இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Thursday, April 25, 2024

இடறல்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,174     💚 ஏப்ரல் 27, 2024 💚 சனிக்கிழமை 💚


"என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான்" (லூக்கா 7:23)

இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து குறிப்பிடும் இடறல் என்பது நாம் ஏற்கெனவே கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு எதிரான செயல்பாடுகளையும்  போதனைகளையும்தான்.  கிறிஸ்தவ மார்க்கமே நம்பிக்கையின் அடிப்படையிலானதுதான். அந்த நம்பிக்கைக்கு எதிரான, முரணான போதனைகளும் செயல்பாடுகளும் நம்மை கிறிஸ்துவின்மேல் பூரண விசுவாசம் கொள்ளவிடாமல் தடுக்கின்றன. அல்லது இடறச்செய்கின்றன. நாம் நடக்கும்போது வழியில் கிடக்கும் கற்கள் நம்மைச் சிலவேளைகளில் இடறிவிடுகின்றன. அதுபோலவே கிறிஸ்தவ கோட்பாடுகளுக்கு முரணான போதனைகள் விசுவாசிகளை இடறச் செய்கின்றன. 

ஆனால் இயேசு கிறிஸ்து இடறல்கள் வருவது அவசியம் என்றும் கூறினார். காரணம் கிறிஸ்துவின்மேல் உண்மையான  விசுவாசம் கொண்டவர்களுக்கு அந்த இடறல்கள் அவர்களை மேலும் மேலும் விசுவாசத்தில் வளர உதவுகின்றன. விசுவாசத்தின் தந்தை என்று நாம் கூறும் ஆபிரகாமை எடுத்துக்கொள்வோம். அவரது விசுவாசத்துக்கு எதிராக  வந்த இடறல்தான் அவரை விசுவாச வீரனாக்கியது. 

இயேசு கிறிஸ்து கூறினார்,  "இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ! "(மத்தேயு 18:7) ஆனால் ஆபிரகாமுக்கு வந்த இடறல் மனிதனால் வந்ததல்ல; மாறாக தேவனே அவரது விசுவாசத்தை நமக்குக் காட்டிட முன்குறித்துச் செய்த செயல் அது. 

இரட்சிப்புக்கு  ஏதில்லாத  வெறும் ஆசீர்வாத போதனைகள் இடறுதலுக்கேதுவானவைகள்; சில தேவையற்ற சடங்காச்சார  வழிபாட்டுமுறைமைகள் இடறுதலுக்கேதுவானவைகள்.   காரணம் அவை கிறிஸ்துவின்மேல் நாம் உறுதியான விசுவாசம் கொள்ளவிடாமல் தடுக்கின்றன. கிறிஸ்துவைவிட உலக செல்வங்களுக்கு முன்னுரிமைகொடுக்க நம்மை அவை தூண்டுகின்றன. ஆனால் இன்று மட்டுமல்ல அப்போஸ்தலரான பவுல் அப்போஸ்தலரின் காலத்திலேயே இப்படிப்பட்ட முரணான இடறலான போதனைகள் பலரால் போதிக்கப்பட்டன.  

எனவேதான் அவர் தனது நிருபத்தில் இதுகுறித்து எச்சரித்து எழுதினார். "சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்." (ரோமர் 16:17) ஆம் அன்பானவர்களே, எனவே, இடறலான போதனைகளைப் போதிப்பவர்களைவிட்டு நாம் விலகிவிடவேண்டும்.

ஒருவர் தவறுதலான இடறலான போதனையைக் கொடுக்கின்றார் என்பதனை நாம் எப்படி அறிந்துகொள்ள முடியும்? அது தேவனோடு நாம் வளர்த்துக்கொள்ளும் தனிப்பட்ட உறவினால்தான் முடியும். வெறுமனே ஆலயங்களுக்குச் சென்று போதகர்கள் போதிப்பதை மட்டும் நாம் கேட்டுக்கொண்டிருந்தால்  போதாது. நாம் தேவனோடு நமது தனிப்பட்ட உறவினை வளர்த்துக் கொள்ளவேண்டும். அப்படி கொள்ளும்போதுதான் ஆவியானவர் நமக்குச் சரியான வழியைக் காட்டுவார்.  

"எப்பொருள் யார்யார்வாய்க்  கேட்பினும் - அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்று வள்ளுவரும் கூறியுள்ளார். எனவே அன்பானவர்களே, யார் போதிக்கின்றார்கள் என்று பார்க்கவேண்டாம். அவர் எத்தனை பெரிய கூட்டம் சேர்க்கும் பிரசங்கியாக இருந்தாலும் அப்படியே ஒருவர் கூறுவதைக் கேட்டு நம்பவேண்டாம்.  ஆவியானவர் தரும் வெளிச்சத்தில் வேத வசனங்களின் மெய்ப்பொருளைக் கண்டுகொள்வோம். அப்போது நாம் இடறமாட்டோம். "என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான்"என்று இயேசு கிறிஸ்து கூறியபடி இடறலற்றவர்களாக இருந்து பாக்யவான்களாக வாழ்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்   

Wednesday, April 24, 2024

முற்றிலும் தேவனையே சார்ந்து வாழவேண்டும்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,173    💚 ஏப்ரல் 26, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚


"சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பிஇஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது."(1 நாளாகமம் 21 : 1)

தேவன் தனது மக்கள் தங்கள் சுய பெலத்தையோ தங்களது  செல்வத் திரட்சியையோ நம்பி வாழாமல் தன்னையே முற்றிலும் நம்பி தன்னையே சார்ந்து வாழவேண்டும் என விரும்புகின்றார்அப்படி வாழ்ந்தவர்தான் தாவீதுஅதுதான் அவரது வளர்ச்சிக்குக்காரணம்ஆனால் இப்போது தாவீதுக்கு ஒரு விபரீதமான  ஆசை சாத்தானால் ஏற்படுகின்றதுராஜாவாகிய தனது கீழ்  எவ்வளவு மக்கள் இருக்கின்றனர் என்பதை அறிய ஒரு ஆசை.  இதற்கு  இரண்டு காரணங்கள் இருந்திருக்கலாம்ஒன்று தனக்குக்கீழ்  எவ்வளவு மக்கள் இருக்கின்றனர் என்பதை அறிவதில் ஒரு  அற்பப்பெருமை எண்ணம்இரண்டாவது எதிரிகள் போரிட்டு   வருவார்களென்றால் போருக்குப் போகத்தக்க மக்கள் தன்னிடம் எவ்வளவுபேர் இருக்கின்றார்கள் என்பதை அறிவது.

தனது வாழ்வின் துவக்கமுதல் தேவனையே சார்ந்து  வாழ்ந்தவர்தான் தாவீதுஆடுகளுக்குப் பின்னாகத்திரிந்த ஒரு ஆட்டு இடையன்ஆனால் அவரைத் தேவன் ராஜாவாக உயர்த்தி இஸ்ரவேல்மீதும் யூதாவின் மீதும் ஆட்சிசெய்யவைத்தார். ஆனால், தாவீது இங்கு தனது பழைய விசுவாச நிலையிலிருந்து சற்று பின்வாங்கிவிட்டார்எந்த ஒரு ஆயுதமும் கையில்  இல்லாமல் ஒரு கூழாங்கல்லால் மட்டுமே   கோலியாத்தை  வெற்றிகொள்ள தேவன் தனக்குத் துணைநின்றதை அவர்  இப்போது மறந்துவிட்டார்ஆனால் இன்று தனது பலத்தை அறிய தனது  மக்களை எண்ணிக் கணக்கிடத் துணிந்துவிட்டார்அதாவது  தேவன்மேல் இருந்த பழைய விசுவாசம் அவருக்குக்  குறைந்துவிட்டதுஇது தேவனது பார்வைக்கு ஆகாத ஒரு  செயலாகி விட்டது.

முன்புஅவர் தனது சுய பலத்தை நம்பாமல் தேவனையே நம்பி கோலியாத்தைஎதிர்த்தார்."நீ பட்டயத்தோடும்ஈட்டியோடும்கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்நானோ நீ நிந்தித்த  இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய  சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில்  வருகிறேன்." ( 1 சாமுவேல் 17 : 45 ) என்று அறிக்கையிட்டு கோலியாத்தைக் கொன்றார்

எனவே மக்களைக் கணக்கிடும்படி தாவீது செய்த "இந்தக் காரியம் தேவனுடைய பார்வைக்கு ஆகாததானபடியினால் அவர் இஸ்ரவேலை வாதித்தார்." ( 1 நாளாகமம் 21 : 7 ) என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஆட்சியாளர்கள் செய்யும் தேவனுக்கு விரோதமானச்  செயல்களை மக்களையும் பாதிக்கும் என்பது இங்கு உணர்த்தப் படுகின்றதுஎனவே தகுந்த ஆட்சியாளர்களைத் தேர்வு  செய்வதில் நாம் கவனமாக இருக்கவேண்டியுள்ளது.

அன்பானவர்களேதேவன் நமது வாழ்வில் பல அற்புதங்கள்  செய்திருக்கலாம்அதிசயமாக நம்மை வழிநடத்தியிருக்கலாம் ஆனால் அப்போது நாம் நமது விசுவாசத்தில் எப்படி இருந்தோம் இப்போது எப்படி இருக்கின்றோம் என்று நம்மை நாமே சோதித்து அறியவேண்டியது அவசியம்தேவன்நாம் அவரையே சார்ந்து வாழவேண்டுமென விரும்புகின்றார்நம்மைச் சுற்றியுள்ள  சூழ்நிலைகளைப் பார்த்தோமானால் நாம் விசுவாசத்தைவிட்டு  நழுவி விடுவோம்

எனவே சூழ்நிலைகளைப் பார்க்காமல் சூழ்நிலைகளையே மாற்றவல்ல தேவனையே நோக்கிப்பார்க்கவேண்டும்ஒருவேளை  சூழ்நிலையை மாற்றாவிட்டால் சூழ்நிலைக்கேற்ப நம்மை  மாற்றுவார்இது நம்மைப்பார்க்கும் மற்றவர்களுக்கு அதிசயம்போலத் தெரியும்.

எனவே நூறு சதம் தேவனையே நம்பிவாழும் விசுவாச  வரம்வேண்டி தேவனிடம் மன்றாடவேண்டியது நமது கடமைஅதுவே மற்றவர்களிடமிருந்து நம்மைத் தனித்துவம்  மிக்கவர்களாக அடையாளம் காட்டும்தேவன்மீது மற்றவர்களும் விசுவாசம்கொள்ள இதுவே வழியாக இருக்கும்.


தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Monday, April 22, 2024

தைரியமாய் அவரிடம் சேர்வோம்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,172     💚 ஏப்ரல் 25, 2024 💚 வியாழக்கிழமை 💚



"ஆதலால் நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்." ( எபிரெயர் 4 : 16 )

நாம் தைரியமாய் ஒரு உயர் அதிகாரியிடம் சென்று நமது பிரச்சனைகளையும் நமது விருப்பங்களையும் கூறவேண்டுமானால் அவரோடு நமக்கு நல்ல உறவு இருக்கவேண்டும். ஒரு மாவட்ட ஆட்சித்தலைவரிடம்கூட  சென்று நாம் துணிவுடன் பேச முடியாது. அப்படியிருக்கும்போது நாட்டின் முதலமைச்சரிடமோ பிரதமரிடமோ நாம் எப்படித் துணிவுடன் சென்று பேசமுடியும்? 

ஆனால் அந்த உயர் பதவியில் இருப்பவர் நமது  தகப்பனாராகவோ தாயாகவோ இருந்தால் நாம் துணிவுடன் தைரியமாகச் சென்று பேசுவோம். காரணம் அவர்கள் நம்மைப் பெற்றவர்கள், நம்மைப்பற்றி அறிந்தவர்கள், வீட்டில் நம்மோடு வாழ்ந்து நாம் உண்ணும் உணவை உண்டு, நாம் வீட்டில் அனுபவிக்கும் பிரச்சனைகளை நம்மைப்போல அனுபவித்து வாழ்கின்றவர்கள்.  

இதனையே இன்றைய தியான வசனத்தின் முந்தைய வசனத்தில் நாம் வாசிக்கின்றோம், "நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்." ( எபிரெயர் 4 : 15 )

இப்படி எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கு இருப்பதால் நாம் அவரிடம் துணிவுடன் சென்று பேச முடியும். இந்த உலகத்தில் நாம் அனுபவிக்கும் அனைத்து துன்பங்களையும் அவர் ஏற்கெனவே அனுபவித்துள்ளார். அவர் நமது தகப்பனாக, தாயாக இருப்பதால் நம்மைப்பற்றி முற்றிலும் அறிந்திருக்கின்றார். 

எனவே அன்பானவர்களே, முதலில் நாம் தேவனோடுள்ள நமது உறவினைச் சரிசெய்யவேண்டியது அவசியம். அவரோடு ஒரு மகனாக மகளாக உறவுடன் வாழ நம்மை ஒப்புக்கொடுத்து வாழ வேண்டும். அப்படி ஒரு உறவுடன் வாழ்வோமானால் இன்றைய தியான வசனம்  கூறுவதுபோல அவரது இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே நாம் சேர முடியும்.  

பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார் என்று கூறியுள்ளபடி நாமும் அவரைப் போலப்  பாவமில்லாதவராக இருக்கவேண்டியது அவசியம். கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்படும்போதுதான்  பாவ மன்னிப்பைப் பெறுகின்றோம்; அவரோடு ஒப்புரவாகின்றோம். அப்படி தேவனோடு ஒப்புரவாகும்போதுதான்  நாம் அவரது பிள்ளைகளாகின்றோம். அப்படிப் பிள்ளைகளாகும்போது தான் இன்றைய வசனம் கூறுவதுபோல அவரை நெருங்கிட நமக்குத் தைரியம் பிறக்கும். 

எனவே அன்பானவர்களே, நம்மை அவருக்கு ஒப்புவித்து ஜெபிப்போம். அன்பான பரம தகப்பனே, உமக்கு விரோதமாக நான் செய்த பாவங்களுக்காக மெய்யாகவே மனம் வருந்தி மன்னிப்பு  வேண்டுகின்றேன். கல்வாரியில் நீர் சிந்தின உமது பரிசுத்த இரத்தத்தால் என்னைக் கழுவியருளும். உமது  விலையேறப்பெற்ற இரட்சிப்பினை நான் அடைந்திடவும் அதனால் உமது பிள்ளையாகிடவும் வரம்தாரும். உமது  இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் உமது உதவி கிடைக்கும் கிருபையை நான் அடையவும் உதவியருளும். மீட்பர் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே. ஆமென். 

 தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,171       💚 ஏப்ரல் 24, 2024 💚 புதன்கிழமை 💚



"விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள். இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும்." ( கொலோசெயர் 3 : 5, 6 )

மனிதர்களின் உடலின் உறுப்புகளே பல்வேறு பாவங்களுக்கு நேராக மனிதர்களை நடத்துகின்றன.  விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை இவைகளுக்கு நமது கால்களும் கைகளும் கண்களும் காரணமாய் இருக்கின்றன. எனவேதான் இன்றைய தியான வசனம் கூறுவதையே நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் கூறினார்.

"உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்." ( மாற்கு 9 : 43 )

"உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்." ( மாற்கு 9 : 45 )

"உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய் நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்." ( மாற்கு 9 : 47 )

இயேசு கிறிஸ்து கூறியது போலவே இன்றைய தியான வசனத்தில், இவைகளை உண்டுபண்ணுகின்ற இந்த உறுப்புகளை அழித்துப்போடுங்கள் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். அழித்துப்போடுங்கள் என்று கூறுவதால் இவைகளை வெட்டி எறிந்துவிடவேண்டுமென்று பொருளல்ல. மாறாக,  இந்த உறுப்புகள் நமக்கு இல்லாதிருக்குமானால் நாம் எப்படி வாழ்வோமோ அதுபோல நாம் வாழவேண்டும் என்று பொருள். பரிசுத்த ஆவியானவர் நம்மில் செயல்புரிந்து இந்த உறுப்புக்கள் பாவத்துக்கு நேராக செயல்படாமல் காத்துக்கொள்ள வேண்டுமென்று பொருள். 

விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை எனும் ஐந்து குறிப்பிட்ட பாவங்களைப்  பட்டியலிட்டு "இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும்." என்று கூறப்பட்டுள்ளது. அதாவது தேவனுடைய பார்வையில் இவைகளே மிகவும் மோசமான பாவங்கள் என்று பொருள். வேதாகமத்தை நாம் வாசிக்கும்போது இந்தப் பாவங்களே பலரை அழிவுக்குநேராக இழுத்துச் சென்றதை நாம் அறிந்துகொள்ளலாம். 

எனவே அன்பானவர்களே, நாம் வெறுமனே ஆலய ஆராதனைகளில் கலந்துகொண்டு,  ஜெபித்து பல்வேறு பக்திமுயற்சிகள் செய்தாலும் இந்தப் பாவங்கள் நம்மில் இருக்குமானால் நமது ஆராதனைகளும் பக்திமுயற்சிகளும் வீணானவைகளே. எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை." (ரோமர் 12:1) என்று கூறுகின்றார். 

நமது சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து புத்தியுள்ள ஆராதனை செய்து வாழ்வோம். அப்போது, கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் வரும் தேவகோபாக்கினைக்குத் தப்பித்துக்கொள்வோம். 

 தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Sunday, April 21, 2024

நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,170      💚 ஏப்ரல் 23, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚



"நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது." ( யாக்கோபு 5 : 16 )

நமது ஜெபம் தேவனால் கேட்கப்படவேண்டுமானால் தேவன் கூறும் ஒரு நிபந்தனை நாம் பிறரது குற்றங்களை மன்னிக்கவேண்டும் என்பதே. அதாவது பிறருடன் இணக்கமான ஒரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு நாம் தேவனிடம் ஜெபிக்கவேண்டும்.  வெறுப்பையும் கசப்பையும் பிறர்மேல் வைத்துக்கொண்டு நாம் ஜெபிப்பது அர்த்தமற்ற ஜெபம். "எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே;" (  லுூக்கா 11 : 4 ) என்று கிறிஸ்து நமக்கு ஜெபிக்கக் கற்றுக்கொடுத்துள்ளார்.

இப்படி பிறர்மேல் எந்தக் கசப்புமின்றி அவர்களுக்காகவும் ஜெபித்து வாழ்பவர்களே நீதிமான்கள் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. இத்தகைய "நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது." என்கின்றார் அப்போஸ்தலரான யாக்கோபு. 

இப்படித்தான் தானியேல் தீர்க்கத்தரிசி ஜெபித்துக் கொண்டிருந்தார். தனது பாவங்களுக்காகவும் மக்களது பாவங்களுக்காகவும் தானியேல் விண்ணப்பம் செய்தார். இதனை நாம், "இப்படி நான் சொல்லி, ஜெபம்பண்ணி, என் பாவத்தையும் என் ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கையிட்டு, என் தேவனுடைய பரிசுத்த பர்வதத்துக்காக என் விண்ணப்பத்தை என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் செலுத்திக்கொண்டிருந்தேன்." ( தானியேல் 9 : 20 ) என்று தானியேல் கூறுவதிலிருந்து அறியலாம்.

"நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது" என்ற வசனத்தின்படி தானியேல் ஊக்கமாய் "ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே, காபிரியேல் தூதன்  வேகமாய்ப் பறந்துவந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான். (  தானியேல் 9 : 21 ) என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது தானியேலின் ஜெபம் தேவ சந்நிதியை எட்டிய அதே நொடியில் தேவன் காபிரியேல் தூதன் மூலம் அந்த ஜெபத்துக்குப் பதிலையும் கொடுத்தனுப்பினார். "நீ மிகவும் பிரியமானவன். ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது. நான் அதை அறிவிக்கவந்தேன்;" ( தானியேல் 9 : 23 ) என்று காபிரியேல் தூதன் கூறுகின்றார்.

அன்பானவர்களே, தானியேல் போல நாம் நமக்காகவும் பிறருக்காகவும் ஜெபிக்கும் அதே வேளையில் தானியேலைபோல தேவனுக்கு முன்பாகவும் உலக காரியங்களிலும் குற்றமற்றவர்களாக நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும்.  ( தானியேல் 6 : 22 )  அப்படி நாம் பரிசுத்தமாய் நம்மைக் காத்துகொண்டு ஜெபிக்கும்போது தேவன் நமது ஜெபங்களுக்குப் பதில் தருவார்.  "நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு" இப்படிச் செய்யுங்கள் என்று இன்றைய தியான  வசனம் கூறுவதுபோல நாம் நமது வியாதிகளிலிருந்தும் , பிரச்சனைகளிலிருந்தும்  விடுதலையடைவோம்.

தானியேலின் ஜெபத்துக்கு ஜெபித்த அதே நேரம்  பதிலளித்த தேவன் நமது ஜெபத்துக்கும் நிச்சயம்  பதிலளிப்பார். ஆம், நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.

 தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Saturday, April 20, 2024

கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,169      💚 ஏப்ரல் 22, 2024 💚 திங்கள்கிழமை 💚


"உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்".(செப்பனியா 3:17) 

இன்றைய தியான வசனம், கிறிஸ்துவுக்குள் வாழும் விசுவாசிகளுக்கு ஆறுதலளிக்கக்கூடிய வசனம்.  தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழும்போது கர்த்தர் நம்மோடிருந்து மகிழ்ந்து களிகூருவார் என்று கூறப்பட்டுள்ளது.

பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளில் சிலர் நன்றாகப் படிக்கின்றவர்களாகவும், பல்வேறு திறமைகளைக் கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். அத்தகைய மாணவ மாணவிகளிடம் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் தனி அக்கறைகொண்டிருப்பார்கள். சிறப்பு நிகழ்ச்சிகளில் அவர்களை முன்னிலைப்படுத்துவார்கள். பள்ளியின் பெயர் பெருமையடைவதால்  அவர்களிடம் சந்தோஷமாய் இருப்பார்கள். 

இதுபோலவே நமது தேவனும் இருக்கின்றார். அவர் பாவிகளை நேசிக்கின்றார், அன்புசெய்கின்றார் என்பது உண்மையென்றாலும் தனக்கு ஏற்புடையவர்களாக  நீதி நேர்மையுடன் வாழும் மக்களிடம் அதிக அன்பு காட்டி கிருபையை அளிக்கின்றார். இப்படி தேவனுக்கு ஏற்புடையவர்களாய் வாழும்போது, அவர் நம்  நடுவில் இருக்கிறார்; நம்மிலிருந்து வல்லமையுடன் செயல்படுவார், நம்மை இரட்சிப்பார்; நம்மேல் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் நம்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார். 

இப்படி கூறப்பட்டுள்ளதால் இவர்களுக்குத் துன்பங்கள் கிடையாது என்று பொருளல்ல. மாறாக, துன்பங்களினூடே ஆறுதலும் மகிழ்ச்சியும் அளித்து அவர்களை கிருபையால் தாங்கி நடத்துவார்.  ஒரு குடும்பத்தின் பாரத்தைச் சுமக்கும் மகளையோ மகளையோ அனைவரும் தாங்கி நடத்துவதுபோலவும், அத்தகைய மகனிடமும் மகளிடமும் குடும்பத்தினர் தனி அக்கறைகாட்டி மகிழ்ச்சியுடன் இருப்பதுபோலவும் தேவன் அவர்களோடு இருப்பார்; அவர்கள்மேல் தனி அக்கறைகாட்டுவார்.

இன்று பரிசுத்தவான்களாக, புனிதர்களாக கருதப்படும் எல்லோரும் இப்படித்  துன்பங்களினூடே கிறிஸ்துவைப் பின்பற்றினவர்கள்தான். அதனால் தேவன் அவர்கள்மேல் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அவர்களைப் பெருமைப்படுத்தினார். 

ஆவிக்குரியவர்களாக நாம் வாழும்போது நம்மை நாமே பெருமைப்படுத்தத் தேவையில்லை. ஆனால் இன்று பல கிறிஸ்தவ ஊழியர்கள் தங்களது பெருமையினைப் பறைசாற்றிட தாங்களே போஸ்டர் விளம்பரங்களும், சாட்சிகளையும் ஏற்பாடுசெய்து தங்களை உயர்த்திக்கொள்ள விரும்புகின்றார். ஆம் அன்பானவர்களே, கர்த்தர் நம்மோடு இருக்கின்றார் என்பதற்கு இத்தகைய உலகம் காட்டக்கூடிய  அளவுகோல்கள் தேவையில்லை. அது நமக்கும் தேவனுக்குமான தனிப்பட்ட உறவின் அடிப்படையிலானது. 

தேவன் நம்மோடிருப்பது நமது ஆவிக்குத் தெரியும். கிறிஸ்துவுக்கு ஏற்ற வாழ்க்கை வாழும்போது நம்  தேவனாகிய கர்த்தர் நம்  நடுவில் இருப்பதையும் அவர் வல்லமையுள்ளவராக நம்மை இரட்சித்து நம்பேரில் அவர்  சந்தோஷமாய் மகிழ்ந்து,  நம்மோடு அவர் அமர்ந்திருப்பதையும்  நமது தனிப்பட்ட வாழ்வில் உணர்ந்து கொள்ள முடியும். இத்தகைய மேலான நிலையினை நாம் ஆவிக்குரிய வாழ்வில் அடைந்திடவேண்டும். கிறிஸ்துவோடு நமது ஐக்கியத்தை வலுப்படுத்தும்போது நாம் இதனை உணர்ந்து அனுபவிக்கலாம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்   

Thursday, April 18, 2024

இரவிலே நடந்தால் இடறுவான் .

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,168       💚 ஏப்ரல் 21, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚


"ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டான். ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாதபடியினால் இடறுவான் ." ( யோவான் 11 : 9, 10 )

பகலில் நடந்து செல்வதற்கும் இரவில் நடப்பதற்கும் வித்தியாசம் உண்டு. இது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்றைய வசனம் ஆவிக்குரிய பொருளில் கூறப்பட்டுள்ளது. நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிவது நம்மைப் பகலுக்கு உரிமையாளர் ஆக்குகின்றது. மாறாக, கிறிஸ்துவை அறியாத வாழ்க்கை இருளின் வாழ்க்கை. 

இதனையே அப்போஸ்தலரான யோவான், "அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது." ( யோவான் 1 : 4 ) என்று கூறுகின்றார்.  ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவின் ஜீவன் மனிதர்களுக்கு ஒளியாக இருக்கின்றது. நம்மை ஒளியிலே நடத்துகின்றது. 

இப்படி கிறிஸ்துவின் ஒளியைப் பெற்றுள்ளவன் இருளில் நடந்தாலும் இடறமாட்டான். இதனையே இன்றைய தியான வசனம், "அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டான். ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாதபடியினால் இடறுவான்." என்று கூறுகின்றது. உலகத்தின் ஒளியாகிய கிறிஸ்து நம்மில்வரும்போது நாமே  வெளிச்சமாகிவிடுகின்றோம். இதனையே இயேசு கிறிஸ்து, "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்" ( மத்தேயு 5 : 14 ) என்று கூறுகின்றார். 

தன்னில் கிறிஸ்துவின் வெளிச்சமில்லாத மனிதன் இரவான சூழ்நிலை வாழ்வில் வரும்போது இடறிவிடுவான்.  காரணம் அவனில் ஒளியில்லாமலிருப்பதுதான். கிறிஸ்துவின் வசனமே நமக்கு ஒளியாக இருந்து வழிநடத்தும் அனுபவம் மேலான ஆவிக்குரிய அனுபவமாகும். அந்த அனுபவத்தால்தான் சங்கீத ஆசிரியர், "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது." ( சங்கீதம் 119 : 105 ) என்று கூறுகின்றார்.

ஆவிக்குரிய இருளில் வாழ்பவன் இடறக்காரணம் அவனது ஆவிக்குரிய தூக்கமும் அவலட்சணமான வாழ்க்கையும்தான். ஆனால் கிறிஸ்துவின் வெளிச்சத்தில் வாழ்பவன்  தெளிவுள்ளவனாகவும், விசுவாசம், அன்பு மற்றும் இரட்சிப்பு அனுபவத்தையும் பெற்றிருப்பதால் இடறமாட்டான். 

இதனையே அப்போஸ்தலரான பவுல், "தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள். பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்."( 1 தெசலோனிக்கேயர் 5 : 7, 8 ) என்று கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவைச் சார்ந்த பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                

எப்போது வாக்குத்தத்தங்களுக்கு உரிமையடைகின்றோம்?

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,167      💚 ஏப்ரல் 20, 2024 💚 சனிக்கிழமை 💚


"அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது." ( எபேசியர் 3 : 12 )

இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது நமக்கு வாழ்வில் என்ன கிடைக்கும் என்பதனை அப்போஸ்தலரான பவுல் இங்கு விளக்குகின்றார். உலக ஆசீர்வாதங்களல்ல; மாறாக, நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் விசுவாசிக்கும்போது நமக்கு முதலில் தைரியம் பிறக்கின்றது. அதாவது கிறிஸ்துவை அறியாமல் நாம் வாழ்ந்திருந்தபோது சின்ன பிரச்சனைகளும் பாடுகளும் நம்மை மனம்தளரச் செய்து நம்மைச் சோர்வுக்குள்ளாக்கிவிடும். ஆனால், அவரை நாம் விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது நமக்கு உற்ற ஒரு தகப்பனாக அவர் இருப்பதால், தைரியம் கிடைக்கின்றது.  

இரண்டாவதாக, "திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது." என்று இன்றைய வசனம் கூறுகின்றது. அதாவது,  நாம் மரித்தால் தேவ சமூகத்தைச் சென்றடைவோம் எனும் திடமான நம்பிக்கை நம்மில் உருவாகின்றது. எனவே, மெய்யான ஒரு கிறிஸ்தவ விசுவாசி சாவைக்கண்டு அஞ்சமாட்டான். கிறிஸ்தவர்களுக்கு எதிரான வேதகலாபனைகளின்போது பலர் இரத்தச் சாட்சிகளாக உயிரைக்கொடுத்தது இந்த நம்பிக்கை இருந்ததால்தான். 

ஒருவர் கிறிஸ்துவை அறிவதற்கு முன் எப்படி இருந்தார், கிறிஸ்துவை  அறிந்தபின்னர் எப்படி மாறிவிடுகின்றார் என்பதனை விளக்கும்போது,  அப்போஸ்தலரான பவுல்,  "அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக் கொள்ளுங்கள்."   ( எபேசியர் 2 : 12 ) என்று கூறுகின்றார். 

அதாவது, கிறிஸ்துவை அறியாத மக்களாக நாம் இருந்தபோது, கிறிஸ்துவைச் சேராதவர்களாக, ஆவிக்குரிய இஸ்ரவேலுடைய உரிமைகள் இல்லாதவர்களாக, வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியராக,  நம்பிக்கையில்லாதவர்களாக,  இவ்வுலகத்தில் கடவுள் இல்லாதவர்களாக இருந்தோம் என்று கூறுகின்றார். 

கிறிஸ்துவை விசுவாசிப்போருக்கு மட்டுமே ஆவிக்குரிய உரிமைகள் உண்டு. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவரை நாம் அறியாமலிருந்தபோது வேதத்தில் பல நூறு வாக்குத்தத்தங்கள் இருந்தாலும் தேவனுடைய அந்த  வாக்குத்தத்தங்களின் உரிமை நமக்கு இல்லாமலிருந்தது. பெயரளவுக்கு மட்டும் அந்த வாக்குத்தத்தங்களை வாசித்து அவற்றைச் சொல்லி ஜெபித்துக்கொண்டிருந்தோம். ஆனால் உண்மையில் அவற்றுக்கு நாம் அந்நியராக இருந்தோம். கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டபின்னரே நாம் அவற்றுக்கு உரிமையுள்ளவர்கள் ஆனோம்.  

அன்பானவர்களே, வெறுமனே "கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன்" என்று கூறிக்கொண்டிருப்பதால் பலனில்லை. முதலில் நமது பாவங்கள் மன்னிக்கப்படும் பாவ மன்னிப்பின் நிச்சயத்தை நாம் பெறவேண்டும். அப்போதுதான் நாம் கிறிஸ்துவை விசுவாசிக்கின்றோம் என்று கூறிக்கொள்ள முடியும். அந்த அனுபவத்தை வாழ்வில் நாம் பெறும்போதுதான்  அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாகும்.

இன்றைய வசனம் அப்படி கிறிஸ்துவை அறிந்து ஏற்றுக்கொண்டவர்களுக்கு பவுல் அப்போஸ்தலர் எழுதியதாகும்.  எனவே இந்த அனுபவங்களையும் உரிமைகளையும் பெற்ற நீங்கள் தவறான உலக ஆசீர்வாத போதனைகளால் ஏமாறி கிறிஸ்துவைவிட்டு பின்மாறிப் போகாதிருங்கள் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். ஆவிக்குரிய வாழ்வில் கவனமுடன் தொடர்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்