இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Sunday, January 29, 2023

புரியாத சத்தியத்தைப் புரியாமல் "ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறுவது நாம் பொய்யர்கள் என்பதையே காட்டும்.

ஆதவன் 🌞 734 🌻 ஜனவரி 31,  2023 செவ்வாய்க்கிழமை 

"சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது." ( 1 கொரிந்தியர் 1 : 18 )

சிலுவையைப்பற்றிய உபதேசம் என்பது என்ன?  "கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமது பாவங்களுக்காகவே பாடுபட்டு சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்டு இரத்தம்சிந்தி அதன்மூலம் நித்திய இரட்சிப்பை ஏற்படுத்தினார் என்பதும், இந்தச் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும்போது நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு இரட்சிப்பு அனுபவத்தைப் பெறுவோம்" என்பதும்தான்.

இது சாதாரண மனித அறிவினால் புரிந்துகொள்ளமுடியாததும் ஏற்றுக்கொள்ளமுடியாததுமாகும். காரணம் மனித ஜென்ம சுபாவம் ஆவிக்குரிய சத்தியங்களுக்கு முரணாகவே எப்போதும் இருக்கின்றது. இதனால்தான் பவுல் அடிகள், "ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்ற பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்." ( 1 கொரிந்தியர் 2 : 14 ) என்று கூறுகின்றார். ஆம், கெட்டுப்போகின்ற உலக மனிதர்களுக்கு இது பைத்தியக்கார உபதேசம்போலவே இருக்கும்.

1993 ஆம் ஆண்டுக்குமுன் கம்யூனிச சித்தாந்தத்துக்கு அடிமையாகியிருந்தபோது நானும் இப்படியே எண்ணிக்கொண்டிருந்தேன். இயேசு கிறிஸ்து எனும் ஒரு மனிதன் இறந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆன்பின்பும் அதுபற்றியே முட்டாள்தனமாகப் பேசிப் பேசி கதை விட்டுக்கொண்டிருக்கிறார்கள் என எண்ணிக்கொண்டேன். ஆனால் வெறுப்போடு அல்ல; புரியாமல் நான் அப்படி எண்ணியதால் இரக்கம் பெற்றேன். கிறிஸ்துவை அறிந்துகொண்டேன். 

 இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் மரணமடைந்த ஒருவரது இரத்தம் நமது பாவங்களை எப்படி மன்னிக்க முடியுமென்று மனித அறிவின் மூலம் ஆராய்ச்சி செய்தால் நாம் கெட்டுபோனவர்களும் பைத்தியமானவர்களுமாகவே இருப்போம். 

இன்று கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலரும்கூட சிலுவையின் சத்தியங்களை வெறுமனே வாயினால் கிளிப்பிள்ளைபோலக் கூறிக்கொள்கிறார்களே தவிர அனுபவபூர்வமாக இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறுவதற்கு முயலுவதில்லை. ஞாயிறு மறைக்கல்வி வகுப்பில் படித்தவற்றையும் பிரசங்கத்தில் கேட்பதைவைத்தும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்பு உண்டு என்று கூறிக்கொள்கின்றனர். 

புரியாத சத்தியத்தைப் புரியாமல் "ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறுவது நாம் பொய்யர்கள் என்பதையே காட்டும். ஆண்டவரே எனக்கு உண்மையைப் புரியவைக்க கிருபைசெய்யும் என வேண்டும்போது மேலான சத்தியங்களை அறிந்துகொள்வோம். 

தேவனது வல்லமை மகத்தானது. ஆம், சுவிசேஷ சத்தியங்களை பைத்தியக்கார உபதேசம் எனக் கூறிக்கொண்டிருந்த பலர் அதிசயப்படத்தக்க விதத்தில் பிரசங்கங்களைக் கேட்டு இரட்சிப்பு அனுபவம் பெற்றுள்ளனர். பல சாட்சிகள் இதற்கு உண்டு. சுவிசேஷ கூட்டங்களைக் கேலி செய்தவர்கள்,  கூட்டங்கள் நடத்தவிடாமல் தடைசெய்தவர்கள், வேதாகமத்தை தீயிட்டு எரித்தவர்கள் பலர் இரட்சிக்கப்பட்டு கிறிஸ்துவுக்குச் சாட்சியாக வாழ்வதை நாம் இன்றும் காண்கின்றோம்.  

இதனையே, "தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று." ( 1 கொரிந்தியர் 1 : 21 ) என்று பவுல் அடிகள் கூறுகின்றார். சுய லாபம் தேடும் கடின மனதுள்ள துன்மார்க்கருக்கு சிலுவையைப்பற்றிய உபதேசம் பைத்தியமாயிருக்கிறது, ஆனால் அதனை ஏற்றுக்கொண்டு வாழும் இரட்சிக்கப்பட்டிருக்கின்ற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Friday, January 27, 2023

மகிழ்ச்சியுடன் அடுத்து வருவதை எதிர்பார்த்திருப்போம்.

ஆதவன் 🌞 733 🌻 ஜனவரி 30,  2023 திங்கள்கிழமை 

"அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்." ( ரோமர் 8 : 28 )

இன்றைய தியானத்துக்குரிய வசனத்தை நாம் வாசிக்கும்போது அது, "தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மையை நடக்கிறது" என்று கூறாமல் "நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது" என்று கூறுவதைக் கவனிக்கலாம். 

தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு அனைத்தும் நன்மையாகவே நடக்கிறது என்று நாம் எண்ணிவிடக் கூடாது. நமது வாழ்க்கையில் நன்மையையும் தீமையும் நடக்கலாம். ஆனால் நாம் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களாக இருந்தால் நமக்கு நடக்கும் தீமையையும் அவர் நன்மைக்கேதுவாக மாற்றிடுவார். 

இதற்கு யோசேப்பின் வாழ்க்கை நமக்குச்  சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றது. தேவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்தாலும் யோசேப்பின் இளமைப்பருவம் துன்பத்திலேயே தொடர்ந்தது. தாயை இழந்து, சகோதரர்களால் பகைக்கப்பட்டு, சகோதரர்களே அவனை இஸ்மவேலருக்கு 20 வெள்ளிக்காசுக்கு விற்றுவிட்ட பின்பும் அவனது துன்பம் முடிவுக்கு வரவில்லை.  எகிப்தில் அநியாய குற்றம் சுமத்தப்பட்டுச் சிறைவாழ்க்கை வாழக்கூடிய அவல நிலைமை. 

ஆனால் தேவன் அவனோடே இருந்தார். அவனது அனைத்துத் துன்பங்களையும் நன்மையாக மாற்றினார். ஆம், யோசேப்பின் துன்பம் அவனை எகிப்தின் பிரதம மந்திரியாக மாற்றிட தேவன் அனுமதித்தத்  துன்பம்; அதற்கானத திட்டம்.  "நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்". ( ஆதியாகமம் 50 : 20 ) என யோசேப்பு மகிழ்ச்சியுடன் கூறுகின்றான். 

அன்பானவர்களே, நாம் தேவனுக்கு ஏற்புடையவர்களாக வாழும்போதும் நமக்குத் துன்பங்கள் ஏற்படுகின்றதென்றால் தேவன் நமக்கு வேறு திட்டம் வைத்திருக்கின்றார்; நமது துன்பங்களை நன்மைக்கேதுவாக மாற்றுவார் என்று பொருள். மேலும் நாம் மேலும் மேலும் அவரை அறிந்துகொள்ளவும் தேவன் நமது துன்பங்களை  நன்மையாக மாற்றி அவரை அறியச் செய்கின்றார்.  எனவேதான் சங்கீத ஆசிரியர், "நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்." ( சங்கீதம் 119 : 71 ) என்கின்றார். 

எனவே, நாம் தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது ஏற்படும் துன்பங்களைக்கண்டு அஞ்சிடாமல், கலங்கிடாமல்  அதற்கு அப்பால் தேவன் நமக்கு வைத்திருக்கும் நன்மைகளை எண்ணி மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருப்போம். ஆம்,   தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று கூறப்பட்டுள்ள தேவ வார்த்தைகள் மெய்யானவைகள். மகிழ்ச்சியுடன் அடுத்து வருவதை எதிர்பார்த்திருப்போம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

கர்த்தரைத் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தேடுவோம்

ஆதவன் 🌞 732 🌻 ஜனவரி 29,  2023 ஞாயிற்றுக்கிழமை 

"மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 17 : 26 )

நாம் இந்த பாரத நாட்டில், தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு மாவட்டத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட ஊரில் பிறந்துள்ளோம் என்றால் அது தேவனால் முன் குறிக்கப்பட்டது. நாம் எங்கு, யாருக்குக் குழந்தையாக பிறக்கவேண்டுமென்பது தேவனால் முன் குறிக்கப்பட்டது. நாம் நமது குடியிருப்பை மாற்றுகின்றோம் அல்லது திருமணமாகி வேறு ஒரு இடத்துக்குச் செல்கிறோம் என்றால் அதுவும் தேவனால் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டது.  இதனையே, "முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்தேனே நகரில் மார்ஸ் மேடையில் நின்று அப்போஸ்தலனாகிய பவுல் இந்த வசனத்தைக் கூறுகின்றார். இப்படி நம்மை குறிப்பிட்ட இடத்தில வாழச் செய்ய காரணம் என்ன என்பதையும் அவர் அடுத்த வசனத்தில் கூறுகின்றார்:-  "கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார். அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 17 : 27 ) 

இந்த மனிதர்கள் எப்படியாவது தன்னை அறியவேண்டும் என்பதற்காக தேவன் இப்படி மனிதர்களைக் குறிப்பிட்ட இடங்களில் வாழச் செய்துள்ளார் என்று கூறுகின்றார். நாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர் நமக்குத் தூரமானவர் அல்ல.  நமது வேதாகமம் இப்படி பல்வேறு இடங்களில் வாழ்ந்த சுமார் 35 நபர்களால்தான் எழுதப்பட்டது. பல்வேறு சூழல்களில் வாழ்ந்து உண்மை தேவனைக் கண்டறிந்தவர்கள் இவர்கள். 

சிலர், "இந்த ஊரில் வாழவே எனக்குப் பிடிக்கவில்லை"  என்று  முறுமுறுப்பார்கள்.  சிலர் வெளிநாடுகளில் வாழ்ந்து அந்த அனுபவத்தால் நமது நாட்டைக் குறைகூறிக்கொண்டிருப்பார்கள். எதெற்கெடுத்தாலும் பிற வளர்ந்த நாடுகளுடன் நமது நாட்டைஒப்பிட்டு குறைகூறிக் கொண்டிருப்பார்கள்.

இருப்பதைக்கொண்டு நிறைவடைவதையே தேவன் விரும்புகின்றார். மேலும் எப்போதும் குறைகளையே பார்க்காமல் நமது நாடு, நமது ஊர் இவற்றின் சிறப்புகளையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். பொதுவாக நமது நாட்டிற்கு  பிற நாடுகளைவிட சிறப்புகள் பல உண்டு.  இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதுபோல நாம் இங்கு இருக்கும்வரை நமக்கு தேவன் இந்த நாட்டில் தந்துள்ள நன்மைகள் தெரியாது. வெளி நாடுகளில் சென்று தங்கியிருக்கும் பெரும்பாலான மக்கள் நமது சொந்த நாட்டில் உள்ள சூழ்நிலைகளையே விரும்புகின்றனர். 

எனவே தேவன் நமக்குத் தந்துள்ள நாட்டிற்காக; நமது வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்காக நன்றி சொல்பவர்களாக வாழ்வோம்.  "மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்." என்கின்றது இன்றைய வசனம். ஆம், உலகின் கோடிக்கணக்கான மனிதர்களது இரத்தமும் வெறும் நான்கே நான்கு முக்கிய வகைகளுக்குள் அடக்கமாகியுள்ளது. இது தேவன் நாடு, மொழி, இனம் இவைகளுக்கு அப்பாற்பட்டுச் செயல்புரிபவர் என்பதை நமக்கு உணர்த்துகின்றது. 

தேவன் தந்துள்ள வாழ்க்கைச் சூழலுக்கு நன்றி கூறுவோம். நாடு, மொழி, கலாச்சாரம் இவைகளுக்கு அப்பாற்பட்டக்  கர்த்தரைத் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தேடுவோம். "தேடுகிற எவனும் கண்டடைகிறான்."

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Thursday, January 26, 2023

"சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்"

ஆதவன் 🌞 731 🌻 ஜனவரி 28,  2023 சனிக்கிழமை 

"நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்." ( லுூக்கா 6 : 45 )

இயேசு கிறிஸ்து கூறிய இந்த வசனத்தின் பொருளில் ஒரு தமிழ் பழமொழியும்  உண்டு. அது, "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது. நம்மிடம் இருப்பதுதான் நம்மிலிருந்துவெளிப்படும்; நம்மிடம் இருப்பதைத்தான் நாம் பிறருக்குக் கொடுக்க முடியும். 

இதனை நாம் நமது அனுபவங்களில் பார்க்கலாம். பலர் கூடியுள்ள வீட்டு நிகழ்ச்சிகளிலோ கடைவீதிகளில் சந்திக்கும்போதோ  சிலர் எப்போதும் சொத்துகளைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். "அங்கே ஒரு அரை ஏக்கர் கிடக்கிறது, இங்கே ஒரு பத்து சென்ட் நிலம் கிடக்கிறது..." என்பதாக இருக்கும் இவர்களது பேச்சு. 

பெண்கள் பெரும்பாலும் சேலைகள், நகைகள் பற்றியே பேசுவார்கள். சிலர் எப்போதும் பக்கத்து வீட்டுக்காரர்களைப்பற்றியே பேசுவார்கள். அவர்களது குறைகள், அல்லது அவர்கள் வீட்டில் அடக்கும் நிகழ்ச்சிகள் இவைகளையே பேசுவார்கள். மேலும் சிலர் தங்களைப்பற்றி, தங்கள் குடும்பம், பிள்ளைகள், தங்களது தொழில், பதவி இவைகளைப்பற்றியே பேசுவார்கள். மற்றவர்கள் இவர்கள் பேசுவதைக் கவனிக்கிறார்களா என்றுகூட இவர்கள் பார்ப்பதில்லை.  

ஆம், இவர்கள்  ஏன் இப்படிப் பேசுகிறார்கள் என்று பார்ப்போமானால் அந்த எண்ணங்களே இவர்களது இருதயத்தில் நிறைந்துள்ளது என்று பொருள். அவையே வார்த்தைகளாக வெளிவருகின்றன. 

ஆவிக்குரிய காரியங்களிலும் இதுவே நடைபெறுகின்றது. தங்களை ஆவிக்குரியவர்கள் என்று கூறிக்கொண்டாலும் பண ஆசை உள்ளவர்கள், பேசும் பேச்சுக்கள் ஜெபங்கள் இவை அனைத்தும் இவர்களது இந்த ஆசையைத் தீர்ப்பதற்காகவே இருக்கும். 

உலக ஆசீர்வாதங்களை மட்டுமே  பிரசங்கிக்கும் ஊழியர்களின்  இருதயமும் உலக இச்சையால் நிரம்பியவையே. இத்தகைய ஊழியர்களால் கிறிஸ்துவின் ஆவிக்குரிய சத்தியங்களைப் பிரசங்கிக்க முடியாது. தங்களது இருதயத்தின் ஆசையையே அவர்கள் மற்றவர்களுக்குப் போதனையாகக் கொடுப்பார்கள். அவர்களது போதனைகள் மற்றும் செயல்பாடுகள் இவை இன்னும் அதிகம் பணம் சேர்க்கும் எண்ணத்தின் அடிப்படையிலேயே இருக்கும்.

நமது இருதயத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக பாடுகள் பட்டு உருவாக்கிய இரட்சிப்பு குறித்த ஆர்வமும், அவர்மேல் உண்மையான அன்பும்  இன்னும் நாம் ஆவிக்குரிய வளர்ச்சிநிலையினை அடையவேண்டும் எனும் எண்ணமும் இருக்குமானால் அவை குறித்தே பேசுவோம். அவைகள் குறித்தே சிந்திப்போம்.

அன்பானவர்களே, நமது இருதயத்தில் எத்தகைய சிந்தனைகள் இருக்கின்றன என்பதை நிதானித்துப்பார்ப்போம். இன்னமும் இருபத்திநான்கு மணி நேரமும் உலக காரியங்களையே சிந்தித்து, அவைகளையே பேசிக்கொண்டிருப்போமானால் நாம் நம்மை ஆவிக்குரிய மக்கள் என்று கூறிக்கொள்வது பொய்.   நமது உண்மை நிலையினை தேவன் அறிவார்.  "நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்."
( 1 யோவான்  3 : 20 )

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

நமது விசுவாசத்தை வாழ்வில் வெளிப்படுத்துவோம்;

ஆதவன் 🌞 730 🌻 ஜனவரி 27,  2023 வெள்ளிக்கிழமை 

"தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுடாமோ?" ( யாக்கோபு 2 : 19, 20 )


இந்த உலகத்திலுள்ள மக்கள் பெரும்பாலும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான். ஏதாவது ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்களாகவே இருக்கின்றனர். இவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை அற்பமாக எண்ணுவதும், கேலி பேசுவதும் உண்டு. 

ஆனால் இந்த உலகத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான் அதிக பாவச் செயல்களில் ஈடுபடுகின்றார்கள். நான் கம்யூனிச இயக்கத்தில் இருந்தபோது பல கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களைப் பார்த்துள்ளேன். பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களைவிட நல்ல நேர்மையான  வாழ்க்கையே வாழ்கின்றனர். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எல்லோருமே நல்லவர்களாய் இருந்திருந்தால்  இந்த உலகம் அமைதிப் பூங்காவாக இருந்திருக்கும். ஆனால் அப்படி இல்லை. 

இதனையே அப்போஸ்தலரான யாக்கோபு இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் தெளிவுபடுத்துகின்றார். அதாவது நீ உன்னை கடவுள் நம்பிக்கை உள்ளவன் என்று கூறிக்கொள்கிறாய், அது நல்லதுதான் ஆனால் பிசாசுகளும் கூட கடவுள் ஒருவர் உண்டு என நம்பி நடுங்குகின்றன. நீ உனது செயல்களை மாற்றிடாமல் இருந்தால் உனக்கும் பிசாசுக்கு வித்தியாசமில்லை என்பதே அவர் கூறுவது.

தேவனை விசுவாசிக்கிறேன் என்று கூறிக்கொண்டு ஆலயங்களுக்குச் செல்வதும், ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்வதும்,  காணிக்கைகள் கொடுப்பதும், வேதாகமத்தை வாசிப்பதும் மட்டும் போதாது. நமது செயல்பாடுகள் தேவனுக்கேற்ற செயல்பாடுகளாக இருக்கவேண்டும். 

தேவனை விசுவாசிக்கும் நாம் நேர்மையாக வாழ்ந்து பிறருக்குச் சாட்சியாக விளங்கவேண்டும். தேவனையும் ஆராதித்துவிட்டு வாழ்க்கையில் துன்மார்க்கச் செயல்பாடுகள் இருக்குமானால் நாம் தேவன்மேல் கொண்டுள்ள விசுவாசமும், நமது தேவ பக்தியும் வீண். நாம் ஒரு செத்த வாழ்க்கையே வாழ்கின்றவர்களாக இருப்போம். அதனையே இந்த வசனம், "வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டாமோ?" என்று கூறுகின்றது.

கடவுள்மேலுள்ள நமது விசுவாசம் உண்மையானால் அவரை முற்றிலும் நம்புகிறவர்களாக இருப்போம். அவரால் எனது வாழ்க்கையில் தேவையான அனைத்தையும் தர முடியும் என்று நம்புகிறவர்களாக இருப்போம்.  

இன்றைய வசனத்தைத் தொடர்ந்து யாக்கோபு ஆபிரகாமின் விசுவாசத்தை எடுத்துக்கூறுகின்றார். ஆபிரகாம் தேவனை வெறுமனே விசுவாசிக்கமட்டும் செய்யவில்லை; விசுவாசத்தைச் செயலில் காட்டினார். ஜீவனுள்ள தேவனை விசுவாசிக்கும் நாமும் நமது விசுவாசத்தை வாழ்வில் வெளிப்படுத்துவோம்; அப்போதுதான் மற்றவர்களும்  தேவனை விசுவாசிக்கமுடியும்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Wednesday, January 25, 2023

நமது எண்ணம்போலவே நமது ஆவிக்குரிய வாழ்க்கையும் இருக்கும்.

ஆதவன் 🌞 729 🌻 ஜனவரி 26,  2023 வியாழக்கிழமை 

"உன் சரீரம் ஒருபுறத்திலும் இருளடைந்திராமல் முழுவதும் வெளிச்சமாயிருந்தால், ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறதுபோல உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்." ( லுூக்கா 11 : 36 )

ஆவிக்குரிய வாழ்வின் மிக முக்கிய ஒரு சத்தியத்தை இயேசு கிறிஸ்து இன்றைய வசனத்தில் கூறுகின்றார்.  பொதுவாக ஜெபிப்பது, உபவாசிப்பது, காணிக்கைகள் கொடுப்பது இவைகளையே கிறிஸ்தவத்தில் ஊழியர்களும் விசுவாசிகளும் முக்கியமானதாகக் கருதுகின்றனர். ஆனால் இயேசு கிறிஸ்து நமது சரீரம் தூய்மையானதாக இருக்கவேண்டுமென்று கூறுகின்றார். 

நமது உடலானது தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் தங்கியிருக்கும் ஆலயமாயிருக்கிறது. அதனால்தான் இயேசு கிறிஸ்து கூறுகின்றார், இந்த ஆலயமாகிய உனது சரீரம் இருளடைந்திராமல் முழுவதும் வெளிச்சமாயிருந்தால் ஒரு விளக்கு வெளிச்சம் கொடுப்பதுபோல நீ மற்றவர்களுக்கு வெளிச்சம் கொடுப்பவனாக இருப்பாய். வெளிச்சம் கொடுக்கும் வாழ்க்கையே இருளிலுள்ள மக்களுக்குக் கிறிஸ்துவை அறிவிக்க உதவிடும்.

அதாவது, நமது உடலால் நாம் பாவம் செய்யாமல் அதனைப் பரிசுத்தமாய்க் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். அப்போஸ்தலனாகியபவுல் அடிகளும் ,  "உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?" ( 1 கொரிந்தியர் 6 : 19 ) என்று கூறுகின்றார். 

இன்று பலஆவிக்குரிய கிறிஸ்தவர்களும் பரிசுத்த ஆவியானவரின் வரங்களைப்  பெற்று மக்களிடம் தங்களை வெளிச்சம்போட்டுக் காட்ட விரும்புகிறார்கள்.  சிறப்பான வரங்கள் தங்களுக்கு இருந்தால் அது மக்கள் மத்தியில் தங்களை மதிப்புமிக்கவர்களாக மாற்றுமென்று நினைத்து வரங்களுக்காக ஜெபிக்கின்றார்கள். ஆனால் தேவனுக்குமுன் நமது உடலால் நாம் எப்படி இருக்கின்றோம் என்று எண்ணிப்பார்க்கத் தவறிவிடுகின்றனர். 

நமது ஒவ்வொரு உறுப்புக்களாலும்  நாம் பாவம் செய்யும் வாய்ப்புகள் உண்டு. எனவே வரங்களுக்காக அல்ல; நம்மைத் தூய்மையானவர்களாகக் காத்துக்கொள்ள ஜெபிக்கவேண்டியதே முக்கியம். 

"ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்." ( 1 கொரிந்தியர் 3 : 17 ) என எச்சரிக்கிறார் பவுல் அடிகள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் "ஆகையால் உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு." ( லுூக்கா 11 : 35 ) என எச்சரிக்கிறார். நமது உடலை பரிசுத்தமாகக் காத்துக்கொள்ள நமது சுய முயற்சியால் கூடாது. எனவே அதற்கான பலத்தை முதலில் தேவனிடம் வேண்டுவோம். அப்போது தேவனது ஆவியானவர்தாமே நம்மை பரிசுத்த பாதையில் நடத்துவார். நமது எண்ணம்போலவே நமது ஆவிக்குரிய வாழ்க்கையும் இருக்கும்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Tuesday, January 24, 2023

கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்.

ஆதவன் 🌞 728 🌻 ஜனவரி 25,  2023 புதன்கிழமை 

"அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்." ( எபேசியர் 4 : 30 )

நாம் நமது பாவங்களிலிருந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் மீட்கப்படும்போது பரிசுத்த ஆவியானவரை முத்திரையாகப் பெற்றுக்கொள்கின்றோம்.  இந்த ஆவியானவர் நமக்குள்ளேயே இருக்கின்றார். நமக்கு வழிகாட்டுகின்றார், நாம் எப்படி நடக்கவேண்டுமென்று போதிக்கின்றார். 

ஆனால் தேவன் வலுக்கட்டாயமாக தனது எண்ணத்தை மனிதர்களிடம் திணிப்பது கிடையாது. அவர் மனிதர்களுக்கென்று தனிப்பட்ட உரிமையையும், முடிவெடுக்கும் திறனையும் கொடுத்துள்ளார். நமக்கு அறிவுரையும், வழிகாட்டுதலும் ஆவியானவர் தருவாரேத்  தவிர நம்மை அவற்றைக் கடைபிடிக்க வலுக்கட்டாயப் படுத்தமாட்டார். 

எனவேதான் அப்போஸ்தலரான பவுல், தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள் என்று கூறுகின்றார். நாம் தேவ வழிகளைவிட்டு விலகும்போது, தேவனுக்கு ஏற்பில்லாத செயல்களைச் செய்யும்போது, பேசும்போது அது ஆவியானவரைத் துக்கப்படுத்துகின்றது. 

நமது தாய், தகப்பன்களை உதாரணமாகக் கொண்டு இதனை நாம் புரிந்துகொள்ளலாம். நமது பெற்றோர்கள் நம்முடனேயே இருந்தாலும் நமது சில  செயல்கள் அவர்களைத் துக்கத்துக்குள்ளாக்குகின்றது. காரணம் அவர்கள் அவற்றில் பிரியப்படுவதில்லை. நமது பார்வையில் நாம் செய்வதும் பேசுவதும் சரிபோலத் தெரிந்தாலும்  அது சில வேளைகளில் அவர்களைத் துக்கப்படச் செய்கின்றது. 

இதுபோலவே, நமது செயல்பாடுகள் தேவனைத் துக்கப்படுத்துகின்றன. ஆவியானவர் உடனேயே நம்மைவிட்டு விலகிச் சென்றுவிடுவதில்லை. அவர் வேதனையோடு அமைதியாக இருக்கின்றார். ஆனால் நாம் தொடர்ந்து தேவனுக்கு எதிரானச் செயல்பாடுக்கைச் செய்யும்போது ஆவியானவரின் தொடர்பினையும் ஆலோசனைகளையும் இழந்துவிடுகின்றோம்.  தேவனைவிட்டு விலகிவிடுகின்றோம். 

அன்பானவர்களே, ஆவியானவரின் குரலைக்கேட்கும் அனுபவத்தையும் அப்படிக் கேட்டபடியே நடக்கவும் நாம் முற்படவேண்டும். இல்லையெனில் சாதாரண உலக மனிதர்களுக்கும் நமக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும். 

"நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்." ( சங்கீதம் 32 : 8, 9 )

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Monday, January 23, 2023

நமது விசுவாசத்தை வலுப்படுத்துவோம்.

ஆதவன் 🌞 727 🌻 ஜனவரி 24,  2023 செவ்வாய்க்கிழமை

"சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக." ( யாக்கோபு 1 : 7 )

ஜெபத்தைக்குறித்த ஒரு சத்தியத்தை இன்றைய வசனம் எடுத்துக் கூறுகின்றது. நாம் ஜெபிக்கும்போது தேவ சித்தமறிந்து ஜெபிக்கவேண்டியது அவசியம். மேலும், இன்றைய வசனம், ஜெபிக்கும்போது சந்தேகமில்லாமல் உறுதியாக ஜெபிக்கவேண்டும் என்று கூறுகின்றது.   

சிறு குழந்தைகளாய் இருந்தபோது நாம் நமது அம்மா அப்பாவிடம் ஏதாவது கேட்கும்போது நாம் கேட்பது தேவையானது அல்லது நல்லது என அவர்கள் கருதினால்,  "வாங்கித் தருகிறேன் என்று கூறுவார்கள்".  நாம் அப்போது அவர்கள்மீது சந்தேகப் படமாட்டோம். கையில் காசு வந்தவுடன் வாங்கித்தருவார்கள் என்று பொறுமையோடு காத்திருப்போம். ஆனால் அவர்கள் சொன்னதுபோல நாம் கேட்டதை வாங்கித்தரும்போது நமது உள்ளம் மகிழ்ச்சியடையும். 

தேவனும் நமது தாயாகவும் தகப்பனாகவும் இருப்பதால் நாம் நமது மண்ணக தாய் தகப்பனை நம்புவதுபோல தேவனை விசுவாசிக்கவேண்டும். இயேசு கிறிஸ்துவும் ஜெபத்தைப்பற்றிக்  கூறும்போது, "நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்." ( மாற்கு 11 : 24 ) என்று கூறினார். 

ஆனால் நாம் அனைவருமே இந்த விஷயத்தில் இந்த உறுதியைக் கைக்கொள்ளத் தவறிவிடுகின்றோம். விசுவாசத்தைப்பற்றி எவ்வளவுதான் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறினாலும், எழுதினாலும் சில வேளைகளில் நமக்கும் சந்தேகம் வந்துவிடுகின்றது.

இப்படி சந்தேகப்படும் நம்மை எச்சரிப்பதுபோல இன்றைய வசனம் நமக்குக் கூறுகின்றது, சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக." என்று.

கடல் அலையானது நிம்மதியின்றி அலைந்து குமுறுவதுபோல சந்தேகப்படும் மனிதனின் உள்ளமும் குமுறும், குழம்பும். விசுவாசம் என்பதை ஆவியின் வரங்களில் ஒன்றாகவும் (1 கொரிந்தியர் 12:9) ஆவியின் கனிகளில் ஒன்றாகவும் (கலாத்தியர் 5:22) வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது விசுவாச வரத்தை நாம் தேவனிடம் வேண்டிப் பெறும்போது அது நம் வாழ்க்கையில் கனியாக வெளிப்படும். எனவே நாம் அனைவருமே நமது ஜெபங்களில் இந்த வரத்தைப் பெறும்படி வேண்டுவோம்.   

ஏனெனில், "விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்." ( எபிரெயர் 11 : 6 ) என்கிறது தேவ வசனம். தேவனுக்குப் பிரியமாக இருக்க முயற்சிப்போம்; நமது விசுவாசத்தை வலுப்படுத்துவோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Sunday, January 22, 2023

நமக்காகச் சிலுவையில் அறையுண்டது ஊழியனா, கிறிஸ்துவா?

ஆதவன் 🌞 726 🌻 ஜனவரி 23,  2023 திங்கள்கிழமை





உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன். கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்?  (1 கொரிந்தியர் 1:11,12) 

கிறிஸ்துவைவிட்டு ஊழியர்களைத் தேடி  ஓடும் மக்கள் கூட்டம் இன்று பெருகிவிட்டது. சினிமா நடிகர்களுக்கு  ரசிகர்கள் பட்டாளம் இருப்பதுபோல இன்று கிறிஸ்தவ ஊழியர்களுக்கும் தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் பெருகிவிட்டது. இது இன்று நடப்பதல்ல; கிறிஸ்தவத்தின் ஆரம்ப காலத்திலேயே இருந்துள்ளது. இதனையே அப்போஸ்தலனாகிய பவுல் கண்டிக்கின்றார். 

தனிப்பட்ட ஊழியர்களை முன்னுதாரணமாகக் கொண்டு வாழும்போது நாம் கிறிஸ்துவைவிட்டு விலகிவிடுகின்றோம். ஊழியரின் தவறான போதனைகளை அங்கீகரிக்கின்றோம் என்று பொருள்.  ஊழியர்கள் என்பவர்கள் கிறிஸ்துவின் பணியாளர்கள். அவர்களுக்கென்று தனிப்பட்ட நட்சத்திர அந்தஸ்து கொடுப்பது தவறு. ஊழியர்களுக்கு மரியாதையும் கனமும் கொடுக்கவேண்டுமேத் தவிர அவர்களை அரசியல் தலைவனைப்போலோ, சினிமா நடிகனைப்போலோ பின்பற்றவேண்டிய அவசியமில்லை. 

கிறிஸ்துவின் ஒளியை உள்வாங்கி நற்செய்தி அறிவிப்பவர்களே ஊழியர்கள். ஆனால் தனிப்பட்ட ஊழியர்களை நாம் சார்ந்துகொள்ளும்போது கிறிஸ்துவின் நற்செய்தியை அவர்கள் தவறாகவோ திரித்தோ பிரசங்கித்தாலும் கைதட்டி ரசிக்கும் ரசிகர்கள் ஆகிவிடுகின்றோம். 

"நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்." என்கிறார் பவுல் அடிகள். இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள கிறிஸ்துவின் ஊழியர்களாது பெயர்களை எடுத்துவிட்டு அந்த இடத்தில் உங்களது தற்போதைய அபிமான ஊழியரின் பெயரைப் போட்டு இந்த வசனத்தைச்சொல்லிப்பாருங்கள்.

இந்த வசனத்தின் இறுதியில் பவுல் கேட்கின்றார்:- "பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? " என்று. அன்பானவர்களே, நீங்கள் தேடி ஓடும் இந்த குறிப்பிட்ட ஊழியனா உகளுக்காகச் சிலுவையில் அறையப்பட்டார்? சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவையே நோக்கிப்பார்க்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

எவ்வளவு பிரபல பிரசங்கியாக இருந்தாலும், எவ்வளவு ஆழமான இறையியல் கட்டுரைகளை ஒருவர் எழுதினாலும் நாம் அவரது கருத்தை நமக்காக எடுத்துக்கொள்ள வேண்டுமேதவிர அவரை சினிமா நடிகர் போலக் கருதி அவர்  பின்னால் ஓடுபவர்களாக  இருப்போமானால் நாம் கிறிஸ்துவைவிட்டு விலகி விக்கிரக ஆராதனை செய்கின்றோம் என்று பொருள்.  

நமக்காகச்  சிலுவையில் அறையுண்டது ஊழியனா, கிறிஸ்துவா?
  
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Friday, January 20, 2023

அரசாங்கத்திடம் லஞ்சம் கொடுத்துக் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆதவன் 🌞 725 🌻 ஜனவரி 22,  2023 ஞாயிற்றுக்கிழமை

"இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்." ( எஸ்றா 7 : 6 )

வேத அறிஞனான எஸ்றா  எனும் தேவ மனிதனைக் குறித்து இன்றைய வசனம் கூறுகின்றது. தேவனுடைய ஆலயத்தைக் கட்டும் பணியில் ஈடுபட்ட அவரது சிறப்புகள் இங்கு குறிப்பிடப்படுகின்றன. 

முதலாவது, "எஸ்றா தேறின வேதபாரகனாயிருந்தான்" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது தேறின வேத அறிஞராக அவர் இருந்தார். மட்டுமல்ல, அவர் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருக்கவில்லை. மாறாக, "கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்." ( எஸ்றா 7 : 10 ) என்று கூறப்பட்டுள்ளது. 

எஸ்றா அப்படி இருந்ததால், தேவனாகிய கர்த்தரின் கரம் அவர் மேல் இருந்தது. எனவே, "அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்." 

வேத அறிஞரான எஸ்றா தனது சுய லாபத்துக்காக அரசாங்கத்திடம் உதவி கேட்கவில்லை; மாறாக தேவனுடைய பழுதுபட்ட ஆலயத்தைக் கட்டி எழுப்ப உதவிகோரினார். 

ஆனால் தங்களை வேத அறிஞர்கள் என்றும் கிறிஸ்தவத்தின் பிரதிநிதிகள் என்றும் கூறிக்கொள்ளும் இன்றைய பிரபல ஊழியர்களை நினைத்துப்பாருங்கள். இவர்கள் தங்களது பல்கலைக்கழகம், கல்லூரிகளுக்குத் தேவையான உதவிகளுக்கு அரசாங்கத்திடம் லஞ்சம் கொடுத்துக் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.  தாங்கள்  வருமானவரி மோசடியிலிருந்து விடுபடவும், தங்கள்மேலுள்ள கோர்ட்கேஸ் தள்ளுபடியாகவும் அரசாங்க உதவியை நாடித் திரிகிறார்கள். 

தேவனாகிய கர்த்தருடைய கரம் அவர்கள்மேல் இல்லாதபடியினால்,  அதிகாரத்திலுள்ளவர்கள்  கேட்டவைகளையெல்லாம் அவர்களுக்குக் கொடுத்துத் தங்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

விசுவாசிகள் என்று கூறிக்கொள்ளும் சாதாரண மக்கள் இந்த அறிவு இல்லாமலிருப்பதால் இந்தப் பிரபலங்களை கடவுளின் பிரதிநிதிகளாக நம்பி இவர்கள்பினால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். எஸ்றாவைப்போல உண்மையும் உத்தமுமான ஊழியர்கள் இன்றும் உண்டு. அவர்களை நாம்தான் தேடிக் கண்டுகொள்ளவேண்டும். ஆனால் அப்படித் தேடி அவர்களைகூட அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லையானால் அத்தகைய  விசுவாசி எப்படி தேவனைக் கண்டுகொள்ளமுடியும்?  

பரிதாபத்துக்குரிய நிலையில் கிறிஸ்தவ விசுவாசிகள்! பரிசுத்த ஆவியானவர் நமது மனக்கண்களைத் திறந்திட வேண்டுதல்செய்வோம்; உண்மையின் வெளிச்சத்தில் தேவனைத் தேடுவோம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Wednesday, January 18, 2023

கிறிஸ்தவத்தின் மேன்மையே ஆத்தும இரட்சிப்புத்தான்

ஆதவன் 🌞 724 🌻 ஜனவரி 21,  2023 சனிக்கிழமை

"அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்."  ( வெளிப்படுத்தின விசேஷம் 7 : 10 )

"நான் கேட்டதையெல்லாம் தேவன் எனக்குத் தந்துள்ளார், என்னை பல  ஆசீர்வாதங்களால் நிறைத்துள்ளார்,  கார், வீடு, நல்ல வேலை எனக்கு இருக்கிறது. இது தேவன் எனக்குத் தந்த மிகப்பெரிய ஆசீர்வாதம்." என்று பலரும் சாட்சி கூறுகின்றனர்.

ஆனால் நாம் கவனிக்கவேண்டியது  என்னவென்றால்  இந்த ஆசீர்வாதங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்களும், எந்தவித மத நம்பிக்கையுமில்லாத நாத்திகர்களும் அனுபவிப்பதுதான். எனவே இப்படி உள்ள ஆசீர்வாதமே போதுமென்றால் நாம் கிறிஸ்தவர்களாக இருக்கவேண்டியது அவசியமில்லை என்பதுதெளிவு. ஏனெனில் கிறிஸ்து இல்லாமலேயே இவைகளைப் பெற முடியுமானால் நாம் கிறிஸ்துவை ஆராதித்த தேவையில்லைதானே?

கிறிஸ்தவத்தின் மேன்மையே ஆத்தும இரட்சிப்புத்தான். இந்த இரட்சிப்பு அனுபவத்தை பல ஊழியர்களும்கூட  அறியாமலும், இதுபற்றிய தெளிவும் இல்லாமலுமிருப்பதால்தான் இற்று கிறிஸ்தவ போதனைகளிலும் குழப்பங்கள் நிலவுகின்றன. "........... இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்." ( எபிரெயர் 2 : 4 ) என வாசிக்கின்றோம். அப்படியானால் இரட்சிப்பு எவ்வளவு மேன்மையானது; முக்கியமானது என்று விளங்கும். ஆம், உலக ஆசீர்வாதங்களல்ல, பாவமன்னிப்பும் பாவத்திலிருந்து விடுதலை அளிக்கும் இரட்சிப்புமே கிறிஸ்தவத்தின் அச்சாணி. 

இன்றைய வசனத்தில் இப்படி இரட்சிப்பு அனுபவம் பெற்று மரித்த மக்கள் கூட்டத்தைத்தான் அபோஸ்தனாகிய யோவான் காண்கின்றார். அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.

இந்த  மக்கள் அனைத்து ஜாதி, மதம், இனம், நாடுகளைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். இதனையே யோவான், "இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 7 : 9 ) என்று கூறுகின்றார். 

உலக ஆசீர்வாதங்களுக்காக மட்டுமே தேவனைத் தேடுபவர்கள் இந்த அனுபவத்தைப் பெறமுடியாது. அன்பானவர்களே, "இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்"  என்ற வசனம் நம்மைக் கிறிஸ்துவின் இரட்சிப்பினை அடைந்திட முயற்சியெடுக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.

ஆட்டுக்குட்டியானவரது இரத்தத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட உறுதியுடன் வேண்டுவோம்.  நமது பாவங்களை மறைக்காமல் அவரிடம் ஒப்புவித்து மன்னிப்பை வேண்டுவோம்.  பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றுக்கொள்வோம். அப்போது நாமும் இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று மறுமையில்  ஆர்ப்பரிக்க முடியும். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

அவர்மேல் உறுதியான விசுவாசத்தோடு வாழ்வோம்

ஆதவன் 🌞 723 🌻 ஜனவரி 20,  2023 வெள்ளிக்கிழமை

"இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்." ( சங்கீதம் 48 : 14 )

இன்றைய வசனம் நமக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் தரும் தேவ வார்த்தைகளாகும். இன்று நமக்கு உலகினில் வரும் பிரச்சனைகள், துன்பங்கள் இவைகளைக்கண்டு நாம் மனம் தளராமல் இருக்க இந்த வசனம் நமக்கு உதவுகின்றது.  இந்த தேவன் என்றென்றுமுள்ள சதாகாலமும் நமது தேவன் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த உலகினில் உள்ள மனிதர்கள், நமக்கு உதவும் தாய், தகப்பன் மற்றும் உறவுகள் இவர்களெல்லாம் கொஞ்சகாலம் நமக்கு உதவ முடியும். சில குறிப்பிட்ட காரியங்களில் மட்டும் நமக்கு உதவிட முடியும். ஆனால் நமது தேவன் உயிருள்ளவராக நம்மோடே இருப்பதால்  நமது மரண காலம்வரை நம்மை நடத்துபவராக இருக்கின்றார். 

இதனையே ஏசாயா மூலம் தேவன் கூறுகின்றார், "நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே அறிந்தேன்;"  ( எரேமியா 1 : 5 ) என்று. 

"என் கருவை உம்முடைய கண்கள் கண்டன; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது." ( சங்கீதம் 139 : 16 ) என்று சங்கீத ஆசிரியர் கூறுகின்றார்.  அதாவது நாம் உருவாகுமுன்பே நம்மைக் கண்டவர், நமது உறுப்புகளில் ஒன்றுகூட உருவாகுமுன்பே நம்மை அறிந்தவர் நம்மைக் கைவிடுவாரா?

அன்பானவர்களே, எனவே நாம் தைரியமாய் இருப்போம். நம்மைப் படைத்து நம்மைப் பல்வேறு உறுப்புகளால் அலங்கரித்தவர்  நம்மோடுகூட இருக்கின்றார். இறுதி மூச்சுவரை அவர் நம்மை நடத்திட வல்லவர். இந்த நம்பிக்கை நம்மிடம் இல்லாவிட்டால் நாம் இறுதிவரை வாழ்க்கையோடு போராடிக்கொண்டேதான் இருப்போம்.

இஸ்ரவேல் மக்களை வழிநடத்திய தேவன் அவர்களோடு தான் வருவதாக வாக்களித்து, தான் அவர்களோடு வருவதைப் பல்வேறு தெளிவான முறைமைகளில்  வெளிப்படுத்தியும் இஸ்ரவேல் மக்கள் அவிசுவாசம்கொண்டு, "இந்தப் பாலை நிலத்தில் நம்மை அழித்துப்போடவா எங்களை எகிப்திலிருந்து வரவழைத்தீர்" என முறுமுறுத்தனர். ஆனால் அவர்கள் கானானைக் காணும்முன்பே அழிந்துபோயினர். 

நாம் அப்படி அழிந்துபோகாமலிருக்க அவர்மேல் உறுதியான விசுவாசத்தோடு வாழ்வோம். இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார் என்று அறிக்கையிடுவோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Tuesday, January 17, 2023

"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்"

ஆதவன் 🌞 722 🌻 ஜனவரி 19,  2023 வியாழக்கிழமை


"மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்." ( கலாத்தியர் 6 : 7 )

"வினை விதைத்தவன்வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான்" என்பது தமிழ் பழமொழி. கோதுமையை விதைத்துவிட்டு நெல்லை அறுவடைசெய்ய முடியாது. எதனை விதைக்கின்றோமோ அதனையே நாம் அறுவடை செய்ய முடியும். உலக காரியங்களில் மட்டுமல்ல; ஆவிக்குரிய காரியங்களிலும் இதுவே உண்மை. 

இருபத்திநான்கு மணி நேரமும் உலகத்துக்காக உழைத்துவிட்டு அல்லது உலக காரியங்களையே தேடி ஓடிவிட்டு ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை நாம் எதிர்பார்க்க முடியாது. 

எனவேதான் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்." ( கலாத்தியர் 6 : 8 )

மாம்ச சிந்தை என்பது எப்போதுமே உலக காரியங்களை நினைத்துக்கொண்டிருப்பது, அவற்றை அடைந்திட என்று பணத்தையும் நேரத்தையும் உடல் உழைப்பையும் செலவழிப்பதைக் குறிக்கின்றது. நாம் உலகினில் வாழ்ந்திட பணம் தேவைதான். ஆனால் மனிதன் அப்பத்தினால் மட்டும் உயிர்வாழ்வதில்லை. தேவனுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் உயிர் வாழ்கின்றான் எனும் தேவனுடைய வார்த்தைகளை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். எவ்வளவுதான் சம்பாதித்தாலும் நாம் அமைதியான வாழ்க்கை வாழ தேவனுடைய ஆசீர்வாதம் தேவை. 

"மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்." ( ரோமர் 8 : 6 )

"மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக் கூடாமலும் இருக்கிறது." ( ரோமர் 8 : 7 )

"தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்." ( கலாத்தியர் 6 : 8 )

தீமை செய்பவர்களுக்கான பதில் இந்த  உலகத்திலேயே சரிக்கட்டப்படுவதை நாம்  சிலவேளைகளில் நேரடியாகக் கண்டிருக்கலாம். இதனையே நம் முன்னோர்கள், "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" எனப் பழமொழியாகக் கூறியுள்ளனர். கடவுள் மறுப்புக் கொள்கையாளர்கள் இதனை இயற்கையின் நியதி என்பார்கள். நாம் அந்த இயற்கையினையே கட்டுப்படுத்தும் ஆற்றலுள்ள தேவாதி தேவனை ஆராதிப்பவர்கள்; அவரை அறிந்தவர்கள். எனவே நாம் அதிக எச்சரிகையுடன் வாழவேண்டியது அவசியம்.

நாம் ஆவிக்குரிய சிந்தை  உடையவர்களாக   வாழும்போது மட்டுமே ஆவிக்குரிய   ஆசீர்வாதங்களைப் பெற முடியும். இருபத்திநான்கு மணிநேரமும் உலக  ஆசையில் அலைந்துவிட்டு பின்னர்    ஆவிக்குரிய கூட்டங்களில்   கலந்துகொண்டு ஆவியானவரே என்னை அபிஷேகத்தால் நிரப்பும் எனக் கத்திக் கூப்பாடுபோடுவதில் அர்த்தமில்லை.       

ஆம், ஆவிக்குரிய காரியங்களுக்கே முன்னிரிமைகொடுத்துச் செயல்படுவோம். அப்போது நாம் உலக காரியங்களிலும் மேலான ஆசீர்வாதங்களைப் பெற முடியும். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712



பிதாவாகிய தேவன் பெருமை பேசுபவரல்ல

ஆதவன் 🌞 721 🌻 ஜனவரி 18,  2023 புதன்கிழமை

"நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்." ( யோவான் 12 : 49 )

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்தபோது பேசிய பேச்சுக்கள் செயல்கள் அனைத்துமே பிதா தனக்குக் கூறியபடியே இருந்தன. இப்படி அவர் இருந்ததால் பிதா அவரைத் தனியே இருக்கவிடவில்லை. நமக்கு இது ஒரு முன்னுதாரணம். நமது பேச்சுகளும் செயல்களும் இப்படி பிதாவாகிய தேவனுக்கு ஏற்புடையனவாக இருக்கவேண்டியது அவசியம். இப்படி இருப்போமானால் நாம் பேசும்போது நமது சுய பெருமைகள் நம்மைவிட்டு அகன்றிடும். 

"சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை." ( யோவான் 7 : 18 ) என்று வசனம்  கூறுகின்றது. இன்றைய கிறிஸ்தவ ஊழியர்களின் பேச்சுக்களை நாம் ஆராய்ந்துபார்ப்போம். பல கிறிஸ்தவ ஊழியர்களது பேச்சுக்கள் பல வேளைகளில் தங்களது சுய பெருமைகளைப் பேசுவனவாகவே உள்ளன. 

தங்களால் செய்யப்பட்ட  அற்புதங்கள், அதிசயங்கள், இத்தனைபேர் தங்களால் குணமானார்கள், தான்  கூறிய தீர்க்கதரிசனங்கள் இதனை நிறைவேறின என்று தங்களைத் தாங்களே புகழ்வனவாக இருக்கும். இத்தகைய பேச்சுக்கள் இவர்கள்  பிதாவாகிய தேவன் அருளியபடி பேசவில்லை தங்கள் சுயமாகவே பேசுகிறார்கள் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கின்றன. ஏனெனில் பிதாவாகிய தேவன் இப்படிப் பெருமை பேசுபவரல்ல; பேசுபவர்களை கனம் பண்ணுவதுமில்லை.

பெரும்பாலான ஊழியர்கள் இப்படி சுய புராணங்கள் பேசக்காரணம் பெருமை. தங்களை மற்றவர்களைவிட மேலானவர்கள் என்று மக்கள் கருதவேண்டும், அதன்மூலம் கூட்டமும் காணிக்கைகளும் தங்களுக்குச் சேரவேண்டும் என்பதற்காகவே. 

தேவனுக்கு நாம் முதலிடம் கொடுத்து வாழும்போது நாம் பேசவேண்டியதை பரிசுத்த ஆவியானவரே நமக்குப் போதித்து வழிநடத்துவார். "என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்." ( யோவான் 14 : 26 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

பரிசுத்த ஆவியானவரோடு தொடர்பில்லையானால் நாம் சுய புராணங்களையே பேசிக்கொண்டிருப்போம். நமது  பேச்சுகளும் செயல்களும் நம்மை உயர்த்துவதாக, நம்மைப் பெருமைப்படுத்துவனவாகவே இருக்கும். அத்தகைய சுய பெருமைக்காரன் சாதாரண அரசியல்வாதியைப்போலவே இருப்பான். 

"நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்." என்று இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தையின்படி வாழ்வதே மெய்யான ஊழியன் செய்யவேண்டியது. ஊழியர்களுக்கு மட்டுமல்ல சாதாரண விசுவாசிகளுக்கும் இதுவே ஏற்புடையது. 

இன்று பிரபலமான கிறிஸ்தவ  ஊழியர்களுக்கு இந்த அனுபவம் இல்லாததால் அவர்களது பேச்சுக்கள் மற்றவர்களால் கேலிபேசக்கூடிய அளவுக்கு மாறிவிடுகின்றன. நமது பேச்சுக்களையும் எழுத்துக்களையும்  வெறும் ஐந்துபேர் கேட்டாலும் படித்தாலும் போதும், நாம் பிதாவாகிய தேவன் அருளிய சத்தியத்தின்படி பேசுவதே சிறப்பு. 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Monday, January 16, 2023

சபிப்பவர்கள் மேலேயே அந்த சாபங்கள் வந்து தங்கும்.

ஆதவன் 🌞 720 🌻 ஜனவரி 17,  2023 செவ்வாய்க்கிழமை

"அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்து போவதுபோலும், காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது." ( நீதிமொழிகள் 26 : 2 )

சாபமிடுதல்  சிலருக்கு எப்போதுமே அவர்களை அறியாமலேயே வாயில் வரும். எதற்கெடுத்தாலும் மற்றவர்களைச் சபிப்பார்கள். இது ஒரு வியாதிபோல அவர்களுக்கு.

ஒருமுறை ஒரு சகோதரன் என்னிடம், "பிரதர் எங்களது பக்கத்து வீட்டுகார பெண்மணி எதற்கெடுத்தாலும் சாபம்போடுகின்றார். காலை எழும்பியதுமுதல் கேட்கும் "விளங்கமாட்டான்", "நாசமாய்ப்போவான்" எனும் வார்த்தைகளே எங்களை மிகவும் மனம் நோகச்  செய்கின்றது.  எங்களுக்கு இது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது" என்று கூறினார். 

இதுபோல பலர் இந்த உலகத்தில் உண்டு. ஆனால் இந்தச் சாபத்தைக்கேட்டு பலரும் பயப்படுகின்றார்கள். இன்றைய தியானத்துக்குரிய வசனம் நாம் இப்படி காரணமில்லாத சாபங்களை எண்ணிக் கலங்கவேண்டியதில்லை என்று கூறுகின்றது. "அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்து போவதுபோலும், காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது." என்று இன்றைய வசனம் கூறுகின்றது. எனவே தேவ பிள்ளைகளான நாம் இத்தகைய சாபமிடுபவர்களைக்கண்டு பயப்படவேண்டிய அவசியமில்லை. 

நாம் உண்மையாய்ப் பயப்படவேண்டியது கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்க நாம் தவறும்போது மட்டுமே. ஏனெனில் வேதம் கூறுகின்றது, "அப்படி அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்." ( உபாகமம் 28 : 15 ) என்று.  

மட்டுமல்ல, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவை மரத்தில் வெற்றிச்சிறந்து  நமது சாபங்களையெல்லாம் இல்லாமலாக்கிவிட்டார். நாம் இயேசு கிறிஸ்துவுக்கு ஏற்புடையவர்களாக வாழும்போது அவருடைய பிள்ளைகள் ஆகின்றோம். எனவே,   எந்த சாபமும் நம்மை அணுகாது.

மற்றவர்கள் இடும் சாபத்தைப்பற்றி கூடும் வேதம் நமக்கும் பின்வருமாறு அறிவுறுத்துகின்றது:-  "உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள்." ( ரோமர் 12 : 14 ). ஆம், தேவனுக்கு உகந்தவர்களாக வாழும்போது மற்றவர்கள் இடும் சாபம் நம்மேல் பலிக்காது. நாமும் பிறரை சபியாமல் இருக்கவேண்டும். 

அப்படி நாம் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழும்போது காரணமில்லாமல் நமக்குக் கூறப்படும் சாபம் ஆசீர்வாதமாக மாறும். மட்டுமல்ல, நம்மைச் சபிப்பவர்கள் மேலேயே அந்த சாபங்கள் வந்து தங்கும்.  

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Saturday, January 14, 2023

தேவனுக்குப் பிரியமில்லாத செயல்பாடுகளைத் தவிர்ப்போம்

ஆதவன் 🌞 719 🌻 ஜனவரி 16,  2023 திங்கள்கிழமை

"நீ மிகவும் பிரியமானவன், ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது," ( தானியேல் 9 : 23 )

ஜெபத்தைக்குறித்தும் அதற்குத் தேவன் பதில் தருவது குறித்தும் இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் வாசிக்கின்றோம்.  நமது ஜெபத்துக்குத் தேவன் பதில்கொடுக்க நாம் என்னச் செய்வது என்பதை இந்த வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது.  தேவனை நோக்கித் தானியேல் ஜெபித்தபோது அவரது ஜெபத்துக்குப் பதிலை உடனேயே காபிரியேல் தூதன் கொண்டு வருகின்றான். காபிரியேல் தூதன் தானியேலுக்கு அறிவித்த வார்த்தைகளே இன்றைய தியானத்துக்குரிய வசனம்.

இந்த வசனத்தில் தானியேலை, "நீ மிகவும் பிரியமானவன்" என்று தூதன் கூறுகின்றான். அப்படிப் பிரியமானவனாக இருந்ததால் அவன் வேண்டிக்கொண்ட அதேசமயத்தில் தேவனது பதில் அவனுக்கு அனுப்பப்படுகின்றது.

தானியேலின் ஜெப வாழ்க்கை, தேவனுக்காக தானியேல் காட்டிய பக்தி வைராக்கியம், உயிரே போனாலும் போகட்டும் தேவனுக்கு எதிரான செயல்பாடுகளைச் செய்யமாட்டேன் எனும் உறுதி இவைகளை நாம் தானியேல் புத்தகத்தில் படித்தறியலாம். தானியேலின் அந்த விசுவாசத்தையும் பக்திவைராக்கியத்தையும் தேவன் கனம் பண்ணத் தவறவில்லை.   

அன்பானவர்களே, நமக்கு ஒரு பரலோக அரசாங்கம் உண்டு. நமது தேவைகள் அனைத்தையும் நாம் தெரிவிக்கவேண்டியது அந்த அரசாங்கத்திடம்தான். அங்கிருந்தே நமக்கு அனைத்தும் கிடைக்கின்றன. "நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை." ( யாக்கோபு 1 : 17 ) என்று எழுதுகின்றார் யாக்கோபு.

யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லாத தேவனிடம் நாமும் தானியேலைபோல உண்மையாய் உத்தமமுமாய் இருந்து வேண்டுதல் செய்வோமானால்,  நாமும் தானியேலைப் போல தேவனுக்கு மிகவும் பிரியமானவர்கள் ஆவோம். அப்போது நமது வேண்டுதலுக்கும் தேவன்  உடனடி பதில் தருவார். 

மட்டுமல்ல, தேவன் தானியேலுக்கு பல்வேறு வெளிப்பாடுகளையும் அருளினார். அந்தத் தீர்க்கதரிசனங்கள் இன்றளவும் நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. 
.
நாம் வாழும் சமூகத்தில் பல செயல்பாடுகள் தேவனுக்கு ஏற்புடையவை அல்லாதவையாக இருக்கின்றன. சமூக நல்லிணக்கம், மத நல்லிணக்கம் எனும் போர்வையில் நம்மை அவைகளைப் பின்பற்றச் செய்திட  சாத்தான் முயற்சிப்பான். நாம் எனவே கவனமாக இருக்கவேண்டும். 

அனைவரையும் அன்பு செய்வது என்பது வேறு அனைவரது செயல்பாடுகளையும் பின்பற்றுவது என்பது வேறு. தேவனுக்குப் பிரியமில்லாத செயல்பாடுகளைத் தவிர்ப்போம்; அனைவரையும் அன்புசெய்வோம். தானியேலைபோல தேவனுக்கு ஏற்புடையவர்களாக  வாழ்ந்து அவருக்கு மிகவும் பிரியமானவன் என்று பெயர் எடுப்போம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712