DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Thursday, June 06, 2024

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,223     💚 ஜூன் 14, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே." ( யோவான் 5 : 39 )

பழைய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவைப் பற்றி 300 க்கும் மேற்பட்ட தீர்க்கதரிசனங்கள் இருப்பதாக சில அறிஞர்கள் கூறுகின்றனர். இந்தத்  தீர்க்கதரிசனங்கள் போதுமான அளவு துல்லியமாக கிறிஸ்துவே மேசியா என்பதனைக் குறிப்பிடுவன.  இதனையே இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடுகின்றார். 

பரிசேயரும் சதுசேயரும் இயேசு கிறிஸ்துதான் வரவேண்டிய மேசியா என்பதனை ஏற்றுக்கொள்ளவில்லை.  இன்றைக்கும் யூதர்கள் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், கிறிஸ்து பிறப்பதற்கு நாலாயிரம் ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே கிறிஸ்துவைக் குறித்துத் துல்லியமான தீர்க்கத்தரிசனங்கள் கூறப்பட்டுள்ளன என்பது ஆச்சரியமான உண்மையல்லவா?

கிறிஸ்துவைக் குறித்தத் தீர்க்கத்தரிசனங்கள் உண்மையாகவே நிறைவேறியுள்ளது ஆச்சரியமான உண்மையென்றால், அந்தக்  கிறிஸ்துக்  கூறியவையும் நிச்சயம் நிறைவேறும் என்று நாம் நம்பலாம் அல்லவா? ஆம்,  அவற்றை சந்தேகமில்லாமல் விசுவாசிக்கவேண்டியதே நாம் செய்யவேண்டியது. இயேசு கிறிஸ்து அளித்த வாக்குறுதிகளில் முக்கியமானது நித்தியஜீவன். "நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்." ( 1 யோவான்  2 : 25 )

இயேசு கிறிஸ்து இதனைத் தெளிவாகக் கூறினார், "குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது." ( யோவான் 6 : 40 ) என்றார். எனவே, நித்தியஜீவன் என்பது மெய்யானது. 

ஆம் அன்பானவர்களே, வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே என்று இயேசு கிறிஸ்து கூறியுள்ளபடி வேத வாக்கியங்களுக்குள் நித்திய ஜீவன் உள்ளது. ஏனெனில் அவை வார்த்தையான தேவனாகவே இருக்கின்றன. அவரது வார்த்தைகளால் நமக்கு நித்திய ஜீவன் எனும் முடிவில்லாத வாழ்க்கை உண்டு என்பதால் நாம் வேத வசனங்களை ஏற்றுக்கொண்டு தியானித்து வாழவேண்டும். 

நாம் வேதாகமத்தை வாசிக்கும்போது கடமைக்காக வாசிக்காமல், குறிப்பிட்ட ஆசீர்வாத வசனங்களைத் தேடி வாசிக்காமல் அந்த வேத வசனங்களுக்குள் இருக்கும் சத்தியத்தை உணர்ந்து வசித்துப் பழகவேண்டும். வேத வசனங்கள் கிறிஸ்துவைக் குறித்து சாட்சி கூறுபவை மட்டுமல்ல, அவை நாம் நித்தியஜீவனை அடைந்திட உதவுபவை. 

இன்று பல கிறித்தவ ஊழியர்கள் இயேசுவின் காலத்துப் பரிசேயரையும்  சதுசேயரையும் போலவே இருக்கின்றனர். அவர்கள் கிறிஸ்துவை நித்திய ஜீவனின் ஊற்றாகப் பார்க்காமல் அதிசயங்கள் செய்யும் அற்புதராக மட்டுமே பார்த்துப்  பழகி அப்படியே மக்களுக்குப் போதிப்பவர்களாக இருக்கின்றனர்.  ஆம் அன்பானவர்களே, நாம் வேதாகமம் வாசிக்கும் முறைமையை ஆராய்ந்து பார்ப்போம். வேத வசனங்கள் கூறும் மெய்யான சத்தியத்தை  உணர்ந்துகொள்ள வாசிப்பவர்களாக மாறும்போது மட்டுமே நித்தியஜீவனை நாம் அடைந்திட முடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                    

Wednesday, June 05, 2024

ஆவியானவர் நமக்குத் துணையாக இருப்பார்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,222      💚 ஜூன் 13, 2024 💚 வியாழக்கிழமை 💚

"நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைப்பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்." ( ஆகாய் 2 : 5 )

நமது தேவன் தனது மக்களோடு பல்வேறு சமயங்களில் உடன்படிக்கை செய்துகொள்பவராக இருக்கின்றார். இது ஏனென்றால் தனது மக்கள் நம்பிக்கையோடு தங்களது வாழ்வைத்  தொடரவேண்டும் என்பதற்காகவே. இன்றைய வசனம் எகிப்திலிருந்து புறப்பட்டபோது இஸ்ரவேல் மக்களோடு தேவன் செய்த உடன்படிக்கையினைக் குறித்துக் கூறுகின்றது. ஆனால் இஸ்ரவேல் மக்கள் அந்த உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிந்து நடக்கவில்லை. 

அதாவது எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் மக்களோடு தேவன் உடன்படிக்கைச் செய்திருந்தும் அவர்கள் அந்த உடன்படிக்கைக்கு கீழ்ப்படிந்து நடக்கவில்லை.   வேற்று தெய்வங்களை வழிபடவும் தேவனது கட்டளைகளை புறக்கணிக்கவும் செய்தனர். எனவே தேவன் அவர்களைப் புறக்கணித்து பல்வேறு சமயங்களில் வேற்று அரசர்களுக்கு அடிமைகள் ஆக்கினார். 

இதுபோலவே, நாம் எகிப்தாகிய நமது பாவ வாழ்க்கையிலிருந்து விடுதலையாகும்போது தேவன் நம்மோடு உடன்படிக்கை பண்ணுகின்றார்.  இந்த உடன்படிக்கை இஸ்ரவேல் மக்களோடு பண்ணிய உடன்படிக்கை போன்றதல்ல என்று நாம் எபிரெய நிருபத்தில் வாசிக்கின்றோம். 

"அவர்களுடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்த நாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( எபிரெயர் 8 : 9 )

அன்பானவர்களே, இன்று பாவ வாழ்க்கையான எகித்தைவிட்டு வெளிவரும் நம்மோடு தேவன் பண்ணுகின்ற உடன்படிக்கை இஸ்ரவேல் மக்களோடு பண்ணிய உடன்படிக்கையைவிட மேலானது. இதனையே,  "அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்." ( எபிரெயர் 8 : 10 ) என்று கூறப்பட்டுள்ளது.

மோசேயோடு உடன்படிக்கைச் செய்து கட்டளைகளை கற்பலகைகளில் எழுதியதுபோல அல்லாமல் இன்று நமது உள்ளமாகிய பலகையில் தேவன் தனது உடன்படிக்கையினை எழுதியுள்ளார். பாவ எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து  நாம் வெளிவரும்போது ஆவியானவர் நம்மோடு உடன்படிக்கை பண்ணுகின்றார். எனவே, "நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைப்பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்." என்று ஆகாய்  தீர்க்கத்தரிசி மூலம் தீர்க்கத்தரிசனமாகக் கூறப்பட்டுள்ளது. 

ஆம் அன்பானவர்களே, புதிய உடன்படிக்கையின் மக்களாகிய நாம் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ ஆவியானவர் நமக்குத் துணையாக இருப்பார். எனவே நாம் பயப்படாமல் நமது ஆவிக்குரிய பயணத்தைக் தொடர்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்               

உபத்திரவப்படுவது நல்லது

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,221      💚 ஜூன் 12, 2024 💚 புதன்கிழமை 💚

"நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்." ( சங்கீதம் 119 : 67 )

உபத்திரவங்கள் நம்மை ஆவிக்குரிய வாழ்வில் நடப்பதற்கு உறுதுணையாக இருக்கின்றன. காரணம் எந்த உபத்திரவமும் நமக்கு ஏற்படவில்லையானால் நாம் தேவனைவிட்டு விலகிச் சென்றுவிடுவோம். உபத்திரவம் என்பது தேவன் அளிக்கும் தண்டனையாகவும் அவரை நோக்கி நம்மை இழுக்கும் கயிறாகவும் இருக்கின்றது என்றும் நாம் கூறலாம். வேதாகமத்தில் "சிட்சை" என்று இது கூறப்பட்டுள்ளது. 

நாம் நமது குழந்தைகள் தவறு செய்யும்போது சிறு தண்டனைகள் கொடுப்பதுபோல தேவன் நமக்குச் சில தண்டனைகளைக் கொடுத்து நல்வழிப் படுத்துகின்றார். இதனையே இன்றைய தியான வசனம்,  "நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்." என்று கூறுகின்றது. அதாவது வாழ்வில் உபத்திரவம் வருவதற்குமுன் வழிதப்பி நடக்கின்றோம். உபத்திரவம் வந்தபின் புத்தி தெளிந்து அவரது வார்த்தைகளைக் காத்து நடக்கின்றோம்.  

எனவேதான் இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து, "நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதனால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்." ( சங்கீதம் 119 : 71 ) என்று சங்கீத ஆசிரியர் கூறுகின்றார். 

நாம் வழி தப்பி நடக்கும்போது நம்மை நல்வழிப் படுத்துவதற்காக சிலவேளைகளில் தேவன் பிறர் மூலம் நமக்கு உபத்திரவங்களைக் கொடுக்கின்றார்.  ஆனால் நாம் தேவனுக்கு நேராக நமது வழிகளைத் திருப்பும்போது நம்மை உபத்திரவப்படுத்துகின்றவர்களுக்கு தேவன் உபத்திரவத்தைக் கொடுத்து  நமக்கு இளைப்பாறுதலைத் தருவார். "உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக் கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே." ( 2 தெசலோனிக்கேயர் 1 : 6 ) என்று கூறப்பட்டுள்ளது. 

அன்பானவர்களே, இப்படி வேதம் கூறுவதால் நாம் நமக்கு உபத்திரவம் வரும்வரை தேவனைத் தேடாமல் வாழவேண்டுமென்று பொருளல்ல; மாறாக, நமக்கு பிரச்சனைகளும் துன்பங்களும் வாழ்வில் ஏற்படும்போது நாம் நம்மையே நிதானித்து நமது வழிகளைத் திருத்திக்கொள்ள வேண்டியது அவசியம் என்று பொருள். 

"உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே. ( 1 பேதுரு 1 : 15, 16 ) எனவே, நம்மை பரிசுத்தராக்குவதற்கே துன்பங்கள்நமக்கு வருகின்றன என்பதை உணர்ந்து தேவனது வார்த்தையைக் காத்து நடக்க முயலுவோம். 

மேலும், இந்த உபத்திரவம் நமக்கு தேவன்மேல் நம்பிக்கையையும் வளரச்செய்கின்றது. இதனையே அப்போஸ்தலரான பவுல், "உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம். ( ரோமர் 5 : 3, 4 ) என்று கூறுகின்றார். 

ஆம், உபத்திரவப்படுவதற்கு முன் நாம் வழிதப்பி நடக்கின்றோம்  அதன் பின்போ அவருடைய வார்த்தையைக் காத்து நடக்கின்றோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்  

மனதிருந்தால் என்னிடத்தில் திரும்பு

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,220      💚 ஜூன் 11, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚


"இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை." ( எரேமியா 4 : 1 )

நமது தேவன் யாரையும் வலுக்கட்டாயம் பண்ணுபவரல்ல. எந்தநிலையிலும் முடிவெடுக்கும் உரிமையினை மனிதர்களிடமே  கொடுத்துவிடுகின்றார்.   ஆதியில் ஏதேனிலும் தேவன், "நீ தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் கனிகளையும் உண்ணலாம் ஆனால், நன்மை தீமை அறியும் மரத்தின் கனியை மட்டும் உண்ணவேண்டாம் என்று கூறினார்". உண்ணவேண்டாம் என்று தேவன் கூறியது ஒரு கட்டளையே தவிர அவர் மனிதனைக் கட்டாயம்பண்ணவில்லை. அந்த மரத்தின் கனியை உண்பதா வேண்டாமா  என்று முடிவெடுக்கும் உரிமையினை மனிதனிடமே விட்டுவிட்டார்.

அதுபோலவே, தேவன் பல்வேறு நியாயாதிபதிகள், தீர்க்கத்தரிசிகள் மூலம் மனம் திரும்புதலுக்கேற்ற செய்திகளை இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் அந்த மக்கள் தேவனது வார்த்தைகளுக்கு முற்றிலும் செவிகொடுக்கவில்லை. அவர்களைப் பார்த்துதான் தேவன் கூறுகின்றார், "இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று. மட்டுமல்ல, அப்படித் தேவனிடம் திரும்பினால் நீ இனி அலைந்து திரியமாட்டாய்.

மனம் திரும்பு என்று கட்டளையாகக் கூறாமல், "நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு" என்று கூறுகின்றார்.  சில வேளைகளில் நாம் நமது நண்பர்களை குறிப்பிட்ட நாளில் நமது வீட்டிற்கு அழைக்கும்போது அவர்கள், "முடிந்தால் வருகின்றேன்" என்பார்கள். நாம் அவர்களுக்கு, "முடிந்தால் அல்ல, உனக்கு மனமிருந்தால் வா....மனமிருந்தால் முடியும்" என்று கூறுவோம். 

அதுபோலவே தேவன் மனம் திரும்புவது குறித்துக் கூறுகின்றார்.  அவர் பல்வேறு விதங்களில் மனம்திரும்புதலுக்கேற்ற செய்திகளை பலர் மூலம்  கொடுத்தும் மனம் திரும்பாத மக்களைப்பார்த்துக் கூறுகின்றார், "நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று" அப்படி நீ மனம்திரும்பி உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை என்கின்றார்.

பலருடைய வாழ்க்கை அலைந்து திரிகின்ற வாழ்கையாக இருக்கின்றது. பிழைப்புக்காக, வருமானத்துக்காக, ஆசீர்வாதங்களைப்  பெறுவதற்காக என அலைந்து திரிகின்றார்கள். பலர் பல்வேறு திருத்தலங்களை நாடி அலைகின்றனர். ஆம் அன்பானவர்களே, இந்த அலைச்சல் நமக்குத் தேவை இல்லாத ஒன்று. நம்முடைய பாவ வாழ்க்கையிலிருந்து மனம் திரும்பினால்  போதும், அப்போது நாம் அலைந்து திரியமாட்டோம். இதனையே, "நீ உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை." என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

நமது பிரச்னைகளுக்குத் தீர்வு நம்மிடம்தான் உள்ளது. நமது மனதை தேவனுக்கு நேராகத் திருப்பும்போது நாம் பல்வேறு ஆலயங்களைத் தேடியும் ஊழியர்களைத் தேடியும் அலைந்து திரியாமல் தேவன் நமக்குள்ளே இருப்பதால் மனச் சமாதானத்தோடு வாழ்வோம். "நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு" என்று மனதுருக்கத்தோடு தேவன் நம்மிடம் கூறுகின்றார்.  அவரது சத்தத்துக்குச் செவிகொடுத்து அலைச்சலில்லாமல் வாழ்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்              

Tuesday, June 04, 2024

அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,219     💚 ஜூன் 10, 2024 💚 திங்கள்கிழமை 💚

"அப்பொழுது யாக்கோபு: "உன் சேஷ்டபுத்திரபாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு" என்றான். அதற்கு ஏசா: "இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான்." ( ஆதியாகமம் 25 : 31, 32 )

இஸ்ரவேலரின் வழக்கத்தின்படி சேஷ்டபுத்திரபாகம் என்பது ஒவ்வொரு குடும்பத்தின் முதல் மகனும் தங்கள் தந்தையிடமிருந்து ஒரு சிறப்பு வாரிசு உரிமையைப் பெறுவதைக் குறிக்கும். முதற்பேறான மகன் குடும்பத்தின் ஆசாரியனாக இருப்பான் (கடவுளால் அந்தப் பணி லேவியர்களுக்கு மாற்றப்படும் வரை), அந்த மகன் தந்தையின் சுதந்தரத்திலும் தந்தையின் அதிகாரத்திலும் இருமடங்கைப் பங்காகப்  பெறுவான்.

இன்றைய தியான வசனம் இரண்டு  சகோதரர்களின் உரையாடல். மட்டுமல்ல, இந்த உரையாடல் மூலம் இருவரின் குணங்களை நாம் காண முடிகின்றது.  யாக்கோபு எப்படியாவது தனது அண்ணனை ஏமாற்றி சேஷ்ட புத்திரபாகத்தை அடைந்துவிட எண்ணுகின்றான். அவன் அண்ணன் ஏசாவோ வயிற்றுக்கே முன்னுரிமை கொடுத்து சேஷ்டபுத்திரபாகத்தை விட்டுக்கொடுக்கின்றான். ஒருவேளை உணவை உண்ணாதிருப்பதால் யாரும் உடனே செத்துவிட மாட்டார்கள். ஆனால் ஏசா கூறுகின்றான், "இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான்."

ஏசாவின் பலவீனத்தை யாக்கோபு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டான். "அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம் பண்ணினான்." ( ஆதியாகமம் 25 : 34 ) என்று கூறப்பட்டுள்ளது. 

ஆம் அன்பானவர்களே, "வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு இன்பமாயிருக்கும்; பின்போ அவனுடைய வாய் பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்." ( நீதிமொழிகள் 20 : 17 )

நமது ஊர்களில் சில குடிகாரர்கள் இருப்பார்கள். அவர்களுக்குக் குடிப்பதற்கு சிறு தொகையினைக் கொடுத்தால்கூட விலை உயர்ந்த பொருட்களைக் கொடுத்துவிடுவார்கள். சில கிராமங்களிலுள்ள பண்ணையார்கள் இப்படி ஊரிலுள்ள குடிகாரர்களின் சொத்துக்களை அபகரித்துக்கொள்வதுண்டு. 

இன்றைய தியான வசனமும் செய்தியும் நமக்கு கூறுவது இதுவே; அதாவது நாம் இந்த இரண்டு சகோதரர்களைப்போலவும் இருக்கக் கூடாது. அடுத்தவர்களது பலவீனத்தைப் பயன்படுத்தி அதன்மூலம் லாபம் சம்பாதிப்பவர்களாகவும், அற்ப உடல் தேவைக்காக மேலான ஆசீர்வாதங்களை உதறித் தள்ளுபவர்களாகவும் நாம் இருக்கக்கூடாது. 

இன்று கிறிஸ்தவர்கள் பெரும்பாலானவர்கள் யாக்கோபைப் போலவும் ஏசாவைப்போலவே இருக்கின்றனர். யாரையாவது ஏமாற்றி பொருள் சேர்த்து விடவேண்டுமென்று ஒரு கூட்டமும்,  தேவ ஆசீர்வாதத்தை இழந்தாலும் உலக ஆசீர்வாதத்தால் தாங்கள்  நிரம்பிடவேண்டுமென்று எண்ணும் ஒருகூட்டமும்  கிறிஸ்தவர்களிடையே உண்டு.  

அன்பானவர்களே, நாம் நம்மைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து ஏற்றவேளையில் அவர் நம்மை உயர்த்திட அவருக்கு அடங்கி வாழ்வோம். அப்போதுதான்  மெய்யான ஆசீர்வாதம் நமக்கு உண்டு. "ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்." ( 1 பேதுரு 5 : 6 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்            

Sunday, June 02, 2024

தேவனை அறியும் அறிவை வேண்டுவோம்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,217      💚 ஜூன் 08, 2024 💚 சனிக்கிழமை 💚

"ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதி யுள்ளவர்களாக்கினவரும், இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்." ( கொலோசெயர் 1 : 12, 13 )

பிதாவாகிய தேவனைக்குறித்து அப்போஸ்தலரான பவுல் முக்கியமான ஒரு சத்தியத்தை இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடுகின்றார்.  அதாவது நாம் குமாரனாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்தில் பங்குள்ளவர்களாக வேண்டுமானால் பிதாவாகிய தேவனின் சித்தம் நமக்குத் தேவையாக இருக்கின்றது. அவரே நம்மை ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு  நம்மைத் தகுதியுள்ளவர்களாக்குகின்றார். எனவே பிதாவாகிய தேவனை நாம் ஸ்தோத்தரிக்கவேண்டும். 

அவரே நம்மை இருளின் அதிகாரத்தினின்று விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்துகின்றார். இதனையே இயேசு கிறிஸ்துவும், "என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்." ( யோவான் 6 : 44 ) என்று குறிப்பிட்டார். ஆம், பிதாவின் சித்தத்தால் நாம் குமாரனை அறிகின்றோம்; அவரோடு சேருகின்றோம்.

பிதா என்னை இழுத்துக்கொள்ளவில்லை, எனவே நான் கிறிஸ்துவை அறியவில்லை; ஏற்றுக்கொள்ளவில்லை   என்று கூறி நாம் கிறிஸ்துவிடம் நம்பிக்கைக் கொள்ளாமல் விலகி நின்றுவிடக்கூடாது. காரணம் இயேசு கிறிஸ்து தொடர்ந்து கூறினார், "எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்." ( யோவான் 6 : 45 )

அதாவது, நாம் நமது ஜெபங்களில் கேட்கவேண்டியது உலக ஆசீர்வாதங்களையல்ல, மாறாக சத்தியத்தை அறியும் ஆவலில் பிதாவிடம் மன்றாடவேண்டும். இப்படி சத்தியத்தை அறிந்திடும் ஆவல் உள்ளவர்களாய் வாழ்பவர்களுக்கு பிதாவாகிய தேவன் தனது குமாரனை வெளிப்படுத்துவார். ஒருவருக்கு ஆர்வமிருக்கும் ஒன்றை நாம் அவருக்குக் கொடுக்கும்போதுதான் அவருக்கு அதன் மதிப்பு அதிகமாகத் தெரியும். "ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்." என்றார் இயேசு கிறிஸ்து. 

இப்படி பிதாவாகிய தேவன் நம்மை "ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்குத் தகுதியுள்ளவர்களாக்கி, இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்துகின்றார். 

அன்பானவர்களே, நாம் வெறுமனே இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று கூறிக்கொள்வதில் அர்த்தமில்லை. ஆலய வழிபாடுகளிலும் ஜெபக்கூட்டங்களிலும் கலந்து கொள்வது மட்டும் போதாது. தனிப்பட்ட முறையில் கிறிஸ்துவை நாம் அறிந்தவர்களாக வாழவேண்டியது அவசியம். இப்படி நாம் பிதாவையும் குமாரனாகிய கிறிஸ்துவையும் அறிந்தவர்களாக வாழ்வதே மெய்யான கிறிஸ்தவ வாழ்வு. அப்படி அறிவதே நித்தியஜீவன் எனும் நிலைவாழ்வு. 

"ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்." ( யோவான் 17 : 3 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா? ஆம் அன்பானவர்களே, நாம் நித்திய ஜீவனுக்குத் தகுதியுள்ளவர்களாக வேண்டுமானால் பிதாவையும் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் வெறுமனே ஆராதிப்பவர்களாக அல்ல.  தனிப்பட்ட முறையில் அறிந்தவர்களாக  இருக்கவேண்டும். அத்தகைய தேவனை அறியும் அறிவை வேண்டுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Friday, May 31, 2024

மாயக்காரனின் ஜெபம்

 ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,216       💚 ஜூன் 07, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 6 : 5 )

ஜெபம் என்பது நமக்கும் தேவனுக்குமுள்ள தனிப்பட்ட உறவின் அடையாளம். நாம் அவரோடு பேசுவதும் அவர் பேசுவதைக் கேட்பதும்தான் ஜெபம். நாம் தேவனோடு பேசும்போது உலக காரியங்களை மறந்து அவரோடு பேசவேண்டும். 

நாம் ஜெபிப்பதை நம்மைப் பலர் பார்த்துக்கொண்டிருக்க, புகைப்படக் கேமராவும் வீடியோவும் பதிவு செய்துக்கொண்டிருக்குமானால் நாம் எப்படி அந்தரங்கமாக ஜெபிக்கமுடியும்?  அந்த ஜெபம் எப்படி தேவனுக்கு உகந்ததாக இருக்கமுடியும்? அத்தகைய ஜெபம் மாயக்காரனின் ஜெபம் என்று வேதம் கூறுகின்றது. "அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." என்று இயேசு குறிப்பிடுகின்றார்.

அதாவது,  அவர்கள் ஜெபிப்பதை உலக மக்கள் பார்த்தார்களே அதுதான் அவர்கள் அத்தகைய ஜெபத்தால் அடைந்த பலன். அதனை அவர்கள் அடைந்து தீர்த்தாகிவிட்டது. எனவே இதற்குமேல் அந்த ஜெபத்தால் பலனில்லை என்று பொருள். 

இன்று பல கிறிஸ்தவ ஊழியர்களும் இப்படித்  தங்கள் தனிப்பட்ட ஜெபத்தை வீடியோ காட்சியாக பதிவேற்றி முகநூலில் வெளியிடும் அவலம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.  "மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்" என்றுதான் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது, ஜெபிப்பதை முகநூலில் வெளியிடுவதைக் குறித்துக் குறிப்பிடவில்லை என்று இவர்கள் எண்ணிக்கொள்கின்றார்கள். 

அன்பானவர்களே, அரசியல் தலைவர்கள் மக்களைக் கவரவும் ஓட்டுகள் வாங்கவும் இப்படி நடிக்கலாம். ஆனால் தேவனுக்குமுன் மனிதர்களது நடிப்பு எடுபடாது. பெருமையில்லாமல், தன்னைத் தாழ்த்தி, தனது பாவங்களை அறிக்கையிட்டு அந்தரங்கத்தில் ஜெபிப்பதையே தேவன் விரும்புகின்றார். "நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில்பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்." ( மத்தேயு 6 : 6 ) என்று வேதம் கூறவில்லையா? 

ஆலயங்களில் நாம் ஜெபிப்பதற்கும் தனிப்பட்ட ஜெபத்துக்கும் வித்தியாசம் உண்டு. தனிப்பட்ட ஜெபம் வல்லமையுள்ளது. தனி ஜெபத்தில்தான் நாம் தேவனோடு நெருக்கமாக பேசவும் அவர் பேசுவதைக் கேட்கவும் முடியும். பல கிறிஸ்தவர்கள் ஆலய ஆராதனையோடு ஜெபத்தை முடித்துக்கொள்கின்றனர். இப்படி இருக்கும் மக்கள் தேவனது பிரசன்னத்தை உணர்ந்து கொள்ள முடியாது. 

எனவே அன்பானவர்களே, நமது தனி ஜெப வேளையை நாம் அதிகரிக்கவேண்டும். அத்துடன் நமது ஜெபம் நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ளத்  தொடர்பு என்பதனையும் நாம் மறந்துவிடக் கூடாது. நமது அறைவீட்டுக்குள் தனியே அந்தரங்கத்திலிருக்கிற நமது  பிதாவை நோக்கி ஜெபம்பண்ணுவோம்; அப்பொழுது அந்தரங்கத்தில்பார்க்கிற நமது பிதா நமக்கு வெளியரங்கமாய்ப்   பலனளிப்பார்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்       

சூழ்நிலைகளை மறந்து கர்த்தரையே தியானிப்போம்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,215     💚 ஜூன் 06, 2024 💚 வியாழக்கிழமை 💚

"என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்." ( சங்கீதம் 63 : 6 )

பொதுவாக இரவு நடுச்சாமத்தில் விழிக்கும்போது மனிதர்களது நினைவுகள் எப்படிப்பட்டதாய் இருக்கும் என்று நாம் எண்ணிப்பார்ப்போம். நாம் கடன் தொல்லையால் அவதிப்படும்போது நமக்குக் கடன்கொடுத்தவர்களது முகங்களும் அவர்கள் நமக்கு எதிராகப் பேசிய பேச்சுக்களும் நமக்கு நினைவுக்குவரும். 

கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கும்போது மருத்துவர்கள் கூறிய வார்த்தைகளும், நமது குடும்பத்தைப்பற்றிய எண்ணமும் நம்மை வருத்தமுறச்செய்யும். காதல் வசப்பட்டவர்களுக்குத் தங்களது காதலர்களின் முகமும் அவர்களது அன்பான பேச்சுகளும் நினைவுக்கு வரும். ஆனால் இன்றைய தியான வசனத்தில் தாவீது , இராச்சாமத்தில் அவர் தேவனை நினைத்துத்  தியானிப்பதாகக் கூறுகின்றார்.

அன்பானவர்களே, தாவீது இந்த வசனத்தை பஞ்சு மெத்தையில் அமர்ந்துகொண்டு எழுதவில்லை. மாறாக மிகுந்த உபத்திரவத்தின் மத்தியில், சுகமாகப்   படுப்பதற்கு இடமில்லாத ஒரு சூழ்நிலையில் இருந்துகொண்டு எழுதுகின்றார். இதனையே வறண்டு தண்ணீரற்ற பாலை நிலத்தில் நடுச்சாமத்தில் அவர் தேவனை நினைத்துத் தியானிப்பதாகக் இன்றைய தியான சங்கீதத்தின் முதல் வசனமாக அவர் கூறுகின்றார்:-

"தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது."( சங்கீதம் 63 : 1 )

நமது வாழ்க்கையினை நாம் நினைத்துப் பார்ப்போம். நிச்சயமாக இதை வாசிக்கும் எவரது வாழ்க்கையும் இப்படிப்பட்ட வீடற்று பாலை நிலத்தில் வாழக்கூடிய வாழ்க்கையாக இருக்காது என்று எண்ணுகின்றேன். ஆனால் ஒருவேளை நமக்குக் கடன்களும் நோய்களும் இதரப் பிரச்சனைகளும் இருக்கலாம். ஆனால் நாம் பிரச்னைகளையே நோக்கிடாமல் தாவீதைப்போல சூழ்நிலைகளை மறந்து கர்த்தரையே நோக்கிப் பார்க்க இன்றைய தியான வசனம் நமக்கு வழி  காட்டுகின்றது.

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த பவுலும் சீலாவும் இதுபோலவே இருந்தனர். அவர்கள் சிறைச்சாலைச் சூழ்நிலையையும் தாங்கள் கைதியாக அடைபட்டிருப்பதையும் எண்ணாமல் நடுச்சாமத்தில் தேவனைப் புகழ்ந்து பாடி ஜெபித்தார்கள். 

"நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 16 : 25, 26 ) என்று வாசிக்கின்றோம்.

ஆம் அன்பானவர்களே, நமது படுக்கையில் விழிப்பு ஏற்படும்போதெல்லாம் நமது பிரச்சனைகளை எண்ணிக் கலங்காமல்  தேவனையே நினைத்துத் தியானிப்போம். பவுல் அப்போஸ்தலரும் சீலாவும் அப்படி ஜெபித்தபோது "சிறைச்சாலைக் கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று." என்று கூறப்பட்டுள்ளதுபோல நமது சிறையிருப்பின் வாழ்க்கையும் கட்டுக்களும் நிச்சயம் கழன்றுபோகும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

Wednesday, May 29, 2024

கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,214      💚 ஜூன் 05, 2024 💚 புதன்கிழமை 💚


"கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதன முள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்" (கொலோசெயர் 3:11)

இந்த உலகத்திலுள்ள அனைவரும் ஒரே தேவனுடைய பிள்ளைகளே. யாராக இருந்தாலும், எந்த மதம், ஜாதி, இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் எல்லோரும் ஒரே பிதாவின் பிள்ளைகளே. அதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலராகிய பவுல் கூறுகின்றார். 

இன்று நாம் கிறிஸ்துவை அறிந்து ஆவிக்குரிய ஒரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கலாம். ஆனால் அப்படி நாம் வாழ்வதால் நாம் மட்டுமே கடவுளின் மக்கள் என்று எண்ணிவிடக்கூடாது. எல்லோரும் அவரது பிள்ளைகளே. இன்று இந்த அறிவும் தெளிவும் இல்லாததால்தான் மற்றவர்களை அற்பமாக பார்க்கும் நிலைமை உள்ளது. ஆனால் நாம் அப்படி இருக்கலாகாது என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். எனவேதான் தொடர்ந்து அவர் கூறுகின்றார்:-

"ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்." (கொலோசெயர் 3:12, 13)

ஒரு தகப்பனுக்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம். நான்குபேருமே அவருக்கு ஒன்றுதான். ஆனால் நான்கு பிள்ளைகளும் வெவ்வேறான குணங்கள் உள்ளவர்களாகவும், சிலர்  தகப்பனுக்குக் கீழ்ப்படியாதவர்களாகவும் இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒரே தகப்பனுக்குப் பிறந்த சகோதரர்கள். எனவேதான் பவுல் கூறுகின்றார், "ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்."

இந்த எண்ணமும் பவுல் குறிப்பிடும் சுபாவங்களும் இல்லாததால்தான் மத வெறுப்புகளும் சண்டைகளும் ஏற்படுகின்றன. கிறிஸ்தவர்களுக்குள், கிறிஸ்தவ சபைகளுக்குள் ஒற்றுமை இல்லாததற்கும் இதுவே காரணம். 

சிலர்  சபை ஒருங்கிணைப்பு கூட்டங்கள் ஏற்பாடு செய்து பல்வேறு சபையினைச் சார்ந்த ஊழியர்களை அழைப்பதுண்டு. இது நல்ல ஒரு முயற்சிதான். ஆனால் அந்தக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்புக்கு யாரை நியமிக்கலாம் என்று முடிவெடுக்கவேண்டிய சூழ்நிலை வரும்போது அனைவருமே தாங்கள் சார்ந்துள்ள சபை ஊழியர்களே தலைமை இடத்துக்கு வரவேண்டும் என்று எண்ணுகின்றனர். எனவே இத்தகைய பல கூட்டமைப்பு முயற்சிகள் ஒரு சில மாதங்களிலேயே தோல்வியில் முடிவடைந்துவிடுகின்றன.    

சபைகளில் மட்டுமல்ல, ஊர்களில் பிரச்னை ஏற்படுவதற்கும் இத்தகைய பெருந்தன்மைக் குணமில்லாமையே காரணம். ஆம் அன்பானவர்களே, பவுல் அப்போஸ்தலர் குறிப்பிடுவதுபோல "கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதன முள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்" எனும் எண்ணம் வரும்போதுதான் அனைவரையும் மதிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் முடியும். இதனையே கிறிஸ்து விரும்புகின்றார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்     

Tuesday, May 28, 2024

என் ஜனங்களோ மதியற்றவர்கள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,213    💚 ஜூன் 04, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

"என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்". ( எரேமியா 4:22)

ஆதிகாலமுதல் தேவன் பல்வேறு விதங்களில் மனிதர்களிடம் இடைபட்டுக்கொண்டிருக்கின்றார்.  ஏதேனில் ஆதாம் ஏவாளோடு உலாவிய தேவன், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு இவர்களோடும்  இடைப்பட்டார். பின்னர் மோசேக்குத் தன்னை வெளிப்படுத்தி அவரோடு பேசி இஸ்ரவேல் மக்களை வழிநடத்தினார்.  யோசுவா, சாமுவேல், பல்வேறு நியாதிபதிகள், அரசர்கள் மூலம் தனது மக்களை நடத்தினார்.  ஆனாலும் மக்கள் அவரை அறியவோ, அறிந்துகொள்ளவேண்டுமென்று விருப்பப்படவோ இல்லை. 

தேவன் இஸ்ரவேல் மக்களை பல்வேறு விதமாக நேசித்து நடத்தியும் அவர்கள் மீண்டும் மீண்டும் வழிவிலகி நடந்து தேவனைத் துக்கப்படுத்தினர். எனவே அவர் கூறுகின்றார், "என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை"

இன்றைய வசனம் பழைய ஏற்பாட்டுக்கால மக்களைக்குறித்து கூறப்பட்டிருந்தாலும் இதே நிலைமைதான் இன்றும் தொடர்கின்றது. பொதுவாக பலரும் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டாலும் தேவனை அறியவேண்டும் எனும் உணர்வோடு செல்பவர்கள் வெகு சிலரே. பெரும்பாலானோர் தேவனிடமிருந்து உலக நன்மைகளைப் பெறுவதற்கே முன்னுரிமைகொடுத்து ஆலயங்களுக்குச் செல்கின்றனர். 

மக்கள் இப்படித் தேவனை அறியாதிருப்பதால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதனை அப்போஸ்தலரான பவுல்,  "தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்." ( ரோமர் 1 : 28 ) என்று கூறுகின்றார். ஆம் அன்பானவர்களே, மனிதர்களது கேடான சிந்தனைக்கும் செயல்பாடுகளுக்கும் காரணம் தேவனை அறியாமல் இருப்பதுதான்.

இப்படித் தேவனை அறியாதிருப்பதால் பலரும் பல்வேறு பக்திச் செயல்பாடுகளில் ஈடுபட்டாலும் அவர்களில் உள்ளான மாறுதல்களைக் காண முடிவதில்லை.  ஆம், இன்றைய தியான வசனத்தில் கூறப்பட்டுள்ளபடி, "பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்". 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் தனிப்பட்ட முறையில் அறிந்தால் மட்டுமே நம்மில் சுபாவமாற்றம் ஏற்பட முடியும். எனவே, தேவனை அறியவேண்டும் எனும் ஆர்வமும் அதற்கான ஆன்மீகத் தேடுதலும் நமக்கு இருக்கவேண்டியது அவசியம்.  அப்படித் தேடும்போது மட்டுமே நாம் அவரைக் கண்டுபிடிக்கமுடியும்.  அப்படிக் கண்டுபிடிக்கும்போது மட்டுமே நமது குணங்களில் மாற்றம் ஏற்படும். 

நம்மை யாராவது அறிவுகெட்டவனே / அறிவுகெட்டவளே என்று கூறிவிட்டால் நமது மனம் எவ்வளவு வேதனைப்படும்? ஆனால் அவரை நாம் அறிய முயலாவிட்டால் தேவனும் நம்மைப்பார்த்து அப்படிதான் கூறுவார்.  "என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை."

நம்மை அவருக்கு ஒப்புக்கொடுத்து, "தேவனே உம்மை எனக்கு வெளிப்படுத்தித்தாரும்; நான் உமது மகனாக, மகளாக வாழ விரும்புகின்றேன்" என்று உண்மையான மனதுடன் ஜெபிப்போம்.  "ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்." ( மத்தேயு 7 : 8 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.   

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                      

Saturday, May 25, 2024

பிதாவையும் இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,212    💚 ஜூன் 03, 2024 💚 திங்கள்கிழமை 💚

"ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்." ( யோவான் 17 : 3 )

நித்திய ஜீவனைக்குறித்து வேதத்தில் பல்வேறு இடங்களில் நாம் வாசித்தாலும் இன்றைய தியான வசனத்தில் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துக் கூறுவது நமக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாகும். அதாவது நாம் நித்திய ஜீவன் எனும் நிலை வாழ்வை அடையவேண்டுமானால் மெய்யான தேவனாகிய பிதாவையும் அவர் அனுப்பிய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் தனிப்பட்ட முறையில் அறிந்து அவர்களோடு உறவுள்ளவர்களாக வாழவேண்டியது அவசியமாகும்.  

பிதாவையும் இயேசு கிறிஸ்துவையும் அறிவது என்பது வெறுமனே அவர்களுக்கு ஆராதனை செய்வதோ ஒரு சில கிறிஸ்தவ கடமைகளை நிறைவேற்றுவதோ அல்ல; மாறாக அவரை ஒரு குழந்தைத் தனது தாயையும் தகப்பனையும் அறிந்து அவர்களோடு ஐக்கியமாக இருப்பதுபோல நமது தனிப்பட்ட வாழ்வில் அவரோடு உறவை வளர்த்துக் கொள்வதைக் குறிக்கின்றது. அவரோடு பேசுவதும் அவர் நம்மோடு பேசுவதைக் அன்றாடம் கேட்டு  நடப்பவர்களாகவும் இருப்பதைக் குறிக்கின்றது. 

அதாவது, நாம் மனம் திரும்பிப்  பாவ மன்னிப்பைப் பெற்றால் போதாது; அவர்மேல் அளவற்ற விசுவாசம் உள்ளவர்களாக இருந்தால் போதாது; ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வதோ, கைகளை ஒருவர்மேல்வைத்து குணமாக்குவதோ, மரித்தவர்களின் உயிர்த்தெழுதல், கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு போன்றவரைப்பற்றி அறிந்து மற்றவர்களுக்கு உபதேசிப்பதோ மட்டும் போதாது. இவை அனைத்தும் கிறிஸ்தவ விசுவாசம்தான். ஆனால் நாம் பூரணராகவேண்டுமானால் இவற்றைக் கடந்து, இவற்றுக்கும் மேலாக பிதாவையும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் தனிப்பட்ட முறையில் அறிந்தவர்களாக இருக்கவேண்டியது அவசியம்.      

எனவேதான் எபிரேய நிருப ஆசிரியர், "ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேசவசனங்களை நாம்விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக." ( எபிரெயர் 6 : 1, 2 ) என்று கூறுகின்றார். இவைகள் அஸ்திபார உபதேசங்கள்தான் ஆனால் நாம் இவற்றையே சொல்லிச் சொல்லி வாழ்ந்து கொண்டிருப்பது போதாது.

ஒரு குழந்தைக்கு நாம் நல்ல உணவு, உடை, பராமரிப்புக் கொடுக்கலாம், ஆனால் அந்தக் குழந்தை நாம் எவற்றைக்கொடுத்தாலும் அதில் முழுத் திருப்தி அடையாது. மாறாக அது தனது தாயின் முகத்தையும் தாயின் அரவணைப்பையும் தான் அதிகம் விரும்பும். 

ஆம் அன்பானவர்களே, இதுபோலவே மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு போன்றவை நல்ல உபயோகமான காரியங்களாக இருந்தாலும் நாம் தனிப்பட்ட முறையில் பிதாவையும் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் அறிந்தவர்களாக வாழவேண்டியது அவசியம். அப்படி அறிந்து அவரோடு ஐக்கியமாக வாழ்வதே நித்திய ஜீவன். இந்தத் தனிப்பட்ட உறவினை அடைந்துகொள்ள முயல்வோம். 

இதற்கு நாம் உலக ஆசீர்வாதங்களையே அவரிடம் கேட்பதை விட்டு ஆவிக்குரிய ஆர்வமுள்ளவர்களாக, ஆவிக்குரிய மேலான காரியங்களை ஜெபத்தில் அவரோடு பேசி, கேட்டு பெற்றுக்கொள்பவர்களாக இருக்கவேண்டியது அவசியம். ஆம், இம்மைக்குரியவைகளையல்ல; மேலானவைகளையே தேடுபவர்களாக வாழ்வோம். மெய்த்தேவனாகிய பிதாவையும் அவர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிந்து நித்தியஜீவனுக்குத் தகுதியுள்ளவர்கள் ஆவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்               

கர்த்தரை முழு இருதயத்தோடும் சேவியுங்கள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,211       💚 ஜூன் 02, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"பயப்படாதேயுங்கள்; நீங்கள் இந்தப் பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் சேவியுங்கள்." ( 1 சாமுவேல் 12 : 20 )

நமது தேவனது மன்னிக்கும் மனப்பான்மையையும், அவரது அளவில்லாக் கிருபையையும் சாமுவேல் உணர்ந்திருந்தார். எனவே அவர் இஸ்ரவேல் மக்களைப்பார்த்து இன்றைய வசனத்தைக் கூறுகின்றார். நீங்கள் தேவனுக்கு எதிராக பல பொல்லாங்கான செயல்களைச் செய்துளீர்கள். பரவாயில்லை, ஆனால், கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் மட்டும் இருந்து கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் சேவியுங்கள் என்கின்றார்.

நாம் தேவனுக்கு எதிராகப் பலப்  பாவங்களைச் செய்திருந்தாலும் ஒருபோதும் அவரை மறுதலித்துப் பின்வாங்கிப் போய்விடக்கூடாது எனும் உண்மையினை அவர் இங்கு விளக்குகின்றார். "நீங்கள் இந்தப் பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் சேவியுங்கள்" என்பது நமக்கும் பொருந்தும். பல பாவங்களை நாம் செய்திருந்தாலும் அவரை நாம் மறுதலியாமல் இருப்போமானால் அவரது கிருபையினால் இரக்கத்தையும் மன்னிப்பையும்  பெறுவோம். 

இதற்கான காரணத்தையும் சாமுவேல் அடுத்த இரு வசனங்களுக்குப்பின் கூறுகின்றார். அதாவது,  "கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்." ( 1 சாமுவேல் 12 : 22 ) கர்த்தர் நம்மை அவருக்கு உகந்த மக்களாக விருப்பப்பட்டுள்ளார். எனவே அவர் நம்மைக் கைவிடமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. ஆம், ஜீவனுள்ள தேவனாகிய அவர் நம்மைத் தனது மக்களாகத் தெரிந்துகொண்டுள்ளார்.

நல்ல ஆயனாகிய இயேசு கிறிஸ்துவும் இதனையே கூறினார். எந்த ஆடும் வழிதப்பித் போவது அவருக்குப் பிரியமில்லை. அவர் நாம் ஒவ்வொருவரது மனநிலையினையும் அறிந்துள்ளார். இதனையே அவர், "நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்." ( யோவான் 10 : 14, 15 ) என்று கூறினார்.

"நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்"என்று இயேசு கிறிஸ்து கூறுவது கவனிக்கத்தக்கது. அதாவது அவர் அவருடைய மக்களாகிய நம்மை அறிந்துள்ளார், நாம் அவரை மறுதலியாமல் இருக்கின்றோம் என்பதனையும் அறிந்திருக்கின்றார். சில வேளைகளில் துன்பங்கள் நெருக்கும்போது சிலர் மனதுக்குள் சோர்வடைந்து, "என்ன ஜெபம் செய்தும் தேவன் என்னையும் எனது ஜெபத்தையும் கேட்கவில்லை....நான் இனி அவரிடம் எதனையும் கேட்கமாட்டேன்" என விரக்தியில் கூறுவதுண்டு. 

அன்பானவர்களே இத்தகைய மனித மன நிலையையும் அவர் அறிவார். நமது பலவீனம் இது என்பதும் அவருக்குத் தெரியும். ஆனால் நாம் இத்தகையைச் சூழ்நிலையிலும் அவரை மறுதலியாமல் பிற தெய்வங்களை நாடாமல் இருப்போமானால் அவர் நம்மைச் சேர்த்துக்கொள்வார். 

இஸ்ரவேல் மக்கள் தேவனை விட்டு பிரயோஜனமற்றதும் இரட்சிக்கமாட்டாததுமாயிருக்கிற தெய்வங்களை நாடிச் செல்வார்கள் என்பது சாமுவேலுக்குத் தெரிந்திருந்தது. எனவே அவர் மக்களிடம் "விலகிப்போகாதிருங்கள்; மற்றப்படி பிரயோஜனமற்றதும் இரட்சிக்கமாட்டாததுமாயிருக்கிற வீணானவைகளைப் பின்பற்றுவீர்கள்; அவைகள் வீணானவைகளே." ( 1 சாமுவேல் 12 : 21 ) என்று கூறுகின்றார். இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து இதனைக் கூறுகின்றார். 

எனவே அன்பானவர்களே, எந்த நெருக்கடிச் சூழ்நிலை வந்தாலும்  கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை நமது  முழு இருதயத்தோடும் சேவிப்போம். கர்த்தர் நமைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனமாகிய நம்மைக் கைவிடமாட்டார்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்             

மரித்தோரை விட்டு எழுந்திரு

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,210       💚 ஜூன் 01, 2024 💚 சனிக்கிழமை 💚

"ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்." ( எபேசியர் 5 : 14 )

இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் ஆவிக்குரிய தூக்கத்தையும், மரணத்தையும் குறித்து நமக்கு அறிவுறுத்தி ஆலோசனைச் சொல்கின்றார்.  தேவனை அறியவேண்டும் எனும் ஆர்வமோ, நமது பாவ காரியங்களைக் குறித்த உணர்வோ இன்றி வாழ்வதுதான் பவுல் குறிப்பிடும் தூக்கமும் மரணமும்.

இத்தகைய உணர்வுகள் இன்றியே பெரும்பாலான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நீ அப்படி அவர்களைப்போல இல்லாமல் விழித்து எழுந்திரு என்கின்றார் அவர். இதனையே அவர், "தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு" எனும் வார்த்தைகளால் குறிப்பிடுகின்றார். மற்றவர்கள் எப்படியும் இருக்கட்டும், நீ முதலில் அத்தகைய மரித்தவர்களை விட்டு எழுந்திரு என்கின்றார். 

நாம் ஆலயங்களுக்குச் செல்லலாம், காணிக்கைகள் கொடுக்கலாம், ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்ளலாம், வேதாகமத்தைத் தினசரி வாசிக்கலாம். ஆனால் இத்தகைய செயல்பாடுகள் இருப்பதால் நாம் ஆவிக்குரிய மக்கள் என்றும்  விழித்திருப்பவர்கள் என்றும் கூறிவிட முடியாது. காரணம், இத்தகைய செயல்களை அனைத்து மதத்தினரும் அவரவர் மத நம்பிக்கைகளுக்கேற்பச்  செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். எனவே இத்தகைய செயல்பாடுகள் ஆவிக்குரிய விழித்திருந்தல் ஆகாது. 

ஆம் அன்பானவர்களே, பாவத்தை நாம் மேற்கொள்ளாதவரை நாம் ஆத்தும மரணத்தில்தான் இருக்கின்றோம்.  "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்." ( ரோமர் 6 : 23) இன்றைய தியான வசனத்தின்படி நாம் மரணத்திலிருந்து எழுந்திருக்க வேண்டுமானால்  நமது பாவங்கள் கழுவப்பட்ட நிச்சயம் நமக்கு வேண்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும். 

அப்படி நமது பாவங்கள் மன்னிக்கப்படும்போது நாம் தூங்குகின்றவர்களையும் மரித்தவர்களையும் விட்டு எழுந்திருக்கின்றவர்கள் ஆவோம். "அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. ஆம், நமது ஒளியிழந்த வாழ்க்கை அப்போது பிரகாசமடையும். நாம் மற்றவர்களுக்கு வெளிச்சமாகவும் வழிகாட்டுகின்றவர்களாகவும் மாறுவோம். இதனையே இயேசு கிறிஸ்துத் தனது மலைப் பிரசங்கத்தில் கூறினார்:- 

"நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது." ( மத்தேயு 5 : 14 )

"இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது." ( மத்தேயு 5 : 16 )

ஆதலால், தூங்குகிற நாம்  விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திருப்போம்.  அப்பொழுது கிறிஸ்து நம்மைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறது. தூக்கம், மரணம் இவற்றைவிட்டு மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.  எனவே, நமது பாவங்களை கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு மன்னிப்பு வேண்டுவோம். அப்போது,  நமது ஆவிக்குரிய இருளும் உலக வாழ்விலுள்ள இருளும் அகன்று மனிதர்கள்முன் நாம் பிரகாசிப்பவர்களாக இருப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்