இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Friday, August 19, 2022

தேவனுக்கு ஏற்பில்லாத காரியங்களைச் செய்யும்போது நாம் ஆலயத்தைக் கள்ளர்குகை ஆக்குகின்றோம்.

 ஆதவன் 🖋️ 571 ⛪ ஆகஸ்ட் 21, 2022 ஞாயிற்றுக்கிழமை

"என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்". ( மத்தேயு 21 : 13 )

ஏசாயா மற்றும் எரேமியா தீர்க்கதரிசிகளின்கூற்றுக்களை இயேசு கிறிஸ்து இந்த வசனத்தில் மேற்கோள் காட்டிப்  பேசுகின்றார். என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு எனப்படும் என்பது ஏசாயா கூறியது.  ( ஏசாயா 56 : 7 ) 

ஆனால், இந்த ஆலயத்தில் தேவனுக்கேற்ற பரிசுத்த வாழ்க்கை வாழாதவர்களும் வெறும் பகட்டுக்காகவும், மற்றவர்கள்முன் தங்களை நீதிமான்கள் என்று காட்டுவதற்காகவும் வந்து தங்களது பொல்லாப்புகளுக்கு மனம் வருந்தாமல்  வழிபாடுசெய்கின்றனர். இதனையே எரேமியா கூறினார்:- 

"நீங்கள் திருடி, கொலைசெய்து, விபசாரம்பண்ணி, பொய்யாணையிட்டு, பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தேவர்களைப் பின்பற்றி, பிற்பாடு வந்து, என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயத்திலே எனக்கு முன்பாக நின்று...........................என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயம் உங்கள் பார்வைக்குக் கள்ளர் குகையாயிற்றோ? " ( எரேமியா 7 : 9 - 11 )

திருடர்கள் தாங்கள் கொள்ளையடித்தப் பொருட்களை குகைகளில் பதுக்கி வைப்பதுபோல தங்களது பொல்லாப்புக்களை மக்களது பார்வையில் படாமல் மறைத்துவைக்க கோவிலை ஒரு பதுங்கு பாசறையாகக் கொண்டுள்ளனர் பலர்.

நீதியற்ற செயல்கள், ஏமாற்று, பித்தலாட்டம், போன்ற செயல்களைச் செய்துவிட்டு ஆலயங்களில் முன்னுரிமைபெறுவதும் பெறுவதற்குத் துடிப்பதும் கோவிலைக் கள்ளர்குகை ஆக்குவதுதான். 

இந்த வசனம் நமது உடலான ஆலயத்துக்கும் பொருந்தும். புதிய ஏற்பாட்டில் நாமே ஆலயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நமது உடலே பரிசுத்த ஆவியின் ஆலயமாய் இருக்கின்றது. (1 கொரிந்தியர் 3:16 மற்றும் 6:19) இந்த உடலான ஆலயத்தை பரிசுத்தமாய்க் காத்திடவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

நமது உடலால் நாம் தேவனுக்கு ஏற்பில்லாத அவலட்சணமான காரியங்களைச்  செய்யும்போது நாம் ஆலயத்தைக் கள்ளர்குகை ஆக்குகின்றோம். விபச்சாரம், வேசித்தனம், தேவனுக்கு ஏற்பில்லாத சிற்றின்ப காரியங்களில் மூழ்கிவிடும்போது நாம் நமது உடலான ஆலயத்தைக் கள்ளர் குகை ஆக்குகின்றோம்.  

பரிசுத்த ஆவியானவர் வந்து தங்கவேண்டிய ஆலயத்தில் பிசாசின் செயல்பாடுகள் நிறையும்போது, பொய்யனும் பொய்க்குப்  பிதாவுமாகிய பிசாசின் பொக்கிஷங்களால் நமது உடலான ஆலயத்தை நிரப்புகின்றோம்.

இன்றைய வசனம் இதனைத்தான் கூறுகின்றது. எரேமியா கூறுவதுபோல, திருடி, கொலைசெய்து, விபசாரம்பண்ணி, பொய்யாணையிட்டு, பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தேவர்களைப் பின்பற்றி, பிற்பாடு வந்து, நான் கிறிஸ்துவுக்கு உரியவன் என்று கூறிட முடியாது.

அன்பானவர்களே, ஆலயத்துக்குப் போகும்போது நமது நிலைமையை எண்ணிப்பார்ப்போம். நமது பாவங்களுக்கு மன்னிப்பு வேண்டுவோம். முதலில் நமது உடலான ஆலயத்தை தேவனுக்கு ஏற்புடையதாக மாற்றுவோம். வெளிவேடமான ஆலய ஆராதனை தேவனுக்கு ஏற்புடையதல்ல. நமது உடலும் நாம் செல்லும் ஆலயமும் கள்ளர் குகை அல்ல எனும் உண்மை எப்போதும் நமக்குள் இருந்தால் மட்டுமே நாம் பரிசுத்தமுள்ளவர்களாக வாழ முடியும்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

தேவனைத்தவிர வேறு எதனுக்கும் அவருக்கு இணையான இடத்தைக் கொடாதே

 ஆதவன் 🖋️ 570 ⛪ ஆகஸ்ட் 20, 2022 சனிக்கிழமை

"....................உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்." ( லுூக்கா 4 : 8 )

கர்த்தர் ஒருவருக்கே ஆராதனைச்செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம். காரணம், அவரே நம்மை உண்டாக்கியவர். அவரே நமக்காகத் தனது இரத்தத்தைச் சிந்தி இரட்சிப்பை ஏற்படுத்தியவர். எனவே, "அவர் ஒருவருக்கே" என்பது அவரைத்தவிர வேறு எதனுக்கும் உன் உள்ளத்தில் அவருக்கு இணையான இடத்தைக் கொடாதே என்பதாகும்.

இன்றைய வசனத்தை இயேசு கிறிஸ்து சாத்தானை நோக்கிக் கூறினார். "நீர் என்னைப் பணிந்துகொண்டால் இந்த உலகத்தின் மேலுள்ள அதிகாரம், மாட்சிமை எல்லாவற்றையும் உமக்குத் தருவேன்" என்று பிசாசு இயேசு கிறிஸ்துவிடம் கூறியபோது அதற்கு இயேசு கிறிஸ்து பதிலாக இன்றைய தியானத்துக்குரிய வசனத்தைக் கூறினார். 

சாத்தானை இயேசு இந்த உலகத்தின் அதிபதி என்றும் கூறியுள்ளார். (யோவான் 14:30) இன்று பெரும்பாலான மக்கள் உலக ஆசீர்வாதங்களைத் தேடி ஓடுகின்றனர். அவை கிடைக்கும்போது கர்த்தர் தந்ததாக எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் எப்போதுமே இது சரியல்ல. சாத்தானும் நம்மை செல்வத்தினால் நிரப்பமுடியும். 

நாம் கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்யவேண்டும் என்று கூறுவது வெறுமனே கோவிலுக்குச் சென்று தேவனை ஆராதிப்தையல்ல. மாறாக,  நமது செயல்பாடுகள் கர்த்தரை மகிமைப்படுத்துவதாக இருக்கவேண்டும் என்று பொருள். பணம், பதவி, பகட்டு இவைகளுக்காக தேவனுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கர்த்தரை புறக்கணித்து சாத்தானை ஆராதிப்பதாகும். 

வெளிப்பார்வைக்கு நாம் கர்த்தரை ஆராதிப்பதுபோலத் தெரியலாம், ஆலயங்களுச்  சென்று ஆராதனைகளில் கலந்துகொள்ளலாம். ஆனாலும் நமது செயல்பாடுகளும் நமது இருதயமும் தேவனுக்கு நேராக இல்லையானால், நாம் சாத்தானை வழிபடுபவர்கள் தான்.   

இன்று அரசியலிலும் தொழில்களிலும் பல கிறிஸ்தவர்கள் முன்னிலையில் உள்ளனர். ஆனால் எல்லோரும் தேவனை மட்டுமே ஆராதிப்பவராங்களோ, அவருக்கு மட்டுமே மகிமைச் செலுத்துபவர்களோ அல்ல. 

ஆனால் செல்வமுள்ள பலர் கர்த்தரை உண்மையாய் ஆராதித்துள்ளனர். அவர்களது செல்வம் அவர்களது ஆராதனைப் பொருளாக  இல்லாமல் கர்த்தரே அவர்களது ஆராதனைக்குரியவராக  இருந்தார்.  ஆபிரகாம், செல்வந்தனான யோபு, அரசனான தாவீது, எசேக்கியா போன்றார்கள் தங்கள் செல்வத்தையும் பதவியையும் ஆராதிக்காமல் தேவனையே ஆராதித்தவர்கள். அதாவது, பதவி, செல்வம் இருந்தாலும் முதல் முன்னுரிமையை தேவனுக்கே கொடுத்து வாழ்ந்தனர். 

செல்வத்தைத் தேடி, புகழ் பெருமையைத் தேடி நாள் முழுவதும்  ஓடி  பெயருக்கு ஆலையம் சென்று ஆராதிப்பது அவர் ஒருவருக்கே ஆராதனை செலுத்துவதல்ல. மாறாக, செல்வம் புகழ் இருக்கிறதோ இல்லையோ, "அவர் என்னைக்



கொன்றுபோட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாய் இருப்பேன்" என்று யோபு கூறியதுபோல விசுவாசத்துடன் அவருக்கு உத்தமமான ஒரு வாழ்க்கை வாழ்வது.  

இத்தகைய ஒரு வாழ்க்கை வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். நமது வாழ்வில் எல்லாவற்றிலும் முன்னுரிமையைக் கர்த்தருக்கு கொடுப்போம். இதுவே அவரை மகிமைப்படுத்துவது. நம் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்து வாழ்வோம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

Wednesday, August 17, 2022

கிறிஸ்து நமக்குள் வரும்போது நாம் ஜீவனுள்ளவர்கள் ஆகின்றோம்.

 ஆதவன் 🖋️ 569 ⛪ ஆகஸ்ட் 19, 2022 வெள்ளிக்கிழமை

"குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்." ( 1 யோவான்  5 : 12 )

இந்த உலகத்தில் உயிருள்ள பொருட்கள் உயிரில்லாத பொருட்கள் என பல்வேறு பொருட்கள் உள்ளன. உயிருள்ள பொருட்கள் உணவு உட்கொள்ளும், வளரும்,  தனது இனத்தைப் பெருக்கச்செய்யும், பலன்தரும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். ஆனால், உயிரில்லாதவை எதனையும் செய்யாது. கிடந்த இடத்தில கிடக்கும்.

ஒரு கல், வீட்டிலுள்ள மேஜை, நாற்காலி போன்ற பொருட்கள் ஒரு இடத்தில எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் மற்றவர்கள் அதனை மாற்றினாலொழிய அதே இடத்தில்தான் கிடக்கும்.

இன்றைய வசனத்தில் தேவன் குமாரன் இல்லாத வாழ்க்கை உயிரில்லாத வாழ்க்கை என்பதனைக்  கூறுகின்றார். அதாவது குமாரனான இயேசு கிறிஸ்து ஒருவனுக்குள் இல்லையானால் அவன் உயிரில்லாத பொருளுக்குச் சமம் என்கின்றார். 

கிறிஸ்து இல்லாத மனிதன் வெளிப்பார்வைக்கு வளர்ச்சியடைந்தவன் போலவே தெரிவான். பொருளாதாரத்திலும், பதவியிலும் கிறிஸ்து இல்லாத மனிதன் செழிப்படைந்தவன்போலத் தெரிவான். ஆனால், கிறிஸ்துவின் ஜீவன் உள்ளவன் வெளிப்பார்வைக்கு வளர்ச்சியில்லாதவன் போலத் தெரிந்தாலும்   உள்ளான தேவனுக்கேற்ற வளர்ச்சி பெற்றவனாக வாழ்வான். 

குமாரனில்லாத மனிதன் உயிரற்ற பொருள்போல, வளர்ச்சியற்றவனாக, தன்னைக்கொண்டு மற்றவர்களுக்கு பலனில்லாமல், கனிகொடுக்கும் ஒரு வாழ்க்கை இல்லாமல், பாவ உணர்வில்லாதவனாக இருப்பான்.  

இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கும்போது அவர் நமக்குள் வருகின்றார். நமது பாவங்களை மன்னித்து நம்மைத் தனக்கு ஏற்புடையவன் (ள் ) ஆக்குகின்றார். இப்படி தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து நமக்குள் வரும்போது நாம் ஜீவனுள்ளவர்கள் ஆகின்றோம். 

உயிரில்லாத பொருட்கள் ஒரே இடத்தில கிடக்கும்போது அவை துரு ஏறி கெட்டுப்போகலாம், மரப் பொருட்கள் என்றால் உளுத்துப் போகலாம். ஆனால், நமக்குள் குமாரனான கிறிஸ்து வரும்போது நாம் பெலனுள்ளவர்கள் ஆகின்றோம். அந்த பலத்தால் இந்த உலகத்தை ஜெயித்தவர்களாக மாறுகின்றோம். "இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?" ( 1 யோவான்  5 : 5 ) என்று கேள்வி எழுப்புகின்றார் யோவான். 

அன்பானவர்களே, நாம் ஜீவனுள்ளவர்களாக உலகத்தில் வாழ்ந்து கனிகொடுப்பவர்களாக, மற்றவர்களுக்கு பயன்தருபவர்களாக வாழவே அழைக்கப்பட்டுளோம். இப்படி வாழும்போது நாம் உலக மக்களின் பார்வைக்கு அற்பமாகத் தெரிந்தாலும், தேவனது பார்வையில் வலுவானவர்களாக, இந்த உலகத்தை ஜெயிப்பவர்களாக இருப்போம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

Tuesday, August 16, 2022

நாம் அறிவில்லாமலும், தேவனைப்பற்றிய உணர்வில்லாமலும் இருக்கலாமா?

 ஆதவன் 🖋️ 568 ⛪ ஆகஸ்ட் 18, 2022 வியாழக்கிழமை

"மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார்." ( ஏசாயா 1 : 3 )

இன்றைய மனிதர்களது நிலைமையை உணர்ந்து தேவன் கூறிய வார்த்தைகளைப்போல இன்றைய தியான வசனம் இருக்கின்றது. அதாவது, ஏசாயா காலத்தில் வாழ்ந்த மக்களைப்போலவே இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் மனிதர்கள் இருக்கின்றனர் என்பது புரிகின்றது.

தான் உருவாக்கிய மாடு, கழுதை போன்ற மிருகங்களைவிட மனிதன் தரம்தாழ்ந்து விட்டதை தேவன் வருத்தத்துடன் குறிப்பிடுகின்றார். மாட்டுக்கும் கழுதைக்கும் கூட தனது எஜமான் யார் என்பதும் அவனது விருப்பம் என்ன என்பதும் தெரிந்திருக்கிற்றது. ஆனால் இந்த மக்கள் எந்த உணர்வுமில்லாமல் இருக்கின்றனர் என்கின்றார் தேவன். 

முதலில், இந்த ஜனத்துக்கு அறிவில்லை என்றும் பின்னர் உணர்வுமில்லை என்கின்றார் தேவன். அறிவு இருக்குமானால் தேவனை அறிந்திருப்பான். ஐந்தறிவு உள்ள மாடு, கழுதைகளுக்கே தங்கள் எஜமானனைத் தெரிந்திருக்கின்றது. இந்த மக்களுக்குத் தெரியவில்லை.

ஆனால், இந்த உலகத்தில் பலரும் ஒவ்வொரு கடவுளை வழிபடுகின்றனர். ஆனால் அவர்கள் வழிபடும் கடவுளைப்பற்றியே அவர்களுக்குத் தெரியவில்லை.  

வண்டி மாடுகளைக் கவனித்துப்பார்த்தால் ஒனறு புரியும். அந்த மாடுகள் வண்டியில் பூட்டுவதற்கு வண்டியோட்டி வண்டியைத் தூக்கியவுடன் தானாகத் தலையைத் தாழ்த்தி வண்டியில் பூட்டிட உதவிடும். ஆம், அந்த மாடுகளுக்கு வண்டியோட்டியையும் அவன் தன்னை என்ன செய்ய விரும்புகின்றான் என்பதும் தெரிந்திருக்கின்றது.  இதுபோல நாம் தேவனையும் அவர்  நம்மை என்னக்  காரியத்துக்கு பயன்படுத்த விரும்புகின்றார் என்பதையும் அறிந்திருக்கவேண்டும்.

வண்டி மாடுகளைப்பற்றி இன்னும் ஒரு குறிப்பு. வண்டியோட்டி வெளியூர்களுக்கு வண்டியைக் கொண்டு சென்று, திரும்பி வீட்டிற்கு வரும்போது வண்டியோட்டி வண்டியில் படுத்துத் தூங்குவான். ஆனால் அந்த மாடுகள் சரியான பாதையில் நடந்து வண்டியோட்டியின் வீட்டினைச் சென்று சேரும். ஆம், மாடுகள் தன் எஜமானனை அறிந்துள்ளன.

அன்பானவர்களே, மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறிந்திருக்கும்போது அறிவுள்ள நாம் அறிவில்லாமலும், தேவனைப்பற்றிய உணர்வில்லாமலும் இருக்கலாமா? 

இன்று உலகத்தில் மக்கள் சகலவித அநியாயங்களினால் நிறைந்து வாழ்வதற்குக் காரணம் தேவனை அறியாமலும் அவரைப்பற்றிய உணர்வும் இல்லாமல் வாழ்வதால்தான். இதனை, "தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்" (ரோமர் 1:28) எனக் கூறுகின்றார் பவுல். 

மாடுபோலவும் கழுதைபோலவும் வாழாமல் கர்த்தரை அறியும் அறிவில் வளர்ந்து பரிசுத்தமானவர்களாக வாழ்வோம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                             

 

இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்

 ஆதவன் 🖋️ 567 ⛪ ஆகஸ்ட் 17, 2022 புதன்கிழமை


"புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்துசேர்ந்தீர்கள்." ( எபிரெயர் 12 : 24 )

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பாவங்களைப் போக்கிட பாவ நிவாரணப்பலி செலுத்தவேண்டியிருந்தது. மிருகங்களைக் கொன்று அவற்றின் இரத்தத்தினால் மக்கள் பாவ நிவாரணம் பெற்றனர். அனால் இன்று புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசு கிறிஸ்து தனது சுய இரத்தத்தைச் சிந்தி  பாவ நிவாரணத்தை ஏற்படுத்தியுள்ளார். 

இன்றைய வசனம்,  இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை, "ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தம்" என்று கூறுகின்றது.  ஆபேலினுடைய இரத்தம் தன்னைக் கொலை செய்த தனது சகோதரனுக்காக தேவனைநோக்கி மண்ணிலிருந்து முறையிடுகிற இரத்தம். இதனை நாம் ஆதியாகமத்தில் வாசிக்கின்றோம். காயீனிடம் தேவன் பேசும்போது, "...என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது."( ஆதியாகமம் 4 : 10 ) என்றார். 

ஆபேலினுடைய இரத்தம் பூமியிலிருந்து தேவனைநோக்கிக் கூப்பிட்டு தனது சகோதரன் செய்த துரோகத்துக்காக முறையிட்டது. ஆனால் இயேசு  கிறிஸ்துவின் இரத்தம் அதனைவிட நன்மையானவைகளைப் பேசுகின்ற இரத்தம். அது தன்னை ஏற்றுக்கொண்டு தனக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும் மக்களுக்காக பரிந்து பேசுகின்ற இரத்தம். 

ஆபேலினுடைய இரத்தம் பூமியிலிருந்து தேவனை நோக்கிக் கூப்பிட்டது. ஆனால், இயேசு கிறிஸ்து தனது இரத்தத்தைச் சிந்தி நேரடியாக பிதாவின் சந்நிதியில் நுழைந்து நமக்காகப் பரிந்துபேசுகின்றார். "வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்."( எபிரெயர் 9 : 12 ) எனவேதான் இது ஆபேலினுடைய இரத்தம்  பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாக இருக்கின்றது.  

"என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்." ( 1 யோவான்  2 : 1 ) என்று யோவான் குறிப்பிடும் இந்த மேலான நிலையை இயேசு கிறிஸ்துதத் தனது இரத்தத்தைச் சிந்தி அடைந்தார். 

ஆம் அன்பானவர்களே, நாம் இன்று ஆபேலினுடைய இரத்தம் பேசியத்தைவிட மேலான இடத்திலிருந்து மேலானவைகளைப் பேசும் கிறிஸ்துவின் இரத்தத்தினிடம் வந்து சேர்ந்துள்ளோம். அந்த இரத்தத்தால் நம்மைக்  கழுவி பூரணப்படுத்த அவர் உண்மையும் நீதியும் உள்ளவராக இருக்கின்றார். அவருக்கே நம்மை ஒப்புக்கொடுத்து மேலான ஆவிக்குரிய அனுபவத்தைப் பெற்று மகிழ்வோம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

இணையத்தளம்:- www.aathavanmonthly.blogspot.com 

Monday, August 15, 2022

இடுக்கமான வழிதான் நல்ல வழி.

 ஆதவன் 🖋️ 566 ⛪ ஆகஸ்ட் 16, 2022 செவ்வாய்க்கிழமை

"இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 13 : 24 )

கிறிஸ்து காட்டும் மீட்பின் வழி குறுகிய வழி. அதாவது அது சிலுவை சுமக்கும் வழி. செழிப்பு, பகட்டு, ஆடம்பரம் என இவற்றையே விரும்பி வாழ்ந்துகொண்டே கிறிஸ்துவின் ராஜ்யத்திலும் நுழைய விரும்புகின்றனர் பலர். எனவேதான் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று இயேசு கிறிஸ்து கூறுகின்றார். கிறிஸ்துவின் குறுகிய வழியில் நுழையவேண்டுமானால் நாம் சில ஒறுத்தல்கள், தியாகங்கள் செய்யவேண்டியதும்   சிலுவைகள் சுமக்கத் தயாராக இருக்கவேண்டியதும்  அவசியம். 

கிறிஸ்துவே வழி என்றும், நமது பாவங்களை நிவர்த்திசெய்யும் கிருபாதார பலி கிறிஸ்துவே என்றும், பிதா ஒருவரே பிதாவுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தர் ஒருவரே, அவரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்றும் பல வசனங்கள் கிறிஸ்துவே நித்திய ஜீவனுக்கான வழியென்பதை வேதத்தில் உறுதிப்படக் கூறுகின்றன. இதனை விசுவாசித்து எந்த துன்பம் வந்தாலும் அவரையே பற்றிக்கொண்டு வாழ்வதே இடுக்கமான வழியில் பிரவேசிக்க பிரயாசைப்படுதல்.

ஆனால் இன்று பலரும் கிறிஸ்துவைப் பின்பற்றுகின்றோம் என்று கூறிக்கொண்டாலும், குறுகிய வாசல் வழியாய் நுழைய விரும்பாமல் வேதம் கூறும் வழியினைவிட்டு வேறு விசாலமான வழியாக நுழைய முயலுகின்றனர். தங்களுக்கு என  கிறிஸ்துவைவிட்டு வேறு மத்தியஸ்தர்களை உருவாக்கி அவர்களைத்  தேடி ஜெபிக்கின்றனர்; கிறிஸ்துவின் போதனையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றி தங்கள் தவறை நியாயப்படுத்திக்கொண்டு வாழ்கின்றனர்.

 எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்." ( யோவான் 10 : 1 ) கிறிஸ்துவை நமது தகப்பனாக எண்ணினோமானால் அவரிடம் நேரடியாக நம்மால் நெருங்கிட முடியும். அவர் கூறும் போதனைகளின்படியும் அவர் காட்டும் வழிகளிலும்  வாழ முடியும். 

இன்று மக்களது மனநிலையினை அறிந்த பல ஊழியர்கள் இடுக்கமான வாசலை விசாலமானதாக மாற்றிட முயலுகின்றனர். எனவே, கிறிஸ்து கூறாத உபதேசங்களைக் கூறி மக்களைக் கவருகின்றனர். கவர்ச்சிகர ஆசீர்வாத திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றனர். கிறிஸ்து கூறிய சிலுவை சுமக்கும் வலியைவிட இது எளிதாக இருப்பதால் மக்கள் இந்த ஊழியர்கள் காட்டும் விசாலமான வழியில் நுழைகின்றனர்.

மேலும் சில சபைகள், கிறிஸ்து கூறாத; வேதாகமம் கூறாத,  வேறு மத்தியஸ்தர்களை மக்களுக்கு அறிமுகம்செய்து அவர்களிடம் பரிந்துபேசி ஜெபிக்க மக்களை பழக்கியுள்ளனர் ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான் என்று இயேசு தெளிவாகக் கூறியிருந்தும் இந்தக் கள்ளவழி பலருக்கும் பிடித்தமானதாகஇருக்கின்றது. ஆனால் அது அழிவுக்கான வழி என்பதனை அறியாதிருக்கின்றனர். 

"நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்." ( யோவான் 10 : 9 )

அன்பானவர்களே, செழிப்பான மேய்ச்சலைக் கண்டடைய வேண்டுமானால் நாம் கிறிஸ்துவையே பின்பற்றி இடுக்கமான வாயில் வழியாய் நுழைந்திட பிரயாசைப்படவேண்டும். 

புனிதர்கள், பரிசுத்தவான்கள் என நாம் போற்றக்கூடிய அனைவரும் இப்படி இடுக்கமான வழியில் நுழைந்தவர்கள்தான். அவர்களது வாழ்க்கை வரலாறுகள் அவர்கள் எப்படி கிறிஸ்துவை நேசித்தார்கள் என்பதை நமக்கு விளக்கும். அதைப்போல நாம் வாழ அழைக்கப்படுகிறோமேத் தவிர அவர்களை பரிந்துரையாளர்களாக கொள்வதற்கல்ல. 

கிறிஸ்துவையே நேசிப்போம்; அவரையே பின்பற்றுவோம்; இடுக்கமான அந்த வழிதான் இரட்சிப்படையவும் நல்ல மேய்ச்சலைக் கண்டடையவும் வழி. 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

Friday, August 12, 2022

குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.

 ஆதவன் 🖋️ 565 ⛪ ஆகஸ்ட் 15, 2022 திங்கள்கிழமை


"ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்." ( யோவான் 8 : 36 )

இன்று நாம் நமது நாட்டின் விடுதலை நாளைக் கொண்டாடி மகிழ்கின்றோம். விடுதலை என்பது உண்மையிலேயே மகிழ்ச்சி தரக்கூடியது. ஆனால் ஒருவர் விடுதலை அடைந்திட வேண்டுமானால் முதலில் தான் ஒரு அடிமை என்பதனையும் விடுதலை கிடைக்கும்போது என்னென்ன உரிமைகள் கிடைக்கும் என்பதனையும் உணர்ந்திருக்கவேண்டும். இந்தியா ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்தபோது மகாத்மா காந்தியும் இதரத் தலைவர்களும் இந்த விழிப்புணர்வைதான் மக்களுக்கு அளித்து அவர்களைப் போராடத் தூண்டினர்.  

இப்படியே நமது ஆவிக்குரிய வாழ்க்கையும் இருந்தது. பாவ இருளின் பிடியில்,  நித்திய ஜீவன் ஒன்று உண்டு எனும் உணர்வில்லாமல் அடிமைப்பட்டிருந்த மக்களை பாவத்திலிருந்து விடுவித்து விடுதலை அளிக்கக் கிறிஸ்து வந்தார். ஆனால் அதனை கிறிஸ்து அறிவித்தபோது யூதர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. "நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம், நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடிமைகளாயிருக்கவில்லை; விடுதலையாவீர்களென்று நீர் எப்படிச் சொல்லுகிறீர்?" ( யோவான் 8 : 33 ) என்று இயேசுவிடம் வாதிட்டனர்.  

"இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( யோவான் 8 : 34 ) என்று தெளிவாகக் கூறினார். பாவ அடிமை நிலையிலிருந்து விடுதலை அடைந்திட நாம் பாவத்துக்கு அடிமை என்பதனையும் அதிலிருந்து விடுதலை அடைந்திடவேண்டுமெனும் எண்ணமும் நமக்கு இருக்கவேண்டும். நமது பாவங்கள் நம்மை அடிமைப்படுத்தியிருப்பதனை உள்ளன ஆன்மாவோடு உணரவேண்டும். 

".............எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே." ( 2 பேதுரு 2 : 19 ) என எழுதுகின்றார் தலைமை அப்போஸ்தலர் பேதுரு. பாவம் நம்மை ஜெயித்துள்ளதானால் நாம் பாவத்துக்கு அடிமைகள்தான். 

அன்பானவர்களே, எந்த பாவம் நம்மை மேற்கொண்டுள்ளது என்பதனை நிதானமாக எண்ணிப்பார்ப்போம். பண வெறியாக இருக்கலாம், விபச்சார பாவங்கள், எண்ணங்கள், பிறரை அற்பமாக எண்ணி அவமதித்தல், பொய், கோள் சொல்லுதல், மாய்மால பேச்சுக்கள்.....என வொவொன்றாய் எண்ணிப்பார்ப்போம். நம்மை அடிமைப்படுத்தி வைத்துள்ள பாவத்தை இயேசு கிறிஸ்துவிடம் அறிக்கையிடுவோம். 

"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்."( 1 யோவான்  1 : 9 )

".......இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்." ( 1 யோவான்  1 : 7 )

மெய்யான விடுதலையினை இயேசு கிறிஸ்துவின்மூலம் பெற்று விடுதலை வாழ்வை அனுபவிப்போம். "குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்."

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                           

எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.

 ஆதவன் 🖋️ 564 ⛪ ஆகஸ்ட் 14, 2022 ஞாயிற்றுக்கிழமை

"நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது." ( 1 யோவான்  1 : 3 )

அப்போஸ்தலரான யோவான் இயேசு கிறிஸ்துவை அதிகம் அன்புச்செய்தவர். கிறிஸ்துவின் அன்பை முழுமையாகச் சுவைத்தவர் அவர். பிதாவோடும் குமாரனான இயேசு கிறிஸ்துவோடும் ஐக்கியமாக இருந்ததுபோல கிறிஸ்துவை அறிந்த அனைவருமே அப்படி ஒரு ஐக்கியமான உறவில்  இருக்கவேண்டுமென விரும்பினார்.  

எனவேதான், நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம். என்று கூறுகின்றார். இதுவே இந்த நிருபத்தை அவர் எழுதுவதற்குக் காரணம். பிதாவோடும் குமாரனான கிறிஸ்துவோடும் ஐக்கியமுள்ளவர்களாக இருப்பதற்கு என்ன வழி என்பதே இந்த நிருபத்தின் மைய சிந்தனை. 

யோவான் தான் எழுதிய நற்செய்தியிலும் இதுபோல தான் எழுதிய நோக்கத்தைக் குறிப்பிடுகின்றார். "இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது." ( யோவான் 20 : 31 )

நாம் அனைவரும் கிறிஸ்துவை விசுவாசிப்பதன்  மூலம் நித்திய ஜீவனை அடைய வேண்டும்; பிதாவோடும் குமாரனான இயேசு கிறிஸ்துவோடும் எப்போதும் ஐக்கியமாக இருக்கவேண்டும் என்பதே யோவானின் ஆசை.  இயேசு கிறிஸ்துவும் தனது ஜெபத்தில் இதனைத்தான் வேண்டினார். 

"அவர்களெல்லாரம் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்." ( யோவான் 17 : 21 )

மேலும், "............நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன்." ( யோவான் 17 : 24 )

அன்பானவர்களே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆசைபட்டுக் கூறிய அதே கருத்தினைத்தான் அவரது அன்புச் சீடர் யோவானும் கூறுகின்றார். 

இன்று நமது ஆசை விருப்பங்கள் என்ன ? கர்த்தரோடு ஐக்கியமுள்ளவர்களாக வாழவேண்டுமென விரும்புகின்றோமா அல்லது அவரிடம் உலகத் தேவைகளுக்காக மட்டுமே ஜெபித்து பெற்றுக்கொண்டு அவரது ஐக்கியமில்லாமல் நித்திய ஜீவனை இழந்துபோக விரும்புகின்றோமா?

"எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது." என்று உறுதிபடக் கூறி அதற்கேற்ற வாழ்க்கை வாழ முயலுவோம்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                    

நாம் இயேசு கிறிஸ்துவை எதற்காகத் தொடுகின்றோம்?

 ஆதவன் 🖋️ 563 ⛪ ஆகஸ்ட் 13, 2022 சனிக்கிழமை


"அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்." ( மாற்கு 6 : 56 )

இன்றைய தியான வசனம் மாற்கு 6:56 ன் இறுதிப்பகுதியாகும். இந்த வசனம் முழுமையாகக் கூறுவது, "அல்லாமலும் அவர் பிரவேசித்த கிராமங்கள் பட்டணங்கள் நாடுகள் எவைகளோ, அவைகளின் சந்தைவெளிகளிலே வியாதிக்காரரை வைத்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்." ( மாற்கு 6 : 56 )

இந்தப்பகுதியில் இயேசுவின் உடலையும் அவரது ஆடைகளையும் தொட்டுக் குணமடைய மக்கள் அவரிடம் நெருங்கினார்கள் என்று கூறுகின்றது. இயேசு கிறிஸ்து வெறும் உடல் சுகத்தை மட்டும் அளிக்க வரவில்லை. ஆத்தும சுகமளித்து நித்திய ஜீவனை அளிக்கவே அவர் வந்தார். 

இப்படி கிறிஸ்துவை ஆத்தும ரீதியாகத் தொட்டு குணமடைந்தவர்களே அவரது சீடர்களும் மற்றும் பலரும். சீடர்கள் தவிர பல உதாரணங்கள் வேதத்தில் உண்டு. 12 சீடர்கள் தவிர அவரைப் பின்பற்றிய அநேக சீடர்கள்,  சகேயு, மகதேலேனா மரியாள், சிலுவைக் கள்ளன் ஒருவன்,   அரிமத்தேயா யோசேப்பு, 10 குஷ்டரோகிகளில் ஒருவன் போன்றவர்கள். உடல் ரீதியாக அவரைத் தொட்டவர்கள் உடல் சுகம் அடைந்தார்கள்.  ஆத்தும ரீதியாகத் தொட்டவர்கள் இரட்சிக்கப்பட்டு ஆத்தும சுகம் அடைந்தார்கள். 

இன்று நாம் இயேசு கிறிஸ்துவை எதற்காகத் தொடுகின்றோம்?  சரீர சுகத்துக்காக, பிரச்சனைகளிலிருந்து விடுபட, ஆசீர்வாதம் பெற என பல காரணங்களுக்காக இருக்கலாம். தவறல்ல; ஆனால் அத்துடன் நமது தொடுதலை நாம் நிறுத்திவிடக் கூடாது. அவரை ஆத்தும மீட்பராக எண்ணித் தொடவேண்டும். 

இன்று  கிறிஸ்துவுக்காக சாட்சி கூறும் பலரது சாட்சியங்கள் உடல் ரீதியாக இயேசுவைத் தொட்ட சாட்சிகளே.  இயேசு செய்த அற்புதங்களைக்  கண்டு அவர்மூலம் மீட்பு உண்டு என்று விசுவாசிப்பதைவிட உலகத் தேவைகளால் திருப்தியாவதையே பலரும் விரும்பினர். எனவேதான் இயேசு அவர்களுக்கு, "நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்". ( யோவான் 6 : 26 ) என்றார். 

அன்பானவர்களே, நாம் அப்பம் உண்டு திருப்தியானதால் அல்ல, திருப்தியான மறுமை வாழ்வளிக்கும் மீட்புக்காக அவரைத் தொடும்படித் தேடுவோம். அப்படித் தேடித் தொடும்போது நமது ஆத்தும மீட்பு எனும் அதிசயத்தை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொண்டு அவரைத் தொடும்போது "உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்." ( 1 யோவான்  5 : 13 )

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

இணையத்தளம்:- www.aathavanmonthly.blogspot.com 

Thursday, August 11, 2022

கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு பந்தயம்

 ஆதவன் 🖋️ 562 ⛪ ஆகஸ்ட் 12, 2022 வெள்ளிக்கிழமை

"கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்." ( பிலிப்பியர் 3 : 14, 15 )

கிறிஸ்தவ வாழ்க்கையைப் பவுல் அப்போஸ்தலர் பந்தயத்துக்கு ஒப்பிட்டு பேசுவதை நாம் பல இடங்களில் பார்க்கலாம். உதாரணமாக, ஓட்டப்பந்தயம் ( 1 கொரிந்தியர் 9 : 24 ) மல்யுத்தம் ( 2 தீமோத்தேயு 2 : 5 ) என்று குறிப்பிடுகின்றார். 

எந்தவிதப் பந்தயமாக இருந்தாலும் அதற்குப் பரிசுப்பொருள் இருக்கும். அதுபோல கிறிஸ்தவ வாழ்க்கைக்குப் பரிசுப்பொருள் நித்திய ஜீவன்.  அதனையே இங்கு பரம அழைத்தலின் பந்தயப்பொருள் என்று பவுல் குறிப்பிடுகின்றார். அதுவே கிறிஸ்தவர்களின் இலக்கு. அந்த இலக்கை அடைந்திட அதனை நோக்கி நமது பந்தயத்தைத் தொடரவேண்டும்.

ஓட்டப்பந்தயத்தில் ஓடும் வீரன் ஒருவன் ஓடும்போது தனக்கு அருகே ஓடிக்கொண்டிருக்கும் மற்றவீரனையோ அல்லது ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தையோ பார்த்துக்கொண்டு ஓடினால் அவன் வெற்றிபெற முடியாது. ஓடுபவனது கண்கள் எப்போதும் இறுதி இலக்கை நோக்கியே இருக்கவேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 

"பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்." ( 1 கொரிந்தியர் 9 : 24 ) என்கின்றார். ஆனால், கிறிஸ்தவ ஓட்டப்பந்தயத்தில் பரிசு ஒருவருக்குமட்டும் உரியதல்ல. சரியானபடி ஓடுபவர்கள் எல்லோரும் பரிசினைப் பெறுவார்கள். 

இன்றைய வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் தொடர்ந்து கூறுகின்றார், "நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்."  அதாவது நாம் தேறின கிறிஸ்தவர்கள் என்றால் இந்த சிந்தனை கொண்டவர்களாக  இருப்போம். தேறாத கிறிஸ்தவர்கள் என்றால், உலகத் தேவைகளுக்காக மட்டுமே ஜெபித்து வெறும் மதவாதியாகவே இருப்போம்.

மதவாதி நிலையிலிருந்து நாம் ஆன்மீகவாதியாக மாறும்போது மட்டுமே   நாம் கிறிஸ்துவுக்கு ஏற்றவர்களாகவும் அவர் கூறிய நித்திய ஜீவனை அடைந்திடவேண்டும் எனும் ஆர்வமுள்ளவர்களாகவும் நாம் மாறமுடியும். நாம் எந்த நிலையில் இருக்கின்றோம் என்பது நமது மனச்சாட்சிக்குத் தெரியும்.

அன்பனவர்களே, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடரும் மக்களாக நம்மை மாற்றிடுவோம். கிறிஸ்து நம்மை மெய்யான ஆசீர்வாதத்தினால் நிரப்புவார். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Wednesday, August 10, 2022

தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்

 ஆதவன் 🖋️ 561 ⛪ ஆகஸ்ட் 11, 2022 வியாழக்கிழமை

"யூதாவின் வம்சத்தாருக்கோ நான் இரக்கஞ்செய்வேன்; வில்லினாலும், பட்டயத்தினாலும், யுத்தத்தினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரரினாலும் நான் அவர்களை இரட்சியாமல், அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை இரட்சிப்பேன்" ( ஓசியா 1 : 7 )

இன்றைய வசனத்தில் வில், பட்டயம், யுத்தம், குதிரை, குதிரை வீரர்கள் என்று பலத்தைக் குறிக்கும் பலவித வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்தக்கால போர் ஆயுதங்கள் இவை.   இவை குறிப்பாக மனிதர்களது பலத்தைக் குறிக்கின்றன. 

இன்று நம்மிடம் ஒருவேளை மிகுதியான செல்வம் இருக்கலாம், நல்ல உடல்நலம்,  நல்ல பதவி, நாம் கட்டளையிட்டவைகளை உடனடியாக நிறைவேற்ற அதிகப்படியான வேலையாட்கள் இருக்கலாம். ஆனால் இவை அனைத்தும் தேவனுக்குமுன் ஒன்றுமில்லாதவையே. இவை நமக்குப் பாதுகாப்பு என்று எண்ணிக்கொண்டு இறுமாப்போடு வாழ்வோமானால் ஒன்றுமில்லாத இல்பொருள் ஆகிவிடுவோம். 

இதனால்தான் சங்கீத ஆசிரியர், "இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது." ( சங்கீதம் 33 : 17 ) என்று கூறுகின்றார். பணத்தையும் பதவியையும் நம்பி, நமது வாழ்வு இந்த உலகினில் நிரந்தரம் என எண்ணி வாழ்ந்த அரசியல் தலைவர்களின் முடிவினை நாம் பார்த்துள்ளோம். 

கர்த்தர் ஒருவரைப் பாதுகாத்திடவும், உயர்த்திடவும் உலக மனிதர்கள் தேவை எனக் கருதும் இவை எதுவுமே தேவையில்லை. அவர் நினைத்தால் ஒருவனைப் புழுதியிலிருந்து கோபுர உச்சிக்கு கொண்டுசெல்லமுடியும். ஆம், கர்த்தர் கூறுகின்றார், வில்லினாலும், பட்டயத்தினாலும், யுத்தத்தினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரரினாலும் நான் அவர்களை இரட்சியாமல், அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை இரட்சிப்பேன்.

ஆம், அதனால்தான் "என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கன்மலையும் என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது." ( சங்கீதம் 62 : 7 ) என்கின்றார் தாவீது. 

அன்பானவர்களே, நல்ல வேலை இல்லையே, நல்ல வீடு வாசல், பொருளாதார வசதி, உடல் பெலன் இல்லையே என்று எண்ணிக் கவலை வேண்டாம். எந்த நிலையிலும் தேவன் ஒருவரை உயர்த்த முடியும். அவர், வில்லினாலும், பட்டயத்தினாலும், யுத்தத்தினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரரினாலும் இரட்சிக்கிறவர் அல்ல. கர்த்தராகிய தேவனே நம்மை இரட்சிக்கிறவர். 

பார்வோனது பலத்த சேனைகளும் போருக்குப் பழக்கப்பட்டக் குதிரைகளும் தேவ மனிதனாகிய மோசேயின்முன் நிற்கமுடியவில்லை. காரணம், தேவன் அவரோடிருந்தார்.

பெருமை பாராட்டுபவர்கள் பெருமை பாராட்டிக்கொண்டிருக்கட்டும். நாம் கர்த்தரை அறிந்துள்ளோம் என்பதே நமக்கு மேன்மை. அவர் நம்மை ஏற்றகாலத்தில் உயர்த்துவார்.  

"சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்." ( சங்கீதம் 20 : 7 )

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Monday, August 08, 2022

"நான் ஆதாமைப்போல என் அக்கிரமத்தை ஒளித்துவைத்தேனோ?"

 ஆதவன் 🖋️ 560 ⛪ ஆகஸ்ட் 10, 2022 புதன்கிழமை

"நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ?" ( யோபு 31 : 33 )

ஆதாம் பாவம் செய்ததுமட்டுமல்ல, அதனை வெளிப்படையாக தேவனிடம் அறிக்கையிடத் தவறிவிட்டான். அவன் தனது பாவத்துக்கு ஏவாளைக்  காரணம் காட்டினான். அத்துடன் தேவனையும் ஒரு காரணமாக் கூறினான். "என்னுடன் இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருச்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்." (ஆதியாகமம் 3:12). அதாவது அந்த ஸ்திரீயை நீர் எனக்குக் கொடுக்காமல் இருந்திருந்தால் அவள் அந்தக் கனியை எனக்குத் தந்திருக்கமாட்டாள்; நான் புசித்திருக்கமாட்டேன் என்று பொருளாகின்றது. 

இங்கு யோபு தனக்கு அதிகப்படியான துன்பம் வந்ததால், நான் ஆதாமைப்போல என் பாவத்தை ஒளித்துவைத்தேனோ? எனக்கு ஏன் இந்தத் துன்பம் என்று கேட்கின்றார். 

இன்று பலரும் இதுபோலத் தங்களது  துன்பத்துக்குக் கரணம் தங்களது பாவங்கள் என்று எண்ணலாம்.  ஆனால் எப்போதும் அப்படியல்ல,  உலகினில் எல்லோருக்குமே துன்பங்கள் வரத்தான் செய்யும். ஆனால், தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது நாம் சோதனையை மேற்கொள்ளும் பெலனை தேவன் நமக்குத் தருவார். 

"மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்." ( 1 கொரிந்தியர் 10 : 13 )

ஆனால், நாம் யோபு தன்னை ஆராய்ந்து பார்த்துக்  கூறியதுபோல நம்மை ஆராய்ந்து பார்க்கவேண்டியது அவசியம்.  நாம் நமது பாவங்களை ஆதாமைபோல மறைத்து வைத்துள்ளோமா என்று எண்ணிப்பார்ப்போம். காரணம், வேதம் கூறுகின்றது, "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்." (நீதிமொழிகள் 28:13)

பிறருக்கு எதிராக நாம் செய்த செயல்கள், பேசிய பேச்சுக்கள், நீதியற்ற செயல்கள், ஆபாச பேச்சுக்கள், எண்ணங்கள், என வொவ்வொன்றாக எண்ணி தேவனிடம் அறிக்கையிடுவோம். "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்" என்று சாபம் கூறுவதுபோல கூறும் வசனத்துக்கு நடுங்குவோம். நாம் வாழ்வடைய வேண்டுமானால் பாவ மன்னிப்பும் பாவத்திலிருந்து விடுதலையும் வேண்டும். 

ஆண்டவரே, "நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ?" என்று தேவனிடம் நாமும் கேட்போம். நமது பாவங்களை அவரே நமக்கு உணர்த்தித் தருவார். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712