Monday, October 28, 2024

யாக்கோபு 5 : 7

 'ஆதவன்' 💚நவம்பர் 04, 2024. 💚திங்கள்கிழமை        வேதாகமத் தியானம் - எண்:- 1,366


"இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான்." ( யாக்கோபு 5 : 7 )

நமக்கு எதிராகச் செயல்படும் மக்களுக்கு; அதிகாரத்துக்கு  நாம் எதிர்த்து நிற்காமல் கர்த்தரது நியாயத்தீர்ப்பு வரும்வரை பொறுமையோடு காத்திருக்கவேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகின்றது இன்றைய தியான வசனம்.   எப்படிக் காத்திருக்கவேண்டும் என்பதற்கு விவசாயியை உதாரணமாகக் காட்டுகின்றார் அப்போஸ்தலரான யாக்கோபு.

விவசாயி விதையை விதைத்தவுடன் அதன் பலன் அவனுக்குக் கிடைக்காது. மாறாக அவன் பயிர் விளைவதற்கான பராமரிப்பைச் செய்யவேண்டும். அத்துடன் தேவனது பராமரிப்பும் தேவை. தேவனது பராமரிப்பையே முன்மாரி, பின்மாரி என்று கூறுகின்றார் யாக்கோபு. விதை விதைப்பதற்கு முன்பு மழை பெய்யவேண்டியது அவசியம். அதனையே முன்மாரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல பயிர் வளரும்போது அதற்கு ஏற்றகாலத்தில் நீர் கிடைப்பதற்கும் மழை தேவை. அதுவே பின்மாரி. விவசாயி இந்த இரு மழையையும் எதிர்பார்த்துப்  பொறுமையாகக் காத்திருக்கின்றான்.   

இந்தப் பொறுமை அறுவடைநாளில் அவனுக்கு ஏற்ற பலனைத் தருகின்றது. இன்றைய தியான வசனத்தின் முன்வசனங்களில் அப்போஸ்தலராகிய யாக்கோபு செல்வந்தர்கள் தங்களுக்குக் கீழானவர்களுக்குச் செய்யும்  கேடுகளைக் குறித்துச் சொல்கின்றார். அதாவது "இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது." ( யாக்கோபு 5 : 4 ) என்கின்றார். மேலும் தொடர்ந்து, நீதிமானை அநியாயமாக ஆக்கினைக்குள்ளாகத்  தீர்த்து கொலை செய்தீர்கள் என்கின்றார்.  

இப்படி உங்களுக்கு எதிராகச் செய்யும்  கொடுமைகளை அனுபவிக்கும்போது நீங்கள் ஒரு விவசாயி பொறுமையாக முன்மாரிக்கும் பின்மாரிக்கும் காத்திருப்பதுபோல பொறுமையாகக் காத்திருங்கள் என்கின்றார் யாக்கோபு. "நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே." ( யாக்கோபு 5 : 8 ) ஆம், கர்த்தரின் நாள் சமீபமாக இருக்கின்றது. அவர் வந்து உங்களுக்கு ஏற்ற பலனைத் தருவார். 

அதற்காக எல்லாவற்றுக்கும் நாம் அடிமைகள்போல இருக்கவேண்டுமென்று பொருளல்ல, மாறாக நம்மால் சிலவேளைகளில் நமது எதிர்ப்பை வாயினால் சொல்லக்கூடிய நிலைகூட இல்லாமல்போகலாம். உதாரணமாக, இன்று பல வேளைகளில் நாம் அதிகாரம் கையில் வைத்திருக்கும் ஆட்சியாளர்களை எதிர்த்துப் பேசமுடியாதவர்களாக இருக்கின்றோம்.  இத்தகைய சூழ்நிலைகளில் நாம் மேலே பார்த்த விவசாயியைப்போல பொறுமையாக தேவன் செயல்பட காத்திருக்கவேண்டும். அப்படி நாம் காத்திருக்கும்போது தேவன் நம்மை அப்படியே விட்டுவிடமாட்டார். 

"இதோ, பொறுமையாய் இருந்தவர்களைப் பாக்கியவான்கள் என்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே." ( யாக்கோபு 5 : 11 ) அதாவது அப்படி நாம் காத்திருக்கும்போது யோபு பெற்றதைப்போல ஆசீர்வாதம் நமக்கு நிச்சயம் உண்டு. பதில்பேச முடியாத நெருக்கடியான அநியாயத்துக்கு எதிராகப்  பொறுமையாகக் காத்திருப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்          

விழுந்துவிடாத எச்சரிக்கை

 'ஆதவன்' 💚நவம்பர் 03, 2024. ஞாயிற்றுக்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,365

 

"இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்." ( 1 கொரிந்தியர் 10 : 12 )

ஆவிக்குரிய வாழ்வு நாம் மிகவும் கவனமாக வாழவேண்டிய வாழ்வாகும். நமது வாழ்வு நம்  பார்வைக்குச்  சரியான வாழ்வாகத் தெரியலாம் அதற்காக நாம் முற்றிலும் சரியானவர்கள் என்று எண்ணிவிடக்கூடாது. நமது ஆவிக்குரிய வாழ்வை நாமே சுய சோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.  இதனாலேயே அப்போஸ்தலரான பவுல், "தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்." என்று கூறுகின்றார். நிற்பதுபோலத் தெரிந்தாலும் ஒருவேளை நாம் விழுந்து விடலாம், அல்லது விழுந்து கிடக்கலாம். 

இதனை அப்போஸ்தலரான பவுல் இஸ்ரவேலரின் வாழ்வைக்கொண்டு நமக்கு விளக்குகின்றார். எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேலர் அனைவரும் செங்கடல் நீரினால் ஞானஸ்நானம் பெற்றார்கள், ஞான போஜனத்தைப் புசித்தார்கள்,  ஞானக் கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள் அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள். ( 1 கொரிந்தியர் 10 : 5 ) என்கின்றார். 

இதுபோலவே இன்று பாவ எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற நாம் ஞானஸ்நானம் பெற்றிருக்கலாம், கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் பானம் செய்பவர்களாக இருக்கலாம் ஆனால் அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை என்று கூறியுள்ளபடி தேவன் நம்மிடமும் பிரியமில்லாதவராக இருக்கலாம். 

இஸ்ரவேலரிடம் தேவன் பிரியமாய் இல்லாமல் இருக்கக் காரணம் அவர்களது இச்சை, புசித்தல், குடித்தல், (அதாவது உணவுமீது அதிக ஆசை - உலக ஆசைகள் என்று நாம் பொருள்கொள்ளலாம் ) விக்கிரக ஆராதனை, வேசித்தனம், கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்தல், முறுமுறுத்தல் என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பவுல். "இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது." ( 1 கொரிந்தியர் 10 : 11 ) என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். அன்பானவர்களே, தயவுசெய்து வேதாகமத்தில் 1 கொரிந்தியர் 10 : 1- 12 வசனங்களை வாசித்துத் தியானியுங்கள். 

இஸ்ரவேலர் அதிகமான பேர்களிடத்தில் தேவன் பிரியமாயில்லாமலிருக்கக் காரணமான  மேற்படி கூறப்பட்ட இச்சை, புசித்தல், குடித்தல், விக்கிரக ஆராதனை, வேசித்தனம், கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்தல், முறுமுறுத்தல் போன்ற குணங்கள்  நம்மிடம் இருக்குமானால் நாமும் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்துவின் அப்பத்தையும் இரத்தத்தையும் பானம் செய்பவர்களாக இருந்தாலும் நிற்கிறவர்களல்ல, விழுந்துவிட்டவர்களே. 

எனவே மேற்படி தகாத செயல்கள் நம்மிடம் இருக்குமானால் நம்மைத் திருத்திக்கொள்ள முயலுவோம். தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன் என்று பவுல் அப்போஸ்தலர் கூறுகின்றபடி நாமும் எச்சரிக்கையாக இருப்போம். கிறிஸ்துவை மட்டுமே வாழ்வில் நேசிப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                       

Sunday, October 27, 2024

நம்மை நம்பப்பண்ணின வசனம்

 'ஆதவன்' 💚நவம்பர் 02, 2024. 💚சனிக்கிழமை            வேதாகமத் தியானம் - எண்:- 1,364

"நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும். அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது." ( சங்கீதம் 119 : 49, 50 )

தேவனுக்குள் விசுவாசம்கொண்டு ஆவிக்குரிய வாழ்க்கை வாழும்போது தேவன் நமக்குச் சில வார்த்தைகளைத்  தருவார். அவை அந்தச் சூழ்நிலையில் நாம் நம்பமுடியாதவையாக இருந்தாலும் அவர் அவற்றை நிச்சயமாக நமது வாழ்வில் நிறைவேற்றுவார். ஆனால் தேவன் நமக்கென்று ஒரு வாக்குறுதியைத் தரும்போது பொறுமையாகக் காத்திருக்கவேண்டியது அவசியம். காரணம் தேவன் கூறிய உடனேயே அதனை நிறைவேற்றுவதில்லை. ஆனால் அவற்றை நாம் நம்பவேண்டும். 

ஆபிரகாமுக்குத்தேவன் அளித்த வாக்குறுதி நிறைவேற அவர் 25 ஆண்டுகள் காத்திருக்கவேண்டியிருந்தது. "அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன்" ( ரோமர் 4 : 17 ) என்று கூறினாலும் சூழ்நிலை நம்பமுடியாத ஒன்றாக இருந்தது. ஆனால் ஆபிரகாம் தேவனை நம்பினார். "அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்." ( ரோமர் 4 : 19 ) என்று வாசிக்கின்றோம். 

மட்டுமல்ல, இன்றைய தியான வசனம் கூறுவதுபோல, "நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும்." என்று நாம் தேவனிடம் விண்ணப்பம் செய்யவேண்டியதும் அவசியம். வேதனையோடு நாம் ஜெபிக்கும்போது "அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது." என்று இன்றைய தியான வசனம் கூறுவதுபோல நமது இக்கட்டு, சிறுமையான காலங்களில் அந்த வாக்குறுதிகளே நமக்கு ஆறுதலாகவும் நம்மை உயிர்ப்பிப்பதாகவும் இருக்கும்.  

உலக ஆசீர்வாதத்துக்குரிய வாக்குத்தத்தங்கள் மட்டுமல்ல, மேலான ஆவிக்குரிய வாக்குத்தத்தங்களும் நமக்கு உண்டு. இதனையே அப்போஸ்தலரான பேதுரு, "இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது." ( 2 பேதுரு 1 : 4 ) என்று கூறுகின்றார். 

கிறிஸ்துவைப்போல நாம் திவ்ய சுபாவம் உள்ளவர்களாக வேண்டும் எனும் வாக்குத்தத்தத்தை நாம் உறுதியாக நம்பி ஏற்றுக்கொள்ளும்போது பேதுரு கூறுவதுபோல நாம் இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி வாழமுடியும்;  பரிசுத்தமாக முடியும். நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும் என்று ஜெபிப்போம். அதுவே நமது சிறுமையில் (உலக சிறுமையோ ஆவிக்குரிய சிறுமையோ) நமக்கு ஆறுதலாகவும் நம்மை உயிர்ப்பிப்பதாகவும் இருக்கும். 

தேவ வாக்குறுதிகளை உறுதியாக நம்புவோம்; ஏற்றுக்கொள்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

Saturday, October 26, 2024

எது ஆவிக்குரிய ஆராதனை?

தேவச் செய்தி - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

விக்குரிய ஆராதனை என்றால் என்ன என்பதனைப் பலரும் சரியாகப் புரிந்து கொள்ளாததால் ஆவிக்குரிய சபைகள் என்று கூறப்படும் சபைகளுக்குச் செல்லும் பலர் தங்களை மட்டும்  ஆவிக்குரிய ஆராதனை செய்பவர்களாகவும் மற்றவர்கள் அனைவரும் தேவன் விரும்பாத ஆராதனை செய்வதாகவும்  எண்ணிக்கொள்கின்றனர். இன்று ஆவிக்குரிய சபைகள்  என்று கூறப்படும் பல சபைகளில் பரிசுத்த ஆவியோடு தொழுதுகொள்கிறோம் என்று கூறி அலறி ஆர்ப்பாட்டம் செய்வதை நாம் காணலாம். ஆனால் இவர்களில் பலரும் ஆராதனை முடிந்து வெளியுலக வாழ்க்கையில் தேவனை அறியாத மக்களைவிட அவலட்சணமான குணங்களுள்ளவர்களாக காணப்படுகின்றனர். 

ஆராதனை செய்த இவர்கள் மற்றவர்களைவிட நல்லவர்களாக அல்லவா இருக்கவேண்டும்? அப்படியானால் ஆலய ஆராதனையில் இவர்களைத் துள்ளிக் குதிக்கவைத்த ஆவி எது?  பரிசுத்த ஆவி, "பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்."( யோவான் 16 : 8 ) என்றல்லவா கூறப்பட்டுள்ளது? "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்" ( யோவான் 16 : 13 ) என்று கூறப்பட்டுள்ளதே? அப்படியானால் ஆராதனை முடிந்து வெளியே வந்தவுடன் மற்றவர்களுக்கு எதிராகச் செயல்படுவதும், உண்மையற்ற வாழ்க்கை வாழ்வதும் ஏன்? 

ஆனால் என்ன இருந்தாலும் கிறிஸ்தவம் ஆவிக்குரிய ஆராதனையையே வலியுறுத்துகின்றது என்பதே நிஜம். இயேசு கிறிஸ்து கூறினார், "தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்." ( யோவான் 4 : 24 ) சமாரியா பெண்ணிடம் பேசும்போது இயேசு கிறிஸ்து இந்த மாபெரும் சத்தியத்தை வெளிப்படுத்தினார். 

மேலும், யூதர்கள் எருசலேமிலுள்ள ஆலயத்திலே தான் தேவனைத் தொழுதுகொள்ளவேண்டுமென நம்பினர். அவர்கள் தேவனை ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இருப்பவர் என்றே நம்பினர். மேலும் தேவனைத் தொழுதுகொள்ள சில முறைமைகளையும் வைத்திருந்தனர். அந்த நம்பிக்கையையும் முறைமைகளையும் கடைபிடிப்பதுதான் ஆவிக்குரிய ஆராதனை என்று எண்ணிக்கொண்டனர். 

குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட முறைமைகளின்படி மட்டுமே தேவனை ஆராதிக்கமுடியும் என்று யூதர்கள் நம்பினர். ஆனால் அந்தச் சமாரிய பெண்ணிடம் பேசும்போது இயேசு கிறிஸ்து, " ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது." ( யோவான் 4 : 21 ) என்றார்.

அதாவது நாம் ஆவிக்குரிய ஆராதனை செய்யவேண்டும், மட்டுமல்ல அந்த ஆராதனையை நாம் எந்த இடத்திலும் செய்யலாம் என்று பொருள்.  இன்றும்கூட கிறிஸ்தவர்கள் ஆலயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திருயாத்திரை செல்கின்றனர். பல்வேறு வழிபாட்டு முறைமைகளைக் கைக்கொள்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், தேவன் குறிப்பிட்ட ஆலயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துத் தனது அருளை அங்கு மட்டும் பொழிபவரல்ல. இவற்றைத் தெளிவாகப்  புரிந்துகொள்ள நாம் ஆவிக்குரிய ஆராதனை என்றால் என்ன என்பதனைப் புரிந்துகொண்டால்தான் முடியும்.  

"தேவனை நாம் ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளவேண்டும்." என்று இயேசு கிறிஸ்துக் கூறுவதன் பொருள்தான் என்ன?

ஆவியோடும் என்பது இரண்டு அர்த்தங்களை உடையது. ஒன்று , நமது உள்ளான ஆத்துமத்தோடு (ஆத்தும அன்போடு) தேவனைத் தொழுதுகொள்ளவேண்டும் என்று பொருள். இரண்டாவதாக, பரிசுத்த ஆவியோடு தொழுதுகொள்ளவேண்டும். அதாவது, பரிசுத்த ஆவியின் குணங்களோடு அல்லது கனிகளோடு. இன்று ஆவிக்குரிய சபை என்று கூறப்படும் சபைகளில் பரிசுத்த ஆவியோடு தொழுதுகொள்கிறோம் என்று கூறி அலறி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அலறுவது பரிசுத்த ஆவியல்ல, ஆவியின் கனிகள் உள்ளவனே பரிசுத்த ஆவியை உடையவன்.

"ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." ( கலாத்தியர் 5 : 22, 23 ) என்று வாசிக்கின்றோம். அதாவது , தேவனைத் தொழுதுகொள்பவன் உள்ளான ஆத்தும அன்போடும், மேலேகுறிப்பிடப்பட்டுள்ள ஆவியின் குணங்களோடும் தேவனைத் தொழுதுகொள்ளவேண்டும் என்பது பொருள்.

இரண்டாவது இயேசு கூறும் வசனத்தில் "உண்மையோடும் தொழுதுகொள்ளவேண்டும்" என்று கூறுகின்றார். உண்மை என்றால் என்ன? தேவனுடைய வசனமே சத்தியம் என்று இயேசு கூறுகின்றார். "உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம். ( யோவான் 17 : 17 ) அதாவது தேவனது வார்த்தைகளை வாழ்வாக்கி அவரைத் தொழுதுகொள்ளவேண்டும். மேலும், வாழ்க்கையில் உண்மையுள்ளவர்களாக இருந்து அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்.

இந்தக் குணங்களோடு தேவனை ஒருவர் எங்கிருந்தபடியும் தொழுதுகொள்ளமுடியும். எனவேதான் இயேசு கிறிஸ்து, "ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது". என்று கூறினார்.

அன்பானவர்களே, ஒருவர் ஆராதனைக்குச் செல்லும் ஆலயத்தை வைத்து ஒருவரை ஆவிக்குரிய நபர் என்றோ அல்லது இவர் ஆவிக்குரிய நபர் அல்ல என்றோ என்று நாம் கருதிவிடக் கூடாது. இயேசு கூறிய அளவுகோல்களை உடையவரே ஆவிக்குரிய முறையில் தேவனைத் தொழுதுகொள்பவர். எனவேதான் "தீர்ப்பிடாதீர்கள்" என்று இயேசு கிறிஸ்து கூறினார். 

மற்றவர்கள் செய்யும் ஆராதனை முறைகளைப்பார்த்து அவர்கள் என்ன ஆராதனைச் செய்கிறார்கள் என்று நாம் ஆராய்ச்சிசெய்யத் தேவையில்லை. இயேசு கிறிஸ்த்துக் கூறிய முறையில் நாம் தேவனைத் தொழுதுகொள்கிறோமா என்று நம்மையே நாம் நிதானித்து அறிந்து நம்மைச் சீர்படுத்திக் கொள்வோம். "இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்." ( 1 கொரிந்தியர் 10 : 12 )  

Wednesday, October 23, 2024

ஏவாளை வஞ்சித்த பாம்பு

 'ஆதவன்' 💚அக்டோபர் 31, 2024. வியாழக்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,362

"ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்." ( 2 கொரிந்தியர் 11 : 3 )

ஆதியில் ஏதேனில் பாம்பானது தனது வஞ்சகமான பேச்சினால் ஏவாளை ஏமாற்றியது. அதாவது, தேவன் கூறிய வார்த்தைகள் பொய்யானவை என்றும், தான் கூறுவதுதான் மெய்  என்றும்  அவளை நம்பச் செய்தது. தோட்டத்தின் நடுவில் இருக்கும் நன்மை தீமை அறியும் மரத்தின் கனியை உண்ணும் நாளில் நீங்கள் சாகவே சாவீர்கள் என்று கர்த்தர் கூறியிருந்தார். 

ஆனால் வஞ்சக பாம்பாகிய சாத்தான், அவளை நோக்கி: "நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது." ( ஆதியாகமம் 3 : 4, 5 ) ஆனால், தேவனது வார்த்தைகளைவிட  பாம்பு கூறியதையே ஏவாள் நம்பினாள்; தேவனது வார்த்தைகளைப் புறக்கணித்தாள். 

அப்போஸ்தலரான பவுல் இந்தச் சம்பவத்தைக்  கிறிஸ்துவின் நற்செய்தி அறிவித்தலோடு ஒப்பிடுகின்றார். அன்று சாத்தான் பாம்பு உருவம்கொண்டு ஏவாளை வஞ்சித்தது. இன்று அதுபோல ஒருவர் வேத வசனங்களுக்கு  தவறான அளித்து அவற்றை உண்மை என விசுவாசிகளை நம்பச் செய்யும்போது மக்களை சாத்தான் போல வஞ்சிக்கிறார் என்று பொருள். "எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால்.......( 2 கொரிந்தியர் 11 : 4 ) என்று கூறுகின்றார். 

அதாவது, வேதம் குறிப்பிடும் கிறிஸ்துவைப் பிரசங்கியாமல், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் உலக ஆசீர்வாதம் நிரம்பி வழியும் என்று மக்களை நம்பச் செய்வது   ஆதியில் ஏதேனில் சாத்தானாகிய பாம்பு பேசிய பேச்சைப்போலவே இருக்கும். இத்தகைய   தவறான நற்செய்தி அறிவிப்பால் "உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோ என்று பயந்திருக்கிறேன்" என்கிறார் அப்போஸ்தலரான பவுல். ஏனெனில், "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்." ( யோவான் 16 : 33 ) இயேசு கிறிஸ்து. உபத்திரவத்தை சகித்து வெற்றிபெற்ற வாழ்க்கை வாழவே கிறிஸ்து நம்மை அழைத்துள்ளார்.

ஆனால், அப்போஸ்தலரான பவுல் காலத்திலேயே இத்தகைய தாறுமாறான உபதேசங்கள் இருந்திருக்கின்றன என்றால் இன்று எத்தனை அதிகமாக இருக்குமென்று எண்ணிப்பாருங்கள். பாம்பு வேஷமணிந்த சாத்தானின் வார்த்தைகளை ஆதாமும் ஏவாளும் விசுவாசித்ததுபோல இன்று பலரும் தவறான சுவிசேஷ அறிவிப்புகளைத்தேடி அதிகம் ஓடுகின்றார்கள்.  

எப்போதும் ஆசீர்வாதம் ஆசீர்வாதம் என்று உலக ஆசீர்வாதத்தை மட்டுமே  பிரசங்கிப்பது, கிறிஸ்துவின் இரத்தத்தால் உண்டாகும் பாவ மன்னிப்பு, இரட்சிப்பு, நித்திய  ஜீவன் இவைகளைக்குறித்து பேசாமலிருப்பது, வேதாகமத்தில் குறிப்பிடாதமுறைகளில் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள மக்களைத் தூண்டுவது, மனம்திரும்புதல் / வாழ்க்கை மாற்றத்தைக் குறித்துப் முக்கியத்துவம்கொடுத்துப் பேசாமலிருப்பது  போன்றவை ஏதெனில் சாத்தான் விலக்கப்பட்ட கனியின் அழகையும் கவர்ச்சியையும் ஆதிப்பெற்றோருக்குக் காட்டியது போன்ற செயலே.    

சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, நமது மனதையும்  கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகச் செய்திடாமல் காத்துக்கொள்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்             

இருளிலிருந்து வெளிச்சத்துக்கு

 'ஆதவன்' 💚அக்டோபர் 30, 2024. 💚புதன்கிழமை      வேதாகமத் தியானம் - எண்:- 1,361


"இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்." ( 2 கொரிந்தியர் 4 : 6 )

அனைத்துக்கும் மூலம் வெளிச்சமே. இதனால்தான் தேவன் முதல்முதலில் ஒளியைப் படைத்தார் (ஆதியாகமம் 1 : 3) இப்படி ஆதியில் ஒளியைப்படைத்த அதே தேவன் நம்மில் கிறிஸ்துவின் மகிமையின் அறிவாகிய ஒளி பிரகாசிக்கவேண்டும் என்பதற்காக நமது இருதயங்களில் வந்து பிரகாசமூட்டுகின்றார். அதாவது, கிறிஸ்து நம்மில் இருக்கின்றார் என்றால், நமக்குள் பிதாவாகிய தேவனும் இருக்கின்றார். 

இந்த ஒளி நமது சுய முயற்சியால் உண்டாகவில்லை. மாறாக தேவனால் உண்டாகியிருக்கின்றது என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். இதனையே, "இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாகியிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.' ( 2 கொரிந்தியர் 4 : 7 ) என்று வாசிக்கின்றோம். 

சர்வலோகத்தையும் படைத்து ஆளும் தேவன் வெறும் மண்பாண்டங்களான நமக்குள் வந்து தங்கியிருப்பது ஆச்சரியமான காரியம்.  ஆனால் அப்படித் தங்கியிருக்க என்ன காரணம் என்பதையே, "இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக" என்று  இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அதாவது பிதாவின் மகிமையின் ஒளி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கின்றது. அதே ஒளி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வரவேண்டும் என்பதற்காக நமது இருதயத்தில் அவர் பிரகாசித்தார். 

ஏனெனில் இருள் என்பது பாவ அடிமைத்தனம்.  இந்தப் பாவ இருள் நம்மைவிட்டு அகலவேண்டும் என்பதற்காக கிறிஸ்துவின் ஒளி நம்முள் வந்துள்ளது.  கிறிஸ்துவின் ஒளி நம்மிடம் வரும்போது நாம் நீதியுள்ளவர்களாகின்றோம்; அநீதியைவிட்டு விலகுகின்றோம். கிறிஸ்துவின் ஒளியைப்பெற்றவர்கள் மற்ற துன்மார்க்கர்களிடமிருந்து விலகிவிடுகின்றனர். "............நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?" ( 2 கொரிந்தியர் 6 : 14, 15 ) என்று வாசிக்கின்றோம்.  இதனையே ஆதியில் ஒளியைப் படைத்தத் தேவனும்  கண்டார். "வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்." ( ஆதியாகமம் 1 : 4 ) என்று கூறப்பட்டுள்ளது.

ஆம் அன்பானவர்களே, இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இருளான மனிதர்களை பிரகாசிக்கச்  செய்வதுடன் தங்கள் துன்மார்க்கத்திலேயே தொடர்ந்து வாழும் இருளான மக்களிடமிருந்து நம்மைப் பிரிகின்றார். இதற்காகவே இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, நமது  இருதயங்களிலே பிரகாசித்தார். இந்த ஒளியை நாம் ஏற்றுக்கொள்ளும்போது நாமும் கிறிஸ்துவைப்போல பிரகாசமடைகின்றோம். 

கிறிஸ்துவின் ஒளி நம்மில் பிரகாசிக்கத் தடைசெய்யாமல் கிறிஸ்துவுக்கேற்ற வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்             

Tuesday, October 22, 2024

மேலான இரகசியம்

 'ஆதவன்' அக்டோபர் 29, 2024. செவ்வாய்க்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,360

"கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்." ( கொலோசெயர் 1 : 27 )

தேவன் தனக்கு வெளிப்படுத்தின இரகசியம் என்ன என்பதை அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடுகின்றார். முற்காலங்களில் மட்டுமல்ல, இன்றும் மனிதர்கள் கடவுளை ஆலயங்களில் தேடி அலைகின்றனர். ஆலயங்களில் மட்டுமே தேவன் தங்கியிருப்பதாக எண்ணிக்கொள்கின்றனர். எனவேதான் சில புண்ணிய ஸ்தலங்களில் கூட்டம் அலைமோதுகின்றது. பொதுவாக எல்லா மதங்களிலும் இப்படித்தான் இருக்கின்றது. 


அன்று இஸ்ரவேலர் எருசலேம் தேவாலயத்தை பெரிதாக மதித்து அங்குதான் தேவன் இருக்கின்றார் என்று நம்பினர். இன்றும் கிறிஸ்தவர்களிலும் பலர் இப்படி நம்புவதால்தான் பல்வேறு புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்கின்றனர். இதுபோல, தங்களை ஆவிக்குரியவர்கள் என்று கூறிக்கொண்டாலும் பலர் குறிப்பிட்ட ஊழியர்களிடம்தான் தேவன் இருக்கின்றார், அவரிடம் சென்றால் நமக்குப் பதில் கிடைக்கும்; விடுதலை கிடைக்கும் என்று நம்புகின்றனர்.  

ஆனால் தேவனை வெளியில் தேடி அலையவேண்டாம் அவர் வெளியில் எங்கும் இல்லை மாறாக  ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் இருக்கின்றார் என்பதே பவுல் அப்போஸ்தலருக்குத் தேவன் வெளிப்படுத்தின இரகசியம். ஆம், "கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்." கிறிஸ்துவானவர் வெறுமனே நம்முள் இருக்கவில்லை, மாறாக எதிர்கால மகிமையான வாழ்க்கையைத் தருபவராக, அந்த நம்பிக்கையை நமக்கு ஊட்டுபவராக  நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றார். 

இதனை ஒவ்வொருவரும் அறிய அறிவிப்பதே நற்செய்தி அறிவிப்பு. ஆனால் இன்று ஊழியர்கள் ஏதேதோ அறிவிப்புகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். பல்வேறு ஆசீர்வாதங்களைக் கூறிக்கொண்டிருக்கின்றனர். ஆசீர்வாதங்களின் ஊற்றாகிய அவர்  மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் வர வழிகாட்டுவதே மெய்யான சுவிசேஷ அறிவிப்பு. எனவேதான் அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து அடுத்த வசனத்தில் கூறுகின்றார், "எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம்." ( கொலோசெயர் 1 : 28 ) என்று. 

ஆம் அன்பானவர்களே, தேவன் வெளியில் எங்கும் இல்லை. ஆலயம் என்பது நாம் அனைவரும்கூடி தேவனை ஆராதிக்கும் இடம் மட்டுமே. அங்கு மட்டுமே தேவன் இருக்கின்றார் என்று நம்பி கோவில் கோவிலாக அலைவதைவிட நமக்குள் இருக்கும் அவரை நாம் நமது பரிசுத்தமான வாழ்க்கையால் மகிமைப்படுத்தவேண்டும். மட்டுமல்ல நமது அடுத்திருப்பவர் உள்ளேயும் அதே தேவன் இருக்கின்றார் எனும் உணர்வு நமக்கு வேண்டும். இந்த உணர்வு இல்லாததால்தான் பக்தியுடன் ஆராதனை மற்றும் வழிபாடுகளில் கலந்துகொள்ளும் பலர் ஆராதனை முடிந்து வெளியில் வந்ததும் மற்றவர்களுக்கு எதிராக பேசியும் செயல்பட்டும் வருகின்றனர். 

கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் இருக்கவேண்டுமானால் முதலில் நமது பாவங்கள் அவரது இரத்தத்தால் கழுவப்படவேண்டும். எனவே முழு மனதுடன் அவரிடம் பாவ அறிக்கைசெய்வோம்.  பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயத்தைப் பெறுவோம். அப்போது அப்போஸ்தலரான பவுல் கூறும் இந்த இரகசியத்தை நாமும் கண்டுகொள்வோம். கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் வாசம்பண்ணுவார். 

சிந்தனை வசனம்:- "ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 7 : 48 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                            

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - 2 கொரிந்தியர் 6 : 10 / 2 Corinthians 6:10

" ஆதவன் " தியானம் - 1982 ஜூலை 12, ஞாயிறு 2026       "துக்கப்படுகிறவர்கள் எனப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும...