இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Friday, September 09, 2022

"அதிகம் காணிக்கைக் கொடுப்பவனுக்கு தேவன் அதிகம் கொடுப்பார்" என்பது சாத்தானின் உபதேசம்.

  ஆதவன் 🖋️ 592 ⛪ செப்டம்பர் 11,  2022 ஞாயிற்றுக் கிழமை


"ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்." ( 2 கொரிந்தியர் 11 : 3 )

ஆதியில் ஏதேன் தோட்டத்தில்  பாம்பு ரூபத்தில் வந்த சாத்தான் ஏவாளை வஞ்சித்தது. தேவனது வார்த்தையினை மாற்றிப்பேசி அவளைத் தான் சொல்லுவதுதான் சரி என்று நம்பச் செய்தது. இங்குத்  தவறான உபதேசங்களை பவுல் அடிகள் சாத்தானின் வஞ்சக உபதேசத்துக்கு ஒப்பிட்டுப் பேசுகின்றார். 

கிறிஸ்துவின்மேலான உண்மையான விசுவாசத்துக்குத் தடையான உபதேசங்கள், கிறிஸ்துவின்மேல் மெய்யான அன்பு ஏற்படுத்துவதற்குத் தடையான உபதேசங்கள் எல்லாமே சாத்தானின் வஞ்சக உபதேசங்கள்தான்.  

வேதத்தில் சொல்லப்படாத கிறிஸ்துவைப் பிரசங்கிப்பது சாத்தானின் வஞ்சக உபதேசம். ஒருவேளை இத்தகைய போதனைகளைக் கேட்க மக்கள்  கூட்டம் அதிகம் சேரலாம், மற்றபடி இது வேறொரு கிறிஸ்துவைப் போதிப்பதே,  "எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால்,  ( 2 கொரிந்தியர் 11 : 4 )  அது சாத்தானின் உபதேசம்.

புதிய ஏற்பாட்டின்படி  நமது உள்ளத்தையும் உடலையும் பரிசுத்தமாகப்  பாதுகாத்து உயிருள்ள  ஜீவ பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுப்பதே புத்தியுள்ள மெய்யான ஆராதனை. (ரோமர் 12:1) இதுவே ஆவிக்குரிய ஆராதனை. மட்டுமல்ல, இதுவே ஆவிக்குரிய ஆசீர்வாதத்தின் முதல் படி. ஆனால் ஒருவன், "நீ ஆயிரம் ரூபாய் காணிக்கைக் கொடுத்தால் உனக்கு பத்தாயிரமாகத் தேவன் திருப்பித் தருவார், அதிகம் காணிக்கைக் கொடுப்பவனுக்கு தேவன் அதிகம் கொடுப்பார்" எனப் பிரசங்கித்தால் அது ஏவாளை வஞ்சித்த சாத்தானின் உபதேசம்.  

ஏவாள் இப்படித்தான் வஞ்சிக்கப்பட்டாள்.  "தோட்டத்தின் நடுவிலிருக்கும் மரத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை புசிக்கும் நாளில் சாகவே சாவாய்" என்று தேவன் ஆதாம் ஏவாளிடம் கூறியிருந்தார். ஆனால் இன்று ஆசீர்வாத போதகர்கள் ஆசீர்வாதத்தின் அர்தத்தினையும் அதனைப் பெறும் வழிகளையும் மறைத்துப் பிரசங்கிப்பதுபோல சாத்தானும் ஏவாளிடம் மாற்றிப் போதித்தான்.  

"அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது." ( ஆதியாகமம் 3 : 4, 5 )

இதனைத்தான் அப்போஸ்தலரான பவுல் அடிகள் இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில், "ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்." என்று குறிப்பிடுகின்றார்.

அன்பானவர்களே, பவுல் அடிகள் பயப்பட்டதுபோலவே இன்று நடைபெறுகின்றது. பிற மதத்து மக்கள்  இன்றைய பல ஊழியர்களது போதனைகள், அவர்களது செயல்பாடுகளால் கிறிஸ்தவ மார்க்கத்தின்மேல் சரியான புரிதல் கொள்ளமுடியாமல் இருக்கின்றனர். ஆம், சத்தியத்தை இப்படித் திரித்துப் போதிப்பது சாத்தானுக்கு ஏற்புடையதாக இருப்பதால் சாத்தான் இவர்களது ஊழியங்களைப் பரிபூரணமாக ஆசீர்வதித்திருக்கின்றான். 

தேவனுடனான நமது தனிப்பட்ட  உறவில் நாம் வளர்ந்தால் மட்டுமே நாம் இந்த வஞ்சக போதனைகளுக்குத் தப்பி சத்தியத்தை அறிய முடியும்.  ஆலயங்களுக்குச் செல்வது, வேதாகமம் வாசிப்பது, ஜெபக்கூட்டங்களில் பங்கு பெறுவது மட்டும் போதாது. நமது தனி ஜெபம்தான் தேவனோடுள்ள உறவைப் பலப்படுத்தும். அந்த உறவு பலப்படும்போது மட்டுமே சாத்தானின் தந்திரங்களுக்குத் தப்பி ஒரு மெய்யான ஜெயமுள்ள ஆவிக்குரிய  வாழ்வு வாழ முடியும்.   

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712   

Wednesday, September 07, 2022

சினிமா நடிகர்களுக்கு ரசிகர்கள் இருப்பதுபோல ஊழியர்களுக்கும் ரசிகர் கூட்டம்

 ஆதவன் 🖋️ 591 ⛪ செப்டம்பர் 10,  2022 சனிக்கிழமை

"என் ஜனங்கள் காணாமற்போன ஆடுகள், அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைச் சிதறப்பண்ணி, பர்வதங்களில் அலையவிட்டார்கள்; ஒரு மலையிலிருந்து மறுமலைக்குப் போனார்கள்; தங்கள் தொழுவத்தை மறந்துவிட்டார்கள்." ( எரேமியா 50 : 6 )

கிறிஸ்துவை விட்டு ஊழியர்களை மகிமைப்படுத்தும் கூட்டம் இன்று பெருகிவிட்டது. கவர்ச்சியாக பேசும் ஊழியனின் பின்னால் ஒரு கூட்டம், பொய் ஆசீர்வாதங்களையே பேசி மக்களை மயக்கும் ஊழியனின் பின்னால் ஒரு கூட்டம், ஊழியம் எனும் பெயரால் இசை ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் மனிதனின்பின்னாலும் கிளப் டான்ஸ் போல நடனமாடும் ஊழியனின் பின்னாலும் மதிமயங்கி ஒரு கூட்டம் என  இன்று சினிமா நடிகர்களுக்கு ரசிகர்கள் இருப்பதுபோல ஊழியர்களுக்கும் ரசிகர் கூட்டம்.  

ஆம், இவர்களைத்தான் தங்கள் தொழுவத்தை மறந்த ஆடுகளாக எரேமியா காண்கின்றார்.  நமது தொழுவமும், தொழுவத்துக்கு வாசலும்  ஆயனும்  கர்த்தருமாகிய  இயேசு கிறிஸ்துதான். (யோவான் 10). ஆனால் இன்று தங்களைக் கிறிஸ்தவ  விசுவாசிகள் என்று கூறிக்கொள்ளும் பலர் கிறிஸ்துவைவிட இந்த ஊழியர்களை அன்புசெய்பவர்களாக இருக்கின்றனர்.  இந்த ஊழியர் அடிமை விசுவாசிகள் பதிவிடும் முகநூல் பதிவுகள், வாட்ஸப் செய்தி பகிர்வுகள் இவர்கள் குறிப்பிட்ட  ஊழியர்களின் விசிறிகள் என்பதை  வெளிக்காட்டுகின்றனவே தவிர இவர்கள் கிறிஸ்துவை அறிந்தவர்கள் என்பதைப் பிரதிபலிப்பதில்லை. தாங்கள் துதிபாடும்  இந்த ஊழியர்கள் பேசுவதும் செய்வதும் வேதத்துக்கு ஏற்புடைவைதானா என்று கூட இந்த விசிறிகள் பார்ப்பதில்லை.    

இந்த என் ஜனங்கள் காணாமற்போன ஆடுகள், அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைச் சிதறப்பண்ணி, பர்வதங்களில் அலையவிட்டார்கள்; ஒரு மலையிலிருந்து மறுமலைக்குப் போனார்கள் என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. ஆம், இவர்கள் கிறிஸ்துவைவிட்டுக் காணாமல் போய்விட்டார்கள். இவர்களுக்கு உபதேசங்கள், போதனைகள் இவற்றை கிறிஸ்துவின் ஆவியானவர் கொடுக்கவில்லை. மாறாக இவர்கள் அடிமைகளாக இருக்கும் பிரபல ஊழியர்கள் தான் கொடுக்கின்றனர். அவர்கள்தான் இவர்களை வழி நடத்துகின்றனர். கிறிஸ்துவுக்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 

இப்படி அடிமைகளாக இருக்கும் இந்த விசுவாசிகள் ஏதோ குறிப்பிட்ட ஒரு சம்பவத்தில் இவர்கள் நம்பிப்  பின்பற்றும் ஊழியர் பெரிய தவறு செய்யும்போது மனம் வேதனைப்பட்டு மற்றுமொரு பிரபல ஊழியனின் அடிமைகளாக மாறுகின்றனர். ஆம், அவர்கள் இன்றைய வசனம் கூறுவதுபோல மேய்ச்சலைத் தேடி , ஒரு மலையிலிருந்து மறுமலைக்குப் போகிறார்கள். ஆனாலும் இறுதிவரை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குத் தங்களை ஒப்புவித்து அவரது வழிநடத்துதலுக்குள் வரத் தயங்குகிறார்கள். காரணம் கிறிஸ்துவின் மெய்யான உபதேசம் இவர்களுக்குக் கசக்கிறது; இவர்களது வாழ்க்கையின் அலங்கோலங்களை வெளிப்படுத்தி அவர்களது இருதயத்தைக் குத்துகின்றது. 

அன்பானவர்களே, குறிப்பிட்ட ஊழியர்களுக்கு அடிமை எனும் நிலையிலிருந்து வெளிவரும்போது மட்டுமே கிறிஸ்துவின் அன்பையும் வழிகாட்டுதலையும் ருசிக்க முடியும்; அப்போது மட்டுமே பாவத்திலிருந்து விடுதலையையும், பாவத்தை மேற்கொள்ளும் வல்லமையையும் பெற முடியும். 

தொழுவத்தை மறந்த ஆடுகளாய் ஒரு மலையிலிருந்து மறு மலைக்கு அலைந்துதிரியும் அவல  நிலையிலிருந்து விடுபட்டு பிரதான மேய்ப்பனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தொழுவத்துக்கு வந்து சேரும்போதே நாம் அவரால் அறிந்துகொள்ளப்பட்டவர்கள் ஆவோம்.  

"அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது."( யோவான் 10 : 4 ) என்று இயேசு கிறிஸ்து கூறிய இந்த வார்த்தைகள் வெறும் வசனமல்ல, ஆவிக்குரிய மேலான அனுபவம். ஆடுகள் தொழுவத்துக்குள் வரும்போது மட்டுமே இந்த அனுபவத்தைப் பெற முடியும். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                                                

ஞானஸ்நானம் தேவனுக்கும் நமக்குமான ஒரு ஒப்பந்தம் (Agreement )

  ஆதவன் 🖋️ 590 ⛪ செப்டம்பர் 09,  2022 வெள்ளிக்கிழமை


"ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது." (1 பேதுரு 3:21)

ஞானஸ்நானம் என்பது விசுவாசிகள் மேற்கொள்ளவேண்டிய  முக்கிய கடமையாக வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஞானஸ்நானம் பெறும் விசுவாசி கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதாக அறிக்கையிட்டு அதன் அடையாளமாக நீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெறுகின்றார்.  இது நீரில் மூழ்கி உடலின் அழுக்கை நீக்குதலல்ல, குளிப்பதுபோலத் தெரிந்தாலும் இது குளிப்பதல்ல. மாறாக அப்போஸ்தலரான பேதுரு கூறுவதுபோல தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கை. 

அதாவது இது தேவனுக்கும் நமக்குமான ஒரு ஒப்பந்தம் (Agreement ). இதுவரை உலக மனிதனாக வாழ்ந்த நான் இன்றுமுதல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை என் ஆத்தும இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன். இனி நான் கிறிஸ்துவுக்கு உரியவன் என்று நாம் அறிக்கையிடுகின்றோம்.   

ஆனால் இன்று பல கிறிஸ்தவ சபைகளில் ஊழியர்கள் இவை எதனையும் கணக்கில்கொள்ளாமல் சபையின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டி தங்கள் சபைக்கு  வருகின்ற எல்லோருக்கும் ஞானஸ்நானம் கொடுக்கின்றனர். ஞானஸ்நானத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அறிக்கைசெய்வதும், பாவத்திலிருந்து மனம் திரும்புவதும்  தான் முக்கிய அம்சம். ஆனால் இன்று பலர் கடமைக்காக, சாதாரண ஒரு கட்டளைக்குக் கீழ்படிவதுபோல எந்த வித ஆத்தும இரட்சிப்பு அனுபவமோ பாவ மன்னிப்பின் நிச்சயமோ இல்லாமல் ஞானஸ்நானம் பெறுகின்றனர். இதனால் சாட்சி வாழ்க்கையினை இவர்களிடம்  நாம் காண முடிவதில்லை. 

மனம் திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தை யோவான் ஸ்நானன் கொடுத்துவந்தார். (மத்தேயு 3) ஆனால் அவரிடம் இயேசு கிறிஸ்துவும் ஞானஸ்நானம் பெற்றார். அவர் மனம் திரும்புதலுக்காக ஞானஸ்நானம் பெறவில்லை. காரணம், பாவமில்லாத அவர் மனம் திரும்பவேண்டிய அவசியமில்லை. அவர் நீதியை நிலை நாட்டவே ஞானஸ்நானம் பெற்றார். (மத்தேயு 3: 15) ஆம், ஞானஸ்நானம் பெறவேண்டுமென்பது பிதாவாகிய தேவன் வகுத்துள்ள நீதி. அதற்குக் கீழ்படியவேண்டியே இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றார்.   

எத்தியோப்பிய நிதி மந்திரி பிலிப்பு மூலம் இயேசு கிறிஸ்துவை அறிந்து விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுவதை நாம் அப்போஸ்தலர்  பணி புத்தகத்தில் வாசிக்கின்றோம். பிலிப்பு அவரிடம், நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் ஞானஸ்நானம் பெறத் தடையில்லை என்று கூறியபோது மந்திரி, "இயேசு கிறிஸ்துவைத் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன்" என்று சொல்லி ஞானஸ்நானம் பெற்றார். ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 8 : 37 )

அப்போஸ்தலரான பவுல், இயேசு கிறிஸ்துவை நேரடியாகத் தரிசித்து ஞானஸ்நானம் பெற்றார்.  ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 9 )

பிலிப்பு சமாரியாவில் நற்செய்தி அறிவித்தபோது சீமோன் எனும் மாயவித்தைக்காரனும் அவரிடம் ஞானஸ்நானம் பெற்றான்.  அவன் மெய்யான மனம் திரும்புதல் இல்லாமல் பிலிப்பு செய்த அற்புதங்களையும் அதிசயங்களையும் கண்டு அதிசயித்து ஞானஸ்நானம் பெற்றான். ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:13  ) எனவேதான் அவன் பணத்தின்மூலம் பரிசுத்த ஆவியானவரின் வரத்தைப் பெறுவதற்கு முயன்றான். அப்போஸ்தலரான பேதுரு அவனைப்பார்த்து, "நீ உன் துர்க்குணத்தைவிட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 8 : 22 ) என்கின்றார். 

அன்பானவர்களே, இன்றும் பலர் இப்படியே மாயவித்தைக்காரனான சீமோனைப்போல  மெய்யான மனம் திரும்புதல் இல்லாமல் வெறும் உணர்ச்சிகளின் அடிப்படையில் ஞானஸ்நானம் பெறுகின்றனர். 

பலர் ஊழியர்களால் வற்புறுத்தப்பட்டு ஞானஸ்நானம் பெறுகின்றனர். இப்படி ஊழியர்களின் வற்புறுத்தலுக்கு உட்படாமல் மெய்யாகவே கிறிஸ்துவை ஏற்று, பாவ மன்னிப்பின் நிச்சயம் பெற்று ஞானஸ்நானம் பெறுவதே வேதம் காட்டும் வழி. இது தேவனுக்கும் நமக்குமான ஒரு ஒப்பந்தம் (Agreement ) என்பதை மறந்துவிடக் கூடாது. 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                                                

Monday, September 05, 2022

பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்

ஆதவன் 🖋️ 589 ⛪ செப்டம்பர் 08,  2022 வியாழக்கிழமை

"அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்" ( கலாத்தியர் 1 : 4 )

இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனிதனாகப் பிறந்ததற்கான காரணத்தை அப்போஸ்தலரான பவுல் இன்றைய வசனத்தில் கூறுகின்றார்.  அதாவது இந்த பொல்லாத உலக காரியங்களிலிருந்து நம்மை விடுவித்து; உலக பாவ இச்சைகள்,  நாட்டங்களிலிருந்து நம்மை விடுவித்து,  நம்மைக் காக்கும்படி பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படி தன்னை ஒப்புக்கொடுத்தார். 

பல்வேறு நீதிச் சட்டங்களை தேவன் கொடுத்திருந்தும் மனிதர்களால் அவற்றின்படி வாழ முடியவில்லை. மேலும், இந்த உலக மனிதர்களும்கூட பல நீதிகளைக் கூறியுள்ளனர்.  திருக்குறள், நன்னெறி, ஆத்திச்சூடி நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது,      திரிகடுகம்,   ஆசாரக்கோவை,  பழமொழி நானூறு,  சிறுபஞ்சமூலம்,  முதுமொழிக்காஞ்சி எனத் தமிழில் உள்ளதுபோல வேறு எந்த  மொழியிலும் நீதிநூல்கள் இல்லை. அனால் இவைகளால் மனிதர்களை நல்வழிப்படுத்த முடியவில்லை. உலகத்திலிருந்து விடுவிக்க முடியவில்லை. 

நீதி போதனைகள் மனிதர்களை நல்வழிப்படுத்தி தேவனுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கிட முடியாது. எனவேதான் இயேசு கிறிஸ்து உலகினில் பிறந்து இரத்தம் சிந்தி பாடுபட்டு நித்திய மீட்பினை ஏற்படுத்தினார். அவர்மேல் விசுவாசம்கொண்டு அவர் தரும் மீட்பினைப் பெறும்போது மட்டுமே நாம் பாவத்திலிருந்தும் உலக ஆசைகளிலிருந்தும் விடுதலை பெறமுடியும்.    

ஆனால் இந்த சத்தியங்கள் பவுல் அடிகள் காலத்திலேயே அப்போதிருந்த ஊழியர்களால் மறைக்கப்பட்டன. இப்போதுள்ள பண ஆசை ஊழியர்கள் மனிதர்களுக்கேற்பவும்  , மனிதர்களைத் திருப்திப்படுத்தவும்  பிரசங்கிப்பதுபோல வேத சத்தியங்களைத் திரித்தும் மறைத்தும் பிரசங்கித்தார்கள். ஆனால் அப்போஸ்தலரான பவுல் தான் அப்படிப்பட்டவனல்ல என்று கூறுகின்றார். 

"இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே." ( கலாத்தியர் 1 : 10 ). ஆம், மனிதரைப் பிரியப்படுத்தும்படி ஊழியம் செய்பவன் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்ல.

ஆசீர்வாதங்களையே பிரசங்கிப்பவன் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்ல. வேத சத்தியங்களின்படி கிறித்து ஏன் உலகத்தில் வந்தார் என்பதை எடுத்துக்கூறி, அவர் அளிக்கும் மீட்பினையும் மக்களுக்கு எடுத்துச்சொல்லி அதனை அடைந்திட மக்களுக்கு  வழி காட்டுபவனே கிறிஸ்துவின் ஊழியன். 

எனவே, உலக ஆசீர்வாதம் பெறுவதையே குறிக்கோளாகக்கொண்டு சத்தியத்தை மறுதலிக்கும்  ஊழியர்களைத் தேடி ஓடாமல் கிறிஸ்துவை நோக்கி ஓடக்கடவோம்.  இதனை எபிரெய  நிருப ஆசிரியர் அழகாகக் கூறுகின்றார், "அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்." ( எபிரெயர் 13 : 12,13 )

ஆம்  அன்பானவர்களே, கிறிஸ்துவின் சிலுவையினை அன்றாடம் சுமந்துகொண்டு பாளயத்துக்குப் புறம்பே (உலக ஆசைகளுக்குப் புறம்பே) அவரிடத்துக்குப் புறப்பட்டுப் போவோம். உலகம் கொடுக்க முடியாத நித்திய சமாதானத்தினாலும், பரிசுத்த வாழ்க்கை வாழ மீட்பு அனுபவத்தினாலும் அவர் நம்மை நிரப்பி நடத்துவார்.  

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                                                

Sunday, September 04, 2022

அவரை எதிர்கொள்ள எப்போதும் நாம் ஆயத்தமாய் இருக்கவேண்டியது அவசியம்.

 ஆதவன் 🖋️ 588 ⛪ செப்டம்பர் 07,  2022 புதன்கிழமை

"கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே" ( யாக்கோபு 5 : 7, 8 )

இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் அப்போஸ்தலரான யாக்கோபு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு நாம் காத்திருக்கவேண்டியதை விவசாயத்துடன் ஒப்பிட்டுப் பேசுகின்றார். 

விவசாயம் செய்பவர்கள் குறிப்பிட்டக் காலங்களைக் கணக்கிட்டு விவசாயத்துக்கான முன் ஏற்பாடுகளைச் செய்வார்கள். அக்டோபர் மாதம் மழை வரும் என்பது தெரியுமானதால் விவசாயம் செய்பவர்கள் விதைகளையும் விவசாயத்துக்குத் தேவையான பொருட்களையும் சேகரித்துவைத்து மழையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். முதல் மழை விழுந்ததுமே விதையை விதைத்து விடுவார்கள்.  

சில ஆண்டுகளில் மழை குறிப்பிட்ட காலத்தில் பெய்யாமல் கால தாமதம் ஆகிவிடும். அப்போது விவசாய வேலைகள்  தாமதமாகத் துவங்கும். எந்த விவசாயியும் மழை வருவதற்குத் தாமதமாகிவிட்டால் விதையை விதைக்க மாட்டான்.  பெறுமையோடு காத்திருந்து நிலத்தைப் பண்படுத்துவான். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை சமீபமானதால் நாமும் விவசாயிகள் முன் தயாரிப்புச் செய்வதுபோல பொறுமையோடு காத்திருந்து நமது இருதயங்களை ஸ்திரப்படுத்தவேண்டும்  என்கின்றார் யாக்கோபு. 

இன்று பல ஊழியர்களும் வருகைக்கு ஆயத்தப்படுதல் குறித்துப் பேசுகின்றனர். வருகைக்கு ஆயத்தப்படுதல் என்பது சிறப்பான பலவிதச்  செயல்பாடுகளைச் செய்வதல்ல, மாறாக, வேதத்தில் கூறப்பட்டுள்ள வாழ்க்கை வாழ்வதுதான். 

நாம் வாழவேண்டிய வழிமுறைகள், போதனைகள் எல்லாமே ஏற்கெனவே வேதத்தில் கூறப்பட்டுள்ளன. அவற்றின்படி வாழ்வதுதான் வருகைக்கு ஆயத்தப்படுதல். ஆனால் பல கிறிஸ்தவர்களுக்கும் இயேசுவின் இரண்டாம் வருகை குறித்து பேசும்போது அது சிரிப்புக்குரியதாகத்தான் தெரிகின்றது. "இரண்டாயிரம் ஆண்டுகளாக இயேசு வருகிறார் என்றுதான் கூறிக்கொண்டிருக்கிறார்கள் எப்போதுதான் வருவார்?" என்கின்றனர். இவர்களுக்கு அப்போஸ்தலரான பேதுரு கூறுகின்றார்:- 

"அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்." ( 2 பேதுரு 3 : 4 )

"தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." ( 2 பேதுரு 3 : 9 ) ஆம், எல்லோரும் மனம்திரும்பித்  தூய ஒரு வாழ்க்கை வாழவேண்டும், ஒருவருமே கெட்டுபோய்விடக்கூடாது என்பதற்காகவே அவரது வருகை தாமதமாகின்றது. 

மேலும், நமது காலத்தில் அவர் வருகின்றாரோ இல்லையோ நாம் எப்போது மரித்தாலும் அவரை எதிர்கொள்ளவேண்டியது வரும். அது எப்போதும் நிகழலாம். எனவே நாம் எப்போதும் ஆயத்தமாய் இருக்கவேண்டியது அவசியம். 

அன்பானவர்களே, அப்போஸ்தலரான யாக்கோபு கூறுவதுபோல ஒரு விவசாயி பருவகாலத்துக்குக் காத்திருந்து முன் ஏற்பாடுகள் செய்வதுபோல நாமும் கிறிஸ்துவின் வருகைக்கு முன்னேற்பாடுகள் செய்து காத்திருக்கவேண்டியது அவசியம். அவர் வரும்போது கைவிடப்பட்டவர்களாக நாம் ஆகிவிடக்கூடாது. ஆவியானவரின் துணையோடு கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாவோம்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                                                

மனிதன் பாவத்தினாலும் விசுவாசக் குறைவினாலும் பாதிக்கப்படும்போது, தேவன் அவனைத் தள்ளிடாமல் இருக்கிறார்.

  ஆதவன் 🖋️ 587 ⛪ செப்டம்பர் 06,  2022 செவ்வாய்க்கிழமை

"நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே." ( ஏசாயா 57 : 16 )

நாம் அனைவருமே அவரைப்போல பரிசுத்தர்களாக மாறவேண்டும் என தேவன் எதிர்பார்க்கின்றார். ஆனால், மனிதர்கள் அப்படி முற்றிலும் பரிசுத்தமாக வாழ முடியவில்லை. எனவே எத்தனைத்தான் புனித வாழ்வு வாழ்ந்தாலும் சில நேரங்களில் மனிதர்கள் தவறு செய்துவிடுவதுண்டு. அனால், தேவன் அன்புள்ளவராக இருப்பதால் மனிதர்களை மன்னிக்கின்றார். எப்போதும் அவர் கோபப்படுவதில்லை. ஏனெனில் அப்படி அவர் கோபப்பட்டு மனிதர்களை புறம்தள்ளுவாரென்றால் எல்லோருமே சோர்ந்துபோவோம். அதனையே இன்றைய வசனத்தில் கூறுகின்றார்.

இதேபோல நோவாவின்காலத்திலும் மனிதர்கள் தங்களைக் கெடுத்துப் பாவம்செய்தபோது தேவன் கூறினார், " என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்." ( ஆதியாகமம் 6 : 3) இது மனிதர்கள் சில வேளைகளில் கூறுவது போல இருக்கின்றது. கொடிய நோய்வாய்ப்பட்டு மரணத்தை நெருங்கும் மனிதர்களுக்கு மருத்துவர்களே அந்த மனிதர்களது வீட்டாரிடம், " இனி ரெம்ப நாள் செல்லாது, அவர் இருக்கப்போவது இன்னும் ஒன்று  ரெண்டு மாதங்கள்தான். அவர் ஆசைப்பட்டு கேட்பதெல்லாம் அவருக்கு கொடுங்கள்" என்பார்கள். அதுபோலவே தேவன் பாவ வியாதி பிடித்த மனிதர்களது வாழ்வைப்பற்றி வேதனையுற்று இப்படிக்  கூறுகின்றார்.  போகட்டும், அவன் இருக்கப்போகும் நாட்கள் நூற்று இருப்பது வருஷம்தானே ?

எனவேதான் பலவீனமான மனிதன் பாவத்தினாலும் விசுவாசக் குறைவினாலும் பாதிக்கப்படும்போது, தேவன் கோபங்கொண்டு அவனை முற்றிலும் தள்ளிடாமல் இருக்கிறார். ஆம், "அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்." ( மத்தேயு 12 : 20 )

சில வேளைகளில் நமக்குள் நமது ஆவிக்குரிய வாழ்க்கையினைக் குறித்து சந்தேகம் எழுந்துவிடும். மங்கி எரிகிற திரிபோல ஒளி இழந்து காணப்படுவதுபோலத்தெரியும். 'ஐயோ , நான் செய்த இந்தச்  செயல் தேவனுக்கு ஏற்புடைய செயல் அல்ல .... எனவே அவர் என்மேல் கோபமாயிருப்பார்' என எண்ணக்கூடும். ஆனால் அப்படி நாம் மனம் மடிந்திடத் தேவையில்லை. மங்கி எரியும் திரிதானே என்று அணைத்திடமாட்டார். 

எப்போது நாம் நமது உள்ளத்தில் நமது தவறை, பாவத்தை உணர்ந்து கொள்கின்றோமோ அப்போதே தேவன் நம்மேலுள்ள கோபத்தை மாற்றிவிடுகின்றார். "ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே." என்பதே தேவனுக்குரிய தாய் உள்ளத்தின் எண்ணம். 

ஆனால், இந்த வசனம் துன்மார்க்கனுக்குப் பொருந்துவதில்லை. ஏனெனில் துன்மார்க்கன் தான் செய்த தவறை உணர்வதுமில்லை, அவனது உள்ளத்தில் தேவனைப்பற்றிய எண்ணம் எழுவதுமில்லை. எனவே துன்மார்க்கர்களது ஆவி தேவனால் கைவிடப்பட்டு பல வேளைகளில் தற்கொலைமூலம் மாய்ந்து பாதாளத்துக்குப் போகின்றது. 

அன்பானவர்களே, நாம் மெய்யான ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்வோமென்றால்  எனவே தைரியமாக ஆவிக்குரிய வாழ்வைத் தொடரலாம். சிறு சிறு தவறுகள், பாவங்களுக்கு தேவனிடம் மன்னிப்பு கேட்டு ஆவிக்குரிய வாழவைத் தொடர்வோம். 

ஏனெனில், நமது தேவன் எப்போதும் வழக்காடமாட்டார்; அவர் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், தான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், அவரது முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகும் என்பது அவருக்குத் தெரியும். 

தேவன் இத்தனை அன்பானவர் என்பதனை நாம் உணர்ந்து கொள்ளும்போது தான் அவரிடம் நமது அன்பும் அவருக்கேற்ற வாழ்க்கையை நாம்  கண்டிப்பாக வாழவேண்டுமெனும் எண்ணமும் ஆசையும் நம்மை நிரப்பும். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                                       தொடர்புக்கு- 96889 33712                                          

Saturday, September 03, 2022

நாம் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருப்போம்

 ஆதவன் 🖋️ 586 ⛪ செப்டம்பர் 05,  2022 திங்கள்கிழமை

"தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே."( 2 கொரிந்தியர் 6 : 16 )

நமது தேவன் மனிதர்களோடு உறவுகொண்டு வாழ விரும்புகின்றவர். அவர் பேசக்கூடாத ஒரு சிலையல்ல. இந்த விருப்பத்தில் தேவன் மனிதர்களோடு மனிதனாக உலாவியதை நாம் ஆதியாகமத்தில் வாசிக்கின்றோம். ஆதாம் ஏவாளோடு அவர் ஏதேன் தோட்டத்தில் உலாவினார். "பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள்." ( ஆதியாகமம் 3 : 8 ) என வாசிக்கின்றோம்.

உயிருள்ள மனிதரோடுதான் உறவுகளை, நமது உணர்ச்சிகளைப் பரிமாறிக்கொள்ள முடியும். நாம் விக்கிரகங்களை வணங்கும்போது நமது இருதயமும் கண்களும் அந்த விக்கிரகத்தை நோக்குமேயல்லாமல் அதற்குமேலாக தேவனை நோக்காது; நமது ஆத்துமாவில் அது எந்த உணர்ச்சியையும் தூண்டாது. 

இன்றைய வசனம், "நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே" என்று கேள்வி எழுப்புகின்றது. ஆம், நாமே ஜீவனுள்ள தேவன் வசிக்கும் ஆலயம்.  இதனை 1 கொரிந்தியர் 3:16, 6:19 வசனங்களிலும் நாம் வாசிக்கலாம். இந்த ஆலயத்தை நாம் கெடுத்தால் தேவன் நம்மைக் கெடுப்பார்.  "ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்." ( 1 கொரிந்தியர் 3 : 17 ) என்றும் வாசிக்கின்றோம். தேவனது ஆலயமாகிய நமது உடலாகிய ஆலயத்தை விக்கிரக ஆராதனை செய்யும்போது நாம் கெடுக்கின்றோம். 

மேலும், வேதாகம அடிப்படையில் சிலைவழிபாடு எனும் விக்கிரக ஆராதனை என்பது வெறும் சிலையை வழிபடுவதை மட்டும் குறிக்கவில்லை. மாறாக, தேவனுக்குக் கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தை உலக பொருட்களுக்கு கொடுப்பதும் சிலைவழிபாடுதான். ஆம், பொருளாசையும் சிலைவழிபாடே. 

"விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே." ( எபேசியர் 5 : 5 ) என எழுதுகின்றார் அப்போஸ்தலரான பவுல். 

அதாவது, இன்றைய தியானத்துக்குரிய வசனத்தின் ஒட்டுமொத்தக் கருத்து, நமது உடல் தேவனுடைய ஆலயம். இதனை தேவன் தனக்காக முற்றிலும் நாம் பயன்படுத்த விரும்புகின்றார். இந்த உடலில் மனிதர்களோடு மனிதனாக வாழ்ந்து தன்னை வெளிப்படுத்த விரும்புகின்றார். எனவே, அவருக்குக் கொடுக்க வேண்டிய முதலிடத்தை அவருக்குக் கொடுக்கவேண்டும். இதற்கு மிஞ்சியது அனைத்துமே சிலைவழிபாடுதான். 

அதனையே இன்றைய வசனம், தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? என்று சொல்லுகின்றது. ஆம், கிறிஸ்துவுக்கு உரியவர்கள் என்றால் அவருக்கே நமது உடலாகிய ஆலயத்தில் முதலிடம் கொடுக்கவேண்டும். அப்படி நாம் வாழும்போது மட்டுமே அவர் நமக்குள் உலாவி நமது தேவனாக இருப்பார்; நாம் அவரது மக்களாக இருப்போம். 

இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தாங்கள் மண்ணினால் செய்யப்பட்டச் சிலைகளை வாங்காததால் தாங்கள் சிலைவழிபாடு செய்யவில்லை என்று தவறாக எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் மிகப்பெரிய பொருளாசையில் சிக்கி இருக்கின்றனர். பொருளுக்காகவும், புகழுக்காகவும், பதவிக்காகவும் அலையும் எல்லோருமே விக்கிரக ஆராதனைக்காரர்கள்தான்.

அன்பானவர்களே, தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது?  தேவன் நமக்குள்ளே வாசம்பண்ணி, உலாவி, நமது தேவனாயிருக்கவும் நாம் அவரது  ஜனங்களாயிருக்கவும் இடம்கொடுப்போம். அப்போது மட்டுமே நாம் தேவன் சொன்னபடி, ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருப்போம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                               தொடர்புக்கு- 96889 33712                                                

நல்ல மனிதர்கள் பூனையைப் போன்றவர்கள்

  ஆதவன் 🖋️ 585 ⛪ செப்டம்பர் 04,  2022 ஞாயிற்றுக்கிழமை


"நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்." ( சங்கீதம் 37 : 23 )

தேவன் நம் ஒவ்வொருவருடைய செயல்களையும் சிந்தனைகளையும் அறிந்துகொண்டிருக்கின்றார். மனிதனின் அன்றாடச்  செயல்பாடுகள்  அவருக்கு மறைவானவையல்ல. உத்தமமாய்த், தனக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும் மக்களிடம் அவர் பிரியமாய் இருக்கிறார். அத்தகைய மனிதர்களது வாழ்க்கையினை அவர் பொறுப்பெடுத்துக்கொள்கின்றார். எனவே இத்தகைய நல்ல மனிதர்களது செயல்பாடுகள் கர்த்தரால் உறுதிப்படும். அவற்றில் எந்தக் குழப்பமும் இடர்பாடும் ஏற்படாது. கர்த்தர் அவர்களது செயல்பாடுகளில் பிரியமாய் இருக்கின்றார்.  

அத்தகைய நல்ல மாந்தர்கள் "விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்." ( சங்கீதம் 37 : 24 ) என்று அடுத்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது, தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும்போது எதிர்பாரா விதமாகச் சில தவறுகளை நல்ல மனிதர்களும் செய்யலாம். ஆனால் அப்படி அவர்கள் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை. ஏதாவது வழியில் அவர்களது தவறினை  தேவன் உணர்த்திக்கொடுத்து அவர்களைத் தாங்குகின்றார். 

தாவீது ராஜா தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும் எதிர்பாராத விதமாக உரியாவின் மனைவியிடம் பாவத்தில் விழுந்துவிட்டார். ஆனால் தேவன் அவரை அப்படியே தள்ளிவிடவில்லை. நாத்தான் தீர்க்கதரிசி மூலம் அவரது பாவத்தை உணர்த்திக்கொடுத்து மீண்டும் தன்னோடு சேர்த்துக்கொண்டார். காரணம் தாவீதின் மனம். அவர் நாத்தான் தனது பாவத்தை உணர்த்தியதும் மனம் திரும்பி அழுது மன்னிப்பு வேண்டினார். 

அவர் எழுதிய பாவ மன்னிப்பின் சங்கீதம் (சங்கீதம் 51) இன்றும் நாம் பாவத்தில் விழும்போது நாம் ஜெபிக்க ஏற்ற ஜெபமாக இருக்கின்றது. 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு வாழ்ந்து அவரோடே இருந்தும் அப்போஸ்தலரான பேதுரு, கிறிஸ்துவை மறுதலிக்கவும் சபிக்கவும் செய்தார். ஆனால், தனது தவறுக்கு மனம் வருந்தி அழுதார். கிறிஸ்து அவரை மீண்டும் சேர்த்துக்கொண்டார். தலைமை அப்போஸ்தலராகவும் ஏற்படுத்தினார்.

ஆம், "நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்." ( நீதிமொழிகள் 24 : 16 ). அதாவது பூனையைப் போன்றவர்கள் நல்ல மனிதர்கள். எழுதரம் விழுந்தாலும் மனச்சாட்சியில் குத்தப்பட்டு தங்களது பாவங்களை தேவனிடம் அறிக்கையிட்டு மனம் திரும்பிடுவார்கள். ஆனால் துன்மார்க்கரோ பன்றியைப்போல எத்தனைத்தரம் கழுவினாலும் சேற்றிலேயே இன்பம்கண்டு அதில்தானே மூழ்கியிருப்பார்கள்.

அன்பானவர்களே, நாம் பலவீனமானவர்கள்தான். எனவே நாம் அடிக்கடி தேவனுக்கு ஏற்பில்லாதச் செயல்பாடுகளைச் செய்துவிடலாம். ஆனால், அதிலேயே மூழ்கிடாமல் தேவனிடம் பாவங்களை அறிக்கையிட்டு மனம்திரும்பவேண்டும்.  இப்படி வாழும்போது நமது வழிகளில் கர்த்தர் பிரியமாய் இருப்பார். நமது நடைகளை உறுதிப்படுத்துவார். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                

Friday, September 02, 2022

என்னில் நிலைத்திருங்கள்

 ஆதவன் 🖋️ 584 ⛪ செப்டம்பர் 03,  2022 சனிக்கிழமை

"ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அனுகூலமாயிற்று" ( 2 இராஜாக்கள் 18 : 7 )

இன்றைய வசனம் எசேக்கியா ராஜாவைபற்றிக் கூறுகின்றது. கர்த்தர் அவரோடு இருந்ததால் அவர் போகுமிடமெல்லாம் அவருக்கு வெற்றியாயிற்று.  இந்த எசேக்கியா "ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் அரசாண்டான்" ( 2 இராஜாக்கள் 18 : 2 ) ஆம் இருபத்தைந்து வயதிலேயே எசேக்கியா கர்த்தரை அறிந்து அவருக்கு ஏற்புடையவராய் வாழத் தன்னை ஒப்புக்கொடுத்திருந்தார்.  

யூதாவின் பல ராஜாக்களும் கார்த்தரைவிட்டு பின்மாறிப்போன காலத்தில் எசேக்கியா மட்டும் கர்த்தருக்கு உண்மையானவராக வாழ்ந்தார். "அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான்." ( 2 இராஜாக்கள் 18 : 6 ) என்று வாசிக்கின்றோம். 

அன்பானவர்களே, பழைய ஏற்பாட்டுக்கால மக்கள் தேவனை அச்சத்துக்குரியவராகவே பார்த்து வந்தனர். அந்தக்காலகட்டத்திலேயே தாவீது, எசேக்கியா போன்றவர்கள் கர்த்தரிடம் அன்புகொண்டு வாழ்ந்தார்களானால் இன்று கிறிஸ்துவின் அன்பை ருசித்த நாம் கர்த்தர்மேல் எவ்வளவு அன்புள்ளவர்களாக வாழவேண்டும்?

இதனைத்தான் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும், "என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்." ( யோவான் 15 : 4 ) என்று கூறினார். நாமும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு இருந்ததால் நாம் போகுமிடமெல்லாம் நமது ஆவிக்குரிய வாழ்வு  நமக்கு வெற்றியாகும்.

மேலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு இணைந்து அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது நமது ஜெபங்களையும் அவர் கனிவுடன் கேட்டுப் பதிலளிப்பார்.  

எசேக்கியாவோடு கர்த்தர் இருந்ததால் அவரது ஜெபத்தைக்கேட்டு  ஏசாயா தீர்க்கதரிசி மூலம் தான் கூறிய வார்த்தைகளையே  கர்த்தர் மாற்றினார். மரித்துப்போவாய் என்று முதலில் கூறியிருந்தும் தனது முடிவினை கர்த்தர் மாற்றி எசேக்கியா மேலும் பதினைந்து ஆண்டுகள் வாழ வாழ்வை நீட்டிக்கொடுத்து மகிழப்பண்ணினார். 

எசேக்கியா ஜெபித்தபோது,  தான் கர்த்தருக்கு உண்மையாக இருந்ததை கர்த்தருக்கு நினைவு படுத்தினார். "ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்." ( 2 இராஜாக்கள் 20 : 3 ) என்று கூறப்பட்டுள்ளது. 

நாம் இப்படி நமது சாட்சியுள்ள வாழ்வை கர்த்தருக்கு எடுத்துக்கூறி ஜெபிக்கக்கூடியவர்களாக வாழ்வோமானால் எசேக்கியாவுக்குச் செய்ததுபோல நமக்கும் அதிசயமான நன்மைகளைச் செய்வார்.  ஆம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முள் வசிக்கும்படி இடம்கொடுக்கும்போது  நாம் செயல்கள் அனைத்தையும் அவர் நமக்கு அனுகூலமாக்குவார். மட்டுமல்ல, நமது விண்ணப்பங்களும் உடனடியாகப் பதில் தருவார். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                               

Wednesday, August 31, 2022

ஆண்டவரது வசனமே கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்

 ஆதவன் 🖋️ 583 ⛪ செப்டம்பர் 02,  2022 வெள்ளிக்கிழமை

"என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்." ( யோவான் 12 : 48 )

கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், கிறிஸ்துவை எல்லோருக்கும் அறிவிக்கவேண்டியது கிறிஸ்தவர்களின் கடமை. ஏனெனில் இதனை இயேசு கிறிஸ்து தான் பரலோகம் செல்லுமுன் ஒரு கட்டளையாகக் கூறினார். "பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்." ( மாற்கு 16 : 15, 16 ) என்று வாசிக்கின்றோம். 

பிரசங்கிக்கவேண்டியது மட்டுமே நமது கடமை. அதனைத்தான் கிறிஸ்தவர்கள் செய்கின்றனரே  தவிர மதம் மாற்றுவதில்லை. ஊழியம் செய்கின்றேன் என்று கூறி வேத அறிவோ அனுபவமோ இல்லாத சில அற்பமான ஊழியர்கள்தான் இதில் தவறு செய்கின்றனர். ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை விதைக்கவேண்டுமேத்தவிர வலுக்கட்டாயமாக எவரையும் நாம் கிறிஸ்துவுக்குள் கொண்டுவரமுடியாது. 

இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறுவது இதுதான்.  அதாவது எனது வார்த்தைகளை நீங்கள் விதையுங்கள். அதனை ஏற்றுகொள்ளாதவனை நான் கூறிய வசனமே நியாயம் தீர்க்கும். ஆம், தேவனது வார்த்தைகள் உயிரும் வல்லமையும் உள்ளது. அது மனிதனது  உள்ளத்தில் ஊடுருவி அவனது ஆத்துமா, சிந்தனை, செயல், அவனது உடல் அனைத்தையும் ஊடுருவி குத்தக்கூடியது. இதனை நாம் எபிரெயர் நிருபத்தில் பின்வருமாறு வாசிக்கின்றோம்:- 

"தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது." ( எபிரெயர் 4 : 12 )

ஒருவன் எந்த மார்க்கத்தானாய் இருந்தாலும் மனச்சாட்சி ஒன்றுதான். அதாவது அதுவே அனைவரையும் ஒரே தேவன் உண்டாக்கினார் என்பதற்கு அடையாளம். எனவே எந்த மனிதனும் இறுகி நியாயத் தீர்ப்பில் தப்பிட  முடியாது.

இதனையே அப்போஸ்தலரான பவுல், "அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்." ( ரோமர் 2 : 15 ) ஆம், ஆண்டவரது சட்டங்கள் எல்லா மனிதர்கள் உள்ளத்திலும் எழுதப்பட்டுள்ளன.

ஆண்டவரது வசனம் நீதியானது, மதங்களுக்கு அப்பாற்பட்டது. அதனால்தான், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும் என்கின்றார் இயேசு கிறிஸ்து. இதனாலேயே அனைவருக்கும் சுவிசேஷம் அறிவிக்கின்றோம்.

கிறிஸ்துவைத் தள்ளி அவரது வார்த்தைகளை விசுவாசியாமல் போகும்போது நாம் நீதியாக வாழ முடியாது. அவரது வசனமே நம்மைச் சரியான பாதையில் நடத்த வல்லமையுள்ளது. 

"என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிற தொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்" என்பது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ளோம் எனக் கூறிக்கொண்டு வசனத்துக்குக் கீழ்ப்படியாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டு தங்களைக் கிறிஸ்தவர்கள்  எனக் கூறிக்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். நமது வாழ்க்கை கிறிஸ்துவின் வசனத்தின்படி உள்ளதா? என்பதனையும் நாம் ஆராய்ந்து பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                

Tuesday, August 30, 2022

எல்லோருக்கும் தேவன் தனது சித்தத்தை வெளிப்படுத்துவார்

 ஆதவன் 🖋️ 582 ⛪ செப்டம்பர் 01,  2022 வியாழக்கிழமை

என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்." ( எரேமியா 33 : 3 )

இன்று பெரும்பாலும் மக்கள், அதுவும் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மக்கள், தங்கள் எதிர்காலங்களை அறிந்துகொள்ளவும், தற்போதைய பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் ஊழியர்களைத் தேடி ஓடும் அவலம் உள்ளது. இது பணம் சம்பாதிக்கும் எண்ணமுள்ள ஊழியர்களுக்குச் சாதகமாக உள்ளது. இதுவே இன்றைய கிறிஸ்தவத்தின் சாபக்கேடாகவும் இருக்கின்றது.

நமது தேவன் பாரபட்சம் காட்டும் தேவனல்ல. எல்லோரையும் ஒரேபோல அன்பு செய்யும் தெய்வம் அவர். குறிப்பிட்டச் சிலருக்கு தேவன் சில காரியங்களை வெளிப்படுத்தலாம். அது அவர்கள் தேவனோடு கொண்டுள்ள உறவைப் பொறுத்ததே தவிர வேறு அதிசயமல்ல. தேவனோடுள்ள இந்த உறவை எல்லோரும் பெறலாம், பெறவேண்டுமென்று தான் தேவனும் விரும்புகின்றார். தேவனோடு உறவுள்ள வாழ்க்கை வாழ்வோமானால் அப்படி வாழும் எல்லோருக்கும் தேவன் தனது சித்தத்தை வெளிப்படுத்துவார்.  

இப்படி தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்து வருவோமானால், இன்றைய வசனம் கூறுவதுபோல அவர் நமக்குப் பதில் தந்து நாம் அறியாததும் நமக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை அறிவிப்பார். 

தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை என்றவுடன் அது நம்மால் முடியாது என்று பலரும் திகைக்கின்றனர். எனவேதான் இவர்கள் தற்காலிக விடுதலைவேண்டி ஊழியர்களை நாடுகின்றனர். பெரும்பாலான தீர்க்கதரிசன ஊழியர்கள் தங்களை தேவனோடு நெருங்கிய உறவுள்ளவர்கள் எனக் காட்டிக்கொள்ளவேண்டி போலியான அல்லது வேதத்துக்கு முரணான செயல்களில் ஈடுபட்டு மக்களைக் கவர்கின்றனர். 

வேதாகமத்தில் இயேசு கிறிஸ்து மக்களுக்குச் சுகம் அளிக்குமுன் பல இடங்களில் முதலில், "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றுதான் கூறுகின்றார்.  அதாவது நாம் நமது பிரச்சனைகளையும் நோய்களையும் பிரதானமாகப் பார்க்கின்றோம், ஆனால் தேவனோ நமது பாவங்களையே பிரதானமானதாகப் பார்க்கின்றார். 

ஆனால் இன்றைய எந்த ஊழியக்காரனும் இதனை மக்களுக்குச் சொல்வதுமில்லை, மக்களது பாவங்களை உணர்த்திக் கொடுப்பதுமில்லை. அவர்களே பாவங்களில் மூழ்கியிருப்பதால் அதுபற்றி மக்களிடம் தைரியமாக எடுத்துக்கூற அவர்களது மனச் சாட்சியே அவர்களைக் குத்துவதும் இப்படிக் கூறாமல் இருக்கக் காரணமாக இருக்கலாம். எனவே இவர்கள் கூறுவது தேவ வாக்கு என நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவேதான் தேவன் கூறுகின்றார், "உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." ( எரேமியா 23 : 16 )

இந்த வசனத்தை வாசிக்கும்போது எந்த தீர்க்கதரிசியையும் நாம் நம்பவேண்டாம் என்று பொருளாகின்றது. ஆனால், உண்மையான தீர்க்கதரிசிகளும் உள்ளனர். (அவர்கள் விசுவாசிகளிடம் பணம் பறிக்கும்  திட்டங்களைச் செயல்படுத்த மாட்டார்கள்) அவர்கள் கூறுவது தேவனோடு உறவுகொண்டு வாழும் விசுவாசிகளுக்கு தேவன் ஏற்கெனவே கூறிய வார்த்தைகளை அவர்களுக்கு உறுதிப்படுத்துவதாக இருக்கும்.

அன்பானவர்களே, தீர்க்கதரிசன ஊழியர்களைத் தவிர்த்து, தேவனுக்கு ஏற்ற ஒரு வாழ்க்கை வாழ்ந்து, இன்றைய வசனம் கூறுவதுபோல,  அவரை நோக்கிக் கூப்பிடுவோம், அப்பொழுது அவர் நமக்கு உத்தரவு கொடுத்து, நாம் அறியாததும் நமக்கு  எட்டாததுமான பெரிய காரியங்களை நமக்கு அறிவிப்பார்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712