இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Wednesday, December 21, 2022

இயேசு கிறிஸ்து நமக்குத் தந்த வாக்குத்தத்தம்.

ஆதவன் 🖋️ 694 ⛪ டிசம்பர் 22,  2022 வியாழக்கிழமை

"நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். உங்களை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன்." ( 1 யோவான்  2 : 25,26 )

இயேசு கிறிஸ்து உலகினில் வந்தபோது பல்வேறு சமயங்களில் பல்வேறு வாக்குத்தத்தங்களைக் கொடுத்தார். ஆனால் அவை அனைத்துமே நித்திய ஜீவனை நாம் அடைந்திடவேண்டும் என்பதற்காகவே. நித்திய ஜீவனை மக்களுக்கு அளிப்பதே கிறிஸ்துவின் நோக்கம். அதற்கான வழியைக் காண்பிக்கவே அவர் உலகினில் வந்தார். எனவேதான் அப்போஸ்தலனாகிய யோவான், நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதும் ஒரு வாக்குத்தத்தம் என்று கூறாமல்,  "நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்." என்கின்றார். அதாவது அது ஒன்றுதான் இயேசு கிறிஸ்து நமக்குத் தந்த வாக்குத்தத்தம். 

நமது தேவன் வெறுமனே வாக்குத்தத்தங்களைக் கொடுத்துவிட்டு மறந்துவிடுபவரல்ல. அவற்றை எப்படியாவது நிறைவேற்றிட வல்லவர். வானமும் பூமியும் மாறினாலும் தேவனுடைய வார்த்தைகள் மாறுவதில்லை. எனவேதான் அப்போஸ்தலரான பவுலும், "எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே." ( 2 கொரிந்தியர் 1 : 20 ) என்கின்றார்.

தேவனுக்குத் தான் படைத்த மக்களோடு உடன்படிக்கை பண்ணவேண்டிய அவசியம் கிடையாது. ஆனால், மனிதர்கள்மேல் அன்பு கொண்டுள்ளதால் அவர் மனிதர்களோடு உடன்படிக்கை பண்ணுகின்றார். முதலில் நோவாவோடு உடன்படிக்கை பண்ணினார். பின்னர் ஆபிரகாமோடு உடன்படிக்கைபண்ணினார்.  அவற்றை நிறைவேற்றவும் செய்தார். 

"நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்.....உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்." ( ஆதியாகமம் 17 : 4 & 6 ) என்ற வாக்குத்தத்தத்தின்படி ஆபிரகாம் மிகப்பெரிய மக்கள் கூட்டமாக; ஒரு தேசமாகவே  மாறினான்.

"நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன்". ( ஆதியாகமம் 17 : 8 ) என்ற வாக்குத்தத்தின்படி கானான் தேசத்தை ஆபிரகாமின் சந்ததிற்குக் கொடுத்தார். 

இதே வாக்குமாறாத தேவனே இன்றைய வசனத்தில் கூறியுள்ளபடி, "நித்தியஜீவனை அளிப்பேன்" என்கின்றார். இதனை எழுதிய அப்போஸ்தலரான யோவான் தொடர்ந்து எழுதுகின்றார், "உங்களை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியுள்ளேன்". ஆம், இயேசு கிறிஸ்து கூறிய நித்திய ஜீவனைப் பிரசித்திப்படுத்தாமல்  வேறு உலக ஆசீர்வாதங்களைப்  போதிக்கும் போதகர்களே  வஞ்சிக்கிறவர்கள். இத்தகைய வஞ்சிக்கும் போதகர்களே  இன்று உலகில் அதிகமாக உள்ளனர். 

அன்பானவர்களே, எச்சரிக்கையாக இருப்போம். கிறிஸ்துவின் வாக்குத்தத்தத்தை மறுதலிக்கும் வஞ்சக போதனைகளுக்கு விலகி நம்மைக் காத்துக்கொவோம். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712


Tuesday, December 20, 2022

ஞானத்தின் ஆரம்பம்

ஆதவன் 🖋️ 693 ⛪ டிசம்பர் 21,  2022 புதன்கிழமை

"கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது." ( நீதிமொழிகள் 19 : 23 )

கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது கர்த்தருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழவேண்டும் எனும் எண்ணத்தில் நாம் செயல்படுவதையே குறிக்கின்றது. உலக மனிதர்கள் தங்கள்  உயர் அதிகாரிகளுக்கோ, மாணவன் ஆசிரியருக்கோ, திருடர்கள் காவலர்களைக்கண்டோ பயப்படுவதுபோன்ற பயமல்ல. இது கர்த்தர்மேலுள்ள அன்பால் நாம் அவருக்குப் பிரியமான வாழ்க்கை வாழ்வது. கர்த்தருக்கு நாம் இப்படிப் பயப்படும்போதே நாம் ஞானிகள் ஆகின்றோம். அதாவது தேவனை அறிந்து கொள்கின்றோம்.

"கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்." ( சங்கீதம் 111 : 10 ) என்கின்றார் சங்கீத ஆசிரியர்.  இப்படிக்  கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; என்று கூறும் இன்றைய தியான வசனம், அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது என்றும் கூறுகின்றது. 

இதனையே சங்கீத ஆசிரியர், "எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது." ( சங்கீதம் 91 : 9, 10 ) என்றும் கூறுகின்றார்.

அன்பானவர்களே, இன்று நாம் எல்லோருமே தீமை நம்மை அணுகக்கூடாது என்றுதான் ஜெபிக்கின்றோம். ஆனால் அப்படி ஜெபித்தால் மட்டும் போதாது கர்த்தருக்குப் பயப்படும் பயம் நமக்கு வேண்டும். இன்று ஜெபத்தை வலியுறுத்தும் ஊழியர்கள் அதிகம். எதற்கெடுத்தாலும்  "ஜெபியுங்கள், ஜெபியுங்கள்" என்று மக்களுக்கு அறிவுரைகூறும் பலரும் நடைமுறை வாழ்க்கையில் நாம் எப்படி இருக்கவேண்டுமென்று கூறுவதில்லை. ஆம், ஜெபிப்பதையும் , வேதம் வாசிப்பதையும் வலியுறுத்துகின்றனர் ஊழியர்கள். இவைகளைக் கடைபிடிப்பது எளிது. ஆனால் வாழ்க்கை எனும் சிலுவை சுமக்கும் அனுபவம் நேர்மையான வாழ்க்கையில் அடங்கியுள்ளது. 

இப்படிக் கூறுவதால் ஜெபிக்கவேண்டாமென்றோ வேதம் வாசிக்கவேண்டாமென்றோ பொருளல்ல. (இன்று பலரும் இப்படி குறுகிய கண்ணோட்டத்துடன் நான் சொல்வதைத் தவறுதலாக புரிந்துகொள்கின்றனர்). ஜெபிக்கவேண்டியது நமது சுவாசம்போல. ஜெபிக்காத ஆவிக்குரிய வாழ்க்கை ஜீவனில்லாதது. ஆனால் அந்த ஜெபம் நான் முதலில் கூறியதுபோல கர்த்தருக்குப் பயப்படும் ஞானத்துடன் கூடிய ஜெபமாக இருக்கவேண்டும். நூறு சதவிகித உலக ஆசைகளுக்காக ஜெபித்துவிட்டு, நானும் ஜெபிக்கிறேன் என்று திருப்தி அடைவது ஏற்புடைய ஒன்றல்ல.  

கர்த்தருக்குப் பயப்படும் வாழ்க்கை வாழ்வோம்;  அப்போது ஜீவனைக் கண்டடைவோம். அதைக் கண்டால்  திருப்தி அடைந்து சமாதானத்துடன் நிலைத்து நிற்போம்; தீமை நம்மை அணுகாது. 


தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712


Monday, December 19, 2022

லோத்தின் மனைவி

ஆதவன் 🖋️ 692 ⛪ டிசம்பர் 20,  2022 செவ்வாய்க்கிழமை

"உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ." ( ஆதியாகமம் 19 : 17 )

சோதோம் கொமோரா நகரங்கள் மிகப்பெரிய விபச்சார பாவத்தில் இருந்ததால் தேவன் அந்த நகரங்களை அழிக்கத் தீர்மானித்தார். ஆனால் அந்த நகரத்தில் லோத்து குடும்பத்தோடு இருந்ததால் தேவன் அந்த நாகரத்தை அழிக்குமுன் லோத்துவை அந்த நகரத்திலிருந்து வெளியேற்ற தனது தூதர்களை அனுப்பினார். காரணம் லோத்து அந்த நகரத்தின் பாவங்களுக்கு உடன்படவில்லை. "நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க" ( 2 பேதுரு 2 : 8 ) என்கின்றார் அப்போஸ்தலரான பேதுரு. 

அந்தத் தூதர்கள் லோத்துவிடம் கூறிய வார்த்தைகளே இன்றைய தியானத்துக்குரிய வார்த்தைகள். 

இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள காரியங்கள்,  முதலாவது ஜீவன் தப்ப ஓடிப்போ என்பதாகும். அதாவது உன் உயிர் தப்பிப்பிழைக்க வேண்டுமானால் இங்கிருந்து ஓடிப்போ என்பதாகும். இன்று இந்த வார்த்தைகள் நமக்கும் பொருந்துவனவாகும். நாம் நமது ஆத்துமாவைக் காத்துக்கொள்ள வேண்டுமானால் பாவ காரியங்களுக்கு விலகி ஓடவேண்டியது அவசியம். சோதோம் கொமோரா நகரங்களில் மிகுதியாக இருந்த பாவங்கள் வேசித்தனமும் விபச்சாரமுமாகும். இவையே தேவன் அருவருக்கும் மிக முக்கிய பாவங்கள். 

எனவேதான் அப்போஸ்தலரான பவுலும் இவைகளுக்கு விலகி ஓடச் சொல்கின்றார். "வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்" (1 கொரிந்தியர் 6 : 18 ), " "விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்." ( 1 கொரிந்தியர் 10 : 14 ) என்கின்றார் அவர். ஆம், நாம் பாவத்துக்கு விலகி யோசேப்பைபோல ஓடவேண்டியது அவசியம். 

இன்றைய வசனத்தில் கூறப்பட்டுள்ள அடுத்த காரியம், "பின்னிட்டு பாராதே"  என்பதாகும். பாவகாரியங்களுக்கு விலகி ஓடியபின் அவைகளை மறந்துவிடவேண்டும். திரும்பிப்பார்த்தோமானால் பாவம் நம்மை மீண்டும் இழுத்து படுகுழியில் தள்ளிவிடும். 

அடுத்து, "இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே" என்று கூறப்பட்டுள்ளது. இது தயங்கி நிற்கும் செயலாகும். நாம் பாவத்தைத் திரும்பிப் பார்க்காமல் இருக்கலாம் ஆனால் தயங்கி நின்றுவிடக்கூடாது. பாவத்தைவிட்டு ஓடும் ஓட்டத்தை நிறுத்திவிடக்கூடாது. நிற்போமானால் நாம் மீண்டும் பாவத்தில் வீழ்வது உறுதி. 

இறுதியாகக் கூறப்பட்டுள்ள வார்த்தைகள், "நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ" என்பதாகும். ஆம் நாம் பாவத்தால் அழியாமல் இருக்கவேண்டுமானால் கல்வாரி மலைக்கு ஓடி அடைக்கலம் புகுந்திடவேண்டும். 

பாவம் நம்மைச் சூழ்ந்து நாம் பாவத்தால் ஜெயிக்கப்படுவோம் எனும் சூழ்நிலை ஏற்படும்போது ஜீவன் தப்ப ஓடி, பின்னிட்டுப் பாராமால், தயங்கி நில்லாமல், அழியாதபடிக்கு கல்வாரி நாதரை சரணடையவேண்டியதே நாம் செய்யவேண்டியது. தயங்கி நின்று பின்னிட்டுப் பார்ப்போமானால் லோத்தின் மனைவியைப்போல உப்புத்தூணாகிவிடுவோம் (அழிந்துவிடுவோம்) . எனவேதான்,  "லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்." ( லுூக்கா 17 : 32 ) என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712


Sunday, December 18, 2022

ஆவியானவரின் அபிஷேகத்துக்காக நாம் அதிகம் ஜெபிக்கவேண்டியுள்ளது.

ஆதவன் 🖋️ 691 ⛪ டிசம்பர் 19,  2022 திங்கள்கிழமை

"பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள்.
( 1 யோவான்  2 : 28 )

இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு இனிமேல் வரும்போது அவரைக்கண்டு பயப்பட்டு வெட்கப்பட்டு நாம் கைவிடப்பட்டவர்களாய்ப்  போய்விடக்கூடாது என இன்றைய தியான வசனத்தில் நமக்கு அறிவுறுத்துகின்றார் அப்போஸ்தலராகிய யோவான். நமது பள்ளிக்கு ஆய்வாளர் (Inspector) வரப்போகின்றார் என்று தெரிந்தால் நாம் எவ்வளவு கவனமாக ஏற்பாடுகளைச் செய்வோம்!!. அப்படி அவர் வரும்போது ஒரு பயம் எல்லோருக்கும் இருக்கும். அப்படி பயப்படும்போது தெரிந்த கேள்விக்குக்கூட நம்மால் சரியாகப் பதில் கூறமுடியாது. நம்மிடம் ஆய்வாளர்  ஒரு சாதாரண கேள்வியைக் கேட்கும்போது  அதற்குப் பதில்சொல்லத் தெரியாமல் நாம் இருந்தால் எவ்வளவு வெட்கப்படுவோம்!!

நாம் கிறிஸ்து வரும்போது அப்படி பயந்து வெட்கத்துக்குள்ளாகிவிடக்கூடாது; நரகத்தின் மக்களாகிவிடக்கூடாது. நாம் அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது நமக்குப் பயம் வராது; மாறாக அவரை எதிர்பார்த்திருந்து அவர் எப்போது வருவார் என ஆவல்கொள்ளச்செய்யும்.  

இன்றைய தியானத்துக்குரிய வசனத்தின் முந்தின வசனத்தில் அப்போஸ்தலரான யோவான், "நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக." ( 1 யோவான்  2 : 27 ) என்கின்றார்.

அதாவது தேவனைச் சார்ந்து பரிசுத்த ஆவியானவரின் துணையையே விசுவாசமாய் ஏற்றுக்கொண்டு அபிஷேகத்தோடு வாழ்வோமானால்,  அனைத்தையும் அவரே நமக்கு உணர்த்திப் போதித்து  நம்மை வழி நடத்துவார். அதன்படி நாம் நிலைத்து வாழவேண்டும். அப்படி நிலைத்திருப்போமானால், அவர் வரும்போது பயப்படமாட்டோம்; வெட்கப்படமாட்டோம்.

அன்பானவர்களே, நாம் அதிகமாக பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்துக்காக ஜெபிக்கவேண்டியது அவசியம். ஏனெனில் சபைப் போதகர்களல்ல, ஆவியானவரே நம்மைச் சத்தியமான பாதையில் நடத்திட முடியும். "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." ( யோவான் 16 : 13 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி வாழும்போது மட்டுமே நாம் அவர் வெளிப்படும்போது அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாய் இருக்கமுடியும். எனவேதான் ஆவியானவரின் அபிஷேகத்துக்காக நாம் அதிகம் ஜெபிக்கவேண்டியுள்ளது. 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712


Saturday, December 17, 2022

ஒருநாள் கூத்து அல்ல

 ஆதவன் 🖋️ 690 ⛪ டிசம்பர் 18,  2022 ஞாயிற்றுக்கிழமை

"தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்."( யூதா 1 : 21 )

இன்று பலரும் பாவ மன்னிப்பு அனுபவத்தைப் பெற்றுக்கொண்டவுடன் நேராக நித்தியஜீவனுக்குத் தாங்கள் தகுதிப்பட்டுவிட்டதாக எண்ணிக்கொள்கின்றனர். குறிப்பாக  பல பெந்தேகொஸ்தே சபை விசுவாசிகள் இப்படி இருக்கின்றனர். இத்தகைய மனிதர்களது சுவிசேஷ அறிவிப்புகள் விகற்பமாக இருக்கும். இவர்கள் தங்களை பரலோகத்துக்குத் தகுதியானவர்கள் எனவும் மற்றவர்கள் எல்லோரும் நரகத்தின் மக்கள் எனவும் எண்ணிக்கொள்கின்றனர். 

ஒருமுறை நண்பர் ஒருவரது வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அங்கு ஒரு பெந்தேகொஸ்தே சகோதரர் சுவிசேஷம் அறிவிக்க வந்தார். வந்தவுடன் அவர் நண்பரின் மனைவியிடம், "சிஸ்டர்.....நீங்க பரலோகத்துக்குப் போகவேண்டாமா?" என்று ஆரம்பித்தார். நண்பரின் மனைவி கூலாக, "உங்ககிட்ட  இன்னும் எத்தன  டிக்கெட் இருக்கு?" என்றார்.   அந்தச் சகோதரர் இப்படியொரு பதிலை  எதிர்பார்க்காததால் திகைத்துவிட்டார். நண்பரின் மனைவியின் கேள்வி அவரைப் பதில் சொல்லமுடியாதபடி வாயை அடைத்துப்போட்டது. 

அன்பானவர்களே, ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறினார், இறுதிவரை நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான்" என்று. இரட்சிக்கப்படுவது ஒருநாள் அனுபவமல்ல, மாறாக அன்றாடம் சிலுவை சுமக்கும் அனுபவம். மட்டுமல்ல,  தேவனுடைய அன்பிலே நம்மைக்  காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருக்க வேண்டும் என்கின்றார் அப்போஸ்தலரான யூதா இன்றைய தியான வசனத்தில்.. 

கிறிஸ்துவின் இரகத்தைப் பெறுவதற்குக் காத்திருக்கவேண்டும். அதாவது நம்மில் தேவ அன்புள்ளவர்களாய் பொறுமையாய்  வாழ்ந்து வரவேண்டும். தேவ அன்பு நம்மில் இருக்குமேயானால் நாம் யாரையும் அற்பமாக எண்ணமாட்டோம், யாரையும் நரகத்தின் மக்கள் என்று நியாயம்தீர்க்கமாட்டோம். 

இரட்சிப்பு எனும் புத்திரசுவிகாரமும் நித்திய ஜீவனும்  என்றோ ஒருநாள் பெற்ற பாவ மன்னிப்பு அனுபவத்தினால் கிடைப்பதல்ல; அது ஒரு தொடர் அனுபவம்.  எனவேதான் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்." ( ரோமர் 8 : 23 ) ஆம் அது காத்திருந்து, தவித்து பெறவேண்டிய அனுபவம்.

மற்றவர்களை அற்பமாக எண்ணி, தாங்கள் பரலோகத்துக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகிவிட்டோம் எனக் கருதிக்கொள்பவர்கள் தங்கள் மன மேட்டிமையை அறிக்கையிட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருக்க வேண்டியது அவசியம்.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Friday, December 16, 2022

ஆயக்காரரும் வேசிகளும் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள்

 ஆதவன் 🖋️ 689 ⛪ டிசம்பர் 17,  2022 சனிக்கிழமை

"விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்." ( எபிரெயர் 11 : 31 )


பொதுவாகவே நாம் அனைவருக்கும் விபச்சாரத் தொழில் செய்யும் பெண்கள்மேல் ஒரு வெறுப்பும் அருவருப்பும் தோன்றக்கூடும்.  அவர்களைக்குறித்து நாம் எண்ணும் எண்ணங்கள் அவர்களது தொழிலைப்பற்றி வெளிப்டையாகத் தெரிவதால்தான். ஆனால் சமூகத்தில் பலரால் மேன்மையாகக் கருதப்படும் சிலரும் ரகசியமாக விபச்சாரம் செய்துகொண்டிருக்கின்றனர். அவர்களை நாம் அறியாமல் மேன்மையாகக் கருதுகின்றோம்.

நான் முன்பு ஒரு தொண்டுநிறுவனத்தில் பணிசெய்தபோது எயிட்ஸ் தடுப்புத் திட்டத்திற்காகப்  பல விபச்சாரப் பெண்களோடு பேசக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.  விபச்சார பெண்களின் கதைகளைத் தொகுத்து அப்போது வெளியிட்டோம்.  நான்தான் அவைகளைத் தொகுத்தேன். அதற்காக விபச்சாரப் பெண்களைப் பேட்டி கண்டு அவர்கள் இந்தத் தொழிலுக்கு வரக் காரணமென்ன, அவர்களது குடும்பப்பின்னணி,  இந்தத் தொழிலை மனப்பூர்வமாகச் செய்கிறார்களா, எனப் பல கேள்விகள்கேட்டு தொகுத்து வெளியிட்டோம். அப்போது, பல பெண்களின் கண்ணீர்க் கதைகளைக் கேட்க நேர்ந்தது. 

விபச்சாரம் செய்தாலும் தேவனிடம் ஜெபிக்கும் பெண்களைக் கண்டேன்.  அவர்கள் பிறந்தச் சூழ்நிலைதான்  பல பெண்களை இந்தத் தொழிலில் ஈடுபடச் செய்துள்ளது. ஒருமுறை நான் சென்ற ஒரு குக்கிராமத்தில் சுமார் 25 கூரை வீடுகள் இருந்தன. அங்குள்ள பெண்கள் பிறந்ததுமுதல்  அதிகம் வெளியுலகுக்குச் சென்றதில்லை. அங்கேயே பிறந்து, இதுதான் வாழ்க்கை என வாழ்கின்றனர்.  

வெளியுலகில் நாம் சந்திக்கும் பெண்களைவிட மனதளவில் பல நல்ல குணமுள்ள பெண்களை நான் சந்தித்தேன். தேவன் எனக்குச் சில உண்மைகளைப்  புரியவைக்கவே இந்த வாய்ப்பினைத் தந்தார் என எண்ணுகின்றேன்.  தேவனது நியாயத் தீர்ப்பு, இயேசு கிறிஸ்து கூறிய வசனங்கள் இவைகளை நான் அப்போது எண்ணிப்பார்த்தேன். "ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 21 : 31 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

இன்றைய தியான வசனத்தில் எபிரெய நிருப ஆசிரியர், "விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்." என்று கூறுகின்றார். ராகாப் ஒரு வேசிதான்.  ஆனால் அவளது விசுவாசம் அவளைக் காப்பாற்றியது. மட்டுமல்ல, அவள் பெயர் கிறிஸ்துவின் கலைமுறை பட்டியலில் இடம்பெற எதுவாகவும் இருந்தது. ஆம், அவள் தாவீது ராஜாவின் பூட்டியானாள். 
வாசிக்க:- (மத்தேயு - 1: 5,6) ஒப்பிட்டு வாசிக்கவும் (ரூத் - 4:17)

அதாவது இன்றைய வசனம் இரண்டு காரியங்களை நமக்கு உணர்த்துகின்றது. ஒன்று யாரையும் மேலோட்டமாகப்பார்த்து நாம் நியாயம்தீர்க்கக்கூடாது என்பது. இரண்டாவது, விசுவாசத்தினால் வரும் மேன்மையைக் குறிக்கின்றது. நமது எந்த இழி நிலைமையையும் மாற்றி நம்மை ராஜாக்களாகவும் ஆசாரியராகவும் மாற்றிட கிறிஸ்து இயேசுவின்மேல் நாம் கொள்ளும் விசுவாசம் உதவிடும். கிறிஸ்துவின் மேல் நாம் கொள்ளும் விசுவாசம் நம்மைச் சேதப்படுத்தாது.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Thursday, December 15, 2022

நித்திய கிருபையுடன் நமக்கு இரங்குவார்

ஆதவன் 🖋️ 688 ⛪ டிசம்பர் 16,  2022 வெள்ளிக்கிழமை

"அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்." ( ஏசாயா 54 : 8 )

மனிதர்கள் நாம் பலவீனமானவர்கள்; அடிக்கடி பாவத்தில் விழக்கூடிய சூழ்நிலையில் வாழ்வதால் நம்மையும் மீறி பாவத்தில் விழுந்துவிடுகின்றோம். ஆனால் நாம் உள்ளான மனிதனில் நேர்மையாக தூய்மையாக வாழவேண்டும் எனும் விருப்பம் உள்ளவர்களாக வாழ்வோமானால் நாம் பாவம் செய்யும்போது தேவன் கோபத்தில் தனது முகத்தை நமக்கு மறைத்தாலும் தனது கிருபையால் இரக்கம் செய்வார். அதனையே இன்றைய வசனம் கூறுகின்றது. 

பவுல் அப்போஸ்தலருக்கு இப்படி பரிசுத்த வாழ்வு வாழும் ஆசை இருந்தும் அதனைத் தன்னால் செய்யமுடியவில்லை எனும் ஏக்கம் அல்லது வருத்தம்  இருந்தது. எனவேதான்,  "அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்." ( ரோமர் 7 : 18, 19 ) என்று கூறுகின்றார். 

ஒரு தாய் தனது குழந்தை தவறு செய்யும்போது அந்தக் குழந்தையைச் சிறிது கண்டித்தாலும் ஒரேயடியாக ஒதுக்கிவிடுவதில்லை. அதுபோலவே தேவனும் இருக்கின்றார். எனவேதான், "அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன்" என்கின்றார் பரிசுத்தரான கர்த்தர்.

மேலும், பாவம் செய்யாமல் பரிசுத்தராக வாழ வேண்டும்  எனும் எண்ணமுடன் வாழும் நமது மன நிலையினை தேவன் அறிவார். இந்த எண்ணமும் பாவத்தை வெறுக்கும் மனநிலையும் நமக்கு இருக்குமேயானால் தேவனது கிருபை என்றும் நம்முடன் இருக்கும். காரணம் அத்தகைய எண்ணமுடன் வாழும் மக்கள்மேல் அவர் மனதுருக்கம் கொண்டிருக்கின்றார். 

மேலும், கிறிஸ்துவால் மீட்கப்பட்டு ஞானஸ்நானம் பெறும்போது பாவத்துக்கு மரித்து நீதிக்குப் பிழைத்திருப்பதாக அவரோடு உடன்படிக்கை பண்ணுகின்றோம். அந்த உடன்படிக்கையினை மனிதர்களாகிய  நாம் மீறினாலும் அவர் மீறாமல் நினைவில் மொண்டுள்ளார். 
 
எனவேதான் ஏசாயா மூலம் தேவன் கூறுகின்றார், "மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்." ( ஏசாயா 54 : 10 )

\ஆம் அன்பானவர்களே, மனித பலவீனத்தால் பாவம்செய்தாலும் அதனை உணரும் மனமும் பரிசுத்தமாக வாழவேண்டும் எனும் எண்ணமும் உள்ளவர்களை தேவன் கைவிடுவதில்லை; அவர்களைவிட்டு அவரது கிருபை மாறுவதில்லை. இமைப்பொழுது தனது முகத்தை அவர் நமக்கு மறைத்தாலும் நித்திய கிருபையுடன் நமக்கு இரங்குவார். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Wednesday, December 14, 2022

நீதியுமுள்ள வாழ்க்கை

ஆதவன் 🖋️ 687 ⛪ டிசம்பர் 15,  2022 வியாழக்கிழமை

"எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 28 )

இந்த உலகத்தில் வாழும் நாம் பல்வேறு இன, மத,  மொழி, நாடுகளைச்சார்ந்த மக்களோடு வாழவேண்டியிருக்கிறது. எல்லோரும் ஒரே குணம் உடையவர்கள் அல்ல. எல்லோரும் தீயகுணம் உள்ளவர்களுமல்ல. நாம் நமது விசுவாசத்தால் கிறிஸ்துவை அறிந்து ஏற்றுக்கொண்டாலும் அவரை அறியாத பலர் நீதியோடும் நேர்மையோடும் வாழ்வதைப் பார்க்கலாம். தங்களைக் கிறிஸ்தவர்கள் என்றும் அதுவும் ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்றும் கூறிக்கொள்ளும் பலரைவிட மேலான நல்ல குணங்களுக்கவர்கள் உலகினில் உண்டு. 

மேலும் கிறிஸ்துவை இன்று அறியாதவர்களாய் பாவத்தில்வாழும் மக்கள்கூட ஒருநாள் மனம்திரும்பி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு நம்மைவிட மேலான ஆவிக்குரிய நிலைமையை அடையலாம். எனவேதான் இயேசு கிறிஸ்து, "ஆகிலும், முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றார்." ( மத்தேயு 19 : 30 )

இந்த உண்மையினை தேவன் அப்போஸ்தலரான பேதுருவுக்கு விளக்கினார். இதனால்தான் அப்போஸ்தலரான பேதுரு, "எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்." என்று கூறுகின்றார். 

ஆம், "எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 35 ) என்கின்றார். காரணம், கிறிஸ்துவை அறியாத, நீதி வாழ்க்கை வாழ்ந்த  கொர்நேலியுவுக்கு தேவன் பேதுருமூலம் தன்னை வெளிப்படுத்தினார்.  

கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் நீதிவாழ்க்கை வாழாதவர்கள் கிறிஸ்துவை அறியமுடியாது. அவர்கள் இறுதிவரை பெயர் கிறிஸ்தவர்களாகவே இருப்பார்கள். ஆனால் தேவனுக்குப் பயந்து நீதியோடு வாழ்ந்து தேவனைத் தேடும்போது தேவன் தன்னை அவர்களுக்கு மேலும் மேலும் வெளிப்படுத்துவார். 

மட்டுமல்ல, தேவன் ஒருவருக்கு வெளிப்படும்போது தானாகவே அவர்மேல் விசுவாசம் வரும். அப்படி "அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவான்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 43 )

அன்பானவர்களே, இதனை வாசிக்கும் நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாகவும் இருக்கலாம். கிறிஸ்துவை வெறுப்பவர்களாகக்கூட இருக்கலாம். ஆனால் உண்மையும் நீதியுமுள்ள வாழ்க்கை வாழ்ந்து மெய்யான தேவனை அறியவேண்டுமெனும் எண்ணம் கொண்டவர்கள் என்றால் கிறிஸ்து தன்னை உங்களுக்கு வெளிப்படுத்துவார். 

ஆம், முதலில் நீதி வாழ்க்கை வாழவேண்டும். இரண்டாவது மெய்யான தேவனை அறியவேண்டும் எனும் ஆவல் வேண்டும். அப்படி நீதியாய் வாழ்ந்து தேவனைத் தேடியும் அவர் உங்களுக்குத் தன்னை  வெளிப்படுத்தவில்லையானால் உங்களது மனச்சாட்சியில் இன்னும் அழுக்கு இருக்கின்றது என்று பொருள். அப்படியானால் நீங்கள் உங்கள் வாழ்க்கையினை மறுபரிசீலனைச் செய்து பார்க்கவேண்டியது அவசியம்.   

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Tuesday, December 13, 2022

ஜீவனுள்ளவர்களாக கிறிஸ்துவுக்குச் சாட்சியாக வாழ்வோம்.

ஆதவன் 🖋️ 686 ⛪ டிசம்பர் 14,  2022 புதன்கிழமை

"குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்." ( 1 யோவான்  5 : 12 )

ஒரு மனிதனுக்கு உயிர் இருக்கின்றதா இல்லையா என்பதை அவனது நாடித்துடிப்பினால் அறியலாம், சுவாசம் இருக்கின்றதா இல்லையா என்பதைக்கொண்டு அறியலாம். இதுபோல ஆவிக்குரிய மனிதர்கள் என்று கூறிக்கொள்வோர்களது நிலைமையினை எதனைக்கொண்டு அறிவது?  உண்மையிலேயே அவர்கள் ஆவிக்குரிய உயிருள்ள வாழ்க்கை வாழ்கின்றார்களா இல்லை செத்த வாழ்க்கை வாழ்கின்றார்களா என்பதை எப்படிக் கண்டறிவது? இதனையே அப்போஸ்தலரான யோவான் இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் தெரியப்படுத்துகின்றார். 

அதாவது, "குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்." என்கின்றார். குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை வழிபடுபவர்கள் என்றோ, அவரை விசுவாசிக்கின்றோம் என்று கூறுபவர்கள் என்றோ அவருக்காகவோ அவரது ஆலயங்களுக்காகவோ பல்வேறு செயல்பாடுகளை செய்பவர்கள் என்றோ கூறாமல் "குமாரனை உடையவன்" என்று கூறுகின்றார்.

ஒரு பொருள் நமக்கு உடைமையாக இருக்கின்றது என்றால்தான் நமக்கு அது பெருமை. அதுபோல குமாரனாகிய கிறிஸ்துவை நமது உடைமை ஆக்கிக்கொள்வதில்தான்  ஆவிக்குரிய ஜீவன் இருக்கின்றது. அப்படிக் கிறிஸ்துவை உடைமையாக்கிக் கொள்ளும்போது தான் அவர் நம்மில் நிலைத்திருப்பார். 

கிறிஸ்து நம்மில் நிலைத்திருப்பதை நாம் எப்படி அறிந்துகொள்ளலாம் என்பதையும் யோவான் பின்வருமாறு கூறுகின்றார்:- "அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்." ( 1 யோவான்  3 : 24 ) தேவனுடைய ஆவியானவர் நம்மில் நிலைத்திருக்கின்றார் என்பதை உறுதி செய்யும்போது அவர் நம்மில் நிலைத்திருக்கின்றதையும்  நாம் அறிவோம். ஆம், அப்போதுதான் நாம் குமாரனை உடையவர்கள் ஆகி, ஜீவனுள்ளவர்களாவோம்.

தேவனுடைய ஆவியானவர் நம்மில் நிலைத்திருப்பதை நாம் ஆவிக்குரிய கனிகளின்மூலமே அறியமுடியும். "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை."( கலாத்தியர் 5 : 22, 23)

தேவனுடைய ஆவியானவர் நம்மில் இருப்பதை அலறி ஆர்ப்பரிப்பதனாலல்ல, மாறாக கனியுள்ள வாழ்க்கையினால் அறியலாம்.  சுருக்கமாகச் சொல்வதானால், ஆவிக்குரிய கனிகள் உள்ளவன் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைக் கொண்டிருந்து ஜீவனுள்ளவனாக இருப்பான், ஆவிக்குரிய கனியற்றவனோ கிறிஸ்து இல்லாத ஜீவனற்றவனாக இருப்பான்.  

அன்பானவர்களே, வெறும் ஆராதனையோடு நின்றுவிடாமல் கனியுள்ள ஒரு வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம், ஜீவனுள்ளவர்களாக கிறிஸ்துவுக்குச் சாட்சியாக  வாழ்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712


Monday, December 12, 2022

நாம் படுகின்ற அவமானம், புறக்கணிப்பு இவைகளை தேவன்அறிவார்

ஆதவன் 🖋️ 685 ⛪ டிசம்பர் 13,  2022 செவ்வாய்க்கிழமை

"உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார் என்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 7 : 35 )

இந்த உலகம் ஏழ்மையானவர்களையும், அற்பமாக எண்ணப்படுபவர்களையும்  மக்கள் செல்வாக்கு இல்லாதவர்களையும் அவர்களது சொல்லையும் எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. "இவன்தானே / இவள் தானே" எனும் ஏளனப்  பார்வையே இதற்குக் காரணம். இது தற்போதுள்ள நிலைமையல்ல, காலாகாலமாக இதுதான் இந்த உலகத்தின் நிலை. 

மோசேயையும் எபிரெயர்கள் அன்று அப்படிதான் எண்ணிக்கொண்டனர். எனவே சண்டையிட்டுக்கொண்டிருந்த இரண்டு எபிரேயர்களை மோசே கண்டு அநியாயம் செய்தவனை நோக்கி, "நீ உன் தோழனை அடிக்கிறது என்ன? " என்று கேட்டபோது அவன் மோசேயைப்பார்த்து, "உன்னை எங்கள்மேல் அதிகாரியாகவும் நியாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்?" என்று கேட்டான்.  (யாத்திராகமம் 2:13,14). ஆனால் தேவன் மோசேயை அப்படியே விட்டுவிடவில்லை. அந்த மோசேயையே அவர்களுக்குத் தலைவனாகவும் மீட்பனாகவும் ஏற்படுத்தினார். 

இன்று நமது ஊரில் அல்லது நாம் பணிசெய்யும் இடங்களில் நம்மையும் சிலர் இப்படி, "இவன் தானே / இவள்தானே" என  எண்ணலாம். அல்லது மோசேயிடம் கூறியதுபோல நேரடியாகவே நம்மைப்பார்த்துக், "நீ என பெரிய யோக்கியனா?" என ஏளனமாகப் பேசலாம். காரணம், நாம் கூறும் நியாயங்கள் அநீதி செய்பவர்களுக்கு ஏற்புடையவை ஆகாது. 

ஆனால் தேவன் நமது ஒவ்வொரு செயலையும் பார்த்துக்கொண்டிருக்கின்றார். நாம் படுகின்ற அவமானம், புறக்கணிப்பு  இவைகளை அவர் அறிவார். நாம் தேவனோடு நெருங்கிய தொடர்புகொண்டு அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது தேவன் நிச்சயமாக நம்மைப் புறக்கணித்த மக்கள் மத்தியில் நம்மை தலை நிமிரச்செய்வார். 

புறக்கணிக்கப்பட்ட இந்த மோசேதான் அடிமைப்பட்டிருந்த மக்களை  பிற்காலத்தில் விடுவித்து எகிப்தைவிட்டு கானானை நோக்கி வழி நடத்தினார்.  இதுபோல நாம் வாழும் சமூகத்தில் தேவன் நம்மை பிற்காலத்தில் உயர்த்திவைக்க நமது சிறுமைப்படுதல் அவசியமாயிருக்கின்றது. மனிதர்களைத் தேவன் பயன்படுத்துமுன் தனக்கு ஏற்புடையவர்கள் ஆக்கும்படி பல்வேறு துன்பங்களால் புடமிடுகின்றார். எனவே துன்புறும் மனிதர்களைப்பார்த்து நாம் அற்பமாக எண்ணிவிடக்கூடாது. தேவன் அவர்கள் பக்கம் இருந்து செயல்பட்டுக்கொண்டிருக்கலாம். அது நமக்குத் தெரியாது. 

மோசேயைத் தேவன் உடனேயே உயர்த்திவிடவில்லை. மோசேயைப்பற்றி கூறப்பட்டுள்ள மேற்படி சம்பவம் நடைபெற்று நாற்பது ஆண்டுகளுக்குப்பின்னர்தான் தேவன் மோசேக்குத் தரிசனமாகி அவரை மக்களுக்குத் தலைவனாக ஏற்படுத்தினார். 

அன்பானவர்களே, நமது ஊரிலோ பணிசெய்யும் இடங்களிலோ நியாயமாகச் செயல்படும் அற்பமானவர்களை நாம் மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். ஆம்,  ஒருவேளை தேவன் அத்தகைய மனிதர்களோடு இருந்து செயல்பட்டுக்கொண்டிருப்பார்.  அற்பமாக, அவலட்சணமாகக் காணப்படும் புழுதான் பின்னர் அழகிய வண்ணங்களோடு சிறகடித்து வானில் பறக்கின்றது.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712


Sunday, December 11, 2022

வெள்ளியும், பொன்னும் டாலர்களும் இருக்கின்றன; ஆனால் கிறிஸ்து இல்லை.

ஆதவன் 🖋️ 684 ⛪ டிசம்பர் 12,  2022 திங்கள்கிழமை

"வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 3 : 6 )

இன்றைய உலகினில் மனிதன் எல்லாவற்றையுமே பணத்தினால் தான் எடைபோடுகின்றான். சாதாரண மனிதர்கள் இப்படி இருப்பதில் எந்த அதிசயமும் இல்லை, அவர்கள் அப்படிதான் இருப்பார்கள். ஆனால் இன்று கிறிஸ்தவ ஊழியத்திலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதால் பிற இன மக்கள்முன் கிறிஸ்தவம் அவமானப்படுத்தப்படுகின்றது.

ஊழியம் என்பது கிறிஸ்து தனது இரத்தத்தால் ஏற்படுத்திய மீட்பினை மக்களுக்கு அறிவிப்பதுதான். இதற்கு பெரிய அளவில் பணம் தேவையில்லை. ஆனால் சமீபத்தில் தமிழகத்தின் பிரபல ஊழியர் ஒருவரது மனைவி ஊழியத்துக்கு பணம் இல்லை என கண்ணீர்விட்டு அழாதகுறையாக பேசிய வீடியோ காட்சியொன்று அனைத்துச் சமூக ஊடகங்களிலும் உலாவந்தது. பிரபல ஊழியரான இவரின் தந்தையார் இறந்தபோது (அவரும் பிரபல ஊழியர்தான்) அடக்கச் செலவு மிக அதிகமாகிவிட்டது, எனவே பணம் தாருங்கள் என இறந்துபோன தகப்பனது உடலை வைத்துப் பணம் கேட்டார் மகன். 

பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரி என பல நிறுவனங்களை நடத்தும் இந்த ஊழியரது மனைவி சமீபத்தில் வெளியான வீடியோ காட்சியில்:- "எல்லோரும் எங்களைப் பணக்கார ஊழியர் எனக் கூறுகின்றனர்......அன்பானவர்களே, இது சரியல்ல, பணம் இருந்தாலும் நாங்கள் எவ்வளவு தான் கை காசை  செலவழித்து ஊழியம்செய்ய முடியும்.?    எங்களது ஊழியத் தேவை மிக அதிகம். அதிக அளவு பணம் எங்கள் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவேச் செலவாகின்றது...." என அழுகின்றார் அந்தப்பெண்மணி. சுமார் 15 நிமிடம் இதே ஒப்பாரிதான். பிற மத சகோதரர்கள் இதனை அதிகம் பகிர்ந்து கிறிஸ்துவை மீண்டும் சிலுவையில் அறைந்தார்கள்.

அன்பானவர்களே, இத்தகைய ஊழியர்களும் இவர்களை ஆதரிக்கும் ஏமாளி விசுவாசிகளும்  கவனிக்கவேண்டிய வசனமே இன்றைய தியானத்துக்குரிய வசனம். அப்போஸ்தலரான பேதுரு மடி நிறைய பணத்தைக் கட்டிவைத்துக்கொண்டு ஊழியம் செய்யவில்லை. ஆனால், அவரது பிரசங்கத்தைக்கேட்டு மூவாயிரம், ஐயாயிரம் என கூட்டம் கூட்டமாக மக்கள் கிறிஸ்துவிடம் திரும்பினர்.  

பேதுரு கூறுவது, "வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை" என்பது. ஆனால் அவர் கூறாமல் செயலில் காட்டியது, அவரோடு கிறிஸ்து இருந்தார் என்பதை. ஆம், அவரிடம் வெள்ளியும் பொன்னும் இல்லை மாறாக கிறிஸ்து இருந்தார். ஆனால் நேர் மாறானது இன்றைக்கு நடக்கின்றது. இவர்களிடம் வெள்ளியும், பொன்னும் டாலர்களும் மிக அதிகமாகவே இருக்கின்றன. ஆனால் கிறிஸ்துதான் இல்லை. 

பணம் இல்லாவிட்டாலும் கிறிஸ்து தன்னிடம் இருந்ததால் அவரைக்கொண்டு பேதுரு முடவனை நடக்கச்செய்தார்.  "அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப்பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 3 : 16 ) எனத்  தைரியமாக யூதர்களுக்குமுன் கிறிஸ்துவை அறிக்கையிட்டார். ஆனால் இன்றைய பிரபலங்களோ மக்களைக் குருடாக்கி படுகுழிக்குள் தள்ளுகிறார்கள். 

அன்பானவர்களே, இவர்களது மனக்கண்கள் திறக்கும்படி ஜெபிப்பது நமது அனைவரது கடமை. மட்டுமல்ல, பணமில்லாவிட்டாலும் நாம் எல்லோருமே நமது வாழ்க்கையால் கிறிஸ்துவின் பணியைச் செய்யமுடியும். ஆம், நமது சாட்சியுள்ள வாழ்க்கையே மேலான சுவிசேஷ அறிவிப்பு. நாமே அவரது நிருபங்களாய் இருக்கிறோம். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712