இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Sunday, July 17, 2022

என் சுமை இலகுவாய் இருக்கிறது

 ஆதவன் 🖋️ 537 ⛪ ஜுலை 18, 2022 திங்கள்கிழமை

"வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்." ( மத்தேயு 11 :28,29 )

வேதாகமம் எழுதப்பட்டபோது அதிகார எண்களோடும் வசன எண்களோடும்  எழுதப்படவில்லை. கி.பி. 1200 க்குப் பின்னரே எண்கள் கொடுக்கப்பட்டன. குறிப்பிட்ட  வசனத்தை எளிதில் கண்டுபிடிக்க இந்த எண்கள் உதவியாக இருக்கின்றன. ஆனால் அதேநேரம் எண்கள் கொடுக்கப்பட்டது பல வசனங்களை  நாம் சரியாகப் புரிந்துகொள்ளத் தடையாகவும் இருக்கின்றன. 

இன்றைய வசனமும் அப்படித்தான். பொதுவாகப் பலரும் மத்தேயு 11:28 ஐ மட்டுமே கூறுவதுண்டு. சுவர்களில் எழுதப்படும் வசனங்களிலும் இதனை மட்டுமே எழுதுவதுண்டு.   "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்". என்பதோடு இயேசு முடிக்கவில்லை. தொடர்ந்து கூறுகின்றார்,  "என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்." (மத்தேயு 11:29)

நுகம் என்பது வண்டி மாடுகளுக்கு கழுத்தில் சுமத்தப்படும் குறுக்குத் தடியைக் குறிக்கும். இந்த வசனத்தின் சரியான பொருள், நீங்கள் உங்கள் உலகப்  பாரங்களைச் சுமந்து வேதனைப்படவேண்டாம் என்னிடம் வந்து  ஆறுதல் பெறுங்கள். அதற்கு நீங்கள் எனது நுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். "என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும்  இருக்கிறது " (மத்தேயு 11:30)

சரியான பொருள், நீங்கள் உங்கள் உலக கவலைகளையும் துக்கங்களையும் பாடுகளையும் சுமந்து வேதனை அடையவேண்டாம், என்னிடம் வாருங்கள்; என்னை ஏற்றுக்கொள்ளுங்கள். என்னை ஏற்றுக்கொள்வது லெகுவான காரியம். அப்போது உங்கள் ஆத்துமாவுக்கு வேதனையிலிருந்து இளைப்பாறுதல் கிடைக்கும்.

அன்பானவர்களே, கிறிஸ்துவிடம் வருவது என்பது அவரை ஏற்றுக்கொண்டு அவரது கட்டளைகள் எனும் நுகத்தை ஏற்றுக்கொள்வது. அவை கடினமானவைகளுமல்ல. இதனையே அப்போஸ்தலரான யோவானும் கூறுகின்றார். "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல." ( 1 யோவான்  5 : 3 )

நாம் நமது துக்கங்களை எண்ணி எண்ணி கவலைப்பட்டு மனபாரத்தோடு இருப்பதைவிட, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வரவேண்டும். நமது அனைத்துப் பிரச்சனைகளின் பாரத்தையும் அவர் சுமந்துகொள்வார் எனும் நம்பிக்கையுடன் அவரது கற்பனைகளைக் கைக்கொள்ள உறுதிகொள்ளவேண்டும். 

கிறிஸ்துவின் இளைப்பாறுதலை பெற்றுக்கொள்ள ஆர்வத்துடன் அவரிடம் நெருங்கி வருவோம். அவர் நம்மில் எவருக்கும் தூரமானவர் அல்ல. 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712 

Saturday, July 16, 2022

What is idolatry ?

 Aathavan 🖋️ 536 ⛪ July 17, 2022 Sunday


"Ye know that neither the adulterer, nor the unclean, nor the covetous, nor the idolater, shall inherit the kingdom of Christ, which is the kingdom of God." (Ephesians 5:5)

Fornication and idolatry are the two greatest sins against God. One who realizes the glory of the Almighty and His immense power does not make an idol and worship it. It is not unreasonable to think that the God who created and controlled these universes would be in a statue made by human hands.

"Thou shalt not make unto thee any likeness of anything that is in heaven above, or that is in the earth beneath, or that is in the water under the earth;" (Exodus 20:4) God told the people of Israel in the ten commandments given by Moses.

But today's verse goes one step further and advises us that "the worshiper of idols is materialistic." The truth is that idolatry is not just worshiping idols made of clay, wood or other metals, but materialistic idolatry.

Many Christians and Christian workers who claim to worship idols today are falling into idolatry called materialism. Not only that, but many Christian ministers treat the people straight to idolatry.

Accumulating wealth, praying to buy cars and houses, encouraging people to give more by hoping that God will return the gift many times over, all these are idolatry. But many who claim to be spiritual Christians are such idolaters today.

Today's verse makes it very clear, "You know that even the unclean, the idolater and the covetous man will not inherit the kingdom of God, the kingdom of Christ." That is, even if we do not do direct idolatry, if we have the idolatrous character of uncleanness and materialism that the scriptures say, we do not share in the kingdom of Christ.

We need material and money to live in this world. But materialism refers to the wicked desire to accumulate more and more money and possessions without being satisfied with having enough. So let's put away the idolatry that the scriptures say is part of Christ's kingdom.

Bro. M. Geo Prakash, Contact:- 9688933712

எது விக்கிரக ஆராதனை?

 ஆதவன் 🖋️ 536 ⛪ ஜுலை 17, 2022 ஞாயிற்றுக்கிழமை

"விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக் காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே." ( எபேசியர் 5 : 5 )

தேவன் அருவருக்கும் இரண்டு பெரிய பாவங்கள், விபச்சாரமும் விக்கிரக ஆராதனையும்தான். சர்வ வல்லவரின் மகிமையையும் அவரது அளப்பரிய ஆற்றலையம் உணர்ந்தவன் சிலையைச் செய்து அதனை வணங்கமாட்டான். இந்த அண்டசராசரங்களைப் படைத்து அடக்கி ஆளும் தேவன் மனிதனின் கையால் உருவாக்கப்பட்ட சிலையினுள் இருப்பார் என எண்ணுவது அறிவுடைமையல்ல. 

"மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்;" ( யாத்திராகமம் 20 : 4 ) என இஸ்ரவேல் மக்களுக்கு தேவன் மோசே மூலம்  அளித்த  பத்துக் கற்பனைகளில் கூறியுள்ளார். 

ஆனால் இன்றைய வசனம் இதற்கு மேலே ஒருபடி போய், "விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது" என்று நம்மை அறிவுறுத்தும் உண்மை என்னவென்றால், விக்கிரக ஆராதனை எனும் சிலை வழிபாடு என்பது மண்ணினாலோ, மரத்தினாலோ அல்லது வேறு உலோகங்களினாலோ செய்யும் சிலைகளை வணங்குவது மட்டுமல்ல, பொருளாசையும் சிலை வழிபாடுதான் என்பதே. 

இன்று சிலைகளை அருவருகின்றோம் என்று கூறிக்கொள்ளும் பல கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ ஊழியர்களும்  பொருளாசை எனும் சிலைவழிபாட்டுக்குள் விழுந்து கிடக்கின்றனர். மட்டுமல்ல பல கிறிஸ்தவ ஊழியர்கள்  மக்களை நடத்துவதும் சிலைவழிபாட்டுக்கு நேராகவேதான். 

சொத்து சேர்ப்பது, வாகனங்கள் மற்றும் வீடு வாங்க ஜெபிப்பது, காணிக்கை கொடுத்தால் தேவன் அதனைப் பல மடங்காகத் திருப்பித் தருவார் என மக்களை ஆசைகாட்டி அதிக காணிக்கைக் கொடுக்கத் தூண்டுவது, இவை அனைத்தும் சிலை வழிபாடுகளே. ஆனால்  தங்களை ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பலரும் இன்று இத்தகைய விக்கிரக ஆராதனைக்காரர்களாகவே இருக்கின்றனர். 

இன்றைய வசனம் மிகத் தெளிவாகக் கூறுகின்றது, "அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே" என்று.  அதாவது, நேரடியான சிலை வழிபாடு செய்யவில்லை என்றாலும் வேதம் கூறும் அசுத்தக் குணமும் பொருளாசை எனும் சிலைவழிபாட்டுக் குணமும் நமக்கு இருக்குமானால் நாம் கிறிஸ்துவின் ராஜ்யத்தில் பங்கடைவதில்லை. 

இந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு பொருள், பணம் தேவை. ஆனால் பொருளாசை என்பது உள்ளது போதும் என நிறைவடையாமல் துன்மார்க்கமாய் மேலும் மேலும் பணம், சொத்து சேர்க்கும் ஆசையைக் குறிக்கின்றது. எனவே கிறிஸ்துவின் ராஜ்யத்தில் பங்கடைய வேதம் கூறும் சிலைவழிபாடுகளை நம்மைவிட்டு அகற்றுவோம்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Thursday, July 14, 2022

அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம்

 ஆதவன் 🖋️ 535 ⛪ ஜுலை 16, 2022 சனிக்கிழமை


"அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான்."( யோவான் 11 : 16 )

இந்தியாவின் அப்போஸ்தலர் தோமாவைக்குறித்து நாம் அதிகம் எண்ணுவதில்லை. தோமாவின் வாழ்வின் செயல்பாடுகள், அவர் கிறிஸ்துவுக்காகக் காட்டிய வைராக்கியம் இவை நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்களாகும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் இப்போதுள்ளதுபோன்ற பிரயாண வசதிகள் கிடையாது. தவிர, நீண்ட கடல் பயணங்கள் ஆபத்தானவை. ஆனால் கிறிஸ்துவின்மேலுள்ள அன்பினால், தனது சொந்த மக்கள், குடும்பம், உணவுப் பழக்கம், காலசூழ்நிலை இவை அனைத்தையும்விட்டு,  மீண்டும் அங்கு சென்று தான் விட்டுவந்த எல்லோரையும் பார்க்க முடியுமா என்ற நிச்சயமில்லாமல் கிறிஸ்துவை அறிவிக்க இந்தியாவுக்கு வந்தார் அவர். 

கிறிஸ்துவோடு இருக்கும்போதே கிறிஸ்துவுக்காக அவரோடு உயிரை விடத் தயாராக இருந்தார் அவர். யூதேயாவுக்குச் செல்ல இயேசு புறப்பட்டபோது, அவரோடு அங்கு சென்றால் யூதர்கள் கல்லெறிந்து இயேசு கிறிஸ்துவைக் கொன்றால், நாமும் சாகநேரிடும் என மற்ற சீடர்கள் அஞ்சியபோது, "அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்" என சக அப்போஸ்தலரையும் அவர் அழைக்கின்றார். 

கிறிஸ்துவோடு கிறிஸ்துவாக நமது பழைய மனிதன் சிலுவையில் அறையப்பட்டு மரிப்பதுதான் கிறிஸ்தவ வாழ்வு. இதனை தீர்க்கதரிசனமாக தோமா கூறுவதாகவும் நாம் எடுத்துக்கொள்ளலாம். அப்போஸ்தலரான பவுல் இதனை, "நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்." ( ரோமர் 6 : 6 ) என்று கூறுகின்றார்.

இன்று உடலளவில் நாம் ஒருவேளை கிறிஸ்துவுக்காக மரிக்காமல் இருக்கலாம். ஆனால் அப்போஸ்தலரான பவுல் கூறுவதுபோல பாவத்துக்கு நாம் மரிக்க முடியும். நமது பாவ சரீரம் கிறிஸ்துவோடுகூட சிலுவையில் அறையப்படவேண்டும்.

அப்போஸ்தலரான தோமா மற்ற சீடர்களை அழைத்ததுபோல "அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்" என நாம் நமது சமூகத்தில் உள்ள மற்றவர்களை அழைக்கக் கடமைப்பட்டுள்ளோம். 

மேலும், அப்படித் துணிந்து தோமா நடந்தபோதுதான் மிகப்பெரிய அற்புதத்தைக் காண முடிந்தது. ஆம், மரித்து நான்கு நாட்களான லாசருவை கிறிஸ்து உயிரோடு எழுப்பினார்.   அன்பானவர்களே, நாமும் நமது பாவ சரீரங்களை கிறிஸ்துவோடுகூட சிலுவையில் அறைய ஒப்புக்கொடுப்போம்.  அப்போது நமது வாழ்விலும் கிறிஸ்து செய்யும் அதிசயங்களைக் கண்டு மகிழ முடியும். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

ஆவிக்குரிய வாழ்வின் வேலியைக் காத்துக்கொள்ளவேண்டும்.

 ஆதவன் 🖋️ 534 ⛪ ஜுலை 15, 2022 வெள்ளிக்கிழமை

"..........அக்காலத்திலே எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. அப்போஸ்தலர்தவிர, மற்ற யாவரும் யூதேயா சமாரியா தேசங்களில் சிதறப்பட்டுப்போனார்கள்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 8 : 1 )

ஸ்தேவான் கொலை செய்யப்பட்டபின்னர் ஏற்பட்டக் கலவரத்தால் எருசலேம் சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. மக்கள் யூதர்களுக்கு அஞ்சிச் சிதறி யூதேயா மற்றும் சமாரியா தேசங்களுக்குச் சிதறிஓடினார்கள்.

ஆனால் எந்த ஒரு தீமையான செயலையும் தேவன் நன்மையாக மாற்றக்கூடியவர் என்பதற்கேற்ப நடந்தது. யூதர்கள் சமாரியர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்று கருதி அவர்களோடு உணவுகூட உண்பதில்லை. ஆனால் இப்போது அவர்கள் சமாரியாவில் தஞ்சம் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. இப்படிச் சமாரியாவுக்குப்போன கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட யூதர்கள் அங்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்கள்.

"சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 8 : 4 )ஆம் சிதறப்பட்டு ஓடியதால் சமாரியர்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறியும் வாய்ப்பு உண்டானது.

நமது ஆவிக்குரிய வாழ்விலும் பிசாசு பல்வேறு துன்பங்களையும் பிரச்சனைகளையும் எழுப்பி நம்மைச் சிதறடிப்பான். ஆம் , பிசாசுதான்  சிதறடிக்கின்றவன்.  நாம் நமது ஆவிக்குரிய வாழ்வின் அரணை (வேலியைக்) நமது ஜெப ஜீவியத்தால்  காத்துக்கொள்ளவேண்டும்.    "சிதறடிக்கிறவன் உன் முகத்துக்கு முன்பாக வருகிறான்; அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல் பண்ணு, அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொள், உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து." ( நாகூம் 2 : 1 )  என்று நாகூம் தீர்க்கதரிசி கூறுகின்றார். 

இப்படி நாம் நமது ஆவிக்குரிய வாழ்வின் வேலியை உறுதியாகக் காத்துக்கொண்டால் சாத்தானின் சிதறடிக்கும் முயற்சி  வெற்றிபெறாது. மட்டுமல்ல, அன்று சிதறடிக்கப்பட்ட மக்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவித்ததுபோல நம்மூலம் கிறிஸ்து அறிவிக்கப்பட்டு மகிமைப்படுவார்.

ஆம், ஆவிக்குரிய வாழ்வில் சிதறடிக்கப்படும் அனுபவம் இன்றியமையானது. பக்தனான யோபு சிதறடிக்கப்பட்டபின் பொன்னாகத் திகழ்ந்தார்.  எனவே, நாகூம் கூறுவதுபோல நமது அரணைக் காத்துக்கொண்டு  வழியைக் காவல் பண்ணி  அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொண்டு நமது பெலனை மிகவும் ஸ்திரப்படுத்துவோம். அதற்கு ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருப்போம்.


தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Wednesday, July 13, 2022

"நான் தனித்திரேன், கிறிஸ்து என்னுடனேகூட இருக்கிறார்"

 ஆதவன் 🖋️ 533 ⛪ ஜுலை 14, 2022 வியாழக்கிழமை


"இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்." ( யோவான் 16 : 32 )

தனித்திருத்தல் என்பது மிகுந்த துன்பம் தரக்கூடியது. இந்தத் துன்பம் அனைவருக்குமே ஏதோ ஒரு காலத்தில் வரக்கூடும். எல்லாவிதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவும் இந்தத் தனித்திருத்தலை அனுபவித்தார். 

அதனையே அவர், "நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது". என்று குறிப்பிட்டார். உலக மனிதர்கள் இந்தத் தனித்திருத்தலை எளிதில் தாக்கிக்கொள்ளமுடியாது. மகன் இறந்த துக்கம், மனைவி இறந்த துக்கம், கணவன் இறந்த துக்கம் தாங்க முடியாமல்  பலர் தற்கொலை செய்வதுண்டு. நாம் பத்திரிகைச் செய்திகளில் பல நேரங்களில் இதனை வாசித்திருக்கலாம். 

ஆனால் இயேசு கிறிஸ்து எல்லோராலும் கைவிடப்பட்டவராக, தனித்திருப்பவராக,  உலகத்துக்குத் தெரிந்தாலும் அவர் உண்மையில் தனித்திருக்கவில்லை. அவரோடு பிதாவாகிய தேவன் எப்போதும் இருந்தார். எனவேதான்  "நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்." என்று கூறுகின்றார். எல்லோராலும் கைவிடப்பட்டாலும் பிதா அவரைக் கைவிடவில்லை. 

அன்பானவர்களே, இன்று ஒருவேளை உலகப்பிரகாரமான தனித்திருத்தலில் இதை வாசிக்கும் நீங்கள் இருக்கலாம். பெற்ற பிள்ளைகள்  ஒருவேளை கைவிட்டு இனி என்ன செய்வது எனக் கலங்கிக்கொண்டிருக்கலாம்.  கை பிடித்தக் கணவன் கைவிட்டிருக்கலாம்.  ஆனால் நம்மைப் படைத்து நம்மோடு இருக்கும் தேவன் நம்மைத் தனித்திருக்க விடமாட்டார். அவர் கூடவே இருக்கிறார் என்று விசுவாசியுங்கள். 

"நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்." ( ஏசாயா 41 : 10 ) என்கிறார் கர்த்தராகிய தேவன்.

"நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்" என்று இயேசு கிறிஸ்துவுக்கு வந்ததுபோல நமக்கும் ஒரு காலம் வரும் என்பதால் தேவனோடு நாம் எப்போதும் நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்ளவேண்டும். அப்போது நாமும் இயேசுவைப்போல துணிவுடன் கூறலாம், "நான் தனித்திரேன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னுடனேகூட இருக்கிறார்" என்று. 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Monday, July 11, 2022

நாம் தேவனின் மக்களா இல்லை பிசாசின் மக்களா?

 ஆதவன் 🖋️ 532 ⛪ ஜுலை 13, 2022 புதன்கிழமை

"தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் ". ( யோவான் 8 : 47 )

இந்த உலகத்தில் படைக்கப்பட்ட அனைவருமே தேவனால் உண்டானவர்கள்தான். ஆனால் ஆவிக்குரிய விளக்கத்தின்படி இது சரியல்ல. இயேசு கிறிஸ்து தேவனால் உண்டானவனுக்கும் பிசாசானவனால் உண்டானவனுக்குமுள்ள வேறுபாட்டை இங்குக் குறிப்பிடுகின்றார். 

தேவனுடைய வசனத்தைக் கேட்டு அதன்படி நடப்பவனே தேவனால் உண்டானவன். தேவனுடைய வசனத்தை அறியாமலும் அதன்படி வாழாமலும் இருப்பவன் பிசாசானவனால் உண்டானவன். 

தனது வார்த்தைகளை விசுவாசியாமலும் தனக்கு எதிராகவும் நின்ற யூகர்களைப்பார்த்து இயேசு கிறிஸ்துக்  கூறினார்,  "நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்"  ( யோவான் 8 : 44 )

கிறிஸ்துவின் வார்த்தைகளை விட்டுவிட்டு, அல்லது அதனை விசுவாசியாமல் அவற்றுக்கு எதிரான செயல்பாடுகளை நாம் செய்யும்போது பிசாசின் விருப்பத்தினை நிறைவேற்றுகின்றோம். இதனைத்தான் இயேசு கிறிஸ்து,  "உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்" என்று குறிப்பிட்டார்.

நாம் தேவனால் உண்டானவர்கள் என்று கூறிக்கொண்டு வெறும் ஆராதனையில் மட்டும் அவரைப் புகழ்ந்து துதித்துவிட்டு உலக காரியங்களில் அவரது கற்பனைகளுக்கு முரணாக வாழ்வோமானால் நாம் பிசாசானவனால் உண்டானவர்கள்.

"தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்" என்று இயேசு கிறிஸ்து கூறுவது வெறுமனே பிரசங்கத்தில் அவரது வார்த்தைகளை காதால் கேட்பதைக் குறிக்கவில்லை. வசனங்களுக்குச் செவிகொடுத்தல் என்பது அவரது வார்த்தைகளை வாழ்வாக்குவது.  

நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போம். நாம் எப்படி இருக்கின்றோம்? வெறும் ஆராதனைக் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோமா? கன்வென்சன் பிரசங்கங்களை காதால் கேட்பதற்கு ஓடி வாழ்க்கையில் சாட்சியற்றவர்களாக இருக்கின்றோமா ? 

நாம் தேவனால் உண்டானவர்களென்றால் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுப்போம் இல்லாவிட்டால்  நம்மைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும் தேவனால் உண்டாயிராதபடி பிசாசின் மக்களாகவே வாழ்வோம்.   

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

தண்ணீர் நிற்காத வெடிப்புள்ள தொட்டிகள்

 ஆதவன் 🖋️ 531 ⛪ ஜுலை 12, 2022 செவ்வாய்க்கிழமை


"எந்த ஜாதியாவது தேவர்களல்லாத தங்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்."( எரேமியா 2 : 11 )


இஸ்ரவேலர் செய்த தேவனுக்குப் பிரியமில்லாத மிகப்பெரிய காரியம் அல்லது பாவம்,  அவர்கள் அந்நிய தெய்வங்களை வழிபடத் துவங்கியதுதான். இஸ்ரவேலர் நடுவே வேறு இனத்து மக்கள் பலர் இருந்தனர். அவர்கள் வெல்வேறு தெய்வங்களை வழிபட்டனர். ஆனால் அவர்கள் தங்கள் மதத்தில் உறுதியாக இருந்து அவற்றையே வழிபட்டனர்.  

இஸ்ரவேல் மக்களுக்குத் தேவன் பல்வேறு விதங்களில் தன்னை வெளிப்படுத்தினார். பல்வேறு அதிசயங்களைச் செய்து தானே மெய்யான தேவன் என்பதை அவர்கள் உணரத்தக்கவிதமாக அவர்களை வழிநடத்தினார். இவைகளைத் தங்கள் முன்னோர்கள் கூற அறிந்து  உணர்ந்திருந்தும் அவர்கள் தங்கள் உலகத் தேவைகளுக்கு தங்களைச் சுற்றியுள்ள மக்கள் வழிபட்ட அந்நிய தேவர்களை வணங்கவும் ஆராதிக்கவும் துவங்கினர். 

பிற இனத்தவர் வணங்கியது மெய்யான தேவனல்ல எனவேதான் இங்கு தேவன்  "தேவர்களல்லாத தங்கள் தேவர்களை அவர்கள்  மாற்றினது உண்டோ?" என்று கேட்கின்றார். ஆனால் வீணான அந்த தேவர்களுக்காக இஸ்ரவேலர் தங்கள் மெய் தெய்வத்தை மாற்றினார்கள்.  

 "என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்." ( எரேமியா 2 : 13 )  என்றும் எரேமியா புத்தகத்தில் வாசிக்கின்றோம். 

அந்நிய தெய்வங்களே வெடிப்புள்ள தொட்டிகள். வெடிப்புள்ள தொட்டியில் நீரைச் சேகரித்து பயன்படுத்த முடியாததுபோல அந்தத் தெய்வங்களால் வேறு எந்த பயனும் இல்லை.

இன்றும் மக்கள் இந்தத் தவறையே செய்கின்றனர். பணத்தையும், சொத்துச்  சுகங்களையும்,  பதவியையும், பெருமையையும் தெய்வங்களாக எண்ணி அவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து கிறிஸ்துவுக்குச் செலுத்தவேண்டிய கனத்தைச் செலுத்தாமல் போகின்றனர். ஆம், வெடிப்புள்ளத் தொட்டிகளைக் கட்டிக்கொண்டிருக்கின்றனர். 

அன்பானவர்களே, வீணான தெய்வங்களை வழிபட்ட இஸ்ரவேலரைப்போல நாம் இருப்பது முறையல்ல. வீணான உலகத் தேவைகளை தெய்வங்களாக எண்ணி அவற்றைத் தேடி ஓடுவதில் கிறிஸ்துவை, அவர் காட்டிய நெறிகளை  விட்டுவிடக்கூடாது. அப்படி விட்டுவிடுவது வெடிப்புள்ளத் தொட்டிகளைக் கட்டும் மூடத்தனம் போன்றதாகும்.

இஸ்ரவேலர் அடிமைபட்டுபோகக் காரணம் அவர்கள் தேவனை விட்டுவிட்டதுதான். இன்று அற்பகால இன்பத்துக்காக தேவனை விட்டுவிடுவது நமது வாழ்வில் நம்மை பல்வேறு அடிமைத்தனத்துக்குள்தான் கொண்டுபோய்ச்  சேர்க்கும். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

 

Sunday, July 10, 2022

ஆவிக்குரிய வாழ்வில் நமக்கும் தினசரி போராட்டம் உண்டு

 ஆதவன் 🖋️ 530 ⛪ ஜுலை 11, 2022 திங்கள்கிழமை



"அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( எரேமியா 1 : 19 )

எதிரி நாட்டு ராஜாக்கள் உனக்கு எதிராக யுத்தம் செய்ய வருவார்கள்; ஆனால் உன்னை மேற்கொள்ள மாட்டார்கள். காரணம், சர்வ வல்லவரான நான் உன்னோடுகூட  இருக்கிறேன் என   மக்களைத் திடப்படுத்த எரேமியா தீர்க்கதரிசி யூதாவுக்குக் கூறிய வார்த்தைகள் தான் இன்றைய தியானத்துக்குரிய வசனம். 

தங்களது மீறுதலால் தேவ கோபத்துக்கு உள்ளாகி யூதா மற்றும் இஸ்ரவேலர்கள் பல்வேறு ராஜாக்களின் அடிமைத்தனத்துக்கு உள்ளானார்கள். ஆனால் தேவன் தெரிந்துகொண்ட மக்கள் இனமானதால் தேவன் அவர்கள்மேல் பரிவு கொண்டார். மக்கள் தங்கள் தவறான வழிகளைவிட்டு தன்னிடம் திரும்பிட தேவன் தீர்க்கதரிசிகள் மூலம் மக்களுக்கு அறிவுரைகள் கூறினார்.  

உங்களுக்கு எதிராக யுத்தம் பண்ணுவார்கள் ஆனால் உங்களை  மேற்கொள்ள மாட்டார்கள் என்பதே செய்தி. 

அன்பானவர்களே, இதுவே ஆவிக்குரிய வாழ்வில் ஈடுபடும் நமக்கும் பொருந்தக்கூடிய செய்தி. ஆவிக்குரிய வாழ்வில்  நமக்கும் தினசரி போராட்டம் உண்டு. "ஏனெனில், மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு." ( எபேசியர் 6 : 12 ) என்கின்றார் பவுல் அடிகள். 

ஆனால் தேவனுடைய ஆவியானவர் நம்மோடுகூட இருப்பதால் அந்தப் போராட்டங்கள் நம்மை மேற்கொள்ளாது. ஒருவேளை நமக்கு எதிராக யுத்தம்செய்வது பாவங்களாக இருக்கலாம். ஆனால் அவை நம்மை மேற்கொள்ளாது. காரணம், தேவன் நம்மோடு இருக்கின்றார்.  

ஆவிக்குரிய வாழ்வில் போராடி வெற்றிபெறுவதற்குத் தேவன் பல்வேறு ஆவிக்குரிய போராயுதங்களைத் தந்துள்ளார். சத்தியம் , நீதி, சமாதானத்தின் சுவிஷேஷத்துக்குரிய ஆயத்தம், விசுவாசம், இரட்சிப்பு எனும் இவைகளே பல்வேறு ஆவிக்குரிய ஆயுதங்கள். எபேசியர் 6:14-17 இல் நாம் இதுகுறித்து விபரமாக  வாசிக்கலாம். 

ஆவிக்குரிய வாழ்வில் இந்த ஆயுதங்களை நாம் சரியாகப் பயன்படுத்துவோமானால், நமக்கு விரோதமாக யுத்தம்பண்ணும் பாவங்களும் நமக்கு எதிராகச் செயல்படும் வல்லமைகளும், எதிரிகளும் நம்மை மேற்கொள்ளமாட்டார்கள்; நம்மை இரட்சிக்கும்படிக்குத் தேவன் நம்மோடே கூட இருப்பார். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Saturday, July 09, 2022

நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை!

 

ஆதவன் 🖋️ 529 ⛪ ஜுலை 10, 2022 ஞாயிற்றுக்கிழமை


"இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை." ( ஏசாயா 64 : 8 )

மனிதர்களாகிய நாம் அனைவருமே கடவுளது கரத்தின் செயல்பாடுகளாய் இருக்கின்றோம். மனிதர்களைக் கடவுள் வித்தியாசமான குணங்கள் உள்ளவர்களாகப் படைத்துள்ளார். ஒவ்வொருவருமே வித்தியாசமானவர்கள். ஆனால் எல்லோருமே தேவ நோக்கம் நிறைவேற்றவே படைக்கப்பட்டுள்ளோம். 

ஒரு தாய் தந்தையருக்குப் பிறக்கும் எல்லா குழந்தைகளும் ஒன்றுபோல இருப்பதில்லை. ஒரு குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றுபோல இருப்பதில்லை. 

ஒரு வீட்டில் பல்வேறுவித பாத்திரங்கள் இருக்கும். வொவ்வொன்றையும் நாம் தேவைக்கேற்ப பயன்படுத்துவோம். அதுபோலவே தேவன் மனிதர்களை பயன்படுத்துகின்றார். மேலும், பாத்திரத் தொழிற்சாலையில் வெவ்வேறுவிதமான் பாத்திரங்கள் உற்பத்திச் செய்யப்படுகின்றன. எல்லாமே ஒவ்வொரு தேவைக்குப்   பயன்படுகின்றன.  

இதனையே அபோஸ்தரான பவுலும் கூறுகின்றார். "மிதிபட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?" ( ரோமர் 9 : 21 )

எனவே நாம் பிறரோடு நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும். பிறரிடம் இல்லாத ஏதோ ஒன்று நிச்சயம் நம்மிடம் இருக்கும். அதற்காக தேவனுக்கு நன்றி கூறவேண்டும். ஏதோ ஒரு நோக்கத்திற்காகவே தேவன் நம்மை இப்படிப் படைத்துள்ளார் எனும் உணர்வு வரும்போது நாம் தேவனிடம் குறைபட்டுக்கொள்ளமாட்டோம். 

வெறுமனே ஆராதனைகளில் கலந்துகொண்டு கடமையை நிறைவேற்றுவதல்ல கிறிஸ்தவம். அது தேவனோடு உறவை வளர்த்துக்கொண்டு அவரோடு வாழ்வது. தேவனோடு நெருங்கிய உறவுகொள்வோமானால் நம்மைக் குறித்த தேவநோக்கத்தை அவர் நமக்கு வெளிப்படுத்துவார். அந்த நிலைக்கு நாம் வரும்போது மட்டுமே தேவன் ஏன் நம்மை இப்படிப் படைத்துள்ளார் என்பது புரியும். நமது துன்பங்கள்,  துயரங்கள், பிரச்சனைகள் எல்லாமே தேவ நோக்கத்தோடுதான் நடக்கின்றன.  

கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை என்பதை உணர்ந்துள்ளேன். எனக்கு என்னைக்குறித்த தேவ நோக்கத்தை வெளிப்படுத்தும் என விசுவாசத்துடன் வேண்டுவோம். கர்த்தர் அதனை நமக்கு வெளிப்படுத்துவார்.  

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Thursday, July 07, 2022

அவரது சித்தமில்லாது நாம் எதனையும் செய்யமுடியாது.

 

ஆதவன் 🖋️ 528 ⛪ ஜுலை 09, 2022 சனிக்கிழமை


"மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்." ( சங்கீதம் 94 : 11 )


மனிதன் பலவீனமானவன். ஆனால் இந்த பலவீனமான உடலைக்கொண்டு அவன் நினைக்கும் காரியங்களையும் செய்யும் செயல்பாடுகளையும் பார்க்கும்போது அவை என்றைக்கும் அழியாமல்  நிலைத்திருக்கும் என்று அவன் எண்ணுவதையே காட்டுகின்றது. காரணம், தனது வலுவற்ற தண்மையைஅவன் உணருவதில்லை. இந்த உலகினில் நிரந்தர முதல்வர், நிரந்தர பிரதமர்  என்று கூறிக்கொண்டவர்களது  நிலைமையை நாம் அறிவோம்.

இந்த உலகத்தில் பலரும் செய்யும் காரியங்கள் அவர்கள் இந்த உலகத்தில் நிரந்தரமாக வாழப்போவதாக எண்ணுவதையே நமக்கு உணர்த்தும். ஆனால் மனிதனது இத்தகைய செயல்பாடுகள் தேவனுக்குச் சிரிப்பையே வரவழைக்கும். காரணம், "மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்." 

"வானத்தினளவு கோபுரம் கட்டி நமக்குப் பெயர் உண்டாகப் பண்ணுவோம்" என்று எண்ணி கோபுரம்கட்ட முயன்ற மக்களைப் பார்த்தக்  கர்த்தர்   "தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபட மாட்டாது என்று இருக்கிறார்கள்" என்று கூறி அவர்கள்  பேசும் மொழியைத் தாறுமாறாக்கினார்.  பாபேல் என்ற கோபுரம் பாதியில் நின்றுபோனது (ஆதியாகமம் - 11)

நாம் என்னதான் உடல் வலுவுள்ளவர்களாக இருந்தாலும், அதிகாரபலம், பணபலம் உள்ளவர்களாக இருந்தாலும் அது நிறைவேறுவது கர்த்தரது கிரியை இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். "மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்." ( நீதிமொழிகள் 19 : 21 ) என்று நீதிமொழிகள் கூறுவது கவனிக்கத்தக்கது.

அன்பானவர்களே, நாம் எப்போதும் பெருமைகொண்டு என்னால் முடியும் என்று எண்ணுவதைவிட கர்த்தரது கிருபையினைச் சார்ந்துகொள்வதே நமக்கு வெற்றியைத் தரும். காரணம் அவரது சித்தமில்லாது பலவீனமான நாம் எதனையும் செய்யமுடியாது. படுக்கைக்குச் செல்லும் மனிதன் மறுநாள் எழுந்திருப்பதே நிச்சயமில்லை.

"நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே. ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்." ( யாக்கோபு 4 : 14, 15 ) என்று அருமையான யோசனையைத் தருகின்றார் அப்போஸ்தலரான யாக்கோபு.

கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதுதான் மனித வாழ்வு. எனவே நாம் கர்த்தரை முன்வைத்தே நமது திட்டங்களை வகுப்போம். கர்த்தரை மறந்து நாம்  எடுக்கும் செயல்திட்டங்கள் வீணானவையே. 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Wednesday, July 06, 2022

நாம் நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல.....

 

ஆதவன் 🖋️ 527 ⛪ ஜுலை 08, 2022 வெள்ளிக்கிழமை


"கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்." ( 1 கொரிந்தியர் 6 : 20 )

கிறிஸ்தவ விசுவாச சத்தியத்தின்படி நாம் நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல. ( 1 கொரிந்தியர் 6 : 19 ) கிறிஸ்து நம்மைத் தனது சுய இரத்தத்தைச் சிந்தி கிரயத்துக்கு (விலைக்கு) வாங்கியுள்ளார். எனவே நாம் தேவனுக்கு உடைமையானவர்கள். நாம் நமக்குச் சொந்தமல்லாதவர்களாக தேவனுக்குச் சொந்தமானவர்கள் ஆனபடியால் நமது உடலாலும் ஆவியினால் அவரை மகிமைப் படுத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

எப்படி நமது உடலாலும் ஆவியினால் அவரை மகிமைப்படுத்துவது ? இதற்குப் பதிலாக அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை." ( ரோமர் 12 : 1 )

அதாவது, நமது சரீரங்களை பரிசுத்தமுள்ளவையாக பாதுகாக்கவேண்டும், பாவங்களுக்கு விலக வேண்டும். அப்படி நாம் நமது உடலைப் பரிசுத்தமாகக்  காத்துக்கொள்வதே அவரை நாம் மகிமைப்படுத்துவதற்கு அடையாளம். 

இருபத்திநான்கு மணி நேரமும் தேவ பயமும் அவரைப்பற்றிய எண்ணமும் இல்லாமல் தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்துவிட்டு ஞாயிற்றுக் கிழமைகளில் ஆலயத்தில் சென்று ஆராதிப்பதில் அர்த்தமில்லை.  

நாம் தேவனுக்கு உடைமையானவர்கள் எனும் எண்ணம் நமக்குள் வரும்போது மட்டுமே நாம் நமது உடலைப் பாதுகாப்போம். ஏனெனில் நமது உடல் தேவனால் கிரையம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளதால் அவர் நமக்குள் இருக்கின்றார்; நாம் அவரது ஆலையமாக இருக்கின்றோம்.

அன்பானவர்களே, இந்த எண்ணத்துடனேயே வாழ்வோமானால் நமது வாழ்க்கை வித்தியாசமானதாக மாறும்.

"உங்கள் சரீரமானது நீங்கள் தேவனால் பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலையமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்ல என்றும் அறியீர்களா? ( 1 கொரிந்தியர் 6 : 19 )

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

ஆவிகுரியார்களே ஆவிக்குரிய சத்தியங்களை அறிய முடியும்.

 

ஆதவன் 🖋️ 526 ⛪ ஜுலை 07, 2022 வியாழக்கிழமை


"தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்." ( 1 கொரிந்தியர் 2 : 9, 10 )


மறு  உலக வாழ்வு, பரலோகம், நித்திய ஜீவன் இவைகளை தேவன் ஏற்கெனவே தம்மை விசுவாசித்து ஏற்றுக்கொள்பவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ளார்.  ஆனால் இவைகளை நாம் நமது ஊனக்கண்ணால் காணமுடியாது.  இதுபோல நமக்காக இயேசு கிறிஸ்து ஒரு இடத்தை ஆயத்தம் பண்ணுவதற்குத் தான் செல்வதாகக் கூறினார். இதனையும் நாம் காணவில்லை. 

"என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்." ( யோவான் 14 : 2, 3 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

இவைகள் எல்லாமே தேவனிடம் அன்புகூருகிறவர்களுக்காக அவர் ஏற்பாடு செய்தவை என்று இன்றைய வசனம் கூறுகின்றது. ஆனால், எதையுமே நாம் காணவில்லை. தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் நமக்கு இவைகளை வெளிப்படுத்தித் தருகின்றார். அவர் அப்படி வெளிப்படுத்தித் தருவதால் நமக்குள் இவைகுறித்த விசுவாசம் ஏற்பட்டுள்ளது. 

ஆனால் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பலருக்கும் கூட இவைகளில் விசுவாசம் இல்லை. அவர்கள் தேவனை ஆராதிக்கின்றார்கள், பல்வேறு பக்திபூர்வமான காரியங்களில் ஈடுபடுகின்றனர். ஆனால்  பெரும்பாலான கிறிஸ்தவர்களுக்கும் இவற்றைப்பற்றிய அறிவும் இல்லை தெளிவும் இல்லை. 

இதற்குக் காரணம் அவர்கள் தேவனைத் தேடுவது இவற்றுக்காக அல்ல. அவர்கள் தங்கள் உலகத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும்  அவை பற்றி வேண்டுதல் செய்வதற்கும் மட்டுமே தேவனிடம் வருகின்றனர். 

ஆவிகுரியார்களே ஆவிக்குரிய சத்தியங்களை அறிய முடியும். "மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்."(ரோமர்-8:5).

அன்பானவர்களே, "நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்." என்று கூறியுள்ளபடி ஆவிக்குரிய மக்களாக நாம் மாறும்போதே இவைகளை அறியவும் முடியும்; சுதந்தரிக்கவும் முடியும்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Tuesday, July 05, 2022

நாம் படைக்கப்பட்டதே நற்செயல்கள் செய்வதற்காகத்தான்

 

ஆதவன் 🖋️ 525 ⛪ ஜுலை 06, 2022 புதன்கிழமை


"ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்." ( எபேசியர் 2 : 10 )

கடவுள் மனிதனை ஏன் படைத்தார் என்று ஒரு கேள்வியைச் சிலர் எழுப்புவதுண்டு. கடவுளைப் புகழ்வதற்கு என்று சிலர் இந்தக் கேள்விக்குப் பதில் கூறுவார்கள். அதாவது மனிதரைப் படைத்து அவன் தன்னைப் புகழ்ந்துகொண்டிருக்கவேண்டும் என்று கடவுள் விரும்புவாரா? 

நாம் உலகினில் படைக்கப்பட்டதே நற்செயல்கள் செய்வதற்காகத்தான் என்கின்றார் பவுல் அடிகள்.  அதாவது கடவுள் நல்லவராகவே இருக்கின்றார். அவர் தான் படைத்த மனிதர்களும் தன்னைப்போல நற்செயல்கள் செய்பவர்களாக இருக்கவேண்டுமென்று விரும்புகின்றார். "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்." ( ஆதியாகமம் 1 : 27 ) என்று வேதம் கூறுகின்றது.

"தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக "( ஆதியாகமம் 1 : 26 ) என்று கூறுவதைப் பார்க்கின்றோம். சாயல் என்பது குணத்தைக் குறிக்கின்றது. அதாவது தனது சாயலை மனிதன் வெளிப்படுத்தவேண்டும் என அவர் எண்ணினார். ரூபம் என்பது உருவம். அதாவது கடவுள் மனித உருவில் இருக்கின்றார் (கடவுளுக்கு உருவமில்லை என்று கூறுவது சரியான  வேத படிப்பினை அல்ல) ஆனால் மனிதன் பாவம் செய்தபோது அந்த தேவச் சாயலை இழந்துவிட்டான். 

இன்றைய வசனம் கூறுகின்றது, "நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்". ஆம் அந்த தேவ சாயலை நாம் இழந்துவிடாமல் நடக்கும்படி முன்னதாகவே சரியான வழியை ஆயத்தம் பண்ணியிருக்கின்றார். ஆனால் மனிதன் அந்த வழியில் நடக்கவில்லை.

எனவேதான் கர்த்தராகிய இயேசு உலகினில் வந்தார். "நானே வழி " என்று அறிக்கையிட்டு ஏற்கெனவே ஆயத்தம்பண்ணய சரியான வழியை நமக்குக் காண்பித்தார். 

அன்பானவர்களே, கிறிஸ்து இயேசு உலகினில் வந்து நமக்கு வழியைக் காட்டியது மட்டுமல்ல, அந்த வழியில் நாம் நடந்திட  பரிசுத்த ஆவியானவரை நமக்குத் துணையாளராகத் தந்துள்ளார். நற்செயல்கள் செய்து கிறிஸ்து காட்டிய இந்த வழியில் நடக்கவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.  துணையாளரான பரிசுத்த ஆவியானவர் நம்மை கிறிஸ்து காட்டிய வழியில் நடத்திட அவரது துணையினை எந்நாளும் வேண்டுவோம்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712