இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Wednesday, March 29, 2023

தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல

ஆதவன் 🌞 793🌻 மார்ச் 31, 2023 வெள்ளிக்கிழமை














"போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை." ( 1 கொரிந்தியர் 8 : 8 )

உண்ணும் உணவைக்குறித்து இன்று பல்வேறு சர்ச்சைகள் நாட்டில் நிலவுகின்றன. காய்கறி உண்பவர்கள்தான் மெய்யான ஆன்மீகவாதிகள் என்று ஒரு மாயமான பிரம்மை உருவாக்கப்பட்டுள்ளது.  மேலும், குறிப்பிட்டக் காலங்களில் அசைவ உணவைத் தவிர்ப்பது மேலானது என்று ஒரு கருத்து பலரிடையே உள்ளது. 

இத்தகைய கருத்துக்கள் உண்மையில் மனிதனது மூளையில் உதித்த கருத்தே தவிர இதற்கும் ஆன்மீகத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. நமது உள்ளான மனதையே தேவன் பார்க்கின்றார். ஆம், உணவானது நம்மை கடவுளுக்கு ஏற்ப்புடையவர்கள் ஆக்கிடாது.  புசிப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை அல்லது மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை அல்லது குறைவுமில்லை.

நமது இருதயமானது உணவினால் அல்ல மாறாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையினால் பலப்படவேண்டும். அதுவே நல்லது.  "போஜன பதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது; போஜனபதார்த்தங்களில் முயற்சிசெய்கிறவர்கள் பலனடையவில்லையே." ( எபிரெயர் 13 : 9 ) 

ஆவியின் கனிகள் உள்ளவனே ஆவிக்குரியவன்.   அவனே கிறிஸ்தவன். "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." ( கலாத்தியர் 5 : 22,23 ) இந்த ஆவிக்குரிய கனிகள் ஒருவருக்கு அசைவ உணவுகளைத் தவிர்ப்பதால் வந்திடாது; மாறாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைச் சார்ந்துகொள்வதால் மட்டுமே வரும். 

இன்று கிறிஸ்தவர்களில் பலரும்கூட குறிப்பிட்ட காலங்களில் மீன், இறைச்சி போன்ற அசைவ உணவுகளைத் தவிர்ப்பது தேவனுக்கு ஏற்றச் செயல் என்று கருதிக்கொள்கின்றனர். அன்பானவர்களே, இவை உடலுக்கு நன்மையாக இருக்கலாம். ஆனால், இவைகளைத் தவிர்த்துவிட்டு  மேற்கூறிய ஆவியின் கனிகள் இல்லாமல் வாழ்ந்து என்ன பயன்?

"போஜன பதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது" என்று எபிரெயர் நிருப ஆசிரியர் கூறுவதுபோல நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையில் பலப்பட முயலவேண்டும்;  தேவனது கிருபையினைச் சார்ந்து ஆவிக்குரிய வாழ்வு வாழ முயலவேண்டும்.  உணவுக் கட்டுப்பாட்டு முயற்சிகள் நமது உடலைப் பேணலாமேத்தவிர ஆவிக்குரிய வாழ்வைப் பேண உதவாது.  

ஆம், ஆவிக்குரிய வாழ்க்கையும் தேவனுடைய ராஜ்யமும். சாப்பிடுவது, குடிப்பது இவற்றின் அடிப்படையானது அல்ல. "தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது." ( ரோமர் 14 : 17 )

அற்பமான உணவு விஷயத்துக்கு முன்னுரிமைக் கொடுப்பதைவிட பரிசுத்த ஆவியினால் உண்டாகும் நீதி, சமாதானம், சந்தோஷத்தையே தேடுவோம்.  

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Tuesday, March 28, 2023

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் வந்தவர் கடவுளா?

ஆதவன் 🌞 792🌻 மார்ச் 30, 2023 வியாழக்கிழமை


















"இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்." ( எபிரெயர் 13 : 8 )

இன்று கிறிஸ்தவர்களாகிய பலரும்கூட இயேசு கிறிஸ்து சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பூமியில் பிறந்து, வாழ்ந்து, பாடுபட்டு, மரித்து, உயிர்த ஒருவர் என்றே எண்ணிக்கொண்டிருக்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் வந்தவர் எப்படிக் கடவுளாக இருக்க முடியும்? இந்த உலகம் தோன்றி கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆயிற்றே? கிறிஸ்துவை விமரிசிக்கும் அல்லது கடவுளாக ஏற்றுக்கொள்ளத் தயங்கும் பலரும் இதனையே கேட்கின்றனர். கடவுள் என்றால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பு அவர் எங்கிருந்தார்? என்ன செய்தார்? 

அன்பானவர்களே, அவர் உலகம் தோன்றுவதற்கு முன்பே இருக்கிறார். இதனை இயேசு கிறிஸ்துவே பின்வருமாறு கூறினார். "பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன்." ( யோவான் 17 : 24 ) 

மட்டுமல்ல, இந்த உலகமே அவரால்தான் படைக்கப்பட்டது. "சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை." ( யோவான் 1 : 3 ) உலகப் படைப்பில் அவர் பிதாவோடு இணைந்திருந்தார். "பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்." ( 1 கொரிந்தியர் 8 : 6 )

ஆனால் இந்த உலகம் அவரை அறியவில்லை.  "அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை." (யோவான் 1:10)

பிதா இயேசு கிறிஸ்துவைக்கொண்டு உலகத்தைப் படைத்தார். இதனையே ரகசியம் என்று பவுல் அடிகள் கூறுகின்றார். "இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று....."( எபேசியர் 3 : 11 )

இந்தக் கிறிஸ்துவே பழைய ஏற்பாட்டில் மோசேயோடு இருந்து இஸ்ரவேல் மக்களை வழி நடத்தினார். "எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே." ( 1 கொரிந்தியர் 10 : 4 ) என்று வசிக்கிறோம். "ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் " (யோவான் 8 : 58 ) என்று இயேசு கிறிஸ்து கூறினாரே?

ஆம், இதனையே இன்றைய தியானத்துக்குரிய வசனம் கூறுகின்றது, "இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்." என்று. இந்த வசனத்தை இதன் ஆழமான அர்த்தம் புரியாமல் பலரும் கூறிக்கொண்டிருக்கின்றோம். நேற்று, அதாவது உலகம் படைக்கப்படுமுன், பழைய ஏற்பாட்டுக்காலத்தில்  எப்படி இருந்தாரோ அதேபோல இயேசு கிறிஸ்து இன்றும் இருக்கின்றார், நாளையும், அதாவது நமது மறுவுலக வாழ்விலும் மாறாதவராக இருப்பார்.

இதனை நாம் தியானித்து உணரும்போதே கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையையும், இத்தனைப் பெரிய தேவன் தனையே தாழ்த்தி அடிமையின் ரூபமெடுத்து தான் உண்டாக்கின மனிதர்கள் கையால் மரிக்கும்படி தன்னையே ஒப்புக்கொடுத்த அன்பின் மேன்மையினையும் உணர முடியும். 

இத்தகைய சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார், நமக்குள் இருக்கின்றார் என்பதுதான் அதிசயம். எனவே அன்பானவர்களே, நாம் கவலைகொண்டு தனித்து புலம்பவேண்டிய அவசியமில்லை. திட நம்பிக்கையோடு நமது கிறிஸ்தவ வாழ்வைத் தொடருவோம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Monday, March 27, 2023

ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்

ஆதவன் 🌞 791🌻 மார்ச் 29, 2023 புதன்கிழமை

































"அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்." ( ரோமர் 15 : 1 )

ஆவிக்குரிய வாழ்வில் எல்லோருமே தேறினவர்கள் அல்ல. ஆவிக்குரிய வளர்ச்சி என்பதும் முடிவில்லாதது. இந்த உலகத்தில் நாம் வாழும் இறுதிநாள்வரை நமது ஆவிக்குரிய வளர்ச்சித் தொடருகின்றது. 

ஒருவருக்கு வாழ்வில்  கிடைத்திருக்கும் வாய்ப்புகள் போல எல்லோருக்கும் கிடைத்திருக்காது. எனவே, ஒருவர் ஆவிக்குரிய வாழ்வில் மற்றவரைவிட மேலான நிலையினையும் மேலான அனுபவங்களையும் பெற்றிருக்கலாம். இப்படி ஆவிக்குரிய வாழ்வில் பலமடைந்தவர் அதனை தமக்கே உரியது என்றும்,  தனது நன்மைக்கே என்றும் கருதிடாமல்  ஆவிக்குரிய வாழ்வில் பலவீனமாய் இருக்கும் சகோதரருக்கும் சகோதரிகளுக்கும் உதவிடவேண்டியது அவசியம். 

சுவிசேஷம் அறிவிப்பதன் ஒரு  நோக்கமும் இதுதான். நமக்குத் தெரிந்த ஆவிக்குரிய உண்மைகளை, ஆவிக்குரிய அனுபவங்களை பிறரோடு பகிர்ந்து கொள்ளவேண்டும். இப்படிப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும்போது அது ஆவிக்குரிய வாழ்வில் தளர்ந்து சோர்ந்திருக்கின்றவர்கள்  பலமடைந்திட உதவும்.  

இயேசு கிறிஸ்து தனது சீடர்களை ஊழியத்துக்கு அனுப்பும்போது அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார். (மாற்கு 6:11) காரணம் ஒருவர் பலவீனத்தை மற்றவர் தங்கவேண்டும் என்பதற்காகவே.  "ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே." (பிரசங்கி 4:10) என வாசிக்கின்றோம்.

அப்போஸ்தலனாகிய பவுல் அடிகள் மாமிசம் உண்பதைக்குறித்தும் இதர காரியங்களைக்குறித்தும்  விளக்கும்போது இன்றைய தியானதுக்குரிய வசனத்தைக் கூறுகின்றார். அதாவது ஆவிக்குரிய வாழ்வில் மேலான அனுபவம் உள்ளவர் ஆவிக்குரிய வாழ்வில் இன்னும் வளர்ச்சியடையாத நிலையிலுள்ள ஒருவர் செய்யும் செயல் தவறு என உணர்ந்தால்  அதனையே குத்திக்காட்டி அவர்களைச் சோர்வடையச் செய்யாமல் அவர்களுடைய பலவீனங்களை பொறுத்துக்கொள்ளவேண்டும். அவர்களது செயலை மென்மையாக உணர்த்தி அவர்களை நல்வழிப்படுத்தவேண்டும்.

நான் எனது ஆவிக்குரிய வாழ்வின் ஆரம்ப காலத்தில் ஒருமுறை பிரபல ஊழியர் நடத்திய உபவாசக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். அவர் பிரபலமானவர் என்பதால் அவரைப் பார்க்கவேண்டும் எனும் எண்ணமும் அப்போது எனக்கு இருந்தது. ஆனால் தற்செயலாக அந்த உபவாசக்கூட்டத்தில் கலந்துகொண்டதால் அதற்குமுன் காலை உணவு உட்கொண்டிருந்தேன். அந்த ஊழியரோ, "சாப்பிட்டுக்கொண்டு இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தேவனை ஏமாற்றப் பார்க்கிறவர்களுக்கு வேதனைகள் உண்டு" என சபிக்கும் தோரணையில் பேசினார். சும்மா இருந்த நாயின் வாலைப்  பிடித்து இழுத்துக் கடிவாங்கியதுபோல அவரது சாப வார்த்தைகளை வாங்கினேன். மனம் வேதனைப்பட்டது.

கிறிஸ்துவை அறியாத பிறமதச்  சகோதரர்கள் தங்கள் பிரச்சனைகளுக்காக வேதனையோடு இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தால் அவர்கள் வேதனை இன்னும் அதிகமாகுமல்லவா?  எனவேதான்  இப்படி நமது அறிவற்ற செயல்களால் பலவீனமாய் இருக்கும்  பிறரை வேதனைப்படுத்தாமல், பலமுள்ளவர்களாகிய நாம், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்குபவர்களாக வாழவேண்டும் என்கிறார் பவுல் அடிகள். இத்தகைய தவறு நம்மிடம் இருந்தால் திருத்திக்கொள்வோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Sunday, March 26, 2023

உலகத்தின் பாடுகள் கொஞ்சநாளுக்குத்தான்

ஆதவன் 🌞 790🌻 மார்ச் 28, 2023 செவ்வாய்க்கிழமை





"நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்." ( ரோமர் 12 : 12 )

ஆவிக்குரிய வாழ்க்கை லெகுவான காரியமல்ல. இந்த உலக மக்கள் சிந்திப்பதுபோலவும் செயல்படுவதுபோலவும் ஆவிக்குரிய மக்கள் செயல்படமுடிவதில்லை. இதுவே மேலும் மேலும் சிலுவை சுமக்கும் அனுபவத்தை அவர்களுக்கு கொடுக்கின்றது. எனவேதான் இயேசு கிறிஸ்து, "உலகத்திலே உங்களுக்குத் துன்பங்கள் உண்டு, ஆயினும் திடன் கொள்ளுங்கள் " (யோவான் 16:33) என்று நமக்குக் கூறினார். 

இப்படி நாம் துன்பப்பட்டாலும் நமக்கு மறுமையில் மகிமையான ஒரு வாழ்வு உண்டு. அந்த மகிமைக்குமுன் நாம் படும் பாடுகள் பெரிதல்ல.  இதனையே, "ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்." ( ரோமர் 8 : 18 ) எனக் குறிப்பிடுகின்றார் அப்போஸ்தலனாகிய பவுல் அடிகள். 

இந்த மகிமையான நித்திய ஜீவனே நமக்கு நம்பிக்கை.  எனவே, உலகத்தில் துன்பங்கள் இருந்தாலும், இந்த மகிமையைக்குறித்த "நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்." ( ரோமர் 12 : 12 ) என்கின்றார்.

உபத்திரவங்களை பொறுமையாய்ச் சகிப்பதைக்குறித்து அப்போஸ்தலனாகிய யாக்கோபு, "சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்." ( யாக்கோபு 1 : 12 ) என்று எழுதுகின்றார். 

அன்பானவர்களே, எனவே நமது வாழ்வில் துன்பங்கள் பிரச்சனைகள் ஏற்படும்போது நாம் துவண்டுவிடாமல் கர்த்தரையே பற்றிக்கொள்வோம். அப்படி உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும்போது நமக்கு வாழ்க்கையில் நம்பிக்கை  ஏற்படும். அந்த நம்பிக்கை நமக்கு மன மகிழ்ச்சியைக் கொண்டுவரும். 

இவை அனைத்துக்குமே அடிப்படை நாம் கர்த்தரோடு ஜெபத்தில் ஐக்கியமாய் இருப்பதுதான்.  எனவேதான், "இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்." ( கொலோசெயர் 4 : 2 ) என்கின்றார் பவுல் அடிகள். 

இந்த உலகத்தின் பாடுகள் கொஞ்சநாளுக்குத்தான் நம்மை நெருக்கும். ஆனால் அதனை நாம் கர்த்தரோடு இணைந்து வாழும்போது பொறுமையாய்ச் சகித்து வாழ முடியும். எனவே, எந்தத் துன்பம் வாழ்வில் இருந்தாலும் பவுல் அடிகள் இன்றைய தியான வசனத்தில் கூறுவதுபோல, நம்பிக்கையிலே சந்தோஷமாகவும்  உபத்திரவத்திலே பொறுமையாகவும் இருந்து ஜெபத்திலே உறுதியாய் நிலைத்திருப்போம். கர்த்தர்தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Friday, March 24, 2023

செய்யும் செயலை மட்டுமல்ல நோக்கத்தையும் தேவன் பார்க்கின்றார்.

ஆதவன் 🌞 789🌻 மார்ச் 27, 2023 திங்கள்கிழமை










"வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர்". (நீதிமொழிகள் 17:3)

நம்முடைய கர்த்தர் இருதயங்களை ஆராய்ந்து பார்க்கின்றவர். ஒருவர் செய்யும் செயலை மட்டும் பார்த்து அவர் தீர்ப்பிடுவதில்லை. செய்யப்படும் செயலின் நோக்கத்தையும் பார்க்கின்றார். அதன் அடிப்படையிலேயே அவர் மனிதர்களை நியாயம்தீர்க்கின்றார்.

எவ்வளவு நல்லச் செயலாக இருந்தாலும் நாம் அதனைச் செய்யும் நோக்கம் நேர்மையானதாக, கர்த்தருக்கு உகந்ததாக இருக்கவேண்டும். உதாரணமாக சமூக ஊடகங்களில் பதிவிடவேண்டும் எனும் ஒரே நோக்கத்துக்காகச் சிலர் ஏழைகளுக்கு உதவி செய்வார்கள். அவர்களது மெய்யான நோக்கம் ஏழைகளுக்கு உதவுவதல்ல; மாறாக, பலர் அதனைப் பார்க்கவேண்டும், பாராட்டவேண்டும் என்பதுதான். 

தங்க நகைகளும் கவரிங் நகைகளும் ஒன்றுபோலவே இருக்கும் ஆனால் அதன்மேல் சோதிக்கும் திராவகத்தை (Chemical) ஊற்றும்போது உண்மையைக் கண்டுகொள்ளலாம். விலை உயர்ந்த அனைத்துக்குமே போலிகள் உண்டு. இதுபோலவே போலி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. பார்வைக்கு ஒன்றுபோல இருந்தாலும் அவைகளைச் சோதித்து நாம் உண்மை நிலையினைக் கண்டுகொள்ளலாம்.

இதுபோலவே நாம் பார்க்கும்போது மனிதர்கள் எல்லோருமே நல்லவர்கள்போலத் தெரிவார்கள். அவர்களை நாம் அடையாளம் காண முடியாது. அவர்களிடம் ஏமாந்தபின்னரே அவர்களைப்பற்றி நமக்குத் தெரியும்.  ஆனால் தேவனை யாரும் ஏமாற்ற முடியாது. 

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலகத்தில் வாழ்ந்தபோது அவர் தேவனுடைய தற்சொரூபமாய் இருந்தபடியால் தன்னைச் சுற்றி இருந்தவர்களைக் குறித்து அவர் நன்கு  அறிந்திருந்தார். "மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை." (யோவான் 2:25) என்று வாசிக்கின்றோம். 

ஆனால் இன்று மனிதர்கள் பலருக்கும் இந்தச் சத்தியம் தெரியாததால் அவர்கள் தேவனைத் தங்களைப்போன்ற ஒருவராக எண்ணி பொய்யும், ஏமாற்றும், பித்தலாட்டமும் செய்துகொண்டு ஆலய ஆராதனைகளிலும் ஆலயப் பணிகளிலும் எந்த மனச் சாட்சியின் உறுத்தலுமின்றி ஈடுபட்டுள்ளனர். 

அன்பானவர்களே, கர்த்தரை ஏமாற்ற முடியாது. நமது இருதயங்களை தேவன் அறிகிறார் எனும் அச்சம் நமக்கு எப்போதும் இருக்கவேண்டும். அந்த அச்சம் இருக்குமானால் மட்டுமே நாம் போலி முகங்களை அகற்றி நேர்மையுள்ளவர்களாக வாழ முடியும். வேதாகமத்தை வெறுமனே வாசிப்பதாலோ, ஜெபிப்பதாலோ, இறையியல் படிப்பதாலோ நாம் நேர்மையாளர்களாக மாற முடியாது. ஆம், கர்த்தருக்குப் பயப்படும் பயம் இருந்தால் மட்டுமே நாம் நல்ல ஒரு கிறிஸ்தவ வாழ்வு வாழ முடியும். "கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்." (நீதிமொழிகள் 14:27)

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

ஜீவ விருட்சத்தின் கனியை உண்டு மகிழ்வோம்.

ஆதவன் 🌞 788🌻 மார்ச் 26, 2023 ஞாயிற்றுக்கிழமை















"ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன்" ( வெளிப்படுத்தின விசேஷம் 2 : 7 )

ஆதியில் ஏதேன் தோட்டத்தில் தேவன் இரண்டு முக்கியமான மரங்களை வைத்திருந்தார். ஒன்று ஜீவ விருட்சம் இன்னொன்று நன்மைதீமை அறியத்தக்க விருட்சம். இதனை நாம் ஆதியாகமத்தில் வாசிக்கலாம். "தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்." ( ஆதியாகமம் 2 : 9 )

இதில் நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியைத்தான் சாப்பிடக்கூடாது என்று தேவன் ஆதாமுக்கும்  ஏவாளுக்கும் கட்டளைக் கொடுத்திருந்தார். ஆனால் அங்கு ஜீவ விருட்சம் எனும் ஒரு மரமும் இருந்தது. அதுகுறித்து தேவன் எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை.  ஆதாமும் ஏவாளும் அந்த மரத்தின் கனியை உண்பதில் ஆர்வமும் காட்டவில்லை. 

ஆனால் தேவ கட்டளையை ஆதாமும் ஏவாளும் மீறியபோது தேவன் ஜீவ விருட்சத்தின் கனியை அவர்கள் உண்டுவிடக்கூடாது என்று தடுத்தார். காரணம், தேவனுக்கு எதிரான பாவம் செய்த மனிதன் அதனைச்  சாப்பிடக்கூடாது; அப்படிப் பாவியான மனிதன் என்றென்றும்  வாழக்கூடாது என்று தேவன் கருதினார்.  

"இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று," ( ஆதியாகமம் 3 : 22 )  "அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்." ( ஆதியாகமம் 3 : 24 )

அன்பானவர்களே, ஆதாம் ஏவாள் தங்கள் பாவத்தால் சுவைக்காமல் இழந்துபோன ஜீவ விருட்சத்தின் கனியை ஆவிக்குரிய வாழ்வில் வெற்றிபெறும் அனைவர்க்கும் தருவேன் என்கின்றார் தேவன்.  ஆம், வெற்றிபெறுபவன் எவனெவனோ அவனுக்கு / அவளுக்கு இந்தக் கனி உண்ணக்கொடுக்கப்படும் என்கிறார் கர்த்தர். 
"ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன்"  என்கின்றார்.

"முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்." ( 1 கொரிந்தியர் 15 : 47 ) முதலாம் மனிதனாகிய ஆதாமினால் இழந்துபோன இந்த ஆசீர்வாதம் இரண்டாம் ஆதாமாகிய வானத்திலிருந்து வந்த கர்த்தராகிய  இயேசு கிறிஸ்துவினால் நமது பாவங்கள் கழுவப்பட்டு நாம் பரிசுத்தமாகும்போது நமக்குக் கிடைக்கின்றது. 

மற்ற உலக பந்தயங்களில் ஒருவருக்கு மட்டுமே பரிசு கிடைக்கும். ஆனால் ஆவிக்குரிய ஓட்டத்தில் வெற்றிபெறும் அனைவருமே பரிசு பெறலாம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே பற்றிக்கொண்டு பரிசுத்தமான வாழ்வு வாழ்வோம். ஜீவ விருட்சத்தின் கனியை உண்டு மகிழ்வோம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Thursday, March 23, 2023

நாம் யாருக்கு அடிமைகள்?

ஆதவன் 🌞 787🌻 மார்ச் 25, 2023 சனிக்கிழமை








"மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?" ( ரோமர் 6 : 16 )


"பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்" (யோவான் - 8:34) என்றார் இயேசு கிறிஸ்து.  அடிமை என்பவன் சுய சித்தம் செய்ய உரிமை இல்லாதவன். தன்னை அடிமைப்படுத்தினவனுக்கு அவன் அடிமை ஆதலால்  தொடர்ந்து அவனுக்கே அடிமையாக உழைப்பான். 

இங்கு பவுலடிகள் இரண்டு எஜமானுக்கு நாம் அடிமைகளாய் இருக்கமுடியுமென்று கூறுகின்றார். ஒன்று பாவம்,  இன்னொன்று  நீதிகேதுவான கீழ்ப்படிதல். இந்த இரெண்டுபேரில் யாருக்கு நம்மை அடிமையாக்கிட நம்மை ஒப்புக்கொடுப்போமோ அவர்களுக்கே தொடர்நது அடிமைகளாய் இருப்போம் என்கின்றார். 

பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி நாம் தேவனுக்கு அடிமைகளாகும்போது நம்மை அவர் பரிசுத்தமாக்குகின்றார். மட்டுமல்ல அதன் பலனாகிய நித்திய ஜீவனைப் பெறுகின்றோம்.  "இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்." ( ரோமர் 6 : 22 ) என்று கூறுகின்றார் பவுல் அடிகள். 

கிறிஸ்துவை அறிவதற்குமுன் நம்மையும் நமது உடலையும் நாம் பாவத்துக்கும் அசுத்தத்துக்கும் ஒப்புக்கொடுத்ததுபோல இனி நமது உடலை பரிசுத்தத்துக்கு ஒப்புக்கொடுத்து  நீதிச் செயல்கள் செய்ய ஒப்புக்கொடுக்கவேண்டும். "முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்." ( ரோமர் 6 : 19 )

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும் (1 யோவான் 1:7) என்று வேதம் கூறுகின்றது. அவர் தனது இரத்தத்தினால் பாவமன்னிப்பாகிய சுத்திகரிப்பை உண்டுபண்ணியுள்ளார். எனவே நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்டு அவருக்கு அடிமையாகும்போது நாம் பரிசுத்தமாகின்றோம் 

தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். அன்பானவர்களே, எனவே எதற்குக் கீழ்ப்படியும்படி நம்மை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறோமோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறோம்.  நாம் கர்த்தருக்கே அடிமைகளாயிருக்க நம்மை ஒப்புக்கொடுப்போம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

"வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்?"

ஆதவன் 🌞 786🌻 மார்ச் 24, 2023 வெள்ளிக்கிழமை

"மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்" (மீகா - 6:8)

மோசே மூலம் தேவன் மனிதர்கள் நல்வழியில் வாழ பல்வேறு கட்டளைகளையும் முறைமைகளையும் வகுத்துக் கொடுத்தார். பத்துக் கட்டளைகளைத் தவிர சிறியதும் பெரியதுமான பல கட்டளைகள் வேதத்தில் உண்டு. வேத ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கட்டளைகளை கணக்கிட்டு 613 கட்டளைகள் உள்ளதாகக் கண்டறிந்துள்ளனர்.  இந்த 613 கட்டளைகளையும் நாம் நினைவில்கொண்டு வாழ்தல் கடினமானது. இயேசு கிறிஸ்து இந்த மொத்தக் கட்டளைகளையும் இரண்டு கட்டளைகளுக்குள் அடக்கிவிட்டார். 

1. "உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக" ( மத்தேயு 22 : 37 )
2. "உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக". ( மத்தேயு 22 : 39 )

"இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கின்றன ". ( மத்தேயு 22 : 40 ) என்றார் இயேசு கிறிஸ்து.

இந்த இரு கட்டளைகளையும் கடைபிடிக்கும்போது, நாம்  நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, நம் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்போம். இதனையே நான் கேட்கின்றேன் என்கின்றார் பரிசுத்தராகிய கர்த்தர்.

ஆனால் மனிதர்களாகிய நாம் பெரும்பாலும் ஆன்மிகம் என்றும் பக்தி என்றும் தேவையற்ற காரியங்களுக்கே முன்னுரிமைகொடுத்து வருகின்றோம். "வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்?" எனும் வார்த்தைகள் நம்மை சிந்திக்கத் தூண்டவேண்டும். 

ஒருமுறை ஒரு ஏழைத் தாயாரைச் சந்திக்கும்போது அவர் தனது மனத் துயரத்தை என்னிடம் பகிர்ந்துகொண்டார். தகப்பனில்லாத அவரது  ஒரே மகனை அந்தத் தாயார் மிக கஷ்டப்பட்டு வேலைசெய்து  படிக்கவைத்தார்.  இன்று அவன் நல்ல வேலையில் இருக்கின்றான். அவன் இந்தத் தாய்க்கு எப்போவாவது யார்மூலமாவது சிறு பண உதவிகள் செய்வதோடு சரி.  தாயாரிடம் வந்து பேசுவது கிடையாது. ஆனால் இந்தத் தாய் அவனிடம் பண உதவியையோ வேறு எதையுமோ எதிர்பார்க்கவில்லை. அவர்கள் கண்ணீரோடு கூறினார்கள், "அவன் என்னோடு வந்து பேசவேண்டும் என்பதைத்தவிர வேறு என்ன அவனிடம் எதிர்பார்க்கிறேன்?"

ஆம் அன்பானவர்களே, இதனையேதான் கர்த்தர் இன்றைய வசனத்தில் கூறுகின்றார். "நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்" 

வழிபாடுகளுக்கும் ஆராதனைகளுக்கும்  கொடுக்கும் முக்கியத்துவத்தை தேவனது அன்பின் கட்டளைகளைக் கடைபிடிப்பதற்கும் கொடுப்போம்.  இதைத் தவிர தேவன் நம்மிடம் வேறு எதையுமே பெரிதாகக் கேட்கவில்லை; விரும்பவுமில்லை. 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Wednesday, March 22, 2023

குருடனை வழிதப்பச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்

ஆதவன் 🌞 785🌻 மார்ச் 23, 2023 வியாழக்கிழமை


"லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல."  கொலோசெயர் 2:8) 

இன்றைய சூழ்நிலையில் கிறிஸ்தவர்கள் மிகவும் எச்சரிக்கையாய் இருக்கவேண்டிய காரியத்தைக்குறித்து அப்போஸ்தலரான பவுல் இன்றைய வசனத்தில் குறிப்பிடுகின்றார். 

கிறிஸ்தவ ஞானம், கிறிஸ்துவின்மேல் பற்றுதல் எனும் போர்வையில்  தவறுதலாக  சில வேண்டாத விஷயங்களை உலக அறிவின்படி தந்திரமாய்ப் போதித்து  நம்மைக் கொள்ளையடிக்கும் மனிதர்களின் தந்திரங்களால் நாம் ஏமாந்துபோகாமல் எச்சரிக்கையாயிருக்கும்படி பவுல் அடிகள் அறிவுறுத்துகின்றார். 

இன்று சில பிரபல ஊழியர்கள் கிறிஸ்துவை அறிவிக்கின்றோம் என்று கூறி தேவையில்லாத காரியங்களையே அறிவித்து மக்களை மேலும் மேலும் குருடர்களாக்குகின்றனர். எங்களது  தங்கச் சாவி திட்டத்தில் சேர்ந்தால் ஆசீர்வாதம் என்றும், ஐந்து அப்பமும் இரண்டு மீனும்  திட்டத்துக்குப் பணம் அனுப்பினால் ஆசீர்வாதம் என்றும் பரிசுத்த ஆவியின் வரங்களை எங்களது  பயிற்சிகள் மூலம் பெறலாம் என்றும் கூறி பணம் சம்பாதிக்கின்றனர். 

தீர்க்கதரிசனம் என்பது ஆவியானவர் அருளும் வரங்களில் ஒன்று என்று வேதாகமத்தைப் படிக்கும் சிறு குழந்தையும் அறியும். ஆனால் எங்களது மூன்றுநாள் பயிற்சி முகாமில் கலந்துகொண்டால்  தீர்க்கதரிசனம் கூறலாம் என்று கூறி   மக்களை வஞ்சிக்கும் ஊழியர்களும் சமூக அந்தஸ்தோடு வாழ்கின்றனர்.   காரணம் அறிவற்ற, கிறிஸ்துவை அறியும் ஆர்வமற்ற கிறிஸ்தவர்கள்.   

இவைகளையே அப்போஸ்தலரான பவுல் அடிகள் இவை,  "மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல." என்கின்றார். அதாவது இவை உலக மனிதர்கள் கடைபிடிக்கும் பாரம்பரிய முறைமைகளையும் , உலக வழக்கங்களையும், வியாபாரிகள் கடைபிடிக்கும் தந்திரங்களைச் சார்ந்தவையே தவிர  கிறிஸ்துவைப் பற்றியதல்ல.  

அன்பானவர்களே, இத்தகைய வஞ்சனைகளுக்கு நாம் தப்பிட வேண்டுமானால் நாம் கிறிஸ்துவின் வசனத்தினால் நம்மை நிரப்ப வேண்டியது அவசியம். பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டியது அவசியம். ஆதவனில் இத்தகைய செய்திகளை நான் எழுதும்போது இந்த ஊழியர்களின் விசிறிகளுக்குப் பிடிப்பதில்லை. ஆனால் அதற்காக இந்தச் சத்தியங்களை எழுதாமல் இருக்கமுடியாது. காரணம் புதிய புதிய வியாபார தந்திரங்களோடு இவர்கள் இன்று களம் இறங்குகின்றார்கள். 

இத்தகைய ஊழியர்களை ஆதரிப்பவர்களுக்கு உண்மையில் வேதாகம அறிவு இல்லை என்று பொருள், கிறிஸ்துவிடம் மெய்யான அன்பில்லை என்று பொருள். சிலர், இவை பற்றி நாம் எதுவும் கூறக்கூடாது; தேவனே பார்த்துக்கொள்வார் என்கின்றனர். அன்பானவர்களே, வழியில் இருக்கும் ஆழமான படுகுழியை கண் தெரியாத குருடர்களுக்கு தெரிவிக்கவேண்டியது கண்பார்வையுள்ளோரின் கடமை.  

"குருடனை வழிதப்பச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்." ( உபாகமம் 27 : 18 ) நாம் அமைதியாக தவறுகளைப் பார்த்துக் கொண்டிருப்போமானால், தவறு செய்யும் ஊழியர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் அது பாவமே; சாபமே. 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Monday, March 20, 2023

கர்த்தருக்குப் பயப்படும் பயம்

ஆதவன் 🌞 784🌻 மார்ச் 22, 2023 புதன்கிழமை

"கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது." (நீதிமொழிகள் - 19:23)

இன்றைய தியானத்துக்குரிய வசனம், ஜெபம் செய்தல், காணிக்கைக் கொடுத்தல், உபவாசம் இருத்தல், ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்ளுதல் இவைகளை  ஜீவனுக்கேதுவானவை என்று கூறாமல்  கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது என்று கூறுகின்றது. கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது கர்த்தரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழும் ஒரு வாழ்வைக் குறிக்கின்றது. அப்படி ஒரு வாழும்போது மனத் திருப்தியும் நீண்ட வாழ்க்கையும் நமக்குக் கிடைக்கின்றது. இதனையே, "தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்;" (நீதிமொழிகள் 8 : 13 ) என்றுவேதம் கூறுகின்றது. 

நாம் பணிபுரியும் இடங்களில் அந்தந்த பணிகளுக்கென்று ஒருசில ஒழுங்குகளும் கட்டுப்பாடுகளும் இருக்கும். அவற்றை மதித்து , அவற்றுக்குப் பயந்து நாம் பணிசெய்யும்போதே அங்கு நாம் நிலைத்திருக்கமுடியும். இதுபோலவே நாம் கர்த்தருக்குப் பயந்து அவரது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழும்போது நமக்கு ஆபத்தின்றி நீண்ட ஆயுளும் கிடைக்கின்றது.  "எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்." (நீதிமொழிகள் 1:33) என்று நீதிமொழிகள் கூறுகின்றது.

மனிதர்கள் பொதுவாக தங்கள் வழிபாட்டு முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதுவே போதுமென்று வாழ்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை வழிபாடுகள் மற்றும் தினசரி கடமைக்காகச் செய்யும் ஜெபம், குறிப்பிட்டக் காலங்களில் அனுசரிக்கும் உபவாசம், பக்தி முயற்சிகள்  இவையே கர்த்தருக்கு உகந்தது என்று எண்ணி அவைகளைக் கடைபிடித்து நிம்மதியடைய முயலுகின்றனர். ஆனால் தேவன் நமது இருதயத்தைப் பார்க்கின்றார். எனவே கர்த்தருக்குப் பயந்து நமது இருதயத்தைக் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். 

ஜெபம், காணிக்கை, உபவாசம் இதர வழிபாடுகளுக்குமுன் நமது இருதயம் சுத்தமாகவேண்டியது அவசியம். இதனையே ஏசாயா மூலம் தேவன் கூறுகின்றார், "இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன். உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன்.
நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்.."  ( ஏசாயா 1 : 13- 15 )

அன்பானவர்களே, வழிபாடுகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை முதலில் வாழ்க்கை மாற்றத்துக்குக் கொடுப்போம். கர்த்தருக்குப் பயப்படும் மெய்யான பயம் நமக்குள் இருக்கட்டும். "தீமையை விட்டு விலகி, நன்மை செய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்." ( சங்கீதம் 37 : 27 ) என்கின்றது வேதம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Sunday, March 19, 2023

நாம் விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.

ஆதவன் 🌞 783🌻 மார்ச் 21,  2023 செவ்வாய்க்கிழமை

மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடியினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள். ( ஏசாயா 52:14)

உலகின் மிகச் சிறந்த ஓவியரான லியானார்டோ டாவின்சி அவர்கள் 1490 களில் வரைந்த ஓவியங்களில் மிகப் பிரபலமான ஓவியம் கிறிஸ்துவின் இறுதி இரா உணவு ஓவியமாகும். இந்த ஓவியத்தை வரைவதற்கு இயேசு கிறிஸ்துவுக்கு மாடலாக கிறிஸ்துவின் முக அமைப்புக்கு ஏற்ற ஒரு முகமுள்ள மனிதனைப் பல ஆண்டுகளாகத்  தேடி  இறுதியில் அப்படி அழகும் கனிவுமான முக அமைப்புள்ள ஒரு மனிதனைக் கண்டுபிடித்து அவனைக் கிறிஸ்துவாக வரைந்தார். பின் எல்லா அப்போஸ்தலர்கள் படத்தையும் வரைந்தார். இறுதியில் யூதாஸ் இஸ்காரியோத் முகத்தை வரைந்திட அதற்கேற்ற முக அமைப்புள்ள ஒரு மனிதனைத் தேடி அலைந்து இறுதியில் ஒருவரைக் கண்டுபிடித்தார்.  

தனது ஓவிய அறையில் அவர் அவனை நிறுத்தி அவனது முகத்தைப் பார்த்து யூதாஸின் முகத்தை வரைந்தார். அப்போது அந்த மனிதன் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. டாவின்சி அவனிடம், "ஏன் அழுகின்றாய்" என்று கேட்டார். அவன் கூறினான், "ஐயா ஒரு சில ஆண்டுகளுக்குமுன் என்னைத்தான் நீங்கள் கிறிஸ்துவுக்கு மாடலாக நிறுத்தி வரைந்தீர்கள்; இப்போது என்னையே யூதாஸாக வரைகின்றீர்கள்.....எனது பாவப் பழக்கம் என் முகத்தையே அந்தகாரப்படுத்திவிட்டது " என்றான்.  ஆம், பாவம் மனிதனது ஆத்துமாவை மட்டுமல்ல, உடலையும் கெடுக்கின்றது. 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக்குறித்து "அவர் முற்றிலும் அழகுள்ளவர்" ( உன்னதப்பாட்டு 5 : 16 ) என வாசிக்கின்றோம். அப்படி முற்றிலும் அழகுள்ளவர்மேல் மனுக்குலத்தின் ஒட்டுமொத்தப் பாவங்கள் சுமத்தப்பட்டதால் அவர் தனது அழகை இழந்தார்; அந்தகாரமடைந்தார். அவரது தோற்றத்தைத் தரிசனமாகக் கண்ட ஏசாயா, "அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது." (ஏசாயா 53:2) என்று எழுதுகின்றார். 

"மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்" (ஏசாயா  53:4)

முற்றிலும் அழகுள்ள இயேசு  கிறிஸ்து நமக்காக பாவியானபோது தனது அழகினை இழந்தார்.  இது கிறிஸ்து நமக்காக எவ்வளவு அன்பு வைராக்கியம் பாராட்டுகின்றார் என்பதை நமக்கு உணர்த்துவதுடன் பாவப் பழக்கம் நம்மை எப்படி உடல்ரீதியாகவும் கெடுக்கின்றது, நம்மை அலங்கோலப்படுத்துகின்றது என்பதனை உணர்த்துகின்றது. நமது ஊரில்கூட அழகானத் தோற்றமுள்ள சிலர் பாவப் பழக்கங்களால் அலங்கோலமடைந்து நம் கண்முன் வாழ்வதை நாம் பார்த்திருக்கலாம். 

கிறிஸ்து நமக்காக தன்னையே இழந்து  பலியாக்கின அன்பதனை எண்ணிப்பார்ப்போம். அவருக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுப்போம். நாம் நமது மனதினில் எண்ணுவதற்கும் மேலாக பரிசுத்தமாய் வாழ நமக்கு உதவிசெய்ய அவர் வல்லவராய் இருக்கின்றார்.  தனது அழகு, அந்தஸ்து, தெய்வீகம் அனைத்தையும் நமக்காக இழந்தவர் நம்மைக் கைவிடுவாரா?
 
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Saturday, March 18, 2023

தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்

ஆதவன் 🌞 782🌻 மார்ச் 20,  2023 திங்கள்கிழமை


"நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்." ( 1 யோவான்  5 : 14 )

நம்மில்  பலரும் நீண்ட விண்ணப்பப் பட்டியலுடன் ஆலயங்களில் வேண்டுதல் செய்கின்றோம்.  பொதுவாக இந்த விண்ணப்பங்களில் தொண்ணூறு நூறு சதவிகிதமும் நமது உலக ஆசைகளை நிறைவேற்றிட வேண்டியே இருக்கின்றன. இயேசுவிடம் கேட்டால் எல்லாம் கிடைக்கும் என்று பலரும் பிரசங்கிக்கின்றனர்; மக்களும் அப்படியே நம்புகின்றனர்.  ஆனால் இது வேத அடிப்படையில் சரியானதுதானா என்று நாம் எண்ணுவதில்லை. 

எந்தத் தகப்பனும் தாயும் தனது பிள்ளைகள் கேட்பதையெல்லாம் உடனேயே  கொடுப்பதில்லை. நமது பிள்ளைக்கு இப்போதைக்கு இது தேவைதானா ? இது நமது பிள்ளைக்கு ஏற்றதாக இருக்குமா? என்பதையெல்லாம் எண்ணிப்பார்த்து, தகுந்ததானால் மட்டுமே அதனைக் கொடுக்கின்றனர்.  அப்படி இருக்கும்போது நமது வானகத்  தந்தைக்கு எது நமக்கு எப்போது தேவை என்பது தெரியாதா? பின் எப்படி கேட்பதையெல்லாம் கொடுப்பார்?   

நாம் உலக காணோட்டத்துடனேயே வேதாகமத்தைப் படிக்கின்றோம். "கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்கள்"  என்று இயேசு கிறிஸ்து கூறியதை நம்பி இந்த வார்த்தைகளைச் சொல்லி ஜெபிக்கின்றோம். ஆனால் இயேசு கிறிஸ்து இந்த வசனத்தை உலக காரியங்களை கேட்பதையும், தேடுவதையும், தட்டுவதையும் பற்றி கூறவில்லை. மாறாக, பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு நாம் முயற்சியெடுத்து வேண்டுவதையே குறிப்பிடுகின்றார்.  இந்த வசனத்தின் இறுதியில் இயேசு கூறுகின்றார்,  "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?." ( லுூக்கா 11 : 13 )

மேலும், நாம் நமது குழந்தைகள்  கீழ்படிதலுள்ளவர்களாக இருக்கவேண்டுமென்றும் விரும்புகின்றோம். தாய் தகப்பனுக்கு விருப்பமில்லாத காரியங்களில் ஈடுபட்டு தறுதலைகளாக அலையும் குழந்தைகளுக்கு அவர்கள் விருப்புவதைக் கொடுக்க நாம் தயங்குகின்றோம். இயேசு கிறிஸ்து கூறினார், "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்." ( யோவான் 15 : 7 ) ஆம், கிறிஸ்துவிடம் நாம் கேட்பது நிறைவேறவேண்டுமென்றால் நாம் அவரிலும் அவரது வார்த்தைகள் நம்மிலும் நிலைத்திருக்கவேண்டியது அவசியம். 

உலக காரியங்களைவிட ஆவிக்குரிய காரியங்களுக்கே நாம் முக்கியத்துவம் கொடுத்து வேண்டுதல் செய்யவேண்டியது அவசியம். உலக ஆசைகளை நிறைவேற்றவே வேண்டுதல்கள் செய்துகொண்டிருந்தோமானால் நமது வேண்டுதல்கள் தேவனால் அங்கீகரிக்கப்படாது. "நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக் கொள்ளாம லிருக்கிறீர்கள்." ( யாக்கோபு 4 : 3 ) என்கின்றார் அப்போஸ்தலரான யாக்கோபு. 

முதலில் தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்போது மற்றவையெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.  எனும் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளில் அசையாத நம்பிக்கைக் கொண்டவர்களாக நாம் இருந்தால் மட்டுமே  நமது வேண்டுதல்கள் வித்தியாசமானதாக, தேவனுக்கு ஏற்புடையதாக இருக்கும். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712