கிறிஸ்து இருக்குமிடத்தில் நான்

                                - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 


"மொர்தெகாய் ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தான்; அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று; இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவனானான்." (  எஸ்தர் 9 : 4 )

யூதனாகிய இந்த மொர்தெகாயின் ஆரம்ப வாழ்கையினைப் பார்த்தால் மிகவும் அற்பமானது.  இவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகோனியாவைச் சிறைபிடித்துக்கொண்டு போனபோது அவனோடுகூட  சிறைபிடித்துக்கொண்டு போகப்பட்ட ஒரு யூதன். பாபிலோனிலே அடிமையாக வாழ்ந்தவன்

சிறையிருப்பிலிருந்து மீண்டு வந்தபின் ராஜாவாகிய அகாஸ்வேருவின் சூசான் அரண்மனையில் வாயில்காப்போனாகப் பணியாற்றிக்கொண்டிருந்தான்இந்த அகாஸ்வேரு ராஜா இந்தியாமுதல் எத்தியோப்பியா வரையிலான  127 நாடுகளை ஆட்சிசெய்தவன். (எஸ்தர் - 1:1)

 இந்தச் சிறிய வேலையில் இருந்தாலும் மொர்தெகாய் தேவனுக்குமுன் உண்மையுள்ளவனாக இருந்தான். தனது சித்தப்பா மகள் எஸ்தரையும் இவன் வளர்த்துவந்தான். (எஸ்தர் ஆகமத்தைப்  படித்து கதையினை அறிந்துகொள்ளுங்கள்)

அகாஸ்வேரு ராஜாவுக்கு அடுத்தபடியாக இருந்த மந்திரி ஆமான் என்பவனை மொர்தெகாய் வணங்காததுதான் பிரச்சனைக்குக் காரணமாயிற்று. அப்படித் தன்னை வணங்காததால் மொர்தெகாயை எப்படியாவது கொலை செய்துவிடவேண்டும் என ஆமான்  தீர்மானித்தான். அதற்காக தந்திரமாக வேலைசெய்தான்.  ஒரு சாதாரண வாயில்காவலன் ராஜாவுக்கு அடுத்தபடியான அதிகாரத்திலுள்ள மனிதனை வணங்காதது  தவறுதானே என நாம் எண்ணலாம். ஆனால் மொர்தெகாய் அப்படி ஆமானை வணங்காததற்குரிய காரணம் எஸ்தர் (கிரேக்கம்) நூலில் உள்ளது (விவிலியம் பொது மொழிபெயர்ப்பு). 

அதில் மொர்தெகாயின் அருமையான ஒரு ஜெபம் உள்ளதுமொர்தெகாய் தேவனிடம் விண்ணப்பம் பண்ணும்போது பின்வருமாறு கூறுகிறான், " ஆண்டவரே, ஆமானுக்கு  நான் வணக்கம் செலுத்த மறுத்ததற்குக் காரணம் செருக்கோ, இறுமாப்போ, வீண் பெருமையோ அல்ல  என்பதையும் நீர் அறிவீர். இஸ்ரயேலின் மீட்புக்காக நான் அவனுடைய உள்ளங்கால்களைக் கூட முத்தமிட்டிருப்பேன். ஆனால், கடவுளைவிட மனிதரை மிகுதியாக மாட்சிப்படுத்தக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு நான் நடந்துகொண்டேன். ஆண்டவரே, உம்மையைத்தவிர வேறு யாரையும் நான் வணங்கமாட்டேன்"   (எஸ்தர் கிரேக்கம் - 4:17d , 17e ) 

மொர்தெகாய் தேவனுக்கு முன்னுரிமை கொடுப்பதில் உறுதியாக இருந்தான். பதவியே போனாலும், உயிரே போனாலும்  தேவனுக்கு கொடுக்கவேண்டிய மகிமையை மனிதனுக்குக் கொடுக்கமாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தான்

அன்பானவர்களே இப்படி நாமும் நம்மை ஆள்வோருக்கு வணக்கம் செலுத்தக்கூடாது எனப் பொருளல்ல. தேவனா, இல்லை மனிதனா அல்லது உலகப் பொருட்களா  எனத் தேர்வு செய்யவேண்டிய நிலை  வரும்போது தேவனுக்கே நாம் முன்னுரிமை கொடுக்கவேண்டும்.

பதவி, பொருளாசை இவைகளுக்கு மயங்கி தேவனை இரண்டாவது இடத்துக்குத்தள்ளிவிடக் கூடாது. இன்றைய சுவிசேஷ அறிவிப்புச் செய்திகள் பலவும் தேவனை அறிவிப்பதுபோல வெளிப்பார்வைக்கு இருந்தாலும் அவை உலக காரியங்களுக்கே முன்னுரிமை கொடுப்பனவாக உள்ளன.  எனக்குக் கிறிஸ்து போதும் என்று நிறைவடையும் மனநிலையினை பலரும் போதிப்பதில்லை. உலக ஆசீர்வாதங்களுக்காக கிறிஸ்துவைத் தேடும்படி போதிக்கும் போதனைகள் எங்கும் மேலோங்கி உள்ளன. 

அன்பானவர்களே, தன்னைத் தேவன் உயர்த்தவேண்டும் எனும் எண்ணத்தில் மொர்தெகாய் தேவனுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. ஆனால்,  சாதாரண வாயில் காவலனாக இருந்த "யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவனும், யூதருக்குள் பெரியவனும், தன் திரளான சகோதரருக்குப் பிரியமானவனுமாயிருந்ததும் அன்றி தன் ஜனங்களுடைய நன்மையை நாடி, தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான்". (  எஸ்தர் 10 : 3 ) என்று வேதம் கூறுகின்றது.

வாயில் காவலனான மொர்தெகாய்ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவனாக மாறிவிட்டான் என்றால் அகாஸ்வேரு ஆட்சி செய்த 127 நாடுகளுக்கும் அவனும் அரசனுக்கடுத்த இரண்டாவது தலைவனாகமாறிவிட்டான்

தேவனுக்குமுன் உண்மையாய் வாழும்போது தேவன் ஒருவனை எப்படி உயர்த்துகிறார் பாருங்கள். எந்தவேளையிலும் தேவனுக்கு முன்னுரிமை கொடுப்பதில் உறுதியாக இருப்போம்.  

நாமும் இப்படி ஊலக காரியங்களில் உயரவேண்டும் என்று பொருளல்ல. "அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாய் இருப்பேன் " என்று கூறி துணிந்து நின்ற யோபுவைபோல அவர் நம்மை உலக காரியங்களில் உயர்த்துகின்றாரோ இல்லையோ தேவனிடத்தில் திட விசுவாசமாய் இருக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. ஏனெனில் நாம் இந்த உலக காரியங்களுக்காக அல்ல, நித்திய கால வாழ்கைக்காகவே கிறிஸ்துவால் அழைக்கப்பட்டுள்ளோம்.

சாதாரண உலக காரியங்களில் ஒரு மனிதனை தேவன் இப்படி உயர்த்துவாரென்றால், நித்தியத்தில் அவனுக்கு எவ்வளவு பெரிய ஆசீர்வாதங்களை வைத்திருப்பார்? 

நித்தியத்தில் உயர்த்துகின்றாரோ இல்லையோ அதுகூட வேண்டாம், கிறிஸ்து இருக்குமிடத்தில் நான் இருந்தால் போதும் எனும் எண்ணத்தில் வாழ்வோம், கிறிஸ்துவை அன்பு செய்வோம். 

தேவனைத் தேடிக் கண்டுகொள்வோம்

                            - சகோ. ஜியோ பிரகாஷ்  



தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்." (  சங்கீதம் 53 : 2 )

 

பெரிய பெரிய கட்டிடங்களிலும் அலுவலகங்களிலும் இன்று சி.சி.டி.வி. காமெரா பொருந்தி மனிதர்களது நாடவடிக்கைகளைக் கண்காணிக்கிறார்கள். இப்படிக் கண்காணிப்பதன்மூலம் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்போது அந்தக் காமிராவில் பதிவாகியுள்ளக் காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டுகொள்ள முடிகின்றது. இதுபோலவே இன்று உலகினில் வாழும் நாமனைவரும் தேவனது கண்காணிப்பில் இருக்கின்றோம். நமது ஒவ்வொரு செயலையும் அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார்.  இந்த எண்ணம் நமக்கு இருக்குமானால் தேவனுக்கு ஏற்பில்லாத செயல்களைச்  செய்யமாட்டோம்.

 

இப்படித் தேவன் மனிதர்களைக் கண்காணிக்க இன்னுமொரு காரணம் தன்னைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்கவே. தேவன் பரலோகத்திலிருந்து தன்னை  அறியவேண்டும் எனும் உணர்வுள்ளவன் பூமியில் உண்டுமா என்று பார்த்துகொண்டேயிருக்கின்றார். ஒருவர் எந்த மதத்திலும் பிறந்திருக்கலாம்; ஆனால், குருட்டுத்தனமாக எல்லோரும் செய்கிறார்களே என்று ஒரு சில வழிபாட்டு முறைகளைக் கைக்கொண்டு வேறு சிந்தனையற்றவர்களாக வாழ்ந்தால் தேவனை அறிய முடியாது. 


தேவனை அறியவேண்டும் எனும் மெய்யான உணர்வோடு தேடுகிற மனிதர்களுக்கு அவர் வெளிப்படுவார். தேவன் அவராகத் தன்னை யாரிடமும் திணிப்பது கிடையாது.

 

எனக்குத் தெரிந்து இரட்சிப்பு அனுபவம் பெற்று வாழும் பல சகோதரர்களது சாட்சிகள்  இதனை உறுதிப்படுத்துகின்றவையாக உள்ளன. கடவுள் என்று ஒருவர் உண்டா? அப்படியானால் உண்மையான கடவுள் யார்? என்பதை அறிய எல்லா மத நூல்களையையும் படித்து இறுதியில் தேவனை அறிந்துகொண்டதாகப் பலரும் கூறுகின்றனர். குறிப்பாக இந்து குடும்பத்தில் பிறந்த எனது நண்பர் சகோதரர் சொர்ணகுமார் அவர்கள் தனது சாட்சியைக் கூறும்போது,  இப்படித்  தேவனை அறிய பல மத நூல்களையும் தான் கற்றதாகவும் இறுதியில் வேதாகமத்தைத் தொடர்ந்து  படித்துக் கொண்டுவரும்போது , "உன்னுடனே பேசுகிற நானே அவர் " (யோவான் - 4 : 26) எனும் வசனத்தைப் படித்தபோது தனது உள்ளுணர்வில் தேவனால் உணர்த்தப்பட்டுத் தொடப்பட்டு கிறிஸ்துவுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்ததாகக்  கூறுவார். இப்போது அவர் தான் இப்படித் தேடி அறிந்துகொண்ட தேவனைப் பிறருக்கும் அறிவிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். ஆம், இதுபோல உண்மையாய்த் தேவனைத் தேடும் எவருக்கும் அவர் வெளிப்படுவார்.   

 

அன்பானவர்களே, நாம் கிறிஸ்தவப் பெற்றோருக்கு மகனாக,  மகளாகப் பிறந்துவிட்டு கிறிஸ்தவ முறைமைகளை பின்பற்றுவதால் தேவனை அறிய முடியாது. அம்மா அப்பா சொல்வதாலல்ல, "யார் மெய்யான தேவன் என நான் அறியவேண்டும்" எனும் உணர்வோடு தேடும்போது தேவன் நமக்கு வெளிப்படுவார்.  ஒருவர் பெயரளவில் கிறிஸ்தவராக இருப்பதில் அர்த்தமல்ல.  அவர் கிறிஸ்துவை அறிந்தவர் என்று கூறிட முடியாது; தேவனை அறிந்தவர் என்றும் கூறிட முடியாது.    


பரலோகத்திலிருந்து மனிதர்களைக் கண்காணிக்கும் தேவன் இப்படித் தன்னைத் தேடுகின்ற மனிதர்களுக்கு இரட்சிப்பு அனுபவத்தைக் கொடுக்கின்றார். "உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக." (  சங்கீதம் 70 : 4 )


இப்படித் தன்னைத் தேடும் சாந்தகுணமுள்ள மனிதர்களை, அதாவது தங்களது மதப்பெருமைகளைவிட்டு மெய்யான தேவனை அறியவேண்டும் எனும் எண்ணத்தோடு தன்னைத் தேடுபவர்கள் மேல் தேவன் பிரியம் வைக்கின்றார். "கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்." (  சங்கீதம் 149 : 4 )

 

இதுவரை தனிப்பட்ட முறையில் தேவனை வாழ்வில் அனுபவிக்காத நிலையில் இருந்தால், நம்மையே தாழ்த்தி, "ஆண்டவரே, எனது வாழ்வில் உம்மை அறிய விரும்புகின்றேன்; அனுபவிக்க விரும்புகின்றேன் என்று வேண்டுவோம். கிறிஸ்தவம் என்பது மதமல்ல. இயேசுவே  என்று கூடச் சொல்லவேண்டாம், பொதுவாக, "மெய்யான தெய்வம் ஒன்று இருக்குமானால், நான் அதனை அறிய விரும்புகின்றேன். எனக்கு உம்மை வெளிப்படுத்தும்." என்று உண்மையான ஆர்வத்துடன், மெய்யானக் கடவுளை அறியும் ஆர்வத்துடன் வேண்டினாலே போதும் தேவன் உங்களுக்கு வெளிப்படுவார். 


சென்ற நூற்றாண்டு ஆரம்பத்தில் வாழ்ந்த சாது சுந்தர்சிங் அவர்கள் பிறப்பால் ஒரு சீக்கியர்.  அவர் துன்பங்கள் தொடர்ந்திட அவைகளை மேற்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து பொதுவான ஒரு ஜெபத்தை ஏறெடுத்தார்.


அதிகாலையில் எழுந்து தனது வீட்டுக்கு அருகில் செல்லும் ரயில் தண்டவாளத்தில் ஓடும் ரெயிலில் விழுந்து தற்கொலை செய்த்குகொள்ள முடிவெடுத்தார். எந்த தெய்வத்தின் பெயரையும் குறிப்பிடாமல், " நான் தற்கொலை செய்து என்னை மாய்த்துக்கொள்ளப் போகின்றேன் ... உண்மையிலேயே தேவன் என்று ஒருவர் இருப்பாரானால், அவர் என்னை மன்னிக்கட்டும்...தற்கொலை செய்வது பாவம் என்று எல்லா மதங்களும் கூறுகின்றன....எனவே உண்மையான தேவன் ஒருவர் உண்டு என்றால் அவர் என்னை மன்னிக்கட்டும்" என்று பொதுவாக ஜெபித்துவிட்டு எழுந்தபோது கிறிஸ்து அவருக்கு வெளிப்பட்டார்.  தற்கொலைக்கு முயன்ற அவர் பிறகு கிறிஸ்துவின் அபோஸ்தர்களது அனுபவித்த அனுபவத்துடன் வல்லமையான ஊழியரானார். 


ஆம், "உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்." (  எரேமியா 29 : 13 ) எனும் வசனத்தின்படி தேவனை அறியவேண்டுமெனும் எண்ணத்துடன் முழு மனதுடன் தேடினால் தேவனைக் கண்டு கொள்ளலாம். அதனை விடுத்து மத சம்பிரதாயங்கள் மூலம் தேவனைத் தேடினால் அவரை அறிய முடியாது.


அன்பானவர்களே, இந்த மேலான அனுபவத்தைப்பெற்று தேவனைத் தனிப்பட்ட முறையில் அறிந்து ஒரு மேலான ஆவிக்குரிய  வாழ்க்கை வாழ்வோம்.

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

குணமாக்கும் ஜெபங்கள்

  'ஆதவன்'  📖✝  வேதாகமத் தியானம் - எண்:- 1,264      💚  ஜூலை 26, 2024  💚 வெள்ளிக்கிழமை  💚 "நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள...

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்