- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
"விதைகளின் உள்ளே" 🌳
"என்னைவிட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து நெருங்கியிருக்கிறது, சகாயரும் இல்லை. அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்து கொண்டன." ( சங்கீதம் 22 : 11, 12 )
இன்றைய தியான வசனம் தாவீது தனக்கு உண்டான மிகுந்த நெருக்கடியில் பாடிய சங்கீதமாகும். தனது உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம் எனும் சூழ்நிலை. சவுலும் அவனது படைவீரர்களும் தாவீதைக் கொல்வதற்கு வகைத்தேடி நெருக்குகின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில் தனது சுய முயற்சி பலன் தராது என்பதனைத் தாவீது உணர்ந்திருந்தார். எனவேதான் தேவனை நோக்கிக் கதறுகின்றார்.
"என்னைவிட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து நெருங்கியிருக்கிறது, சகாயரும் இல்லை" என்கின்றார். அதாவது தேவனே, எனக்கு உதவிசெய்ய யாருமில்லை; காளைகளும் பலத்த எருதுகளும் போல எதிரிகள் என்னைச் சுற்றி நிற்கின்றனர், நீர் என்னைவிட்டுத் தூரமாய்ச் சென்றுவிடாதேயும் என்கின்றார்.
இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலை நமக்கும் பல்வேறு சமயங்களில் ஏற்படலாம். நமக்கு உதவக்கூடிய மனிதர்கள், உறவினர்கள், நண்பர்கள் யாரும் இல்லாதிருக்கலாம். அத்தகைய வேளைகளில் தேவனைத் தவிர வேறு யாரையும் நாம் உதவிக்கு அழைக்க முடியாது. ஆனால், தேவன் நம்மோடு இருக்கின்றார் எனும் நிச்சயம் நமக்கு இருக்குமானால் நாம் இத்தகைய சூழ்நிலையிலும் தைரியமாக நிற்கலாம். இந்த நிச்சயம் தாவீதுக்கு இருந்ததால் தேவனை நோக்கிக் கதறினாலும் அடுத்த சங்கீதத்தில் நம்பிக்கையுடன் கூறுகின்றார்:-
"நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்." ( சங்கீதம் 23 : 4 )
தாவீது ஆடு மேய்பவராக இருந்ததால் வனாந்தரத்தில் ஆடுகளுக்கு ஏற்படும் துன்பங்களை நன்கு அறிந்திருந்தார். கொடிய வனவிலங்குகள் ஆடுகளைக் கவர்ந்து செல்ல வருவதுண்டு. அப்போது மேய்ப்பர்கள் சேர்ந்து அவற்றைத் துரத்தி ஆடுகளுக்குப் பாதுகாப்பு அளிப்பார்கள். தேவனுக்கும் தனக்குமான உறவையும் இத்தகையதாகத் தாவீது கருதியதால், தேவனே மேய்ப்பனைப்போல வந்து எனக்கு உதவும் என்று விண்ணப்பம் செய்கின்றார். "என்னைவிட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து நெருங்கியிருக்கிறது" என்கின்றார்.
"விதைகளின் உள்ளே" 🌳
"ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளையத்துக்குத் திரும்பினான்; நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்."( யாத்திராகமம் 33 : 11 )
மோசே ஆசரிப்புக் கூடாரத்துக்குள் நுழையும்போது தேவன் மேகத்தில் எழுந்தருளி மோசேயோடு முகமுகமாய்ப் பேசினார். ஒரு நண்பனுடன் பேசுவதுபோல தேவன் மோசேயுடன் பேசினார் என்று கூறப்பட்டுள்ளது. மோசே இப்படி தேவனுடன் பேசும்போது அங்கு அவர் அருகில் நின்றுகொண்டிருந்த யோசுவா அவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார்.
இப்படி நமக்கு ஒரு வாய்ப்பு இருக்குமானால் எப்படியிருக்கும் என எண்ணிப்பாருங்கள்; அந்த மகிமையான காட்சியை மனதில் எண்ணிப்பாருங்கள். நமது அருகில் இருக்கும் மனிதனிடம் தேவன் பேசுவதை நாம் கேட்டால் எப்படி இருக்கும்? யோசுவாவினால் இந்த அற்புதமான காட்சியை மறக்கமுடியவில்லை. மட்டுமல்ல, அதுபோன்ற அனுபவம் தனக்கும் வேண்டும் எனும் ஆர்வம் யோசுவாவுக்கு இருந்தது. எனவேதான் அந்த இடத்தைவிட்டு மோசே பாளையத்துக்குத் திரும்பியபின்பும் யோசுவாவிற்கு திரும்ப மனமில்லை. எனவே அவன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தார். அதாவது, யோசுவா மோசேயின் பணியாளனாக இருந்தாலும் மேலான தேவ நோக்கம் கொண்டவராக இருந்தார்; ஆவிக்குரிய வளர்ந்த ஒரு நிலையை அவர் விரும்பினார்.
ஆம் அன்பானவர்களே, இத்தகைய தேவனைவிட்டுப் பிரியாத மனநிலை நமக்கும் இருக்க வேண்டியது அவசியம். இப்படிச் சொல்வதால், நமக்குக் குடும்பம் இல்லையா என்று ஒருவேளை நீங்கள் எண்ணலாம். யோசுவாவுக்கும் குடும்பம் இருந்தது, மனைவி மக்கள் இருந்தனர். ஆனால், அவற்றைவிட யோசுவா தேவனோடு பொழுதைக்கழிப்பதில் ஆர்வமுள்ளவராக இருந்தார். "நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்" ( யோசுவா 24 : 15 ) என்று தான் மட்டுமல்ல, தனது குடும்பமும் கர்த்தரையே சேவிப்போம் என்று உறுதியுடன் கூறினார்.
யோசுவாவின் இந்த அர்ப்பணிப்பான ஊழியத்தைத் தேவன் கனம்பண்ணத் தவறவில்லை. எனவேதான் மோசேக்குப்பின் யோசுவாவைத் தெரிந்துகொண்டார். "நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை." ( யோசுவா 1 : 5 ) என்று வாக்களித்தார்.
"விதைகளின் உள்ளே" 🌳
"தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்."( யூதா 1 : 21 )
காத்திருக்கும் ஆவிக்குரிய அனுபவம் குறித்து இன்றைய தியான வசனம் கூறுகின்றது. ஆவிக்குரிய உன்னதமான ஒரு ஆலோசனையாக இன்றைய தியான வசனம், நாம் முதலில் தேவனுடைய அன்பைவிட்டு விலகிடாமல் நம்மைத் தற்காத்துக்கொண்டு கிறிஸ்துவின் இரகத்தைப் பெறுவதற்குக் காத்திருக்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றது. தேவனை ஆராதிப்பது என்பது வேறு, அவரது அன்பில் நம்மைக் காத்துக்கொள்வது என்பது வேறு. தேவனை யாரும் ஆராதிக்கலாம்; அவரைத் தனிப்பட்ட விதத்தில் அறியாதவர்களும் ஆராதிக்கலாம். ஆனால், அவரது அன்பில் நாம் நம்மில் நிலைத்திருந்தால் மட்டுமே நாம் மெய்யான கிறிஸ்தவர்கள்.
தேவனை ஆராதிப்பவர்கள் அனைவரும் அவரை உண்மையாக அன்பு செய்வதில்லை. காரணம், வேத வசனம் கூறுகின்றது, "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்" ( 1 யோவான் 5 : 3 ) தேவன் தன்னை ஒருவர் ஆராதிப்பதைவிட ஆராதிக்கும் மனிதனின் தனிப்பட்ட சுபாவ மாற்றத்தை அதிகம் விரும்புகின்றார்; அவரது வசனங்களுக்குக் கீழ்ப்படிந்து பொறுமையாக காத்திருந்து வாழும் வாழ்வை விரும்புகின்றார்.
இன்றைய தியான வசனத்தில், துன்பங்களை மேற்கொண்டு தேவ வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து தேவனுடைய அன்பிலே நம்மைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருக்க வேண்டும் என்கின்றார் அப்போஸ்தலரான யூதா. கிறிஸ்துவின் இரகத்தைப் பெறுவதற்குக் காத்திருக்கவேண்டும் என்பது, நாம் நம்மில் தேவ அன்புள்ளவர்களாய் பொறுமையாய் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்து வரவேண்டியதைக் குறிக்கின்றது.
அப்போஸ்தலரான பவுல், "ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்." ( ரோமர் 8 : 23 ) என்று கூறுகின்றார். அதாவது, தேவனுடைய புதல்வரும் புதல்வியருமாக மாறிட நாம் காத்திருந்து, ஆர்வமுடன் தவித்து இருக்கவேண்டும் என்று கூறுகின்றார். அதனையே அப்போஸ்தலரான யூதா இன்றைய தியான வசனத்தில், "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்" என்று கூறுகின்றார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தனது சீடர்களிடம், "ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 5 ) எருசலேம் என்பது பரிசுத்த நகரம். உங்களது பரிசுத்தத்தை இழந்துவிடாமல் அதில் நிலைத்திருந்து காத்திருங்கள் என்றும் நாம் பொருள் கொள்ளலாம்.
"கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்". (ஏசாயா 40:31) காத்திருந்து ஆவிக்குரிய பெலனை பெற்றுக்கொள்வோம். அப்போது நமது ஆவிக்குரிய ஓட்டம் சிறப்பானதாக, தேவனுக்கு ஏற்றதாக இருக்கும். சீடர்கள் காத்திருந்துதான் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றார்கள்; உலகம் எத்திசையிலும் சாட்சியாக விளங்கினார்கள்.
"விதைகளின் உள்ளே" 🌳
இன்றைய தியான வசனம் தேவனே மெய்யான, மேலான போதகராக இருக்கின்றார் என்பதனையும் அவரது வழிநடத்துதல் மட்டுமே நம்மை நேரான பாதையில் நடத்தும் என்பதனையும் நமக்கு உணர்த்துகின்றது.
இந்த உலகினில் தங்களை தேவனுடைய ஊழியக்காரர்கள் என்று கூறிக்கொள்ளும் மனிதர்கள் வேதாகம வசனங்களுக்கு வெல்வேறு அர்த்தம் சொல்லி நம்மை நம்பவைக்கலாம். ஆனால், கர்த்தரது போதனையும் வேத வசனங்களுக்கு அவர் தரும் தெளிவும் வித்தியாசமானவை. காரணம், நம் தேவனாகிய கர்த்தர் வெறுமனே நாம் ஆராதிக்கும் ஒரு உருவமோ உயிரற்றவரோ அல்ல. நம்மிடமிருந்து ஆராதனையையும் புகழ்ச்சியையும் பெறுவதில் குறியாக இருபவரல்ல. மாறாக, நாம் அவரைப்போல பரிசுத்தராகவும் அவரது சாயலாக மாறவும் வேண்டும் என ஆசைப்படுபவர்; அப்படி மாறிட நமக்கு உதவுபவர்.
எனவே, கர்த்தரது வழிநடத்தலுக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுக்கும்போது நம்மை அவர் ஜீவவழியில் நடத்துவார். இன்றைய வசனத்தில் அதனைத்தான் அவர் கூறுகின்றார், "பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே" என்று. ஆம் அன்பானவர்களே, அவரது வழி நடத்தலுக்கு நம்மை நாம் ஒப்புக்கொடுக்கவேண்டியது அவசியம். மனிதர்களது உபதேசங்கள் கொஞ்சகாலம் நமக்குக் கைகொடுக்கலாம். ஆனால் நிரந்தரமான போதனையும் வழிநடத்துதலும் கர்த்தரிடமே உண்டு.
"நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்."( சங்கீதம் 32 : 8 ) என்று வாசிக்கின்றோம். அதாவது, அவர் நமக்குப் போதனை மட்டும் செய்பவரல்ல மாறாக நாம் நடக்கவேண்டிய வழியைக் காண்பிப்பதோடு அந்த வழியில் நாம் நடக்கின்றோமா என்பதனைக் கண்காணித்து நமக்கு ஆலோசனையும் வழங்குபவர்.
இஸ்ரவேல் மக்களை தேவன் அக்கினித் தூணினாலும் மேகத் தூணினாலும் வழிநடத்தினார். அந்த அக்கினி ஸ்தம்பமும் மேக ஸ்தம்பமும் அவர்களைச் சரியாக வழிநடத்தியது. அந்த வழி நடத்தலுக்கு அவர்கள் கீழ்ப்படிந்து பயணம் செய்ததால் தான் எதிரி ராஜாக்களை முறியடித்து கானான் தேசத்தில் நுழைய முடிந்தது. இதனை நாம் யாத்திராகமம் புத்தகத்தில் வாசிக்கலாம். "வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணப் புறப்படுவார்கள். மேகம் எழும்பாதிருந்தால், அது எழும்பும் நாள்வரைக்கும் பிரயாணம்பண்ணாதிருப்பார்கள்." ( யாத்திராகமம் 40 : 36, 37 )என்று வாசிக்கின்றோம்.
ஆம், பிரயோஜனமாயிருக்கிறதை நமக்குப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழியிலே நம்மை நடத்துகிற தேவனாகிய கர்த்தர் அவரே. இந்த உலகத்தில் வாழ்ந்த பல பரிசுத்தவான்களும் இப்படித் தேவனாகிய கர்த்தரின் வழிநடத்துதலின்படி நடந்து வாழ்வில் வெற்றிபெற்றவர்கள்தான்.
ஜார்ஜ் முல்லர் எனும் தேவ மனிதனது வாழ்க்கை, சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த சாது சுந்தர்சிங் அவர்களது வாழ்க்கை இவற்றை நாம் வாசிக்கும்போது எப்படி தேவன் அவர்களை அன்றாட வாழ்வில் வழிநடத்தினார் என்று அறிவது வியப்பாக இருக்கும். அதே வழிநடத்துதலோடு இன்றும் அவர் தன்னைப் பற்றிக்கொள்ளும் விசுவாசிகளை வழிநடத்துகின்றார். ஆம், "அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராகவே இருக்கின்றார்". (எபிரெயர் 13:8).
அன்பானவர்களே, நாம் ஆலயங்களுக்குச் செல்லலாம், ஜெபக்கூட்டங்களில் பங்கு பெறலாம், ஆலயப் பணிகள் செய்ய உழைக்கலாம் ; ஆனால், தேவனோடு நமக்குத் தனிப்பட்ட உறவு இல்லையானால் எல்லாம் வீண்தான். அவரது வழிநடத்தலுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து வாழும்போதுதான் தேவனது அருகாமையையும் அவர் நம்மை வழிநடத்துவதையும் வாழ்வில் கண்டுணர முடியும்.
இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணப் பல்வேறு ஊழியர்களை நாடி ஓடுகின்றனர். அதே அளவு ஆர்வத்தினை அவர்கள் தேவன்மேல் வைத்தார்களானால் நலமாய் இருக்கும். "பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே, என்னிடம் வா" என்று அறைகூவல்விடுத்து நம்மை அழைக்கின்றார் தேவன். அவரது குரலுக்குச் செவிகொடுத்து அவரிடம் வருவோமானால் ஊழியர்கள் காட்டும் வழியைவிட மேலான வழியை நமது வாழ்வில் தேவன் காட்டுவார். அவர் காண்பிக்கும் வழியே மேலான வழியாக இருக்கும். தேவ ஊழியர்கள் காட்டும் வழியையல்ல; தேவன் காட்டும் வழியை வாழ்வில் அறிந்திட முயல்வோம்.
கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது எல்லாவித தீமையான காரியங்களையும் வெறுத்து கர்த்தருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்வதைக் குறிக்கின்றது. "தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்." ( நீதிமொழிகள் 8 : 13 ) என்று நாம் வாசிக்கின்றோம். இப்படி கர்த்தருக்குப் பயப்படும் மனிதனது வாழ்வில் தீமை அணுகாது என்று கூறப்பட்டுள்ளது.
இதனையே சங்கீத ஆசிரியர், "எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய். ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது." ( சங்கீதம் 91 : 9, 10 ) என்றும் கூறுகின்றார்.
அன்பானவர்களே, இன்று நாம் எல்லோருமே தீமை நம்மை அணுகக்கூடாது என்றுதான் ஜெபிக்கின்றோம். ஆனால் அப்படி ஜெபித்தால் மட்டும் போதாது கர்த்தருக்குப் பயப்படும் பயம் நமக்கு வேண்டும். பலரும் இன்று ஜெபத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நடைமுறை வாழ்க்கைக்குக் கொடுப்பதில்லை. ஜெபம் மட்டுமல்ல, ஜெபிக்கும் நாம் தீமையை வெறுக்கின்றவர்களாகவும் இருக்கவேண்டியது அவசியம். அதுவே கர்த்தருக்குப் பயப்படும்பயம்.
நாம் இப்படிக் கர்த்தருக்குப் பயப்படும் வாழ்க்கை வாழும்போது தீமையான காரியங்கள் நமது வாழ்வில் வராது என்று பொருளல்ல; சோதனைகள் நமது வாழ்வில் ஏற்படாது என்று பொருளல்ல, ஆனால் ஆனால் அத்தகைய சோதனைகளில் தேவன் அவற்றிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ளும் வழியையும் உண்டாக்குவார். "மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்." ( 1 கொரிந்தியர் 10 : 13 )
ஆம், கர்த்தருக்குப் பயப்படும் வாழ்க்கை வாழும்போது அவர் நமது துன்பங்களை நாம் தாங்கத்தக்கப் பலத்தை நமக்குத் தருவார். மட்டுமல்ல, "கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்." ( சங்கீதம் 34 : 7 ) என்று கூறப்பட்டுள்ளது.
கர்த்தருக்குப் பயப்படுத்தல் என்பது அவரது ஆசீர்வாதம் கிடைக்காமல் போகுமோ எனும் பயத்தில் வேதாகமத்தை வாசிப்பதும், ஜெபிப்பதும், ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்வதும், உபவாசிப்பதும், காணிக்கைகள் கொடுப்பதும் அல்ல; மாறாக அவர்மீது மெய்யான அன்புகொண்டு அந்த அன்பினால் ஏவப்பட்டவர்களாக அவருக்கேற்ற வாழ்க்கை வாழ்வதைக் குறிக்கின்றது. அத்தகைய தேவ அன்புள்ள மனிதர்களது ஜெபங்கள் வித்தியாசமானதாக இருக்கும். அத்தகைய மனிதர்கள் பாவத்தை வெறுக்கின்றவர்களாக இருப்பார்கள். அதுவே கர்த்தருக்குப் பயப்படுதல். அதுவே ஜீவனுக்கேதுவானது என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.
"அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 24 : 25 )
அப்போஸ்தலரான பவுல்மேல் யூதர்கள் குற்றம் சுமத்தி அவர் உரோமையில் விசாரணைக் கைதியாக இருந்தார். அப்போது அவரிடம் பேலிக்ஸ் ராஜா விசாரணை செய்தான். ராஜாவுக்கு பவுல் அப்போஸ்தலர் கூறிய பதில்களும் மறுமொழிகளும் சுவிசேஷ அறிவிப்புகளாகவே வெளிவந்தன. பவுல் பேசிய பேச்சுக்களைக் கேட்டு பேலிக்ஸ் பயமடைந்தான் என்று இன்றைய தியானத்துக்குரிய வசனம் கூறுகின்றது.
உண்மையினை நேருக்குநேர் சந்திக்க பலரும் விரும்புவதில்லை. பேலிக்ஸ் ராஜாவும் அப்படியே இருந்தான். பவுல், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்தான் என்று வாசிக்கின்றோம். இந்த பயத்துக்குக் காரணம் என்ன? அவனிடம் நீதி, இட்சையடக்கம் போன்ற குணங்கள் இல்லை என்று பொருள்.
பொதுவாக மனிதர்களுக்குத் தங்களது குற்றங்கள் குறைகளையும் பாவங்களையும் பிறர் எடுத்துக்கூறுவது பிடிக்காது. அதிலும் ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களுக்கு தங்களைப் பிறர் குறைகூறுவது ஏற்கவே முடியாதது. ஆனால், அதனை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே தங்களது வாழ்க்கையினை மாற்றிக்கொள்ள வழியுண்டு. விசாரணைக் கைதியான பவுல் பேசிய பேச்சுக்கள் பேலிக்சை உள்ளத்தில் குத்தியதால் அவன் பயமடைந்தான். ஆனாலும் அவன் மனம் திரும்பவில்லை.
"ஆதவன்" வேதாகம தியானங்களைச் சில கிறிஸ்தவ ஊழியர்கள் விரும்புவதில்லை. சிலர் ஏதாவது தேவையற்ற விமரிசனங்களைச் சொல்வார்கள். ஆனால் நான் கவனித்த ஒரு விசயம், குறைகூறும் இந்த ஒருசில ஊழியர்கள் வாழ்க்கையில் ஏதாவது குறையுள்ளவர்களாக இருப்பர். உதாரணத்துக்குச் சில:- தனது மனைவியை ஒதுக்கி வைத்துவிட்டு தான் நடத்திய கடையில் பணிசெய்த பெண்ணை மனைவிபோல சேர்த்துவைத்துக்கொண்டு வாழ்பவர், நிதி மோசடி வழக்குகளில் சிக்கி நீதிமற்றத்துக்கும் வீட்டுக்குமாக அலைபவர், ரியல் எஸ்டேட் நடத்துவதாகக் விளம்பரம் செய்து பொய்களைக்கூறி ஒன்றுக்கும் உதவாத நிலத்தை அடுத்தவர் தலையில் கட்டிவிட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்பவர்..... இவர்களே.
இதுபோன்ற செயல்பாடுகளைக் கொண்டவர்களுக்கு வேத வசனங்கள் கசக்கவேச் செய்யும். எப்போதும் ஆசீவாத வசனங்களையே கூறிக்கொண்டிருந்தால் பாராட்டுவார்கள். அப்போஸ்தலரான பவுல் பேசிய வார்த்தைகள் இதுபோலவே பேலிக்ஸ் ராஜாவை அச்சுறுத்தின. எனவே அவன், "நீ போகலாம், எனக்குச் சமயம் கிடைக்கும்போது உன்னை அழைப்பேன்" என்று கூறி அனுப்பிவிட்டான்.
அன்பானவர்களே, தேவன் எல்லோரும் மனம் திரும்பவேண்டுமென்று விரும்புவதால் பொறுமையோடு காத்திருந்து பல்வேறு விதமாகத் தன்னை மக்களுக்கு வெளிப்படுத்துகின்றார். அந்தச் சந்தர்ப்பங்களை நாம் பயன்படுத்தாமல் பேலிக்ஸ் ராஜாவைப்போல, "எனக்குச் சமயம் கிடைக்கும்போது பேசலாம், நீ போ " என உதறிவிட்டோமானால் இரட்சிப்பு அனுபவத்தை நாம் பெறமுடியாது. "அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்." ( 2 கொரிந்தியர் 6 : 2 )
குறிப்பிட்ட சில வேத வசனங்களைக் கேட்கும்போது நமக்கு எரிச்சலோ, கோபமோ பயமோ வருகின்றது என்றால் நம்மிடம் ஏதோ குறை இருக்கின்றது என்று பொருள். வசனத்தின்மேலோ, அதனைக் கூறுபவர் மேலோ கோபம் கொள்ளாமல் நம்மை ஆராய்ந்துபார்த்து தேவனிடம் மன்னிப்புக் கேட்டு மனம் திரும்புவோம்.
இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு இனிமேல் வரும்போது அவரைக்கண்டு பயப்பட்டு வெட்கப்பட்டு நாம் கைவிடப்பட்டவர்களாய்ப் போய்விடக்கூடாது என இன்றைய தியான வசனத்தில் நமக்கு அறிவுறுத்துகின்றார் அப்போஸ்தலராகிய யோவான். நமது பள்ளிக்கு ஆய்வாளர் (Inspector) வரப்போகின்றார் என்று தெரிந்தால் நாம் எவ்வளவு கவனமாக ஏற்பாடுகளைச் செய்வோம்!!. அப்படி அவர் வரும்போது ஒரு பயம் எல்லோருக்கும் இருக்கும். அப்படி பயப்படும்போது தெரிந்த கேள்விக்குக்கூட நம்மால் சரியாகப் பதில் கூறமுடியாது. நம்மிடம் ஆய்வாளர் ஒரு சாதாரண கேள்வியைக் கேட்கும்போது அதற்குப் பதில்சொல்லத் தெரியாமல் நாம் இருந்தால் எவ்வளவு வெட்கப்படுவோம்!!
நாம் கிறிஸ்து வரும்போது அப்படி பயந்து வெட்கத்துக்குள்ளாகிவிடக்கூடாது; நரகத்தின் மக்களாகிவிடக்கூடாது. நாம் அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது நமக்குப் பயம் வராது; மாறாக அவரை எதிர்பார்த்திருந்து அவர் எப்போது வருவார் என ஆவல்கொள்ளச்செய்யும்.
இன்றைய தியானத்துக்குரிய வசனத்தின் முந்தின வசனத்தில் அப்போஸ்தலரான யோவான், "நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக." ( 1 யோவான் 2 : 27 ) என்கின்றார்.
அதாவது தேவனைச் சார்ந்து பரிசுத்த ஆவியானவரின் துணையையே விசுவாசமாய் ஏற்றுக்கொண்டு அபிஷேகத்தோடு வாழ்வோமானால், அனைத்தையும் அவரே நமக்கு உணர்த்திப் போதித்து நம்மை வழி நடத்துவார். அதன்படி நாம் நிலைத்து வாழவேண்டும். அப்படி நிலைத்திருப்போமானால், அவர் வரும்போது பயப்படமாட்டோம்; வெட்கப்படமாட்டோம்.
அன்பானவர்களே, நாம் அதிகமாக பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்துக்காக ஜெபிக்கவேண்டியது அவசியம். ஏனெனில் சபைப் போதகர்களல்ல, ஆவியானவரே நம்மைச் சத்தியமான பாதையில் நடத்திட முடியும். "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." ( யோவான் 16 : 13 ) என்றார் இயேசு கிறிஸ்து.
பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி வாழும்போது மட்டுமே நாம் அவர் வெளிப்படும்போது அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாய் இருக்கமுடியும். எனவேதான் ஆவியானவரின் அபிஷேகத்துக்காக நாம் அதிகம் ஜெபிக்கவேண்டியுள்ளது நமது அனைவரின் கடமையாகும்.
"வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான்" ( யோவான் 6 : 58 )
"உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார் என்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 7 : 35 )
இந்த உலகம் ஏழ்மையானவர்களையும், அற்பமாக எண்ணப்படுபவர்களையும் மக்கள் செல்வாக்கு இல்லாதவர்களையும் அவர்களது சொல்லையும் எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. "இவன்தானே / இவள் தானே" எனும் ஏளனப் பார்வையே இதற்குக் காரணம். இது தற்போதுள்ள நிலைமையல்ல, காலாகாலமாக இதுதான் இந்த உலகத்தின் நிலை.
மோசேயையும் எபிரெயர்கள் அன்று அப்படிதான் எண்ணிக்கொண்டனர். எனவே சண்டையிட்டுக்கொண்டிருந்த இரண்டு எபிரேயர்களை மோசே கண்டு அநியாயம் செய்தவனை நோக்கி, "நீ உன் தோழனை அடிக்கிறது என்ன? " என்று கேட்டபோது அவன் மோசேயைப்பார்த்து, "உன்னை எங்கள்மேல் அதிகாரியாகவும் நியாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்?" என்று கேட்டான். (யாத்திராகமம் 2:13,14). ஆனால் தேவன் மோசேயை அப்படியே விட்டுவிடவில்லை. அந்த மோசேயையே அவர்களுக்குத் தலைவனாகவும் மீட்பனாகவும் ஏற்படுத்தினார்.
இன்று நமது ஊரில் அல்லது நாம் பணிசெய்யும் இடங்களில் நம்மையும் சிலர் இப்படி, "இவன் தானே / இவள்தானே" என எண்ணலாம். அல்லது மோசேயிடம் கூறியதுபோல நேரடியாகவே நம்மைப்பார்த்துக், "நீ என பெரிய யோக்கியனா?" என ஏளனமாகப் பேசலாம். காரணம், நாம் கூறும் நியாயங்கள் அநீதி செய்பவர்களுக்கு ஏற்புடையவை ஆகாது.
ஆனால் தேவன் நமது ஒவ்வொரு செயலையும் பார்த்துக்கொண்டிருக்கின்றார். நாம் படுகின்ற அவமானம், புறக்கணிப்பு இவைகளை அவர் அறிவார். நாம் தேவனோடு நெருங்கிய தொடர்புகொண்டு அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது தேவன் நிச்சயமாக நம்மைப் புறக்கணித்த மக்கள் மத்தியில் நம்மை தலை நிமிரச்செய்வார்.
புறக்கணிக்கப்பட்ட இந்த மோசேதான் அடிமைப்பட்டிருந்த மக்களை பிற்காலத்தில் விடுவித்து எகிப்தைவிட்டு கானானை நோக்கி வழி நடத்தினார். இதுபோல நாம் வாழும் சமூகத்தில் தேவன் நம்மை பிற்காலத்தில் உயர்த்திவைக்க நமது சிறுமைப்படுதல் அவசியமாயிருக்கின்றது. மனிதர்களைத் தேவன் பயன்படுத்துமுன் தனக்கு ஏற்புடையவர்கள் ஆக்கும்படி பல்வேறு துன்பங்களால் புடமிடுகின்றார். எனவே துன்புறும் மனிதர்களைப்பார்த்து நாம் அற்பமாக எண்ணிவிடக்கூடாது. தேவன் அவர்கள் பக்கம் இருந்து செயல்பட்டுக்கொண்டிருக்கலாம். அது நமக்குத் தெரியாது.
மோசேயைத் தேவன் உடனேயே உயர்த்திவிடவில்லை. மோசேயைப்பற்றி கூறப்பட்டுள்ள மேற்படி சம்பவம் நடைபெற்று நாற்பது ஆண்டுகளுக்குப்பின்னர்தான் தேவன் மோசேக்குத் தரிசனமாகி அவரை மக்களுக்குத் தலைவனாக ஏற்படுத்தினார்.
அன்பானவர்களே, நமது ஊரிலோ பணிசெய்யும் இடங்களிலோ நியாயமாகச் செயல்படும் அற்பமானவர்களை நாம் மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். ஆம், ஒருவேளை தேவன் அத்தகைய மனிதர்களோடு இருந்து செயல்பட்டுக்கொண்டிருப்பார். அற்பமாக, அவலட்சணமாகக் காணப்படும் புழுதான் பின்னர் அழகிய வண்ணங்களோடு சிறகடித்து வானில் பறக்கின்றது.

No comments:
Post a Comment