இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Monday, April 22, 2024

உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,171       💚 ஏப்ரல் 24, 2024 💚 புதன்கிழமை 💚



"விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள். இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும்." ( கொலோசெயர் 3 : 5, 6 )

மனிதர்களின் உடலின் உறுப்புகளே பல்வேறு பாவங்களுக்கு நேராக மனிதர்களை நடத்துகின்றன.  விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை இவைகளுக்கு நமது கால்களும் கைகளும் கண்களும் காரணமாய் இருக்கின்றன. எனவேதான் இன்றைய தியான வசனம் கூறுவதையே நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் கூறினார்.

"உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்." ( மாற்கு 9 : 43 )

"உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்." ( மாற்கு 9 : 45 )

"உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய் நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்." ( மாற்கு 9 : 47 )

இயேசு கிறிஸ்து கூறியது போலவே இன்றைய தியான வசனத்தில், இவைகளை உண்டுபண்ணுகின்ற இந்த உறுப்புகளை அழித்துப்போடுங்கள் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். அழித்துப்போடுங்கள் என்று கூறுவதால் இவைகளை வெட்டி எறிந்துவிடவேண்டுமென்று பொருளல்ல. மாறாக,  இந்த உறுப்புகள் நமக்கு இல்லாதிருக்குமானால் நாம் எப்படி வாழ்வோமோ அதுபோல நாம் வாழவேண்டும் என்று பொருள். பரிசுத்த ஆவியானவர் நம்மில் செயல்புரிந்து இந்த உறுப்புக்கள் பாவத்துக்கு நேராக செயல்படாமல் காத்துக்கொள்ள வேண்டுமென்று பொருள். 

விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை எனும் ஐந்து குறிப்பிட்ட பாவங்களைப்  பட்டியலிட்டு "இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும்." என்று கூறப்பட்டுள்ளது. அதாவது தேவனுடைய பார்வையில் இவைகளே மிகவும் மோசமான பாவங்கள் என்று பொருள். வேதாகமத்தை நாம் வாசிக்கும்போது இந்தப் பாவங்களே பலரை அழிவுக்குநேராக இழுத்துச் சென்றதை நாம் அறிந்துகொள்ளலாம். 

எனவே அன்பானவர்களே, நாம் வெறுமனே ஆலய ஆராதனைகளில் கலந்துகொண்டு,  ஜெபித்து பல்வேறு பக்திமுயற்சிகள் செய்தாலும் இந்தப் பாவங்கள் நம்மில் இருக்குமானால் நமது ஆராதனைகளும் பக்திமுயற்சிகளும் வீணானவைகளே. எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை." (ரோமர் 12:1) என்று கூறுகின்றார். 

நமது சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து புத்தியுள்ள ஆராதனை செய்து வாழ்வோம். அப்போது, கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் வரும் தேவகோபாக்கினைக்குத் தப்பித்துக்கொள்வோம். 

 தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Sunday, April 21, 2024

நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,170      💚 ஏப்ரல் 23, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚



"நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது." ( யாக்கோபு 5 : 16 )

நமது ஜெபம் தேவனால் கேட்கப்படவேண்டுமானால் தேவன் கூறும் ஒரு நிபந்தனை நாம் பிறரது குற்றங்களை மன்னிக்கவேண்டும் என்பதே. அதாவது பிறருடன் இணக்கமான ஒரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு நாம் தேவனிடம் ஜெபிக்கவேண்டும்.  வெறுப்பையும் கசப்பையும் பிறர்மேல் வைத்துக்கொண்டு நாம் ஜெபிப்பது அர்த்தமற்ற ஜெபம். "எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே;" (  லுூக்கா 11 : 4 ) என்று கிறிஸ்து நமக்கு ஜெபிக்கக் கற்றுக்கொடுத்துள்ளார்.

இப்படி பிறர்மேல் எந்தக் கசப்புமின்றி அவர்களுக்காகவும் ஜெபித்து வாழ்பவர்களே நீதிமான்கள் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. இத்தகைய "நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது." என்கின்றார் அப்போஸ்தலரான யாக்கோபு. 

இப்படித்தான் தானியேல் தீர்க்கத்தரிசி ஜெபித்துக் கொண்டிருந்தார். தனது பாவங்களுக்காகவும் மக்களது பாவங்களுக்காகவும் தானியேல் விண்ணப்பம் செய்தார். இதனை நாம், "இப்படி நான் சொல்லி, ஜெபம்பண்ணி, என் பாவத்தையும் என் ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கையிட்டு, என் தேவனுடைய பரிசுத்த பர்வதத்துக்காக என் விண்ணப்பத்தை என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் செலுத்திக்கொண்டிருந்தேன்." ( தானியேல் 9 : 20 ) என்று தானியேல் கூறுவதிலிருந்து அறியலாம்.

"நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது" என்ற வசனத்தின்படி தானியேல் ஊக்கமாய் "ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே, காபிரியேல் தூதன்  வேகமாய்ப் பறந்துவந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான். (  தானியேல் 9 : 21 ) என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது தானியேலின் ஜெபம் தேவ சந்நிதியை எட்டிய அதே நொடியில் தேவன் காபிரியேல் தூதன் மூலம் அந்த ஜெபத்துக்குப் பதிலையும் கொடுத்தனுப்பினார். "நீ மிகவும் பிரியமானவன். ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது. நான் அதை அறிவிக்கவந்தேன்;" ( தானியேல் 9 : 23 ) என்று காபிரியேல் தூதன் கூறுகின்றார்.

அன்பானவர்களே, தானியேல் போல நாம் நமக்காகவும் பிறருக்காகவும் ஜெபிக்கும் அதே வேளையில் தானியேலைபோல தேவனுக்கு முன்பாகவும் உலக காரியங்களிலும் குற்றமற்றவர்களாக நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும்.  ( தானியேல் 6 : 22 )  அப்படி நாம் பரிசுத்தமாய் நம்மைக் காத்துகொண்டு ஜெபிக்கும்போது தேவன் நமது ஜெபங்களுக்குப் பதில் தருவார்.  "நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு" இப்படிச் செய்யுங்கள் என்று இன்றைய தியான  வசனம் கூறுவதுபோல நாம் நமது வியாதிகளிலிருந்தும் , பிரச்சனைகளிலிருந்தும்  விடுதலையடைவோம்.

தானியேலின் ஜெபத்துக்கு ஜெபித்த அதே நேரம்  பதிலளித்த தேவன் நமது ஜெபத்துக்கும் நிச்சயம்  பதிலளிப்பார். ஆம், நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.

 தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Saturday, April 20, 2024

கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,169      💚 ஏப்ரல் 22, 2024 💚 திங்கள்கிழமை 💚


"உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்".(செப்பனியா 3:17) 

இன்றைய தியான வசனம், கிறிஸ்துவுக்குள் வாழும் விசுவாசிகளுக்கு ஆறுதலளிக்கக்கூடிய வசனம்.  தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழும்போது கர்த்தர் நம்மோடிருந்து மகிழ்ந்து களிகூருவார் என்று கூறப்பட்டுள்ளது.

பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளில் சிலர் நன்றாகப் படிக்கின்றவர்களாகவும், பல்வேறு திறமைகளைக் கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். அத்தகைய மாணவ மாணவிகளிடம் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் தனி அக்கறைகொண்டிருப்பார்கள். சிறப்பு நிகழ்ச்சிகளில் அவர்களை முன்னிலைப்படுத்துவார்கள். பள்ளியின் பெயர் பெருமையடைவதால்  அவர்களிடம் சந்தோஷமாய் இருப்பார்கள். 

இதுபோலவே நமது தேவனும் இருக்கின்றார். அவர் பாவிகளை நேசிக்கின்றார், அன்புசெய்கின்றார் என்பது உண்மையென்றாலும் தனக்கு ஏற்புடையவர்களாக  நீதி நேர்மையுடன் வாழும் மக்களிடம் அதிக அன்பு காட்டி கிருபையை அளிக்கின்றார். இப்படி தேவனுக்கு ஏற்புடையவர்களாய் வாழும்போது, அவர் நம்  நடுவில் இருக்கிறார்; நம்மிலிருந்து வல்லமையுடன் செயல்படுவார், நம்மை இரட்சிப்பார்; நம்மேல் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் நம்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார். 

இப்படி கூறப்பட்டுள்ளதால் இவர்களுக்குத் துன்பங்கள் கிடையாது என்று பொருளல்ல. மாறாக, துன்பங்களினூடே ஆறுதலும் மகிழ்ச்சியும் அளித்து அவர்களை கிருபையால் தாங்கி நடத்துவார்.  ஒரு குடும்பத்தின் பாரத்தைச் சுமக்கும் மகளையோ மகளையோ அனைவரும் தாங்கி நடத்துவதுபோலவும், அத்தகைய மகனிடமும் மகளிடமும் குடும்பத்தினர் தனி அக்கறைகாட்டி மகிழ்ச்சியுடன் இருப்பதுபோலவும் தேவன் அவர்களோடு இருப்பார்; அவர்கள்மேல் தனி அக்கறைகாட்டுவார்.

இன்று பரிசுத்தவான்களாக, புனிதர்களாக கருதப்படும் எல்லோரும் இப்படித்  துன்பங்களினூடே கிறிஸ்துவைப் பின்பற்றினவர்கள்தான். அதனால் தேவன் அவர்கள்மேல் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அவர்களைப் பெருமைப்படுத்தினார். 

ஆவிக்குரியவர்களாக நாம் வாழும்போது நம்மை நாமே பெருமைப்படுத்தத் தேவையில்லை. ஆனால் இன்று பல கிறிஸ்தவ ஊழியர்கள் தங்களது பெருமையினைப் பறைசாற்றிட தாங்களே போஸ்டர் விளம்பரங்களும், சாட்சிகளையும் ஏற்பாடுசெய்து தங்களை உயர்த்திக்கொள்ள விரும்புகின்றார். ஆம் அன்பானவர்களே, கர்த்தர் நம்மோடு இருக்கின்றார் என்பதற்கு இத்தகைய உலகம் காட்டக்கூடிய  அளவுகோல்கள் தேவையில்லை. அது நமக்கும் தேவனுக்குமான தனிப்பட்ட உறவின் அடிப்படையிலானது. 

தேவன் நம்மோடிருப்பது நமது ஆவிக்குத் தெரியும். கிறிஸ்துவுக்கு ஏற்ற வாழ்க்கை வாழும்போது நம்  தேவனாகிய கர்த்தர் நம்  நடுவில் இருப்பதையும் அவர் வல்லமையுள்ளவராக நம்மை இரட்சித்து நம்பேரில் அவர்  சந்தோஷமாய் மகிழ்ந்து,  நம்மோடு அவர் அமர்ந்திருப்பதையும்  நமது தனிப்பட்ட வாழ்வில் உணர்ந்து கொள்ள முடியும். இத்தகைய மேலான நிலையினை நாம் ஆவிக்குரிய வாழ்வில் அடைந்திடவேண்டும். கிறிஸ்துவோடு நமது ஐக்கியத்தை வலுப்படுத்தும்போது நாம் இதனை உணர்ந்து அனுபவிக்கலாம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்   

Thursday, April 18, 2024

இரவிலே நடந்தால் இடறுவான் .

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,168       💚 ஏப்ரல் 21, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚


"ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டான். ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாதபடியினால் இடறுவான் ." ( யோவான் 11 : 9, 10 )

பகலில் நடந்து செல்வதற்கும் இரவில் நடப்பதற்கும் வித்தியாசம் உண்டு. இது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்றைய வசனம் ஆவிக்குரிய பொருளில் கூறப்பட்டுள்ளது. நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிவது நம்மைப் பகலுக்கு உரிமையாளர் ஆக்குகின்றது. மாறாக, கிறிஸ்துவை அறியாத வாழ்க்கை இருளின் வாழ்க்கை. 

இதனையே அப்போஸ்தலரான யோவான், "அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது." ( யோவான் 1 : 4 ) என்று கூறுகின்றார்.  ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவின் ஜீவன் மனிதர்களுக்கு ஒளியாக இருக்கின்றது. நம்மை ஒளியிலே நடத்துகின்றது. 

இப்படி கிறிஸ்துவின் ஒளியைப் பெற்றுள்ளவன் இருளில் நடந்தாலும் இடறமாட்டான். இதனையே இன்றைய தியான வசனம், "அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டான். ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாதபடியினால் இடறுவான்." என்று கூறுகின்றது. உலகத்தின் ஒளியாகிய கிறிஸ்து நம்மில்வரும்போது நாமே  வெளிச்சமாகிவிடுகின்றோம். இதனையே இயேசு கிறிஸ்து, "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்" ( மத்தேயு 5 : 14 ) என்று கூறுகின்றார். 

தன்னில் கிறிஸ்துவின் வெளிச்சமில்லாத மனிதன் இரவான சூழ்நிலை வாழ்வில் வரும்போது இடறிவிடுவான்.  காரணம் அவனில் ஒளியில்லாமலிருப்பதுதான். கிறிஸ்துவின் வசனமே நமக்கு ஒளியாக இருந்து வழிநடத்தும் அனுபவம் மேலான ஆவிக்குரிய அனுபவமாகும். அந்த அனுபவத்தால்தான் சங்கீத ஆசிரியர், "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது." ( சங்கீதம் 119 : 105 ) என்று கூறுகின்றார்.

ஆவிக்குரிய இருளில் வாழ்பவன் இடறக்காரணம் அவனது ஆவிக்குரிய தூக்கமும் அவலட்சணமான வாழ்க்கையும்தான். ஆனால் கிறிஸ்துவின் வெளிச்சத்தில் வாழ்பவன்  தெளிவுள்ளவனாகவும், விசுவாசம், அன்பு மற்றும் இரட்சிப்பு அனுபவத்தையும் பெற்றிருப்பதால் இடறமாட்டான். 

இதனையே அப்போஸ்தலரான பவுல், "தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள். பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்."( 1 தெசலோனிக்கேயர் 5 : 7, 8 ) என்று கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவைச் சார்ந்த பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                

எப்போது வாக்குத்தத்தங்களுக்கு உரிமையடைகின்றோம்?

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,167      💚 ஏப்ரல் 20, 2024 💚 சனிக்கிழமை 💚


"அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது." ( எபேசியர் 3 : 12 )

இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது நமக்கு வாழ்வில் என்ன கிடைக்கும் என்பதனை அப்போஸ்தலரான பவுல் இங்கு விளக்குகின்றார். உலக ஆசீர்வாதங்களல்ல; மாறாக, நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் விசுவாசிக்கும்போது நமக்கு முதலில் தைரியம் பிறக்கின்றது. அதாவது கிறிஸ்துவை அறியாமல் நாம் வாழ்ந்திருந்தபோது சின்ன பிரச்சனைகளும் பாடுகளும் நம்மை மனம்தளரச் செய்து நம்மைச் சோர்வுக்குள்ளாக்கிவிடும். ஆனால், அவரை நாம் விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது நமக்கு உற்ற ஒரு தகப்பனாக அவர் இருப்பதால், தைரியம் கிடைக்கின்றது.  

இரண்டாவதாக, "திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது." என்று இன்றைய வசனம் கூறுகின்றது. அதாவது,  நாம் மரித்தால் தேவ சமூகத்தைச் சென்றடைவோம் எனும் திடமான நம்பிக்கை நம்மில் உருவாகின்றது. எனவே, மெய்யான ஒரு கிறிஸ்தவ விசுவாசி சாவைக்கண்டு அஞ்சமாட்டான். கிறிஸ்தவர்களுக்கு எதிரான வேதகலாபனைகளின்போது பலர் இரத்தச் சாட்சிகளாக உயிரைக்கொடுத்தது இந்த நம்பிக்கை இருந்ததால்தான். 

ஒருவர் கிறிஸ்துவை அறிவதற்கு முன் எப்படி இருந்தார், கிறிஸ்துவை  அறிந்தபின்னர் எப்படி மாறிவிடுகின்றார் என்பதனை விளக்கும்போது,  அப்போஸ்தலரான பவுல்,  "அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக் கொள்ளுங்கள்."   ( எபேசியர் 2 : 12 ) என்று கூறுகின்றார். 

அதாவது, கிறிஸ்துவை அறியாத மக்களாக நாம் இருந்தபோது, கிறிஸ்துவைச் சேராதவர்களாக, ஆவிக்குரிய இஸ்ரவேலுடைய உரிமைகள் இல்லாதவர்களாக, வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியராக,  நம்பிக்கையில்லாதவர்களாக,  இவ்வுலகத்தில் கடவுள் இல்லாதவர்களாக இருந்தோம் என்று கூறுகின்றார். 

கிறிஸ்துவை விசுவாசிப்போருக்கு மட்டுமே ஆவிக்குரிய உரிமைகள் உண்டு. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவரை நாம் அறியாமலிருந்தபோது வேதத்தில் பல நூறு வாக்குத்தத்தங்கள் இருந்தாலும் தேவனுடைய அந்த  வாக்குத்தத்தங்களின் உரிமை நமக்கு இல்லாமலிருந்தது. பெயரளவுக்கு மட்டும் அந்த வாக்குத்தத்தங்களை வாசித்து அவற்றைச் சொல்லி ஜெபித்துக்கொண்டிருந்தோம். ஆனால் உண்மையில் அவற்றுக்கு நாம் அந்நியராக இருந்தோம். கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டபின்னரே நாம் அவற்றுக்கு உரிமையுள்ளவர்கள் ஆனோம்.  

அன்பானவர்களே, வெறுமனே "கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன்" என்று கூறிக்கொண்டிருப்பதால் பலனில்லை. முதலில் நமது பாவங்கள் மன்னிக்கப்படும் பாவ மன்னிப்பின் நிச்சயத்தை நாம் பெறவேண்டும். அப்போதுதான் நாம் கிறிஸ்துவை விசுவாசிக்கின்றோம் என்று கூறிக்கொள்ள முடியும். அந்த அனுபவத்தை வாழ்வில் நாம் பெறும்போதுதான்  அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாகும்.

இன்றைய வசனம் அப்படி கிறிஸ்துவை அறிந்து ஏற்றுக்கொண்டவர்களுக்கு பவுல் அப்போஸ்தலர் எழுதியதாகும்.  எனவே இந்த அனுபவங்களையும் உரிமைகளையும் பெற்ற நீங்கள் தவறான உலக ஆசீர்வாத போதனைகளால் ஏமாறி கிறிஸ்துவைவிட்டு பின்மாறிப் போகாதிருங்கள் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். ஆவிக்குரிய வாழ்வில் கவனமுடன் தொடர்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்             

Wednesday, April 17, 2024

பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,166      💚 ஏப்ரல் 19, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"நான் உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்து வந்த நாளிலேதகனபலியைக்குறித்தும்மற்றப் பலிகளைக் குறித்தும் நான் அவர்களோடே பேசினதையும் கட்டளையிட்டதையும் பார்க்கிலும்என் வாக்குக்குச் செவிகொடுங்கள்அப்பொழுதுநான் உங்கள் தேவனாயிருப்பேன்நீங்கள் என்  ஜனமாயிருப்பீர்கள்;" ( எரேமியா 7 : 22, 23 )

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் தேவன் பல்வேறு பலிகளையும்  நியமங்களையும் மக்களுக்கு நியமித்திருந்தார்அதன்படி  பலிகள் செலுத்தி வாழ்வதுதான் தேவனுக்கு ஏற்புடைய செயல்  என்று மக்கள் நினைத்திருந்தனர்ஆனால் அவர்கள் தேவனுடையவாக்குக்குச் செவிகொடுக்கவில்லைஅதாவது அவர்கள்  கட்டளையைக் கட்டளையாகப் பார்த்தனரேத்தவிர தேவன்  விரும்பும் அன்பையும்இரக்கத்தையும் நீதியையும்  விட்டுவிட்டனர்பலியிடுவது சம்பந்தமான கட்டளையை  நிறைவேற்றுவதில் காட்டிய ஆர்வத்தை மனிதநேயத்திலும்  பிறரை அன்பு செய்வதில் காட்டவில்லை.

எனவேதான் இயேசு கிறிஸ்துக் கூறினார், "பலியையல்லஇரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள்நீதிமான்களையல்ல,பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்." ( மத்தேயு 9 : 13 )

பலியையல்லஇரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள் என்று கூறிய இயேசு கிறிஸ்து இன்னுமொரு இடத்தில் "பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத்து இன்னதென்று நீங்கள் அறிந்தீர்களானால்குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்." ( மத்தேயு 12 : 7 ) என்று கூறுகின்றார்.

இன்றும் இயேசு கிறிஸ்துவின் காலத்து நிலைதான்  தொடர்கின்றதுபல ஊழியர்கள் வறட்டுத்தனமான  போதனைகளை  போதிக்கின்றனரேத் தவிர இயேசு கிறிஸ்து கூறிய அன்பையும் இரக்கத்தையும் விட்டுவிட்டனர்தசமபாக போதனை இதற்கு ஒரு உதாரணம்அன்புஇரக்கம்நீதி இவற்றைப்பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பதைவிட வருமானத்தில் பத்தில் ஒன்று காணிக்கைக் கொடுப்பதுதான்  வலியுறுத்தப்படுகின்றது.

பலியையல்லஇரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள் என்று இயேசு  கிறிஸ்து கூறுவது வேதாகமக் கல்லூரியில் சென்று  கற்றுக்கொள்ள அல்லமாறாக பரிசுத்த ஆவியானவர்  உங்களுக்கு கற்றுத்தர இடம்கொடுங்கள் என்று பொருள்உங்கள் பொருளாசையையும் பண வெறியையும் விட்டுவிடீர்களானால் ஆவியானவர் உங்களை வழிநடத்துவார்கற்றுத்தருவார் என்று பொருள்

பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத்து  இன்னதென்று நீங்கள் அறிந்தீர்களானால்குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்த மாட்டீர்கள்;  ஆராதனைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை பிறரை அன்பு செய்வதற்கும் கொடுப்பீர்கள் என்று பொருள். ஆவிக்குரிய சபைகள் என்று  தங்களைக் கூறிக்கொள்ளும் சபைகளில் காணிகைக் கொடுக்காதவர்களை சபிப்பதும் சாபங்களைக் கூறும் வசனங்களை அவர்களுக்கு எச்சரிக்கையாகக் கூறுவதும் உண்டு. பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத்தை உணர்ந்திருந்தால் இப்படிச் செய்யமாட்டார்கள். 

என் வாக்குக்குச் செவிகொடுங்கள்அப்பொழுது நான் உங்கள்  தேவனாயிருப்பேன்நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள் என தேவன் கூறுவது நாம் அனைவருக்கும் ஒரு அறிவுரையாக இருக்கட்டும்அவர் இரண்டே இரண்டு கட்டளைகளைத்தான் கூறினார்ஒன்று  எல்லாவற்றுக்கும் மேலாக தேவனை நேசிப்பதுஇரண்டாவது  தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரை நேசிப்பதுஇதற்கு  முரணான வாழ்க்கைஅன்பற்ற போதனைகள் நாம் தேவ  ஜனமாக இருக்கத் தடையானவைகள்.

ஆம் அன்பானவர்களேபலியையல்ல இரக்கத்தையே  விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நாம் அறிந்துகொண்டால் பிறரைக் குற்றப்படுத்தமாட்டோம்தேவன் காட்டிய அன்பு வழியில் நடப்போம்அதுவே கிறிஸ்துவுக்கு ஏற்புடைய வழி

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Tuesday, April 16, 2024

தவறான போதகர்களை இனம்கண்டு......

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,165     💚 ஏப்ரல் 18, 2024 💚 வியாழக்கிழமை 💚



"கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்." ( 2 யோவான்  1 : 9 )

கிறிஸ்துவின் உபதேசம் என்ன? அது அவரது இரத்தத்தால் உண்டாகும் பாவ மன்னிப்பு, இரட்சிப்பு, நித்தியஜீவன் எனும் நிலைவாழ்வு அல்லது முடிவில்லா வாழ்வு  பற்றியது. கிறிஸ்துவின் இரத்தத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு நாம் கழுவப்படும்போது அவரோடு இணைக்கப்படுகின்றோம். அப்படி இணைக்கப்பட்ட நாம் அவரது ஐக்கியத்தில் தொடர்ந்து வாழும்போது இரட்சிக்கப்படுகின்றோம். இரட்சிப்பு என்பது ஒருநாள் அனுபவமல்ல; மாறாக, ஆவிக்குரிய வாழ்வின் முடிவுவரை நாம் அதில் நிலைத்திருக்கவேண்டும். இதனையே, "முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்." ( மத்தேயு 24 : 13 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

இன்றைய வசனம் கூறுகின்றது, "கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்" என்று. இந்த வசனத்தின்படி வெறும் ஆசீர்வாதங்களையே சுவிசேஷமாக போதித்துக்கொண்டு, மாயாஜாலக்காரன்போல அற்புதம் அதிசயம் என்று கூறிக்கொண்டிருப்பவன் கிறிஸ்துவின் உபதேசத்தை மீறி நடக்கின்றான்.  அத்தகையவன் பிதாவையும் குமாரனையும் உடையவன் அல்ல என்பது தெளிவு. 

மட்டுமல்ல, விசுவாசி என்று கூறிக்கொண்டு கிறிஸ்துவின் போதனைகளின்படி வாழாதவனும் கிறிஸ்துவை உடையவனல்ல. கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருந்து வாழ்பவனும் சத்தியத்தை போதிப்பவனுமே அவரில் நிலைத்திருப்பவன். அவனே பிதாவையும் குமாரனையும் உடையவன். அவனே கிறிஸ்துவுக்கேற்ற வாழ்க்கை வாழவும் மற்றவர்களை கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்தவும்  முடியும். 

அன்பானவர்களே, கிறிஸ்துவின் மெய்யான சுவிசேஷத்தையும் அவர் சிந்திய இரத்தத்தின் மகிமையையும் அதனால் உண்டாகும் ஆத்தும இரட்சிப்பையும் பற்றி கவலைப்படாமல் வாழ்பவனும்  அதுபற்றி போதிக்காமல் வெற்றுப்  போதனை செய்பவனும் நமது மரியாதைக்குரியவனல்ல. அத்தகையோரை நமது வீடுகளில் ஏற்றுக்கொள்ளவும் கூடாது என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான யோவான். "ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்." ( 2 யோவான்  1 : 10 )

இயேசு கிறிஸ்துவை  அதிகம் அன்பு செய்தவர்தான் யோவான் அப்போஸ்தலர்.  கிறிஸ்துவின் பாடுகளும் மரணமும் யோவானின் மனதினை மிகவும் வதைத்தன. நமது பாவங்களுக்காக கிறிஸ்து பட்டப்  பாடுகள்  எத்தனை மேலானவை என்பதனை யோவான் அறிந்திருந்தார். எனவே, அவற்றைப் போதித்து மக்களை மீட்பின் பாதையில் நடத்தாமல் தவறான போதனைகளைக் கொடுப்பவர்களை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அத்தகையவர்கள் கிறிஸ்துவை அவமதிக்கின்றார்கள் என்பதனை அவர் உணர்ந்ததால் இன்றைய வசனத்தைக் கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல. அப்படியானால் பின் வேறு யாருக்கு அவன் உடையவன் என்பதனை நாம் புரிந்துகொள்ளவேண்டும். எனவேதான், "அவர்களை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்." என்று கூறுகின்றார்.

நாம் கிறிஸ்துவின் போதனைகளின்படி வாழ்ந்துகொண்டு இத்தகைய தவறான போதகர்களை இனம்கண்டு அவர்களது வழியைவிட்டு விலகிக்கொள்வதே விவேகம். ஏனெனில் அத்தகையவர்களின் போதனைகள் பெரும்பாலும் கிறிஸ்துவை அறியாத மற்ற மக்கள் மத்தியில் கிறிஸ்துவை அவமானப்படுத்துவதாகவே இருக்கும். அதற்கு நாம் உடன்படாமல் தப்பித்துக்கொள்ளவேண்டும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

தேவனுடைய ராஜ்ஜியமும், பரலோக ராஜ்ஜியமும்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,164      💚 ஏப்ரல் 17, 2024 💚 புதன்கிழமை 💚



"தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது." ( 1 கொரிந்தியர் 4 : 20 )

தேவனுடைய ராஜ்ஜியம், பரலோக ராஜ்ஜியம் எனும் இரு அரசாங்கங்களைக் குறித்து நாம் வேதாகமத்தில் வாசிக்கின்றோம். பரலோக ராஜ்ஜியம் என்பது பிதாவின் ராஜ்ஜியம்; அவரது அரசாங்கம். மரித்த பரிசுத்தவான்கள் நுழைந்து வாழக்கூடிய மறுவுலக ராஜ்ஜியம். ஆனால் தேவனுடைய ராஜ்ஜியம் என்பது இந்த உலகத்தில் தேவன் நம்முள்வந்து ஆட்சிசெய்கின்ற ராஜ்ஜியம். 

"தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்." ( லுூக்கா 17 : 20, 21 ) என்று வாசிக்கின்றோம். ஆம், நமக்குள் தேவனுடைய ஆவியானவர் இருந்து செயல்படுவதே தேவனுடைய ராஜ்ஜியம்.

பவுல் அப்போஸ்தலர் காலத்தில் தேவனுடைய ராஜ்ஜியம் என்று கூறியவுடன் பலரும் தேவனுடைய ராஜ்ஜியம் வந்துவிட்டால் நாம் உண்பதற்கும், உடுத்துவதற்கும் இந்த உலக வாழ்வை சுகமாக அனுபவித்து மகிழ்வதற்கும்  அந்தத் தேவனுடைய ராஜ்ஜியம் உதவிடும் என்று எண்ணிக்கொண்டனர். ஆனால் அவையல்ல, மாறாக நீதி, சமாதானம்,  பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷம் இவையே தேவனுடைய ராஜ்யத்தின் அளவுகோல் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். "தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது." ( ரோமர் 14 : 17 )

தேவனுடைய ராஜ்யமானது தேவனைக்குறித்து பேசிக் கொண்டிருப்பதாலோ அவருக்கு ஆராதனைகள் செய்து கொண்டிருப்பதாலோ வராது. மாறாக, பரிசுத்த ஆவியானவரின் பலத்தால், அவர் நம்முள் வந்து செயலாற்றுவதால் நம்முள் வருகின்றது. இதனையே இன்றைய தியான வசனம், "தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது." என்று கூறுகின்றது. 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தனது சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஜெபத்தில், "உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக." ( மத்தேயு 6 : 10 ) என்று ஜெபிக்கச் சொல்லிக்கொடுத்தார். அதாவது புசிப்பும் குடிப்புமற்ற நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமான தேவனுடைய ராஜ்ஜியம் பூமியில் வருவதாக என்று ஜெபிக்கச் சொல்லிக்கொடுத்தார். 

நமது பக்திப் பேச்சுகளாலும் செயல்பாடுகளாலுமல்ல, மாறாக தேவனுடைய பரிசுத்த ஆவியானவரின் பலத்தால் தேவனுடைய ராஜ்யம் நம்மில் உருவாக ஜெபிப்போம்; செயல்படுவோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Monday, April 15, 2024

"கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்"

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,163       💚 ஏப்ரல் 16, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

"கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும், கர்த்தரைத் தேடாமலும், அவரைக்குறித்து விசாரியாமலு மிருக்கிறவர்களையும், இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்." ( செப்பனியா 1 : 6 )


இன்றைய தியான வசனம் எவை நமக்கு சாபமாயிருக்கும் என்று மூன்று காரியங்களைக்குறித்து  பேசுகின்றது. 

1. கர்த்தரைவிட்டுப் பின்வாங்குவது  

2. கர்த்தரைத் தேடாமல் வாழ்வது.

3. அவரைக்குறித்து விசாரியாமல் வாழ்வது.

இந்த மூன்றுவகையினரும் கர்த்தரால் ஆசீர்வாதத்தைப் பெறமுடியாது என்கின்றது இன்றைய வசனம். 

சிலர் ஆவிக்குரிய வாழ்வில் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பார்கள். ஆனால் சில, பல எதிர்மறையான காரியங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டவுடனோ அல்லது பழைய பாவ நாட்டங்கள் இருதயத்தைத் தூண்டுவதாலோ கர்த்தரைவிட்டுப் பின்வாங்கிப்போவார்கள்.  இப்படி "கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்." ( 2 பேதுரு 2 : 20 ) என்கின்றார் அப்போஸ்தலரான பேதுரு. 

மட்டுமல்ல, "அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்." ( 2 பேதுரு 2 : 21 ) என்கின்றார். "நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது." ( 2 பேதுரு 2 : 22 ) என்று வாசிக்கின்றோம்.

இன்னொரு பிரிவினர் கர்த்தரை வாழ்வில் தேடாமலேயே வாழ்பவர்கள். அதாவது இவர்கள் ஆராதனைக் கிறிஸ்தவர்கள். கர்த்தரைத் தேடாமல் உலக ஆசீர்வாதங்களுக்காக ஜெபித்துக்கொண்டிருப்பவர்கள். அவர்களைப் பார்த்து ஆமோஸ் தீர்க்கதரிசி கூறுகின்றார், "கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்" ( ஆமோஸ் 5 : 6 ) ஆம் அன்பானவர்களே, நாம் வெறுமனே ஆலய ஆராதனைகளில் கலந்துகொண்டால் மட்டும் போதாது, தனிப்பட்ட முறையில் தேவனோடு தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள ஆர்வமுடையவர்களாக இருக்கவேண்டியது அவசியம். அப்படிக் கர்த்தரைத் தேடுபவர்கள் பிழைப்பார்கள். அதாவது அவர்கள் பாவ மரண சூழ்நிலைகளுக்குத் தப்புவார்கள். 

நம்மில் பெரும்பாலானவர்கள் இரண்டாம் வகையினர்தான். கடவுளை நம்புகின்றோம், ஆலய ஆராதனைகளில் கலந்துகொள்கின்றோம் ஆனால் கர்த்தரை வாழ்வில் தனிப்பட்ட முறையில் அறியாதவர்களாகவே இருக்கின்றோம். 

மூன்றாவது வகையினர், அவரைக்குறித்து விசாரியாமல் வாழ்பவர்கள். கடவுள் நம்பிக்கையற்றவர்கள். "கடவுள் என ஒருவர் இருந்தால் ஏன் மறைந்துகொண்டிருக்கிறார்? என் முன்னால் வரட்டும் நான் நம்புகின்றேன்" என்பார்கள் இவர்கள்.  வெட்டியாக இருந்து வம்பு பேசுவதைவிட்டு இவர்கள் கடவுளைத் தேடினால் அவரைக் கண்டுபிடிக்கமுடியும். "கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்" ( மத்தேயு 7 : 7 )

அன்பானவர்களே, நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போம்.  கார்த்தரைவிட்டுப் பின்வாங்கியிருந்தால் அவரிடம் மன்னிப்பு வேண்டி அவரோடு ஒப்புரவாவோம்; இரண்டாவது வகையினராக இருந்தால் ஆலய ஆராதனைகள் மட்டுமே போதுமென்று எண்ணாமல் தேவனோடு தனிப்பட்ட உறவினை வளர்க்க முயலுவோம். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் என்றால்  அப்படி ஒருவர் உண்டுமா என்று தேடியாவது பார்ப்போம்; உண்மையாகத் தேடினால் நிச்சயம் அவர் தென்படுவார்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்