அவிசுவாசம்

  'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,148     💚 ஏப்ரல் 01, 2024 💚 திங்கள்கிழமை 💚

"அவரே இஸ்ரவேலைமீட்டு இரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம்." ( லுூக்கா 24 : 21 )

இயேசு கிறிஸ்து மரித்து மூன்று நாட்களாகி அவர் உயிர்த்த அன்று கிறிஸ்துவின் இரண்டு சீடர்கள் எருசலேமுக்கு எட்டு மைல் தொலைவிலுள்ள எம்மாவு எனும் கிராமத்தை நோக்கி பயணம் சென்றனர். அப்போது அவர்களோடு வழிப்போக்கனைப்போல இயேசு கிறிஸ்து சேர்ந்துகொண்டு வழிநடந்தார். அவர்கள் அவரை இயேசு என்று அறியவில்லை.  அவரோடு பேசிக்கொண்டுச் சென்றபோது  இயேசு அவர்களிடம், "நீங்கள் துக்க முகமாய் எதனைப்பற்றிப்   பேசிக்கொண்டு செல்கின்றீர்கள்?" என்று கேட்டார். 

அப்போது அந்தச் சீடர்கள் அவரிடம் இயேசு கிறிஸ்துவின் மரணத்தைப்பற்றி கூறினர். அப்போது அந்தச் சீடர்களில் ஒருவனாகிய கிலோயேப்பா என்பவர் விரக்தியுடன், "அவரே இஸ்ரவேலைமீட்டு இரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம்." எனும் வார்த்தைகளைக் கூறுகின்றார். அதாவது அவரை நாங்கள் நம்பியிருந்தோம் அந்த நம்பிக்கை எங்களை ஏமாற்றியது என்பதுபோல உள்ளது அவரது பேச்சு. 

அன்பானவர்களே, நாமும் பலவேளைகளில் இதுபோல,  "நான் கடவுளே கதியென்று  அவரையே நம்பியிருந்தேன் ....எனது நம்பிக்கை பொய்யாகிவிட்டது" போன்ற அவிசுவாசம் கலந்த வார்த்தைகளைக் கூறுகின்றோம். 

இந்தச் சீடர்கள் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த செய்தியை ஏற்கனவே கேட்டிருந்தனர். ஆனால் அதனை  முற்றிலுமாக அவர்களால் நம்ப முடியவில்லை. எனவேதான் அவர்கள் கூறுகின்றனர், "ஆனாலும் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சில ஸ்திரீகள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய், அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்று சொன்ன தேவதூதரைத் தரிசித்தோம் என்று சொல்லி, எங்களைப் பிரமிக்கப்பண்ணினார்கள்." ( லுூக்கா 24 : 22, 23 )

இந்தச் சீடர்கள் இயேசு கிறிஸ்துவோடு மூன்றரை ஆண்டுகள் இருந்தவர்கள். அவர் செய்த பல்வேறு அற்புத அதிசயங்களை நேரில் கண்டவர்கள். ஆனாலும் அவர்களால் அவரது உயிர்த்தெழுதலை முற்றிலுமாக நம்ப முடியவில்லை. இதுபோலவே நாமும் பல அற்புதங்களை சாட்சியாக கேட்டிருந்தும் நமக்குப் பிரச்சனைகள் வரும்போது கலங்கி விடுகின்றோம். இந்தச் சீடர்கள் கூறியதுபோல, "ஆண்டவரே எனது பிரச்சனைக்குத் தீர்வு தருவார் என்று நம்பியிருந்தேன்" என்று அவிசுவாசமாகக் கூறிக் கலங்குகின்றோம். 

அன்பானவர்களே, இப்படி இருப்போமானால் இயேசு கிறிஸ்து சீடர்களைப் பார்த்துக் கூறியதுபோல நம்மைப்பார்த்தும் "தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே," ( லுூக்கா 24 : 25 ) என்று கூறுவார். 

எனவே, நமது இருதயம் மந்தமாகாமல் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். வேதாகமத்தில் நாம் வாசிக்கும் செய்திகள்,  பரிசுத்தவான்களின் அனுபவங்கள் என்றோ நடந்த ஓர் சம்பவமல்ல. இன்றும் அத்தகைய சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராகவே இருக்கின்றார்". (எபிரேயர் 13:8). எனவே கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசம் குறைந்திடாமல் காத்துக்கொள்வோம். 

"அவரையே நம்பியிருந்தோம்" என்று விரக்தியில் கூறாமல் "அவரையே நம்பியிருக்கிறோம்; அவரே  எங்களுக்கு ஜெயம் தருவார்" என்று  மகிழ்ச்சியுடன் உறுதியுடன் கூறுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்