இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Thursday, January 26, 2023

நமது விசுவாசத்தை வாழ்வில் வெளிப்படுத்துவோம்;

ஆதவன் 🌞 730 🌻 ஜனவரி 27,  2023 வெள்ளிக்கிழமை 

"தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுடாமோ?" ( யாக்கோபு 2 : 19, 20 )


இந்த உலகத்திலுள்ள மக்கள் பெரும்பாலும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான். ஏதாவது ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்களாகவே இருக்கின்றனர். இவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை அற்பமாக எண்ணுவதும், கேலி பேசுவதும் உண்டு. 

ஆனால் இந்த உலகத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான் அதிக பாவச் செயல்களில் ஈடுபடுகின்றார்கள். நான் கம்யூனிச இயக்கத்தில் இருந்தபோது பல கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களைப் பார்த்துள்ளேன். பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களைவிட நல்ல நேர்மையான  வாழ்க்கையே வாழ்கின்றனர். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எல்லோருமே நல்லவர்களாய் இருந்திருந்தால்  இந்த உலகம் அமைதிப் பூங்காவாக இருந்திருக்கும். ஆனால் அப்படி இல்லை. 

இதனையே அப்போஸ்தலரான யாக்கோபு இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் தெளிவுபடுத்துகின்றார். அதாவது நீ உன்னை கடவுள் நம்பிக்கை உள்ளவன் என்று கூறிக்கொள்கிறாய், அது நல்லதுதான் ஆனால் பிசாசுகளும் கூட கடவுள் ஒருவர் உண்டு என நம்பி நடுங்குகின்றன. நீ உனது செயல்களை மாற்றிடாமல் இருந்தால் உனக்கும் பிசாசுக்கு வித்தியாசமில்லை என்பதே அவர் கூறுவது.

தேவனை விசுவாசிக்கிறேன் என்று கூறிக்கொண்டு ஆலயங்களுக்குச் செல்வதும், ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்வதும்,  காணிக்கைகள் கொடுப்பதும், வேதாகமத்தை வாசிப்பதும் மட்டும் போதாது. நமது செயல்பாடுகள் தேவனுக்கேற்ற செயல்பாடுகளாக இருக்கவேண்டும். 

தேவனை விசுவாசிக்கும் நாம் நேர்மையாக வாழ்ந்து பிறருக்குச் சாட்சியாக விளங்கவேண்டும். தேவனையும் ஆராதித்துவிட்டு வாழ்க்கையில் துன்மார்க்கச் செயல்பாடுகள் இருக்குமானால் நாம் தேவன்மேல் கொண்டுள்ள விசுவாசமும், நமது தேவ பக்தியும் வீண். நாம் ஒரு செத்த வாழ்க்கையே வாழ்கின்றவர்களாக இருப்போம். அதனையே இந்த வசனம், "வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டாமோ?" என்று கூறுகின்றது.

கடவுள்மேலுள்ள நமது விசுவாசம் உண்மையானால் அவரை முற்றிலும் நம்புகிறவர்களாக இருப்போம். அவரால் எனது வாழ்க்கையில் தேவையான அனைத்தையும் தர முடியும் என்று நம்புகிறவர்களாக இருப்போம்.  

இன்றைய வசனத்தைத் தொடர்ந்து யாக்கோபு ஆபிரகாமின் விசுவாசத்தை எடுத்துக்கூறுகின்றார். ஆபிரகாம் தேவனை வெறுமனே விசுவாசிக்கமட்டும் செய்யவில்லை; விசுவாசத்தைச் செயலில் காட்டினார். ஜீவனுள்ள தேவனை விசுவாசிக்கும் நாமும் நமது விசுவாசத்தை வாழ்வில் வெளிப்படுத்துவோம்; அப்போதுதான் மற்றவர்களும்  தேவனை விசுவாசிக்கமுடியும்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Wednesday, January 25, 2023

நமது எண்ணம்போலவே நமது ஆவிக்குரிய வாழ்க்கையும் இருக்கும்.

ஆதவன் 🌞 729 🌻 ஜனவரி 26,  2023 வியாழக்கிழமை 

"உன் சரீரம் ஒருபுறத்திலும் இருளடைந்திராமல் முழுவதும் வெளிச்சமாயிருந்தால், ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறதுபோல உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்." ( லுூக்கா 11 : 36 )

ஆவிக்குரிய வாழ்வின் மிக முக்கிய ஒரு சத்தியத்தை இயேசு கிறிஸ்து இன்றைய வசனத்தில் கூறுகின்றார்.  பொதுவாக ஜெபிப்பது, உபவாசிப்பது, காணிக்கைகள் கொடுப்பது இவைகளையே கிறிஸ்தவத்தில் ஊழியர்களும் விசுவாசிகளும் முக்கியமானதாகக் கருதுகின்றனர். ஆனால் இயேசு கிறிஸ்து நமது சரீரம் தூய்மையானதாக இருக்கவேண்டுமென்று கூறுகின்றார். 

நமது உடலானது தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் தங்கியிருக்கும் ஆலயமாயிருக்கிறது. அதனால்தான் இயேசு கிறிஸ்து கூறுகின்றார், இந்த ஆலயமாகிய உனது சரீரம் இருளடைந்திராமல் முழுவதும் வெளிச்சமாயிருந்தால் ஒரு விளக்கு வெளிச்சம் கொடுப்பதுபோல நீ மற்றவர்களுக்கு வெளிச்சம் கொடுப்பவனாக இருப்பாய். வெளிச்சம் கொடுக்கும் வாழ்க்கையே இருளிலுள்ள மக்களுக்குக் கிறிஸ்துவை அறிவிக்க உதவிடும்.

அதாவது, நமது உடலால் நாம் பாவம் செய்யாமல் அதனைப் பரிசுத்தமாய்க் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். அப்போஸ்தலனாகியபவுல் அடிகளும் ,  "உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?" ( 1 கொரிந்தியர் 6 : 19 ) என்று கூறுகின்றார். 

இன்று பலஆவிக்குரிய கிறிஸ்தவர்களும் பரிசுத்த ஆவியானவரின் வரங்களைப்  பெற்று மக்களிடம் தங்களை வெளிச்சம்போட்டுக் காட்ட விரும்புகிறார்கள்.  சிறப்பான வரங்கள் தங்களுக்கு இருந்தால் அது மக்கள் மத்தியில் தங்களை மதிப்புமிக்கவர்களாக மாற்றுமென்று நினைத்து வரங்களுக்காக ஜெபிக்கின்றார்கள். ஆனால் தேவனுக்குமுன் நமது உடலால் நாம் எப்படி இருக்கின்றோம் என்று எண்ணிப்பார்க்கத் தவறிவிடுகின்றனர். 

நமது ஒவ்வொரு உறுப்புக்களாலும்  நாம் பாவம் செய்யும் வாய்ப்புகள் உண்டு. எனவே வரங்களுக்காக அல்ல; நம்மைத் தூய்மையானவர்களாகக் காத்துக்கொள்ள ஜெபிக்கவேண்டியதே முக்கியம். 

"ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்." ( 1 கொரிந்தியர் 3 : 17 ) என எச்சரிக்கிறார் பவுல் அடிகள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் "ஆகையால் உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு." ( லுூக்கா 11 : 35 ) என எச்சரிக்கிறார். நமது உடலை பரிசுத்தமாகக் காத்துக்கொள்ள நமது சுய முயற்சியால் கூடாது. எனவே அதற்கான பலத்தை முதலில் தேவனிடம் வேண்டுவோம். அப்போது தேவனது ஆவியானவர்தாமே நம்மை பரிசுத்த பாதையில் நடத்துவார். நமது எண்ணம்போலவே நமது ஆவிக்குரிய வாழ்க்கையும் இருக்கும்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Tuesday, January 24, 2023

கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்.

ஆதவன் 🌞 728 🌻 ஜனவரி 25,  2023 புதன்கிழமை 

"அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்." ( எபேசியர் 4 : 30 )

நாம் நமது பாவங்களிலிருந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் மீட்கப்படும்போது பரிசுத்த ஆவியானவரை முத்திரையாகப் பெற்றுக்கொள்கின்றோம்.  இந்த ஆவியானவர் நமக்குள்ளேயே இருக்கின்றார். நமக்கு வழிகாட்டுகின்றார், நாம் எப்படி நடக்கவேண்டுமென்று போதிக்கின்றார். 

ஆனால் தேவன் வலுக்கட்டாயமாக தனது எண்ணத்தை மனிதர்களிடம் திணிப்பது கிடையாது. அவர் மனிதர்களுக்கென்று தனிப்பட்ட உரிமையையும், முடிவெடுக்கும் திறனையும் கொடுத்துள்ளார். நமக்கு அறிவுரையும், வழிகாட்டுதலும் ஆவியானவர் தருவாரேத்  தவிர நம்மை அவற்றைக் கடைபிடிக்க வலுக்கட்டாயப் படுத்தமாட்டார். 

எனவேதான் அப்போஸ்தலரான பவுல், தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள் என்று கூறுகின்றார். நாம் தேவ வழிகளைவிட்டு விலகும்போது, தேவனுக்கு ஏற்பில்லாத செயல்களைச் செய்யும்போது, பேசும்போது அது ஆவியானவரைத் துக்கப்படுத்துகின்றது. 

நமது தாய், தகப்பன்களை உதாரணமாகக் கொண்டு இதனை நாம் புரிந்துகொள்ளலாம். நமது பெற்றோர்கள் நம்முடனேயே இருந்தாலும் நமது சில  செயல்கள் அவர்களைத் துக்கத்துக்குள்ளாக்குகின்றது. காரணம் அவர்கள் அவற்றில் பிரியப்படுவதில்லை. நமது பார்வையில் நாம் செய்வதும் பேசுவதும் சரிபோலத் தெரிந்தாலும்  அது சில வேளைகளில் அவர்களைத் துக்கப்படச் செய்கின்றது. 

இதுபோலவே, நமது செயல்பாடுகள் தேவனைத் துக்கப்படுத்துகின்றன. ஆவியானவர் உடனேயே நம்மைவிட்டு விலகிச் சென்றுவிடுவதில்லை. அவர் வேதனையோடு அமைதியாக இருக்கின்றார். ஆனால் நாம் தொடர்ந்து தேவனுக்கு எதிரானச் செயல்பாடுக்கைச் செய்யும்போது ஆவியானவரின் தொடர்பினையும் ஆலோசனைகளையும் இழந்துவிடுகின்றோம்.  தேவனைவிட்டு விலகிவிடுகின்றோம். 

அன்பானவர்களே, ஆவியானவரின் குரலைக்கேட்கும் அனுபவத்தையும் அப்படிக் கேட்டபடியே நடக்கவும் நாம் முற்படவேண்டும். இல்லையெனில் சாதாரண உலக மனிதர்களுக்கும் நமக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும். 

"நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்." ( சங்கீதம் 32 : 8, 9 )

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Monday, January 23, 2023

நமது விசுவாசத்தை வலுப்படுத்துவோம்.

ஆதவன் 🌞 727 🌻 ஜனவரி 24,  2023 செவ்வாய்க்கிழமை

"சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக." ( யாக்கோபு 1 : 7 )

ஜெபத்தைக்குறித்த ஒரு சத்தியத்தை இன்றைய வசனம் எடுத்துக் கூறுகின்றது. நாம் ஜெபிக்கும்போது தேவ சித்தமறிந்து ஜெபிக்கவேண்டியது அவசியம். மேலும், இன்றைய வசனம், ஜெபிக்கும்போது சந்தேகமில்லாமல் உறுதியாக ஜெபிக்கவேண்டும் என்று கூறுகின்றது.   

சிறு குழந்தைகளாய் இருந்தபோது நாம் நமது அம்மா அப்பாவிடம் ஏதாவது கேட்கும்போது நாம் கேட்பது தேவையானது அல்லது நல்லது என அவர்கள் கருதினால்,  "வாங்கித் தருகிறேன் என்று கூறுவார்கள்".  நாம் அப்போது அவர்கள்மீது சந்தேகப் படமாட்டோம். கையில் காசு வந்தவுடன் வாங்கித்தருவார்கள் என்று பொறுமையோடு காத்திருப்போம். ஆனால் அவர்கள் சொன்னதுபோல நாம் கேட்டதை வாங்கித்தரும்போது நமது உள்ளம் மகிழ்ச்சியடையும். 

தேவனும் நமது தாயாகவும் தகப்பனாகவும் இருப்பதால் நாம் நமது மண்ணக தாய் தகப்பனை நம்புவதுபோல தேவனை விசுவாசிக்கவேண்டும். இயேசு கிறிஸ்துவும் ஜெபத்தைப்பற்றிக்  கூறும்போது, "நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்." ( மாற்கு 11 : 24 ) என்று கூறினார். 

ஆனால் நாம் அனைவருமே இந்த விஷயத்தில் இந்த உறுதியைக் கைக்கொள்ளத் தவறிவிடுகின்றோம். விசுவாசத்தைப்பற்றி எவ்வளவுதான் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறினாலும், எழுதினாலும் சில வேளைகளில் நமக்கும் சந்தேகம் வந்துவிடுகின்றது.

இப்படி சந்தேகப்படும் நம்மை எச்சரிப்பதுபோல இன்றைய வசனம் நமக்குக் கூறுகின்றது, சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக." என்று.

கடல் அலையானது நிம்மதியின்றி அலைந்து குமுறுவதுபோல சந்தேகப்படும் மனிதனின் உள்ளமும் குமுறும், குழம்பும். விசுவாசம் என்பதை ஆவியின் வரங்களில் ஒன்றாகவும் (1 கொரிந்தியர் 12:9) ஆவியின் கனிகளில் ஒன்றாகவும் (கலாத்தியர் 5:22) வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது விசுவாச வரத்தை நாம் தேவனிடம் வேண்டிப் பெறும்போது அது நம் வாழ்க்கையில் கனியாக வெளிப்படும். எனவே நாம் அனைவருமே நமது ஜெபங்களில் இந்த வரத்தைப் பெறும்படி வேண்டுவோம்.   

ஏனெனில், "விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்." ( எபிரெயர் 11 : 6 ) என்கிறது தேவ வசனம். தேவனுக்குப் பிரியமாக இருக்க முயற்சிப்போம்; நமது விசுவாசத்தை வலுப்படுத்துவோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Sunday, January 22, 2023

நமக்காகச் சிலுவையில் அறையுண்டது ஊழியனா, கிறிஸ்துவா?

ஆதவன் 🌞 726 🌻 ஜனவரி 23,  2023 திங்கள்கிழமை





உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன். கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்?  (1 கொரிந்தியர் 1:11,12) 

கிறிஸ்துவைவிட்டு ஊழியர்களைத் தேடி  ஓடும் மக்கள் கூட்டம் இன்று பெருகிவிட்டது. சினிமா நடிகர்களுக்கு  ரசிகர்கள் பட்டாளம் இருப்பதுபோல இன்று கிறிஸ்தவ ஊழியர்களுக்கும் தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் பெருகிவிட்டது. இது இன்று நடப்பதல்ல; கிறிஸ்தவத்தின் ஆரம்ப காலத்திலேயே இருந்துள்ளது. இதனையே அப்போஸ்தலனாகிய பவுல் கண்டிக்கின்றார். 

தனிப்பட்ட ஊழியர்களை முன்னுதாரணமாகக் கொண்டு வாழும்போது நாம் கிறிஸ்துவைவிட்டு விலகிவிடுகின்றோம். ஊழியரின் தவறான போதனைகளை அங்கீகரிக்கின்றோம் என்று பொருள்.  ஊழியர்கள் என்பவர்கள் கிறிஸ்துவின் பணியாளர்கள். அவர்களுக்கென்று தனிப்பட்ட நட்சத்திர அந்தஸ்து கொடுப்பது தவறு. ஊழியர்களுக்கு மரியாதையும் கனமும் கொடுக்கவேண்டுமேத் தவிர அவர்களை அரசியல் தலைவனைப்போலோ, சினிமா நடிகனைப்போலோ பின்பற்றவேண்டிய அவசியமில்லை. 

கிறிஸ்துவின் ஒளியை உள்வாங்கி நற்செய்தி அறிவிப்பவர்களே ஊழியர்கள். ஆனால் தனிப்பட்ட ஊழியர்களை நாம் சார்ந்துகொள்ளும்போது கிறிஸ்துவின் நற்செய்தியை அவர்கள் தவறாகவோ திரித்தோ பிரசங்கித்தாலும் கைதட்டி ரசிக்கும் ரசிகர்கள் ஆகிவிடுகின்றோம். 

"நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்." என்கிறார் பவுல் அடிகள். இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள கிறிஸ்துவின் ஊழியர்களாது பெயர்களை எடுத்துவிட்டு அந்த இடத்தில் உங்களது தற்போதைய அபிமான ஊழியரின் பெயரைப் போட்டு இந்த வசனத்தைச்சொல்லிப்பாருங்கள்.

இந்த வசனத்தின் இறுதியில் பவுல் கேட்கின்றார்:- "பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? " என்று. அன்பானவர்களே, நீங்கள் தேடி ஓடும் இந்த குறிப்பிட்ட ஊழியனா உகளுக்காகச் சிலுவையில் அறையப்பட்டார்? சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவையே நோக்கிப்பார்க்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

எவ்வளவு பிரபல பிரசங்கியாக இருந்தாலும், எவ்வளவு ஆழமான இறையியல் கட்டுரைகளை ஒருவர் எழுதினாலும் நாம் அவரது கருத்தை நமக்காக எடுத்துக்கொள்ள வேண்டுமேதவிர அவரை சினிமா நடிகர் போலக் கருதி அவர்  பின்னால் ஓடுபவர்களாக  இருப்போமானால் நாம் கிறிஸ்துவைவிட்டு விலகி விக்கிரக ஆராதனை செய்கின்றோம் என்று பொருள்.  

நமக்காகச்  சிலுவையில் அறையுண்டது ஊழியனா, கிறிஸ்துவா?
  
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Friday, January 20, 2023

அரசாங்கத்திடம் லஞ்சம் கொடுத்துக் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆதவன் 🌞 725 🌻 ஜனவரி 22,  2023 ஞாயிற்றுக்கிழமை

"இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்." ( எஸ்றா 7 : 6 )

வேத அறிஞனான எஸ்றா  எனும் தேவ மனிதனைக் குறித்து இன்றைய வசனம் கூறுகின்றது. தேவனுடைய ஆலயத்தைக் கட்டும் பணியில் ஈடுபட்ட அவரது சிறப்புகள் இங்கு குறிப்பிடப்படுகின்றன. 

முதலாவது, "எஸ்றா தேறின வேதபாரகனாயிருந்தான்" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது தேறின வேத அறிஞராக அவர் இருந்தார். மட்டுமல்ல, அவர் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருக்கவில்லை. மாறாக, "கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்." ( எஸ்றா 7 : 10 ) என்று கூறப்பட்டுள்ளது. 

எஸ்றா அப்படி இருந்ததால், தேவனாகிய கர்த்தரின் கரம் அவர் மேல் இருந்தது. எனவே, "அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்." 

வேத அறிஞரான எஸ்றா தனது சுய லாபத்துக்காக அரசாங்கத்திடம் உதவி கேட்கவில்லை; மாறாக தேவனுடைய பழுதுபட்ட ஆலயத்தைக் கட்டி எழுப்ப உதவிகோரினார். 

ஆனால் தங்களை வேத அறிஞர்கள் என்றும் கிறிஸ்தவத்தின் பிரதிநிதிகள் என்றும் கூறிக்கொள்ளும் இன்றைய பிரபல ஊழியர்களை நினைத்துப்பாருங்கள். இவர்கள் தங்களது பல்கலைக்கழகம், கல்லூரிகளுக்குத் தேவையான உதவிகளுக்கு அரசாங்கத்திடம் லஞ்சம் கொடுத்துக் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.  தாங்கள்  வருமானவரி மோசடியிலிருந்து விடுபடவும், தங்கள்மேலுள்ள கோர்ட்கேஸ் தள்ளுபடியாகவும் அரசாங்க உதவியை நாடித் திரிகிறார்கள். 

தேவனாகிய கர்த்தருடைய கரம் அவர்கள்மேல் இல்லாதபடியினால்,  அதிகாரத்திலுள்ளவர்கள்  கேட்டவைகளையெல்லாம் அவர்களுக்குக் கொடுத்துத் தங்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

விசுவாசிகள் என்று கூறிக்கொள்ளும் சாதாரண மக்கள் இந்த அறிவு இல்லாமலிருப்பதால் இந்தப் பிரபலங்களை கடவுளின் பிரதிநிதிகளாக நம்பி இவர்கள்பினால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். எஸ்றாவைப்போல உண்மையும் உத்தமுமான ஊழியர்கள் இன்றும் உண்டு. அவர்களை நாம்தான் தேடிக் கண்டுகொள்ளவேண்டும். ஆனால் அப்படித் தேடி அவர்களைகூட அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லையானால் அத்தகைய  விசுவாசி எப்படி தேவனைக் கண்டுகொள்ளமுடியும்?  

பரிதாபத்துக்குரிய நிலையில் கிறிஸ்தவ விசுவாசிகள்! பரிசுத்த ஆவியானவர் நமது மனக்கண்களைத் திறந்திட வேண்டுதல்செய்வோம்; உண்மையின் வெளிச்சத்தில் தேவனைத் தேடுவோம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Wednesday, January 18, 2023

கிறிஸ்தவத்தின் மேன்மையே ஆத்தும இரட்சிப்புத்தான்

ஆதவன் 🌞 724 🌻 ஜனவரி 21,  2023 சனிக்கிழமை

"அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்."  ( வெளிப்படுத்தின விசேஷம் 7 : 10 )

"நான் கேட்டதையெல்லாம் தேவன் எனக்குத் தந்துள்ளார், என்னை பல  ஆசீர்வாதங்களால் நிறைத்துள்ளார்,  கார், வீடு, நல்ல வேலை எனக்கு இருக்கிறது. இது தேவன் எனக்குத் தந்த மிகப்பெரிய ஆசீர்வாதம்." என்று பலரும் சாட்சி கூறுகின்றனர்.

ஆனால் நாம் கவனிக்கவேண்டியது  என்னவென்றால்  இந்த ஆசீர்வாதங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்களும், எந்தவித மத நம்பிக்கையுமில்லாத நாத்திகர்களும் அனுபவிப்பதுதான். எனவே இப்படி உள்ள ஆசீர்வாதமே போதுமென்றால் நாம் கிறிஸ்தவர்களாக இருக்கவேண்டியது அவசியமில்லை என்பதுதெளிவு. ஏனெனில் கிறிஸ்து இல்லாமலேயே இவைகளைப் பெற முடியுமானால் நாம் கிறிஸ்துவை ஆராதித்த தேவையில்லைதானே?

கிறிஸ்தவத்தின் மேன்மையே ஆத்தும இரட்சிப்புத்தான். இந்த இரட்சிப்பு அனுபவத்தை பல ஊழியர்களும்கூட  அறியாமலும், இதுபற்றிய தெளிவும் இல்லாமலுமிருப்பதால்தான் இற்று கிறிஸ்தவ போதனைகளிலும் குழப்பங்கள் நிலவுகின்றன. "........... இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்." ( எபிரெயர் 2 : 4 ) என வாசிக்கின்றோம். அப்படியானால் இரட்சிப்பு எவ்வளவு மேன்மையானது; முக்கியமானது என்று விளங்கும். ஆம், உலக ஆசீர்வாதங்களல்ல, பாவமன்னிப்பும் பாவத்திலிருந்து விடுதலை அளிக்கும் இரட்சிப்புமே கிறிஸ்தவத்தின் அச்சாணி. 

இன்றைய வசனத்தில் இப்படி இரட்சிப்பு அனுபவம் பெற்று மரித்த மக்கள் கூட்டத்தைத்தான் அபோஸ்தனாகிய யோவான் காண்கின்றார். அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.

இந்த  மக்கள் அனைத்து ஜாதி, மதம், இனம், நாடுகளைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். இதனையே யோவான், "இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 7 : 9 ) என்று கூறுகின்றார். 

உலக ஆசீர்வாதங்களுக்காக மட்டுமே தேவனைத் தேடுபவர்கள் இந்த அனுபவத்தைப் பெறமுடியாது. அன்பானவர்களே, "இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்"  என்ற வசனம் நம்மைக் கிறிஸ்துவின் இரட்சிப்பினை அடைந்திட முயற்சியெடுக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.

ஆட்டுக்குட்டியானவரது இரத்தத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட உறுதியுடன் வேண்டுவோம்.  நமது பாவங்களை மறைக்காமல் அவரிடம் ஒப்புவித்து மன்னிப்பை வேண்டுவோம்.  பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றுக்கொள்வோம். அப்போது நாமும் இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று மறுமையில்  ஆர்ப்பரிக்க முடியும். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

அவர்மேல் உறுதியான விசுவாசத்தோடு வாழ்வோம்

ஆதவன் 🌞 723 🌻 ஜனவரி 20,  2023 வெள்ளிக்கிழமை

"இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்." ( சங்கீதம் 48 : 14 )

இன்றைய வசனம் நமக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் தரும் தேவ வார்த்தைகளாகும். இன்று நமக்கு உலகினில் வரும் பிரச்சனைகள், துன்பங்கள் இவைகளைக்கண்டு நாம் மனம் தளராமல் இருக்க இந்த வசனம் நமக்கு உதவுகின்றது.  இந்த தேவன் என்றென்றுமுள்ள சதாகாலமும் நமது தேவன் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த உலகினில் உள்ள மனிதர்கள், நமக்கு உதவும் தாய், தகப்பன் மற்றும் உறவுகள் இவர்களெல்லாம் கொஞ்சகாலம் நமக்கு உதவ முடியும். சில குறிப்பிட்ட காரியங்களில் மட்டும் நமக்கு உதவிட முடியும். ஆனால் நமது தேவன் உயிருள்ளவராக நம்மோடே இருப்பதால்  நமது மரண காலம்வரை நம்மை நடத்துபவராக இருக்கின்றார். 

இதனையே ஏசாயா மூலம் தேவன் கூறுகின்றார், "நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே அறிந்தேன்;"  ( எரேமியா 1 : 5 ) என்று. 

"என் கருவை உம்முடைய கண்கள் கண்டன; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது." ( சங்கீதம் 139 : 16 ) என்று சங்கீத ஆசிரியர் கூறுகின்றார்.  அதாவது நாம் உருவாகுமுன்பே நம்மைக் கண்டவர், நமது உறுப்புகளில் ஒன்றுகூட உருவாகுமுன்பே நம்மை அறிந்தவர் நம்மைக் கைவிடுவாரா?

அன்பானவர்களே, எனவே நாம் தைரியமாய் இருப்போம். நம்மைப் படைத்து நம்மைப் பல்வேறு உறுப்புகளால் அலங்கரித்தவர்  நம்மோடுகூட இருக்கின்றார். இறுதி மூச்சுவரை அவர் நம்மை நடத்திட வல்லவர். இந்த நம்பிக்கை நம்மிடம் இல்லாவிட்டால் நாம் இறுதிவரை வாழ்க்கையோடு போராடிக்கொண்டேதான் இருப்போம்.

இஸ்ரவேல் மக்களை வழிநடத்திய தேவன் அவர்களோடு தான் வருவதாக வாக்களித்து, தான் அவர்களோடு வருவதைப் பல்வேறு தெளிவான முறைமைகளில்  வெளிப்படுத்தியும் இஸ்ரவேல் மக்கள் அவிசுவாசம்கொண்டு, "இந்தப் பாலை நிலத்தில் நம்மை அழித்துப்போடவா எங்களை எகிப்திலிருந்து வரவழைத்தீர்" என முறுமுறுத்தனர். ஆனால் அவர்கள் கானானைக் காணும்முன்பே அழிந்துபோயினர். 

நாம் அப்படி அழிந்துபோகாமலிருக்க அவர்மேல் உறுதியான விசுவாசத்தோடு வாழ்வோம். இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார் என்று அறிக்கையிடுவோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Tuesday, January 17, 2023

"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்"

ஆதவன் 🌞 722 🌻 ஜனவரி 19,  2023 வியாழக்கிழமை


"மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்." ( கலாத்தியர் 6 : 7 )

"வினை விதைத்தவன்வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான்" என்பது தமிழ் பழமொழி. கோதுமையை விதைத்துவிட்டு நெல்லை அறுவடைசெய்ய முடியாது. எதனை விதைக்கின்றோமோ அதனையே நாம் அறுவடை செய்ய முடியும். உலக காரியங்களில் மட்டுமல்ல; ஆவிக்குரிய காரியங்களிலும் இதுவே உண்மை. 

இருபத்திநான்கு மணி நேரமும் உலகத்துக்காக உழைத்துவிட்டு அல்லது உலக காரியங்களையே தேடி ஓடிவிட்டு ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை நாம் எதிர்பார்க்க முடியாது. 

எனவேதான் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்." ( கலாத்தியர் 6 : 8 )

மாம்ச சிந்தை என்பது எப்போதுமே உலக காரியங்களை நினைத்துக்கொண்டிருப்பது, அவற்றை அடைந்திட என்று பணத்தையும் நேரத்தையும் உடல் உழைப்பையும் செலவழிப்பதைக் குறிக்கின்றது. நாம் உலகினில் வாழ்ந்திட பணம் தேவைதான். ஆனால் மனிதன் அப்பத்தினால் மட்டும் உயிர்வாழ்வதில்லை. தேவனுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் உயிர் வாழ்கின்றான் எனும் தேவனுடைய வார்த்தைகளை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். எவ்வளவுதான் சம்பாதித்தாலும் நாம் அமைதியான வாழ்க்கை வாழ தேவனுடைய ஆசீர்வாதம் தேவை. 

"மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்." ( ரோமர் 8 : 6 )

"மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக் கூடாமலும் இருக்கிறது." ( ரோமர் 8 : 7 )

"தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்." ( கலாத்தியர் 6 : 8 )

தீமை செய்பவர்களுக்கான பதில் இந்த  உலகத்திலேயே சரிக்கட்டப்படுவதை நாம்  சிலவேளைகளில் நேரடியாகக் கண்டிருக்கலாம். இதனையே நம் முன்னோர்கள், "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" எனப் பழமொழியாகக் கூறியுள்ளனர். கடவுள் மறுப்புக் கொள்கையாளர்கள் இதனை இயற்கையின் நியதி என்பார்கள். நாம் அந்த இயற்கையினையே கட்டுப்படுத்தும் ஆற்றலுள்ள தேவாதி தேவனை ஆராதிப்பவர்கள்; அவரை அறிந்தவர்கள். எனவே நாம் அதிக எச்சரிகையுடன் வாழவேண்டியது அவசியம்.

நாம் ஆவிக்குரிய சிந்தை  உடையவர்களாக   வாழும்போது மட்டுமே ஆவிக்குரிய   ஆசீர்வாதங்களைப் பெற முடியும். இருபத்திநான்கு மணிநேரமும் உலக  ஆசையில் அலைந்துவிட்டு பின்னர்    ஆவிக்குரிய கூட்டங்களில்   கலந்துகொண்டு ஆவியானவரே என்னை அபிஷேகத்தால் நிரப்பும் எனக் கத்திக் கூப்பாடுபோடுவதில் அர்த்தமில்லை.       

ஆம், ஆவிக்குரிய காரியங்களுக்கே முன்னிரிமைகொடுத்துச் செயல்படுவோம். அப்போது நாம் உலக காரியங்களிலும் மேலான ஆசீர்வாதங்களைப் பெற முடியும். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712



பிதாவாகிய தேவன் பெருமை பேசுபவரல்ல

ஆதவன் 🌞 721 🌻 ஜனவரி 18,  2023 புதன்கிழமை

"நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்." ( யோவான் 12 : 49 )

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்தபோது பேசிய பேச்சுக்கள் செயல்கள் அனைத்துமே பிதா தனக்குக் கூறியபடியே இருந்தன. இப்படி அவர் இருந்ததால் பிதா அவரைத் தனியே இருக்கவிடவில்லை. நமக்கு இது ஒரு முன்னுதாரணம். நமது பேச்சுகளும் செயல்களும் இப்படி பிதாவாகிய தேவனுக்கு ஏற்புடையனவாக இருக்கவேண்டியது அவசியம். இப்படி இருப்போமானால் நாம் பேசும்போது நமது சுய பெருமைகள் நம்மைவிட்டு அகன்றிடும். 

"சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை." ( யோவான் 7 : 18 ) என்று வசனம்  கூறுகின்றது. இன்றைய கிறிஸ்தவ ஊழியர்களின் பேச்சுக்களை நாம் ஆராய்ந்துபார்ப்போம். பல கிறிஸ்தவ ஊழியர்களது பேச்சுக்கள் பல வேளைகளில் தங்களது சுய பெருமைகளைப் பேசுவனவாகவே உள்ளன. 

தங்களால் செய்யப்பட்ட  அற்புதங்கள், அதிசயங்கள், இத்தனைபேர் தங்களால் குணமானார்கள், தான்  கூறிய தீர்க்கதரிசனங்கள் இதனை நிறைவேறின என்று தங்களைத் தாங்களே புகழ்வனவாக இருக்கும். இத்தகைய பேச்சுக்கள் இவர்கள்  பிதாவாகிய தேவன் அருளியபடி பேசவில்லை தங்கள் சுயமாகவே பேசுகிறார்கள் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கின்றன. ஏனெனில் பிதாவாகிய தேவன் இப்படிப் பெருமை பேசுபவரல்ல; பேசுபவர்களை கனம் பண்ணுவதுமில்லை.

பெரும்பாலான ஊழியர்கள் இப்படி சுய புராணங்கள் பேசக்காரணம் பெருமை. தங்களை மற்றவர்களைவிட மேலானவர்கள் என்று மக்கள் கருதவேண்டும், அதன்மூலம் கூட்டமும் காணிக்கைகளும் தங்களுக்குச் சேரவேண்டும் என்பதற்காகவே. 

தேவனுக்கு நாம் முதலிடம் கொடுத்து வாழும்போது நாம் பேசவேண்டியதை பரிசுத்த ஆவியானவரே நமக்குப் போதித்து வழிநடத்துவார். "என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்." ( யோவான் 14 : 26 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

பரிசுத்த ஆவியானவரோடு தொடர்பில்லையானால் நாம் சுய புராணங்களையே பேசிக்கொண்டிருப்போம். நமது  பேச்சுகளும் செயல்களும் நம்மை உயர்த்துவதாக, நம்மைப் பெருமைப்படுத்துவனவாகவே இருக்கும். அத்தகைய சுய பெருமைக்காரன் சாதாரண அரசியல்வாதியைப்போலவே இருப்பான். 

"நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்." என்று இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தையின்படி வாழ்வதே மெய்யான ஊழியன் செய்யவேண்டியது. ஊழியர்களுக்கு மட்டுமல்ல சாதாரண விசுவாசிகளுக்கும் இதுவே ஏற்புடையது. 

இன்று பிரபலமான கிறிஸ்தவ  ஊழியர்களுக்கு இந்த அனுபவம் இல்லாததால் அவர்களது பேச்சுக்கள் மற்றவர்களால் கேலிபேசக்கூடிய அளவுக்கு மாறிவிடுகின்றன. நமது பேச்சுக்களையும் எழுத்துக்களையும்  வெறும் ஐந்துபேர் கேட்டாலும் படித்தாலும் போதும், நாம் பிதாவாகிய தேவன் அருளிய சத்தியத்தின்படி பேசுவதே சிறப்பு. 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Monday, January 16, 2023

சபிப்பவர்கள் மேலேயே அந்த சாபங்கள் வந்து தங்கும்.

ஆதவன் 🌞 720 🌻 ஜனவரி 17,  2023 செவ்வாய்க்கிழமை

"அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்து போவதுபோலும், காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது." ( நீதிமொழிகள் 26 : 2 )

சாபமிடுதல்  சிலருக்கு எப்போதுமே அவர்களை அறியாமலேயே வாயில் வரும். எதற்கெடுத்தாலும் மற்றவர்களைச் சபிப்பார்கள். இது ஒரு வியாதிபோல அவர்களுக்கு.

ஒருமுறை ஒரு சகோதரன் என்னிடம், "பிரதர் எங்களது பக்கத்து வீட்டுகார பெண்மணி எதற்கெடுத்தாலும் சாபம்போடுகின்றார். காலை எழும்பியதுமுதல் கேட்கும் "விளங்கமாட்டான்", "நாசமாய்ப்போவான்" எனும் வார்த்தைகளே எங்களை மிகவும் மனம் நோகச்  செய்கின்றது.  எங்களுக்கு இது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது" என்று கூறினார். 

இதுபோல பலர் இந்த உலகத்தில் உண்டு. ஆனால் இந்தச் சாபத்தைக்கேட்டு பலரும் பயப்படுகின்றார்கள். இன்றைய தியானத்துக்குரிய வசனம் நாம் இப்படி காரணமில்லாத சாபங்களை எண்ணிக் கலங்கவேண்டியதில்லை என்று கூறுகின்றது. "அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்து போவதுபோலும், காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது." என்று இன்றைய வசனம் கூறுகின்றது. எனவே தேவ பிள்ளைகளான நாம் இத்தகைய சாபமிடுபவர்களைக்கண்டு பயப்படவேண்டிய அவசியமில்லை. 

நாம் உண்மையாய்ப் பயப்படவேண்டியது கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்க நாம் தவறும்போது மட்டுமே. ஏனெனில் வேதம் கூறுகின்றது, "அப்படி அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்." ( உபாகமம் 28 : 15 ) என்று.  

மட்டுமல்ல, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவை மரத்தில் வெற்றிச்சிறந்து  நமது சாபங்களையெல்லாம் இல்லாமலாக்கிவிட்டார். நாம் இயேசு கிறிஸ்துவுக்கு ஏற்புடையவர்களாக வாழும்போது அவருடைய பிள்ளைகள் ஆகின்றோம். எனவே,   எந்த சாபமும் நம்மை அணுகாது.

மற்றவர்கள் இடும் சாபத்தைப்பற்றி கூடும் வேதம் நமக்கும் பின்வருமாறு அறிவுறுத்துகின்றது:-  "உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள்." ( ரோமர் 12 : 14 ). ஆம், தேவனுக்கு உகந்தவர்களாக வாழும்போது மற்றவர்கள் இடும் சாபம் நம்மேல் பலிக்காது. நாமும் பிறரை சபியாமல் இருக்கவேண்டும். 

அப்படி நாம் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழும்போது காரணமில்லாமல் நமக்குக் கூறப்படும் சாபம் ஆசீர்வாதமாக மாறும். மட்டுமல்ல, நம்மைச் சபிப்பவர்கள் மேலேயே அந்த சாபங்கள் வந்து தங்கும்.  

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Saturday, January 14, 2023

தேவனுக்குப் பிரியமில்லாத செயல்பாடுகளைத் தவிர்ப்போம்

ஆதவன் 🌞 719 🌻 ஜனவரி 16,  2023 திங்கள்கிழமை

"நீ மிகவும் பிரியமானவன், ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது," ( தானியேல் 9 : 23 )

ஜெபத்தைக்குறித்தும் அதற்குத் தேவன் பதில் தருவது குறித்தும் இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் வாசிக்கின்றோம்.  நமது ஜெபத்துக்குத் தேவன் பதில்கொடுக்க நாம் என்னச் செய்வது என்பதை இந்த வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது.  தேவனை நோக்கித் தானியேல் ஜெபித்தபோது அவரது ஜெபத்துக்குப் பதிலை உடனேயே காபிரியேல் தூதன் கொண்டு வருகின்றான். காபிரியேல் தூதன் தானியேலுக்கு அறிவித்த வார்த்தைகளே இன்றைய தியானத்துக்குரிய வசனம்.

இந்த வசனத்தில் தானியேலை, "நீ மிகவும் பிரியமானவன்" என்று தூதன் கூறுகின்றான். அப்படிப் பிரியமானவனாக இருந்ததால் அவன் வேண்டிக்கொண்ட அதேசமயத்தில் தேவனது பதில் அவனுக்கு அனுப்பப்படுகின்றது.

தானியேலின் ஜெப வாழ்க்கை, தேவனுக்காக தானியேல் காட்டிய பக்தி வைராக்கியம், உயிரே போனாலும் போகட்டும் தேவனுக்கு எதிரான செயல்பாடுகளைச் செய்யமாட்டேன் எனும் உறுதி இவைகளை நாம் தானியேல் புத்தகத்தில் படித்தறியலாம். தானியேலின் அந்த விசுவாசத்தையும் பக்திவைராக்கியத்தையும் தேவன் கனம் பண்ணத் தவறவில்லை.   

அன்பானவர்களே, நமக்கு ஒரு பரலோக அரசாங்கம் உண்டு. நமது தேவைகள் அனைத்தையும் நாம் தெரிவிக்கவேண்டியது அந்த அரசாங்கத்திடம்தான். அங்கிருந்தே நமக்கு அனைத்தும் கிடைக்கின்றன. "நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை." ( யாக்கோபு 1 : 17 ) என்று எழுதுகின்றார் யாக்கோபு.

யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லாத தேவனிடம் நாமும் தானியேலைபோல உண்மையாய் உத்தமமுமாய் இருந்து வேண்டுதல் செய்வோமானால்,  நாமும் தானியேலைப் போல தேவனுக்கு மிகவும் பிரியமானவர்கள் ஆவோம். அப்போது நமது வேண்டுதலுக்கும் தேவன்  உடனடி பதில் தருவார். 

மட்டுமல்ல, தேவன் தானியேலுக்கு பல்வேறு வெளிப்பாடுகளையும் அருளினார். அந்தத் தீர்க்கதரிசனங்கள் இன்றளவும் நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. 
.
நாம் வாழும் சமூகத்தில் பல செயல்பாடுகள் தேவனுக்கு ஏற்புடையவை அல்லாதவையாக இருக்கின்றன. சமூக நல்லிணக்கம், மத நல்லிணக்கம் எனும் போர்வையில் நம்மை அவைகளைப் பின்பற்றச் செய்திட  சாத்தான் முயற்சிப்பான். நாம் எனவே கவனமாக இருக்கவேண்டும். 

அனைவரையும் அன்பு செய்வது என்பது வேறு அனைவரது செயல்பாடுகளையும் பின்பற்றுவது என்பது வேறு. தேவனுக்குப் பிரியமில்லாத செயல்பாடுகளைத் தவிர்ப்போம்; அனைவரையும் அன்புசெய்வோம். தானியேலைபோல தேவனுக்கு ஏற்புடையவர்களாக  வாழ்ந்து அவருக்கு மிகவும் பிரியமானவன் என்று பெயர் எடுப்போம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Thursday, January 12, 2023

கர்த்தரோடு நம்மை இணைத்துக்கொள்ளும் அனுபவம் வேண்டுவோம்

ஆதவன் 🌞 718 🌻 ஜனவரி 15,  2023 ஞாயிற்றுக்கிழமை

"கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்." ( சங்கீதம் 31 : 24 )

கர்த்தருக்குக் காத்திருத்தல் என்பது உறுதியான விசுவாசத்தோடு கர்த்தரையே சார்ந்துகொல்வதைக்  குறிக்கின்றது. நாம் ஏதும் செய்யாமல் வெறுமனே ஒரு பேரூந்துக்காகக் காத்திருக்கும் பயணியைப்போல இருக்கவேண்டும் என்று பொருளல்ல, மாறாக கர்த்தரிடம் நாம் உறுதியாகத் தரித்திருப்பதையே குறிக்கின்றது. காத்திருத்தல் என்று கூறப்படும் இந்த வார்த்தைக்கு எபிரேய மூல மொழியில் கூறப்பட்ட வார்த்தை QUVAH  என்பது என்று எபிரேயம் தெரிந்த எனது நண்பர் ஒருவர் கூறினார். 

இதற்கு, பின்னுதல், ஒட்டுதல் (bind) என்ற பொருளும் உண்டு என்று கூறினார் அவர். அதாவது கர்த்தரோடு கர்த்தராகத் தங்களைப் பின்னிக்கொண்டவர்கள் அல்லது கர்த்தரோடு தங்களை ஒட்டிக்கொண்டவர்கள் என்று பொருள். 

இப்படிக் "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்." ( ஏசாயா 40 : 31 )

இன்றைய வசனம் கூறுகின்றது இப்படிக் "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்" என்று. அதாவது இப்படிக் கர்த்தரோடு ஒரு ஒட்டுதலான வாழ்க்கை வாழ்ந்தால் அவர் நமது இருதயத்தை உறுதிப்படுத்துவார். இந்த வசனம், நாம் கேட்பதையெல்லாம் அவர் தருவார் என்று கூறாமல் "உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்" என்று கூறுகின்றது. நமது இருதயம் உறுதிப்படும்போது நாம் கேட்பது கிடைக்காவிடினும் அவரது சித்தத்தை ஏற்றுக்கொள்ளும் பலத்தை நமக்குத் தரும்.

இதற்கொத்த வேத வசனங்கள் பல சங்கீத புத்தகத்தில் உண்டு. 

"கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு" ( சங்கீதம் 37 : 7 )

"கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்." ( சங்கீதம் 37 : 9 )

அன்பானவர்களே, கர்த்தரோடு நம்மை இணைத்துக்கொள்ளும் அனுபவம், கர்த்தரோடு கர்த்தராக நம்மைப் பின்னிக்கொள்ளும் அல்லது ஒட்டிக்கொள்ளும் அனுபவத்தில் நாம்  வளரவேண்டியது அவசியம். அப்படி வளரும்போது மட்டுமே நாம் உலகத் துன்பங்களையும் வேதனைகளையும் தாங்கிக்கொள்ளும் மனப் பக்குவதைப் பெற முடியும். உலக ஆசீர்வாதங்களையல்ல, கர்த்தரையே முதன்மையாக வேண்டுவோம். அப்போது நமது இருதயம் கர்த்தரில் உறுதிப்படும்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

வாழ்க்கையாலும் பிறருக்கு உதவுவதன்மூலமும்

ஆதவன் 🌞 717 🌻 ஜனவரி 14,  2023 சனிக்கிழமை

"இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம்." ( யோவான் 6 : 9 )

இயேசு கிறிஸ்து ஒருமுறை மக்களுக்கு வனாந்தரமான இடத்தில போதனை செய்துகொண்டிருந்தார். மிகுதியான மக்கள்கூட்டம் சேர்ந்துவிட்டது. பொழுதும் அதிகநேரம் ஆகிவிட்டது. அந்த மக்களை அப்படியே அனுப்பிவிட இயேசு கிறிஸ்து விரும்பவில்லை. அவர்களது பசியை ஆற்றவேண்டும் என்று விரும்பினார். எனவே தனது சீடர்களில் ஒருவராகிய பிலிப்புவிடம், " இவர்கள் சாப்பிட அப்பங்களை நாம் எங்கே வாங்கலாம்? என்று கேட்டார். அப்போது பிலிப்பு, "ஒவ்வொருவருக்கும் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்தாலும் இருநூறு பணத்துக்கு அப்பம் வாங்கினாலும் போதாதே?" என்று  கைவிரித்தார். 

அப்போது இன்னொரு சீடனான அந்திரேயா என்பவர் இன்றைய தியானத்துக்குரிய வசனத்தைக் கூறினார்.  இயேசு கிறிஸ்து அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் வாங்கி ஆசீர்வதித்து அவைகளை வர்த்திக்கப்பண்ணி ஐயாயிரம்பேருக்கு உணவளித்தார். 

இன்று நம்மிடம் இருக்கும் திறமைகளும், பணமும் கொஞ்சமாக இருக்கலாம். இவற்றைக்கொண்டு நாம் தேவனுக்கென்று  என்னதான் பெரிதாகச் செய்துவிடமுடியும் என நாம் எண்ணலாம். ஆனால், தேவனது கரம் நம்மோடு இருக்கும்போது எந்தச் சிறியச் செயலாக இருந்தாலும் அது மிகப்பெரிய தாக்கத்தைக் கொண்டுவரும். அந்தச் சிறியச் செயல் பல ஆயிரம் மக்களது ஆவிக்குரியப் பசியைத் தணிக்கமுடியும்.  

மேலும், இன்றைய வசனம் கூறப்பட்ட சூழ்நிலையையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். இயேசு கிறிஸ்து மக்களுக்குப் போதனைச் செய்தபின்பு அவர்களது பசியைத் தணித்தார். இன்று நாமும் வெறும் சுவிசேஷ அறிவிப்பு செய்துவிட்டு மக்களது உலகுசார்ந்த தேவைகளைக் கவனிக்காமல் இருந்தால் அதில் அர்த்தமிருக்காது. நம்மால் இயன்றவரை மக்களது உலகத் தேவைகளைச் சந்திக்க முயலவேண்டும்.  
  
"ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அனுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன?" ( யாக்கோபு 2 : 15, 16 ) என்கிறார் அப்போஸ்தலரான  யாக்கோபு.

நாம் நமது வார்த்தையால் கிறிஸ்துவை அறிவிப்பதோடு வாழ்க்கையாலும் பிறருக்கு உதவுவதன்மூலமும் கிறிஸ்துவை அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். பெரிய அளவில் இவற்றைச் செய்ய இயலாவிட்டாலும் இரண்டு மீன்கள் ஐந்து அப்பங்களைப்போல சிறிய அளவில் செய்தாலும் தேவன் அதனை மிகப்பெரிய ஆசீர்வாதமாக மாற்றி பலருக்குப் பயனுள்ளதாக்குவார்.   இத்தனை ஜனங்களுக்கு நாம் செய்யும் உதவி எம்மாத்திரம் எனத் தயங்கிடாமல் நமது பணியைத் தொடர்ந்து செய்வோம். கர்த்தர்தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Tuesday, January 10, 2023

கல்வாரி நாதரான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் போ

ஆதவன் 🌞 716 🌻 ஜனவரி 13,  2023 வெள்ளிக்கிழமை

"நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப்போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்கு கட்டளையிட்டேன்." ( 1 இராஜாக்கள் 17 : 9 )

இக்கட்டு இடர்களில்  தனது ஊழியர்களையும் தனக்கு ஏற்புடையவர்களாக வாழும் மக்களையும் தப்புவிக்க தேவன் உதவிசெய்கிறார்.  தேவனது அந்த உதவியைப் பெறுவதற்கு நாம் தகுதியுள்ளவர்களாக மாறவேண்டியதே அவசியம்.  இன்றைய வசனம் பஞ்சகாலத்தில் தனது ஊழியக்காரனாகிய எலியாவுக்கு தேவனால் அருளப்பட்டதாகும். 

ஐயோ பஞ்சம் வந்துவிட்டதே, பணமோ உணவோ இல்லையே எனக் கலங்கிடாதே, நான் உனக்காக, உனக்கு உணவளிக்க  ஒரு விதவையை ஏற்கெனவே ஏற்பாடுசெய்துவிட்டேன் என்று எலியாவைத் திடப்படுத்தி அனுப்புகின்றார் தேவன்.

தேவன் அனுப்பும்போது எந்தக் குறைவும் இன்றி அவர் வாக்களித்த உணவு  எலியாவுக்குக் கிடைத்ததுபோல நமக்கும்  கிடைக்கும். ஆனால் சரியான இடத்துக்கு நாம் செல்லவேண்டும். இந்தப் பஞ்சகாலத்தில் பணக்காரர்களே உணவில்லாமல் தவிக்கிறார்கள் ஏழை விதவை எப்படி நமக்கு உணவுத்தருவாள்? என்று எலியா எண்ணியிருந்தால் உணவு கிடைத்திராது. 

இன்று இதுபோல ஆவிக்குரிய வாழ்வில் நாம் சோர்ந்துபோயிருக்கலாம், அல்லது ஆவிக்குரிய உணவு நமக்குப் போதுமான அளவு கிடைக்காமல் இருக்கலாம். அல்லது இத்தனை வயதாகியும் நமக்கு ஆவிக்குரிய உணவைக்குறித்து அறிவில்லாமலிருக்கலாம். பல்வேறு தேவர்களையும் பல்வேறு ஊழியர்களையும் தேடி ஓடி சலிப்படைந்திருக்கலாம். ஆனால் நாம் தயங்கிடத் தேவையில்லை. 

"நானே வானத்திலிருந்திறங்கின ஜீவஅப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே" ( யோவான் 6 : 51 ) என்று வாக்களித்த இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதியை நம்புவோம். அன்று யூதர்கள் இயேசுவின் வார்த்தையால் இடறலடைந்தார்கள். "நமக்கு இவன்  எப்படித் தனது உடலைத் தரமுடியும்? என்றனர். இது கடினமான உபதேசம் என்று பலர் அவரைவிட்டுப் பிரிந்தனர். 

தேவனுடைய வார்த்தையை நம்பி சாறிபாத் விதவையைநோக்கி எலியா சென்றதுபோல கல்வாரி நாதரை நோக்கி நாம் செல்லவேண்டியது அவசியமாய் இருக்கிறது. 

விருந்துகளில் சற்று தாமதமாக நாம் சென்றால் சில உணவு வகைகள் நமக்குக் கிடைக்காமல்  போகும். சிலவேளைகளில் எதுவுமே கிடைக்காமல் போகலாம். ஆம், உலக விருந்துகளுக்கு  காலம், இடம், நேரம் முக்கியம். சரியான காலத்தில், சரியான வேளையில் சென்றால்  மட்டுமே உணவு கிடைக்கும். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எவரையும் புறம்தள்ளுவதில்லை. நமது வயது நமக்குத் தடையல்ல. எனவே தைரியமாக அவரை நோக்கிச் செல்வோம்.

"நானே வானத்திலிருந்திறங்கின ஜீவஅப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான். " ( யோவான் 6 : 51 ) என்று வாக்களித்துள்ளார் அவர்.

"வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான்." ( யோவான் 6 : 58 )

அவரைப் புசிப்பது என்பது, நமது பாவங்களுக்காக அவர் தனது இரத்தத்தைச் சிந்தி பலியானார் அவரது இரத்தம் நமது பாவங்களைக் கழுவி சுத்திகரிக்கும் என்பதை விசுவாசித்து ஏற்றுக்கொள்வதுதான். 

நீ எழுந்து, கல்வாரி நாதரான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் போ. அவரோடே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அவரே உன்னோடு இருந்து நடத்துவார்.  

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்

ஆதவன் 🌞 715 🌻 ஜனவரி 12,  2023 வியாழக்கிழமை

"என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை. நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர்"( சங்கீதம் 44 : 6, 7 )

கர்த்தரை நம்பாமல் தங்களது சுய பலத்தையே நம்பி வாழ்கின்றனர் பலர்.  தங்களது வாழ்வின் செழிப்பெல்லாம் தங்களது சுய பலத்தினால்தான் என்று எண்ணுகின்றனர். எனக்கு நல்ல வேலை இருக்கின்றது, நான் சம்பாதிக்கிறேன் என்று கூறிக்கொள்கின்றனர்.  இந்த வேலையும் சம்பாதிக்கும் திறனும் தேவன் கொடுத்தது என்று அவரை மகிமைப்படுத்தத் தவறிவிடுகின்றனர். 

என்னதான் நல்ல வேலை இருந்தாலும் நல்ல உடல் நலம் தேவன் கொடுப்பதுதான். நல்ல உடல் சுகம் இருந்தால் மட்டுமே நமது வேலையாலும் சம்பாத்தியத்தாலும் பலன் உண்டு. 

அன்பானவர்களே, நமக்கு எவ்வளவு அதிக அறிவும், நல்ல வேலையும் சம்பாதிக்கும் திறமையும் இருந்தாலும் நாம் அவற்றின்மீது நம்பிக்கை வைக்காமல் தேவன்மேலேயே நம்பிக்கை வைக்கவேண்டும். இன்றைய உலகினில் நாம் பல விஷயங்களை நேரடியாகப் பார்க்கின்றோம். நல்ல வேலையில் இருபவர்களது வேலை திடீரென்று இல்லாமல் போய்விடுகின்றது. உலகின் முன்னணி நிறுவனங்களில் பெருமையோடு உயர் பதவி வகித்தவர்களின் பதவிகள் ஒரு நொடியில் இல்லாமல்போய்விடுகின்றன.

"அவர் வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்." ( சங்கீதம் 46 : 9 ) என வசனம் கூறுகின்றது. அதாவது தனது ஈட்டியையும் இரத்தங்களையும் பெருமையாக எண்ணுபவர்களை தேவன் அழித்து ஒழியப்பண்ணுகின்றார். 

"ஆண்டவரே, என் வேலையை நான் நம்பேன், என் வேலையும் திறமையும் என்னை இரட்சிப்பதில்லை. நீரே எங்கள் வாழ்க்கையினைச் செழிக்கச் செய்பவர்." என்று உண்மையான தாழ்மையுடன் அறிக்கையிடவேண்டும். ஆண்டவர் இதனையே விரும்புகின்றார்.   பலருக்கு இந்த எண்ணம் இல்லாததால் பெருமையும் மற்றவர்களை அற்பமாக எண்ணும் குணமும்  ஏற்படுகின்றது.

நமக்கு எவ்வளவு பெரிய பதவி இருந்தாலும் அதனைவிட மகா பெரிய தேவையே நாம் நம்பவேண்டும்.  "பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்." ( லுூக்கா 1 : 52, 53 ) எனும் வேத வசனங்கள் நமக்கு எப்போதும் ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

தாழ் நிலையிலுள்ளவர்களை ஒரே நொடியில் உயர்த்தவும், உயரத்தில் இருப்பவர்களை ஒரேநொடியில் தாழ்த்தவும் தேவனால் கூடும். எனவே, "என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை. நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சிக்கிறவர் " என்று நமது வாயினால் அறிக்கையிடுவோம்.   

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712