Sunday, November 17, 2024

சங்கீதம் 71 : 1

 'ஆதவன்' 💚நவம்பர் 25, 2024. 💚திங்கள்கிழமை         வேதாகமத் தியானம் - எண்:- 1,387


"கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும்." ( சங்கீதம் 71 : 1 )

நாம் வாழ்வில் சிறுமை அடையும்போது நமது உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் வெட்கமடைந்து போகின்றோம். அவர்களோடு நம்மால் சகஜமாக பழகமுடிவதில்லை.  இதற்குக் காரணம் ஒன்று நமது மனநிலை இன்னொன்று நமது சிறுமையைப்பார்த்து மற்றவர்கள் நம்மை அற்பமாக எண்ணுவதும் நடத்துவதும். சிலர் வெளிப்படையாகவே சிறுமையானவர்களை அற்பமாக நடத்துவதுண்டு. சிலவேளைகளில் நமது பிள்ளைகளின் வாழ்க்கையை; அவர்களது வேலைவாய்ப்பற்ற நிலைமையை அல்லது அவர்களது திருமணத் தோல்விகளைக் குறிப்பிட்டு நம்மை வெட்கப்படும்படியான பேச்சுக்களை நாம் கேட்க நேரிடும்.  

இத்தகைய அற்பமடையும் சூழ்நிலை இன்றைய சங்கீத ஆசிரியருக்கும் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் கூறுகின்றார், "தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்து பிடியுங்கள்; அவனை விடுவிப்பார் இல்லை என்கிறார்கள்." ( சங்கீதம் 71 : 11 ) ஆம், இவனது வாழ்க்கை இவ்வளவுதான்; இனி இவன் முன்னேறப்போவதில்லை என்று கூறிக்கொள்கின்றனர். 

ஆனால் இத்தகைய சிறுமையடைந்தவர்களைப் பார்த்துத் தேவன் கூறுகின்றார், "உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்" ( ஏசாயா 61 : 7 ) ஆம் அன்பானவர்களே, தேவனையே நாம் சார்ந்து வாழும்போது நமது வெட்கத்துக்குப் பதிலாக இரண்டு மடங்கு பலனும் மகிழ்ச்சியும் நமக்குத் தேவன் தருவார். இன்று நீங்கள் இப்படி வெட்கப்பட்டு மற்றவர்களைவிட்டுத் தனித்து வாழ்கின்றீர்களா? கவலைபடாதிருங்கள்.

அப்போஸ்தலரான பவுல் அடிகளுக்கு இந்த நம்பிக்கை அதிகமாக இருந்தது. அந்த நம்பிக்கையில் அவர் கூறுகின்றார், "நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன்..." ( 2 தீமோத்தேயு 1 : 12 ) ஆம், நாம் விசுவாசித்திருக்கின்றவர் யார் என்பது நமக்குத்தெரியும். அவரும் நம்மைப்போல ஒடுக்கப்பட்டும் வெட்கப்பட்டும் அவமானத்துக்கும் உள்ளானவர்தான். அவருக்கு நமது நிலைமை நன்கு தெரியும். 

"அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; .." ( ஏசாயா 53 : 3 ) புறக்கணிக்கப்படும் நம்மைவிட்டுச் சிலர் தங்கள் முகங்களைத் திருப்பிக்கொள்வதுபோல நமது ஆண்டவராகிய இயேசுவை அவரது அற்பமான நிலையில் கண்டவர்கள் முகங்களைத் திருப்பிக்கொண்டனர்.  

"அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்." ( ஏசாயா 53 : 7 )

ஒடுக்கப்பட்டு வெட்கமடையும்போது நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப்போல அமைதியாக நம்பிக்கையுடன் இருப்போம்.  நமது வெட்கப்படுதல் நிரந்தரமல்ல; காரணம், நாம் விசுவாசிக்கிறவர் இன்னார்  என்று அறிவோம்.  அவர் ஒருபோதும் நம்மை வெட்கத்திலேயே அமிழ்ந்துபோக விடமாட்டார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                    

Saturday, November 16, 2024

கலாத்தியர் 3:29

 'ஆதவன்' 💚நவம்பர் 24, 2024. ஞாயிற்றுக்கிழமை      வேதாகமத் தியானம் - எண்:- 1,386


"நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள்". (கலாத்தியர் 3:29)

சுதந்திரவாளி,  சுதந்திரம் எனும் வார்த்தைகளை நாம் வேதாகமத்தில் பல இடங்களில் வாசிக்கின்றோம். இது முறையே உரிமையுடையவன், உரிமை எனும் அர்த்தத்தில் கூறப்பட்டுள்ளது. இன்றைய தியான வசனம் கூறுகின்றது, நாம் கிறிஸ்துவுக்கு உரிமையுடையவர்களாக இருப்போமானால் நாமே ஆபிரகாமின் சந்ததி. வாக்குத்தத்தங்களுக்கு உரிமையுள்ளவர்கள். 

ஆபிரகாம் தேவனை விசுவாசித்தார்  அதுவே அவருக்கு நீதியாக எண்ணப்பட்டது. ஆம் அன்பானவர்களே, தேவன் நமது நீதிசெயல்களைப்பார்த்து நம்மை இரட்சிப்பதில்லை. மாறாக அவர்மேல்கொள்ளும் விசுவாசத்தால் நாம் இரட்சிக்கப்படுகின்றோம். "அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக." ( கலாத்தியர் 3 : 6, 7 )

கிறிஸ்தவ மார்க்கமே விசுவாச மார்க்கம்தான். கிறிஸ்துவின்மேல் நாம் கொள்ளும் விசுவாசமே நம்மை மீட்படையச் செய்கின்றது. மட்டுமல்ல, தேவனுடைய வாக்குத்தத்தங்கள் அனைத்தும் ஆபிரகாமுக்குப் பலித்ததுபோல கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொள்ளும் நமக்கும் பலிக்கின்றது. "................................அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படி வருகிறது." ( ரோமர் 4 : 16 ) என்று வாசிக்கின்றோம். 

எனவேதான் இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள்" என்று. நாம் கிறிஸ்துவுக்கு உரியவர்களாகும்போது நாமே ஆபிரகாமின் சந்ததியாக இருக்கின்றோம். மட்டுமல்ல, அந்த வாக்குறுதியின்படி நாம் உரிமைக் குடிமக்களாகின்றோம். 

அடிமைக்கும் உரிமைக் குடிமகனுக்கும் வித்தியாசமுண்டு. அடிமைகளாக நாம் இருப்போமானால் கிறிஸ்துவிடம் நமக்கு உரிமைகள் எதுவும் இல்லாதவர்களாக இருப்போம். "அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது." ( கலாத்தியர் 4 : 30 )

நாம் அடிமைகளாக புறம்தள்ளப்படாமல் இருக்கவேண்டுமானால் நாம் விசுவாசத்தால் கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு உரிமையுள்ளவர்களாக மாறவேண்டியது அவசியம். நாம் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருப்போம். எனவே கிறிஸ்துவின்மேல் பூரண விசுவாசமுள்ளவர்களாக வாழ்வோம். பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவரது வாக்குறுதிகளுக்கு உரிமையுள்ளவர்களாக மாற முயலுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்      

Thursday, November 14, 2024

யோவான் 4 : 42

 'ஆதவன்' 💚நவம்பர் 23, 2024. 💚சனிக்கிழமை              வேதாகமத் தியானம் - எண்:- 1,385


"அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்." ( யோவான் 4 : 42 )

இன்று கிறிஸ்துவை விசுவாசிக்கின்றோம் என்று கூறிக்கொள்ளும் பலரும் பொதுவாக இயேசு கிறிஸ்துவின் அற்புதங்களையே பெரிதாகக் கூறிக்கொண்டு வாழ்கின்றனர். அன்றும் இதுபோலவே அவரதுபின்னே  சென்ற திரளான மக்களில் பலரும் அவர் செய்த அற்புதங்களைப் பார்க்கவும் அனுபவிக்கவுமே சென்றனர். எனவே அவர்களில் பலரும் அவரை ஆத்தும இரட்சகராக கண்டுகொள்ள முடியவில்லை. 

ஆனால் இதற்கு மாறாக, அவரது அற்புதங்களையல்ல, அவரது வாயின் வார்த்தைகளை நாம் வாசித்து உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இரட்சிப்பு அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும். இப்படியே சமாரியா மக்கள் அவரை உலக இரட்சகராக அறிந்துகொண்டனர். அதனையே அவர்கள் இன்றைய தியான வசனத்தில் "அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம்." என அறிக்கையிடுகின்றனர். அதாவது, அற்புதங்களைக் கண்டு அல்ல மாறாக, அவருடைய உபதேசத்தைக் கேட்டு அறிந்துகொண்டோம் என்கின்றனர்.   

யூதர்கள் சமாரியர்களை அற்பமாக, தீண்டத்தகாதவர்களாக எண்ணினார்.  ஆனால் அந்தச் சமாரியர்கள்தான்  இயேசுவின் வார்த்தைகளை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு அவரை உலக இரட்சகராகக் கண்டுகொண்டனர். ஆனால் அவரது வல்ல செயல்களைக் கண்டும் அவரது வார்த்தைகளைப் புறக்கணித்த  யூதர்களில் பலரும் அவரைக் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் தன்னை நம்பவேண்டும் என்பதற்காகவே இயேசு கிறிஸ்து அவர்கள் மத்தியில் வல்ல செயல்கள் பல செய்தார். 

நான் சொல்வதை நம்புங்கள் அல்லது நான் செய்யும் வல்ல செயல்கள் அற்புதங்களைக் கண்டாவது என்னை நம்புங்கள் என்றார் அவர். "நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்." ( யோவான் 14 : 11 ) என்றார். 

ஆம் அன்பானவர்களே, நாம் வெறுமனே இயேசு கிறிஸ்துவிடம் அற்புதங்களையும் அதிசயங்களையும் எதிர்பார்த்து அவரிடம் வருவதைவிட அவரது வார்த்தைகளை அறியும் ஆர்வமுள்ளவர்களாகவும் அவற்றை முழுவதுமாக ஏற்றுக்கொள்பவர்களுமாகவும் வாழவேண்டியது அவசியம்.  இறுதிநாளில் அவர் தனது வசனத்தின்படியே நியாயம்தீர்ப்பார். "என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்." ( யோவான் 12 : 48 ) என்றார் இயேசு. 

உலக ஆசீர்வாதங்களைக் கண்டு அனுபவிக்க ஓடிய பெரும்பாலான யூதர்களைப்போல அல்லாமல் அவருடைய உபதேசத்தை கேட்டு அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசித்த சமாரியர்களைப்போல நாமும் மாறவேண்டியதே நாம் செய்யவேண்டியது.  அப்போதுதான்  நல்ல சமாரியன் இயேசு என்றும் நம்மோடு இருப்பார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்              

Tuesday, November 12, 2024

"என்னத்திற்காக வந்திருக்கிறாய்?"

 'ஆதவன்' 💚நவம்பர் 22, 2024. 💚வெள்ளிக்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,384


"அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார்." ( மத்தேயு 26 : 49, 50 )

இன்றைய தியான வசனம் கெத்சமெனி தோட்டத்தில் இயேசுவைக் கைதுசெய்ய  பிரதான ஆசாரியனும் மூப்பர்களும் திரளான மக்களும் யூதாஸ்  இஸ்காரியாத்தோடு வந்தபோது நடந்த சம்பவத்தைக் குறிக்கின்றது. 

இந்த யூதாஸ் இயேசு கிறிஸ்துவோடு மூன்றரை ஆண்டுகள் வாழ்ந்தவன்தான்; அவரைபற்றியும் அவர் செய்த அற்புதங்களையும் கண்ணால் பார்த்தவன்தான். இப்போதும் அவன் இயேசுவை வாழ்த்தவே செய்தான், அவரை முத்தமிட்டான்.  இந்தச் சம்பவம் அவன் வெளிப்பார்வைக்கு  இயேசு கிறிஸ்துவோடு வாழ்பவனாக இருந்தாலும்  உண்மையில் அவரோடு வாழவில்லை என்பதையே குறிக்கின்றது. 

இந்த சம்பவங்கள் நம்மை நாமே நிதானித்துப்பார்க்கவும்  நம்மைத் திருத்திக்கொள்ளவும்  அறிவுறுத்துகின்றது. ஆம் அன்பானவர்களே, இந்த யூதாசைபோலவே நம்மில் பலரும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். ஆலய ஆராதனைகளில் பல ஆண்டுகள் கலந்துகொண்டு இயேசு கிறிஸ்துவை அறிந்துள்ளோம் என்று கூறிக்கொள்கின்றோம். யூதாஸ் அவரைப் புகழ்ந்ததுபோல அவரை நமது நாவினால் துதிக்கின்றோம். அவரது சிலுவையை முத்தமிடுகின்றோம். 

ஆனால் இயேசு கிறிஸ்து யூதாஸிடம் கேட்டது போல நம்மிடம், "சிநேகிதனே / சிநேகிதியே  என்னத்திற்காக வந்திருக்கிறாய்?" என்று  கேட்டால் என்ன பதில் கூறுவோம்?  இதுவே நாம் சிந்திக்கவேண்டியது. நம்மில் நூற்றுக்குத் தொண்ணூறு சதவிகித மக்களும் இந்தக் கேள்விக்கு ஏதாவது ஒரு உலக ஆசீர்வாதம் சம்பந்தமான பதிலையே கூறுவார்கள். ஆனால் இந்தக் கேள்விக்கு யூதாஸ் எந்தப்பதிலும் கூறவில்லை. 

நாம் உண்மையில் எதற்காக இயேசு கிறிஸ்துவைத் தேடுகின்றோம்? எதற்காக அவரிடம் வந்து அவரை முத்தம் செய்கின்றோம். உலக ஆசீர்வாதங்களை மட்டுமே நாடி நாம் அவரிடம் வருவோமானால் நாமும் யூதாசைப் போன்றவர்களே. ஆம் அவன் முப்பது வெள்ளிக்காசு கிடைக்கும் என்பதற்காகவே இயேசு கிறிஸ்துவிடம் வந்து அவரை வாழ்த்தி முத்தமிட்டான். நாம் அவனைப்போல அறிவிலிகளாக இருக்கக்கூடாது. 

நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு மீட்பு அனுபவம் பெறவேண்டும் எனும் ஆர்வத்தில் அவரிடம் வருவோமானால் நாம் அவரை வாழ்வில் நம்முள் பெற்று அனுபவிக்கலாம். இல்லாவிட்டால் நாமும் யூதாசைப் போலவே அவரை முத்தமிட்டு நெருங்குகின்றவர்களாகவே இருப்போம். 

"சிநேகிதனே / சிநேகிதியே  என்னத்திற்காக வந்திருக்கிறாய்?" என்று நம் ஒவ்வொருவரிடமும் இயேசு கிறிஸ்து இப்போதும் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                 

செத்த ஈக்களும் சொற்ப மதியீனமும்

 'ஆதவன்' 💚நவம்பர் 21, 2024. 💚வியாழக்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,383

  

"செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளத்தைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்." ( பிரசங்கி 10 : 1 )

பரிமளத்தைலம் இனிமையான நறுமணம் கொண்டது. இன்றும் ஜெருசலேம் திருப்பயணம் செல்பவர்கள் பரிமளத்தைலத்தை வாங்கி வருவதுண்டு. சாதாரண நறுமணப் பொருட்களைவிட பரிமளத்தைலம் வித்தியாசமான நறுமணம் கொண்டது. ஆனால் இந்த நறுமணத்தைலம் அதனுள் ஈக்கள் விழுமானால் கெட்டு நாறிப்போகும். இதனையே பிரசங்கி மதிகெட்டச் செயல் புரிபவனுக்கு ஒப்பிட்டுக் கூறுகின்றார். 

நாம் சிறப்பான பட்டங்கள் பெற்றிருக்கலாம், மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றவர்களாக இருக்கலாம், ஆனால் நாம் மதிகெட்டத்தனமாக ஒரு சிறிய செயலைச் செய்துவிட்டாலும் அது நமது பெயர் நாறிப்போகச் செய்துவிடும். 

நல்ல பெயரும் புகழும் கொண்ட ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவரைக்குறித்து அறிவேன். அவர் பல பட்டங்கள்  பெற்றவர். மட்டுமல்ல நல்ல இரக்ககுணம் கொண்டவர். பலருக்கும் உதவக்கூடியவர். அந்தக் கிராமத்தில் அவருக்கு நல்ல பெயர் இருந்தது. அனைவரும் அவரை மதித்து ஊரில் நடக்கும் எந்த கூட்டத்திலும் அவரை முன்னிலைப்படுத்தி வந்தனர். இந்தப்  பேராசிரியர் நமது ஊருக்குக் கிடைத்தது ஒரு வரப்பிரசாதம் என்று பெருமையாகக் கூறிக்கொண்டனர். ஆம், அந்தப் பேராசிரியரின் பெயர் உண்மையிலேயே பரிமளத்தைலம்போல நறுமணமானதாக இருந்தது. 

ஆனால் ஏதோ ஒரு சூழலில் அந்தப் பேராசிரியர் அந்த ஊரிலுள்ள கணவனை இழந்த ஒரு பெண்ணிடம் ஒருமுறை தகாத உறவு கொண்டுள்ளார். அதனை அவர் யாருக்கும் தெரியாது என்று எண்ணிக்கொண்டிருந்தார். ஆனால் அந்தப் பெண் கர்ப்பமடைந்துவிட்டார். அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது அவள் தனது கர்ப்பத்துக்கு இவர்தான் காரணம் என்று இந்தப் பேராசிரியரைக் கைகாட்டினார்.  ஊர் மக்களால் அதனை நம்ப முடியவில்லை. இவரா?  ..இவரா? என்று வாய் பிளந்து கூறினர்.

அந்தப் பேராசிரியரால் இந்த அவமானத்தைத் தாங்கமுடியவில்லை. திருமணமான மகன், மகள் அவருக்கு உண்டு. பேரக்குழந்தைகள் உண்டு. இதுவரை அவரது மருமக்கள் அவரைக்குறித்து  பெருமைபட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் இன்று எல்லோரும் அவரை அற்பமாகப் பார்த்தனர். அவரால் அவர்களை எதிர்கொள்ள முடியவில்லை; அவரால் இந்த அவமானத்தைத் தாங்கமுடியவில்லை. அன்று இரவோடு இரவாக தற்கொலைசெய்து தனது வாழ்வை முடித்துக்கொண்டார். 

செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளத்தைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும் என இன்றைய தியான வசனம் சொல்வதுபோல சொற்பமான மதிகெட்டச் செயல் அந்தப் பேராசிரியரை அழிவுக்குநேராகக் கொண்டு சென்றுவிட்டது.  

ஆம் அன்பானவர்களே, இத்தகைய மதிகேடுகள் நமது வாழ்வில் வந்துவிடாமல் நம்மை நாம் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். நமது சுய முயற்சியால் நல்லவராக வாழ முயலும்போது இத்தகைய மதிகேடுகள் நமது வாழ்வில் வந்துவிடலாம். எனவே நாம் தேவனையும் அவரது ஆவியின் வல்லமையையும் நம்பி வாழவேண்டியது அவசியம். சொற்ப மதியீனமும் நம்மைக் கெடுக்காமல் அவர் மட்டுமே நம்மைக் காப்பாற்றி நடத்த முடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                  

Sunday, November 10, 2024

வெள்ளியும் பொன்னும் விடுவிக்காது

 'ஆதவன்' 💚நவம்பர் 20, 2024. 💚புதன்கிழமை             வேதாகமத் தியானம் - எண்:- 1,382

 

"கர்த்தருடைய சினத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களை விடுவிக்கமாட்டாது; அவர்கள் அதினால் தங்கள் ஆத்துமாக்களைத் திருப்தியாக்குவதும் இல்லை," ( எசேக்கியேல் 7 : 19 )

கர்த்தருடைய இறுதி நியாயத்தீர்ப்பு நாளையே இன்றைய தியான வசனத்தில் சினத்தின் நாள் என்று கூறப்பட்டுள்ளது. அந்த நியாயத்தீர்ப்பு நாளில் நாம் உலகினில் சேர்த்துவைத்துள்ள நமது செல்வங்கள் நம்மை விடுவிக்காது என்கின்றார் கர்த்தர். 

இந்த உலக வாழ்க்கையில் நாம் சேர்த்து வைத்துள்ள செல்வத்தைக்கொண்டு உலகிலுள்ள அநியாய நீதிபதிகளை விலைக்கு வாங்கிவிடலாம். இன்று பல ஊழல் அரசியல் தலைவர்கள் அதனைத்தான் செய்கின்றார்கள். பெரிய பெரிய ஊழல்வாதிகளெல்லாம் நீதிபதிகளுக்கு கையூட்டுக் கொடுத்து எளிதில் விடுதலைப்பெற்று சிறைக்குத் தப்பிவிடுகின்றனர். 

ஆனால் சத்திய நியாயாதிபதி கிறிஸ்துவின் முன்னால் நாம் நிற்கும்போது இப்படிச் செய்து தப்பிவிடமுடியாது. ஆம், அவரது சினத்தின் நாளிலே நமது வெள்ளியும் பொன்னும் நம்மை விடுவிக்கமாட்டாது; அவைகளால் அப்போது நமது  ஆத்துமா திருப்தியாக்குவதும் இல்லை. காரணம் தேவன் கைக்கூலி வாங்குபவரல்ல. "உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம்பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல." ( உபாகமம் 10 : 17 )

நாம் நியாயத்தீர்ப்பு நாளில் தப்பவேண்டுமானால் உலகத்தில் பொன்னையும் வெள்ளியையும் சேகரித்து வைப்பதைவிட நாம் செய்யும் நற்செயல்கள்மூலம், பரிசுத்த வாழ்க்கையின் மூலம் பரலோகத்தில் நமது செல்வத்தைச் சேர்த்துவைக்கவேண்டும். எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார்,  "பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை." ( மத்தேயு 6 : 19, 20 )

ஆம், அன்பானவர்களே, கோடி கோடியாக சேர்த்துவைக்கும் பொருள் இந்த உலகத்தில் வேண்டுமானால் நமக்குக் கைகொடுக்கலாம் ஆனால் தேவனுக்குமுன் நாம் நிற்கும்போது அவற்றால் ஒரு பயனும் இல்லை. இயேசு கிறிஸ்து கூறினார், "பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல." ( லுூக்கா 12 : 15 )

பூச்சியும் துருவும் அழிக்காத, திருடர்களால் திருடமுடியாத பரலோக  செல்வத்தை நாம் சேர்த்துவைக்கும்போது அவையே நமது இறுதி நியாயத்தீர்ப்பு நாளில் நமக்குக் கைகொடுக்கும். அப்போது நரகத்துக்குத் தப்பும் நமது ஆத்துமாவும் திருப்தியாகும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                                      

Saturday, November 09, 2024

தந்திரமானக் கட்டுக்கதையல்ல

 'ஆதவன்' 💚நவம்பர் 19, 2024. செவ்வாய்க்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,381


"நாங்கள் தந்திரமானக்  கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்." ( 2 பேதுரு 1 : 16 )

கிறிஸ்தவர்களாக இருந்தாலும்கூட பலர் வேதத்தில் கூறப்பட்டுள்ள பல சம்பவங்களை உறுதியாக நம்புவதில்லை. சில  குருக்கள்கூட பல வேதாகமச் சம்பவங்களுக்கும் இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்களுக்கும் வேறு அர்த்தம் கற்பிக்கின்றனர். 

விடுதலை இறையியல் என்ற தப்பறையில் மூழ்கி வாழும் குருவானவர் ஒருவர் பிரசங்கத்தில் இயேசு அப்பங்களைப் பலுக்கச்செய்தது அற்புதமல்ல; மாறாக,  அது  பகிர்தலை விளக்க கூறப்பட்ட சம்பவம் என்று கூறினார். அன்று இயேசு பிரசங்கித்ததைக் கேட்டுக்கொண்டிருந்த பலரிடமும் அப்பமும் மீன்களும் இருந்தன. ஆனால் எவரும் உணவு இல்லாத மற்றவர்களோடு அதனைப் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. ஆனால் முதலில் அந்தச் சிறுவன் தன்னிடம் இருந்ததைக் கொடுத்தவுடன் மற்றவர்களும் தங்களிடம் இருந்ததைக் கொடுக்க முன்வந்தனர். இப்படிச் சேகரித்த அப்பங்களை 12 கூடைகளில் நிரப்பினார்கள். இதுபோலவே தங்களிடம்  குவிந்து கிடக்கும் செல்வத்தை  அனைவரும் பகிர்ந்துகொடுத்தால்  நாட்டில் இல்லாமை நீங்கிவிடும் என்று பிரசங்கித்தார். 

இப்படி முட்டாள்த்தனமாக கிறிஸ்தவ குருக்களே பிரசங்கித்தால் விசுவாசி எப்படி இருப்பான் என்று சிந்தித்துப்பாருங்கள். இப்படிப்பட்ட அறிவிலிகளுக்குத்தான், "நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்." என்று இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பேதுரு கூறுகின்றார்.  

தொடர்ந்து இதனை உறுதிப்படுத்த அவர் கூறுகின்றார், "இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்." ( 2 பேதுரு 1 : 17, 18 )

ஆம் அன்பானவர்களே, வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள சத்தியங்களைத் தங்களுக்கு ஏற்பத் திரித்துக் கூறுபவர்கள் ஒருபோதும் சத்தியத்தை அறிந்துகொள்ளமுடியாது. மட்டுமல்ல, இயேசு கூறுகின்றார், "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் இயந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்." ( மத்தேயு 18 : 6 ) என்று. 

வேதாகம சத்தியங்களை எழுதியுள்ளபடி விசுவாசிப்போம். அப்போதுதான் அப்போஸ்தலரான பேதுரு கூறுவதுபோலவும் அவர் கண்டுகொண்டதுபோலவும் தேவனுடைய மகத்துவத்தை நாமும்  கண்ணாரக் காணமுடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்            

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - 2 கொரிந்தியர் 6 : 10 / 2 Corinthians 6:10

" ஆதவன் " தியானம் - 1982 ஜூலை 12, ஞாயிறு 2026       "துக்கப்படுகிறவர்கள் எனப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும...