று  கிறிஸ்து  குறிப்பிடுகின்றார். உலக வேலையோ தேவனுடைய வேலையோ நாம் இப்படி நம்மை விளம்பரப்படுத்தத் தேவையில்லை. 

வேலைக்காரனது பணி தனது எஜமான் கட்டளையிட்டக் காரியங்களைச் செய்து முடிப்பதுதான். எந்த எஜமானும் தனது பணியாளனை வேலைக்காரனாகப் பார்ப்பானேத்தவிர  அவன் தனக்கு உதவுவதால் அவனைத் தனது நண்பனாகப் பார்க்கமாட்டான். அதனையே இயேசு கிறிஸ்து,  "உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தைமேய்த்து வரும்போது எஜமான் அவனை நோக்கி நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ?" (லூக்கா 17:7) என்று கூறுகின்றார்.  

மேலும் தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு உபகாரம் செய்வானோ? அப்படிச் செய்யமாட்டானே" (லூக்கா 17:9)  ஆம், வேலைக்காரனது  வேலை எஜமான் கட்டளையிட்டவைகளைச் செய்து முடிப்பது. அப்படிச் செய்து முடித்ததற்காக வேலைக்காரன் பெருமைபட்டுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. எனவே, "அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவற்றையும் செய்தபின்பு; நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்ய வேண்டிய கடமையை மாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள்" (லூக்கா 17:10)  என்கின்றார்.

அதாவது நாம் தேவனது ஊழியங்களுக்காகச் செய்யும் செயல்கள் குறித்து நாம் பெருமைப்படவேண்டியது ஒன்றுமேயில்லை. அது நமது கடமை.  இதில் நாம் கவனிக்கவேண்டியது ஒன்று உண்டுஅதாவது,  வேலைக்காரன் செய்த வேலைக்கு கைமாறாக எஜமான் அவனுக்கு நியமிக்கபட்டக் கூலியைக் கொடுப்பான். ஆனால்   நமது பரலோக எஜமான் தனது ஊழியர்களைக்  கூலிக்காரனாக அல்ல, மாறாக மதிப்புமிக்கவர்களாகக் கருதுகின்றார். 

எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "ஒருவன் எனக்கு ஊழியம்செய்தால் பிதாவானவர் அவனைக் கனம் பண்ணுவார்". எஜமானின் விருப்பம், சித்தம் இன்னது என்று அறிந்து ஊழியம் செய்யும்போது கனம் பண்ணுவார், தேவ சித்தம் அறியாமல் அதற்கு எதிராகச் செயல்படும்போது அவர் நம்மைக் கைவிட்டுவிடுவார்.  

இன்று எஜமான் கூலியைக் கொடுப்பான் எனும் நம்பிக்கை பல கிறிஸ்தவ ஊழியர்களிடமும் இல்லை; அவர்கள் எஜமான்  விரும்பும் சித்தப்படியான   வேலையும் பலர்  செய்வதில்லை.  எனவே , குறுக்கு வழியில் தங்களை நம்பி வரும் விசுவாசிகளிடம் பல்வேறு தந்திர உபாயங்களைப் பயன்படுத்தி தங்கள் பிழைப்பை நடத்த முயலுகின்றனர்.

அன்பானவர்களேஊழியம் செய்பவர்கள் மட்டுமல்லநாம் இன்று உலக வேலைகள் செய்தாலும் நாம் கடைபிடிக்கவேண்டிய  இந்த குணம் நமக்கு வேண்டும்செய்யக்கூடிய வேலையை நாம் வாங்கும் சம்பளத்துக்கு வஞ்சனை இல்லாமல் செய்யவேண்டும்.   எனவேதான்   அப்போஸ்தலரான பவுல்,  "எதைச் செய்தாலும்அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல்,கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்."( கொலோசெயர் 3 : 24 ) என்று கூறுகின்றார். 

இப்படி உண்மையாய் பணி செய்யும்போது நிச்சயமாக தேவனது பார்வையிலும் மனிதர்களது பார்வையிலும் நாம் மதிப்பு மிக்கவர்களாக விளங்குவோம்.  "வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக்காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள்." ( கொலோசெயர் 3 : 22 ) என்று வேதம் அறிவுறுத்துகின்றது. 

"வேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும், சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள்." ( 1 பேதுரு 2 : 18 )

ஆம் அன்பானவர்களே, இன்றைய தியான வசனம் கிறிஸ்த ஊழியர்களுக்குக் கூறப்பட்ட வசனமாக இருந்தாலும், உலக வேலைகளிலும் நாம் இதனைப் பின்பற்றும்போது உயர்வடைவது உறுதி. ஊழியத்தில், உலக காரியங்களிலும் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணியை உண்மையுடனும் உத்தம மனதுடனும் செய்வோம். 


"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1617                                                                      ஆதவன் 12.07.2025 சனி       

"மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை". ( பிரசங்கி 12:7)

தேவன் தந்த நமது மனித உடல் மண்ணினால் உருவானது. இந்த உலகத்தில் நாம் வாழ்வதற்குக் குறிக்கப்பட்டக் காலத்துக்குப்பின் இந்த மண்ணான உடல் தான் முன்பிருந்த மண்ணுக்கேத் திரும்புகின்றது. அதுபோலவே   இந்த உடலிலினுள் இருக்கும் ஆவியானது தேவன் நமக்குத் தந்தது. அது இந்த உலக வாழ்க்கைக்குப்பின் அவரிடமே திரும்பிச் செல்லும். அப்படிச் செல்வது மட்டுமல்ல, இந்த உலகத்தில் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப பிரதிபலனை அடையும். 

ஆனால் மனிதர்கள் பலரும் இதனை உணர்வதில்லை. இந்த உலக வாழ்வே நிரந்தரம் என்று எண்ணி வாழ்கின்றனர். ஆனால் நாம் இந்த உலகினில் வெறும் பரதேசிகள் என்று வேதம் கூறுகின்றது. பரதேசி என்பவன் சொந்த குடியிருப்பு இல்லாதவன். ஆம், இந்த உலகம் நமது சொந்த குடியிருப்பு அல்ல. எனவேதான் அப்போஸ்தலரான பேதுரு, "அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்." ( 1 பேதுரு 1 : 17 ) என்று அறிவுரை கூறுகின்றார். 

பலரும் வயதானபின்பு நாம் தேவனைத் தேடினால் போதும் என எண்ணுகின்றனர். ஜெபம், வேத வாசிப்பு, ஆராதனை இவைகளெல்லாம் வயதானபின்னர் செய்யவேண்டிய காரியங்கள் என எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் இன்றைய தியான வசனம், "மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை" என்று நமக்கு அறிவுறுத்துகின்றது. காரணம் நமது உலக வாழ்க்கை என்று முடியுமென்று நமக்குத் தெரியாது. எல்லோரும் முதிர் வயதுவரை உயிர்வாழப்போவதில்லை. எனவேதான், வாலிபப்பிராயத்திலே தேவனை நினை என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும், வாலிப வயது எளிதாகக் கடந்து சென்றுவிடும். நாம் விரும்பினாலும் இழந்துபோன இளமை நமக்குத் திரும்பக் கிடைக்காது. ஆம்,  "நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே."  ( பிரசங்கி 11:10) எனவே அன்பானவர்களே, நாம் மாயையை நம்பி நிஜத்தைத் தொலைத்துவிடக்கூடாது. 

இன்றைய நவீன உலகினில் வாலிபர்களைப் பாவத்தில் வீழ்த்தக்கூடிய பல்வேறு வலைகள் விரிக்கப்பட்டுள்ளன. வாலிப ஆண்களும் பெண்களும் தங்களை அறியாமல் நவீன கலாச்சாரத்தால் இழுக்கப்பட்டு வலைத்தளங்களுக்கு அடிமையாகி வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர். தேவனை நாம் வாழ்வில் பற்றிகொள்ளவில்லையானால் இந்தக் கவர்ச்சியான உலக காரியங்களிலிருந்து விடுபடமுடியாது. எனவே, பெற்றோர்களும் தங்கள் வாலிப பிள்ளைகளுக்காக ஜெபிக்கவேண்டியது அவசியம். 

மட்டுமல்ல, வாலிபர்கள் தங்கள் வழியினை தேவனுக்கேற்றபடி மாற்றிக்கொள்ளவேண்டுமானால் தேவனது வார்த்தைகள் வாலிப இருதயங்களில் சிறு வயதுமுதல் விதைக்கப்படவேண்டியது அவசியம். "வாலிபன் தன் வழியை எதனால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால் தானே." ( சங்கீதம் 119 : 9 ) என்று சங்கீத ஆசிரியர் கூறுவதன்படி தேவ வசனத்தின்படி வாலிபர்கள் தங்களைக் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். 

ஆம் அன்பான சகோதர சகோதரிகளே, வாலிபர்களே, பெற்றோர்களே,  "ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்." ( பிரசங்கி 12:14) எனவே வாலிப வயதுமுதல் வேத வெளிச்சத்தில் எச்சரிக்கையுடன் வாழ்க்கையைத் தொடர்வோம்.  

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1618                                                                      ஆதவன் 13.07.2025 ஞாயிறு        

"ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படிச்  செய்வார்." ( நீதிமொழிகள் 16 : 7 )

இந்த உலகத்தில் பலவேளைகளில் மனிதர்கள்  தங்களுக்கு  ஏதாவது காரியங்களில் எதிர்த்துச் செயல்படுபவர்களை தாங்களும் எதிர்த்துப் போராடுபவர்களாக இருக்கின்றார்கள். பல வேளைகளில் தங்கள்பக்கத்து நியாயத்தை உறுதிப்படுத்துவதில் நிலையாக நின்று தங்களை நியாயப்படுத்த முயல்கின்றனரேத் தவிர பெரும்பாலும் சமாதானம்செய்ய விரும்புவதில்லை. 

எனவே வழக்குகள் வாதுகள் ஏற்படும்போது தங்கள் பக்கத்துக்கு சார்பான மக்களைத் தேடி அவர்களது உதவியை நாடுவதிலும் நீதிமன்றங்களை நாடுவதிலும்தான் குறியாக இருக்கின்றனர்.  நீதிமன்றங்களில் பதிவாகும் வழக்குகள் இதனையே உணர்த்துகின்றன. கழிந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்திய நீதிமன்றங்களில் பதிவுசெய்யப்பட்ட மொத்த வழக்குகள் 1,74,10,342. இவற்றில்  சிவில் வழக்குகள் - 45,86,004, கிரிமினல் வழக்குகள் - 1,28,24,338. 

அப்படியானால் இந்த வழக்குகளுக்காக செலவழிக்கப்படும் பணம் எத்தனை ஆயிரம் கோடிகளாக இருக்குமென்று எண்ணிப்பாருங்கள். நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனது பிள்ளைகள் நீதிமன்றங்களுக்குச் செல்வதை விரும்புவதில்லை. அப்படிச் செல்லும்போது நமக்குப் பணச் செலவும் மன உளைச்சலும்தான் ஏற்படும். அப்படிச் செல்லும்போது "நீ கடைசிக்காசைக் கொடுத்துத் தீர்க்குமட்டும், அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்." ( லுூக்கா 12 : 59 ) இயேசு கிறிஸ்து. 

இன்று பல கிறிஸ்தவர்கள் எதிராளிகளின்மேல் நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்துவிட்டு அந்த வழக்கில் வெற்றிபெறவேண்டுமென்று ஜெபித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதாவது அவர்கள் தேவனை ஒருபுறமும் சுய பலத்தை மறுபுறமும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். 

அன்பானவர்களே, இன்றைய தியான வசனம், நாம் நமக்கு எதிராகச் செயல்படுபவர்களுக்கு எதிராக செயல்படுவதற்குப்பதில் நமது வழிகளை தேவனுக்கு நேராகத் திருப்பினாலே போதும் எதிரிகள் நமக்குமுன் சமாதானமாவார்கள் என்று கூறுகின்றது. அதனையே, "ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்." என்று கூறப்பட்டுள்ளது. 

இதற்கு வேதத்தில் பல உதாரணங்கள் உண்டு. யோசேப்பு ஒரு நல்ல உதாரணம். அவனது உடன்பிறந்த சகோதரர்கள் அனைவரும் அவனை எதிரியாகப் பார்த்தனர். அவனுக்கு எதிராக கொலைமுயற்சியில் ஈடுபட்டு இறுதியில் இஸ்மவேலரிடம் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுவிட்டனர். ஆனால் யோசேப்பு தேவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்ததால் "கர்த்தர் யோசேப்போடே இருந்தார்." (ஆதியாகமம் 39:2)  இறுதியில் அவனது சகோதர்கள் அவனிடம் வந்து மண்டியிட்டு வணங்கும்படி தேவன் செய்தார். 

இதுபோல, யாக்கோபும் ஏசாவும்  பகைகொண்டிருந்தனர். இறுதியில் ஏசா யாக்கோபோடு சமாதானம் ஆகும்படி தேவன் கிருபை செய்தார். கைதியாகி அடிமையாக பாபிலோனுக்குக் கொண்டுசெல்லப்பட்ட தானியேலை எதிரி நாட்டு தரியு அரசனுக்கு நண்பனாக தேவன் மாற்றினார். "ராஜ்யம் முழுவதையும் ஆளும்படிக்குத் தன் ராஜ்யத்தின்மேல் நூற்றிருபது தேசாதிபதிகளையும், ராஜாவுக்கு நஷ்டம் வராதபடிக்கு அந்த தேசாதிபதிகள் கணக்கு ஒப்புவிக்கிறதற்காக அவர்களுக்கு மேலாக மூன்று பிரதானிகளையும் ஏற்படுத்துவது தரியுவுக்கு நலமென்று கண்டது; இவர்களில் தானியேல் ஒருவனாயிருந்தான்." ( தானியேல் 6 : 1, 2 ) என்று கூறப்பட்டுள்ளது. 

ஆம் அன்பானவர்களே, நமது வழிகள் தேவனுக்கு ஏற்றவையாக இருக்குமானால் நமது எதிரிகள் நமக்குமுன் சமாதானமாவார்கள். எப்படி நடந்தது என்று நமக்குத் தெரியாது. ஆனால் தேவனே நமக்கு எதிராகச் செயல்படுபவர்களது உள்ளத்தில் மாறுதலைக் கொண்டுவருவார். இதற்கு  மாறாக நாம் நமது சுய பலத்தையும் பண பலத்தையும் கொண்டு எதிரிகளை எதிர்த்து நிற்போமானால் தேவன் ஒதுங்கிக்கொள்வார்; நாம் நமது பலத்தில்தான் முயலவேண்டியிருக்கும். 

இன்றைய தியானத்தை வாசிக்கும்போது சிலருக்கு நான் வெற்று வேதாந்தம் பேசுவதுபோலத் தோன்றலாம். ஆனால், நான் எனது சொந்த அனுபவமில்லாமல் எதனையும் எழுதுவதில்லை. வசனங்களுக்கு நாம் கீழ்ப்படியும்போதுதான் வேதத்தில்  கூறப்பட்டுள்ள காரியங்களை நாம் அனுபவத்தில் கண்டுணர முடியும். ஆம் அன்பானவர்களே, நமது வழிகளை தேவனுக்குப் பிரியமான வழிகளாக மாற்றுவோம். அப்போது நமது  சத்துருக்களும் நம்மோடு சமாதானமாகும்படி தேவன் செய்வதை நமது வாழ்வில் கண்டுணர முடியும். 

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1619                                                                      ஆதவன் 14.07.2025 திங்கள்         

"இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன். அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்." ( ஏசாயா 54 : 7, 8 )

நமது வாழ்க்கையில் சிலவேளைகளில் துன்பத்துக்குமேல் துன்பங்கள் தொடரும்போது, அல்லது நமது ஜெபங்களுக்குப் பதில் கிடைக்காதபோது நாம் மனம் சோர்ந்துபோவதுண்டு. தேவனோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் வெறுமனே ஜெபித்துக்கொண்டிருக்கும் சாதாரண விசுவாசிகளுக்கு இது பெரிதாகத் தெரியாது. காரணம், அவர்கள் தேவ உறவை வாழ்வில் தனிப்பட்ட விதத்தில் அனுபவித்து அறியாதவர்கள். ஆனால் ஆவிக்குரிய வாழ்வில் நாம் தேவனோடு தொடர்பில் வாழும்போது தேவனது இந்த "இமைப்பொழுது கைவிடல்" நம்மைச் சோர்வடையச் செய்துவிடும். 

இப்படிப்பட்ட வேளைகளில் பல்வேறு எதிர்மறையான எண்ணங்கள் நம்மைக் கவலைக்குள்ளாக்கும். நமது விசுவாசம்கூட தளர்ச்சியடையும். தேவன் நம்மைத் தள்ளிவிட்டாரோ? என எண்ணத்தோன்றும். ஆனால் அன்பானவர்களே, நாம் அப்படி சந்தேகப்படத் தேவையில்லை. காரணம்,  நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துக் கூறினார், "பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை." ( யோவான் 6 : 37 ) என்று. 

ஆம் அன்பானவர்களே, நாம் அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது  தேவன் நம்மை முற்றிலும் கைவிட்டு விடுவதில்லை. ஆனால் இன்றைய தியான வசனம் கூறுவதன்படி அவர் அற்பகாலம் மூண்ட கோபத்தினால் தனது  முகத்தை இமைப்பொழுது நமக்கு  மறைத்தாலும் நித்திய கிருபையுடன் நமக்கு இரங்குவார். 

இப்படி தேவன் இமைப்பொழுது நம்மைக் கைவிடுவதால் நாம் பல ஆவிக்குரிய காரியங்களை உணர்ந்து கற்றுக்கொள்ளமுடியும். முதலாவது, தேவனில்லாத வாழ்க்கை என்பது எத்தனை பரிதாபத்துக்குரிய கைவிடப்பட்ட வாழ்க்கை என்பதனை நாம் இதன்மூலம் அனுபவத்தில் தெளிவாகக் கண்டு உணர்ந்துகொள்ள முடியும். எனவே, நாம் அவரது உடனிருப்பு நமக்குத் தேவை என்பதனை உணர்ந்துகொள்கின்றோம். மேலும், அவர் இல்லாவிட்டால் நாம் ஒன்றுமில்லை என்பதனை இதனால் கண்டுகொள்கின்றோம்.

இரண்டாவது, இமைப்பொழுது அவர் நம்மைக் கைவிடும்போது  நமது ஜெபங்களை அவர் கேட்காததுபோன்ற அனுபவம் ஏற்படும். அது, பரத்திலிருந்து எந்த உதவியும் நமக்கு இல்லாததுபோன்ற உணர்வைத் தரும். நமக்குக் கிடைக்கும் அனைத்து உலக மற்றும் ஆவிக்குரிய காரியங்களும் பரலோகத்தின் அனுமதிபெற்றே கிடைக்கின்றது. "நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது" ( யாக்கோபு 1 : 17 ) என்று கூறப்பட்டுள்ள வசனம் உண்மை என்பதனை நாம் இந்த இமைப்பொழுது கைவிடப்படும் அனுபவத்தில் கண்டுகொள்கின்றோம். நமக்கு எதுவும் கிடைக்கவேண்டுமானால் நமது ஜெபங்களல்ல மாறாக, தேவனது கிருபை அவசியம் என்பதனைக்   கண்டுகொள்கின்றோம். 

மூன்றாவது, அவர் நம்மைக் கைவிட்டதுபோலத்  தெரிந்தாலும் நம்மை விட்டு அவர் எங்கும் சென்று விடுவதில்லை. ஒரு தாய் நடக்கப்பழகும் குழந்தைத் தட்டுத்தடுமாறி நடக்கும்போது கீழே விழுந்தாலும் உடனே சென்று தூக்கிடாமல் குழந்தை தானாக எழுந்து நடக்க அதற்கு நேரம் கொடுப்பாள்.  அதுபோலவே தேவனும் நமது சில வீழ்ச்சிகளை அனுமதிக்கின்றார். ஆனால் ஆபத்தான சூழ்நிலை ஏற்படும்போது விரைந்து வந்து நம்மைத் தூக்கிவிடுகின்றார்.  இந்த உண்மையினை அவர் இமைப்பொழுது நம்மைக் கைவிடும்போது நாம் கண்டுகொள்கின்றோம். தேவனது தனிப்பட்ட  அன்பை உணர்ந்து கொள்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, நாம் தேவனுக்குமுன் நேர்மையான வாழ்க்கை வாழும்போதும்  நமக்குச் சிலவேளைகளில் எதிர்மறையான காரியங்கள் நடைபெறுமானால் மனம் சோர்ந்துபோய்விட வேண்டாம். இது இமைப்பொழுது தேவன் நம்மைக் கைவிடுதல்.  இந்த இமைப்பொழுது தேவ கைவிடுதல் தாற்காலிகமானதுதான். விசுவாசத்துடன் நமது ஆவிக்குரிய வாழ்வைத் தொடர்வோம். "மகனே, மகளே கலங்காதே, நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய மீட்பர் சொல்லுகிறார்."

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1620                                                                      ஆதவன் 15.07.2025 செவ்வாய்          

"தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்." ( நீதிமொழிகள் 21 : 23 )

மனிதர்கள் செய்யும் பல்வேறு பாவங்களில் நாவினால் செய்யும் பாவங்களே அதிகம். மற்ற உறுப்புகளால் செய்யும் பாவங்களாக இருந்தாலும் பல வேளைகளில் அந்தப் பாவங்களுக்கு மூல காரணம் நாவாகவே இருக்கின்றது. மட்டுமல்ல, மற்ற பாவங்கள் ஒருவேளை காலப்போக்கில் மறையலாம்; ஆறிப்போகலாம் ஆனால் நாவினால் செய்யும் பாவங்கள் மனிதர்களை அழிப்பது மட்டுமல்ல, யாருக்கு எதிராக நாம் பேசுகின்றோமோ அவர்களது வாழ்க்கையையும் அது அழித்து ஒழிப்பதாக இருக்கின்றது. எனவே அந்தப்பாவங்கள் நமது ஆத்துமாவை நரகத்துக்கு நேராக இழுத்துச் செல்வனவாக இருக்கின்றன. 

"தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே  நாவினாற் சுட்ட வடு." என்று திருவள்ளுவரும் கூறுகின்றார். தீயினால் சுட்டதால் ஏற்பட்ட புண் சில நாட்களில்  ஆறிவிடும், ஆனால் நாவினால் நாம் ஒருவருக்கு எதிராகப் பேசும் சொற்கள் வடுவாக என்றும் நிலைத்திருக்கும்.  பல்வேறு கொலைகள், ஏமாற்றுக்கள், வஞ்சகங்கள் இவை நாவினால் வெளிவரும் வார்த்தைகளால் ஏற்படுகின்றன. காரணம், இவை இருதயத்திலிருந்து வெளிவருபவை. "வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்." ( மத்தேயு 15 : 18 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

மேலும் பலர் பல்வேறு உபவாசங்கள் ஒறுத்தல்கள் செய்து கடவுளைத் திருப்திப் படுத்தலாம் என்று எண்ணிக்கொண்டு சில உணவுவகைகளைத் தவிர்க்கின்றனர்.  நாவின் சுவைகளைக் கட்டுப்படுத்த முயன்று ஒருசில  உணவு வகைகளைத் தவிர்ப்பதை தேவன் மேலானதாகக் கருதுவதில்லை. மாறாக வாயைப் பாவமில்லாமல் காப்பாற்றுவதையே மேலானதாக எண்ணுகின்றார். எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் " ( மத்தேயு 15 : 11 )

அப்போஸ்தலரான யாக்கோபு, "அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது! நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!" ( யாக்கோபு 3 : 5 - 6 ) என்று கூறுகின்றார். 

ஆனால் இன்று ஆவிக்குரிய ஆராதனைகளில் கலந்துகொள்கின்றோம் என்று கூறிக்கொள்ளும் பலர்கூட தங்களது நாவினைக் கட்டுப்படுத்துவதில்லை. தேவனை அறியாத மனிதர்கள்கூடப் பேசாத  சாபத்துக்குரிய வார்த்தைகளைக்கூறி மற்றவர்களை பலவேளைகளில் சபிக்கின்றனர். இது இன்று நேற்றல்ல, அப்போஸ்தலரான யாக்கோபு காலத்திலும் இப்படியே இருந்திருக்கின்றது. எனவேதான் அவர் கூறுகின்றார், "நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது. அதனாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்." ( யாக்கோபு 3 : 8, 9 )

இருதயத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் நாவை நாம் கவனமுடன் கையாளவேண்டியது அவசியம். தேவையில்லாத வார்த்தைகளைப்  பேசுவதைத் தவிர்த்தாலே நாம் பல பாவங்களைத் தவிர்க்க முடியும்.  அதனையே தேவன் விரும்புகின்றார். ஆம் அன்பானவர்களே, "தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்" எனும் வார்த்தைகள் எப்போதும் நமக்கு நினைவில் இருக்கவேண்டியது அவசியம். பிறரைப்பற்றி நல்லதையே பேசுவோம். பிறரைக்குறித்த தீமையான காரியங்களை அறிந்திருந்தால் அவற்றை நமக்குள்ளே அடக்கிக்கொள்வோம். 

"கர்த்தாவே, பொய் உதடுகளுக்கும் கபடநாவுக்கும் என் ஆத்துமாவைத் தப்புவியும். கபடநாவே, உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்? பலவானுடைய கூர்மையான அம்புகளும், சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்." ( சங்கீதம் 120 : 2 - 4 )

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1621                                                                      ஆதவன் 16.07.2025 புதன்           

"தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்." ( சங்கீதம் 103 : 13, 14 )

தங்களது பிள்ளைகள் எத்தனை பெரியவர்கள் ஆனாலும் தாய் தகப்பன்மாரைப் பொறுத்தவரையில் அவர்களைக் குழந்தைகளாகவே பார்க்கின்றனர். காரணம், சிறு வயதில் அவர்கள் ஒன்றும் அறியாத பருவத்திலிருந்து அவர்களை வளர்ப்பதால் தங்கள் பிள்ளைகள் இன்னும் பல காரியங்களை அறியவில்லை எனும் எண்ணம் அவர்களை அறியாமல் அவர்களுக்குள் இருப்பதே. அது ஓரளவு உண்மையாகவும் இருக்கின்றது. 

அதுபோல நமது தேவனும் நம்மை எண்ணி நடத்துகின்றார். நம்முடைய பலம், பலவீனம்   இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று, அதாவது நாம்  பலவீனர்கள் என்று நினைவுகூருகிறார். அதனால் தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் நமக்கு இரங்குகிறார். ஆனால் இன்றைய தியான வசனம் வெறுமனே இரங்குகிறார் என்று கூறாமல், "தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்" என்று கூறுகின்றது. 

"பயந்தவர்களுக்கு என்று கூறுவதால்" அவரைக்கண்டு பயந்து ஓடுபவர்களுக்கு என்று பொருளல்ல, "தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்." ( நீதிமொழிகள் 8 : 13 ) என்று நாம் வாசிக்கின்றோம். அதாவது, தேவனுக்குப் பிரியமில்லாத காரியங்களை நாம் செய்யாமல் அவற்றை வெறுப்பதே அவருக்குப் பயப்படும் பயம். அத்தகைய பயம் நமக்கு இருக்குமானால் தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, அவர் நம்மீது இரங்குவார்.  

இதற்கு யோசேப்புடைய வாழ்க்கை நமக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம். கர்த்தருக்குப் பயப்படும் பயம் அவருக்கு இருந்ததால் மிகப்பெரிய பாவச் சூழ்நிலையையும் வெற்றிகொண்டார். அவர் தனது  வாழ்வில் எல்லா நேரங்களிலும் தேவனை முன்னிறுதிப் பார்ப்பவராக இருந்தார். இப்போதும், தேவ ஐக்கியமா  அல்லது அற்பமான பாவ சந்தோஷமா? எது மேலானது என்று எண்ணிப்பார்த்தார். முடிவில் தேவ ஐக்கியமே மேலானது எனக் கண்டுகொண்டார். அதனை இழக்க அவர் விரும்பவில்லை. எனவே,  "நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்." ( ஆதியாகமம் 39 : 9 ) என்று கூறப்பட்டுள்ளது. ஆம் அன்பானவர்களே, இதுதான் கர்த்தருக்குப் பயப்படும் பயம். 

இப்படி பாவ காரியங்களுக்கு பயந்து விலகி நடப்போமானால் தேவன் நமக்குத் தகப்பனைபோல இரங்குவார் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. மட்டுமல்ல, நாம் மண்ணென்று, அதாவது பலமில்லாதவர்கள் என்று அவர் அறிந்துள்ளதால் ஆவிக்குரிய வாழ்வில் நாம்  முன்னேற உதவுகின்றார். "அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்." ( ரோமர் 8 : 26 )

மேலும், நாம் தேவனுக்குப் பயந்து தீமைக்கு விலகுகின்றோமென்றால் நாம் தேவனை அன்பு செய்கிறோம் என்று பொருள். அப்படி நாம் அவரை அன்புசெய்து வாழ்வோமென்றால் நமது வாழ்வில் நடைபெறும் அனைத்துக் காரியங்களும் நன்மைக்கு ஏற்றதாகவே இருக்கும். "அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்." ( ரோமர் 8 : 28 )

கர்த்தருக்குப் பயந்த வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். 

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1622                                                                      ஆதவன் 17.07.2025 வியாழன்            

"பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன். அவர்களோ ஆதாமைப்போல் உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணினார்கள்." ( ஓசியா 6 : 6, 7 )

இன்று பொதுவாக பலரும் ஜெபம், வழிபாடுகள், வேத வாசிப்பு, உபவாசம்  இவைகளே தேவன் விரும்பும் செயல்கள் என்று எண்ணி இவைகளைக் கைக்கொள்வதற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால், தங்களை ஆவிக்குரியவர்கள் என்று கூறிக்கொள்ளும் பல மனிதர்களிடமும் நாம் கனியுள்ள வாழ்க்கையைக் காண முடிவதில்லை. காரணம், ஆவிக்குரிய வாழ்வுக்கு மேற்குறிப்பிடப்பட்ட பக்திக் செயல்கள் மட்டும் போதும் என்று அவர்கள் எண்ணுவதுதான்.  ஆனால் ஆவிக்குரிய வாழ்வுக்கு இவைகள் முக்கியமானவை என்றாலும் இவற்றை மட்டும் நாம் கைக்கொண்டு நமது தனிப்பட்ட வாழ்க்கையினை மாற்றிக்கொள்ளாமல் இருப்போமானால் அதனால் எந்தப்  பலனுமில்லை; நமது வாழ்வில் கனிகளைக் காணவும் முடியாது. 

முதலில் நாம் நமது வாழ்வில் தேவனைத் தனிப்பட்ட விதத்தில் அறிந்தவர்களாக வாழவேண்டியது அவசியம். வாழ்வில் தேவனை அறியாமல் நாம் செய்யும் செயல்பாடுகள் யானையைப் பார்த்தக் குருடர்கள் செய்த செயல்களைப் போன்றவைதான்.  தேவனை நாம் அறியாவிட்டால்,  யானையைச் சுவராகவும், தூணாகவும், கயிறாகவும், முறமாகவும் அவர்கள் பார்த்ததுபோல நாமும் தேவனைக்குறித்து நமக்குள்ளே தவறாக எண்ணிக்கொண்டுதான் வாழ்வோம்.  

தேவனை அறியும்போது மட்டுமே அவரது தெய்வீக குணங்கள் நமக்குள் வரும். குறிப்பாக, அன்பு, இரக்கம் போன்ற குணங்கள் நமக்குள் தேவனால் வரும் குணங்களாகும். நியாயத்தீர்ப்பு நாளில் நாம் செய்த இரக்கச் செயல்களே நமக்குத் துணையாக நிற்கும்.  "ஏனென்றால், இரக்கஞ் செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக்கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்." ( யாக்கோபு 2 : 13 ) என்று கூறப்பட்டுள்ளது. 

மட்டுமல்ல, நாம் வெறும் பக்திச்  செயல்பாடுகளோடு நிறுத்திக்கொள்ளாமல் தேவ வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக வாழவேண்டியது அவசியம். "கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்." ( 1 சாமுவேல் 15 : 22 ) என்று ஏசாயா நூலில் வாசிக்கின்றோம். 

இன்றைய தியான வசனத்தில், "அவர்களோ ஆதாமைப்போல் உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணினார்கள்" என்று கூறப்பட்டுள்ளது. ஏதேன் தோட்டத்தில்  தேவன் ஆதாம் ஏவாளோடு உலாவினார். அப்போது அவர்களுக்கு அவர் நிறைவேற்றிடமுடியாத பெரிய கட்டளைகளைக் கொடுக்கவில்லை. ஒரு சிறு கட்டளைதான் கொடுத்தார். ஆனால் ஆதாம் அதனை மீறினான். அதுபோலவே இஸ்ரவேல் மக்களும் தேவ கட்டளையை மீறினார்கள். இன்றும் மனிதர்கள் தேவ கட்டளைகளுக்குச் செவிகொடுப்பதில்லை. 

ஆம் அன்பானவர்களே, ஆவிக்குரிய பக்திச் செயல்களல்ல, தேவனை நமது வாழ்வில் தனிப்பட்ட விதத்தில் அறிந்து அவரோடு இணைந்து வாழ்வதே அவசியம். தேவ வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியவேண்டியதே  அவசியம். "உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப்பிரியமில்லை." ( ஏசாயா 1 : 11 )

இன்று நாமும் ஆதாமைப்போல எந்தெந்த விதங்களில் தேவ கட்டளைகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளோம் என்று எண்ணிப்பார்ப்போம். தேவ கட்டளைகளுக்கு எதிராகச் செயல்படுவது துரோகம் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. காரணம் நாம் அவருக்கு விரோதமாகச் செயல்படும்போது அவரை அவமதிக்கின்றோம்; அவரைக் காலால் மிதிக்கின்றோம். ஆம், "தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்." ( எபிரெயர் 10 : 29 )

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனது பரிசுத்த இரத்தத்தால் உருவாக்கிய புதிய உடன்படியையை ஆதாமைப்போல் நாமும்  மீறிடாமல்; தேவனுக்குத் துரோகம் செய்திடாமல்  நம்மைக் காத்துக்கொள்வோம். 
 
"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1623                                                                      ஆதவன் 18.07.2025 வெள்ளி          

"இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்." ( ஏசாயா 12 : 2 )

மனிதர்களுக்கு நம்பிக்கையற்ற வேளைகளில் பயம் ஏற்படுகின்றது. நமக்கு இந்த இக்கட்டான வேளைகளில் யார் உதவுவார்? யார் நமக்கு வழிகாட்டுவார்? என நமது மனம் துவண்டுவிடும். இத்தகைய வேளைகளில் நாம் பெரும்பாலும் நமக்குத் தெரிந்த ஒவ்வொரு மனிதர்களாக எண்ணிப்பார்த்து இவர்களில் யாரிடம் இந்தப் பிரச்சனைக்கு உதவி கேட்கலாம் என்று எண்ணுவதுண்டு. 

ஆனால் வேதம் நமக்கு கூறும் அறிவுரை, "மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்."( சங்கீதம் 118 : 8 ) என்பதுதான். தேவனை நாம் நம்பும்போது ஏதாவது வழியில் நமக்கு உதவும் கரங்களை அவரே அனுப்புவார். 

சமீபத்தில் ஒரு செய்தியை வாசித்தேன். மாலை வேளையில் தோட்டத்தில் நீர்ப்பாய்ச்சச்  சென்ற விவசாயி ஒருவர் தவறி அங்கிருந்த கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். அந்தக் கிணற்றில் சிறிதளவு நீரே இருந்ததால் அவர் உடனே அங்கிருந்த ஒரு மரத்தின் வேரை பற்றிக்கொண்டு இரவு முழுவதும் ஜெபித்துக்கொண்டு இருந்தார். மறுநாளிலும் மதியம் வரை அங்கு எவரும் வரவில்லை. அவர் கூக்குரலிட்டு  அபயக்குரல் எழுப்பியும் யாரும் அவரைக் காணவில்லை. மாலை வேளையில் அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மனிதர்கள் அவரைக் கண்டுபிடித்தனர். 

மேலிருந்து அந்த மனிதர்கள் அவரிடம், 'பயப்படாதே, தைரியமாய் இரு. நாங்க உன்னைக் காப்பாற்றிவிடுவோம்" என்று அவருக்குத் தைரியம் கூறினர்.  கிணற்றுக்குள் வீழ்ந்து கிடந்த மனிதனுக்கு அது எத்தனை பெரிய ஆறுதலாக இருந்திருக்கும்!! அவர் உள்ளத்தின் ஆழத்திலிருந்து தேவனுக்கு நன்றிகூறினார். 

ஆம் அன்பானவர்களே, நாம் தேவனோடு ஐக்கியத்தில் இருப்போமானால் நமக்கு அவரிடம் நம்பிக்கை ஏற்படும். எந்த எதிர்மறையான சூழ்நிலையும் நம்மை மனம்மடியச் செய்யாது. நாமும் ஏசாயா கூறுவதுபோல, "தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்." என்று கூறி தைரியமாக இருப்போம். 

எனவேதான் அப்போஸ்தலரான யோவான் கூறுகின்றார்,  "அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பேத்  தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல." ( 1 யோவான்  4 : 18 ) என்று.  தேவனிடம் நாம் பூரண அன்பு கொள்ளும்போது அது பயத்தைப் புறம்பேத் தள்ளும். 

மட்டுமல்ல, அப்படி நாம் தேவன்மேல் நம்பிக்கைகொண்டு வாழும்போது பாக்கியவான்களாக இருப்போம் என்று வேத வசனம் கூறுகின்றது. "கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்." ( எரேமியா 17 : 7 )

ஆம் அபானவர்களே, நாம் எந்த வேளையிலும் தேவனை பற்றிக்கொண்டு அவர்மேல் அன்புகொண்டு வாழ்வோம். நம்பிக்கையற்ற சூழ்நிலைகள் வரும்போது, "தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்" என்று  நமக்குள் கூறிக்கொண்டு நம்மை நாமே திடப்படுத்திக்கொள்வோம். அவரிடம் நாம் பூரண அன்பு கொள்ளும்போது பயம் நம்மை விட்டு அகலும். நாமும் பாக்கியவான்களாக வாழ்வோம். 

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1624                                                                      ஆதவன் 19.07.2025 சனி           

"பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார்." ( உபாகமம் 32 : 10 )

இன்றைய தியானத்துக்குரிய வசனம் யாக்கோபு வானந்தரம் வழியாக நடந்துசென்றபோது தேவன் அவனோடு உடனிருந்து நடத்திய மேன்மையை நமக்கு உணர்த்தி நமது வாழ்விலும் தேவன் இத்தகைய வழிநடத்துதலைத் தருவார், எனவே நாம் பயப்படத் தேவையில்லை எனும்  நம்பிக்கையைத் தருவதாக உள்ளது. ஈசாக்கு  தனது மகன் யாக்கோபிடம், "தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும் நீ பரதேசியாய்த் தங்குகிறதுமான தேசத்தை நீ சுதந்தரித்துக்கொள்ளும்படி ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக என்று சொல்லி" ( ஆதியாகமம் 28 : 4 ) அவனை பதான் அராமிற்கு அனுப்புகின்றான். 

யாக்கோபு தனது தகப்பன் ஈசாக்கு தனக்குக்  கட்டளையிட்டபடி பதான் அராமிலிருக்கும் தனது மாமன் வீட்டிற்கு வனாந்தரம் வழியாக நடந்து சென்றான். கானானுக்கும் பதான்அராமிற்கும் இடையிலான தூரம் சுமார் 640 கிமீ (400 மைல்கள்) ஆகும் என்று இன்றையகால ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர். இது முழுவதும் பாலைவன பாதையாகும். பாலைவனத்தில் உயிரைப்பறிக்கக்கூடிய கொடிய வனவிலங்குகள் பல உண்டு. தனியனாக வழிநடந்த அவனைக்  கொடிய  விலங்குகளிடம் சிக்கிப்  பலியாகாமல் தேவனே காத்துக்கொண்டார். 

இதனையே இன்றைய தியான வசனத்தில் நாம்,  "பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார்." என்று வாசிக்கின்றோம். ஆம், "கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார், அந்நிய தேவன் அவனோடே இருந்ததில்லை." ( உபாகமம் 32 : 12 )

இந்த வனாந்தர பயணத்தில் தேவன் அவனோடு பேசினார். வெளிப்பாடுகளைக் கொடுத்தார். இருள் சூழ்ந்த ஒரு இரவில் அவன் ஒரு கல்லில் தலை சாய்த்து உறங்கியபோது அவனிடம் தேவன் அற்புதமான கனவு மூலம் பேசினார். பூமிக்கும் வானத்துக்கும் இணைப்பான ஒரு ஏணியை அவன் கண்டான். "அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்." ( ஆதியாகமம் 28 : 13 ) என்றார். அந்த இடத்திற்கு அவன் பெத்தேல் என்று பேரிட்டான் ( ஆதியாகமம் 28 : 19 ). 

பாலைவன பயணத்துக்குப் பின்னரும் அவன் வாழ்வில்  கடினமான  சூழ்நிலையே நிலவியது. ஆனாலும் தேவன் அவனோடு இருந்து அவனை ஆசீர்வதித்தார். அவன் திரும்பி தனது சொந்த நாட்டிற்குத் திரும்பியபோதும்  தேவன் அவனோடு ஒரு மனிதனாக இடைபட்டார். அவனோடு ஒரு இரவு முழுவதும் போராடினார் என்று கூறப்பட்டுள்ளது.  அவன் மனிதர்களோடும் தேவனோடும் போராடி வெற்றிகண்டான். "அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்." ( ஆதியாகமம் 32 : 28 )

ஆம் அன்பானவர்களே, தேவன் அனுமதித்து நமது வாழ்வில் வனாந்தர பயணம் வருமானால் யாக்கோபுக்கு வந்ததுபோல தேவனாலும் மனிதர்களாலும் அனுமதிக்கபட்டச் சோதனைகள் வரலாம்.  அதனால் நிச்சயம் பிற்காலத்தில் ஆசீர்வாதம் உண்டு. யாக்கோபு திரும்பி வரும்போது மிகப்பெரிய ஆசீர்வாதத்துடன் வந்தான். "அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்." ( ஆதியாகமம் 32 : 10 ) என்று கூறுகின்றான் அவன். 

இன்று நாமும் ஒருவேளை இதுபோல பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் நடந்துகொண்டிருக்கலாம். கொடிய விலங்குகள் போன்று பல பிரச்சனைகள் நம்மைச் சுற்றிலும் இருக்கலாம். ஆனால் நாம் தனியாக இருப்பதுபோலத் தெரிந்தாலும் தனியாக இல்லை. தேவன் நம்மோடுதான் இருக்கின்றார். அவர் யாக்கோபைக்  கண்டுபிடித்ததுபோல நம்மையும் கண்டுபிடித்து நடத்துவார், தமது கண்மணியைப் போலக் காத்துக்கொள்வார். யாக்கோபோடு போராடினாலும் வனாந்தர வாழ்வில் பேசி வழிநடத்தியதுபோல நம்மோடும்  பேசி நம்மைத் திடப்படுத்துவார். தேவனோடுள்ள ஐக்கியத்தை மட்டும் நாம் விடாமல் பற்றிக்கொள்வோம். 

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1625                                                                      ஆதவன் 20.07.2025 ஞாயிறு            

"உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோகும்." ( ஏசாயா 60 : 20 )

தேவனை அறியாத இருளின் வாழ்க்கையினை வாழ்ந்து துக்கமும் சோகமும் அனுபவித்த நாம் அவரை அறியும்போது அவரது வியத்தகு ஒளியினிடம் வருகின்றோம். நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதான் அந்த வியத்தகு ஒளியான மெய்யான தேவன். எனவேதான், நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு வாழ்ந்து அவரை முற்றிலும் அறிந்த அவரது  சீடனான யோவான் அவரைக்குறித்து எழுதும்போது, "உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.' ( யோவான் 1 : 9 ) என்று கூறுகின்றார்.

"எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளி" என்று அவர் கூறுவதால் அவர் ஜாதி, மதம், இனம், நாடுகளுக்கு அப்பாற்பட்டு எந்த மனிதனையும் ஒளிர்விக்க வல்லவர் என்று அவர் கூறுகின்றார். அந்த ஒளியான இயேசு கிறிஸ்துவை நமது வாழ்வில் ஏற்றுக்கொள்ளும்போது நம்மிலிருக்கும் இருள் மறைகின்றது; ஒளி நம்மில் பிரகாசிக்கின்றது. சூரியனும் சந்திரனும் ஒளிகொடுக்க குறிப்பிட்ட கால நேரங்கள் உண்டு. ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து குறிப்பிட்டக்  கால நேரத்துக்கல்ல, நித்திய காலத்துக்கும் நமது வாழ்வில் அவர் வெளிச்சமாயிருப்பார். 

மட்டுமல்ல, இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "உன் துக்கநாட்கள் முடிந்துபோகும்" என்று. ஆம் அன்பானவர்களே, இன்று ஒருவேளை இதனை வாசிக்கும் உங்களது வாழ்க்கை இருளானதாகத் தெரியலாம். எந்த நம்பிக்கையுமற்ற எதிர்காலம் உங்களை அச்சுறுத்தலாம். ஆனால் அவற்றைப் பார்க்காமல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கிப்பார்த்து அவருக்கு உங்களை ஒப்புக்கொடுக்கும்போது இந்த வியத்தகு ஒளி உங்களைச் சூழ்ந்துகொள்ளும். அந்த நம்பிக்கையின் ஒளி உங்கள் வாழ்க்கையில் வந்துவிட்டால் அது அஸ்தமிப்பதுமில்லை; மறைவதுமில்லை. அது நித்திய வெளிச்சமாயிருக்கும். இதுவரை வேதனைப்படுத்தி வந்த துக்கநாட்கள் முடிந்துபோகும். 

மேலும், நாம் மனம்திரும்பி அவருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது நமது பழைய நெகிழப்பட்ட, கைவிடப்பட்ட வாழ்க்கை முற்றிலும் அகன்றுவிடும். அதனையே அவர் ஏசாயா மூலம், "நீ நெகிழப்பட்டதும், கைவிடப்பட்டதும், ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்." ( ஏசாயா 60 : 15 ) என்று கூறுகின்றார். 

வேத வசனங்கள் வெறுமனே வசித்து மறந்துவிடுவதற்கானவை அல்ல; மாறாக அவை நமது வாழ்வில் பலிக்கக்கூடிய உண்மையுள்ள வார்த்தைகள். அவை உயிருள்ள கடவுளின் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள். அவற்றை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது அவை நமது வாழ்வில் அற்புதங்களைக் கொண்டுவரும்.

எந்தவிதமான பாடுகள், கவலைகள், துக்கங்கள், பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றை அவரிடம் விட்டுவிடுவோம். அவருக்கேற்ற வாழ்க்கை வாழ உறுதியேற்போம். நம் ஒவ்வொருவருக்காகவும் அவர் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார். நமது இருதயத்தில் வந்து தங்கிட இருதயத்தின் அருகிலேயே நின்றுகொண்டிருக்கிறார். அவருக்குக் கதவைத் திறக்கவேண்டியதுதான் நாம் செய்யவேண்டியது. "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 20 ) என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம். "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்." ( 1 யோவான்  1 : 9 ) அப்படி நமது பாவங்கள் மன்னிக்கப்படும்போது இன்றைய தியான வசனம் கூறுவதன்படி, "உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோகும்." என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1626                                                                      ஆதவன் 21.07.2025 திங்கள்             

"தேவன் அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கடவன். எல்லாச் சபைகளிலேயும் இப்படியே திட்டம்பண்ணுகிறேன்." ( 1 கொரிந்தியர் 7 : 17 )

தேவன் நம் ஒவ்வொருவரையும் ஒவ்வொருவிதமாகவும் வெவ்வேறு நோக்கத்துக்காகவும் படைத்துள்ளார்.  எனவே, நமக்கு நியமிக்கப்பட்டப்  பணியை அறிந்து அதனை நாம் சிறப்பாகச் செய்யவேண்டும். இதுவே தேவனது சித்தம். ஆனால் நம்மில் பலரும் மற்றவர்களோடு தங்களை ஒப்பிட்டு வாழ்பவர்களாக இருக்கின்றனர்.  இப்படி ஒப்பிடாமல்,  அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கடவன் என்கின்றார் பவுல்.  

இதனை அப்போஸ்தலரான பவுல் உடலின் உறுப்புகளைக்கொண்டு "நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்." ( 1 கொரிந்தியர் 12 : 27 ) என்று கூறியுள்ளதை நாம் அறிவோம். எல்லா உறுப்புகளும் ஒரே வேலையைச் செய்வதில்லை. அதுபோல நம்மிலும் ஒவ்வொருவருக்கும் தேவனால் நியமிக்கப்பட்டப்  பணிகள் உண்டு. 

இன்று ஆவிக்குரிய காரியங்களிலும், உலகக் காரியங்களிலும் பலர் மற்றவர்களையேக்  கவனித்து அவர்களைபோலத் தாங்களும் மாறவேண்டுமென்றும் எண்ணிக்கொண்டு செயல்படுகின்றனர். இதுவே போட்டிகளும் பொறாமைகளும் எழுவதற்குக் காரணமாக இருக்கின்றது. இதனை நாம் தவிர்க்கவேண்டுமென்று அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார். எனவேதான் அவர், "அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கடவன்" என்று குறிப்பிடுகின்றார். 

இன்று கிறிஸ்தவ சமூகத்தில் காப்பியடித்தல் பல்வேறு விதங்களில் நடைபெற்றுக்கொண்டிருப்பதை நாம் காணலாம். குறிப்பாக கிறிஸ்தவ ஊழியங்களில் இது அதிகமாக  நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.  நான் சாத்தான்குளத்தில் பணியாற்றியபோது ஒரு சகோதரனை எனக்கு ஒருவர் அறிமுகப்படுத்தினார். அவர் முதல்முதல் தன்னைபற்றி என்னிடம்  கூறிய வார்த்தைகள், "பிரதர், நான் DGS தினகரனைப்போலவே பாடுவேன்" என்பதுதான். ஆம், பிரபல ஊழியர்களைக் காப்பியடித்து அவர்களைப்போல பேசவும் பாடவும்  முயலுதல் பெருமையாக எண்ணப்படுகின்றது. ஆனால் அதுவே  இன்று கிறிஸ்தவ ஊழியங்களில் சாபக்கேடாக இருக்கின்றதை நாம் காணலாம். கிறிஸ்து இப்படி ஊழியர்களைக் காப்பியடிக்கக் கூறவில்லை. நாம் பின்பற்றவேண்டிய ஒரே மாதிரி கிறிஸ்துதான். 

"நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்." ( 1 கொரிந்தியர் 12 : 27 ) எனவே உங்களுக்குரிய கிறிஸ்தவ  கடமைகளை மட்டும் செய்யுங்கள் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். மற்ற உறுப்புக்கள் செய்யும் பணியைச் செய்ய நாம் தேவையில்லை. 

இதுபோலவே மற்றவர்களுக்குரிய சொத்துக்கள்,  நகைகள், ஆடைகள் பதவிகள் போன்று நமக்கு இல்லையே  என்று கவலைப்பட்டு கலங்கும் மக்களும் உண்டு. இத்தகைய கவலை இருக்குமானால் நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளரவில்லை என்று பொருள். மட்டுமல்ல, இத்தகைய எண்ணமுள்ள ஆணும் பெண்ணும் ஆவிக்குரிய மேலான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளவும் முடியாது. 

இவற்றை நாம் விட்டுவிடவேண்டுமானால், அமர்ந்திருந்து தேவன் நமக்குக் கொடுத்துள்ள நன்மைகளை எண்ணிப்பார்த்து அவற்றுக்கு நன்றிகூறப் பழகிடவேண்டும். அப்போது மட்டுமே தேவன் நம்மை ஆசீர்வதிக்கமுடியும். மேலும், கம்யூனிஸ்டுகள் மற்றும் விடுதலை இறையியல் சிந்தனையாளர்கள் விரும்புவதுபோல மேடுபள்ளங்கள் இல்லாத சமத்துவ சமுதாயம் நாட்டில் என்றைக்குமே மலர்ந்திட முடியாது. இயேசு கிறிஸ்துவும் அப்படி ஒரு சமுதாயத்தை உருவாக்கிட  உலகினில் வரவில்லை. மேடும்-பள்ளமும், இருளும்-வெளிச்சமும், குட்டையும்-நெட்டையும் இயற்கை. அவை இருப்பதால்தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கின்றது. உதாரணமாக, உலக நிலப்பரப்பு மேடுபள்ளமற்ற  சமபூமியாகுமானால் முழுவதும் கடல்நீரால் நிறைந்து அழிந்து விடும். 

"எல்லா மனுஷரும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆகிலும் அவனவனுக்கு தேவனால் அருளப்பட்ட அவனவனுக்குரிய வரமுண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாயும், மற்றொருவனுக்கு வேறுவிதமாயும் இருக்கிறது." ( 1 கொரிந்தியர் 7 : 7 ) என்கின்றார் பவுல். அதாவது அவரது ஆசை எல்லோரும் அவரைப்போல மாறவேண்டும் என்பது. ஆனால் அவரே கூறுகின்றார்,  "அவனவனுக்கு தேவனால் அருளப்பட்ட அவனவனுக்குரிய வரமுண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாயும், மற்றொருவனுக்கு வேறுவிதமாயும் இருக்கிறது." என்று. ஆம் அதுதான் தேவ சித்தம். 

எனவே, மற்றவர்களைப் பார்க்காமல், காப்பியடிக்காமல், தேவன் நமக்குப் பகிர்ந்ததெப்படியோ, அவர் நம்மை அழைத்ததெப்படியோ, அப்படியே நடப்போம். நமக்கு அவர் தந்த அளவுக்குத்தான் நம்மிடம் அவர் இறுதிநாளில் கனக்குக் கேட்பார்.  "அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங்கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங்கேட்கப்படும்" ( லுூக்கா 12 : 48 ) என்கின்றார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. 

எனவே, மற்றவர்களை நோக்காமல், பொறாமை கொள்ளாமல்  "கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கடவன்." தேவன் நமக்குக் கொடுத்துள்ள தாலந்துகளை பயனுள்ளவையாகப் பயன்படுத்துவோம். 

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1627                                                                      ஆதவன் 22.07.2025 செவ்வாய்       

"நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே." ( 2 கொரிந்தியர் 8 : 9 ) 

தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல நிலையில் இருக்கவேண்டுமென்பதற்காக தாய் தகப்பன்மார் பல்வேறு உபத்திரவங்களைச் சகிக்கின்றனர். வீடுகளில் வேலைசெய்தும் மிகக் கடுமையான தொழில்களில் ஈடுபட்டும் வரும் பலர் தங்களுக்குக் கிடைக்கும் சிறு வருமானத்திலும் தங்களது ஆசைகளை அடக்கி தங்கள் குழந்தைகளது படிப்புக்காகப் பல்வேறு தியாகங்களைச்  செய்கின்றனர். நாம்தாம் இப்படி ஆகிவிட்டோம் நமது குழந்தைகளாவது எதிர்காலத்தில் நல்ல நிலையில் வரவேண்டுமென்னும் கனவுடன் உழைக்கின்றனர். 

ஆம் அன்பானவர்களே, இதைவிட மேலானவராக நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும்  இருக்கிறார் என்று இன்றைய வசனம் சொல்கின்றது. அவர் செல்வந்தன்தான். ஆனால் நாம் செல்வந்தர்கள் ஆகவேண்டும் என்பதற்காக; நாம் மீட்கப்பட்டு பரலோகத்தைச் சுதந்தரிக்கவேண்டும் என்பதற்காக அவர் தந்து செல்வ நிலைமையை விட்டுவிட்டு நமக்காக தரித்திரனானார். உலகத்  தாய் தகப்பன்மார் தங்களது இல்லாமையில் தியாகங்கள் செய்கின்றனர். ஆனால் கிறிஸ்துவோ தனது செல்வ நிலையை நமக்காகத் தியாகம் செய்து நம்மைப்போலானார்.   

"அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்." ( பிலிப்பியர் 2 : 6,7 ) அடிமை என்பவன் எந்த அடிப்படை மனித உரிமையும் இல்லாதவன். இந்த அண்ட சராசரங்களைப் படைத்து ஆளும் தேவன் ஒரு அடிமையைப்போல ஆனார் என்பதை எண்ணிப்பாருங்கள். எதற்காக? நமக்காக. நாம் மீட்பு பெறவேண்டுமென்பதற்காக.  இந்த விதத்தில் அவரது அன்பு மனிதர்களது அன்பைவிட பல மடங்கு மேலானதல்லவா?  

வறுமையில் பல தியாகங்கள் செய்து சேகரித்தப்  பணத்தில் மகனைப் படிக்கவைக்கும் தாய், அந்த மகன்  வேண்டாத நண்பர்களது சகவாசம்கொண்டு படிக்காமல் தாய் அனுப்பும் பணத்தையும் தாறுமாறாய்ச் செலவழித்தால் எவ்வளவு வேதனைப்படுவாள்? அத்தகைய பெற்றோர்களை நாம் இந்த உலகத்தில் பலவேளைகளில் சந்திக்கின்றோம் அல்லவா?  சமீபத்தில் ஒரு பத்திரிக்கைச் செய்தியில், படிப்புக்காக தான் கொடுக்கும் பணத்தைத் துன்மார்க்கமாய் மகன் செலவளித்ததால் ஒரு தாய் மனம்பொறுக்காமல் தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்துக்கொண்டாள் என்று வாசித்தேன்.   

அன்பானவர்களே, இன்று பலரும் கிறிஸ்துவின் மீட்பினை அலட்சியம்செய்து உலக ஆசையில் மூழ்கி கிறிஸ்துவை மறுதலித்து வாழும்போது அவர் இதுபோலவேதான்  வேதனைப்படுவார்.  நமக்காகத் தரித்திரரான இயேசு கிறிஸ்துவின் அன்பை நாம் உணருவோமானால் அவரது விருப்பப்படி வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். 

அன்பான இயேசுவே இதனை நாட்களும் உமது மேலான அன்பை உணராமல் அலட்சியமாக வாழ்ந்துவிட்டேன். என்னை மன்னியும். உமக்கு ஏற்ற வாழ்க்கை வாழ இன்றே என்னை ஒப்புக்கொடுக்கிறேன்.  என் பாவங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளும். உமது பரிசுத்த ஆவியானவரை எனக்குத் தந்து உமக்கு ஏற்புடைய வழியில் நான் தொடர்ந்து நடக்க எனக்கு உதவி செய்யும் என வேண்டுதல் செய்வோம். 

நாம் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொள்வார். ஏனெனில் அவர் நமக்காகச் செய்த உயிர் தியாகம் வீணாவதை அவர் விரும்பமாட்டார். தனிமையில் கிறிஸ்துவிடம் மனம் திறந்து பேசுங்கள். மேலான தேவ அனுபவத்தை அளித்து நம்மை மகனாக / மகளாக ஏற்றுக்கொள்வார். 

"அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்." ( யோவான் 1 : 12 )

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1628                                                                      ஆதவன் 23.07.2025 புதன்        

"தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்." ( எபிரெயர் 10 : 29 )

நாம் தேவனுடைய கிருபையால் இரட்சிக்கப்பட்டுள்ளோம். இதனை "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு" ( எபேசியர் 2 : 8 ) என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பவுல். இந்தக் கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

அதாவது இந்த வசனம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் உண்டாகும் மீட்பு அனுபவத்தை நாம்  நம்பாமல் புறக்கணிக்கக் கூடாது என்பதையும் அதனை நம்பி ஏற்றுக்கொண்டபின்னர்  ஆவிக்குரிய பின்மாற்ற மனநிலை நமக்கு ஏற்படக்கூடாது என்பதையும் உணர்த்துகின்றது. மட்டுமல்ல,  அப்படி பின்மாற்றமடைவது தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து அவமானப்படுத்துவது போன்றது என்று எச்சரிக்கின்றது. இதனையே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், "கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்." ( லுூக்கா 9: 62)

தேவனுடைய பாதையில் நடக்க விரும்புவதை இங்கு இயேசு கிறிஸ்து கலப்பையில் கைவைத்து உழுகின்ற விவசயிக்கு ஒப்பிட்டு விளக்குகின்றார். ஒரு விவசாயி கலப்பையினை முன்னோக்கிச் செலுத்தி உழவேண்டுமேத் தவிர உழுவதற்குத் தயாரானபின்னர் பின்நோக்கிப் பார்க்கக்கூடாது. அத்தகைய எண்ணமுள்ளவன் தனக்கு உகந்தவன் அல்ல என்கின்றார் இயேசு. 

ஆம் அன்பானவர்களே, தேவனுடைய ராஜ்ஜியத்துக்கு நாம் தகுதியுள்ளவர்கள் ஆகவேண்டுமானால் பின்னிட்டுப்பார்க்காத ஒரு வாழ்க்கை வாழவேண்டியது அவசியம். நமது கடந்த காலத்தை நாம் முற்றிலும் மறந்துவிடவேண்டும் என்பது இதன் பொருளல்ல, மாறாக கடந்த கால பாவ வாழ்க்கையினை அந்த வாழ்க்கைக்  கொடுத்த பாவ சந்தோஷத்தை நாம் திரும்பிப்பார்க்கக் கூடாது என்று பொருள். 

நாம் நமது கடந்த கால வாழ்கையினையும் அதன் பாடுகளையும் அவற்றிலிருந்து தேவன் நம்மை  மீட்டு புது வாழ்க்கைத் தந்துள்ளதையும் எண்ணி அவருக்கு நன்றிகூறவேண்டுமேத்  தவிர பழைய வாழ்கைக்குத் திரும்பிச் செல்ல ஆசைப்படக்கூடாது. அப்படிப் பின்னோக்கிச் செல்வது அவரது இரத்தத்தை அவமதிப்பது என்று பொருள்.

இத்தகைய பின்னோக்கிச் செல்லும் வாழ்க்கையினை பன்றிக்கும் நாய்க்கும் ஒப்பிட்டு அப்போஸ்தலரான பேதுரு கூறுகின்றார்:-"அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும். நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது." (2 பேதுரு 2: 21, 22)

இன்று ஆங்காங்கே நடைபெறும் பல்வேறு ஆவிக்குரிய கூட்டங்களில் கலந்துகொண்டு தேவ வார்த்தைகளைக் கேட்டு பலர் கிறிஸ்துவிடம் விசுவாசம் கொண்டு தங்களை அவருக்கு ஒப்புக்கொடுக்கின்றனர். ஆனால் அவர்களில் பலரும்  தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க முடிவதில்லை. காரணம், கிறிஸ்து காட்டும் குறுகலான பாதை. அந்தப்பாதையில் தொடர்ந்து நடக்கச் சிரமப்படுவதால் பழைய வாழ்கைக்குச் சென்றுவிடுகின்றனர்; பின்னர் முழுவதும் பழைய வாழ்க்கையையே வாழ்கின்றனர். 

ஆனால் தேவன் இத்தகைய வாழ்க்கை வாழ்வதை விரும்புவதில்லை. அன்பானவர்களே, கிறிஸ்துவை நோக்கி அடியெடுத்துவைத்த காலை நாம் பின் வைக்காமல் தொடர்ந்து அவரது பாதையில் நடக்கவேண்டுமென்பதே கிறிஸ்து விரும்புவது. கிருபையால் அவர் நம்மை இரட்சித்துள்ளார். இந்தத்  தேவ கிருபையினை நாம் புறக்கணிக்கக்கூடாது என்றும் விரும்புகின்றார். நம்மைப் பாவத்திலிருந்து மீட்ட கிறிஸ்துவின் புதிய உடன்படிக்கையின்  பரிசுத்த இரத்தத்தை அசுத்தமென்றெண்ணிடாமல்  ஆவிக்குரிய வாழ்வில் தொடர்ந்து நடக்கவேண்டியது அவசியம். அப்படித் தொடராமல்  அவரை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள் என்று எச்சரிக்கின்றது இன்றைய தியான வசனம். 

நம்மைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணிடாமல் வாழ்வோம்; நித்திய  மீட்பு பெறுவோம்.

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1629                                                                      ஆதவன் 24.07.2025 வியாழன்        

"அவர்களைப் பார்த்துப் பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்." ( உபாகமம் 7 : 21 )

பயம் நமக்கு ஏற்படக் காரணம் நமது பலவீனம்தான். நாம் நல்ல உடல் நலத்துடன் பலத்துடன் இருக்கும்போது தைரியமாகச் செயல்படுவோம். ஆனால் உடல் பலவீனமாகி நோய்வாய்ப்படும்போது பயம் ஏற்படுகின்றது.  ஒருவேளை இது கொடிய நோயாக இருக்குமோ என்று எண்ணிக் கலங்குகின்றோம். இதுபோலவே, பணப்பற்றாக்குறை ஏற்படும்போதும், நமக்கு எதிராக சிலர் செயல்படும்போதும்  நமக்குள் பயம் ஏற்படுகின்றது. 

ஆனால் இன்றைய தியான வசனம் நமக்குக் கூறுகின்றது, "அவர்களைப் பார்த்துப் பயப்படவேண்டாம்" என்று. நோய்களோ, வறுமையோ,  எதிரிகளோ, எதுவும் நம்மை ஒன்றும் செய்யமுடியாது.  காரணம்,  "உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்." அவர் குறைவுகளை நிறைவாக மாற்றவல்லவர்.

ஆம் அன்பானவர்களே, நாம் ஆராதிக்கும் தேவன் எங்கோ ஆலயத்தில்மட்டும் அடங்கிக்கொண்டு  இருப்பவரல்ல, அவர் நமக்குள் இருந்து செயல்படுபவர், அன்றாடம் நம்மை நடத்துபவர். சர்வலோகத்தையும் படைத்து ஆளும் தேவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாக  நமக்குள் இருப்பது ஒரு மேலான இரகசியம் என்று அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார். "புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்." ( கொலோசெயர் 1 : 27 )

அப்படி மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் இருக்கும் தேவன் எப்படிப்பட்டவர் என்று இன்றைய தியான வசனத்தின் பிற்பகுதி "அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்"  என்று நமக்கு விளக்குகின்றது. தேவன் அன்பானவர்தான், இரக்கமுள்ளவர்தான் ஆனால் தனது பிள்ளைகளுக்கு எதிரான செயல்களை அவர் சும்மா பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார். காரணம் நாம் அவரது கண்விழிகளைப்போல இருக்கின்றோம். "உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்." ( சகரியா 2 : 8 ) என்று வேதம் கூறுகின்றது. எனவே, நமக்கு எதிரான செயல்பாடுகளுக்கு அவர் பயங்கரமானவராக இருப்பார். 

ஆனால் நாம் நமது பலத்தை உணர்ந்தவர்களாக வாழவேண்டியது அவசியம். நமக்குள் இருக்கும் தேவாதி தேவனை நாம் உணர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.  யானைகளைப்பற்றிய  ஒரு உண்மையை இங்கு நினைவுகூருதல் பொருத்தமாக இருக்குமென்று எண்ணுகின்றேன். குட்டி யானைகளை முதலில் சிறிய நாய்களைக்கட்டும் சங்கிலியால் கட்டிவைப்பார்கள். அந்தக் குட்டியானைகள் அந்தக் கட்டுக்கு அடிமையாகிவிடும். அவை வளர்ந்தபின்னர் சற்று பெரிய சங்கிலிகளை வைத்துக் கட்டுவார்கள். யானை நினைத்தால் ஒரே இழுப்பில் அதனை அறுத்து தப்பிவிட முடியும். ஆனால் அதன் மனநிலை அதனை அறுக்கவிடாது. அது முன்பு குட்டியாக இருந்தபோது தன்னால் இயலாது என வாழ்ந்த அடிமை மனநிலையால்  அந்தச் சிறிய கட்டுக்கு அடங்கியே என்றும்  இருக்கும். 

அன்பானவர்களே, தங்களது பலத்தை அறியாத இந்த யானைகளைப்போல அல்லாமல் நாம் நமது பலத்தை உணர்ந்தவர்களாக வாழவேண்டியது அவசியம். நமது தேவனாகிய கர்த்தர் நமக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன் என்பதனை உணர்ந்துகொள்ளவேண்டும். இதனை நாம் உணர்ந்துகொள்வோமானால் மட்டுமே அப்போஸ்தலரான பவுலைப்போல நாமும் "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு." ( பிலிப்பியர் 4 : 13 ) என்று கூறி பயத்தை மேற்கொண்டவர்களாக வாழ முடியும்.   

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1630                                                                      ஆதவன் 25.07.2025 வெள்ளி         

"எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்." ( சங்கீதம் 121 : 1 )

இந்த உலகத்தில் நமக்கு உதவிகள் தேவைப்படும்போது சில  நேரங்களில், "நான் இந்தக் காரியத்தில் அவரைத்தான் மலைபோல நம்பியிருக்கிறேன்" என்று கூறுவதுண்டு. அதாவது அந்த நபர் நமக்கு உதவுவார் என்று நிச்சயமாக நாம் நம்பியிருக்கின்றோம் என்று பொருள். மலை உறுதியானது, உயரமானது, யாரும் எளிதில் அசைக்க முடியாதது. அதுபோல அந்த மனிதர்கள் நமக்கு உதவுவார்கள் என்று நாம் உறுதியாக நம்பிக்கொண்டிருப்போம். மட்டுமல்ல, மலையானது நமக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அரணாகவும் இருக்கின்றது. நமது இந்திய நாட்டிற்குக்கூட வடக்கிலுள்ள இமயமலை மிகப்பெரிய பாதுகாப்பு அரணாக இருக்கின்றது. 

இப்படி நாம் நமக்கு உதவிக்காக பல்வேறு நபர்களை மலைபோல நம்பிக்கொண்டிருக்கலாம். அவர்கள் நமக்கு உண்மையாக உதவுபவர்களாகவும் இருக்கலாம். ஆனால், சில வேளைகளில் சூழ்நிலைகள் மாறி அவர்கள் நமக்கு உதவிட முடியாத நிலைகளை உருவாக்கிவிடலாம். நமக்கு வேண்டியவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களாக இருந்தாலும்கூட  சூழ்நிலைகள் மாறும்போது அவர்களால் நமக்கு உதவி செய்ய இயலாமல் போய்விடும். 

எனவேதான் சங்கீத ஆசிரியர் கூறுகின்றார், "மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்." ( சங்கீதம் 118 : 8, 9 )

மேலும், எருசலேம் நகரைச் சுற்றிலும் மலைகள் பாதுகாப்பு அரண்போல இருப்பதுபோல, கர்த்தர் நமக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கின்றார்.   நாம் கிறிஸ்துவுக்கு ஏற்றவர்களாக வாழ்வோமானால் நாமே அவரது பரிசுத்த எருசலேம் நகராக இருக்கின்றோம். அவர் நமக்குள் வந்து தங்குகின்றார். அப்படி நாம் வாழும்போது, "பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்." ( சங்கீதம் 125 : 2 ) எனும் வசனத்தின்படி அவர் நமக்கும் நமது குடும்பத்துக்கும் பாதுகாப்பு அரணாக இருப்பார். 

ஆம் அன்பானவர்களே, நமக்கு ஒத்தாசை வரும் மலைபோல அசையாமல் மாறாமல் இருப்பவர் கர்த்தர் மட்டுமே. சூழ்நிலைகளோ, நேரமோ, காலமோ அவரை மாற்றமுடியாது.  அவர் கொடுத்துள்ள வாக்குறுதிகள் நித்திய காலத்துக்குமானவைகள். கொடுத்த வாக்குறுதிகளை மாற்றிட மனிதர்களைப்போல அவர் உண்மையற்றவரல்ல. "நாம் உண்மையில்லாதவர்களாய் இருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்." ( 2 தீமோத்தேயு 2 : 13 )

எனவே, கர்த்தரே நமக்கு மிகப்பெரிய நம்பிக்கை மலையாக இருக்கின்றார்; அவரே நமக்கு ஒத்தாசையாக இருக்கின்றார். அவரை நோக்கி நமது கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது அவரது உதவி நமக்குக் கிடைக்கும். மனிதர்களை நோக்கியல்ல; கர்த்தரையே நோக்கி  நமது கண்களை ஏறெடுப்போம். நமக்கு ஒத்தாசை அவரிடமிருந்து மட்டுமே வரும். 

பிரச்சனைகள், துன்பங்கள் நெருக்கும்போது எதிர்மறையான எண்ணம்கொண்டு விசுவாசத்தில் பலவீனமடைந்து பிற தெய்வங்களையோ பிற மத நம்பிக்கைகளையோ நாம் பின்பற்றிடாமல் உறுதியான மனதுடன் கர்த்தரையே கிட்டிச் சேர்வோம். மலைபோன்ற அவரை உறுதியான விசுவாசத்தோடு அண்டிக்கொள்வோம்.  அப்படி வாழ்வோமானால், "மலைகள்  விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்". (ஏசாயா 54:10) என்று கூறியுள்ளபடி அவரது கிருபை நம்மைவிட்டு விலக்கிடாமல் இருக்கும். 

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1631                                                                      ஆதவன் 26.07.2025 சனி     

"தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்." ( சங்கீதம் 90 : 15 )

இன்றைய தியான வசனம் தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெப விண்ணப்பமாகும். மோசேயின் வாழ்வின் மொத்த நாட்கள் 120 ஆண்டுகள். இந்த ஆண்டுகள் சரியாக நாற்பது நாற்பதாக வகுக்கப்பட்ட நாட்களாகும். முதல் நாற்பது ஆண்டுகள் பார்வோனின் மகளின் மகனாக அரண்மனை வாழ்வு. அடுத்து நாற்பது ஆண்டுகள் வனாந்தரத்தில் ஆடுமேய்க்கும் துன்பத்தின் நாட்கள். இறுதி நாற்பது ஆண்டுகள் தேவனோடு நடந்து இஸ்ரவேல் மக்களை நடத்திய நாட்கள். 

ஆடுமேய்ப்பவராக வாழ்ந்தபோது மட்டுமல்ல, இஸ்ரவேல் மக்களை வனாந்தரத்தில் நடத்திய நாற்பது ஆண்டுகளும்கூட  மோசே இஸ்ரவேல் மக்களது கடின மனதினாலும் அடங்காத குணத்தினாலும்  துன்பத்தை அனுபவிக்கவேச்  செய்தார். ஆனாலும்  தேவனோடு நடக்கும் உன்னதமான ஆவிக்குரிய அனுபவங்களைப் பெற்றார்.  தேவனோடு நடந்தார்; தேவனை முகமுகமாய்க் காணும் பேறுபெற்றார்.  "தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்." எனும் அவரது விண்ணப்பத்தின்படி தேவன் அவரை ஆவிக்குரிய மகிழ்ச்சியால் நிறைத்து நடத்தினார்.  

ஒருவேளை நமது வாழ்வு இன்று சிறுமைப்படுத்தப்பட்ட வாழ்வாக இருக்கலாம்; துன்பங்களை அனுபவிக்கும் வாழ்வாக இருக்கலாம்; மற்றவர்களைப்போன்ற மேலான செல்வ ஆசீர்வாதங்களோ, வேலைவாய்ப்போ இல்லாமலிருக்கலாம். ஆனால் என்றுமே அவ்வாறு இருக்குமென்று நாம் கலங்கிடத் தேவையில்லை. அவற்றைக்குறித்து கலங்கிடாமல் மோசேயைப்போல, "ஆண்டவரே எங்களைச்  சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்." என நாம் ஜெபிக்கவேண்டியது அவசியம். 

பல  குடும்பங்களில் ஒரு தலைமுறை பாடு அனுபவித்துக் கொண்டிருக்கும். ஆனால் பின்நாட்களில் குழந்தைகள் படித்து நல்ல நிலைக்கு வரும்போது பழைய பாடுகள், துன்பங்கள் மறைந்துவிடும். அந்தக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். இது இயற்கை. ஆனால் எந்த நம்பிக்கையுமற்ற வேளைகளில் பாடுகளிலிருந்து விடுதலை பெற வாய்ப்பே இல்லாத சூழ்நிலைகளில் தேவன் சிலருக்கு உதவி பழைய துன்ப வாழ்க்கையினை மாற்றுவார்; அவர்களது ஆவிக்குரிய வாழ்வையும் மாற்றுவார். 

ஆம் அன்பானவர்களே, தேவன் ஒருவரை ஆசீர்வதிக்குமுன் முதலில் அவரது தனிப்பட்ட வாழ்வை மாற்றிட விரும்புகின்றார். அதாவது, உலக ஆசீர்வாதத்துக்குமுன் நமது ஆவிக்குரிய வாழ்வு மேம்படவேண்டுமென்று தேவன் விரும்புகின்றார். எனவே முதலில் நமது வாழ்வை அவர் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, பின்னர் நிலைநிறுத்துவார். இத்தகைய  நிலைநிறுத்துதலுக்குப்பின் வரும் தேவ ஆசீர்வாதமான நாட்களே மெய்யான மகிழ்ச்சிக்குரியதாக்கும். மோசேயை தேவன் இப்படியே நிலைநிறுத்தினார்.

இதனையே அப்போஸ்தலரான பேதுரு  "கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக" ( 1 பேதுரு 5 : 10 ) என்கின்றார். 

எனவே அன்பானவர்களே, துன்பங்கள் சோதனைகள் நமக்கு மகிழ்ச்சிக் குறைவினைக் கொண்டுவந்தாலும் சோர்ந்துபோகாமல் தேவனையே பற்றிக்கொண்டு மோசேயைப்போல வேண்டுதல் செய்வோம். நமது வாழ்வை அவருக்கு ஏற்புடையதாக மாற்றிட முயலுவோம். அப்போது அவர் நம்மைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாம்  துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் மகிழ்ச்சியாக்குவார். நமது வாழ்வு மெய்யான ஆசீர்வாதம் பெற்ற வாழ்வாக அமையும். 

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1632                                                                      ஆதவன் 27.07.2025 ஞாயிறு      

"அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?" ( யாக்கோபு 2 : 25 )

தேவன்மேல் நாம் விசுவாசமுள்ளவர்கள் என்று கூறிக்கொண்டு வெறுமனே ஜெபித்துக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை, மாறாக நமது விசுவாசம் அதனோடு சார்ந்த செயலாக வெளிப்படவேண்டியது அவசியம். தேவனை நாம் விசுவாசிக்கின்றோமென்றால் அந்த நமது விசுவாசம் உண்மையானது என்பதனை நாம் தொடர்ந்து எடுக்கும் செயல்பாடுகள்தான் உறுதிப்படுத்தும். 

இஸ்ரவேல் மக்கள் யோர்தானைக் கடந்து கானான் தேசத்தினுள் நுழையுமுன் அவர்களுக்கு முதலில் சவாலாக இருந்தது எரிகோவின் கோட்டைமதில்தான். அதனைக் கடப்பதற்குமுன் யோசுவா இரண்டு நபர்களை துப்பறிவாளர்களாக அங்கு அனுப்பினார். அவர்களுக்கு ராகாப் எனும் விபச்சாரப்பெண் உதவியாக இருந்தாள். காரணம், அவள் கர்த்தரிடம் விசுவாசமாக இருந்தாள் என்று கூறப்பட்டுள்ளது. "விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தாள்." ( எபிரெயர் 11 : 31 )

இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து வெளிவந்தபோது வனாந்தரத்தில் தேவன் அவர்களை வழிநடத்திய அனைத்துச் செயல்பாட்டு  அற்புத அதிசயங்களையும் அவள் கேள்விப்பட்டிருந்தாள். எனவேதான் அவள் கூறுகின்றாள்:-  "நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, கர்த்தர் உங்களுக்கு முன்பாக சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதையும், நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம்பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம். கேள்விப்பட்டபோது எங்கள் இருதயம் கரைந்துபோயிற்று, உங்களாலே எல்லாருடைய தைரியமும் அற்றுப்போயிற்று; உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்." ( யோசுவா 2 : 10, 11 )

மட்டுமல்ல, கானான் தேசத்தை தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு ஒப்புக்கொடுக்கப்போகிறார் என்பதனையும் அவள் தனது விசுவாசத்தால் அறிந்திருந்தாள். "கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், உங்களைக்குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்துபோனார்களென்றும் அறிவேன்." ( யோசுவா 2 : 9 ) என்று தனது விசுவாசத்தையும் அறிக்கையிட்டாள். 

எனவே அவள் யோசுவா அனுப்பிய இரண்டு வேவுக்காரரையும் மறைத்து வைத்துக் காப்பாற்றினாள்; அவர்களை ராஜாவின் ஆட்களிடம் அகப்படாதவாறு காப்பாற்றி  வேறு வழியாக அனுப்பிவைத்தாள். இந்தச் செயலினால் அவள் நீதியுள்ளவளாக்கப்பட்டாள்.  எபிரெய நிருப விசுவாசிகளின் பட்டியலில் அவளது பெயர் இடம்பெறவும் இதுவே காரணமாயிற்று.  

ஆம் அன்பானவர்களே, நாம் வெறுமனே தேவனை விசுவாசிப்பது மட்டுமல்ல, ஏற்ற வேளையில் துணிவுடன் நமது விசுவாசத்தை நமது செயல்கள் மூலம்  வெளிப்படுத்துபவர்களாக வாழவேண்டியதும் அவசியம். அதனையே தேவன் விரும்புகின்றார். பிரச்சனைகள் ஏற்படும்போது நமது தனிப்பட்ட வாழ்வில்  விசுவாசத்தை நாம் எப்படி வெளிப்படுத்துகின்றோம் என்பதனை சிந்தித்துப் பார்ப்போம்.   "விசுவாசமில்லாமல்  தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்" (எபிரெயர் 11:6) 

மேலும், "ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது." ( யாக்கோபு 2 : 26 ) என்று வேதம் நம்மை எச்சரிக்கின்றது. 

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1633                                                                      ஆதவன் 28.07.2025 திங்கள்       

"நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன். இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்." ( யோவான் 14 : 18, 19 )

சில தந்தையர்கள் தாங்கள் மரணமடையுமுன் தங்களது பிள்ளைகளுக்குச் சில அறிவுரைகளையும் வாக்குறுதிகளையும் கூறுவதுண்டு. அவை குறிப்பாக அவரது சொத்துக்கள் பற்றியகாகவே இருக்கும். தான் மரணமடைந்தபின்னர் நீங்கள் என்ன செய்யவேண்டும், சொத்துக்களை எப்படி உங்களுக்குள் பகிர்ந்துகொள்ளவேண்டும், உங்களது தாயை எப்படிக் கவனிக்கவேண்டும் என்று பல்வேறு இறுதி ஆசைகளைக் கூறுவார்கள். ஆனால் எந்தத் தகப்பனும் இறந்தபின்னர் தங்கள் பிள்ளைகளோடு வந்து வாழ்வேன் என்று கூறமுடியாது; வாழவும்  முடியாது; அவர்களுக்கு ஆலோசனைகள் கூறமுடியாது. 

உலகத் தகப்பனைப்போலவே நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தான் மரணமடையுமுன் தனது சீடர்களிடம் பேசினார். அதில் முக்கியமானதுதான் இன்றைய தியான வசனத்தின் முதல் பகுதி. அவர் கூறுகின்றார், நான் உலகினில் உங்களுடன் இல்லை என்பதற்காக நீங்கள் வருந்தவேண்டாம்;  "நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்." என்று. மேலும், நான் உலகினில் இல்லை என்பதால் உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள் என்கின்றார். ஆம், நமது ஆண்டவர் என்றென்றும் வாழ்கின்றவர். "மரித்தேன்ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்,  நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்." (வெளி 1:18) என்று கூறவில்லையா ? 

ஆம் அன்பானவர்களே, இன்றைய தியான வசனத்தின் மூலம் இயேசு கிறிஸ்துத் தம்மை விசுவாசித்து ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் கூறும் செய்தி, அவர் நம்மை விட்டு எங்கும் சென்றுவிடவில்லை; மாறாக, நம்மோடுதான் இருக்கின்றார் என்பதுதான். இதனை நாம் மெய்யாகவே உணர்ந்துகொள்ள முடியும். அவர் நம்மோடு இருப்பதை நாம் உணர்ந்துகொள்வோமானால் நாம் அவரது பிள்ளைகளாய் வாழ்கின்றோம் என்று பொருள். "நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்." ( யோவான் 14 : 20 ) என்று இயேசு மேலும் கூறுகின்றார். 

இடதுசாரி சிந்தனைகொண்டு நான் கிறிஸ்துவை அறியாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தபோது இயேசு கிறிஸ்துவை, சாக்ரடீஸ், பிளாட்டோ போல  சாதாரண ஒரு சிந்தனைவாதி என்றுதான் கூறிக்கொண்டிருந்தேன். கம்யூனிச சிந்தனைவாதிகள் அனைவருமே அப்படித்தான் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இன்று அந்த உலக அறிஞர்கள் அனைவரும்  மரித்து மண்ணொடுமண்ணாகப் போய்விட்டார்கள். ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து,  "நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்" என்று கூறிய வார்த்தையின்படி எனக்குத்  தன்னை வெளிப்படுத்தித் தான் உயிரோடிருப்பதை எனது தனிப்பட்ட வாழ்வில் மெய்ப்பித்தார்.  

இன்றைய தியான வசனத்தின் இறுதியில் இயேசு கூறுகின்றார், "நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்" என்று. இது நமது பாவத்துக்குச் செத்து நீதிக்குப் பிழைத்திருக்கும் வாழ்வைக் குறித்து இயேசு கூறுவதாகும். இதற்காகவே அவர் சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார். இதனையே அப்போஸ்தலரான பேதுரு,  "நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்". (1 பேதுரு 2:24) என்று குறிப்பிடுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்து இயேசுவை வாழ்வில் ஏற்றுக்கொண்ட எவரும் திக்கற்றவர்களல்ல; அனாதைகளல்ல. மாறாக, என்றும் உயிருள்ள தகப்பனைத் தங்களோடு கொண்டவர்கள்; அதிகாரம் மிகுந்த ராஜாவின் பிள்ளைகள்.  வெளியுலகம்  வேண்டுமானால் அவரைக் காணாமலிருக்கலாம் ஆனால் கிறிஸ்துவுக்குள் வாழும் நாமோ அவரைக் காண்கின்றோம். எனவே தைரியமாக நமது வாழ்வைத் தொடர்வோம். 

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1634                                                                      ஆதவன் 29.07.2025 செவ்வாய்   

"மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்..." ( உபாகமம் 8:3, மத்தேயு 4 : 4  & லூக்கா 4:4 )

மனிதர்கள் பலரும் இந்த உலகத்தின் செல்வங்கள் மட்டுமே தங்களுக்கு நிம்மதியான, மேலான ஒரு வாழ்க்கையினைக் கொடுக்கமுடியுமென்று எண்ணிக்கொண்டு வாழ்கின்றனர். ஆனால் உலகினில் நாம் பிழைப்பதற்கு உலக செல்வங்கள் மட்டும் போதாது அவற்றைவிட தேவனுடைய கிருபை நமக்கு மிகமிக அவசியம் என்பதனை இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது.  தேவன் கிருபையாய்  ஒரு வார்த்தைசொன்னால் நமது வாழ்க்கை முற்றிலும் மாறும்; வாழ்வடையும். ஆம், உலக செல்வங்களால் மட்டுமல்ல, தேவ கிருபை இருந்தால் மட்டுமே நாம் உலகினில் பிழைத்து  வாழ முடியும். 

மிகச் சமீபத்தில் எனது வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்:- ஒரு நபரை எனக்குத் தெரிந்த சகோதரர் ஒருவர் என்னிடம் அறிமுகப்படுத்தினார். அந்த நபர் வெளிநாடுகளில் வேலைசெய்து அதிக அளவில் பொருள் சம்பாதித்து திரும்பியவர். பல்வேறு இடங்களில் சொந்தமாக மனைவி பெயரிலும் தனது பெயரிலும் நிலங்கள் வாங்கிக் குவித்துள்ளார். வங்கியிலும் அதிக அளவு பணம் உண்டு. ஆனால் சமீபகாலமாக அவரது வீட்டில் ஒற்றுமையில்லாத பிரச்னை. 

இப்போது அவருடன் அவரது மனைவி பிள்ளைகள் பேசுவது கிடையாது. அவருக்கு உணவளிப்பதுகூடக்  கிடையாது. அவர் மூன்று வேளையும் ஹோட்டல்களில் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார். வாழ்வில் நிம்மதியில்லை. தற்கொலைசெய்து உயிரை மாய்த்துக்கொள்ள சிந்தனையுள்ளவராக இருக்கின்றார். "பிரதர், இவருக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்" என்று என்னிடம் அந்தச் சகோதரர் கூறினார். 

அவருக்காக ஜெபித்தபோது, ஒருவாரமாக எனக்குத் தேவன் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆனால் ஒருநாள் காலை எட்டுமணியளவில் திடீரென்று இன்றைய தியான வசனத்தை தேவன் எனக்கு அளித்து, "இதுதான் அவனுக்கு நான் கூறும் பதில்" என்றார். "எனது வார்த்தைக்கு அவன் கீழ்ப்படிந்தால் அவனது வாழ்வு மாறும்" என்றார்.  பின்னர் விசாரித்தபோது தெரிந்தது அந்தச் சகோதரன் பணம், சொத்து சேர்க்கும் ஆசையில் இருந்தாரேத்தவிர மனைவி மக்களை நன்கு கவனிக்கவில்லை  என்பது. அவரிடம் தேவனது பதிலை எடுத்துக்கூறி, "நீங்கள் பணம் சொத்து சேர்ப்பதில் செலுத்தும் ஆர்வத்தை ஆண்டவரது வார்த்தைகளைக் கேட்பதிலும் அவற்றுக்குக்  கீழ்ப்படிவதிலும் காட்டுங்கள், தேவன் உங்கள் நிலைமையை மாற்றுவார்" என்று கூறினேன்.  

ஆம் அன்பானவர்களே, அந்த நபரிடம் "அப்பம்" அதிகமாக இருக்கின்றது, ஆனால் தேவனுடைய வார்த்தை இல்லாததால் அவருக்குப் பிழைக்க வழியில்லாமலிருக்கின்றார்.  இதனையே தேவன் எனக்கு உணர்த்தினார். 

இதனையே  நாம் உபாகமம் நூலில் வாசிக்கின்றோம், "அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு ....." ( உபாகமம் 8 : 3 ) என்று. ஆம் சிலவேளைகளில் தேவன் நம்மைச் சிறுமைப்படுத்தி, பசியினால் வருந்துவது மனிதன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை நமக்கு  உணர்த்தும்படிக்காகவும் இருக்கலாம்.  

எனக்குத் தெரிந்த பல குடும்பங்களில் இத்தகைய நிலைமை இருப்பதை  அறிவேன். பணத்துக்கோ, சொத்துசுகங்களுக்கோ குறைவிருக்காது, ஆனால் குடும்ப சமாதானமில்லாத நிலைமை அதிகமாக காணப்படுகின்றது. இத்தகைய நிலைமை இருக்குமானால் அதற்குத் தேவன் தரும் தீர்வு இதுதான். பணம், சொத்து, இவற்றுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை தேவனுக்குக் கொடுங்கள் என்பதே.  அன்பானவர்களே, அப்பத்தினால் மட்டுமல்ல தேவனது வார்த்தையினாலும்தான் நாம் பிழைக்க முடியும். தேவ வார்த்தைகளை நமக்குள் வாங்கி அவற்றுக்குக் கீழ்ப்படிந்து வாழ முயலுவோம். அப்படி வாழும்போது மட்டுமே பிரச்சனைகள் மாறமுடியும்; நாம் பிழைக்கமுடியும்; செழிக்கமுடியும். 

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1635                                                                      ஆதவன் 30.07.2025 புதன்    

"உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்; நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்." ( ஏசாயா 44 : 24 )

இன்றைய தியான வசனம் நமக்கு நம்பிக்கையும் திடனும் அளிப்பதாக இருக்கின்றது. நாம் இன்று பல்வேறு கவலைகளால், பிரச்சனைகளால் துன்புறும்போது மனம் தளர்வடைந்துவிடுகின்றோம். இந்தத் தளர்வு நமக்குத் தேவையில்லாதது என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

தேவனாகிய நானே இந்த வானங்களையும் அண்டசராசரங்களையும் உருவாக்கி ஆண்டுவருகின்றேன். இதற்கு நான் வேறு அவருடைய உதவியையும் நாடவில்லை. நான் ஒருவராய் இந்த வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினேன். இவற்றை உருவாக்கிய என்னால் உனக்கு உதவிடமுடியாதா? என்கின்றார் உன்னதமான தேவன்.  

விஞ்ஞானிகள் கூறும் அண்டசராரசாரத்தின் ஒரு பகுதியான நமது பால்வெளி குறித்து நாம் அறியும்போது ஆச்சரியமடைகின்றோம். நமது தேவனின் வல்லமையினை உணர்ந்துகொள்கின்றோம். 

"Galaxy" என்ற சொல் கிரேக்க மொழியிலுள்ள galaxias என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது, அதற்கு அர்த்தம் "பாலைப்போல" என்பதாகும்.  இது, நம்முடைய சூரிய குடும்பம் அடங்கியுள்ள "பால்வெளி" விண்மீன் தொகுப்பைக் குறிப்பதாகும். ஒரு விண்மீன் தொகுப்பில் சராசரியாக 10 கோடி (100 million) விண்மீன்கள் இருக்கின்றன. சிறிய விண்மீன் தொகுப்பு ஆயிரத்திற்கு குறைவான விண்மீன்களுடன் காணப்படும்; மிகப் பெரியவை, சுமார் நூறு இலட்சம் கோடி (100 trillion) விண்மீன்களை உள்ளடக்கிய சூப்பர் ஜெயன்ட் விண்மீன் தொகுப்பாகும். ஒவ்வொரு விண்மீனும் அதன் தொகுப்பின் மத்தியைச் சுற்றிச்  சுழல்கின்றது.

இத்தகைய பரந்த அண்டத்தைப்படைத்த தேவன் நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட விதத்தில் அறிந்திருக்கின்றார்; நம்மோடு உறவாடி உறவுடன் வாழ விரும்புகின்றார். இது மிகப்பெரிய ஆச்சரியமல்லவா? நெகேமியா, "நீர் ஒருவரே கர்த்தர்; நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்; அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்; வானசேனைகள் உம்மை பணிந்துகொள்ளுகின்றன." ( நெகேமியா 9 : 6 ) என்று கூறுகின்றார். அன்பானவர்களே, சோதனை காலங்களில் தேவனின் இந்த வல்லமை மகத்துவங்களை எண்ணிப்பார்ப்போமானால், நிச்சயமாக நமது விசுவாசம் வலுப்படும். 

லீஸ்திராவிலே ஒரு முடவனை அப்போஸ்தலரான பவுலும் பர்னபாவும் குணமாக்கினர். அதனைக்கண்ட அங்கிருந்த மக்கள் பர்னபாவை ஜூபிடர் என்றும் பவுலை மெர்க்குரி என்றும் வழிபட ஆயத்தமாகிவிட்டனர். அப்போது பவுலும் பர்னபாவும் மக்களைநோக்கி, "மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 14 : 15 ) என்று கூறுகின்றனர். 

நாம் வழிபடும் தேவன் வீணான தேவனல்ல அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவன். ஆனால் லிஸ்த்தீரா மக்களைப்போல நம்மிலும் பலர்  பலவேளைகளில் குறுகிய எண்ணம்கொண்டு அற்புதங்களையும் அதிசயங்களையும் நாடி தேவனை மறந்து தேவையற்றச் செயல்களில் ஈடுபட்டுவிடுகின்றனர்.  

வானத்தையும் பூமியையும் படைத்த "தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுது கொள்ளுங்கள்" (வெளி 14:7) இத்தகைய வல்லமையும் மகத்துவமும் மிகுந்தவரை நாம் மெய்யாகவே உணர்ந்து தொழுதுகொள்ளும்போது நம்மில் விசுவாசம் உறுதிப்படுவதுடன் நமது பயங்களும் பிரச்சனைகளும் மறைந்து விடுவதை நாம் வாழ்வில் கண்டுகொள்ளலாம். 

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1636                                                                      ஆதவன் 31.07.2025 வியாழன்  

"அவர் அந்தகாரத்தை வரப்பண்ணுவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் இடறுவதற்கு முன்னும், நீங்கள் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள்." ( எரேமியா 13 : 16 )

தேவனில்லாத வாழ்க்கை;  தேவனைத் தேடாத வாழ்க்கை, எப்போதும் அமைதியும் ஆறுதலும் தருவதாக இருக்காது. காரணம், அமைதியாக மகிழ்ச்சியாக இருக்கும்போதே எல்லோரது வாழ்விலும் சிலவேளைகளில் அந்தகார இருள் ஏற்படலாம். நல்ல ஒரு காரியம் நடக்கும் என எண்ணி எதிர்பாத்திருக்கும்போது அந்தகார இருள் ஏற்பட்டு வாழ்க்கையின் மகிழ்ச்சி போய்விடலாம். இத்தகைய வேளைகளில் கர்த்தருக்குக் காத்திருப்பவர்களுக்குத் திட நம்பிக்கை உண்டு. 

இன்றைய வசனம் தேவனைத்  தேடி அவருக்கேற்ற ஒரு வாழ்க்கை வாழவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.  அதாவது, நமது வாழ்வில் அந்தகாரத்தை தேவன் வரப்பண்ணுவதற்கு முன்,  இருண்ட மலைகளில் நம் கால்கள் இடறுவதற்கு முன், நாம் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன் நாம் நம்  தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தவேண்டியது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மை பயிற்சிகளை அரசாங்கமும் சில தொண்டு நிறுவனங்களும் ஏற்பாடு செய்வதுண்டு. பேரிடர் ஏற்படுமுன் மக்கள்  என்னென்ன முன்னேற்பாடுகள் செய்யவேண்டும் என்று இந்தப் பயிற்சிகளில் அறிவுறுத்தப்படுகின்றது. கடந்த கொரோனா காலத்தில் அரசாங்கம் அறிவித்த அறிவிப்புகளை நாம் அறிவோம்; அரசு செய்த முன்னேற்பாடுகளை நாம் அறிவோம். மருத்துவ மனைகளில் அதிக அளவில் படுக்கைகளும், மருந்துகளும் முன்னேற்பாடாகத்   தயாராக வைக்கப்பட்டிருந்தன. 

இதுபோல நாம் ஆவிக்குரிய வாழ்வில் சில தயாரிப்புகளைச் செய்யவேண்டியது அவசியம். பெரிய இடர்பாடாக நமது வாழ்வில் அந்தகாரத்தை தேவன் வரப்பண்ணுவதற்கு முன்,  இருண்ட மலைகளில் நம் கால்கள் இடறுவதற்கு முன், நாம் நம்  தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தவேண்டியது அவசியம். நமது வாழ்க்கையை கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து ஒரு மகிமையான வாழ்வு வாழவேண்டியது அவசியம். வெறும் ஆராதனை செய்வது மட்டுமல்ல, நமது வாழ்கையினையும் நாம் தேவனுக்கேற்றபடி, தேவ வசனங்களுக்கு ஏற்றப்படி மாற்றிக்கொள்ளவேண்டியது அவசியம். 

இறுதி நேரத்தில் நமது தேவைக்காக அவரைத் தேடுகின்றவர்களாக இருப்போமானால் நாம் பரிதபிக்கக்கூடியவர்களாகவே இருப்போம். "அவர்கள் தங்கள் முகத்தையல்ல, தங்கள் முதுகை எனக்குக் காட்டினார்கள்; தங்கள் ஆபத்துக்காலத்திலோ எழுந்து எங்களை இரட்சியும் என்கிறார்கள். நீ உனக்கு உண்டுபண்ணின தேவர்கள் எங்கே? உன் ஆபத்துக்காலத்தில் உன்னை இரட்சிக்கக்கூடுமானால் அவைகள் எழும்பட்டும்..." ( எரேமியா 2 : 27, 28 ) என்கிறார் தேவனாகிய கர்த்தர். 


கர்த்தருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது நமது வாழ்வில் துன்பமே வராது என்று பொருளல்ல, ஆனால் அப்படி நாம் வாழும்போது துன்பத்தோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் தேவன் நமது வாழ்வில் உண்டாக்குவார் என்று வேதம் கூறுகின்றது. (1 கொரிந்தியர் 10:13)

ஆனால், துன்மார்க்கமாய் வாழ்ந்து, தேவனை மறந்து அவருக்கு மகிமைச் செலுத்தாமல் வாழும்போது நமது வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் சிக்கலானவைகளாக இருக்கும்; அவற்றை நாம் மேற்கொள்வது கடினமாக இருக்கும். இதனையே இன்றைய தியான வசனத்தில்  எரேமியா நமக்கு அறிவுரையாகக் கூறுகின்றார்.  

அன்பானவர்களே, தேவனுடைய வார்த்தைகளை நமக்குள் உறுதியாக காத்துக்கொண்டு அவற்றின்படி வாழ்வோம்.  கேடான சம்பவங்கள் வாழ்வை வருத்துமுன் கர்த்தருகேற்ற மகிமையை அவருக்குச் செலுத்தி பரிசுத்தமான வாழ்வு வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். எனவேதான் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள்" (லூக்கா 11:28) என்று கூறினார். இப்படி பாக்கியவான்களாக வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். 


No comments: