இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Sunday, December 25, 2022

பலவான்களைத் தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்

ஆதவன் 🖋️ 699 ⛪ டிசம்பர் 27,  2022 செவ்வாய்க்கிழமை

பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்; அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன். ( தானியேல் 4 : 35 )  

நமது படிப்பும் திறமைகளும் நமக்கு நல்ல பொருள் சம்பாதிக்கும் வாய்ப்பினைத் தந்திருக்கலாம். ஆனால், அந்த நிலையில் நாம் தேவனை இரண்டாவது இடத்துக்குத் தள்ளி எனது சுயத் திறமையால்தான் இவைகளைச் சம்பாதித்தேன் என்று பெருமையாகக் கூறிக்கொள்ளுதல் தேவனுக்கு ஏற்புடைய செயலல்ல. 

இதுபோல, பொருளாதாரத்தில் நமது தாழ்ந்த நிலையும் சில நேரங்களில் நமக்கு வரும்  துன்பங்களும் வீழ்ச்சிகளும் நம்மை நாம் உணர்ந்து திருத்திக் கொள்வதற்காகவும்      இருக்கலாம்.  தேவன் சில வேளைகளில் அப்படி நாம் திருந்திட சில தாழ்நிலைமையை நமக்கு ஏற்படுத்துவார். அந்தத் தாழ்த்தப்பட்டத் தருணங்களை நாம் நமது மன மாற்றத்துக்குத் தேவன் தரும்  வாய்ப்பாக எண்ணிப்  பயன்படுத்தி நம்மைத் திருத்திக்கொள்ளவேண்டும்.  

பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு ஒரு பெருமை எண்ணம் மனதில் இருந்தது. அவன் உண்டாக்கிய அரண்மனை, மாட மாளிகை இவைகளைப்பார்க்கும்போது அவனுக்குள் அவனது வல்லமையினை எண்ணி பெருமை ஏற்பட்டது.  "இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்." ( தானியேல் 4 : 30 ) அவன் இந்த வார்த்தைகளைக் கூறவும் வானத்திலிருந்து தேவ சப்தம் உண்டாகி:- 

"மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது என்று கூறியது." ( தானியேல் 4 : 32 )

அந்தத் தேவ சப்தம் கூறிய காலம் நிறைவுற்றபோது நேபுகாத்நேச்சாருக்கு புத்தி வந்தது. அதன்பின் அவன் இன்றைய தியானத்துக்குரிய வார்த்தைகளைக் கூறுகின்றான். என் கையின் பலத்தால் நான் கட்டி எழுப்பிய மகா பாபிலோன் அல்லவா? என்று பெருமையாகப் பேசியவன் இப்போது, "அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்; அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை" என்கின்றான்.  

அன்பானவர்களே இந்தத் தாழ்மை எப்போதும் நமக்கு இருக்கவேண்டும். நம்மால் செய்யக்கூடியது ஒன்றுமே இல்லை. அவர் நினைத்தால் நாம் எவ்வளவு மேலான நிலையில் இருந்தாலும் ஒரு நொடியில் கீழே தாழ்த்த முடியும். அதுபோல கீழ்நிலையில் இருக்கும் நம்மை ஒரு நொடிப்பொழுதில் உயர்த்தவும் முடியும். அவருக்கு அடங்கி அவருக்கு நம்மை ஒப்புக்கொடுத்து வாழவேண்டியது அவசியம்.  

உபாகமத்தில் இதுபற்றி தேவன் மோசேமூலம் கூறுகின்றார், " என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து, உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்." ( உபாகமம் 8 : 17, 18 )

நமது படிப்பு, குடும்ப பாராம்பரியம், நமது திறமை, சுய பலம், போன்ற  வீண் பெருமைகளை  விட்டு, தேவ பலத்தை நம்பி வாழவேண்டியது அவசியம். "தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்." ( லுூக்கா 1 : 51,52 ) என்கின்றது தேவ வசனம்.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                      தொடர்புக்கு- 96889 33712

இருளிலிருந்து ஒளியைநோக்கி ...

ஆதவன் 🖋️ 698 ⛪ டிசம்பர் 26,  2022 திங்கள்கிழமை

"சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான்" ( யோவான் 3 : 21 )

இருளிலிருந்த மக்களை விடுவித்து ஒளியைநோக்கி நடத்திட ஒளியாகிய இயேசு கிறிஸ்து மனிதனாக உலகினில் வந்தார். இங்கு "மெய்யான ஒளி" எனும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அப்படியானால், பொய்யான ஒளி என்று ஒன்றும் இருக்கின்றது என்பது விளங்குகின்றது. பலரும் பொய்யான ஒளியை மெய்யான ஒளி என எண்ணி மோசம்போகின்றனர். ஆத்தும இரட்சிப்பில்லாத போலி அற்புதங்கள் போலி ஆசீர்வாதங்கள் இவை பொய்யான ஒளியினால் ஏற்படுபவை. ஆம், எனவேதான் அப்போஸ்தலரான பவுல்,  "அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே" (II கொரிந்தியர் 11:14) என எழுதுகின்றார். 

மெய்யான ஒளியான கர்த்தராகிய இயேசு கிறிஸ்து குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் பிரகாசிக்கச் செய்பவரல்ல.; அவர் எந்த மனிதனையும் பிரகாசிக்கச்செய்பவர். அவர் மனிதரிடம் வேற்றுமை பாராட்டுபவரல்ல. ஆனால் இந்த உலகம் அன்று இயேசு கிறிஸ்துவை அறியாமல் இருந்ததுபோலவே இன்றும் அறியவில்லை. "அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை." ( யோவான் 1 : 10 )

ஆம் அன்பானவர்களே, ஒளியைப் பகைக்கிறவனாக ஒருவன் இருக்கிறானென்றால் அவன் இருள் நிறைந்தவனும், ஒளியை ஏற்றுக்கொள்ள முடியாதவனுமாய் இருக்கிறான் என்று பொருள். தேள், பூரான், கரப்பான், இன்னும் கற்களுக்கடியில் பதுங்கி வாழும் உயிரினங்களும் இரவில் நடமாடும் விலங்கினங்களும் ஒளியை விரும்புவதில்லை. அவை இருளையே நாடிச்செல்லும். அதுபோலவே ஜீவ ஒளியாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஒருவன் பகைக்கிறானென்றால் அவனது இருதயம் இருளின் ஆட்சியிலும் பொய்யான ஒளியின் கட்டுப்பாட்டிலும் இருக்கின்றது என்று பொருள். 

இதனையே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, "பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்." ( யோவான் 3 : 20 ) என்று குறிப்பிடுகின்றார். ஆனால், "சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான்" ( யோவான் 3 : 21 )

சத்தியத்தின்படி வாழ்ந்து, நமது செயல்கள் தேவனுக்குள்ளான தூய்மையான செயல்கள் என்று கருதினால் நாம் ஒளிக்குத் தூரமானவர்கள் அல்ல.  அதே நேரம் நாம் கிறிஸ்தவர்களாக வாழ்ந்தாலும் நமது செயல்கள் இருளின் செயல்பாடுகளாக இருக்குமேயானால் நாம் இன்னும் மெய்யான ஒளியை நமக்குள் பெறவில்லை என்று பொருள். 

"இருளில் நடக்கிற ஜனங்கள் பெரியவெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது." ( ஏசாயா - 9:2 ) என்று ஏசாயா இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக்குறித்து தீர்க்கதரிசனம் கூறினார்.  ஆம், இருளில் நடக்கிற ஜனங்கள் சிறிய ஒளியையல்ல, பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மட்டுமல்ல, அந்த ஒளி மரண இருளில் குடியிருப்பவர்கள்மேல் பிரகாசித்தது என்றும் கூறப்பட்டுள்ளது. 

எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எனும் மெய்யான ஒளி, இன்று கிறிஸ்துவைப் பகைக்கும், வெறுக்கும் மனிதர்களையும் பிரகாசிக்கச் செய்யக்கூடியது.  இதற்கு ஆயிரக்கணக்கான உயிருள்ள சாட்சிகள் உண்டு. கம்யூனிச சித்தாந்தத்தில் மூழ்கி கிறிஸ்துவைக்குறித்து அவமானமாய்ப் பேசித்திரிந்த நானும் இதற்கு ஒரு சாட்சியே. 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                      தொடர்புக்கு- 96889 33712

மனுஷர்மேல் பிரியமும் நம் ஒவ்வொரு கிறிஸ்தவன் மூலமும் உலகினில் உண்டாவதாக.

ஆதவன் 🖋️ 697 ⛪ டிசம்பர் 25,  2022 ஞாயிற்றுக்கிழமை

"அந்நேரமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்."  (  லுூக்கா 2 : 13, 14 ) 

 அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள் !!! 

கிறிஸ்து பிறந்தவுடன் அவரைப்பற்றி அறிவிக்கப்பட்ட முதல் அறிவிப்பு, கிறிஸ்து பிறந்ததால்  பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று கூறுகின்றது. சமாதானக் காரணர் என்றே இயேசு கிறிஸ்து அறியப்படுகின்றார். அவர் பல  இடங்களில்  மக்களையும் சீடர்களையும் பார்த்துக் கூறிய வார்த்தைகள் சமாதான வார்த்தைகளே. 

மனிதனது பாவச் செயல்பாடுகளே சமாதானக் குறைவுக்குக் காரணம் என்பதால் பழைய ஏற்பாட்டுக்  காலத்தில்  பல்வேறு கட்டளைகள்  கொடுக்கப்பட்டன. இக்கட்டளைகள் மனிதனை பாவத்தில் விழாமல் காப்பாற்றும் என எண்ணப்பட்டது.  இவற்றை நியாயப்பிரமாணக் கட்டளைகள்  என்று கூறுகின்றோம். பத்துக் கட்டளைகளைத் தவிர,  யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம் மற்றும் உபாகமம் நூல்களில் பலக் கட்டளைகள் கொடுக்கப்பட்டுள்ளன.  இவை மொத்தம் 613 கட்டளைகள் என்று வேத அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். ஆனாலும் பாவமும் தொலையவில்லை  சமாதானமும் வரவில்லை. 

ஆனால் பலியாக இறப்பதற்காகவே உலகினில் பிறந்த கிறிஸ்து, தனது இரத்தத்தால் நித்திய  மீட்பை உண்டுபண்ணி பாவத்தை மன்னிக்கும் மீட்பை உண்டுபண்ணி  அந்தப் பாவங்களில் மனிதர்கள் விழுந்துவிடாமல் அவர்களை வழிநடத்திட பரிசுத்த ஆவியானவரையும் நமக்குத் தந்துள்ளார். கிறிஸ்துவின் கிருபைக்குள்  வந்துவிடும்போது பாவத்தை மேற்கொள்ளும் வல்லமை  நமக்குக்  கிடைக்கின்றது. சமாதானமும் கிடைக்கின்றது.  

இதனையே நாம் ரோமர் நிருபத்தில், "அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்." (  ரோமர் 8 : 3 ) என்று வாசிக்கின்றோம்.

இரண்டாவது மனிதத்தன்மையுடன் பிறரிடம் நடக்கக்கூடிய மன நிலை. இதுவும் கிறிஸ்து இயேசுவால் வந்ததே. கட்டளைகளைப் பார்க்காமல் மனிதரை மதித்து நடக்கவேண்டிய மனநிலை. இதனால்தான் இயேசு கிறிஸ்துக் கூறினார், " மனிதன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்டது".  ஆகவே சட்டங்கள்   மனிதனுக்காகவேத் தவிர மனிதன் சட்டத்திற்காக அல்ல. எந்தச்  செயலைச் செய்யும்போதும்  முதலில் நாம் பார்க்கவேண்டியது மனித நலம். மனித நலமா தேவ கட்டளையா என்று பிரச்சனைவரும்போது மனித நலனை முன்னிலைப்படுத்தி நாம் செயல்படும்போது அதுவே தேவனுக்குப் பிரியமானதாக ஆகின்றது. இல்லாவிடில்  நாம் ஒரு வறட்டு வேதாந்தியாகவே உலகுக்குத் தெரிவோம்.

அன்பானவர்களே, இன்றைய கிறிஸ்துப் பிறப்பு நமக்கு இத்தகைய சிந்தனையைத் தர தேவனை வேண்டுவோம்.  பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் நம் ஒவ்வொரு கிறிஸ்தவன் மூலமும் உலகினில் உண்டாவதாக.

 தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                     தொடர்புக்கு :- 9688933712 


Friday, December 23, 2022

பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.

ஆதவன் 🖋️ 696 ⛪ டிசம்பர் 24,  2022 சனிக்கிழமை

"நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது." ( 1 யோவான்  4 : 10 )

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் மனிதனாகப் பிறந்தது தேவன் உலகத்தின்மேல் கொண்ட அன்பினை வெளிப்படுத்துகின்றது. நாம் இன்று அவரிடம் அன்புகூருவதற்குமுன்பே அவர் நம்மீது அன்பு கூர்ந்தார். அப்படி அன்புகூர்ந்ததால் தந்து குமாரனை பாவப்பரிகார பலியாக உலகினில் அனுப்பினார்.  இப்படி அவர் நம்மீது அன்புகூர்ந்ததால் அன்பு உண்டாகியிருக்கிறது. 

தேவன் மனிதர்களுக்காக ஏற்படுத்திய நித்திய ஜீவனை சாத்தானால் மோசம்பண்ணப்பட்டு மனிதர்கள் இழந்துபோவது தேவனுக்கு வேதனை தந்தது. ஆனால் மனிதர்கள் சாத்தானின் தந்திரத்தை எதிர்த்து நிற்க முடியாதவர்களாகி அவனுக்கு அடிமைகளாகிவிட்டனர். ஆம், பாவம் செய்பவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று இயேசு கிறிஸ்து கூறியபடி மனிதர்கள் பாவத்துக்கு அடிமைகளாகிவிட்டனர்.  

எனவே, "பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்." ( 1 யோவான்  3 : 8 ) இதுவே கிறிஸ்து உலகினில் மனிதனாக வெளிப்பட்டதன்  நோக்கம்.

அன்பானவர்களே, நாம் இன்று ஒரு அரசியல் தலைவரது பிறந்தநாளைக் கொண்டாடுவதுபோல இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். குடில்களும், அலங்கார விளக்குகளும், வகை வகையான இனிப்புகளும் உண்டு, புத்தாடை அணிந்து ஆலயங்களுக்குச் சென்று கறி சாப்பாடு சாப்பிட்டு சாதாரண உலக மக்களைப்போல இந்த நாளைக் கொண்டாடுவது ஏற்புடையதுதானா என்று எண்ணிப்பார்க்கவேண்டும். 

இயேசு கிறிஸ்து உண்மையில் இதே நாளில்தான் பிறந்தாரா என்று யாருக்கும் தெரியாது ஆனால், அவர் இந்த உலகத்தில் பிறந்தார் என்பது சரித்திர உண்மை. உலக வரலாற்றையே அவரது பிறப்புதான் இரண்டாகப் பிரித்தது. அவர் பிறந்த நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் அந்த நோக்கத்தை நிறைவேற்றிடாமல் வெறும் கொண்டாட்டங்கள் அர்த்தமற்றவையே.

வெறும் ஒருநாள் கொண்டாட்டத்தை தேவன் விரும்புவதில்லை. இயேசு கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்தார் என்றும், சாத்தானின் பாவப்பிடியிலிருந்து நம்மை விடுவிக்க வெளிப்பட்டார் என்றும் விசுவாசிக்கவேண்டும். நமக்கு நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்வு அவரால் மட்டுமே உண்டு என்பதை விசுவாசிக்கவேண்டும். நமது பாவங்களை உணர்ந்து மனம் திரும்பிய வாழ்வு வாழ நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். இவை இல்லாத கொண்டாட்டங்கள் அர்த்தமிழந்தவையே. அவைகளினால் எந்தப் பயனும் இல்லை. 

ஆம், நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. அதனைநாம் மறந்துவிடக்கூடாது. அவர்மேல் விசுவாசம்கொண்டு மனம் திரும்பிய வாழ்க்கை வாழ இந்தநாளில் முடிவெடுத்து நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு நித்திய ஜீவனுக்கான வழியில் நடக்க முயலுவோம்.

"குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் " ( யோவான் 3 : 36 )

செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                                            தொடர்புக்கு- 96889 33712


Thursday, December 22, 2022

மனித அறிவினால் அவரை அறிந்துகொள்ள முடியாது

ஆதவன் 🖋️ 695 ⛪ டிசம்பர் 23,  2022 வெள்ளிக்கிழமை

"இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்." ( லுூக்கா 2 : 34 )

சிமியோன் எனும் நீதிமான் கூறிய வார்த்தைகளே இன்றைய தியானத்துக்குரிய வசனம். தேவனுடைய கிறிஸ்துவை காணுமுன் நீ மரணமடைய மாட்டாய் என்று அவருக்கு ஏற்கெனவே பரிசுத்த ஆவியினால் அறிவிக்கப்பட்டிருந்தது. நியாயப்பிராமண கட்டளையை நிறைவேற்றிட ஆலயத்தில் ஒப்புக்கொடுக்க இயேசுவின் தாய்தகப்பன்  இயேசு கிறிஸ்துவை ஆலயத்துக்குக் கொண்டுசென்றபோது பரிசுத்த ஆவியின் அறிவிப்பின்படியே சிமியோன் ஆலயத்துக்கு வந்திருந்தார். 

சிமியோனைப்பற்றி, "அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன்மேல் பரிசுத்தஆவி இருந்தார்." ( லுூக்கா 2 : 25 ) என்று கூறப்பட்டுள்ளது. 

இயேசு கிறிஸ்துவைக்குறித்து சிமியோன், "அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்" என்று தீர்க்கதரிசனமாகக் கூறினார். 

ஆம், ஆண்டவர் தனது ஊழியத்தை ஆரம்பித்தபோது இது நிறைவேறத் துவங்கியது. பலர் அவரைக்குறித்து இடறலடைந்தனர். பலருடைய இருதய சிந்தையை அவர் வெளிப்படுத்தியதால் அவர்கள் இருதயம் குத்தப்பட்டது. 

ஆனாலும் அவர்கள், "இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுக்கு சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள்." ( மாற்கு 6 : 3 ) இன்றும் இயேசு கிறிஸ்துவைக் குறித்த இந்த இடறல் இருந்துகொண்டுதான் இருக்கின்றது. அவரை சாதாரண உலக மகான்களில் ஒருவராகவே பலர் எண்ணி இடறலடைகின்றனர். 

இங்கு சிமியோன் எப்படி இயேசு கிறிஸ்துவை அறிந்துகொண்டார் என்று பார்ப்போம். முதலாவது அவன் நீதியும் தேவ பக்தியுள்ளவனுமாய் இருந்தான் ஏற்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவன்மேல் பரிசுத்த ஆவியானவர் இருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது, இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று நாம் விசுவாசித்து அறிக்கையிட பரிசுத்த ஆவியானவரது வெளிப்பாடு நமக்குத் தேவையாக இருக்கின்றது. 

"ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்." ( 1 கொரிந்தியர் 12 : 3 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல்.

ஆனால் இன்றும் சிமியோன் கூறியதைப்போல பலருக்கும் கிறிஸ்து  இடறலாகவே இருக்கின்றார். காரணம் அவரது போதனைகள். இவற்றைக் கடைபிடிப்பது கூடாத காரியம் என்று கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலர் இன்றும் சொல்லக்கேட்கலாம்.  ஆம், மனித அறிவினால் அவரை அறிந்துகொள்ள முடியாதுதான். எனவேதான் பரிசுத்த ஆவியானவரின் துணை நமக்குத் தேவையாய் இருக்கின்றது. 

சந்தேகத்தோடும் இடறலோடும் வாழாமல் ஆவியானவரின் துணையினை வேண்டுவோம்; அவரே நமக்கு கிறிஸ்துவைக்குறித்தத் தெளிவைத் தருவார்.  கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத பிறருக்கும் ஆவியானவர் இந்த வெளிப்பாடைக் கொடுக்கும்படி ஜெபிப்போம். பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லமுடியாது. 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712


Wednesday, December 21, 2022

இயேசு கிறிஸ்து நமக்குத் தந்த வாக்குத்தத்தம்.

ஆதவன் 🖋️ 694 ⛪ டிசம்பர் 22,  2022 வியாழக்கிழமை

"நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். உங்களை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன்." ( 1 யோவான்  2 : 25,26 )

இயேசு கிறிஸ்து உலகினில் வந்தபோது பல்வேறு சமயங்களில் பல்வேறு வாக்குத்தத்தங்களைக் கொடுத்தார். ஆனால் அவை அனைத்துமே நித்திய ஜீவனை நாம் அடைந்திடவேண்டும் என்பதற்காகவே. நித்திய ஜீவனை மக்களுக்கு அளிப்பதே கிறிஸ்துவின் நோக்கம். அதற்கான வழியைக் காண்பிக்கவே அவர் உலகினில் வந்தார். எனவேதான் அப்போஸ்தலனாகிய யோவான், நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதும் ஒரு வாக்குத்தத்தம் என்று கூறாமல்,  "நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்." என்கின்றார். அதாவது அது ஒன்றுதான் இயேசு கிறிஸ்து நமக்குத் தந்த வாக்குத்தத்தம். 

நமது தேவன் வெறுமனே வாக்குத்தத்தங்களைக் கொடுத்துவிட்டு மறந்துவிடுபவரல்ல. அவற்றை எப்படியாவது நிறைவேற்றிட வல்லவர். வானமும் பூமியும் மாறினாலும் தேவனுடைய வார்த்தைகள் மாறுவதில்லை. எனவேதான் அப்போஸ்தலரான பவுலும், "எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே." ( 2 கொரிந்தியர் 1 : 20 ) என்கின்றார்.

தேவனுக்குத் தான் படைத்த மக்களோடு உடன்படிக்கை பண்ணவேண்டிய அவசியம் கிடையாது. ஆனால், மனிதர்கள்மேல் அன்பு கொண்டுள்ளதால் அவர் மனிதர்களோடு உடன்படிக்கை பண்ணுகின்றார். முதலில் நோவாவோடு உடன்படிக்கை பண்ணினார். பின்னர் ஆபிரகாமோடு உடன்படிக்கைபண்ணினார்.  அவற்றை நிறைவேற்றவும் செய்தார். 

"நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்.....உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்." ( ஆதியாகமம் 17 : 4 & 6 ) என்ற வாக்குத்தத்தத்தின்படி ஆபிரகாம் மிகப்பெரிய மக்கள் கூட்டமாக; ஒரு தேசமாகவே  மாறினான்.

"நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன்". ( ஆதியாகமம் 17 : 8 ) என்ற வாக்குத்தத்தின்படி கானான் தேசத்தை ஆபிரகாமின் சந்ததிற்குக் கொடுத்தார். 

இதே வாக்குமாறாத தேவனே இன்றைய வசனத்தில் கூறியுள்ளபடி, "நித்தியஜீவனை அளிப்பேன்" என்கின்றார். இதனை எழுதிய அப்போஸ்தலரான யோவான் தொடர்ந்து எழுதுகின்றார், "உங்களை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியுள்ளேன்". ஆம், இயேசு கிறிஸ்து கூறிய நித்திய ஜீவனைப் பிரசித்திப்படுத்தாமல்  வேறு உலக ஆசீர்வாதங்களைப்  போதிக்கும் போதகர்களே  வஞ்சிக்கிறவர்கள். இத்தகைய வஞ்சிக்கும் போதகர்களே  இன்று உலகில் அதிகமாக உள்ளனர். 

அன்பானவர்களே, எச்சரிக்கையாக இருப்போம். கிறிஸ்துவின் வாக்குத்தத்தத்தை மறுதலிக்கும் வஞ்சக போதனைகளுக்கு விலகி நம்மைக் காத்துக்கொவோம். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712


Tuesday, December 20, 2022

ஞானத்தின் ஆரம்பம்

ஆதவன் 🖋️ 693 ⛪ டிசம்பர் 21,  2022 புதன்கிழமை

"கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது." ( நீதிமொழிகள் 19 : 23 )

கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது கர்த்தருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழவேண்டும் எனும் எண்ணத்தில் நாம் செயல்படுவதையே குறிக்கின்றது. உலக மனிதர்கள் தங்கள்  உயர் அதிகாரிகளுக்கோ, மாணவன் ஆசிரியருக்கோ, திருடர்கள் காவலர்களைக்கண்டோ பயப்படுவதுபோன்ற பயமல்ல. இது கர்த்தர்மேலுள்ள அன்பால் நாம் அவருக்குப் பிரியமான வாழ்க்கை வாழ்வது. கர்த்தருக்கு நாம் இப்படிப் பயப்படும்போதே நாம் ஞானிகள் ஆகின்றோம். அதாவது தேவனை அறிந்து கொள்கின்றோம்.

"கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்." ( சங்கீதம் 111 : 10 ) என்கின்றார் சங்கீத ஆசிரியர்.  இப்படிக்  கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; என்று கூறும் இன்றைய தியான வசனம், அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது என்றும் கூறுகின்றது. 

இதனையே சங்கீத ஆசிரியர், "எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது." ( சங்கீதம் 91 : 9, 10 ) என்றும் கூறுகின்றார்.

அன்பானவர்களே, இன்று நாம் எல்லோருமே தீமை நம்மை அணுகக்கூடாது என்றுதான் ஜெபிக்கின்றோம். ஆனால் அப்படி ஜெபித்தால் மட்டும் போதாது கர்த்தருக்குப் பயப்படும் பயம் நமக்கு வேண்டும். இன்று ஜெபத்தை வலியுறுத்தும் ஊழியர்கள் அதிகம். எதற்கெடுத்தாலும்  "ஜெபியுங்கள், ஜெபியுங்கள்" என்று மக்களுக்கு அறிவுரைகூறும் பலரும் நடைமுறை வாழ்க்கையில் நாம் எப்படி இருக்கவேண்டுமென்று கூறுவதில்லை. ஆம், ஜெபிப்பதையும் , வேதம் வாசிப்பதையும் வலியுறுத்துகின்றனர் ஊழியர்கள். இவைகளைக் கடைபிடிப்பது எளிது. ஆனால் வாழ்க்கை எனும் சிலுவை சுமக்கும் அனுபவம் நேர்மையான வாழ்க்கையில் அடங்கியுள்ளது. 

இப்படிக் கூறுவதால் ஜெபிக்கவேண்டாமென்றோ வேதம் வாசிக்கவேண்டாமென்றோ பொருளல்ல. (இன்று பலரும் இப்படி குறுகிய கண்ணோட்டத்துடன் நான் சொல்வதைத் தவறுதலாக புரிந்துகொள்கின்றனர்). ஜெபிக்கவேண்டியது நமது சுவாசம்போல. ஜெபிக்காத ஆவிக்குரிய வாழ்க்கை ஜீவனில்லாதது. ஆனால் அந்த ஜெபம் நான் முதலில் கூறியதுபோல கர்த்தருக்குப் பயப்படும் ஞானத்துடன் கூடிய ஜெபமாக இருக்கவேண்டும். நூறு சதவிகித உலக ஆசைகளுக்காக ஜெபித்துவிட்டு, நானும் ஜெபிக்கிறேன் என்று திருப்தி அடைவது ஏற்புடைய ஒன்றல்ல.  

கர்த்தருக்குப் பயப்படும் வாழ்க்கை வாழ்வோம்;  அப்போது ஜீவனைக் கண்டடைவோம். அதைக் கண்டால்  திருப்தி அடைந்து சமாதானத்துடன் நிலைத்து நிற்போம்; தீமை நம்மை அணுகாது. 


தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712


Monday, December 19, 2022

லோத்தின் மனைவி

ஆதவன் 🖋️ 692 ⛪ டிசம்பர் 20,  2022 செவ்வாய்க்கிழமை

"உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ." ( ஆதியாகமம் 19 : 17 )

சோதோம் கொமோரா நகரங்கள் மிகப்பெரிய விபச்சார பாவத்தில் இருந்ததால் தேவன் அந்த நகரங்களை அழிக்கத் தீர்மானித்தார். ஆனால் அந்த நகரத்தில் லோத்து குடும்பத்தோடு இருந்ததால் தேவன் அந்த நாகரத்தை அழிக்குமுன் லோத்துவை அந்த நகரத்திலிருந்து வெளியேற்ற தனது தூதர்களை அனுப்பினார். காரணம் லோத்து அந்த நகரத்தின் பாவங்களுக்கு உடன்படவில்லை. "நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க" ( 2 பேதுரு 2 : 8 ) என்கின்றார் அப்போஸ்தலரான பேதுரு. 

அந்தத் தூதர்கள் லோத்துவிடம் கூறிய வார்த்தைகளே இன்றைய தியானத்துக்குரிய வார்த்தைகள். 

இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள காரியங்கள்,  முதலாவது ஜீவன் தப்ப ஓடிப்போ என்பதாகும். அதாவது உன் உயிர் தப்பிப்பிழைக்க வேண்டுமானால் இங்கிருந்து ஓடிப்போ என்பதாகும். இன்று இந்த வார்த்தைகள் நமக்கும் பொருந்துவனவாகும். நாம் நமது ஆத்துமாவைக் காத்துக்கொள்ள வேண்டுமானால் பாவ காரியங்களுக்கு விலகி ஓடவேண்டியது அவசியம். சோதோம் கொமோரா நகரங்களில் மிகுதியாக இருந்த பாவங்கள் வேசித்தனமும் விபச்சாரமுமாகும். இவையே தேவன் அருவருக்கும் மிக முக்கிய பாவங்கள். 

எனவேதான் அப்போஸ்தலரான பவுலும் இவைகளுக்கு விலகி ஓடச் சொல்கின்றார். "வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்" (1 கொரிந்தியர் 6 : 18 ), " "விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்." ( 1 கொரிந்தியர் 10 : 14 ) என்கின்றார் அவர். ஆம், நாம் பாவத்துக்கு விலகி யோசேப்பைபோல ஓடவேண்டியது அவசியம். 

இன்றைய வசனத்தில் கூறப்பட்டுள்ள அடுத்த காரியம், "பின்னிட்டு பாராதே"  என்பதாகும். பாவகாரியங்களுக்கு விலகி ஓடியபின் அவைகளை மறந்துவிடவேண்டும். திரும்பிப்பார்த்தோமானால் பாவம் நம்மை மீண்டும் இழுத்து படுகுழியில் தள்ளிவிடும். 

அடுத்து, "இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே" என்று கூறப்பட்டுள்ளது. இது தயங்கி நிற்கும் செயலாகும். நாம் பாவத்தைத் திரும்பிப் பார்க்காமல் இருக்கலாம் ஆனால் தயங்கி நின்றுவிடக்கூடாது. பாவத்தைவிட்டு ஓடும் ஓட்டத்தை நிறுத்திவிடக்கூடாது. நிற்போமானால் நாம் மீண்டும் பாவத்தில் வீழ்வது உறுதி. 

இறுதியாகக் கூறப்பட்டுள்ள வார்த்தைகள், "நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ" என்பதாகும். ஆம் நாம் பாவத்தால் அழியாமல் இருக்கவேண்டுமானால் கல்வாரி மலைக்கு ஓடி அடைக்கலம் புகுந்திடவேண்டும். 

பாவம் நம்மைச் சூழ்ந்து நாம் பாவத்தால் ஜெயிக்கப்படுவோம் எனும் சூழ்நிலை ஏற்படும்போது ஜீவன் தப்ப ஓடி, பின்னிட்டுப் பாராமால், தயங்கி நில்லாமல், அழியாதபடிக்கு கல்வாரி நாதரை சரணடையவேண்டியதே நாம் செய்யவேண்டியது. தயங்கி நின்று பின்னிட்டுப் பார்ப்போமானால் லோத்தின் மனைவியைப்போல உப்புத்தூணாகிவிடுவோம் (அழிந்துவிடுவோம்) . எனவேதான்,  "லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்." ( லுூக்கா 17 : 32 ) என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712


Sunday, December 18, 2022

ஆவியானவரின் அபிஷேகத்துக்காக நாம் அதிகம் ஜெபிக்கவேண்டியுள்ளது.

ஆதவன் 🖋️ 691 ⛪ டிசம்பர் 19,  2022 திங்கள்கிழமை

"பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள்.
( 1 யோவான்  2 : 28 )

இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு இனிமேல் வரும்போது அவரைக்கண்டு பயப்பட்டு வெட்கப்பட்டு நாம் கைவிடப்பட்டவர்களாய்ப்  போய்விடக்கூடாது என இன்றைய தியான வசனத்தில் நமக்கு அறிவுறுத்துகின்றார் அப்போஸ்தலராகிய யோவான். நமது பள்ளிக்கு ஆய்வாளர் (Inspector) வரப்போகின்றார் என்று தெரிந்தால் நாம் எவ்வளவு கவனமாக ஏற்பாடுகளைச் செய்வோம்!!. அப்படி அவர் வரும்போது ஒரு பயம் எல்லோருக்கும் இருக்கும். அப்படி பயப்படும்போது தெரிந்த கேள்விக்குக்கூட நம்மால் சரியாகப் பதில் கூறமுடியாது. நம்மிடம் ஆய்வாளர்  ஒரு சாதாரண கேள்வியைக் கேட்கும்போது  அதற்குப் பதில்சொல்லத் தெரியாமல் நாம் இருந்தால் எவ்வளவு வெட்கப்படுவோம்!!

நாம் கிறிஸ்து வரும்போது அப்படி பயந்து வெட்கத்துக்குள்ளாகிவிடக்கூடாது; நரகத்தின் மக்களாகிவிடக்கூடாது. நாம் அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது நமக்குப் பயம் வராது; மாறாக அவரை எதிர்பார்த்திருந்து அவர் எப்போது வருவார் என ஆவல்கொள்ளச்செய்யும்.  

இன்றைய தியானத்துக்குரிய வசனத்தின் முந்தின வசனத்தில் அப்போஸ்தலரான யோவான், "நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக." ( 1 யோவான்  2 : 27 ) என்கின்றார்.

அதாவது தேவனைச் சார்ந்து பரிசுத்த ஆவியானவரின் துணையையே விசுவாசமாய் ஏற்றுக்கொண்டு அபிஷேகத்தோடு வாழ்வோமானால்,  அனைத்தையும் அவரே நமக்கு உணர்த்திப் போதித்து  நம்மை வழி நடத்துவார். அதன்படி நாம் நிலைத்து வாழவேண்டும். அப்படி நிலைத்திருப்போமானால், அவர் வரும்போது பயப்படமாட்டோம்; வெட்கப்படமாட்டோம்.

அன்பானவர்களே, நாம் அதிகமாக பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்துக்காக ஜெபிக்கவேண்டியது அவசியம். ஏனெனில் சபைப் போதகர்களல்ல, ஆவியானவரே நம்மைச் சத்தியமான பாதையில் நடத்திட முடியும். "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." ( யோவான் 16 : 13 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி வாழும்போது மட்டுமே நாம் அவர் வெளிப்படும்போது அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாய் இருக்கமுடியும். எனவேதான் ஆவியானவரின் அபிஷேகத்துக்காக நாம் அதிகம் ஜெபிக்கவேண்டியுள்ளது. 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712


Saturday, December 17, 2022

ஒருநாள் கூத்து அல்ல

 ஆதவன் 🖋️ 690 ⛪ டிசம்பர் 18,  2022 ஞாயிற்றுக்கிழமை

"தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்."( யூதா 1 : 21 )

இன்று பலரும் பாவ மன்னிப்பு அனுபவத்தைப் பெற்றுக்கொண்டவுடன் நேராக நித்தியஜீவனுக்குத் தாங்கள் தகுதிப்பட்டுவிட்டதாக எண்ணிக்கொள்கின்றனர். குறிப்பாக  பல பெந்தேகொஸ்தே சபை விசுவாசிகள் இப்படி இருக்கின்றனர். இத்தகைய மனிதர்களது சுவிசேஷ அறிவிப்புகள் விகற்பமாக இருக்கும். இவர்கள் தங்களை பரலோகத்துக்குத் தகுதியானவர்கள் எனவும் மற்றவர்கள் எல்லோரும் நரகத்தின் மக்கள் எனவும் எண்ணிக்கொள்கின்றனர். 

ஒருமுறை நண்பர் ஒருவரது வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அங்கு ஒரு பெந்தேகொஸ்தே சகோதரர் சுவிசேஷம் அறிவிக்க வந்தார். வந்தவுடன் அவர் நண்பரின் மனைவியிடம், "சிஸ்டர்.....நீங்க பரலோகத்துக்குப் போகவேண்டாமா?" என்று ஆரம்பித்தார். நண்பரின் மனைவி கூலாக, "உங்ககிட்ட  இன்னும் எத்தன  டிக்கெட் இருக்கு?" என்றார்.   அந்தச் சகோதரர் இப்படியொரு பதிலை  எதிர்பார்க்காததால் திகைத்துவிட்டார். நண்பரின் மனைவியின் கேள்வி அவரைப் பதில் சொல்லமுடியாதபடி வாயை அடைத்துப்போட்டது. 

அன்பானவர்களே, ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறினார், இறுதிவரை நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான்" என்று. இரட்சிக்கப்படுவது ஒருநாள் அனுபவமல்ல, மாறாக அன்றாடம் சிலுவை சுமக்கும் அனுபவம். மட்டுமல்ல,  தேவனுடைய அன்பிலே நம்மைக்  காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருக்க வேண்டும் என்கின்றார் அப்போஸ்தலரான யூதா இன்றைய தியான வசனத்தில்.. 

கிறிஸ்துவின் இரகத்தைப் பெறுவதற்குக் காத்திருக்கவேண்டும். அதாவது நம்மில் தேவ அன்புள்ளவர்களாய் பொறுமையாய்  வாழ்ந்து வரவேண்டும். தேவ அன்பு நம்மில் இருக்குமேயானால் நாம் யாரையும் அற்பமாக எண்ணமாட்டோம், யாரையும் நரகத்தின் மக்கள் என்று நியாயம்தீர்க்கமாட்டோம். 

இரட்சிப்பு எனும் புத்திரசுவிகாரமும் நித்திய ஜீவனும்  என்றோ ஒருநாள் பெற்ற பாவ மன்னிப்பு அனுபவத்தினால் கிடைப்பதல்ல; அது ஒரு தொடர் அனுபவம்.  எனவேதான் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்." ( ரோமர் 8 : 23 ) ஆம் அது காத்திருந்து, தவித்து பெறவேண்டிய அனுபவம்.

மற்றவர்களை அற்பமாக எண்ணி, தாங்கள் பரலோகத்துக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகிவிட்டோம் எனக் கருதிக்கொள்பவர்கள் தங்கள் மன மேட்டிமையை அறிக்கையிட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருக்க வேண்டியது அவசியம்.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Friday, December 16, 2022

ஆயக்காரரும் வேசிகளும் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள்

 ஆதவன் 🖋️ 689 ⛪ டிசம்பர் 17,  2022 சனிக்கிழமை

"விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்." ( எபிரெயர் 11 : 31 )


பொதுவாகவே நாம் அனைவருக்கும் விபச்சாரத் தொழில் செய்யும் பெண்கள்மேல் ஒரு வெறுப்பும் அருவருப்பும் தோன்றக்கூடும்.  அவர்களைக்குறித்து நாம் எண்ணும் எண்ணங்கள் அவர்களது தொழிலைப்பற்றி வெளிப்டையாகத் தெரிவதால்தான். ஆனால் சமூகத்தில் பலரால் மேன்மையாகக் கருதப்படும் சிலரும் ரகசியமாக விபச்சாரம் செய்துகொண்டிருக்கின்றனர். அவர்களை நாம் அறியாமல் மேன்மையாகக் கருதுகின்றோம்.

நான் முன்பு ஒரு தொண்டுநிறுவனத்தில் பணிசெய்தபோது எயிட்ஸ் தடுப்புத் திட்டத்திற்காகப்  பல விபச்சாரப் பெண்களோடு பேசக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.  விபச்சார பெண்களின் கதைகளைத் தொகுத்து அப்போது வெளியிட்டோம்.  நான்தான் அவைகளைத் தொகுத்தேன். அதற்காக விபச்சாரப் பெண்களைப் பேட்டி கண்டு அவர்கள் இந்தத் தொழிலுக்கு வரக் காரணமென்ன, அவர்களது குடும்பப்பின்னணி,  இந்தத் தொழிலை மனப்பூர்வமாகச் செய்கிறார்களா, எனப் பல கேள்விகள்கேட்டு தொகுத்து வெளியிட்டோம். அப்போது, பல பெண்களின் கண்ணீர்க் கதைகளைக் கேட்க நேர்ந்தது. 

விபச்சாரம் செய்தாலும் தேவனிடம் ஜெபிக்கும் பெண்களைக் கண்டேன்.  அவர்கள் பிறந்தச் சூழ்நிலைதான்  பல பெண்களை இந்தத் தொழிலில் ஈடுபடச் செய்துள்ளது. ஒருமுறை நான் சென்ற ஒரு குக்கிராமத்தில் சுமார் 25 கூரை வீடுகள் இருந்தன. அங்குள்ள பெண்கள் பிறந்ததுமுதல்  அதிகம் வெளியுலகுக்குச் சென்றதில்லை. அங்கேயே பிறந்து, இதுதான் வாழ்க்கை என வாழ்கின்றனர்.  

வெளியுலகில் நாம் சந்திக்கும் பெண்களைவிட மனதளவில் பல நல்ல குணமுள்ள பெண்களை நான் சந்தித்தேன். தேவன் எனக்குச் சில உண்மைகளைப்  புரியவைக்கவே இந்த வாய்ப்பினைத் தந்தார் என எண்ணுகின்றேன்.  தேவனது நியாயத் தீர்ப்பு, இயேசு கிறிஸ்து கூறிய வசனங்கள் இவைகளை நான் அப்போது எண்ணிப்பார்த்தேன். "ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 21 : 31 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

இன்றைய தியான வசனத்தில் எபிரெய நிருப ஆசிரியர், "விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்." என்று கூறுகின்றார். ராகாப் ஒரு வேசிதான்.  ஆனால் அவளது விசுவாசம் அவளைக் காப்பாற்றியது. மட்டுமல்ல, அவள் பெயர் கிறிஸ்துவின் கலைமுறை பட்டியலில் இடம்பெற எதுவாகவும் இருந்தது. ஆம், அவள் தாவீது ராஜாவின் பூட்டியானாள். 
வாசிக்க:- (மத்தேயு - 1: 5,6) ஒப்பிட்டு வாசிக்கவும் (ரூத் - 4:17)

அதாவது இன்றைய வசனம் இரண்டு காரியங்களை நமக்கு உணர்த்துகின்றது. ஒன்று யாரையும் மேலோட்டமாகப்பார்த்து நாம் நியாயம்தீர்க்கக்கூடாது என்பது. இரண்டாவது, விசுவாசத்தினால் வரும் மேன்மையைக் குறிக்கின்றது. நமது எந்த இழி நிலைமையையும் மாற்றி நம்மை ராஜாக்களாகவும் ஆசாரியராகவும் மாற்றிட கிறிஸ்து இயேசுவின்மேல் நாம் கொள்ளும் விசுவாசம் உதவிடும். கிறிஸ்துவின் மேல் நாம் கொள்ளும் விசுவாசம் நம்மைச் சேதப்படுத்தாது.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Thursday, December 15, 2022

நித்திய கிருபையுடன் நமக்கு இரங்குவார்

ஆதவன் 🖋️ 688 ⛪ டிசம்பர் 16,  2022 வெள்ளிக்கிழமை

"அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்." ( ஏசாயா 54 : 8 )

மனிதர்கள் நாம் பலவீனமானவர்கள்; அடிக்கடி பாவத்தில் விழக்கூடிய சூழ்நிலையில் வாழ்வதால் நம்மையும் மீறி பாவத்தில் விழுந்துவிடுகின்றோம். ஆனால் நாம் உள்ளான மனிதனில் நேர்மையாக தூய்மையாக வாழவேண்டும் எனும் விருப்பம் உள்ளவர்களாக வாழ்வோமானால் நாம் பாவம் செய்யும்போது தேவன் கோபத்தில் தனது முகத்தை நமக்கு மறைத்தாலும் தனது கிருபையால் இரக்கம் செய்வார். அதனையே இன்றைய வசனம் கூறுகின்றது. 

பவுல் அப்போஸ்தலருக்கு இப்படி பரிசுத்த வாழ்வு வாழும் ஆசை இருந்தும் அதனைத் தன்னால் செய்யமுடியவில்லை எனும் ஏக்கம் அல்லது வருத்தம்  இருந்தது. எனவேதான்,  "அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்." ( ரோமர் 7 : 18, 19 ) என்று கூறுகின்றார். 

ஒரு தாய் தனது குழந்தை தவறு செய்யும்போது அந்தக் குழந்தையைச் சிறிது கண்டித்தாலும் ஒரேயடியாக ஒதுக்கிவிடுவதில்லை. அதுபோலவே தேவனும் இருக்கின்றார். எனவேதான், "அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன்" என்கின்றார் பரிசுத்தரான கர்த்தர்.

மேலும், பாவம் செய்யாமல் பரிசுத்தராக வாழ வேண்டும்  எனும் எண்ணமுடன் வாழும் நமது மன நிலையினை தேவன் அறிவார். இந்த எண்ணமும் பாவத்தை வெறுக்கும் மனநிலையும் நமக்கு இருக்குமேயானால் தேவனது கிருபை என்றும் நம்முடன் இருக்கும். காரணம் அத்தகைய எண்ணமுடன் வாழும் மக்கள்மேல் அவர் மனதுருக்கம் கொண்டிருக்கின்றார். 

மேலும், கிறிஸ்துவால் மீட்கப்பட்டு ஞானஸ்நானம் பெறும்போது பாவத்துக்கு மரித்து நீதிக்குப் பிழைத்திருப்பதாக அவரோடு உடன்படிக்கை பண்ணுகின்றோம். அந்த உடன்படிக்கையினை மனிதர்களாகிய  நாம் மீறினாலும் அவர் மீறாமல் நினைவில் மொண்டுள்ளார். 
 
எனவேதான் ஏசாயா மூலம் தேவன் கூறுகின்றார், "மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்." ( ஏசாயா 54 : 10 )

\ஆம் அன்பானவர்களே, மனித பலவீனத்தால் பாவம்செய்தாலும் அதனை உணரும் மனமும் பரிசுத்தமாக வாழவேண்டும் எனும் எண்ணமும் உள்ளவர்களை தேவன் கைவிடுவதில்லை; அவர்களைவிட்டு அவரது கிருபை மாறுவதில்லை. இமைப்பொழுது தனது முகத்தை அவர் நமக்கு மறைத்தாலும் நித்திய கிருபையுடன் நமக்கு இரங்குவார். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Wednesday, December 14, 2022

நீதியுமுள்ள வாழ்க்கை

ஆதவன் 🖋️ 687 ⛪ டிசம்பர் 15,  2022 வியாழக்கிழமை

"எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 28 )

இந்த உலகத்தில் வாழும் நாம் பல்வேறு இன, மத,  மொழி, நாடுகளைச்சார்ந்த மக்களோடு வாழவேண்டியிருக்கிறது. எல்லோரும் ஒரே குணம் உடையவர்கள் அல்ல. எல்லோரும் தீயகுணம் உள்ளவர்களுமல்ல. நாம் நமது விசுவாசத்தால் கிறிஸ்துவை அறிந்து ஏற்றுக்கொண்டாலும் அவரை அறியாத பலர் நீதியோடும் நேர்மையோடும் வாழ்வதைப் பார்க்கலாம். தங்களைக் கிறிஸ்தவர்கள் என்றும் அதுவும் ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்றும் கூறிக்கொள்ளும் பலரைவிட மேலான நல்ல குணங்களுக்கவர்கள் உலகினில் உண்டு. 

மேலும் கிறிஸ்துவை இன்று அறியாதவர்களாய் பாவத்தில்வாழும் மக்கள்கூட ஒருநாள் மனம்திரும்பி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு நம்மைவிட மேலான ஆவிக்குரிய நிலைமையை அடையலாம். எனவேதான் இயேசு கிறிஸ்து, "ஆகிலும், முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றார்." ( மத்தேயு 19 : 30 )

இந்த உண்மையினை தேவன் அப்போஸ்தலரான பேதுருவுக்கு விளக்கினார். இதனால்தான் அப்போஸ்தலரான பேதுரு, "எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்." என்று கூறுகின்றார். 

ஆம், "எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 35 ) என்கின்றார். காரணம், கிறிஸ்துவை அறியாத, நீதி வாழ்க்கை வாழ்ந்த  கொர்நேலியுவுக்கு தேவன் பேதுருமூலம் தன்னை வெளிப்படுத்தினார்.  

கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் நீதிவாழ்க்கை வாழாதவர்கள் கிறிஸ்துவை அறியமுடியாது. அவர்கள் இறுதிவரை பெயர் கிறிஸ்தவர்களாகவே இருப்பார்கள். ஆனால் தேவனுக்குப் பயந்து நீதியோடு வாழ்ந்து தேவனைத் தேடும்போது தேவன் தன்னை அவர்களுக்கு மேலும் மேலும் வெளிப்படுத்துவார். 

மட்டுமல்ல, தேவன் ஒருவருக்கு வெளிப்படும்போது தானாகவே அவர்மேல் விசுவாசம் வரும். அப்படி "அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவான்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 43 )

அன்பானவர்களே, இதனை வாசிக்கும் நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாகவும் இருக்கலாம். கிறிஸ்துவை வெறுப்பவர்களாகக்கூட இருக்கலாம். ஆனால் உண்மையும் நீதியுமுள்ள வாழ்க்கை வாழ்ந்து மெய்யான தேவனை அறியவேண்டுமெனும் எண்ணம் கொண்டவர்கள் என்றால் கிறிஸ்து தன்னை உங்களுக்கு வெளிப்படுத்துவார். 

ஆம், முதலில் நீதி வாழ்க்கை வாழவேண்டும். இரண்டாவது மெய்யான தேவனை அறியவேண்டும் எனும் ஆவல் வேண்டும். அப்படி நீதியாய் வாழ்ந்து தேவனைத் தேடியும் அவர் உங்களுக்குத் தன்னை  வெளிப்படுத்தவில்லையானால் உங்களது மனச்சாட்சியில் இன்னும் அழுக்கு இருக்கின்றது என்று பொருள். அப்படியானால் நீங்கள் உங்கள் வாழ்க்கையினை மறுபரிசீலனைச் செய்து பார்க்கவேண்டியது அவசியம்.   

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712