இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Friday, August 12, 2022

நாம் இயேசு கிறிஸ்துவை எதற்காகத் தொடுகின்றோம்?

 ஆதவன் 🖋️ 563 ⛪ ஆகஸ்ட் 13, 2022 சனிக்கிழமை


"அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்." ( மாற்கு 6 : 56 )

இன்றைய தியான வசனம் மாற்கு 6:56 ன் இறுதிப்பகுதியாகும். இந்த வசனம் முழுமையாகக் கூறுவது, "அல்லாமலும் அவர் பிரவேசித்த கிராமங்கள் பட்டணங்கள் நாடுகள் எவைகளோ, அவைகளின் சந்தைவெளிகளிலே வியாதிக்காரரை வைத்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்." ( மாற்கு 6 : 56 )

இந்தப்பகுதியில் இயேசுவின் உடலையும் அவரது ஆடைகளையும் தொட்டுக் குணமடைய மக்கள் அவரிடம் நெருங்கினார்கள் என்று கூறுகின்றது. இயேசு கிறிஸ்து வெறும் உடல் சுகத்தை மட்டும் அளிக்க வரவில்லை. ஆத்தும சுகமளித்து நித்திய ஜீவனை அளிக்கவே அவர் வந்தார். 

இப்படி கிறிஸ்துவை ஆத்தும ரீதியாகத் தொட்டு குணமடைந்தவர்களே அவரது சீடர்களும் மற்றும் பலரும். சீடர்கள் தவிர பல உதாரணங்கள் வேதத்தில் உண்டு. 12 சீடர்கள் தவிர அவரைப் பின்பற்றிய அநேக சீடர்கள்,  சகேயு, மகதேலேனா மரியாள், சிலுவைக் கள்ளன் ஒருவன்,   அரிமத்தேயா யோசேப்பு, 10 குஷ்டரோகிகளில் ஒருவன் போன்றவர்கள். உடல் ரீதியாக அவரைத் தொட்டவர்கள் உடல் சுகம் அடைந்தார்கள்.  ஆத்தும ரீதியாகத் தொட்டவர்கள் இரட்சிக்கப்பட்டு ஆத்தும சுகம் அடைந்தார்கள். 

இன்று நாம் இயேசு கிறிஸ்துவை எதற்காகத் தொடுகின்றோம்?  சரீர சுகத்துக்காக, பிரச்சனைகளிலிருந்து விடுபட, ஆசீர்வாதம் பெற என பல காரணங்களுக்காக இருக்கலாம். தவறல்ல; ஆனால் அத்துடன் நமது தொடுதலை நாம் நிறுத்திவிடக் கூடாது. அவரை ஆத்தும மீட்பராக எண்ணித் தொடவேண்டும். 

இன்று  கிறிஸ்துவுக்காக சாட்சி கூறும் பலரது சாட்சியங்கள் உடல் ரீதியாக இயேசுவைத் தொட்ட சாட்சிகளே.  இயேசு செய்த அற்புதங்களைக்  கண்டு அவர்மூலம் மீட்பு உண்டு என்று விசுவாசிப்பதைவிட உலகத் தேவைகளால் திருப்தியாவதையே பலரும் விரும்பினர். எனவேதான் இயேசு அவர்களுக்கு, "நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்". ( யோவான் 6 : 26 ) என்றார். 

அன்பானவர்களே, நாம் அப்பம் உண்டு திருப்தியானதால் அல்ல, திருப்தியான மறுமை வாழ்வளிக்கும் மீட்புக்காக அவரைத் தொடும்படித் தேடுவோம். அப்படித் தேடித் தொடும்போது நமது ஆத்தும மீட்பு எனும் அதிசயத்தை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொண்டு அவரைத் தொடும்போது "உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்." ( 1 யோவான்  5 : 13 )

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

இணையத்தளம்:- www.aathavanmonthly.blogspot.com 

Thursday, August 11, 2022

கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு பந்தயம்

 ஆதவன் 🖋️ 562 ⛪ ஆகஸ்ட் 12, 2022 வெள்ளிக்கிழமை

"கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்." ( பிலிப்பியர் 3 : 14, 15 )

கிறிஸ்தவ வாழ்க்கையைப் பவுல் அப்போஸ்தலர் பந்தயத்துக்கு ஒப்பிட்டு பேசுவதை நாம் பல இடங்களில் பார்க்கலாம். உதாரணமாக, ஓட்டப்பந்தயம் ( 1 கொரிந்தியர் 9 : 24 ) மல்யுத்தம் ( 2 தீமோத்தேயு 2 : 5 ) என்று குறிப்பிடுகின்றார். 

எந்தவிதப் பந்தயமாக இருந்தாலும் அதற்குப் பரிசுப்பொருள் இருக்கும். அதுபோல கிறிஸ்தவ வாழ்க்கைக்குப் பரிசுப்பொருள் நித்திய ஜீவன்.  அதனையே இங்கு பரம அழைத்தலின் பந்தயப்பொருள் என்று பவுல் குறிப்பிடுகின்றார். அதுவே கிறிஸ்தவர்களின் இலக்கு. அந்த இலக்கை அடைந்திட அதனை நோக்கி நமது பந்தயத்தைத் தொடரவேண்டும்.

ஓட்டப்பந்தயத்தில் ஓடும் வீரன் ஒருவன் ஓடும்போது தனக்கு அருகே ஓடிக்கொண்டிருக்கும் மற்றவீரனையோ அல்லது ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தையோ பார்த்துக்கொண்டு ஓடினால் அவன் வெற்றிபெற முடியாது. ஓடுபவனது கண்கள் எப்போதும் இறுதி இலக்கை நோக்கியே இருக்கவேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 

"பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்." ( 1 கொரிந்தியர் 9 : 24 ) என்கின்றார். ஆனால், கிறிஸ்தவ ஓட்டப்பந்தயத்தில் பரிசு ஒருவருக்குமட்டும் உரியதல்ல. சரியானபடி ஓடுபவர்கள் எல்லோரும் பரிசினைப் பெறுவார்கள். 

இன்றைய வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் தொடர்ந்து கூறுகின்றார், "நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்."  அதாவது நாம் தேறின கிறிஸ்தவர்கள் என்றால் இந்த சிந்தனை கொண்டவர்களாக  இருப்போம். தேறாத கிறிஸ்தவர்கள் என்றால், உலகத் தேவைகளுக்காக மட்டுமே ஜெபித்து வெறும் மதவாதியாகவே இருப்போம்.

மதவாதி நிலையிலிருந்து நாம் ஆன்மீகவாதியாக மாறும்போது மட்டுமே   நாம் கிறிஸ்துவுக்கு ஏற்றவர்களாகவும் அவர் கூறிய நித்திய ஜீவனை அடைந்திடவேண்டும் எனும் ஆர்வமுள்ளவர்களாகவும் நாம் மாறமுடியும். நாம் எந்த நிலையில் இருக்கின்றோம் என்பது நமது மனச்சாட்சிக்குத் தெரியும்.

அன்பனவர்களே, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடரும் மக்களாக நம்மை மாற்றிடுவோம். கிறிஸ்து நம்மை மெய்யான ஆசீர்வாதத்தினால் நிரப்புவார். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Wednesday, August 10, 2022

தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்

 ஆதவன் 🖋️ 561 ⛪ ஆகஸ்ட் 11, 2022 வியாழக்கிழமை

"யூதாவின் வம்சத்தாருக்கோ நான் இரக்கஞ்செய்வேன்; வில்லினாலும், பட்டயத்தினாலும், யுத்தத்தினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரரினாலும் நான் அவர்களை இரட்சியாமல், அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை இரட்சிப்பேன்" ( ஓசியா 1 : 7 )

இன்றைய வசனத்தில் வில், பட்டயம், யுத்தம், குதிரை, குதிரை வீரர்கள் என்று பலத்தைக் குறிக்கும் பலவித வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்தக்கால போர் ஆயுதங்கள் இவை.   இவை குறிப்பாக மனிதர்களது பலத்தைக் குறிக்கின்றன. 

இன்று நம்மிடம் ஒருவேளை மிகுதியான செல்வம் இருக்கலாம், நல்ல உடல்நலம்,  நல்ல பதவி, நாம் கட்டளையிட்டவைகளை உடனடியாக நிறைவேற்ற அதிகப்படியான வேலையாட்கள் இருக்கலாம். ஆனால் இவை அனைத்தும் தேவனுக்குமுன் ஒன்றுமில்லாதவையே. இவை நமக்குப் பாதுகாப்பு என்று எண்ணிக்கொண்டு இறுமாப்போடு வாழ்வோமானால் ஒன்றுமில்லாத இல்பொருள் ஆகிவிடுவோம். 

இதனால்தான் சங்கீத ஆசிரியர், "இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது." ( சங்கீதம் 33 : 17 ) என்று கூறுகின்றார். பணத்தையும் பதவியையும் நம்பி, நமது வாழ்வு இந்த உலகினில் நிரந்தரம் என எண்ணி வாழ்ந்த அரசியல் தலைவர்களின் முடிவினை நாம் பார்த்துள்ளோம். 

கர்த்தர் ஒருவரைப் பாதுகாத்திடவும், உயர்த்திடவும் உலக மனிதர்கள் தேவை எனக் கருதும் இவை எதுவுமே தேவையில்லை. அவர் நினைத்தால் ஒருவனைப் புழுதியிலிருந்து கோபுர உச்சிக்கு கொண்டுசெல்லமுடியும். ஆம், கர்த்தர் கூறுகின்றார், வில்லினாலும், பட்டயத்தினாலும், யுத்தத்தினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரரினாலும் நான் அவர்களை இரட்சியாமல், அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை இரட்சிப்பேன்.

ஆம், அதனால்தான் "என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கன்மலையும் என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது." ( சங்கீதம் 62 : 7 ) என்கின்றார் தாவீது. 

அன்பானவர்களே, நல்ல வேலை இல்லையே, நல்ல வீடு வாசல், பொருளாதார வசதி, உடல் பெலன் இல்லையே என்று எண்ணிக் கவலை வேண்டாம். எந்த நிலையிலும் தேவன் ஒருவரை உயர்த்த முடியும். அவர், வில்லினாலும், பட்டயத்தினாலும், யுத்தத்தினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரரினாலும் இரட்சிக்கிறவர் அல்ல. கர்த்தராகிய தேவனே நம்மை இரட்சிக்கிறவர். 

பார்வோனது பலத்த சேனைகளும் போருக்குப் பழக்கப்பட்டக் குதிரைகளும் தேவ மனிதனாகிய மோசேயின்முன் நிற்கமுடியவில்லை. காரணம், தேவன் அவரோடிருந்தார்.

பெருமை பாராட்டுபவர்கள் பெருமை பாராட்டிக்கொண்டிருக்கட்டும். நாம் கர்த்தரை அறிந்துள்ளோம் என்பதே நமக்கு மேன்மை. அவர் நம்மை ஏற்றகாலத்தில் உயர்த்துவார்.  

"சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்." ( சங்கீதம் 20 : 7 )

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Monday, August 08, 2022

"நான் ஆதாமைப்போல என் அக்கிரமத்தை ஒளித்துவைத்தேனோ?"

 ஆதவன் 🖋️ 560 ⛪ ஆகஸ்ட் 10, 2022 புதன்கிழமை

"நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ?" ( யோபு 31 : 33 )

ஆதாம் பாவம் செய்ததுமட்டுமல்ல, அதனை வெளிப்படையாக தேவனிடம் அறிக்கையிடத் தவறிவிட்டான். அவன் தனது பாவத்துக்கு ஏவாளைக்  காரணம் காட்டினான். அத்துடன் தேவனையும் ஒரு காரணமாக் கூறினான். "என்னுடன் இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருச்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்." (ஆதியாகமம் 3:12). அதாவது அந்த ஸ்திரீயை நீர் எனக்குக் கொடுக்காமல் இருந்திருந்தால் அவள் அந்தக் கனியை எனக்குத் தந்திருக்கமாட்டாள்; நான் புசித்திருக்கமாட்டேன் என்று பொருளாகின்றது. 

இங்கு யோபு தனக்கு அதிகப்படியான துன்பம் வந்ததால், நான் ஆதாமைப்போல என் பாவத்தை ஒளித்துவைத்தேனோ? எனக்கு ஏன் இந்தத் துன்பம் என்று கேட்கின்றார். 

இன்று பலரும் இதுபோலத் தங்களது  துன்பத்துக்குக் கரணம் தங்களது பாவங்கள் என்று எண்ணலாம்.  ஆனால் எப்போதும் அப்படியல்ல,  உலகினில் எல்லோருக்குமே துன்பங்கள் வரத்தான் செய்யும். ஆனால், தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது நாம் சோதனையை மேற்கொள்ளும் பெலனை தேவன் நமக்குத் தருவார். 

"மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்." ( 1 கொரிந்தியர் 10 : 13 )

ஆனால், நாம் யோபு தன்னை ஆராய்ந்து பார்த்துக்  கூறியதுபோல நம்மை ஆராய்ந்து பார்க்கவேண்டியது அவசியம்.  நாம் நமது பாவங்களை ஆதாமைபோல மறைத்து வைத்துள்ளோமா என்று எண்ணிப்பார்ப்போம். காரணம், வேதம் கூறுகின்றது, "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்." (நீதிமொழிகள் 28:13)

பிறருக்கு எதிராக நாம் செய்த செயல்கள், பேசிய பேச்சுக்கள், நீதியற்ற செயல்கள், ஆபாச பேச்சுக்கள், எண்ணங்கள், என வொவ்வொன்றாக எண்ணி தேவனிடம் அறிக்கையிடுவோம். "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்" என்று சாபம் கூறுவதுபோல கூறும் வசனத்துக்கு நடுங்குவோம். நாம் வாழ்வடைய வேண்டுமானால் பாவ மன்னிப்பும் பாவத்திலிருந்து விடுதலையும் வேண்டும். 

ஆண்டவரே, "நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ?" என்று தேவனிடம் நாமும் கேட்போம். நமது பாவங்களை அவரே நமக்கு உணர்த்தித் தருவார். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

யோபுவைபோல பரிசுத்தத்தை மட்டுமே காணவேண்டுமென்று உடன்படிக்கைபண்ணுவோம்.


 ஆதவன் 🖋️ 559 ⛪ ஆகஸ்ட் 09, 2022 செவ்வாய்க்கிழமை

"என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?"( யோபு 31 : 1 )

இன்றைய வசனம் இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் சிந்தனைக்குரிய வசனம். இன்று காதல் எனும் பெயரில் வெறும் இனக்கவர்ச்சியால் இளைஞர்களும் இளம் பெண்களும் சீரழிந்துகொண்டிருக்கின்றனர். காரணம், அவர்கள் தங்கள் கண்களால் காண்பவை தங்களுக்கு பூரண நன்மைதரும் என்று எண்ணுகின்றனர். வெளி அழகினைப் பார்த்து தங்கள் உள்ளங்களை எதிர்பாலரிடம் பறிகொடுத்து பலவேளைகளில் அல்லல்படுகின்றனர்.

இங்கு பக்தனான யோபு தேவனோடு ஒரு உடன்படிக்கைபண்ணிவிட்டார். அவர் தன் கண்களால் அழகிய பெண்களையல்ல, தேவனைக் காண்பதிலேயே தனது ஆர்வத்தைக் கொண்டிருந்தார். அதனால் பரிசுத்தமான பார்வை தனக்கு வேண்டும் என உடன்படிக்கைபண்ணிக்கொண்டார். அதனால் தேவனைப் பார்ப்பேன் என உறுதியாக நம்பினார். அவரது எண்ணமெல்லாம் அதுவாகவே இருந்தது.  ஒரு இளைஞனும்  இளம் பெண்ணும் காதலால் சோர்ந்துபோவதுபோல யோபு தேவனின் நினைவால் சோர்ந்துபோனார். 

எனவேதான் அவர் கூறுகின்றார், "அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்துபோகிறது." ( யோபு 19 : 27 )

அவரது அந்த ஆசை வீணாகவில்லை. தேவன் அவருக்குத் தரிசனமானார். "என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது." ( யோபு 42 : 5 )

அன்பானவர்களே, உலக மனிதர்களிடம் காதல் கொண்டு அலைவோமானால், "அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும், உன்னதத்திலிருந்து சர்வவல்லவர் கொடுக்கும் சுதந்தரமும் கிடைக்குமோ?" ( யோபு 31 : 2 ) கிடைக்காது. 

இளைஞர்களுக்கு மட்டுமல்ல,  பெரியோர்களுக்கும் இது பொருந்தும். இன்று ஆபாச படங்களும் வீடியோ காட்சிகளும் எளிதில் காணக்கிடைப்பதால் பெரியோர்களும்கூட இவற்றின் கவர்ச்சியில் கவரப்பட்டு பாவத்தில் விழுகின்றனர். 

நமது கண்களை நாம் யோபுவைபோல பரிசுத்தத்தை மட்டுமே காணவேண்டுமென்று  உடன்படிக்கைபண்ணுவோம். யோபுவுக்கு வெளிப்பட்டதுபோல தேவன் தன்னை நமக்கு வெளிப்படுத்துவார். அத்தகைய பரிசுத்த வாழ்க்கைவாழ பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவியும் செய்வார். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Saturday, August 06, 2022

பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் அவருக்குமுன் நிற்போம்.

 ஆதவன் 🖋️ 558 ⛪ ஆகஸ்ட் 08, 2022 திங்கள்கிழமை


"முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன்நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்." ( கொலோசெயர் 1 : 21 )

கிறிஸ்துவால் மீட்கப்படுவதற்குமுன் நாம் அவருக்கு அந்நியராகவும் நமது கெட்டச் செயல்களால் அவருக்கு எதிரிகளாகவும் இருந்தோம். இப்போது நாம் மீட்கப்பட்டுள்ளதால் அவருக்கு உரியவர்களானோம். இது எப்படி நடந்தது என்றால், அவருடைய மாம்ச சரீரத்தில் அவர் அடைந்த மரணத்தினால் நடந்தது. 

கிறிஸ்துவின் பாடுகளும் மரணமும் கொண்டுவந்த மிகப்பெரிய பலன் இதுதான்.  அவரோடு ஒப்புரவாகி அவரை அப்பா என அழைக்கும் பேறுபெற்றோம் நாம்.

கிறிஸ்துவின் இந்த மிகப்பெரிய இரட்சிப்பை பிரசித்திப்படுத்தி அனைவரும் இதனைப் பெற்றுகொள்ளச்செய்வதே சுவிசேஷ அறிவிப்பு. நாம் கேட்டு அறிந்த சுவிசேஷத்தினால் இந்தப் பேற்றினை பெற்றுள்ளோம். எனவே அப்போஸ்தலனான பவுல் தொடர்ந்து அடுத்த  வசனத்தில் கூறுகின்றார்:-

"நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்." ( கொலோசெயர் 1 : 22 )

ஆதாவது நாம் கேட்டு விசுவாசித்த இந்த சுவிசேஷத்தினைவிட்டு அசையாமல் உறுதியாய் இருக்கவேண்டும். அப்படி இருப்போமானால் நாம் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் அவருக்குமுன் நிற்போம். 

அன்பானவர்களே, உலகத் தேவைகளுக்காக ஜெபிப்பதைவிட, "ஆண்டவரே, உமக்குமுன் நான் பரிசுத்தனாகவும் குற்றமற்றவனாகவும் இருக்க கிருபை புரியும் என்று ஜெபிப்பதே தேவன் விரும்புவது."

பத்தில் ஒன்று காணிக்கைக் கொடுப்பதாலோ, ஆலய காரியங்களுக்காக அல்லும்பகலும் அலைவதாலோ, ஜெபக் கூட்டங்களில் தவறாமல் பங்கு பெறுவதாலோ  நாம் அவருக்குமுன் நிலை நிற்கமுடியாது. ஏனெனில் கிறிஸ்துவுக்கு அந்நியராயும் தமது துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்துகொண்டும் ஒருவர் மேற்படி காரியங்களைச் செய்யமுடியும். 

கிறிஸ்து மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே  இப்பொழுதும் நம்மை ஒப்புரவாக்குவார் எனும் விசுவாசத்துடன் நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு   அவரோடு ஒப்புரவாவோம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

கர்த்தர் ஆசீர்வாதத்தையும் துன்பத்தையும் ஒருசேரக் கொடுக்கமாட்டார்.

 ஆதவன் 🖋️ 557 ⛪ ஆகஸ்ட் 07, 2022 ஞாயிற்றுகிழமை

உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்." ( நீதிமொழிகள் 28 : 20 )

சாதாரண ஆசீர்வாதம், பரிபூரண ஆசீர்வாதம் இவற்றுக்கு இடையிலான வித்தியாசத்தை அறியாததால் இன்று பலரும் பொய்பேசி அலை கின்றனர். உலகின் பொருளாதார ஆசீர்வாதங்களே மெய்யான ஆசீர்வாதம் எனப் பலரும் எண்ணிக்கொள்கின்றனர். எனவே இதனை அடைந்திட பொய்வழியையும் குறுக்கு வழியையும் நாடுகின்றனர். 

"கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்."  (நீதிமொழிகள் 10 : 22 ). இதனையே இன்றைய வசனம், "ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்." என்று கூறுகின்றது. 

ஆம், கர்த்தர் தரும் ஆசீர்வாதம் பூரண ஆசீர்வாதம்; வேதனையில்லாத ஆசீர்வாதம். எந்தத் தகப்பனும் தாயும் தங்கள் பிள்ளைகளுக்கு அருமையான உணவையும் நஞ்சையும் ஒரேநேரம்  கொடுக்கமாட்டார்கள். அதுபோலவே கர்த்தர் ஆசீர்வாதத்தையும் கலக்கத்தையும்  துன்பத்தையும் ஒருசேரக் கொடுக்கமாட்டார். 

பொய் பேசுவதால் அதிக பொருள்கள் கிடைக்கலாம். ஏனென்றால் அவை இப்பிரபஞ்சத்தின் அதிபதியாகிய சாத்தானின் கரங்களில் உள்ளன. அவன் பொய்யனும் பொய்க்கு தந்தையுமாக இருப்பதால் (யோவான் 8 : 44) பொய்யர்களுக்கு அதிக ஆசீர்வாதங்களைக் கொடுக்கின்றான். ஆனால் இதனை அறியாத பலரும் பொய் வழிகளில் பணம் சம்பாதிக்கின்றனர். 

ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரித்துக் குறுக்கு வழியில்  செயல்படுவதைவிட,  கர்த்தரது கரங்களுக்குள் அடங்கி அவரது கற்பனைகளின்படி நாம் வாழும்போது மெய்யான ஆசீர்வாதம் நமக்குக் கிடைக்கும். ஒருவேளை நாம் உலகம் வைத்துள்ள இலக்குப்படியான செல்வந்தனாக இல்லாமல்போகலாம், ஆனால், பரிபூரண ஆசீர்வாதம் எனும் மெய் சமாதானம் நமது ஆத்துமாவுக்குக்  கிடைக்கும்.    

மட்டுமல்ல, கர்த்தருக்குள் உண்மையாய் இருந்து நாம் உலகினில் வாழ்வோமானால் நித்திய ஜீவனுக்குப் பங்காளியாகின்றோம். ஆம், "...................நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 2 : 10 ) என்று வாக்களித்துள்ளார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.

அன்பானவர்களே, இந்த உலகினில் உண்மையுள்ளவர்களாய் வாழ்ந்து கர்த்தர் தரும் பரிபூரண ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ்வோம்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Wednesday, August 03, 2022

ஆவியானவர் நமது நடுவில் நிலைகொண்டிருப்பதால் நாம் பயப்படத் தேவையில்லை.

 ஆதவன் 🖋️ 556 ⛪ ஆகஸ்ட் 06, 2022 சனிக்கிழமை



"நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைப்பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்." ( ஆகாய் 2 : 5 )

எகிப்திலிருந்து இஸ்ரவேல் மக்களை தேவன் அதிசயிக்கத்தக்கதாக விடுவித்து அற்புதமாக வழிநடத்தி கானான் தேசத்துக்குள் கொண்டுவந்து சேர்த்தார். அவர்கள் வழியில் சந்தித்த எல்லா இக்கட்டுகளினின்றும் விடுவித்தார்; அவர்களது தேவைகளைச் சந்தித்தார்; எதிரிட்டுவந்த ராஜாக்களை முறியடித்தார். ஆம், மேகத்தூணாகவும் அக்கினித் தூணாகவும் இருந்து அவர்களை வழிநடத்தினார். 

இதேபோல இன்று புதிய ஏற்பாட்டுக்கால மக்களான நம்மையும் தேவன் நடத்துகின்றார். பரம கானானுக்குள் நம்மைக்கொண்டு சேர்த்திட நமக்குத் துணையாளரான பரிசுத்த ஆவியானவரைத் தந்துள்ளார்.  

"நான் உங்களோடே உடன்படிக்கைப்பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்" என்று பழைய ஏற்பாட்டுக்கால மக்களுக்குத் தேவன் கூறியதுபோல இயேசு கிறிஸ்து நமக்கும் வாக்களித்துள்ளனர்: "நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்." ( யோவான் 16 : 7 ) என்று கூறியதுடன் அந்த ஆவியானவர் நமக்கு என்னச் செய்வார் என்றும் இயேசு கூறினார்.

"அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்."( யோவான் 16 : 8 )

ஆம் அன்பானவர்களே, ஆவிக்குரிய பயணத்தில் அன்று இஸ்ரவேல் மக்கள் சந்தித்ததுபோல நாமும் பல எதிரிகளைச் சந்திக்கின்றோம். பாவம், கிறிஸ்துவை விட்டு நம்மைப் பிரிக்க நமக்கு நேரிடும் துன்பங்கள்,  அந்தகார ஆவிகளின் தொல்லைகள் போன்றவை நமது ஆவிக்குரிய வாழ்வை அதன் இலக்கை அடைந்திட தடையாக உள்ளன. இவை அனைத்திலிருந்தும் நம்மை விடுவித்துக் காத்து நாம் நடக்கவேண்டிய வழியைக் காட்டுவதே பரிசுத்த ஆவியானவர்தான். 

தேற்றரவாளரான ஆவியானவர் நமது  நடுவில் நிலைகொண்டிருப்பதால் நாம்  பயப்படத் தேவையில்லை. அவர் உலக முடியுமட்டுமுள்ள எல்லா மனிதர்களையும் வழிகாட்டி நடத்துகின்றார். ஆனால் மக்களது மனக் கண்களும் செவிகளும் அவரைக் கண்டுகொள்ளமுடியாமல் மந்தமாக இருக்கின்றன.

எனவே, ஆவிக்குரிய நாம்; அவரை வாழ்வில் கண்டுகொண்டுள்ள நாம், ஆவிக்குரிய வாழ்வில் நமக்கு நேரிடும் துன்பங்களை எண்ணிக் கலங்கிடவேண்டாம். "நான் உங்களோடே உடன்படிக்கைப்பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்." என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

ஆசை துன்பத்துக்குக் காரணமா?

 ஆதவன் 🖋️ 555 ⛪ ஆகஸ்ட் 05, 2022 வெள்ளிக்கிழமை

"பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்." ( 1 தீமோத்தேயு 6 : 10 )

ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்றார் புத்தர். ஆனால் இது முற்றிலும் சரியென்று கூறிட முடியாது. காரணம் நியாயமான ஆசைகளும் உண்டு. அப்படி எந்த ஒரு ஆசையும் இல்லையானால் ஒருவர் உலகினில் வாழவேமுடியாது. மேலும் ஆசையே நம்மை இந்த உலகினில் நல்ல செயல்கள் செய்யவும் பல வேளைகளில் காரணமாக இருக்கின்றன. பல விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஆராய்ச்சிசெய்த விஞ்ஞானிகளின் ஆசையின் விளைவுகள்தான்.

பண உதவிசெய்து ஒரு ஏழையை படிக்கவைக்கவேண்டுமென்று பலர் எண்ணுகின்றனர். இது அநியாயமான ஆசையே. கிறிஸ்துவுக்கு உண்மையான ஊழியம் செய்யவேண்டுமென எண்ணுவது பலரது ஆசை. அன்னை தெரேசா பல தொழுநோயாளிகளைத் தொட்டு உதவினார். இதுவும் கிறிஸ்து கூறியதைப்போல எல்லோரையும் சகோதரர்களாக பார்க்கவேண்டுமென்ற ஆசையால்தான். ஆவிக்குரிய மனிதர்கள் பரலோகத்தை அடைய எண்ணுவதும் ஆசைதான். 

ஆனால் பவுல் அப்போஸ்தலர் இங்கு வித்தியாசமாகத் தெளிவாகக் கூறுகின்றார்,  "பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது" என்று. இதுவே சரியான கருத்தாக இருக்க முடியும். ஏனெனில் பண ஆசை உள்ள பணவெறியன் எந்தக் கொடூரச் செயலையும் செய்யத் தயங்கமாட்டான்; மேலும் பணத்தைச் சேர்க்கவேண்டுமெனும் வெறியில் எந்த அவலட்சணமான செயலையும் துணிந்து செய்வான். இதனால் பல்வேறு இக்கட்டுகளிலும்  மாட்டிக்கொள்கிறான். 

மிகப்பெரிய மரியாதைக்குரிய பதவிகளில் இருக்கும் சிலர் அற்பத்தனமான பண ஆசையால் பல்வேறு தில்லுமுல்லுகள் செய்து பணம் சம்பாதித்துவிட்டு இறுதியில் ஏதோ சந்தர்ப்பத்தில் போலீஸ் ரெய்டு, வருமான வரி அதிகாரிகளது விசாரணை, சிறைவாசம் என சிக்கிக்கொள்வதும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்வதும் இல்லையானால் அந்த மனவேதனையில் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி அவதிப்படுவதும் நாம் இந்த உலகினில் காணக்கூடிய நிலைமைதான். 

ஆனால், பவுல் அடிகள் இங்குக் கூறுவது விசுவாசிகளைக்குறித்து. கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொண்டு ஆவிக்குரிய வாழ்வு வாழும் சிலர் பண ஆசையால் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள் என்கின்றார். விசுவாசிகள் மட்டுமல்ல பல ஊழியர்களும் இப்படிப் பண ஆசையில் சிக்கி தங்கள் ஊழியத்தையும் ஆவிக்குரிய வாழ்வையும் இழந்து தங்கள் ஆத்துமாக்களை உருவ குத்திக்கொண்டிருக்கிறார்கள். 

நியாயமான முறையில், தேவன் நமக்கு உலகினில் அளித்துள்ள வேலைகளின் படியும், தனியாகத்  தொழில் செய்வோமென்றால், அரசு விதிகளுக்குட்பட்டும்  நாம் சம்பாதிக்கவேண்டும்.  நமது குடும்ப எதிர்கால தேவைகளுக்கு அந்தப்பணத்தில் சேர்த்துவைப்பதில் தவறில்லை. ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் நாம் பண வெறியர்களாக மாறிவிடக்கூடாது. 

என்னிடம் பணம் இருகிறது, யாரும் என்னை ஒன்றும் செய்ய முடியாது; என்னிடம் பணம் இருக்கிறது நான் நினைத்ததைச் செய்வேன்; என்னிடம் பணம் இருக்கிறது எனவே எவனையும் நான் மதிக்கத் தேவை இல்லை.  இந்தப் பணத்தால்  சொத்துக்குமேல் சொத்து வேண்டும்,   அதிகாரத்தைப் பெறவேண்டும்.......இத்தகைய எண்ணங்களே பண வெறியன்  கொண்டுள்ளது. நம்மிடம் இத்தகைய குணங்கள் இருந்தால் நாம் கிறிஸ்தவர்களும் அல்ல, கிறிஸ்துவிடம் விசுவாசம் கொண்டுள்ளேன் என்று நாம் கூறுவதும் பொய். அப்படியானால் பவுல் கூறுவதுபோல  நாம் விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே நம்மைக் குத்திக்கொண்டிருக்கிறோம் என்றே பொருள். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Monday, August 01, 2022

பலவீனர்களாக இருந்தாலும் கர்த்தர் நம்மைப் பலவான்களாக மாற்றிட முடியும்.

 ஆதவன் 🖋️ 554 ⛪ ஆகஸ்ட் 04, 2022 வியாழக்கிழமை

"கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 12 )

எத்தனை அற்பமானவர்களாக இருந்தாலும் அவர்களை கர்த்தர் பயன்படுத்த முடியும். அதுபோல நாம் எவ்வளவு பலவீனர்களாக இருந்தாலும் கர்த்தர் நம்மைப் பலவான்களாக மாற்றிட முடியும்.

மீதியானியர் கைகள் இஸ்ரவேலர்மேல் பலத்திருந்த காலம் அது. மீடியானியர்கள் இஸ்ரவேலர்களது உடைமைகளையும் அவர்களது விளைச்சல்களையும் கொள்ளையிட்டனர். இஸ்ரவேலர் தங்களுக்கு ஒரு இரட்சகன் கிடையமாட்டானா என்று ஏங்கிய காலம். அப்போது கிதியோன் தனது கோதுமைப் பயிரை அறுவடைசெய்து அதனைப் போரடித்துக்கொண்டிருந்தான். 

மீதியானியர்கள் வந்து அதனைக் கொள்ளையடித்துவிடக்கூடாது என்பதற்காக தனது ஆலையின் அருகிலேயே வைத்து அதனைப் போரடித்துக்கொண்டிருந்தான். அப்போதுதான் கர்த்தருடைய தூதன் வந்து நின்று, "பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்."

அன்பானவர்களே, கிதியோன்போல நாமும் நம்மைப் பலவீனர்கள் என எண்ணி இதுபோல தேவையில்லா காரியங்களுக்காக பயந்துகொண்டிருக்கலாம். ஆனால் கர்த்தருடைய கரம் நம்மோடு இருப்பதால் நாம் பலசாலிகள் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். கர்த்தர் நம்மோடு இருப்பதால், நமக்கு இருக்கின்ற பலமே நமது எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்கப் போதுமானது. 

எனவேதான் கர்த்தர் கிதியோனைப்பார்த்து, "உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 14 ) என் கிருபை உனக்குப் போதும் பலவீனத்தில் என் பலம் பூரணமாய் விளங்கும் என்று கூறியுள்ளாரே?

ஆனாலும் கிதியோன் தனது அற்ப நிலைமையை எண்ணியதுபோல நாமும்  கர்த்தரிடம் பேசலாம், "ஆண்டவரே, நான் பலவீனமல்லவா? எனது குடும்பம், எனது தொழில், எனது வருமானம், எனது உடல்நிலை எல்லாமே மோசமானதாக அல்லவா இருக்கின்றது? நான் எப்படி இந்தப் பிரச்சனைகளைச்  சமாளிப்பேன்?" ஆனால் கர்த்தர் கிதியோனிடம் கூறியது எதனையும் பார்க்காதே. நான் உன்னோடு இருக்கின்றேன் என்பதுதான்.

"அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 16 )

அன்பானவர்களே, எத்தனைப் பெரிய பிரச்சனைகள், துன்பங்கள் வந்தாலும் நாம் அவற்றை மேற்கொள்ள முடியும். காரணம் கர்த்தர் சொல்கின்றார், " நான் உன்னோடேகூட இருப்பேன்"

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Sunday, July 31, 2022

நாம் குணப்பட்டபின்பு அடுத்தவரைக் குணப்படுத்த சுவிசேஷம் அறிவிக்கவேண்டும்

 ஆதவன் 🖋️ 553 ⛪ ஆகஸ்ட் 03, 2022 புதன்கிழமை

"நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்." ( லுூக்கா 22 : 32 )

தலைமை அப்போஸ்தலர் பேதுருவைச் சாத்தான் சோதிக்க கிறிஸ்துவிடம் அனுமதிகேட்டபோது இயேசு கிறிஸ்து பேதுருவை நோக்கிக் கூறிய வார்த்தைகளே இன்றைய தியான வசனம். 

கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மக்களுக்கு அறிவிக்குமுன் நாம் முதலில் கிறிஸ்தவ விசுவாசத்தில் பலப்படவேண்டியது அவசியம். அல்லாவிட்டால் நமது சுவிசேஷ அறிவிப்புகள் எதார்தத்தைவிட்டு விலகி சாதாரண ஒரு அரசியல்வாதியின் பேச்சுபோல ஆகிவிடும்.

நமது விசுவாசத்தை சீர்குலைக்க சாத்தான் பல்வேறு வகைகளில் முயலுவான். அவற்றை முதலில் நாம் மேற்கொள்ளும் பலமடைந்தவர்களாக இருக்கவேண்டும். கிறிஸ்துவோடு இரவும் பகலும் உடனிருந்து அவரோடு உண்டு குடித்து வாழ்ந்த பேதுருவையே சாத்தான் சோதிக்க முயலுவானென்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்?

எனவேதான் அப்போஸ்தலரான பவுலும், "நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு." ( எபேசியர் 6 : 11 12 ) என்று கூறுகின்றார். 

அன்பானவர்களே, பேதுருவுக்காக இயேசு  கிறிஸ்து வேண்டுதல் செய்ததுபோல நாமும் வேண்டுதல் செய்யவேண்டியது அவசியம். அத்துடன் அப்போஸ்தலரான பவுல் கூறும் ஆவிக்குரிய போர் ஆயுதங்கள் ( எபேசியர் 6 : 14-17 )நம்மிடம் மழுங்கிப்போகாமல் சரியாக இருக்கின்றதா என்றும் உறுதி செய்துகொள்ளவேண்டும்.

இப்படி நாம் குணப்பட்டபின்பு அடுத்தவரைக் குணப்படுத்த சுவிசேஷம் அறிவிக்கவேண்டும். இல்லாவிட்டால் நாம் மாயக்காரர்களாகவே இருப்போம். நாம் அறியாத கிறிஸ்துவைப் பிறருக்கு அறிவிக்க முயலும் சாதாரண மதவாதியாகவே இருப்போம். இயேசு கிறிஸ்து கூறிய பின்வரும்  வசனம் மனம் திரும்பாமல் இருந்துகொண்டு பிறருக்கு சுவிசேஷம் பிரசங்கிப்பவர்களுக்குப்  பொருந்தும்.

"மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்." ( மத்தேயு 7 : 5 )

நம்மை நாமே சோதித்துப்பார்த்து மாய வாழ்க்கையை நம்மிடமிருந்து அகற்றிவிட்டு கிறிஸ்துவை அறிவிக்கும் பணியினைத் தொடர்வோம். அப்போது மட்டுமே நாம் அறிவிக்கும் கிறிஸ்துவை பிறர் ஏற்றுக்கொள்வர். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.

 ஆதவன் 🖋️ 552 ⛪ ஆகஸ்ட் 02, 2022 செவ்வாய்க்கிழமை

"மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்." ( கலாத்தியர் 6 : 7 )

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பிரதிபலன் உண்டு. நாம் பிறருக்கு என்ன செய்கின்றோமோ அதேதான் நமது வாழ்வில் நமக்கு நடக்கும். பிறரது பாவங்களை மன்னிக்கும்போது தேவன் நமது பாவங்களை மன்னிக்கின்றார். இயேசு கிறிஸ்து இதனையே தனது ஜெபத்திலும் நமக்குக் கற்றுத்தந்துள்ளார்.

இந்த உலகினில் நமது தற்போதைய நிலைமையினைக்கண்டு பிறர் பரிகசிக்கலாம். ஆனால் அது நிரந்தரமல்ல. நாம் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழும்போது தேவன் நம்மைப் பரிகசிக்கப்பட விடமாட்டார்.  நாம் விதைப்பது நமது வாழ்வில் நிச்சயமாக நமக்குத் திருப்பித் தரப்படும்.

இன்று ஒருவேளை நீங்கள் வசிக்கும் ஊரில், வேலைபார்க்கும் இடத்தில நீங்கள் அற்பமாக எண்ணப்பட்டுக் கேலிசெய்யப்படலாம். அதற்காக வருந்தி மனமடிந்து போகவேண்டாம். நாம் தேவனுக்குமுன் உண்மையாய்ச் செய்யும் காரியங்களை அவர் கனப்படுத்துவார்.  இதற்கு பல சாட்சிகளை  நாம் எடுத்துக்காட்டாகக் கூறலாம்.  

ஒரு அரசு அலுவலகத்தில் தனக்குக் கீழ்  உண்மையாய் வேலைசெய்த ஒருவர்க்கு எதிராகச் செயல்பட்டார் ஒரு உயர் அதிகாரி. அவரை வேலையிலிருந்து துரத்தவேண்டும் அல்லது வேறு எங்கோ ஒரு வானாந்தரமான கிராமத்துக்கு பணிமாற்றம் செய்து அனுப்பவேண்டும் என்று செயல்பட்டார். அந்த உண்மையான மனிதரோ அமைதியாக இருந்தார். ஆனால் ஆட்சி மாறியபோது அந்த உயர் அதிகாரி ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்பட்டார். அவர் வகித்துவந்த பதவி அமைதியான அந்த உண்மையுள்ள மனிதனுக்குக்  கிடைத்தது.   

அப்போஸ்தலரான பவுல்  கூறும்போது தொடர்ந்து எழுதுகின்றார், "பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்." ( 2 கொரிந்தியர் 9 : 6 )

விதைக்கின்ற காலத்துக்கும் அறுவடை காலத்துக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. விதைக்கும் காலம் கடினமானது, செலவு தரக்கூடியது. அதுபோல நமது வாழ்க்கையும் துன்பங்கள், கேலிகள், அவமதிப்புக்கள் என்ற கடினமான விதைப்பின் காலமாக இப்போது இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் யோவான் ஸ்நானன் கூறியதுபோல அறுவடைநாள் ஒன்று  உண்டு. அப்போது கோதுமைகள் களஞ்சியத்தைச் சென்றடையும் பதர்களோ அக்கினியில் சுட்டெரிக்கப்படும். (லூக்கா 3:17)

இதனையே நாம் சங்கீதத்தில் வாசிக்கின்றோம், "கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்." ( சங்கீதம் 126 : 5, 6 )

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Saturday, July 30, 2022

பெரிய அழிவு கிறிஸ்துவின் வருகைக்குமுன் வருவது உறுதி


 ஆதவன் 🖋️ 551 ⛪ ஆகஸ்ட் 01, 2022 திங்கள்கிழமை


"நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது." ( லுூக்கா 17 : 26,27 )

இயேசு கிறிஸ்து தனது இரண்டாம் வருகையினைக் குறித்துக் கூறும்போது இதனைச் சொல்கின்றார். நோவாவின் நாட்களில் பூமியில் அக்கிரமம் பெருகி இருந்தது.   "தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்." ( ஆதியாகமம் 6 : 12 ) எனவே, தேவன் தான் உருவாக்கிய மக்களை அழிக்க சித்தம்கொண்டார்.

ஆனால் தேவனுக்குமுன் உத்தமனாய் நடந்த நோவாவுக்கு கடவுளின் கண்ணில் தயவு கிடைத்தது. எனவே உலகினைத் தான் அழிக்கும்போது அவனையும் அவன் குடும்பத்தையும் காப்பாற்றிட மரத்தால் ஒரு பேழை செய்யுமாறு கூறுகின்றார். நோவா பேழை செய்யும்போது அதனைப் பார்த்தவர்கள் அவனைக் கேலி செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் அவனை நம்பவில்லை, மனம் திரும்பவுமில்லை. புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள், இயல்பான தங்கள் வாழ்வைத் தொடர்ந்தார்கள். ஆனால் எல்லோரும் இறுதியில் அழிவுற்றனர். 

இதனைத் தொடர்ந்து இயேசு கிறிஸ்து இன்னொரு உதாரணமும் சொல்கின்றார், "லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்." ( லுூக்கா 17 : 28 )

இங்கும் லோத்து தனது மருமக்களிடம் சென்று வரவிருக்கும் அழிவினைக் கூறி எச்சரித்தார். ஆனால் அவர்கள் அதனை கேலியாக எண்ணினர். "அப்பொழுது லோத்து புறப்பட்டு, தன் குமாரத்திகளை விவாகம்பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரோடே பேசி: நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார் என்றான்; அவனுடைய மருமக்கள்மாரின் பார்வைக்கு அவன் பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது." ( ஆதியாகமம் 19 : 14 )

அன்பானவர்களே, இதே நிலைதான் இன்றும் தொடர்கின்றது. இயேசு கிறிஸ்துவின் வருகையினைப்பற்றி கூறினால் கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள்கூட நம்புவதில்லை, நம்பினாலும் தங்கள் குணங்களை மாற்றி தேவனிடம் உண்மையாய் மனம்திரும்பி வருவதில்லை. 

நோவா காலத்திலும் லோத்துவின் காலத்திலும் வந்த அழிவைவிடப் பெரிய அழிவு கிறிஸ்துவின் வருகைக்குமுன் வருவது உறுதி. உலக ஆசீர்வாதங்களைப் போதிக்கும் போதகர்களை மேன்மையாகவும் கிறிஸ்துவின் வருகையினைப்பற்றி போதிக்கும் ஊழியர்களை கேலியாகவும் எண்ணி நமது ஆத்துமாவை பாதாளத்துக்குள் தள்ளிடாமல் எச்சரிக்கையாய் இருந்து மனம் திரும்புவோம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712