ஆதவன் 🖋️ 689 ⛪ டிசம்பர் 17, 2022 சனிக்கிழமை
"விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்." ( எபிரெயர் 11 : 31 )
"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்." (யோவான் 3:16) இந்தத் தேவ அன்பினை உலகறியச்செய்வதே இணையத்தள நோக்கமாகும். தொடர்பு முகவரி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ், 18E1, திருச்சிலுவைக் கல்லூரிச் சாலை, புன்னை நகர், நாகர்கோவில் - 629 004. Cell-96889 33712 & 7639022747. 18E, Holy Cross College Road, Punnai Nagar, Nagercoil - 629 004, Kanyakumari District, India
ஆதவன் 🖋️ 689 ⛪ டிசம்பர் 17, 2022 சனிக்கிழமை
"விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்." ( எபிரெயர் 11 : 31 )
ஆதவன் 🖋️ 688 ⛪ டிசம்பர் 16, 2022 வெள்ளிக்கிழமை
ஆதவன் 🖋️ 687 ⛪ டிசம்பர் 15, 2022 வியாழக்கிழமை
ஆதவன் 🖋️ 686 ⛪ டிசம்பர் 14, 2022 புதன்கிழமை
"குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்." ( 1 யோவான் 5 : 12 )
ஒரு மனிதனுக்கு உயிர் இருக்கின்றதா இல்லையா என்பதை அவனது நாடித்துடிப்பினால் அறியலாம், சுவாசம் இருக்கின்றதா இல்லையா என்பதைக்கொண்டு அறியலாம். இதுபோல ஆவிக்குரிய மனிதர்கள் என்று கூறிக்கொள்வோர்களது நிலைமையினை எதனைக்கொண்டு அறிவது? உண்மையிலேயே அவர்கள் ஆவிக்குரிய உயிருள்ள வாழ்க்கை வாழ்கின்றார்களா இல்லை செத்த வாழ்க்கை வாழ்கின்றார்களா என்பதை எப்படிக் கண்டறிவது? இதனையே அப்போஸ்தலரான யோவான் இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் தெரியப்படுத்துகின்றார்.
அதாவது, "குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்." என்கின்றார். குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை வழிபடுபவர்கள் என்றோ, அவரை விசுவாசிக்கின்றோம் என்று கூறுபவர்கள் என்றோ அவருக்காகவோ அவரது ஆலயங்களுக்காகவோ பல்வேறு செயல்பாடுகளை செய்பவர்கள் என்றோ கூறாமல் "குமாரனை உடையவன்" என்று கூறுகின்றார்.
ஒரு பொருள் நமக்கு உடைமையாக இருக்கின்றது என்றால்தான் நமக்கு அது பெருமை. அதுபோல குமாரனாகிய கிறிஸ்துவை நமது உடைமை ஆக்கிக்கொள்வதில்தான் ஆவிக்குரிய ஜீவன் இருக்கின்றது. அப்படிக் கிறிஸ்துவை உடைமையாக்கிக் கொள்ளும்போது தான் அவர் நம்மில் நிலைத்திருப்பார்.
கிறிஸ்து நம்மில் நிலைத்திருப்பதை நாம் எப்படி அறிந்துகொள்ளலாம் என்பதையும் யோவான் பின்வருமாறு கூறுகின்றார்:- "அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்." ( 1 யோவான் 3 : 24 ) தேவனுடைய ஆவியானவர் நம்மில் நிலைத்திருக்கின்றார் என்பதை உறுதி செய்யும்போது அவர் நம்மில் நிலைத்திருக்கின்றதையும் நாம் அறிவோம். ஆம், அப்போதுதான் நாம் குமாரனை உடையவர்கள் ஆகி, ஜீவனுள்ளவர்களாவோம்.
தேவனுடைய ஆவியானவர் நம்மில் நிலைத்திருப்பதை நாம் ஆவிக்குரிய கனிகளின்மூலமே அறியமுடியும். "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை."( கலாத்தியர் 5 : 22, 23)
தேவனுடைய ஆவியானவர் நம்மில் இருப்பதை அலறி ஆர்ப்பரிப்பதனாலல்ல, மாறாக கனியுள்ள வாழ்க்கையினால் அறியலாம். சுருக்கமாகச் சொல்வதானால், ஆவிக்குரிய கனிகள் உள்ளவன் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைக் கொண்டிருந்து ஜீவனுள்ளவனாக இருப்பான், ஆவிக்குரிய கனியற்றவனோ கிறிஸ்து இல்லாத ஜீவனற்றவனாக இருப்பான்.
அன்பானவர்களே, வெறும் ஆராதனையோடு நின்றுவிடாமல் கனியுள்ள ஒரு வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம், ஜீவனுள்ளவர்களாக கிறிஸ்துவுக்குச் சாட்சியாக வாழ்வோம்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
ஆதவன் 🖋️ 685 ⛪ டிசம்பர் 13, 2022 செவ்வாய்க்கிழமை
"உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார் என்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 7 : 35 )
இந்த உலகம் ஏழ்மையானவர்களையும், அற்பமாக எண்ணப்படுபவர்களையும் மக்கள் செல்வாக்கு இல்லாதவர்களையும் அவர்களது சொல்லையும் எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. "இவன்தானே / இவள் தானே" எனும் ஏளனப் பார்வையே இதற்குக் காரணம். இது தற்போதுள்ள நிலைமையல்ல, காலாகாலமாக இதுதான் இந்த உலகத்தின் நிலை.
மோசேயையும் எபிரெயர்கள் அன்று அப்படிதான் எண்ணிக்கொண்டனர். எனவே சண்டையிட்டுக்கொண்டிருந்த இரண்டு எபிரேயர்களை மோசே கண்டு அநியாயம் செய்தவனை நோக்கி, "நீ உன் தோழனை அடிக்கிறது என்ன? " என்று கேட்டபோது அவன் மோசேயைப்பார்த்து, "உன்னை எங்கள்மேல் அதிகாரியாகவும் நியாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்?" என்று கேட்டான். (யாத்திராகமம் 2:13,14). ஆனால் தேவன் மோசேயை அப்படியே விட்டுவிடவில்லை. அந்த மோசேயையே அவர்களுக்குத் தலைவனாகவும் மீட்பனாகவும் ஏற்படுத்தினார்.
இன்று நமது ஊரில் அல்லது நாம் பணிசெய்யும் இடங்களில் நம்மையும் சிலர் இப்படி, "இவன் தானே / இவள்தானே" என எண்ணலாம். அல்லது மோசேயிடம் கூறியதுபோல நேரடியாகவே நம்மைப்பார்த்துக், "நீ என பெரிய யோக்கியனா?" என ஏளனமாகப் பேசலாம். காரணம், நாம் கூறும் நியாயங்கள் அநீதி செய்பவர்களுக்கு ஏற்புடையவை ஆகாது.
ஆனால் தேவன் நமது ஒவ்வொரு செயலையும் பார்த்துக்கொண்டிருக்கின்றார். நாம் படுகின்ற அவமானம், புறக்கணிப்பு இவைகளை அவர் அறிவார். நாம் தேவனோடு நெருங்கிய தொடர்புகொண்டு அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது தேவன் நிச்சயமாக நம்மைப் புறக்கணித்த மக்கள் மத்தியில் நம்மை தலை நிமிரச்செய்வார்.
புறக்கணிக்கப்பட்ட இந்த மோசேதான் அடிமைப்பட்டிருந்த மக்களை பிற்காலத்தில் விடுவித்து எகிப்தைவிட்டு கானானை நோக்கி வழி நடத்தினார். இதுபோல நாம் வாழும் சமூகத்தில் தேவன் நம்மை பிற்காலத்தில் உயர்த்திவைக்க நமது சிறுமைப்படுதல் அவசியமாயிருக்கின்றது. மனிதர்களைத் தேவன் பயன்படுத்துமுன் தனக்கு ஏற்புடையவர்கள் ஆக்கும்படி பல்வேறு துன்பங்களால் புடமிடுகின்றார். எனவே துன்புறும் மனிதர்களைப்பார்த்து நாம் அற்பமாக எண்ணிவிடக்கூடாது. தேவன் அவர்கள் பக்கம் இருந்து செயல்பட்டுக்கொண்டிருக்கலாம். அது நமக்குத் தெரியாது.
மோசேயைத் தேவன் உடனேயே உயர்த்திவிடவில்லை. மோசேயைப்பற்றி கூறப்பட்டுள்ள மேற்படி சம்பவம் நடைபெற்று நாற்பது ஆண்டுகளுக்குப்பின்னர்தான் தேவன் மோசேக்குத் தரிசனமாகி அவரை மக்களுக்குத் தலைவனாக ஏற்படுத்தினார்.
அன்பானவர்களே, நமது ஊரிலோ பணிசெய்யும் இடங்களிலோ நியாயமாகச் செயல்படும் அற்பமானவர்களை நாம் மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். ஆம், ஒருவேளை தேவன் அத்தகைய மனிதர்களோடு இருந்து செயல்பட்டுக்கொண்டிருப்பார். அற்பமாக, அவலட்சணமாகக் காணப்படும் புழுதான் பின்னர் அழகிய வண்ணங்களோடு சிறகடித்து வானில் பறக்கின்றது.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
ஆதவன் 🖋️ 684 ⛪ டிசம்பர் 12, 2022 திங்கள்கிழமை
"வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 3 : 6 )
இன்றைய உலகினில் மனிதன் எல்லாவற்றையுமே பணத்தினால் தான் எடைபோடுகின்றான். சாதாரண மனிதர்கள் இப்படி இருப்பதில் எந்த அதிசயமும் இல்லை, அவர்கள் அப்படிதான் இருப்பார்கள். ஆனால் இன்று கிறிஸ்தவ ஊழியத்திலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதால் பிற இன மக்கள்முன் கிறிஸ்தவம் அவமானப்படுத்தப்படுகின்றது.
ஊழியம் என்பது கிறிஸ்து தனது இரத்தத்தால் ஏற்படுத்திய மீட்பினை மக்களுக்கு அறிவிப்பதுதான். இதற்கு பெரிய அளவில் பணம் தேவையில்லை. ஆனால் சமீபத்தில் தமிழகத்தின் பிரபல ஊழியர் ஒருவரது மனைவி ஊழியத்துக்கு பணம் இல்லை என கண்ணீர்விட்டு அழாதகுறையாக பேசிய வீடியோ காட்சியொன்று அனைத்துச் சமூக ஊடகங்களிலும் உலாவந்தது. பிரபல ஊழியரான இவரின் தந்தையார் இறந்தபோது (அவரும் பிரபல ஊழியர்தான்) அடக்கச் செலவு மிக அதிகமாகிவிட்டது, எனவே பணம் தாருங்கள் என இறந்துபோன தகப்பனது உடலை வைத்துப் பணம் கேட்டார் மகன்.
பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரி என பல நிறுவனங்களை நடத்தும் இந்த ஊழியரது மனைவி சமீபத்தில் வெளியான வீடியோ காட்சியில்:- "எல்லோரும் எங்களைப் பணக்கார ஊழியர் எனக் கூறுகின்றனர்......அன்பானவர்களே, இது சரியல்ல, பணம் இருந்தாலும் நாங்கள் எவ்வளவு தான் கை காசை செலவழித்து ஊழியம்செய்ய முடியும்.? எங்களது ஊழியத் தேவை மிக அதிகம். அதிக அளவு பணம் எங்கள் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவேச் செலவாகின்றது...." என அழுகின்றார் அந்தப்பெண்மணி. சுமார் 15 நிமிடம் இதே ஒப்பாரிதான். பிற மத சகோதரர்கள் இதனை அதிகம் பகிர்ந்து கிறிஸ்துவை மீண்டும் சிலுவையில் அறைந்தார்கள்.
அன்பானவர்களே, இத்தகைய ஊழியர்களும் இவர்களை ஆதரிக்கும் ஏமாளி விசுவாசிகளும் கவனிக்கவேண்டிய வசனமே இன்றைய தியானத்துக்குரிய வசனம். அப்போஸ்தலரான பேதுரு மடி நிறைய பணத்தைக் கட்டிவைத்துக்கொண்டு ஊழியம் செய்யவில்லை. ஆனால், அவரது பிரசங்கத்தைக்கேட்டு மூவாயிரம், ஐயாயிரம் என கூட்டம் கூட்டமாக மக்கள் கிறிஸ்துவிடம் திரும்பினர்.
பேதுரு கூறுவது, "வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை" என்பது. ஆனால் அவர் கூறாமல் செயலில் காட்டியது, அவரோடு கிறிஸ்து இருந்தார் என்பதை. ஆம், அவரிடம் வெள்ளியும் பொன்னும் இல்லை மாறாக கிறிஸ்து இருந்தார். ஆனால் நேர் மாறானது இன்றைக்கு நடக்கின்றது. இவர்களிடம் வெள்ளியும், பொன்னும் டாலர்களும் மிக அதிகமாகவே இருக்கின்றன. ஆனால் கிறிஸ்துதான் இல்லை.
பணம் இல்லாவிட்டாலும் கிறிஸ்து தன்னிடம் இருந்ததால் அவரைக்கொண்டு பேதுரு முடவனை நடக்கச்செய்தார். "அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப்பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 3 : 16 ) எனத் தைரியமாக யூதர்களுக்குமுன் கிறிஸ்துவை அறிக்கையிட்டார். ஆனால் இன்றைய பிரபலங்களோ மக்களைக் குருடாக்கி படுகுழிக்குள் தள்ளுகிறார்கள்.
அன்பானவர்களே, இவர்களது மனக்கண்கள் திறக்கும்படி ஜெபிப்பது நமது அனைவரது கடமை. மட்டுமல்ல, பணமில்லாவிட்டாலும் நாம் எல்லோருமே நமது வாழ்க்கையால் கிறிஸ்துவின் பணியைச் செய்யமுடியும். ஆம், நமது சாட்சியுள்ள வாழ்க்கையே மேலான சுவிசேஷ அறிவிப்பு. நாமே அவரது நிருபங்களாய் இருக்கிறோம்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
ஆதவன் 🖋️ 683 ⛪ டிசம்பர் 11, 2022 ஞாயிற்றுக்கிழமை
"அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது." ( எபேசியர் 3 : 12 )
இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதால் நமக்குக் கிடைக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களில் முக்கியமான ஆசீர்வாதம் பற்றி இன்றைய தியானத்துக்குரிய வசனம் கூறுகின்றது.
பழைய ஏற்பாட்டுக்கால மக்கள் தேவனை வழிபட்டாலும் அவர்கள் ஒருவித பயத்தோடேயே வழிபட்டுவந்தார்கள். தேவனை அவர்கள் ஒரு கண்டிப்பான அதிகாரியைப்போல எண்ணினர். "ஒரு தாய் தேற்றுவதுபோல நான் உன்னைத் தேற்றுவேன்", "ஆறுகளைக் கடக்கும்போது உன்னோடு நானிருப்பேன்", "அக்கினியில் நடக்கும்போதும் வேகாதிருப்பாய்", "நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்", "உன்னை விடுவிக்கும்படி நான் உன்னோடே இருக்கிறேன்" என்று நூற்றுக்கணக்கான அன்பு வசனங்களைத் தேவன் அருளியிருந்தாலும் குறிப்பிட்ட சில தீர்க்கதரிசிகள் மட்டுமே அந்த அன்பை உணர்ந்து அனுபவித்துவந்தனர்.
பொதுவாகவே பழைய ஏற்பாட்டுக்கால மக்கள் தேவனது குரலுக்கு அஞ்சி ஒதுங்கினர்; தேவனது குரலைக் கேட்கப் பயப்பட்டனர். "மோசேயை நோக்கி: நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள்." ( யாத்திராகமம் 20 : 19 )
ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்தப் பயத்தை மாற்றினார். தேவன் ஒரு சிலரை மட்டும் தனிக் கவனம் செலுத்தி ஆதரிப்பவரல்ல. அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும் அனைவருக்குமே அவர் நெருக்கமாக உள்ளார்.
தேவன் நமது தகப்பன். தேவனை அப்பா என்று கூப்பிடும் வாய்ப்பினை இயேசு நமக்குத் தந்துள்ளார். இது பழைய ஏற்பாட்டுக்கால மக்கள் உணராதது. ஒரு உலகத் தகப்பனைபோலவும், அதற்கு மேலான தகப்பனாகவும் தேவன் இருக்கின்றார் எனும் அருமையான உண்மையினை இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுத்தந்துள்ளார். எனவேதான் அப்போஸ்தலரான் பவுல் அடிகள், "அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது." என்கின்றார்.
அதாவது கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தால் நமக்கு முதலில் தைரியம் ஏற்படுகின்றது. காரணம் அவர் நமது தகப்பன். இரண்டாவது, திடமான நம்பிக்கை ஏற்படுகின்றது. தேவன் தகப்பனாக இருப்பதால், நம்மை எந்தச் சூழ்நிலையிலும் நம்மைக் கைவிடமாட்டார் எனும் நம்பிக்கை. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த உலக வாழ்க்கைக்குப்பின் நாம் தேவனிடம் சேர்வோம் எனும் மேலான பாக்கியம் நமக்குக் கிடைக்கின்றது.
அன்பானவர்களே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் உயிருள்ள விசுவாசத்தோடு வாழ்வோம். இந்த விசுவாசமே நம்மை இரட்சிக்கும். இவ்வுலகு மற்றும் மறுமை இன்பத்தை பெற்று மகிழ்வோம்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
ஆதவன் 🖋️ 682 ⛪ டிசம்பர் 10, 2022 சனிக்கிழமை
"அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 24 : 25 )
அப்போஸ்தலரான பவுல் அடிகள் மேல் யூதர்கள் குற்றம் சுமத்தி அவர் ரோமையில் விசாரணைக் கைதியாக இருந்தபோது அவரிடம் பேலிக்ஸ் ராஜா விசாரணை செய்தான். பவுல் அப்போஸ்தலரது பதில்களும் மறுமொழிகளும் சுவிசேஷ அறிவிப்புகளாகவே வெளிவந்தன. பவுல் பேசிய பேச்சுக்களைக் கேட்டு பேலிக்ஸ் பயமடைந்தான் என்று இன்றைய தியானத்துக்குரிய வசனம் கூறுகின்றது.
உண்மையினை நேருக்குநேர் சந்திக்க பலரும் விரும்புவதில்லை. பேலிக்ஸ் ராஜாவும் அப்படியே இருந்தான். பவுல், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்தான் என்று வாசிக்கின்றோம். இந்த பயத்துக்குக் காரணம் என்ன? அவனிடம் நீதி, இட்சையடக்கம் போன்ற குணங்கள் இல்லை என்று பொருள்.
பொதுவாக மனிதர்களுக்குத் தங்களது குற்றங்கள் குறைகளையும் பாவங்களையும் பிறர் எடுத்துக்கூறுவது பிடிக்காது. அதிலும் ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களுக்கு தங்களைப் பிறர் குறைகூறுவது ஏற்கவே முடியாதது. ஆனால், அதனை ஏற்றுக்கொள்பவர்கள் தங்களது வாழ்க்கையினை மாற்றிக்கொள்ள வழியுண்டு. விசாரணைக் கைதியான பவுல் பேசிய பேச்சுக்கள் பேலிக்சை உள்ளத்தில் குத்தியதால் அவன் பயமடைந்தான். ஆனாலும் அவன் மனம் திரும்பவில்லை.
இன்று நான் எழுதும் வேதாகம தியானங்களைச் சில கிறிஸ்தவ ஊழியர்கள் விரும்புவதில்லை. சிலர் ஏதாவது தேவையற்ற விமரிசனங்களைச் சொல்வார்கள். ஆனால் நான் கவனித்த ஒரு விசயம், குறைகூறும் இந்த ஒருசில ஊழியர்கள் வாழ்க்கையில் நற்சாட்சி இல்லாதவர்கள். தனது மனைவியை ஒதுக்கி வைத்துவிட்டு தான் நடத்திய கடையில் பணிசெய்த பெண்ணை மனைவிபோல சேர்த்துவைத்துக்கொண்டு வாழ்பவர், நிதி மோசடி வழக்குகளில் சிக்கி நீதிமற்றத்துக்கும் வீட்டுக்குமாக அலைபவர், ரியல் எஸ்டேட் நடத்துவதாகக் விளம்பரம் செய்து பொய்களைக்கூறி ஒன்றுக்கும் உதவாத நிலத்தை அடுத்தவர் தலையில் கட்டிவிட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்பவர்..... இவர்களே.
இதுபோன்ற செயல்பாடுகளைக் கொண்டவர்களுக்கு வேத வசனங்கள் கசக்கவேச் செய்யும். எப்போதும் ஆசீவாத வசனங்களையே கூறிக்கொண்டிருந்தால் பாராட்டுவார்கள். அப்போஸ்தலரான பவுல் பேசிய வார்த்தைகள் இதுபோலவே பேலிக்ஸ் ராஜாவை அச்சுறுத்தின. எனவே அவன், "நீ போகலாம், எனக்குச் சமயம் கிடைக்கும்போது உன்னை அழைப்பேன்" என்று கூறி அனுப்பிவிட்டான்.
அன்பானவர்களே, தேவன் எல்லோரும் மனம் திரும்பவேண்டுமென்று விரும்புவதால் பொறுமையோடு காத்திருந்து பல்வேறு விதமாகத் தன்னை மக்களுக்கு வெளிப்படுத்துகின்றார். அந்தச் சந்தர்ப்பங்களை நாம் பயன்படுத்தாமல் பேலிக்ஸ் ராஜாவைப்போல, "எனக்குச் சமயம் கிடைக்கும்போது பேசலாம், நீ போ " என உதறிவிட்டோமானால் இரட்சிப்பு அனுபவத்தை நாம் பெறமுடியாது. "அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்." ( 2 கொரிந்தியர் 6 : 2 )
குறிப்பிட்ட சில வேத வசனங்களைக் கேட்கும்போது நமக்கு எரிச்சலோ, கோபமோ பயமோ வருகின்றது என்றால் நம்மிடம் ஏதோ குறை இருக்கின்றது என்று பொருள். வசனத்தின்மேலோ, அதனைக் கூறுபவர் மேலோ கோபம் கொள்ளாமல் நம்மை ஆராய்ந்துபார்த்து தேவனிடம் மன்னிப்புக் கேட்டு மனம் திரும்புவோம்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
ஆதவன் 🖋️ 681 ⛪ டிசம்பர் 09, 2022 வெள்ளிக்கிழமை
"மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்." ( கலாத்தியர் 6 : 7 )
வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பது தமிழ் பழமொழி. அதாவது நாம் பிறருக்கு என்னச் செய்கின்றோமோ அதுவே நமக்கும் நடக்கும் என்று பொருள். முட்செடியின் விதையினை விதைத்துவிட்டு நல்ல அத்திப்பழங்களை அவை தரும் என்று எதிர்பார்க்க முடியாது.
ஆவிக்குரிய வாழ்க்கையும் இதுபோலவே இருக்கின்றது. எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்." ( கலாத்தியர் 6 : 8 ) என்று கூறுகின்றார்.
இந்த உலக ஆசீர்வாதங்களுக்காகவே நாம் உழைத்துக்கொண்டிருந்தால் ஒருவேளை அவை நமக்குக் கிடைக்கலாம். ஆனால் அவற்றின் முடிவு அழிவு. நமது உழைப்பினால் இந்த உலகத்தையே ஆதாயமாக்கிக் கொண்டாலும் நமது ஆத்மாவுக்கு எந்த பயனும் இல்லை. அது அழிவுக்குநேராகவே நம்மைக் கொண்டு செல்லும். எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?" ( மத்தேயு 16 : 26 ) என்று.
ஆவிக்கென்று விதைப்பது என்பது, ஆவிக்குரிய காரியங்களுக்கு முன்னுரிமைகொடுத்து நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள நாம் செய்யும் செயல்பாடுகளைக் குறிக்கின்றது. பாவத்துக்கு விலகி, பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி நடப்பது.
நமது சிந்தனையே செயலாக மாறுகின்றது. மாமச சிந்தை கொண்டிருந்தோமானால் மாம்ச காரியங்களையே செய்வோம். ஆவிக்குரிய சிந்தை நமக்கு இருக்குமானால் ஆவிக்குரிய செயல்களைச் செய்து ஆவிக்குரிய மக்களாக வாழ்வோம். "அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்." ( ரோமர் 8 : 5 ) என எழுதுகின்றார் அப்போஸ்தலரான பவுல்.
அன்பானவர்களே, நமது வாழ்கையினையும் செயல்பாடுகளையும் சிந்தித்துப் பார்ப்போம். நமது சிந்தனைகளும் செயல்களும் எப்படியுள்ளன ?
முற்றிலுமாக உலக ஆசைகொண்டு அலைந்துவிட்டு நாம் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை எதிர்பார்க்க முடியாது. காரணம், மாம்சத்துக்கென்று உழைப்பதால் ஆவிக்குரிய வாழ்வை இழந்து நாம் அழிவுக்குநேராகவே செல்வோம். ஆனால் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்கு உழைக்கும்போது தேவன் உலக ஆசீர்வாதங்களையும் சேர்த்துத் தருவார். "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6 : 33 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா?
ஆவிக்கென்று விதைப்போம், ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வோம்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
ஆதவன் 🖋️ 680 ⛪ டிசம்பர் 08, 2022 வியாழக்கிழமை
"சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் எங்களை உத்தமரென்றெண்ணினபடியே, நாங்கள் மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்." ( 1 தெசலோனிக்கேயர் 2 : 4 )
இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் அடிகள் இரண்டுவித சுவிசேஷ அறிவிப்புகளைக் கூறுகின்றார். ஒன்று, மனிதர்களைப் பிரியப்படுத்தும் விதமாக பேசி தவறாக மக்களை வழிநடத்துதல். இரண்டு, தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுதல்.
உதாரணமாக, மனிதர்களைப் பிரியப்படுத்தப் பேசுதல் என்பது, மனம் திரும்பாத ஒரு மனிதனிடம் இரட்சிப்புக்கேற்ற வார்த்தைகளைப் பேசி சத்தியத்தை உணர்த்தாமல் "கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.." என்று ஆறுதல் வார்த்தைகளைக் கூறுவது, அல்லது அத்தகைய மனிதர்கள் அளிக்கும் காணிக்கைகளை மகிழ்வோடு பெற்றுக்கொண்டு, "கர்த்தர் உங்களை பத்து மடங்காக ஆசீர்வதிப்பார்" என்பது, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயர்களை எங்களது குடும்ப ஆசீர்வாத திட்டத்தில் இணைத்தால் நாங்கள் உங்களுக்காகத் தினமும் ஜெபிப்போம் என்பது...இத்தகைய முறைமைகள் மனிதர்கள் கடைபிடிக்க எளிமையானவை. எனவே இவற்றுக்கு மக்களது ஆதரவு அதிகம் கிடைக்கும். இத்தகைய போதனைகளைக் கொடுக்கும் ஊழியன் மக்களால் அதிகம் விரும்பப்படுவதால் இவர்களுக்குக் கூட்டமும் அதிகம் சேரும்.
தேவனுக்குப் பிரியமானவைகளைப் பேசுதல் என்பது, பாவத்திலிருந்து மனம் திரும்புதல், ஆத்தும இரட்சிப்பு, நித்திய ஜீவன் இவைகளைக்குறித்துப் பேசி மக்களை வழி நடத்துதல். இத்தகைய போதனைகளை தேவனுக்கு உத்தமமும் பிரியமுமான போதகர்களால்தான் போதிக்கமுடியும். எனவேதான் பவல் இன்றைய தியான வசனத்தின் துவக்கத்தில் " சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் எங்களை உத்தமரென்றெண்ணின படியே" என்று கூறுகின்றார். ஆனால், பெரும்பாலான மக்கள் இத்தகைய போதனைகளை விரும்புவதில்லை. இவற்றை போதிக்கும் ஊழியர்களுக்கு மக்கள்கூட்டம் சேர்வதுமில்லை.
அன்பானவர்களே, ஒரு ஊழியர் எத்தகைய விதமாக பிரசங்கிக்கிறார் என்பதைக் கவனித்து அந்த மனிதன் தேவனுக்கு உகந்தவனாகப் பேசுகின்றானா அல்லது மனிதர்களைத் திருப்திப்படுத்த பேசுகின்றானா என்பதை நிதானிக்கக்கூடிய அறிவு நமக்கு வேண்டும். இன்று பல விசுவாசிகள் வேதாமத்தை வாசிப்பதே இல்லை. வாசித்தாலும் கடமைக்காக வேதாகமத்தைத் திறந்து குறிப்பிட்ட ஒரு சில வசனங்களை வாசிப்பவர்களாக இருக்கின்றனர். இத்தகைய மனிதர்களால் ஊழியர்களை அவர்களது போதனையின் அடிப்படையில் இனம்காண முடியாது.
வேதாகம வார்த்தைகள் நம் அன்பின் ஆண்டவர் நமக்கு எழுதிக்கொடுத்த வார்த்தைகள். அவற்றை தேவ அன்போடு, அவரை இன்னும் இன்னும் அதிகமாக அறியவேண்டுமெனும் ஆர்வத்தில் வாசிக்கும்போதுதான் நாம் சத்தியத்தை அறிய முடியும். போலிகளையும் மனிதர்களைத் திருப்திப்படுத்த போதிப்பவர்ளையும் இனம்காண முடியும்.
மனிதர்களைப் பிரியப்படுத்தப் போதிக்கும் போதனைகளை கேட்டு வாழ்ந்தோமானால் ஆத்தும மரணத்தையும் தேவனுக்குப் பிரியமான போதனைகளைப் போதிக்கும் ஊழியர்களது போதனைகளைக் கேட்டு நடந்தோமானால் நித்திய ஜீவனையும் பெறுவோம்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
ஆதவன் 🖋️ 679 ⛪ டிசம்பர் 07, 2022 புதன்கிழமை
"அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்" ( கலாத்தியர் 1 : 4 )
இயேசு கிறிஸ்து எதற்காகச் சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்டார் என்பதனை இன்றைய தியானத்துக்குரிய வசனம் விளக்குகின்றது.
இந்தஉலகத்தில் வாழும் நாம் பல்வேறு பாவத் தளைகளில் சிக்கித் தவிக்கின்றோம். இந்தப் பாவக் கட்டுகளிலிருந்தும் உலக ஆசாபாசங்களிலிருந்தும் நாம் விடுதலையாகி பரிசுத்தர்களாக மாறி உன்னத ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்துக்கொள்ளவேண்டும். இது மனித முயற்சியால் கூடாதது. பாவங்கள் மன்னிக்கப்பட்டு நாம் பரிசுத்தமாகவேண்டுமென்றால் இரத்தம் சித்தியாகவேண்டும். அதுவும் பரிசுத்த இரத்தம் சிந்தப்படவேண்டும்.
"நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது." ( எபிரெயர் 9 : 22 ) பழைய ஏற்பாட்டு முறைமைகளில் பாவ மன்னிப்புக்காக காளைகளும் ஆடுகளும் பலியிடப்பட்டன. ஆனால் மிருகங்களின் இரத்தம் மனிதர்களை முற்றும் கழுவி சுத்திகரிக்கமுடியாதவை. எனவேதான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பாடுபட்டு மரித்து உயிர்த்து தனது சுய இரத்தத்தால் பாவமன்னிப்பை உண்டாக்கினார்.
இந்தநாளில் ஆசீர்வாதங்களையே போதிக்கும் போலி ஊழியர்கள் இருப்பதுபோல அந்தக் காலத்தில் நியாயப்பிரமாணத்தைப் பிரதானமாய்ப் போதித்து கிறிஸ்து பாடுபட்டு தனது கிருபையால் உண்டாக்கிய மீட்பினை மறுதலிக்கும் ஊழியர்கள் இருந்தனர். இத்தகைய ஊழியர்கள் கலாத்தியா சபையின் மக்களைக் குழப்பி வந்தனர். நியாயப்பிரமாண கட்டளைகளையே பிரதானப்படுத்தி அவர்கள் போதித்தனர். இதனையே அப்போஸ்தலரான பவுல் "வேறொரு சுவிசேஷம்" என்று குறிப்பிடுகின்றார். அத்தகைய சுவிசேஷம் வேத புரட்டாகும்.
எனவேதான் பவுல் அடிகள் அந்த மக்களுக்கு எழுதும்போது, "வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல." ( கலாத்தியர் 1 : 7 ) என்று எழுதுகின்றார்.
கிறிஸ்துவின் இரத்தத்தால் உண்டாக்கப்பட்ட மீப்பினை அறிவிக்காமல் வேறு என்ன நற்போதனைகளை செய்தாலும் அவை போலி சுவிசேஷ அறிவிப்புகள்தான். அவை வேறொரு சுவிசேஷமாகும். அவற்றுக்குச் செவிகொடுக்கும்போது நாம் கிறிஸ்துவின் இரத்தத்தை அவமதிக்கின்றோம்.
கிறிஸ்து நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார் என்பதே சுவிசேஷம். இதுவே அடிப்படை சத்தியம். இந்த அடிப்படை இல்லாத சுவிசேஷ அறிவிப்புகள் அடித்தளமில்லாத கட்டிடங்களைப்போலானவை.
இந்தச் சத்தியத்தினை ஏற்றுக்கொண்டு வாழ்வதே கிறிஸ்தவ வாழ்வு. வேறொரு சுவிசேஷம் இல்லை. அப்படி வேறொரு சுவிசேஷத்தை அறிவிப்பவனே கிறிஸ்துவுக்குப் பகைஞனும் எதிரியும்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712