DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Monday, August 30, 2021

தேவனைத் தேடிக் கண்டுகொள்வோம்

                            - சகோ. ஜியோ பிரகாஷ்  



தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்." (  சங்கீதம் 53 : 2 )

 

பெரிய பெரிய கட்டிடங்களிலும் அலுவலகங்களிலும் இன்று சி.சி.டி.வி. காமெரா பொருந்தி மனிதர்களது நாடவடிக்கைகளைக் கண்காணிக்கிறார்கள். இப்படிக் கண்காணிப்பதன்மூலம் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்போது அந்தக் காமிராவில் பதிவாகியுள்ளக் காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டுகொள்ள முடிகின்றது. இதுபோலவே இன்று உலகினில் வாழும் நாமனைவரும் தேவனது கண்காணிப்பில் இருக்கின்றோம். நமது ஒவ்வொரு செயலையும் அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார்.  இந்த எண்ணம் நமக்கு இருக்குமானால் தேவனுக்கு ஏற்பில்லாத செயல்களைச்  செய்யமாட்டோம்.

 

இப்படித் தேவன் மனிதர்களைக் கண்காணிக்க இன்னுமொரு காரணம் தன்னைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்கவே. தேவன் பரலோகத்திலிருந்து தன்னை  அறியவேண்டும் எனும் உணர்வுள்ளவன் பூமியில் உண்டுமா என்று பார்த்துகொண்டேயிருக்கின்றார். ஒருவர் எந்த மதத்திலும் பிறந்திருக்கலாம்; ஆனால், குருட்டுத்தனமாக எல்லோரும் செய்கிறார்களே என்று ஒரு சில வழிபாட்டு முறைகளைக் கைக்கொண்டு வேறு சிந்தனையற்றவர்களாக வாழ்ந்தால் தேவனை அறிய முடியாது. 


தேவனை அறியவேண்டும் எனும் மெய்யான உணர்வோடு தேடுகிற மனிதர்களுக்கு அவர் வெளிப்படுவார். தேவன் அவராகத் தன்னை யாரிடமும் திணிப்பது கிடையாது.

 

எனக்குத் தெரிந்து இரட்சிப்பு அனுபவம் பெற்று வாழும் பல சகோதரர்களது சாட்சிகள்  இதனை உறுதிப்படுத்துகின்றவையாக உள்ளன. கடவுள் என்று ஒருவர் உண்டா? அப்படியானால் உண்மையான கடவுள் யார்? என்பதை அறிய எல்லா மத நூல்களையையும் படித்து இறுதியில் தேவனை அறிந்துகொண்டதாகப் பலரும் கூறுகின்றனர். குறிப்பாக இந்து குடும்பத்தில் பிறந்த எனது நண்பர் சகோதரர் சொர்ணகுமார் அவர்கள் தனது சாட்சியைக் கூறும்போது,  இப்படித்  தேவனை அறிய பல மத நூல்களையும் தான் கற்றதாகவும் இறுதியில் வேதாகமத்தைத் தொடர்ந்து  படித்துக் கொண்டுவரும்போது , "உன்னுடனே பேசுகிற நானே அவர் " (யோவான் - 4 : 26) எனும் வசனத்தைப் படித்தபோது தனது உள்ளுணர்வில் தேவனால் உணர்த்தப்பட்டுத் தொடப்பட்டு கிறிஸ்துவுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்ததாகக்  கூறுவார். இப்போது அவர் தான் இப்படித் தேடி அறிந்துகொண்ட தேவனைப் பிறருக்கும் அறிவிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். ஆம், இதுபோல உண்மையாய்த் தேவனைத் தேடும் எவருக்கும் அவர் வெளிப்படுவார்.   

 

அன்பானவர்களே, நாம் கிறிஸ்தவப் பெற்றோருக்கு மகனாக,  மகளாகப் பிறந்துவிட்டு கிறிஸ்தவ முறைமைகளை பின்பற்றுவதால் தேவனை அறிய முடியாது. அம்மா அப்பா சொல்வதாலல்ல, "யார் மெய்யான தேவன் என நான் அறியவேண்டும்" எனும் உணர்வோடு தேடும்போது தேவன் நமக்கு வெளிப்படுவார்.  ஒருவர் பெயரளவில் கிறிஸ்தவராக இருப்பதில் அர்த்தமல்ல.  அவர் கிறிஸ்துவை அறிந்தவர் என்று கூறிட முடியாது; தேவனை அறிந்தவர் என்றும் கூறிட முடியாது.    


பரலோகத்திலிருந்து மனிதர்களைக் கண்காணிக்கும் தேவன் இப்படித் தன்னைத் தேடுகின்ற மனிதர்களுக்கு இரட்சிப்பு அனுபவத்தைக் கொடுக்கின்றார். "உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக." (  சங்கீதம் 70 : 4 )


இப்படித் தன்னைத் தேடும் சாந்தகுணமுள்ள மனிதர்களை, அதாவது தங்களது மதப்பெருமைகளைவிட்டு மெய்யான தேவனை அறியவேண்டும் எனும் எண்ணத்தோடு தன்னைத் தேடுபவர்கள் மேல் தேவன் பிரியம் வைக்கின்றார். "கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்." (  சங்கீதம் 149 : 4 )

 

இதுவரை தனிப்பட்ட முறையில் தேவனை வாழ்வில் அனுபவிக்காத நிலையில் இருந்தால், நம்மையே தாழ்த்தி, "ஆண்டவரே, எனது வாழ்வில் உம்மை அறிய விரும்புகின்றேன்; அனுபவிக்க விரும்புகின்றேன் என்று வேண்டுவோம். கிறிஸ்தவம் என்பது மதமல்ல. இயேசுவே  என்று கூடச் சொல்லவேண்டாம், பொதுவாக, "மெய்யான தெய்வம் ஒன்று இருக்குமானால், நான் அதனை அறிய விரும்புகின்றேன். எனக்கு உம்மை வெளிப்படுத்தும்." என்று உண்மையான ஆர்வத்துடன், மெய்யானக் கடவுளை அறியும் ஆர்வத்துடன் வேண்டினாலே போதும் தேவன் உங்களுக்கு வெளிப்படுவார். 


சென்ற நூற்றாண்டு ஆரம்பத்தில் வாழ்ந்த சாது சுந்தர்சிங் அவர்கள் பிறப்பால் ஒரு சீக்கியர்.  அவர் துன்பங்கள் தொடர்ந்திட அவைகளை மேற்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து பொதுவான ஒரு ஜெபத்தை ஏறெடுத்தார்.


அதிகாலையில் எழுந்து தனது வீட்டுக்கு அருகில் செல்லும் ரயில் தண்டவாளத்தில் ஓடும் ரெயிலில் விழுந்து தற்கொலை செய்த்குகொள்ள முடிவெடுத்தார். எந்த தெய்வத்தின் பெயரையும் குறிப்பிடாமல், " நான் தற்கொலை செய்து என்னை மாய்த்துக்கொள்ளப் போகின்றேன் ... உண்மையிலேயே தேவன் என்று ஒருவர் இருப்பாரானால், அவர் என்னை மன்னிக்கட்டும்...தற்கொலை செய்வது பாவம் என்று எல்லா மதங்களும் கூறுகின்றன....எனவே உண்மையான தேவன் ஒருவர் உண்டு என்றால் அவர் என்னை மன்னிக்கட்டும்" என்று பொதுவாக ஜெபித்துவிட்டு எழுந்தபோது கிறிஸ்து அவருக்கு வெளிப்பட்டார்.  தற்கொலைக்கு முயன்ற அவர் பிறகு கிறிஸ்துவின் அபோஸ்தர்களது அனுபவித்த அனுபவத்துடன் வல்லமையான ஊழியரானார். 


ஆம், "உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்." (  எரேமியா 29 : 13 ) எனும் வசனத்தின்படி தேவனை அறியவேண்டுமெனும் எண்ணத்துடன் முழு மனதுடன் தேடினால் தேவனைக் கண்டு கொள்ளலாம். அதனை விடுத்து மத சம்பிரதாயங்கள் மூலம் தேவனைத் தேடினால் அவரை அறிய முடியாது.


அன்பானவர்களே, இந்த மேலான அனுபவத்தைப்பெற்று தேவனைத் தனிப்பட்ட முறையில் அறிந்து ஒரு மேலான ஆவிக்குரிய  வாழ்க்கை வாழ்வோம்.

No comments: