பாரம்பரியங்களா, தேவனது வார்த்தைகளா?

ஆதவன் 🔥 889🌻 ஜூலை 05, 2023 புதன்கிழமை


"சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு." ( 1 தீமோத்தேயு 4 : 7 )



"உண்மை தனது கால் செருப்பை அணியுமுன் பொய்யானது உலகத்தையே சுற்றிவந்துவிடும்" என்று கூறினார் பிரபல சுவிசேஷகரும் நற்செய்தியாளரும் இறையியல் அறிஞருமான சார்லஸ் ஸ்பர்ஜன்.  இதுவே இன்று கிறிஸ்தவத்தில் நடந்துகொண்டிருக்கிறது.  பொய்யும், கட்டுக்கதைகளும் மேலோங்கி தேவனது வார்த்தைகளையும் தேவபக்தியையும் தடுப்பவையாக இருக்கின்றன.  பல்வேறு தவறான போதனைகள், செயல்பாடுகள் இவைகளுக்குக் காரணம் பாரம்பரியம் எனும் பல தவறான எண்ணங்களும் செயல்களும். இத்தகைய  "சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு." என்கிறார் அப்போஸ்தலரான பவுல். 

கிறிஸ்தவத்தில் உள்ள சபைப் பிரிவினைகளுக்கு ஒரு முக்கிய  காரணம் தேவனுடைய வார்த்தைகளைவிட பாரம்பரியத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவம்தான். ஆம், பாரம்பரியத்தைக் காப்பதற்காக நாம் தேவனது கட்டளைகளை அவமாக்குகின்றோம். இதனையே இயேசு கிறிஸ்து கண்டித்தார்.  "பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்கு தேவனுடைய கட்டளைகளை அவமாக்குகிறீர்கள்". ( மாற்கு 7 : 9 ) என்றார். 

ஒரு சட்டப் பிரச்னை ஏற்படுகின்றதென்றால் நாம் சட்ட புத்தகத்தைத்தான் பார்த்து நமது பிரச்சனைக்குத் தீர்வு காண்கின்றோம். இதுபோல நமது வேத புத்தகம்தான் நமக்குச் சட்டப் புத்தகம். ஏனெனில் வேத வார்த்தைகள் தேவனது வார்த்தைகள். இவை தேவனுடைய பரிசுத்த மனிதர்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டுப் பேசியவை. (2 பேதுரு 1:21)  எனவே இந்தத் தேவனுடைய வார்த்தைகள் தான்  நமக்கு இறுதித்தீர்வேத்  தவிர பாராம்பரியங்களல்ல.

கிறிஸ்தவத்திலுள்ள அனைத்துச் சபைப் பிரிவுகளிலும் இத்தகைய பல பாரம்பரியங்கள் உள்ளன. சில சபைகளில் இவை அதிகமாகவும் சில சபைகளில் சற்றுக் குறைவாகவும் பாரம்பரியங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. ஆவிக்குரிய சபைகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சபைகளிலும் இன்று பல்வேறு பாரம்பரியங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. 

இதனையே இயேசு கிறிஸ்து, "மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்." ( மாற்கு 7 : 7 ) என்கின்றார். 

அன்பானவர்களே, பாரம்பரியங்கள் நமக்கு பாவத்திலிருந்து விடுதலை தராது; நமக்கு இரட்சிப்பைத் தராது. தேவனுடைய வார்த்தைகளே நம்மை விடுவிக்கமுடியும். நாம் வேதாகமத்தை ஆழமாக வாசிக்கும்போது எந்தெந்த விதங்களில் நாம் பாரம்பரியத்துக்கு அடிமையாகியுள்ளோம் என்பது புரியும். எந்த ஒரு சபைப் பிரிவிலுள்ள குறிப்பிட்ட தவறான பாரம்பரியத்தையும் தனிப்பட்ட விதத்தில் குறிப்பிட்டு விளக்கவேண்டிய அவசியமில்லை. தேவன் நமக்குப் புத்தியைத் தந்துள்ளார். எனவே, நாமே அவைகளை நிதானித்து அறிந்துகொள்ளலாம். 

ஆம் இந்தப் பாரம்பரியங்களெல்லாம் சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாய் இருக்கிற கட்டுக்கதைகள். இவைகளைவிட்டு தேவபக்தியாய் வாழ முயற்சிபண்ணுவது அவசியம். தேவனது வார்த்தைகளுக்கு மட்டுமே முன்னுரிமைகொடுத்து நம்மை ஒப்புக்கொடுத்து வாழவேண்டியது அவசியம். அப்போதுதான் தேவனது ஆசீர்வாதங்களைப் பெறமுடியும்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                   

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்