Monday, October 21, 2024

ஆவியும் மாம்சமும்

 'ஆதவன்' அக்டோபர் 28, 2024. 💚திங்கள்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,359


"நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை. பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா? ( 1 கொரிந்தியர் 3 : 2, 3 )

மெய்யான ஆவிக்குரிய வழியும் வாழ்க்கையும் தேவ சுபாவத்தோடு நம்மை வாழச்செய்வது. அது இல்லாத வாழ்க்கை மாம்சத்துக்குரியது. அதாவது, அது சாதாரண மனித சுபாவம் கொண்டது.  போட்டிகள், பொறாமை, வாக்குவாதம், மார்க்க பேதங்கள் இவை தேவனுக்குக் கிடையாது. நாம் ஆவிக்குரியவர்களாக இருப்போமானால் தேவன் வெறுக்கும்; தேவனிடம் இல்லாத இந்தக் குணங்கள் நம்மிடமும் இருக்காது. 

ஆனால் இன்று தங்களை ஆவிக்குரிய சபை என்று கூறிக்கொள்ளும் சபைகளுக்குள்ளே ஊழியர்களுக்குள் போட்டியும் பொறாமையும் வஞ்சகமும் நிறைந்துள்ளதை நாம் காண முடிகின்றது. மூன்றாம்தர அரசியல்வாதிகளைவிட அவலட்சணமான குணங்கள் இவர்களுக்குள் இருப்பதால் சாதாரண விசுவாசிகள் இத்தகைய சபைகளை வெறுக்கின்றனர்.   

அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார் இப்படி இருக்கக் காரணம் ஆவிக்குரிய சபைகள் என்றுகூறிக்கொண்டாலும் உண்மையில் இத்தகைய சபைகள் ஆவிக்குரிய சபைகளல்ல; மாறாக மாம்சத்துக்குரிய சபைகள்; ஆவிக்குரிய பெலனில்லாத சபைகள்.  சபைகள் மட்டுமல்ல, விசுவாசிகளுக்கும் இது பொருந்தும். காரணம், சபை என்பது மீட்கப்பட்ட விசுவாசிகளின் கூட்டம்; அது கிறிஸ்துவின் உடல்.   

பவுல் நிறுவிய கொரிந்து சபைக்குள்  இருந்த விசுவாசிகளிடம் இத்தகைய குணங்கள்  இருப்பதை அவர் சுட்டிக்காட்டுகின்றார்.  ஆம் அன்பானவர்களே, இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் நடந்த கொரிந்து சபையில் மட்டுமல்ல; இன்றும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. இத்தகைய குணங்களைத் தங்களுக்குள் கொண்டுள்ள சபைகளும் விசுவாசிகளும் ஆவியில் பெலனில்லாதவை.  மனுஷமார்க்கமாய் நடக்கின்றவை.  

இன்று நாம் பார்க்கும் அரசியல் கட்சிகளுக்குள் பதவிகளுக்காக் சண்டைகளும், போட்டிகளும், பொறாமைகளும் கொலைகளும் நடப்பதுபோலவே கிறிஸ்தவ சபைகளுக்குள்ளும் நடைபெறும்போது மற்றவர்கள் நம்மை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? சபைகள் மாறும்போது மட்டுமே நாம் கிறிஸ்துவின் சாட்சிகள் என்று நம்மைப் பிறர் ஏற்றுக்கொள்வார்கள்.  

சபைகள் மாறுவது என்பது விசுவாசிகளிடம் மாற்றம் வரும்போதுதான் சாத்தியமாகும். எனவே  நம்மிடமிருக்கும் மாம்சீக பலவீனங்களை அகற்றிட முயற்சியெடுப்போம். அதற்காகத்  தேவனிடம் ஊக்கமாய் ஜெபிப்போம். ஆவியானவர் நம்முள் செயல்படும்போது மட்டுமே நமது உள்ளான குணங்கள் மாறி நாம் ஆவிக்குரிய பெலனடைய முடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

எல்லா மனுஷரும் சத்தியத்தை அறியவேண்டும்

 'ஆதவன்' அக்டோபர் 27, 2024.ஞாயிற்றுக்கிழமை      வேதாகமத் தியானம் - எண்:- 1,358

"எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்." ( 1 தீமோத்தேயு 2 : 4 ) 

உலகினில் பலநூறு விதமான மார்க்கங்கள் உள்ளன. ஒரே மதத்தினுள் பல்வேறு பிரிவினைகள் உள்ளன. இவை அனைத்தையும் தேவன் அறிவார். ஆனால் நீ என்னைத்தான் வணங்கவேண்டும் என்றோ, நான்தான் மெய்யான தேவன் என்றோ அவர் தன்னை மனிதர்களிடம் திணிப்பது கிடையாது. தன்னை மனிதர்கள் அறிந்துகொள்ள அவர்களுக்கு அறிவினைக் கொடுத்துள்ளார். ஆனால் மனிதர்கள் அவரை அறியாததற்குக் காரணம் பாரம்பரியங்களும் வீண் மத வைராக்கியமும் மனக் கடினமுமே. 

தன்னை அறிய தேவன் வைத்துள்ள ஒரே நிபந்தனை இருதய சுத்தம். இருதய சுத்தம் ஒருவருக்கு இருக்குமானால் தேவன் அவருக்குத் தன்னை வெளிப்படுத்துவார். இதனால்தான் இயேசு கிறிஸ்து, "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்." ( மத்தேயு 5 : 8 ) என்று சொன்னார். பலர் தேவனை வாழ்வில் அறியாமலிருக்கக் காரணம் மனக்கடினத்துடன் இருதய சுத்தமும்  இல்லாமலிருப்பதுதான். ஆம் அன்பானவர்களே, கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் எல்லோரும் கிறிஸ்துவை அறிந்தவர்களல்ல. 

கிறிஸ்துவின் இரத்தத்தால் பாவங்கள் கழுவப்பட்டு பாவ மன்னிப்பு பெற்று மீட்பு அனுபவம் பெற்றவர்களே மெய்யான கிறிஸ்தவர்கள். இந்த அனுபவத்தை அனைவரும் பெறவேண்டும் என்று தேவன் விரும்புகின்றார். இதனையே,  "எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்." என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. இதற்கு மனிதர்கள் தங்கள் மனநிலையில் மாறுதல் செய்யவேண்டும். 

நாம் அனைவருமே பல்வேறு சமயங்களில் பாவம் செய்கின்றோம். ஆனால் அந்தப் பாவங்களை நாம் தேவனிடம் ஒளிவு மறைவில்லாமல் அறிக்கையிடும்போதே சுத்த இருதயம் நம்மில் உருவாகும். தாவீது ராஜா பாவத்தில் விழுந்தபோது, "தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்." ( சங்கீதம் 51 : 10 ) என்றுகதறினார். நமது மனக்கடினத்தை விட்டு பாவ உணர்வடைந்து நாம் தேவனை நெருங்குவோமானால் சுத்த இருதயத்தை தேவன் நமக்குத் தந்தருள்வார். 

இப்படி எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், தேவன்  சித்தமுள்ளவராயிருக்கிறார். இதற்காகவே அவர் ஊழியர்களை நியமித்திருக்கின்றார். ஆனால் இந்தப் பணியை ஊழியர்கள் மட்டுமல்ல, மாறாக கிறிஸ்துவை வாழ்வில் அறிந்தவர்கள் அனைவரும் சேர்ந்து செய்யவேண்டுமென்று தேவன் விரும்புகின்றார். எனவே ஊழியர்கள் அறிவிக்கும் தேவ அறிவிப்பு பலரை கிறிஸ்துவண்டை கொண்டுவர நாம் அனைவருமே ஜெபிக்கவேண்டியது நமது கடமையாகும். 
 
எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும்;" ( 1 தீமோத்தேயு 2 : 1 ) என்று கூறுகின்றார். நாம் ஜெபிக்கும்போது சுவிசேஷ வாசல்கள் திறக்கும். இப்படி நாம் ஜெபிப்பது "நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது." ( 1 தீமோத்தேயு 2 : 3 )

எப்போதும் நமது தேவைகளுக்காக மட்டும் ஜெபிக்காமல்  இன்றைய தியான வசனம் கூறுவதுபோல எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், நாம் ஜெபிக்கவேண்டியது அவசியம். நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

தேவ சித்தம்.

 'ஆதவன்' 💚அக்டோபர் 26, 2024. 💚சனிக்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,357

"நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது." ( 1 தெசலோனிக்கேயர் 4 : 3 ) "எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 18 )

இன்றைய தியான வசனங்களில் இரண்டு தேவ சித்தங்களைக்குறித்து நாம் வாசிக்கின்றோம். நம் ஒவ்வொருவரையும் குறித்தத் தனிப்பட்ட  தேவ சித்தமும் அனைவருக்குமான பொதுவான தேவ சித்தமும் உண்டு. இன்றைய தியான வசனத்தில் கூறப்பட்டுள்ள இரு தேவசித்தங்களும்  அனைவருக்கும் பொதுவானவை. 

நாம் அனைவரும் பரிசுத்தமாகவேண்டும் என்பது தேவனது சித்தம்.  காரணம், பரிசுத்தமில்லாமல் நாம் தேவனை யாரும் தரிசிக்கமுடியாது என்று வேதம் கூறுகின்றது. அதுபோல, எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைக் குறித்த  தேவனுடைய சித்தமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்த இரண்டு தேவ சித்தங்களும் ஒன்றுக்கொன்று இணைந்தவை. எப்படியெனில், நாம் பரிசுத்தமாகவேண்டுமானால் பாவங்கள், சோதனைகள் இவற்றை மேற்கொள்ளவேண்டியது அவசியம். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள் என்றுகூறியுள்ளபடி நாம் இப்படி ஸ்தோத்திரம் செய்யும்போது பாவத்துக்கு விலகி, பரிசுத்தத்துக்கு நேராகச் செல்ல முடியும்.   

மேலும், தேவனது கிருபை இல்லாமல் நம்மால் வெற்றிகரமான வாழ்க்கை வாழ முடியாது. அந்தத் தேவ கிருபை ஸ்தோத்திரம் செய்வதால் பெருகும். "தேவனுடைய மகிமை விளங்குவதற்கேதுவாகக் கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும்படிக்கு, இவையெல்லாம் உங்கள்நிமித்தம் உண்டாகியிருக்கிறது." ( 2 கொரிந்தியர் 4 : 15 ) என்று கூறப்பட்டுள்ளது. 

ஆம் அன்பானவர்களே, ஆவிக்குரிய வாழ்க்கை வெறுமனே ஜெபிப்பதும் ஆராதனைகளில் கலந்து கொள்வதும் வேதாகமத்தை வாசிப்பதும் மட்டுமல்ல, நமது பரிசுத்தத்தைக் காத்துக்கொள்வது. அதுவே நம்மைக்குறித்த முதன்மையான தேவ சித்தம். எனவே நாம் பரிசுத்த வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டியது அவசியம். தேவனது ஐக்கியம் மட்டுமே நம்மை பரிசுத்தமாக்க முடியும். 

எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செய்யும்போது நாம் தேவ  ஐக்கியத்தில் வளர முடியும். தேவ ஐக்கியத்தில் வளர வளர நம்மில் பரிசுத்தம் அதிகரிக்கும். எனவே நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர இந்த இரண்டு தேவ சித்தத்தையும் நிறைவேற்றுபவர்களாக வாழ்வோம்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்           

Sunday, October 20, 2024

ஆமென் (Amen)

 'ஆதவன்' 💚அக்டோபர் 25, 2024. வெள்ளிக்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,356

"எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே." ( 2 கொரிந்தியர் 1 : 20 )

வேதாகமத்தில் காணப்படும் ஆமென் எனும் சொல், "அப்படியே ஆகட்டும்" என்று பொருள்படும். இது எபிரேய வார்த்தையாகும். எபிரேய வேதாகமத்தில் உறுதிப்படுத்துதலின் பதிலாக உருவானது இது. மக்களால் செய்யப்பட்ட உறுதிமொழியாக இது உபாகமத்தில் காணப்படுகிறது (உபாகமம் 27: 15 - 26) மேலும்,  மக்கள் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கும் வாக்குத்தத்தை ஏற்றுக்கொள்வதற்கும்   "ஆமென்" என்று பதிலளித்தனர். 

கிறிஸ்தவர்கள் பொதுவாக ஜெப வேளைகளில் ஒருவர் ஜெபிக்கும்போதும் ஜெபித்து முடிக்கும்போதும் "ஆமென்" என்று கூறுவதுண்டு. இது ஜெபத்தில் கூறப்படும் வார்த்தைகளை நாம் ஏற்றுக்கொள்கின்றோம் என்பதனை உறுதிப்படுத்துகின்றது. இதனையே அப்போஸ்தலரான பவுல், "இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம்பண்ணும்போது, கல்லாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது இன்னதென்று அவன் அறியானே." ( 1 கொரிந்தியர் 14 : 16 ) என்று கூறுகின்றார். 

வேதாகமத்தில் பல ஆயிரம் வாக்குத்தத்தங்கள் உள்ளன. இந்த வாக்குத்தத்தங்கள் அனைத்தும் அவற்றை நாம் உறுதியாக நம்பி ஏற்றுக்கொள்ளும்போது நமக்குப் பலிக்கும். இதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல், "எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே." என்கின்றார். 

ஆம் அன்பானவர்களே, நாம் வேதாகமத்தை வாசிக்கும்போது சில வாக்குத்தத்தங்கள் நமக்காகவே சொல்வதுபோல இருக்கும். சில நேரங்களில் தேவன் நம்மிடம் அதனைத்  தெளிவாக உணர்த்துவார். அப்படி உணர்த்தும்போது நாம் உள்ளத்திலிருந்து ஆமென் என்று வாயினால் அறிக்கையிடவேண்டும். அப்படிச் செய்வது அந்தத் தேவ வார்த்தைகளை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்பதனை வெளிப்படுத்துகின்றது.   

வேதத்திலுள்ள ஆயிரக்கணக்கான தேவனுடைய  வாக்குத்தத்தங்களும்  இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருந்தாலும் குறிப்பிட்ட வாக்குத்தத்தங்களை  நாம் ஆமென் என அறிக்கையிடும்போது நமக்காக அவற்றை உறுதிப்படுத்துகின்றோம் என்று பொருள். 

வேதாகமத்தை வாசிக்கும்போதும், நல்ல பிரசங்கங்களைக் கேட்கும்போதும்  அவற்றை நாம் ஏற்றுக்கொள்வதை ஆமென் என்று கூறி உறுதிப்படுத்துவோம். கர்த்தர் நிச்சயம் அவற்றை நமது வாழ்வில் பலிக்கச்செய்வார். இப்படியே அப்போஸ்தலரான யோவான் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைக் குறித்த காரியங்களை  ஏற்றுக்கொண்டுக் கூறுகின்றார், "இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்." ( வெளிப்படுத்தின விசேஷம் 22 : 20 ) ஆமென் என்று கூறி வாக்குத்தத்தங்களை நமதாக்கிக்கொள்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்            

வாழ்வின் நிகழ்வுகளுக்கு நமது செயல்பாடுகளே காரணம்

 'ஆதவன்' அக்டோபர் 24, 2024. 💚வியாழக்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,355

"முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்." ( ரோமர் 2 : 9, 10 )

எல்லா உலகச் செல்வங்கள் இருந்தாலும் பலருக்கு வாழ்வில் உபத்திரவம், மனவேதனை, அமைதியற்ற நிலை  இவை தொடருவதை பலவேளைகளில் நாம் காணலாம். இதற்குக் காரணம் என்ன என்பதை அவரவர் வெளிப்படையான மனநிலையுடன் தங்களைத் தாங்களே ஆராய்ந்து பார்க்கவேண்டும்.  மட்டுமல்ல,நம்மிடம் தவறு இருக்குமானால் நம்மைத் திருத்திக்கொள்ளவேண்டும். 

மெய்யான தேவ ஆசீர்வாதம் என்பது வெறும் உலகச் செல்வங்களைப் பெறுவது அல்ல, மாறாக நமக்குத் தேவையான காரியங்களை வேதனையில்லாமல் பெற்று அனுபவிப்பது. எந்தத் தகப்பனும் தன் குழந்தைக்கு நல்ல உணவையும் கூடவே உடலுக்கு கேடு தரும் அசுத்தத்தையும் கொடுக்கமாட்டான். அதுபோலவேதான்  தேவனும் ஆசீர்வாதத்தினையும் வேதனையையும் சேர்த்தே கொடுக்கமாட்டார். 

"கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்." ( நீதிமொழிகள் 10 : 22 ) என்று வேதம் கூறுகின்றது. ஆம்,  கர்த்தரின் ஆசீர்வாதம் வேதனையை அதிகரிக்காத ஆசீர்வாதம். மனிதர்களுக்கு  பலவேளைகளில் உபத்திரவம், மனவேதனை, அமைதியற்ற நிலை ஏற்படக்  காரணம் என்ன என்பதை விளக்கவந்த அப்போஸ்தலரான பவுல்,   "பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும்." என்று இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார். 

உலகத்தில் உபத்திரவம், துன்பங்கள் அனைவருக்கும் பொதுவானவையே. ஆனால், கிறிஸ்துவுக்குள் வாழும் மக்களுக்கு எந்தத் துன்பத்திலும் மன ஆறுதலும் மனச் சமாதானமுமிருக்கும். இந்தச் சமாதானம் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் இருக்காது. அதுபோல,  "எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்." என்று கூறப்பட்டுள்ளது. 

இப்படிப் பொல்லாங்கானவற்றைச் செய்கின்றவனுக்கு சமாதானம் இல்லை என்பதால் அப்போஸ்தலரான பவுல், "பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டுவிலகுங்கள்." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 22 ) என்று அறிவுரை கூறுகின்றார். அதாவது பொல்லாங்கான ஒரு வழியை அல்ல, மாறாக பொல்லாங்காய்த் தோன்றும் அனைத்து வழிகளையும்விட்டு விலகிவிடவேண்டும் என்கின்றார். 

இதற்கு மாறாக, நன்மைசெய்வோமானால் நிச்சயம் ஆசீர்வாதம் நமக்கு உண்டு. அது உடனடியாக இல்லையானாலும் பிந்திய நிலையிலாகிலும் நமக்குக் கிடைக்கும். எனவேதான் "நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்." ( கலாத்தியர் 6 : 9 ) என்று கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, நமது வாழ்வில் நிகழும் அனைத்துக் காரியங்களுக்கும் நமது செயல்பாடுகளே காரணம். பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும்.  எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும். வேத வார்த்தைகள் பொய்யானவையல்ல. நமது அன்றாட வாழ்க்கையில் நாம் இதனை கண்டுணர முடியும். எனவே, பொல்லாங்கான வழிகளை விட்டு விலகி அமைதியும் சமத்தானமும் பெற்று மகிழ்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்     

Saturday, October 19, 2024

எல்லோருக்குள்ளும் ஒரே பிதா

 'ஆதவன்' 💚அக்டோபர் 23, 2024. 💚புதன்கிழமை      வேதாகமத் தியானம் - எண்:- 1,354

"ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்,  எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர். கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது". (எபேசியர் 4: 5 - 7 )

தங்களுக்குச் சொந்த விசுவாசமில்லாமல் எதெற்கெடுத்தாலும் ஊழியர்களைத் தேடி ஓடும் பல கிறிஸ்தவர்களை நாம் உலகில் பார்க்கின்றோம். இந்தக் கிறிஸ்தவர்கள் புகழ்பெற்ற ஊழியர்களை வானத்திலிருந்து வந்தவர்கள் என எண்ணிக்கொள்கின்றனர்.  ஆனால் தங்களுக்கு அடுத்திருக்கும் சக விசுவாசிகளை மதிப்பதில்லை. இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் கூறுவது நாம் அனைவரும் சிந்திக்கத்தக்கது. 

ஊழியர்களுக்கென்றும் விசுவாசிகளுக்கென்றும் தனித்தனி பிரிவான கர்த்தரும், விசுவாசமும், ஞானஸ்நானமும் இல்லை. மாறாக,  எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், நம்  எல்லாருக்குள்ளும் இருக்கிறவர். அதாவது, ஒரே தேவன்தான் நம் எல்லோருக்குள்ளும் இருந்து செயல்புரிகின்றார். 

ஆனால் அடுத்ததாக பவுல் அப்போஸ்தலர் இந்த வசனத்தில் கூறுகின்றார், "கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது" என்று. அதாவது தேவ கிருபை ஆளாளுக்கு வித்தியாசமாகச் செயல்படும். அது கிறிஸ்து பகிர்ந்து கொடுப்பது. மற்ற ஊழியர்களைப்போலவோ மற்ற விசுவாசிகளைப்போலவோ நாம் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை.  ஆனால் மனிதர்களிடம் வேற்றுமை பாராட்டாத தேவன் நாம் அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழும்போது நமக்கும் ஏற்ற கிருபையளிப்பார். 

இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் கூற  விரும்பும் காரியங்கள்:-

வெவ்வேறு கர்த்தரல்ல ஒரே கர்த்தர்தான் உண்டு.  எனவே இங்கு அங்கு என அலையவேண்டாம். விசுவாசம் என்பது எல்லோருக்கும் பொதுவானது; வேதம் கூறுவதை விசுவாசிக்கவேண்டும். ஒரே தேவன் எல்லோருக்குள்ளும் இருப்பதால் எல்லோரையும் மதிக்கவேண்டும். கிறிஸ்துவினுடைய விருப்பப்படி அவர் அவனவனுக்குக் கிருபை அளிக்கின்றார். 

இப்படியிருப்பதால் "மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்." ( எபேசியர் 4 : 2, 3 ) என்று இன்றைய தியான வசனத்தின் முன் குறிப்பிடுகின்றார்.  

கிறிஸ்துவின் முன்பு நாம் அனைவரும் ஒன்றுதான். விசுவாசி, ஊழியன் என்று இல்லை. எனவே குறிப்பிட்ட ஊழியர்களை மட்டும் அன்பு செய்யாமல் நமக்கு அடுத்திருக்கும் சக விசுவாசிகளையும் அன்புசெய்து சமாதானத்தோடு ஒருமைப்பாட்டுடன்  நாம் வாழவேண்டும். ஆனால் இந்த உணர்வில்லாததால் அடுத்த வீட்டில் உணவுக்காக ஏங்கித் தவிக்கும் மக்கள் இருந்தாலும் ஐந்துகாசுகூட உதவி செய்யாத பலர் தொலைவிலிருக்கும் ஊழியர்களுக்கு ஆயிரக்கணக்கான பணத்தை அனுப்பிவைக்கின்றனர்.  

அன்பானவர்களே, எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் தான் உண்டு; அவரே எல்லார்மேலும், எல்லாரோடும், நம் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர் என்ற உணர்வோடு வாழ்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்           

Friday, October 18, 2024

ஆகாயத்தில் சிலம்படித்தல்

 'ஆதவன்' அக்டோபர் 22, 2024. செவ்வாய்க்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,353

"ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்." ( 1 கொரிந்தியர் 9 : 26 )

ஆவிக்குரிய வாழ்வில் நமக்கு ஒரு நோக்கம் இருக்கவேண்டும்.நமது நோக்கத்தைப்பொறுத்தே நமது ஆவிக்குரிய வாழ்வு அமையும். அதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் விளக்குகின்றார். நமது ஆவிக்குரிய வாழ்வில் ஒரு நிச்சயம் வேண்டும். இந்த வாழ்க்கைக்குப் பின்னர் முடிவில்லாத நித்திய ஜீவன் உள்ளது. அதனைப் பெறுவதே நமது இலக்காக இருக்கவேண்டும். 

இன்று கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலருக்கும் இதுகுறித்து எந்த நிச்சயமும் கிடையாது. ஆவிக்குரிய காரியங்கள் செய்கின்றோம் என்று கூறிக்கொண்டு பல்வேறு பக்தி முயற்சிகளைச்  செய்கின்றனர். பல்வேறு பக்தி அமைப்புகளில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஆனால் நித்திய ஜீவனைப்பற்றிய எண்ணமோ ஆவிக்குரிய அறிவோ இவர்களுக்கு இருப்பதில்லை.

இதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார்,  "ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்." என்று. அதாவது மற்றவர்கள் எப்படியோ எனக்குத் தெரியாது, ஆனால் நான் அப்படிச் செய்யமாட்டேன் என்கிறார்.  

ஆவிக்குரிய வாழ்க்கையை அப்போஸ்தலரான பவுல் ஓட்டப்பந்தயத்துக்கு ஒப்பிட்டுக் கூறுகின்றார். ஓட்டப்பந்தயத்தில் ஓடும்போது முதல் பரிசைப்பெறவேண்டும் எனும் எண்ணம் நமக்கு இருக்கவேண்டும். அதுபோலவே சிலம்பம் பண்ணும்போது வெறுமனே ஆகாயத்தில் சிலம்பக்கம்பைச் சுழற்றிக்கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை. எதிலும் ஒரு நோக்கம் வேண்டும். 

அந்த நோக்கம் நமக்கு இருக்குமானால் நாம் அதற்காக சில முயற்சிகளும் பயிற்சிகளும் எடுத்திருப்போம். ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவன் பயிற்சியில்லாமல் திடீரென்று மைதானத்தில் ஓடி பரிசுபெற முடியாது. அதுபோல ஆவிக்குரிய வாழ்வில் வெற்றிபெற சில பயிற்சிகள் நமக்குத் தேவை, சில ஒறுத்தல்கள் தேவை.

"பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்." ( 1 கொரிந்தியர் 9 : 25 )

ஆம் அன்பானவர்களே, நமது ஆவிக்குரிய வாழ்க்கையினை ஆராய்ந்து பார்ப்போம். நாம் செய்யும் செயல்கள், நமது எண்ணங்கள் எதனை இலக்காகக் கொண்டு செய்யப்படுகின்றன என்று சிந்திப்போம். நிச்சயமில்லாத, குறிக்கோளற்ற வாழ்க்கை அர்த்தமில்லாததுநான் நிச்சயமில்லாதவனாக இந்த ஆவிக்குரிய வாழ்க்கை வாழவில்லை. ஆகாயத்தில் சிலம்படிப்பவனாக வாழவில்லை மாறாக, மேலான மறுவுலக வாழ்க்கை எனக்கு உண்டு எனும் நிச்சயத்தோடு ஆவிக்குரிய வாழ்க்கையைத் தொடருகின்றேன் என்று அப்போஸ்தலரான பவுலைப்போல தெளிவோடு வாழ்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்      

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - 2 கொரிந்தியர் 6 : 10 / 2 Corinthians 6:10

" ஆதவன் " தியானம் - 1982 ஜூலை 12, ஞாயிறு 2026       "துக்கப்படுகிறவர்கள் எனப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும...