- எம். ஜியோ பிரகாஷ்
✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️
ஆதவன் 🌞 824🌻 மே 01, 2023 திங்கள்கிழமை
✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️
"சரீரமுயற்சி அற்பபிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது." ( 1 தீமோத்தேயு 4 : 8 )
வெற்று ஆராதனைக் கிறிஸ்தவர்களுக்கு வேதாகமம் கூறும் அறிவுரைதான் மேற்படி வசனம். இன்று பலரும் தேவனை அரசியல் தலைவனைப்போலவே எண்ணிச் செயல்படுகின்றனர். அரசியல் தலைவனுக்கு அவன் வரும்போது அவனைப் புகழ்ந்து ஆரவாரக் குரலெழுப்பினாலே போதும், அவன் உள்ளம் மகிழுவான். ஆனால் நமது தேவன் அப்படிப்பட்டவரல்ல; அவர் உள்ளான மனித மனங்களைப் பார்கின்றவர். வெற்றுப் புகழ்ச்சிக் கீதங்களும் அல்லேலூயா எனும் அலறல்களும் அவரை மகிழ்ச்சியடையச் செய்யாது.
தேவன் தனது வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பார். நடுங்குகிறவன் என்றால் குளிரால் நடுங்குவதுபோல நடுங்குவதல்ல, கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படியவேண்டுமெனும் அச்ச் உணர்வுடன் செயல்படுவது; பாவம் செய்யக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும்போது தேவனுக்கு அஞ்சி அவற்றில் ஈடுபடாமல் இருப்பது.
சின்னக் கற்பனையோ பெரிய கற்பனையோ என்று பார்க்காமல், தேவன் விரும்பாத எந்தச் செயலையும் செய்யாமல் தவிர்ப்பதையே தேவன் விரும்புகின்றார்.
சவுல் அமெலேக்கியரை எதிர்த்துப் போரிடச் சென்றான். அப்படிச் செல்லும்போது, அமெலேக்கியரை வெற்றிகொள்ளும்போது அவர்களையும் அவர்களது கால்நடைகளையும் அழித்துவிடுமாறு தேவன் சாமுவேல் தீர்க்கத்தரிசி மூலம் சவுலுக்குச் சொல்லியிருந்தார். ஆனால் சவுல் போரில் வெற்றிபெற்றபோது தேவனது வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவில்லை. அவன் தரமான ஆடு மாடுகளை தனக்கென்று உயிரோடு வைத்துக்கொண்டு அற்பமானவைகளையும் உதவாதவைகளையும் அழித்துப்போட்டான்.
சாமுவேல் அதுபற்றி சவுலிடம் கேட்டபோது சவுல், ஆடுமாடுகளில் நலமானவைகளை தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்ததாகக் கூறினான். ( 1 சாமுவேல் 15 : 15 ) அதற்கு மறுமொழியாகவே சாமுவேல், இன்றைய வசனத்தைக் கூறுகின்றார்.
பலர் இன்று சவுலைப்போலவே இருக்கின்றனர். காணிக்கைகளையும், ஆலய காரியங்களுக்கும் ஊழியங்களுக்கு, ஊழியர்களுக்கு, மிஷனரி பணிகளுக்கு அள்ளி வழங்குவதையும் தாராளமாக, பெருமையாகச் செய்கின்றனர். ஆனால் தேவனது வார்த்தை இவர்களது வாழ்வில் செயலாவதில்லை. தாழ்மை, பொறுமை, அன்பு, விட்டுக்கொடுத்தல் என்று எந்த கிறிஸ்தவ பண்புகளும் இவர்களுக்கு இருப்பதில்லை.
கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? தேவனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் ஊழலிலும் லஞ்சத்திலும், அடிதடி அரசியலிலும், கணவன் மனைவி சண்டையிலும் ஈடுபட்டுக்கொண்டு ஞாயிறு ஆராதனையில் உருக்கமுடன் வேண்டுதல் செய்வது, பாடுவது கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ?
ஆவிக்குரிய சபைகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சபைகளிலும்கூட பல விசுவாசிகள் இத்தகைய தேவனுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடுவதைக் காண முடிகின்றது. வாழ்க்கை இத்தகைய மாற்றமில்லாத ஆராதனைகள் தேவனுக்கு ஏற்புடைய ஆராதனைகளல்ல.
"நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிரகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்? இனி வீண்காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்...........உங்கள் சபைக் கூட்டத்தையும் நான் சகிக்கமாட்டேன்." (ஏசாயா - 1 : 12, 13 ) என்கின்றார் கர்த்தராகிய பரிசுத்தர்.
✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️ ஆதவன் 🌞 830🌻 மே 07, 2023 ஞாயிற்றுக்கிழமை ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️
இயேசு கிறிஸ்து இங்கு ஆவிக்குரிய வாழ்வில் தேவ ஊழியர்கள் கடைபிடிக்கவேண்டிய முக்கியமான குணத்தைப்பற்றிக் குறிப்பிடுகின்றார். இது ஊழியர்களுக்குக் கூறப்பட்ட அறிவுரையாக இருந்தாலும் நாம் அனைவருமே வாழ்வில் பின்பற்றவேண்டிய ஒரு பண்பு. அதாவது சில சின்னச் செயல்களைச் செய்துவிட்டு பலரும் அதனைப் பெரிதாக விளம்பரப்படுத்துவதுண்டு. ஆனால் அப்படிச் செய்வது தேவனுக்கு ஏற்புடைய செயலல்ல என்று கிறிஸ்து குறிப்பிடுகின்றார்.
வேலைக்காரனின் பணி தனது எஜமான் கட்டளையிட்டப் பணிகளை செய்து முடிப்பது. எஜமான் எப்போதும் தனது வேலைக்காரனை வேலைக்காரனாகத்தான் பார்ப்பானேத் தவிர அவன் தனக்கு உதவுவதால் அவனைத் தனியாக சிறப்பாகக் கவனிக்கமாட்டான். அதனைத்தான் இயேசு கிறிஸ்து, "உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தை மேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ?" ( லுூக்கா 17 : 7 ) என்று கூறுகின்றார்.
மேலும், "தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு உபசாரஞ்செய்வானோ? அப்படிச் செய்யமாட்டானே." ( லுூக்கா 17 : 9 ) ஆம் வேலைகாரனது வேலை தனது எஜமான் கட்டளையிட்டவைகளைச் செய்து முடிப்பது. "அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள்." ( லுூக்கா 17 : 10 ) அதாவது நாம் தேவனது ஊழியங்களுக்காகச் செய்யும் செயல்கள் குறித்து நாம் பெருமைப்பட ஒன்றுமில்லை. அது நமது கடமை. அதற்காகவே தேவன் நம்மை நியமித்துள்ளார்.
இதில் நாம் கவனிக்கவேண்டியது ஒன்று உண்டு. அதாவது வேலைக்காரன் செய்த செயல்களுக்குக் கைமாறாக எஜமான் ஒன்றும் கொடுக்காமல் விட்டுவிடமாட்டான். மாறாக, அவனுக்கென்று நியமிக்கபட்டக் கூலியைக் கொடுப்பான். அதாவது நியமிக்கப்பட்ட பணியை வேலைக்காரன் செய்வது அவனது கடமை. அதற்கானக் கூலியைக் கொடுப்பது எஜமான்.
ஆனால் நமது பரலோக எஜமான் தனது ஊழியர்களை மதிப்போடு நடத்துகின்றார். "ஒருவன் எனக்கு ஊழியம்செய்தால் பிதாவானவர் அவனைக் கனம் பண்ணுவார்" (யோவான் 12:26) என்று கூறியுள்ளார். ஆனால் ஊழியக்காரர்கள் நிலைமை இன்று வேறாக இருக்கின்றது. எஜமான் குறிப்பிட்டப் பணியைச் சரியாகச் செய்யாமல் இருந்துகொண்டு வலுக்கட்டாயமாக எஜமானிடம் கூலியைப் பெற முயலுகின்றனர். ஆம், இன்று எஜமான் கூலியைக் கொடுப்பான் எனும் நம்பிக்கையும் இல்லை; எஜமான் விரும்பும் சித்தப்படியான வேலையும் பலர் செய்வதில்லை.
அன்பானவர்களே, ஊழியம் செய்பவர்கள் மட்டுமல்ல, நாம் இன்று வேறு உலக வேலைகள் செய்தாலும் இந்த நல்ல குணம் நமக்கு வேண்டும். செய்யக்கூடிய வேலையை நாம் வாங்கும் சம்பளத்துக்கு வஞ்சனையில்லாமல், நம்மைப் பணியில் அமர்த்தியவருக்கு உண்மையாக செய்யவேண்டியது அவசியம். எனவேதான் அப்போஸ்தலரான கூறுகின்றார், "எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்."( கொலோசெயர் 3 : 24 )
இப்படி உண்மையாய் பணி செய்யும்போது நிச்சயமாக தேவனது பார்வையிலும் மனிதர்களது பார்வையிலும் நாம் மதிப்புமிக்கவர்களாக விளங்குவோம்.
"தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்." ( 1 பேதுரு 5 : 8 )
அப்போஸ்தலனாகிய பேதுரு பிசாசின் குணத்தைப்பற்றி தெளிவாக விளக்குகின்றார். ஆதியில் ஏதேனில் ஆதாம் ஏவாளைக் கவிழ்த்துப்போட்ட பிசாசு தனது தந்திரங்களை இன்னும் நிறுத்தவில்லை. பெருமையினால் தான் இழந்துபோன பரலோக இன்பத்தை மனிதர்கள் அனுபவித்து விடக்கூடாது என்பதில் அவன் வைராக்கியமாக இருக்கின்றான். இதனால்தான் கர்ஜிக்கிற சிங்கம் போல சுற்றித்திரிகின்றான்.
இயேசு கிறிஸ்து உலகினில் வந்து பாடுபட்டு மரித்து உயிர்த்தபோது பிசாசின் தலையை நசுக்கினார். அதனால் தலை நசுக்கப்பட்ட ஆதி சர்ப்பம் இப்போது வலு இழந்தவனாக இருக்கிறான். தேவனுக்கு கீழ்ப்படிந்த ஒரு வாழ்க்கை வாழும்போது சிங்கம் போன்ற பிசாசு நம்மைவிட்டு ஓடிப் போவான்.
"ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்." ( யாக்கோபு 4 : 7 )
ஆனால் மனிதர்கள் நாம் பெரும்பாலான வேளைகளில் இந்த வசனத்துக்கு மாறி நிற்கின்றோம். பிசாசைக் கண்டு பயந்து ஓடுகின்றோம் ஆனால் பாவத்துக்கு எதிர்த்து நிற்க முயன்று தோல்வியடைந்து பாவத்தில் விழுகின்றோம். காரணம் நாம் பல பாவ காரியங்களைப் பாவம் என்று எண்ணுவதில்லை. பிசாசு நமது மனதை மயக்கி வைத்துள்ளான். "இதெல்லாம் பெரிய பாவமா?" எனும் எண்ணத்தை நம்மில் விதைப்பதே பிசாசுதான்.
எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலை பாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்". ( யோவான் 8 : 44 )
இந்தப் பிசாசை எதிர்த்து நிற்கக்கூடிய வல்லமையையும் அதிகாரத்தையும் இயேசு கிறிஸ்து நமக்குத் தந்துள்ளார். போர் செய்பவன் எப்படித் தன்னைப் பாதுகாத்திட சில கவசங்களையும் எதிரியைத் தாக்கிட சில ஆயுதங்களையும் வைத்திருப்பானோ அதுபோல நமக்கும் தேவன் சில பாதுகாப்புக் கவசங்களையும் ஆயுதங்களையும் தந்துள்ளார். இதனைப் பவுல் அடிகள்,
"நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்". ( எபேசியர் 6 : 11 ) "ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்" ( எபேசியர் 6 : 13 ) என்று கூறுகின்றார். அவை என்ன கவசங்கள், ஆயுதங்கள் ?
சத்தியம் என்னும் கச்சை, நீதியென்னும் மார்க்கவசம், சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை, விசுவாசமென்னும் கேடகம் , இரட்சணியமென்னும் தலைச்சீராய், தேவவசனமாகிய ஆவியின் பட்டயம் ( எபேசியர் 6 : 14-17 )
மேற்குறிப்பிட்ட பாதுகாப்புக் கவசங்களையும், போர் ஆயுதங்களையும் நாம் கையாண்டால் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரியம் பிசாசு நம்மை விட்டு ஓடுவான்.
இந்தக் கவசங்களும் ஆயுதங்களும் நம்மிடம் எப்போதும் இருக்கின்றதா என்பதை நாம் உறுதி செய்து கொள்ளவேண்டும். அன்பானவர்களே பிசாசுக்கு எதிர்த்து நிற்கும் பலத்துடன் வாழ்ந்து ஆவிக்குரிய வாழ்வில் வெற்றி பெறுவோம்.