இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Friday, April 21, 2023

வேத புரட்டர்கள்

ஆதவன் 🌞 816🌻 ஏப்ரல் 23, 2023 ஞாயிற்றுக்கிழமை


































"வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்திசொன்னபின்பு அவனை விட்டு விலகு. அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே." ( தீத்து 3 : 11 )

தேவன் தன்னை எவரிடமும் திணிப்பதில்லை. உலகிலுள்ள எல்லோரும் தன்னை அறியவேண்டுமென்று தேவன் விரும்பினாலும் மனிதர்களது சுய குணமே தேவனை அவர்கள் அறியத் தடையாக இருக்கின்றது.  

கிறிஸ்தவர்களிலும்கூடச்  சிலர் வேத வசனங்களையும், வேத உண்மைகளையும் புரட்டிப் பேசுகின்றனர். காரணம் சுய லாபம். நாம் இத்தகைய மனிதர்களுக்கு வேத உண்மைகளை எடுத்துக் கூறினாலும் இவர்கள் அவற்றை  உண்மையென உள்ளத்தில் உணர்ந்தாலும் தாங்கள் கூறும் தவறான உபதேசத்தையும், தவறான வழிகளையும் விட்டுத் திரும்பமாட்டார்கள். காரணம் சரியான வழியை ஏற்றுக்கொள்வது ஏதோ ஒரு விதத்தில் அவர்களை பாதிப்பதாக இருப்பதால்தான். 

இத்தகைய மனிதர்கள் தங்களை நியாயப்படுத்த, "வேதாகமத்தில் இருப்பது உண்மைதாங்க...ஆனால் அதன்படி யாரும் வாழ முடியாது" என்று தங்கள் தவறுக்கு நியாயம் கற்பிப்பார்கள்.  இப்படி வேத சத்தியத்தை உண்மை என உணர்ந்தாலும் அதனைத் தவிர்ப்பவன்தான் வேத புரட்டன். கிறிஸ்தவத்தில் இத்தகைய வேத புரட்டு ஊழியர்களும் அதிகம்பேர் உள்ளனர். எனவே நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம்.

இன்றைய வசனம் கூறுகின்றது, இப்படி வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்திசொன்னபின்பு அவனை விட்டு விலகு என்று. அதாவது இத்தகைய வேதபுரட்டர்களுக்குமுன் நாம் வாதம் செய்து கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை.  அப்படிப்பட்டவன் தானே ஆக்கினைத்தீர்ப்படைய பாவம் செய்தவனாய் இருக்கின்றான். ஆவிக்குரிய மேலான அனுபவங்களை இத்தகைய மனிதர்கள் பெற்றுக்கொள்ளவும் முடியாது.

மேலும், கிறிஸ்துவை அறியாத மக்கள்கூட கிறிஸ்துவைப்பற்றியும் வேத உண்மைகளைப்பற்றியும் நாம் கூறுவதை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் தங்களை கிறிஸ்தவர்கள் எனக் கூறிக்கொள்ளும் இத்தகைய வேத புரட்டர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 

இதற்கு அடிப்படையான காரணம் உண்மையான மனம் திரும்புதலும் மீட்பு அனுபவமும் இல்லாமல் இருப்பதுதான். ஒருவர் சார்ந்திருக்கும் சபைகளோ ஊழியர்களோ இதற்குக் காரணமாக முடியாது.  யூதாசுக்குக் கிடைத்தது மிக அற்புதமான ஊழியர், வழிகாட்டி, தலைவர், ஆலோசகர். ஆனால் யூதாசின் வாழ்வு தோல்வியடைந்தது. காரணம், தனிப்பட்ட முறையில் அவனிடம் குணங்களில் மாறுதல் ஏற்படவில்லை. மனம்திரும்புதல் இல்லை. கடமைக்காக இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றினவன் அவன்.  

அன்பானவர்களே, இத்தகைய மனிதர்கள் நம்மோடு நமது சபைகளில் இருப்பார்கள். ஆனால் எல்லா வேத சத்தியங்களையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இவர்களுக்கு உண்மையை இரண்டு மூன்றுமுறை எடுத்துச் சொல்லியும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையானால் அவர்களை விட்டு நாம் விலகிவிடவேண்டும். அதாவது அதற்குமேல் அவர்களிடம் இதுகுறித்து நாம் தர்க்கம் செய்துகொண்டிருக்கக் கூடாது எனத் தனது சீடனான தீத்துவுக்கு அப்போஸ்தலரான பவுல் அடிகள் அறிவுரை கூறுகின்றார்; இந்த அறிவுரை நமக்கும்தான்.

வேத புரட்டர்களை அடையாளம் கண்டு அவர்கள் சத்தியத்தை அறிய ஆலோசனை கூறுவோம். ஏற்றுக்கொள்ளவில்லையானால் நமது முயற்சிகளை அவர்களைத் திருத்துவதிலேயே செலவழிக்காமல் விட்டு விலகுவோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Thursday, April 20, 2023

பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

ஆதவன் 🌞 815🌻 ஏப்ரல் 22, 2023 சனிக்கிழமை
























"மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மை பாராட்டக்கடவன். தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்." ( 2 கொரிந்தியர் 10 : 17, 18 )

பெருமை சிலருக்கு உடலோடு ஒட்டிய தோல்போல அவர்களோடு ஒட்டியே இருக்கும். நல்லகாரியங்களில் மட்டுமல்ல பாவ காரியங்களிலும் கூட மேன்மை பாராட்டுகின்ற அற்பர்களாக இருக்கின்றனர் சிலர். ஒரு ஆப் (half) அடித்தாலும் நான் ஸ்டெடியாக இருப்பேன் என பெருமையடிக்கிறான் குடிகாரன். நான் இந்தியாவின் பல்வேறு மாநில பெண்களோடு இன்பம் அனுபவித்துள்ளேன் என பெருமை பேசுகிறான் விபச்சாரக்காரன். இதுபோல தங்களது பதவி, செல்வாக்கு, பணம், அதிகாரம் இவைகளைக்குறித்து பெருமை பேசும்  பலர்  உண்டு.

பொதுவாக பெருமை பேசுபவர்கள் மற்றவர்கள் தங்களை உயர்வாக எண்ணவேண்டும் என்பதற்காகவே இப்படிப் பெருமை பேசுகின்றனர். ஆனால் இத்தகைய பெருமை பேசும் மக்களைவிட்டு சற்று அகன்றவுடன் எல்லோரும் இவர்களது அற்பப் பெருமை பேச்சைக் கேலிபேசிச்  சிரிக்கத்தான் செய்வார்கள்.   மேலும், இப்படிப் பெருமை பேசுபவர்கள் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள். இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்." என்று கூறுகின்றார். தற்பெருமை பேசி பெருமையோடு அலைந்த அரசியல் தலைவர்கள் அழிந்துபோன உண்மையினை நாம் நேரடியாகக் கண்டுள்ளோம். 

நமது அறிவு, உடல் பலம், செல்வம் இவை எல்லாமே தேவ கிருபையால்தான் நமக்குக் கிடைக்கின்றன. தேவன் நினைத்தால் ஒரே நொடியில் அனைத்தையும் நம்மைவிட்டு எடுத்துக்கொள்ள முடியும். இந்த உணர்வு நமக்கு எப்போதும் இருக்கவேண்டியது அவசியம். எனவேதான், "ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்" ( எரேமியா 9 : 23 ) என எரேமியா மூலம் தேவன் உணர்த்துகின்றார். 

இந்த உலகினில் தேவனை அறியும் அறிவுதான் மேலான அறிவு.  தேவனை வேதாகமத்தைப் படிப்பதாலோ, இறையியல் கல்வி பயில்வதாலோ, ஜெபக்கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வதாலோ, பிரசாங்கங்களைக் கேட்பதாலோ, இதுபோன்ற ஆவிக்குரிய தியான கட்டுரைகளை வாசிப்பதாலோ அறிய முடியாது. நம்மை அவருக்கு ஒப்புவித்து, பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவரோடு இணைந்த வாழ்க்கை வாழ்வதாலேயே அறிய முடியும். 

இதுவே உலகினில் மேலான அறிவு. தேவனை அறியாத மனிதன் அழிந்துபோகும் மிருகத்துக்கு ஒப்பாயிருக்கின்றான். எனவேதான் "மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும், நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( எரேமியா 9 : 24 ) என வாசிக்கின்றோம்.

அன்பானவர்களே, தேவன் நமக்கு நல்ல வேலை, அறிவு, அழகு, அந்தஸ்து, செல்வம், புகழ் தந்து உயர்த்தும்போது மனத் தாழ்மையாய் இருக்கக் கற்றுக்கொள்வோம். "பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்." ( 1 பேதுரு 5 : 5 )

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Monday, April 17, 2023

சூழ்நிலைகளையே மாற்றவல்ல தேவனை நோக்கிப்பார்ப்போம்.

ஆதவன் 🌞 814🌻 ஏப்ரல் 21, 2023 வெள்ளிக்கிழமை
































"எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்." ( சங்கீதம் 57 : 2 )

தேவன் தெரிந்துகொண்ட அபிஷேகிக்கப்பட்ட மனிதனாக இருந்தாலும் தாவீதின் ஆரம்ப வாழ்க்கை போராட்ட வாழ்க்கையாகவே இருந்தது. இன்றைய தியானத்துக்குரிய வசனத்தை அவர் சவுலுக்குத் தப்பி ஓடித்  தன் உயிரைக் காப்பாற்ற மலையிலுள்ள குகையில் பதுங்கியிருக்கையில் கூறியது. 

இன்று நாம் இந்த வசனங்களை வீட்டில் பாதுகாப்பான சூழ்நிலையில் இருந்துகொண்டோ அல்லது சபை ஆராதனையில் இருந்துகொண்டோ கூறலாம். அது மிகவும் எளிது. ஆனால் எந்தநேரமும் தனது உயிர் பறிபோகலாம் என்ற இக்கட்டான நிலையில் இருந்துகொண்டு தாவீது இந்த விசுவாச அறிக்கையைக் கூறுகின்றார். 

தான் இந்த வசனத்தைக் கூறுகையில் இருந்த நிலைமையைத் தாவீது பின்வருமாறு கூறுகின்றார். 

"என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது; தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது." ( சங்கீதம் 57 : 4 )

இந்த இக்கட்டான நிலையிலிருந்து என்னைக் காப்பாற்றும் ஆண்டவரே என்று அவர் கூறவில்லை. மாறாக, தேவன் அவரைக் காப்பாற்றிவிட்டார் எனும் உறுதி தேவன் காப்பாற்றுமுன்னரே தாவீதுக்கு இருந்தது. எனவேதான், "எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற உன்னதமான தேவன்" என்று கூறுகின்றார். 

அன்பானவர்களே, இதுதான் விசுவாசம். இன்று நாமும் இத்தகைய விசுவாச அறிக்கையினை நமது வாழ்க்கையில் அறிக்கையிடப் பழகவேண்டும். கடன் பிரச்சனைகள், தீராதநோய்கள், வறுமை, வேலையில்லாமை, சொந்தங்களால் புறக்கணிப்பு போன்ற எந்த நிலையிலுமிருந்தும் தேவன் நம்மைக் காப்பாற்றி விடுவிக்க வல்லவராய் இருக்கின்றார். நமது தற்போதைய நிலைமை அவருக்குத் தெரியும். தாவீதைப்போல, "எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்." என்று உறுதியாகச் சொல்வோம். 

சூழ்நிலைகள் தேவனைத் தடுக்க முடியாது. காரணம், சூழ்நிலைகளையே மாற்றவல்லவர் நமது தேவன். எனவே, சூழ்நிலைகளையல்ல சூழ்நிலைகளையே  மாற்றவல்ல தேவனை நோக்கிப்பார்ப்போம். நமக்காக அவர் அனைத்தையும் செய்து முடித்துவிட்டார் என்று விசுவாசிப்போம்; தாவீதைப்போல அதனை அறிக்கையிடுவோம்.  கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக. 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

மோசேயைப்போல உறுதியுடன்........

ஆதவன் 🌞 813🌻 ஏப்ரல் 20, 2023 வியாழக்கிழமை















"தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்." ( சங்கீதம் 90 : 15 )

மனிதர்கள் எல்லோரும் எப்போதும் உயர்ந்த நிலையிலேயே இருந்துவிடுவதில்லை. சிலருடைய வாழ்க்கைப்  பல ஆண்டுகளாக  சிறுமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையாகவே இருக்கும். சமுதாயத்தாலும் சொந்தங்களாலும், அற்பமாக எண்ணப்படும் வாழ்க்கையாக இருக்கும். வேறு சிலர் பல ஆண்டுகளாக செல்வம் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வை வாழ்வார்கள். ஆனால் ஒரு தலைமுறை மாறி அடுத்த தலைமுறையில் எல்லாமே தலைகீழாகிவிடும். ஆனால் பொதுவாக மனிதர்கள் இதனை எண்ணுவதில்லை. பணம் வந்தவுடன் பெரும்பாலானோர்பிறரை அவமதிக்கின்றனர்.   

ஒருமுறை ஒரு வயதான சகோதரி என்னிடம் தங்களது குடும்ப நிலைமைகுறித்து பேசும்போது, "பிரதர், முன்பு நாங்கள் நல்ல வசதியாக வாழ்ந்தோம். எங்க வீட்டுக்காரர் இறந்தபின்பு வருமானம் இல்லை. படித்த எனது இரண்டு மகன்களுக்கும் வேலை இல்லை, திருமண வயதில் மகள் வேறு இருக்கின்றாள்......எங்களை எங்கள் சொந்தக்காரர்கள் ஒதுக்கியே வைத்துள்ளனர். எங்களோடு பேசினால் ஒருவேளை பண உதவி கேட்டுவிடுவோமோ என்று எங்களை ஒதுக்குகின்றனர்". என்று கூறி வருத்தப்பட்டார். 

அவருக்காக ஜெபித்துவிட்டு, இன்றைய வசனத்தை அவர்களுக்குச்சொல்லி  அவர்களையும் இந்த வசனத்தைச் சொல்லி ஜெபிக்கச் சொன்னேன். ஆம், இன்றைய வசனம் தேவ மனிதனாகிய மோசேயின் ஜெபமாகும். "தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்." என ஜெபிக்கின்றார் மோசே. 

மோசேயின் வாழ்க்கை நாற்பது நாற்பது நாற்பதாக பகுக்கப்பட்ட வாழ்க்கை. முதல் நாற்பது ஆண்டுகள் பார்வோனின் மகளின் மகனாக அரண்மனை வாழ்க்கை, அடுத்த நாற்பது ஆண்டுகள் வானாந்தர வாழ்க்கை. ஆடுகளோடு வெய்யிலிலும் மழையிலும் வனாந்தரத்தில் ஆடுமேய்க்கும் வாழ்க்கை. இந்தத் துன்பங்களை மோசே ஜெபித்ததுபோல தேவன் மகிழ்ச்சியாக்கினார். ஆம்,  அவரது வாழ்வின் இறுதி 40 ஆண்டுகள் தேவனோடு நடக்கும் வாழ்க்கையினை தேவன் அவருக்குக் கொடுத்தார்.  

அன்பானவர்களே, ஒருவேளை இதனை வாசிக்கும் நீங்களும் துன்பத்தில் இருக்கலாம். ஊராரால், சொந்தங்களால் சிறுமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழலாம். கலங்காதிருங்கள். மோசேயைப்போல உறுதியுடன் தேவனைப் பற்றிக்கொண்டு "தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்" என்று வேண்டுதல் செய்வதே சரியானது.

சிறுமைப்படுத்தப் பட்டவர்களின் கண்ணீரைப் பார்க்கின்றவர்  நமது தேவன். நிச்சயமாக அற்புதம் செய்வார். நாம்  சிறுமைப்படுத்தப்பட்ட நாட்களுக்குச் சமமாக மட்டுமல்ல, அதற்கும் அதிகமாகவே நம்மை  மகிழச் செய்வார். பக்தனாகிய யோபுவின் சரித்திரம் இதனையே விளக்குகின்றது. தேவன்மேல் அசைக்க முடியாத விசுவாசத்தோடு இருந்த யோபுவின் அவமானங்களையும் கண்ணீரையும் தேவன் மாற்றவில்லையா? 

"கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்" ( யோபு 42 : 12 ) என்று வேதம் கூறுகின்றது. அன்பானவர்களே, நண்பர்களால், ஊராரால் அற்பமாக எண்ணப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட  யோபுவை தேவன்  ஆசீர்வதித்ததுபோல உங்களையும் ஆசீர்வதிப்பார். கலங்காதிருங்கள்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Saturday, April 15, 2023

தேவனுக்கு ஒப்பானது உலகினில் எதுவுமே இல்லை.

ஆதவன் 🌞 812🌻 ஏப்ரல் 19, 2023 புதன்கிழமை





















"தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள்.....இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சை ரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்..." (ரோமர்- 1:25,26)

ஆதிகால மனிதன் உலகினில் தான் கண்டு பயப்பட்ட  அனைத்தையும் வணங்கத் தொடங்கினான். சூரியன், நெருப்பு, காற்று, பாம்பு, சிங்கம் எனப் பலவற்றையும் வணங்கியதற்கு மனிதனது பயமே காரணம். இவை அனைத்தும் படைக்கப்பட்டவையே என்றும் இத்தகைய பயப்படத்தக்கவற்றைப் படைத்தவர் எவ்வளவு மகத்துவமுள்ளவராக இருப்பார் எனவும் மனிதன் எண்ணியிருந்தால் இவைகளை வணங்கியிருக்கமாட்டான்.

இப்படி,படைத்தவரை சேவிப்பதுபடைக்கப்பட்ட பொருட்களை சேவிப்பது என இரு வேறு நிலைகளை பவுல்  அடிகள் இங்கு விளக்குகின்றார்.         இப்படி படைக்கபட்டப் பொருட்களை வணங்கக் காரணம் ஒன்று பயம் இன்னொன்று இச்சை. அதாவது, படைக்கபட்டப் பொருட்கள் கண்களுக்குத் தெரிவதால் அவற்றின்மேலுள்ள ஆசை.

அன்று ஏதேனில் துவங்கியது இந்த நிலைஆதாமும் ஏவாளும் படைத்த தேவனது கட்டளையை மீறி தேவன் தடை செய்த படைக்கப்பட்ட பொருளான கனியின்மேல் ஆசை கொண்டார்கள்அதனால் தேவனது சாபத்துக்கு உள்ளானார்கள். காரணம் இச்சை. "அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்." ( ஆதியாகமம் 3 : 6 ) என்று வாசிக்கின்றோம்.

இன்றும் மனிதன் இதையே செய்கின்றான்தேவனைவிட உலகப் பொருட்கள்மேல் ஆசை கொள்வது சிருஷ்டியை தொழுது சேவிப்பதுதான்இப்படி தேவனை விட்டு தேவனால் படைக்கப்பட்ட பொருள்மேல் ஆசை கொள்வதால்தான் இழிவான "இச்சைமனிதனில் பிறக்கின்றது என இந்த வசனம் சொல்கிறது

தேவனுக்கு ஒப்பானது உலகினில் எதுவுமே இல்லைஆனால் இன்று மனிதர்கள் பணம்பதவி , பெண் ஆசைமண்ணாசை என  இழிவான இச்சைகளில் சிக்கி தேவனது சாபத்துக்கு உள்ளாகின்றார்கள். காரணம், இத்தகைய ஆசை கொள்வதும் படைத்தவரை விட்டு படைக்கப்பட்டதைஆராதிப்பதுதான்.  மட்டுமல்ல இப்படி இழிவான இச்சைகளில் சிக்கி இருப்போர்தங்களைப்போல  "அவைகளை செய்கின்ற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாய் இருக்கிறார்கள்." (ரோமர் -1;32) என்கின்றார் பவுல் அடிகள். 

படைத்தவரை வணங்கி ஆராதிப்பதும் அவற்றைப் படைத்த வல்லமையான தேவனுடன் இணைவதும்தான் தேவனுடைய சித்தம். ஆனால் இந்தத் தேவ சித்தத்தை பொய் என மாற்றி தேவனை ஆராதிக்காமல் தேவனால் படைக்கப்பட்ட பொருட்களை ஆராதிக்கின்றார்கள்.

அன்பானவர்களேமனிதனது வேசித்தன செயல்பாடுகளுக்கு காரணமும் இச்சையேஇதன்பொருட்டே இழிவான இச்சை  நோய்களும் சாபங்களும்மனிதனைத் தொடர்கின்றன.  ஆம் இவை அனைத்துக்கும்  காரணம் தேவனை விட்டு தேவனால் படைக்கப்பட்ட பொருட்கள்மேல்ஆசைகொள்வதே. எனவே, எந்த சூழ்நிலையிலும் படைக்கப்பட்டப் பொருள்களுக்கு முதலிடம் கொடுக்காமல் படைத்த தேவனே போதுமென வாழ்வோம்நமது அனைத்துத் தேவைகளையும் அவரே சந்திப்பார்   


தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

பிரமாண்ட சாம்ராஜ்யத்தின் ராணி

ஆதவன் 🌞 811🌻 ஏப்ரல் 18, 2023 செவ்வாய்க்கிழமை


























"எஸ்தர்,  மொர்தெகாயிடத்தில்  வளரும்போது அவன் சொற்கேட்டு நடந்ததுபோல, இப்பொழுதும் அவன் சொற்கேட்டு நடந்துவந்தாள்." ( எஸ்தர் 2 : 20 )

இன்றைய காலத்தில் சிலர் பெற்ற தாய்தகப்பனையே  பாரமாக எண்ணி வீட்டைவிட்டுத் துரத்துவதையும் முதியோர் இல்லங்களில் சேர்ப்பதையும் நாம் வாழ்வில்  பார்க்கின்றோம். இன்னும், நன்றி மறக்கும் மக்களையும் நாம் வாழ்வில் சந்திக்கின்றோம்.   தங்களது காரியம் முடிந்தபின்னர் மெதுவாகக் கைகழுவி விடுவார்கள். மேலும் சிலர் அந்தஸ்து கருதி தங்களைவிட பொருளாதாரத்திலும் பதவியிலும் தாழ்ந்தவர்களைத் தங்கள் உறவினர்கள் என்று கூறத் தயங்குவார்கள்.  

ஆனால், சாதாரண மொர்தெகாய் எனும் மனிதனால் வளர்க்கப்பட்ட எஸ்தர் குறித்து நாம் வேதத்தில் வித்தியாசமான செய்தியைப் பார்க்கின்றோம். உண்மையில் எஸ்தர் ஒரு அநாதை. மொர்தெகாய் எனும் யூதனின் சித்தப்பா மகள். "அவன் தன் சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பனில்லை; அந்தப் பெண் ரூபவதியும் செளந்தரியமுடையவளுமாயிருந்தாள்; அவள் தகப்பனும் அவள் தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் குமாரத்தியாக எடுத்துக்கொண்டான்." ( எஸ்தர் 2 : 7 ) என்று வாசிக்கின்றோம். 

இந்த எஸ்தர் இந்தியா முதல் எத்தியோப்பியா வரைக்குமுள்ள 127 நாடுகளை அரசாண்ட பிரமாண்ட சாம்ராஜ்யத்தின் ராணியாகிவிட்டாள். அகாஸ்வேர் ராஜாவின் மனைவியாகிவிட்டதால் இப்போது அவள் இந்த சாம்ராஜ்யத்தின் பட்டத்து ராணி.  ஆனால் அவளை வளர்த்து ஆளாக்கிய மொர்தெகாய் இப்போது ராஜாவின் அரண்மனை வாசல் காக்கும் காவல்காரன்!!  

இப்படி உயர்த்தப்பட்ட எஸ்தரைக் குறித்துதான் இன்றைய வசனம் கூறுகின்றது "எஸ்தர் மொர்தெகாயிடத்தில் வளரும்போது அவன் சொற்கேட்டு நடந்ததுபோல, இப்பொழுதும் அவன் சொற்கேட்டு நடந்துவந்தாள்" என்று. பெரிய சாம்ராஜ்யத்தின் ராணியானபின்பும் சாதாரண வாயில்காப்போனாகிய மொர்தெகாயை நன்றியோடு நினைவுகூர்ந்ததால்தான் அவனது சொல்கேட்டு நடந்தாள்.   

அன்பானவர்களே, இப்படி அவள் நடந்ததால் ஏற்பட்ட விளைவு நமக்குத் தெரியும். எஸ்தரைக்கொண்டு யூதர்களுக்கு மிகப்பெரிய மீட்பினை தேவன் ஏற்படுத்தினார். அவளால் யூதகுலம் அழியாமல் காப்பாற்றப்பட்டது. இன்றைய மனிதர்களைப்போல  எஸ்தர் நன்றி இல்லாமல் தன்னை வளர்த்த மொர்தெகாயை தவிர்த்து தனது பட்டத்து ராணி வாழ்க்கையையே பெரிதாக எண்ணியிருப்பாளேயானால் அவளது வாழ்வும் யூத குலமும்  அழிந்திருக்கும். 

நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் தான் ஜனாதிபதியானபின்பும் மறக்காமல் தனக்குப் பாடம் நடத்திய ஆசிரியரை நினைவுகூர்ந்து அவரை நேரடியாகச் சென்று பார்த்தது செய்தித் தாள்களில் வெளியாகி இருவரது மதிப்பையும் உயர்த்தியதை நாம் அறிவோம். 

வாழ்வில் எவ்வளவு பெரிய உயர்வு நமக்கு வந்தாலும் நாம் கடந்துவந்த பாதைகள், நமக்கு உதவியவர்களை மறக்காமலிருப்போம். ஏனெனில் எல்லா காரியத்துக்கும் ஒரு காரணம் உண்டு. நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள உயர் பதவிகள் அந்தஸ்து இவற்றின் வேர் நம்மை ஒருகாலத்தில் தாங்கிப்பிடித்த மக்கள்தான். அவர்களை மதிக்கும்போதுதான்  தேவ சமாதானம் நம்மை நிரப்பும். "தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது.......................................நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்." ( கொலோசெயர் 3 : 15 )

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

மீண்டும் எகிப்துக்குப் போகவேண்டாம்

ஆதவன் 🌞 810🌻 ஏப்ரல் 17, 2023 திங்கள்கிழமை





















"என் வாக்கைக் கேளாமல் பார்வோனின் பெலத்தினாலே பெலக்கவும், எகிப்தின் நிழலிலே ஒதுங்கவும் வேண்டும் என்று எகிப்துக்குப் போகிறவர்களுமாகிய முரட்டாட்டமுள்ள புத்திரருக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( ஏசாயா 30 : 2 )

வேதாகம அடிப்படையில் எகிப்து என்பது அடிமைத்தன வாழ்வைக்  குறிக்கின்றது. அது பாவத்துக்கு அடிமையாகிப்போன வாழ்வு. இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து மோசேமூலம் விடுவித்து வழி நடத்திய தேவன் அவர்களை மீண்டும் எகிப்துக்குப் போகவேண்டாம் என்று எச்சரித்தார். எகிப்துக்குத் திரும்புவோம் எனப்  பிடிவாதம்பிடித்த மக்களைத் தண்டித்தார். 

ஆம், பழைய ஏற்பாட்டு சம்பவங்களும் வசனங்களும் புதிய ஏற்பாட்டுக்கு நிழலாட்டமாய் இருக்கின்றன. மோசே இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து கானானுக்கு வழி நடத்தியதுபோல கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து பரம கானானை நோக்கி வழி நடத்துகின்றார். 

எனவேதான் தேவன் பல்வேறு எச்சரிப்புகளைக் கொடுத்தார்.

"கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்: நீங்கள் எகிப்துக்குப் போக உங்கள் முகங்களைத் திருப்பி, அங்கே தங்கப்போவீர்களானால், நீங்கள் பயப்படுகிற பட்டயம் எகிப்து தேசத்திலே உங்களைப் பிடிக்கும்; நீங்கள் ஐயப்படுகிற பஞ்சம் எகிப்திலே உங்களைத் தொடர்ந்துவரும், அங்கே சாவீர்கள்." ( எரேமியா 42 : 15,16 )

"என் கோபமும் என் உக்கிரமும் எருசலேமின் குடிகள்மேல் எப்படி மூண்டதோ, அப்படியே என் உக்கிரம் நீங்கள் எகிப்துக்குப் போகும்போது, உங்கள்மேல் மூளும் (எரேமியா 42:18)

புதிய ஏற்பாட்டில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் பாவங்கள் மன்னிக்கப்பட்ட ஒருவர் பழைய பாவ வாழ்கைக்குத் திரும்புவதை எகிப்துக்குத் திரும்பிச்  செல்வதாக எடுத்துக்கொள்ளலாம். எனவேதான் இன்றைய வசனம் எகிப்துக்குப் போகிறவர்களுக்கு ஐயோ என்று கூறுகின்றது. இதனையே அப்போஸ்தலரான பேதுரு தனது நிருபத்தில், "கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்." ( 2 பேதுரு 2 : 20 ) என எழுதுகின்றார். 

ஒருவர் பழைய பாவ வாழ்க்கையைத் தேடுவதற்கு உலக ஆசைதான் காரணமாய் இருக்கும். செல்வம், பதவி, அந்தஸ்து இவைகளுக்காக ஒருவர் பழைய எகிப்து வாழ்க்கையைத் தேடலாம். அன்பானவர்களே, எந்தச் சூழ்நிலையிலும் கர்த்தரைத் தேடாமல் அவரைவிட்டுப் பின்மாறிடாமல் நம்மைக் காத்துக்கொள்வோம்.  

"சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேகமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக் கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ! (எசாயா 31:1) என வேதம் நம்மை எச்சரிக்கின்றது. 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Friday, April 14, 2023

கனியுள்ள வாழ்க்கை

ஆதவன் 🌞 809🌻 ஏப்ரல் 16, 2023 ஞாயிற்றுக்கிழமை

 






















"அக்காலத்திலே நல்ல திராட்சை ரசத்தைத் தரும் திராட்சைத் தோட்டம் உண்டாயிருக்கும்; அதைக் குறித்துப் பாடுங்கள். கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன்".( ஏசாயா 27 : 2, 3 )

இஸ்ரவேல் வம்சத்தினரை வேதம் திராட்சைத் தோட்டத்துக்கு ஒப்பிட்டு பல்வேறு இடங்களில் குறிப்பிடுகின்றது.  "சேனைகளின் கர்த்தருடைய திராட்சைத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே" (ஏசாயா 5:7) என்றும் வாசிக்கின்றோம். இன்றைய வசனத்தில் ஏசாயா மூலம் தேவன் இஸ்ரவேல் வம்சத்தினரைக் காப்பாற்றி, அதற்குத் தண்ணீர் பாய்ச்சி அதனை ஒருவரும் சேதப்படுத்தாதபடி இரவும் பகலும் காத்துக்கொள்வேன் என்கின்றார். 

இஸ்ரவேல் மக்களைக் காப்பாற்ற தேவன் பல்வேறு முயற்சிகள் எடுத்தார். ஆனாலும் அவர்கள் தேவனுக்கு எதிராக பாவ காரியங்களில் ஈடுபட்டு தேவனால் தண்டிக்கப்பட்டனர். ஆனால் தேவன் தனது கிருபையால் அவர்களை மீண்டும் மீண்டும் தன்னோடு  சேர்த்துக்கொண்டார்.

இன்றைய புதிய ஏற்பாட்டுக் காலத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் கொண்டு ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் நாம்தான் இஸ்ரவேலர். அன்று இஸ்ரவேல் மக்களிடம் எதிர்பார்த்த மனம்திரும்புதலை தேவன் இன்றும் ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நம்மிடம் எதிர்பார்ப்பது மட்டுமல்ல, நாம்  மிகுந்த கனியுள்ள ஒரு வாழ்க்கை வாழவேண்டுமென்று விரும்புகின்றார். திராட்சைச் செடியான கிறிஸ்துவோடு இணைந்து வாழும்போதுதான் நாம் கனியுள்ள வாழ்க்கை வாழ முடியும். 

இயேசு கிறிஸ்து கூறுகின்றார், "நான் மெய்யான திராட்சைச்செடி, என் பிதா திராட்சைத் தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்." ( யோவான் 15 : 1, 2 ) ஆம், தேவன் நாம் அதிக கனி கொடுக்கிறவர்களாக இருக்கவேண்டுமென்பதற்காக நம்மைச் சுத்திகரித்துக்கொண்டிருக்கிறார். 

"கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன்" என்று கூறும் கர்த்தர் இப்படிச் செய்தபின்னரும் கனி கொடுக்கவில்லையானால் அறுத்துப்போடுவேன் எனஇயேசு கிறிஸ்து மூலம் கூறுகின்றார். 

கனியுள்ள  வாழ்க்கையே நம்மைக் கிறிஸ்தவர்களாக மற்றவர்களுக்கு அடையாளம் காட்டும். ஆவியின் கனிகள் குறித்து நாம் பல தியானங்களில் ஏற்கெனவே வாசித்துள்ளோம்.  கூடுமானால், கலாத்தியர் 5:22,23 வாசகங்களை வாசித்து தெளிவடைவோம். மேலும், எபேசியர் நிருபத்தில்  "ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்." ( எபேசியர் 5 : 9 ) என்று கூறப்பட்டுள்ளது. 

அன்பானவர்களே,நாம் செய்யவேண்டியது கிறிஸ்துவோடுள்ள நமது  இணைப்பை இழந்துவிடாமல் இருப்பதே.  அவரோடு இணைந்து வாழ்வோமானால் கனியுள்ளவர்களாக இருப்போம். அப்போது நம்மூலம் பிதாவாகிய தேவன் மகிமைப்படுவார். நாமும் கிறிஸ்துவுக்குச் சீடர்களாக இருப்போம். 

"நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்."( யோவான் 15 : 8 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே

ஆதவன் 🌞 808🌻 ஏப்ரல் 15, 2023 சனிக்கிழமை












"கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்." ( பிலிப்பியர் 2 : 15, 16 )

கிறிஸ்துவின் பாடுகளைத் தியானித்த பரிசுத்தவான் ஒருவர் கூறுவார், இயேசு கிறிஸ்து கெத்செமெனி தோட்டத்தில் இரத்த வேர்வை வியர்த்து  பின் யூதர்களிடமும் ஒப்புக்கொடுக்கப்பட்டு பல்வேறு பாடுகள்பட்டு இறுதியில் சிலுவைச் சாவை ஏற்றார். பொதுவாக நாம் இவற்றையே இயேசு பட்ட பாடுகளாக எண்ணிக்கொள்கின்றோம். ஆனால் அவர் இந்த உலகினில் வாழ்ந்த முப்பத்தி மூன்றரை  ஆண்டுகளும் தொடர்ந்து பாடுபட்டார். உதாரணமாக நாம் தெரு ஓரத்தில் இருக்கும் சாக்கடைக்குள் வசித்து, உண்டு உறங்க முடியுமா? இயேசு அதற்கு ஒப்பான காரியத்தைச் செய்தார். இதுவே அவருக்கு மிகப்பெரிய பாடாக இருந்திருக்கும். 

பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என தூதர்கள் வாழ்த்த மகா பரிசுத்த ஸ்தலத்தில் வாழ்ந்த அவர் இந்த உலகினில் பாவ மனிதர்கள் மத்தியில் வாழ்வது அவருக்கு எவ்வளவு துன்பமும் வேதனையான காரியமாக இருந்திருக்கும்?  சாதாரண மனிதர்களான நம்மாலேயேகூடச் சிலத் துன்மார்க்க  மனிதர்களோடு 24 மணிநேரம் வாழ முடிவதில்லை.  ரயிலில் பயணம் செய்யும்போது சில வேளைகளில் குடிகாரரும் சீட்டாட்டக்காரர்களும் கூடி கும்மாளமடித்துக்கொண்டிருந்தால் நம்மால் அந்த இடத்தில அவர்களோடு பயணம் செய்வது மனதுக்கு கஷ்டமாக இருக்கின்றது. ஆனால் கிறிஸ்து இத்தகைய மனிதர்களோடு  முறுமுறுக்காமல் வாழ்ந்தார். 

உலக மனிதர்களை அப்போஸ்தலரான பவுல் அடிகள் கோணலும் மாறுபாடுமான சந்ததி என்று இன்றைய வசனத்தில் கூறுகின்றார். இந்த "கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்." என்கின்றார் அவர். அதாவது நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்கள் எப்படி வாழ்ந்தாலும் பரவாயில்லை,  நாம் அவர்கள் மத்தியில் குற்றமற்றவர்களாகவும் கபடம் இல்லாதவர்களும், தேவனுக்கேற்றபடி மாசற்றவர்களாகவும் வாழவேண்டும் என்று அறிவுறுத்துகின்றார்.  மட்டுமல்ல, அவர்களது செயல்பாடுகளை எண்ணி முறுமுறுக்காமலும் அவர்களோடு தர்க்கம் செய்யாமலும் வாழவேண்டும் என்கின்றார். 

இது சற்று கடினமான செயல்தான். ஏனெனில் இந்த உலகத்தில் நாம் பல்வேறு வகை மக்களைச் சந்திக்கின்றோம். அவர்கள் எல்லோரோடும் நம்மால் ஒத்துப்போக முடியாது. ஆனாலும் நம்மால் முடியுமட்டும் சகித்துக்கொள்வது மேலான காரியம் என்பதால் அப்போஸ்தலரான பவுல் அடிகள் இப்படிக் கூறுகின்றார். இயேசு கிறிஸ்து இப்படியே இந்தக் கோணலான சந்ததிகளுக்குள் வாழ்ந்தார். அவர் பாடுகள்பட்டபோதுகூட இப்படியே சகித்துக்கொண்டு வாழ்ந்தார். இதனை அப்போஸ்தலரான பேதுரு, "அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்." ( 1 பேதுரு 2 : 23 ) என்று எழுதுகின்றார். 

நாமும் குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யும் வல்லமைவேண்டி ஜெபிப்போம்.  

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Wednesday, April 12, 2023

இதுவே மேலான ஆசீர்வாதம்.

ஆதவன் 🌞 807🌻 ஏப்ரல் 14, 2023 வெள்ளிக்கிழமை



"அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர் களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்." ( எபேசியர் 2 : 1 )

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பின் மகிமையினைக் கொண்டாடிய நாம் அவரது உயிர்ப்பு மனுக்குலத்துக்குக் கொண்டுவந்த ஆசீர்வாதத்தைக்குறித்து இன்னும் அதிகம்  தியானிப்பது நல்லது. 

இயேசு கிறிஸ்து தான் மரித்து உயிர்ததுமட்டுமல்ல, அவரை விசுவாசித்து இரட்சிப்பை அடையும் அனைவரையும் பாவத்திலிருந்து உயிர்ப்பிக்கின்றார்.  பாவத்தால் மரித்து அவருடைய மரணத்தின் சாயலில் இணைக்கப்பட்டிருந்தோம் நாம். அப்படி மரணமடைந்திருந்த நம்மை அவர் உயிர்ப்பித்தார். ஆம், அவரை விசுவாசித்து நமது பாவங்கள் கழுவப்படும்போது அவரது உயிர்தெழுதலின் சாயலிலும் நாம் இணைக்கப்படுவோம். 

இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்." ( ரோமர் 6 : 5 )எனக் கூறுகின்றார். 

இப்படி, "நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்." ( எபேசியர் 2 : 3 ) அப்படி இருந்த நம்மை கிறிஸ்து விடுவித்தார். "அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்". ( எபேசியர் 2 : 5 )

அன்பானவர்களே, இப்படி பாவத்துக்கு மரித்திருந்த நாம் கிறிஸ்துவின் இரத்தத்தால் பாவமன்னிப்படைந்து மீட்கப்படும்போது கிறிஸ்துவோடுகூட உயிர்த்தெழுகின்றோம். இதுவே முதலாம் உயிர்த்தெழுதல். இப்படி கிறிஸ்துவோடு நாம் உயிர்ந்தெழும்போது பாவத்துக்கு விலகி பரிசுத்தமாக வாழ முடிகின்றது. இப்படி வாழும்போது நம்மேல் இரண்டாம் மரணத்துக்கு அதிகாரமில்லை. அதாவது, நமது  ஆத்துமா நித்திய நன்றாக அக்கினிக்குத் தப்பிவிடுகின்றது. மட்டுமல்ல, நாம்  தேவனோடு இருந்து அரசாள்வோம். 

"முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 20 : 6 )

அன்பானவர்களே, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மனிதர்களுக்குத் தரும் மிகப்பெரிய கொடை இதுதான். ஆம், அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர் களாயிருந்த நம்மை உயிர்ப்பித்தது மட்டுமல்ல, நம்மைப் பரிசுத்தமாக்கி தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராகவும் மாற்றுகின்றார். 

கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து அவரது மீட்பில் நமக்கு இடம்தர வேண்டுவோம். எந்த உலக ஆசீர்வாதங்களையும்விட இதுவே மேலான ஆசீர்வாதம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

மகிமையின் அறிவாகிய கிறிஸ்துவின் ஒளி

ஆதவன் 🌞 806🌻 ஏப்ரல் 13, 2023 வியாழக்கிழமை




















"இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்." ( 2 கொரிந்தியர் 4 : 6 )

கிறிஸ்து இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டு வாழும்போது ஏற்படும் மகிமையான அனுபவத்தை அப்போஸ்தலரான பவுல் அடிகள் இன்றைய வசனத்தில் விளக்குகின்றார். அதாவது, ஆதியில் உலகத்தை உண்டாக்கியபோது இருளிலிருந்து ஒளியைப் பிரித்து உலகை ஒளியாக்கிய தேவன் இன்று தனது குமாரனான இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள மகிமையான ஒளியை நமது இருதயங்களில் பிரகாசிக்கச் செய்கின்றார். அப்படி அவர் நமது உள்ளங்களை ஒளியாக்குவதால் நம்மிலிருந்து பாவ இருள் அகலுகின்றது. 

ஆதியில் "பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று." ( ஆதியாகமம் 1 : 3 ) என்று வாசிக்கின்றோம். ஆம், வெறுமையாகவும் இருளாகவும், ஒழுங்கின்மையுமாக இருந்த பூமியை தேவன் சரியாக்கியதுபோல நமது இருதயத்தில் ஒளிரும் கிறிஸ்துவின் ஒளி நம்மையும்  சரியாக்கும். 

இந்த ஒளி நமது சுய வல்லமையால் நம்மில் ஒளிரவில்லை. மாறாக தேவனால் உண்டாயிருக்கின்றது. இந்த ஒளியை நாம் நமது உடலாகிய மண்பாண்டத்தில் பெற்றிருக்கின்றோம் என்று பவுல் அடிகள் அடுத்த வசனத்தில் எழுதுகின்றார். "இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாகியிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்."( 2 கொரிந்தியர் 4 : 7 )

அன்பானவர்களே, கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது நமக்குக் கிடைக்கும் ஆசீர்வாதம் இதுதான். அதாவது, நமது இருதயத்தினுள் அவர் வருவதால் நாம் ஒளியுள்ளவர்கள் ஆகின்றோம்.  மட்டுமல்ல, இந்த ஒளி நமக்குத் திட நம்பிக்கையினையும் எதனையும் தாங்கும் மன வலிமையையும் கொடுக்கின்றது. எனவேதான் பவுல் அடிகள் தொடர்ந்து பின்வருமாறு எழுதுகின்றார்:-

"நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப் போகிறதில்லை; கலக்கமடைந்தும் மன முறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப் படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை." ( 2 கொரிந்தியர் 4 : 9 )

ஆம், கிறிஸ்து நமது உள்ளத்தில் வரும்போது நமக்கு கிடைக்கும் ஆவிக்குரிய மேலான ஆசீர்வாதம் இதுதான். துன்பத்தையும் பிரச்சனைகளையும் மேற்கொண்டு வெற்றிச்சிறந்தவர்களாக நாம் வாழ இந்த ஒளி உதவுகின்றது. 

எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார்,  "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்." ( யோவான் 16 : 33 ) உலகத்தில் வெற்றியுள்ள ஒரு வாழ்க்கை வாழ நம்மைக் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுப்போம். அவரே தனது முகத்திலுள்ள மகிமையின் அறிவாகிய ஒளியை நமது இருதயங்களிலே பிரகாசிக்கச் செய்வார்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com