Monday, November 04, 2024

2 கொரிந்தியர் 7 : 1

 'ஆதவன்' 💚நவம்பர் 11, 2024. 💚திங்கள்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,373

 

"பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்." ( 2 கொரிந்தியர் 7 : 1 )

நமது தேவன் எதிலும் முழுமையை விரும்புகின்றவர். அதனையே இங்கு பூரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆவிக்குரிய வாழ்வில் பூரணம் என்பது நாம் தேவனைப்போல பரிசுத்தமாவது. நாம் அதனை நோக்கியே பயணிக்கவேண்டும். அதற்கான வழியாக அப்போஸ்தலரான பவுல், "மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு"  என்று குறிப்பிடுகின்றார். அதாவது நாம் உடலளவிலும் ஆத்தும அளவிலும் சுத்தமாக இருக்கவேண்டும்.

உடலளவில் சுத்தம் என்பது வெறுமனே தினமும் சோப்புப்போட்டு குளிப்பதைக் குறிப்பிடவில்லை. அப்படி உலகிலுள்ள எல்லோரும் குளிக்கின்றனர். ஆனால் கிறிஸ்த வாழ்வில் உடலளவில் சுத்தம் என்பது பாவமில்லாமல் உடலைப் பேணுவத்தைக் குறிக்கின்றது. "களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம். துர்யிச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்." ( ரோமர் 13 : 13, 14 ) என்று வாசிக்கின்றோம். முதலில் இத்தகைய அழுக்கு நம்மைத் தாக்காமல் காத்துக்கொள்ளவேண்டும்.

வெறும் ஆவிக்குரிய ஆராதனைகளில் கலந்துகொள்வது மட்டுமல்ல, உள்ளான மனிதனில் நாம் தூய்மையானவர்களாக வாழவேண்டியது அவசியம். இவை அனைத்தும் நம்மில் செயல்படவேண்டுமானால் முதலில் கிறிஸ்து இயேசுவின்மேல் அசைக்கமுடியாத விசுவாசம் இருக்கவேண்டியது அவசியம். அப்படி விசுவாசம் கொண்டு "அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்." ( 1 யோவான்  1 : 7 ) என்று கூறப்பட்டுள்ளது. 

இப்படி உடல் சுத்தத்தைப் பேணுவதுமட்டுமல்ல, தொடர்ந்து, மனம்திரும்புதலுக்கான ஞானஸ்நானம் பெறவேண்டியது அவசியம். அது மாம்சஅழுக்கு நீங்குவதற்கு ஒரு அடையாளம். மேலும்  அது கிறிஸ்துவோடு நாம் செய்துகொள்ளும் நல்மனசாட்சியின் உடன்படிக்கை என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பேதுரு. "ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.  ( 1 பேதுரு 3 : 21 ) என்கின்றார்.

தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியுடன் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசம் கொள்ளும்போதுதான் நம்மில் பரிசுத்தம் ஏற்படமுடியும். எனவேதான் அப்போஸ்தலரான யோவான் கூறுகின்றார்,  " அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக் கொள்ளுகிறான்." ( 1 யோவான்  3 : 3 )  நாமும் அவர்மேல் அசைக்கமுடியாத நம்பிக்கைக் கொண்டு பாவ மன்னிப்பைப்பெற்று, அதனை உறுதிப்படுத்தும் உடன்படிக்கையான  ஞானஸ்நானத்துடன் அவரைப்போல  பூரணம் அடைந்திடுவோம்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Sunday, November 03, 2024

மாற்கு 12 : 17

 'ஆதவன்' 💚நவம்பர் 10, 2024. ஞாயிற்றுக்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,372


"இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்." ( மாற்கு 12 : 17 )

ஆவிக்குரிய வாழ்க்கை என்பது நாம் தேவனுக்குமுன்பாக உண்மையுள்ளவர்களாக இருப்பது மட்டுமல்ல, இந்த உலக வாழ்க்கையிலும் நாம் உண்மையுள்ளவர்களாக இருப்பதாகும். வரிகொடுப்பது, அதிகாரிகளை மதிப்பது, நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவது என அனைத்துக் காரியங்களிலும் நாம் கீழ்ப்படிந்து உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். 

தானியேல் இப்படித்தான்  வாழ்ந்தார். ராஜா உட்பட அனைவரும் தானியேலின் ஜெப வாழ்க்கைமட்டுமே அவருக்கு வெற்றியைத் தந்தது என்று எண்ணிக்கொண்டனர். எனவேதான் சிங்கக் கெபியினுள் போடப்பட்ட தானியேலிடம் ராஜா, "தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான்." ( தானியேல் 6 : 20 )

ராஜாவுக்குத் தானியேலின் ஜெப வாழ்க்கைதான் முக்கியமாகத் தெரிந்திருந்தது. ஆனால் ராஜாவுக்குத் தானியேல் கூறும் பதில், "சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்." ( தானியேல் 6 : 22 ) அதாவது, ஜெபித்ததால் மட்டுமல்ல;  மாறாக, தேவனுக்குமுன் நான் குற்றமற்றவனாகக் காணப்பட்டேன் அதுபோல ராஜாவுக்கு எதிராகவும் (உலக வாழ்க்கையிலும், அரசாங்க காரியங்களிலும்)  நான் நீதிகேடுசெய்யவில்லை. எனவே தேவன் என்னைச் சிங்கங்களுக்குத் தப்புவித்தார் என்கிறார்.     

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் ஒழுங்காக வரியைச் செலுத்திவந்தார். வரி வசூலிப்பவர்கள் பேதுருவிடம் வந்து வரிகேட்டபோது அதை அவர் இயேசு கிறிஸ்துவிடம் வந்து கூறினார். அவருக்கு இயேசு, "நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்." ( மத்தேயு 17 : 27 ) ஆம், ஆவிக்குரியவர்கள் மற்றவர்களுக்கு இடறலாக இருக்கக்கூடாது. 
 
அப்போஸ்தலரான பவுல் அடிகள்,  "ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்." ( ரோமர் 13 : 7 ) என்று கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, அதிகநேரம் ஜெபிப்பதும், ஆலயங்களில் ஆராதனைகளில் கலந்துகொள்வதும், ஜெபக்கூட்டங்களில் பங்குபெறுவதும்  மட்டும் ஆவிக்குரிய வாழ்க்கையல்ல; மாறாக உலக காரியங்களிலும் நாம் உண்மையுள்ளவர்களாக, பிறரை ஏமாற்றாமல், நேர்மையாகத் தொழில் செய்து,  அரசாங்க சட்டதிட்டங்களை மதிப்பவர்களாக வாழவேண்டியது அவசியம். தானியேல் கூறுவதுபோல, "தேவனுக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை" என்று வாழ்வதுதான் ஆவிக்குரிய வாழ்க்கை.  இத்தகைய ஒரு வாழ்க்கை வாழும்போதுதான்  தேவன் நம்மையும் பலருக்குப் பயனுள்ளவர்களாக மாற்றுவார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்        

Friday, November 01, 2024

லுூக்கா 4 : 4

 'ஆதவன்' 💚நவம்பர் 09, 2024. 💚சனிக்கிழமை             வேதாகமத் தியானம் - எண்:- 1,371

"மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே" ( லுூக்கா 4 : 4 )

இயேசு கிறிஸ்து நாற்பதுநாள் உபவாசமிருந்து பசித்திருக்கும்போது  அவரைச் சோதிக்கும்படி சாத்தான் அவரிடம் கற்களை அப்பமாக மாற்றும்படி கூறியது. அதாவது, உமக்குத்தான் வல்லமை இருக்கிறதே அப்படி இருக்கும்போது நீர் ஏன் பசியினால் வாடவேண்டும்? இந்தக் கற்களை அப்பங்களாக மாற்றி உண்ணும் என்றது. சாத்தானுக்கு மறுமொழியாக இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார். 

இந்த வசனம் பழைய ஏற்பாட்டு நூலிலிருந்து இயேசு எடுத்துக் கூறுவதாகும். உபாகமம் நூலில், "அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்." ( உபாகமம் 8 : 3 ) என்று நாம் வாசிக்கின்றோம். 

நாம் இன்று உலக வாழ்க்கையில் மற்றவர்களைவிட சிறுமைப்பட்டவர்களாக இருக்கலாம்.  உலக செல்வங்கள் மற்றவர்களைப்போல் நமக்கு இல்லாமலிருக்கலாம். ஆனால் நமக்கு மேலான ஆவிக்குரிய அனுபவங்களைத் தருவதற்கு தேவன் இந்தச் சிறுமையை நமக்கு அனுமதித்திருக்கலாம். உலக செல்வங்கள் மட்டும் இந்த உலகத்தில் நாம் நல்ல வாழ்க்கை வாழ போதுமானவையல்ல, மாறாக தேவனது வாயிலிருந்து வரும் வார்த்தைகள்  நம்மை உயிரூட்டவேண்டியது அதைவிட அவசியம்.  

2007 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் நாளில் நான் ஜெபித்து வேதம் வாசிக்கும்போது தேவன் உபாகமம் 8 ஆம் அதிகாரத்தை எனக்கு வாக்குத்தத்தமாகத் தந்தார். பின்னர் 2009 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் நாளில் இதனை மறுபடியும் நினைவூட்டினார்.  "உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக." ( உபாகமம் 8 : 2 ) எனும் வார்த்தைகளை வாசிக்கும்படி கூறி எனது சிறுமைக்குக் காரணத்தை எனக்குத் தெளிவுபடுத்தினார். 

பின்னர், "உன்னுடைய பின்னாட்களில் உனக்கு நன்மைசெய்யும் பொருட்டு..." ( உபாகமம் 8 : 15 ) இவைகளைச் செய்கிறேன் என்று கூறினார்.   "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" என்பதனையும்,  வேதாகமமும் தேவனுடைய வார்த்தைகளும் 100% மெய்யானவை என்பதனையும்  நான் அனுபவத்தில் உணரும்படியாக தேவன் இப்படிச் செய்தார்.  "நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்." எனும் வார்த்தையின்படி கிறிஸ்தவர்களாக இருந்தாலும் நானும் எனது தாய் தந்தையரும் அதுவரை அறியாத உயிருள்ள மன்னாவாகிய கிறிஸ்துவை நான் அனுபவிக்கும்படிச் செய்தார். 

ஆம் அன்பானவர்களே, இன்றைய நமது கஷ்டமான வாழ்க்கைச் சூழல்களே பல வேத சத்தியங்களை நாம் அனுபவித்து உணர உதவும்.  அப்பமாகிய உலகச் செல்வங்களல்ல; தேவனது வாயிலிருந்து புறப்படும்  வார்த்தைகளே நம்மை பிழைக்கச்செய்யும். சாத்தான் இயேசு கிறிஸ்துவிடம் கூறியதுபோல கற்களை அப்பமாக்கும் திடீர் ஆசீர்வாதம் நமக்குத் தேவையில்லை. அவரது வார்த்தைகளை உணவாக உட்கொள்ளும் ஆசீர்வாதமே மேலான வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக அமையும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

Thursday, October 31, 2024

ஆவிக்குரிய அனுபவங்களை நம்பமாட்டார்கள்

 'ஆதவன்' 💚நவம்பர் 08, 2024. 💚வெள்ளிக்கிழமை  வேதாகமத் தியானம் - எண்:- 1,370


"அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள்". ( லுூக்கா 16 : 31 )

இன்றைய தியான வசனம் இயேசு கிறிஸ்து கூறிய கெட்ட குமாரன் (ஊதாரி மைந்தன்) உவமையில் வரும் செல்வந்தனை நோக்கி ஆபிரகாம்  கூறியதாக நாம் வாசிக்கின்றோம். 

இந்த உலகத்தில் பலர் எதனையும் கண்ணால் கண்டால்தான் நம்புவோம் என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் தங்களைப் பகுத்தறிவுவாதிகள் என்றும்  கூறிக்கொள்கின்றனர். ஆனால் எல்லாவற்றையும் கண்டுதான் நம்புவோம் என்று வாழ்வோமானால் இறுதியில் உண்மையை அறியாதவர்களாகவே வாழ்ந்து மடியவேண்டியதிருக்கும்.  இது தவறு என்று இயேசு கிறிஸ்து கூறுகின்றார். 

கிறிஸ்தவர்களில் பலர் இப்படி இருக்கின்றனர். பல ஆவிக்குரிய சத்தியங்களை முழு மனதுடன் இவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இப்படி வேதம் கூறும் பல சத்தியங்களையும் நம்பமுடியாத அதிசயம் நடந்தால்தான் நம்புவோம் எனக் கூறுவது மரித்தவர்கள் எழுந்து இந்த உலகத்தில் வந்து கூறினால்தான் நம்புவோம் என்று கூறுவதுபோல்தான் உள்ளது.  இந்த உவமையில் வரும் செல்வந்தன் அப்படி வாழ்ந்தவன்தான். வேதம் கூறும் பல்வேறு காரியங்களை வாசித்து அறிந்தவன்தான். ஆனால் அவன் அவற்றை நம்பி ஏற்றுக்கொண்டு தன்னைத் திருத்திக்கொள்ளவில்லை.  

இன்றும் கிறிஸ்துவால் இப்படி மரித்து உயிரோடு எழுப்பப்பட்டவர்கள் பலர் சாட்சி கூறியுள்ளனர். தங்களது மரித்த அனுபவத்தைக் குறித்து எழுதியுள்ளனர். ஆனால் அந்தச் சாட்சியையும் எல்லோரும் ஏற்றுக்கொள்வதில்லை. அவை புத்தி பேதலித்தவர்களின் உளறல்களாகவே பலரால் பார்க்கப்படுகின்றன. ஆம் அன்பானவர்களே, வேதத்தில் கூறப்பட்டுள்ள சத்தியங்களை விசுவாசத்தால் ஏற்றுக்கொள்ளாமல் தேவையற்ற நிபந்தனைகளை விதிப்பவர்கள் இயேசு கிறிஸ்து இந்த உவமையில் கூறுவதுபோல  மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள்.

இதுபோலவே, ஆவிக்குரிய நாம் கூறும் பாவ மன்னிப்பு,  இரட்சிப்பு அனுபவங்களை கிறிஸ்தவர்களில் பலர்கூட  நம்புவதில்லை;  ஏற்றுக்கொள்வதில்லை. காரணம் பாரம்பரியம். தங்களது சபையில் கற்பிக்கப்பட்ட பாரம்பரிய முறைமைகள் இவற்றை நம்பாதபடி அவர்களைத் தடுக்கின்றன. அப்போஸ்தலரான பவுல்,  "நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன? நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்." ( ரோமர் 8 : 24, 25 ) என்று கூறுகின்றார். 

இதுவரை உண்டிராத ஒரு புதுவித பழத்தை நாம் உண்ணும்போது  அதனை இதுவரைச்  சுவைத்திராத மற்றவர், "இந்தப்பழம் நல்லா இருக்காது......நாம் ஏற்கெனவே சாப்பிடும் பழங்கள் இதனைவிடச் சுவையாக இருக்கும்" என்று கூறுவாரானால் அவரைப்போன்ற அறிவிலி இருக்கமாட்டான். ஆவிக்குரிய அனுபவம் இல்லாதவர்கள் ஆவிக்குரிய மக்களைப்பார்த்து கூறுவது இதுபோலவே இருக்கின்றது. "எங்கள் சபையில் இல்லாததா உங்கள் அனுபவத்தில் இருக்கப்போகிறது?"  என்கின்றனர்.

ஆம், இயேசு கிறிஸ்து கூறுவதுபோல, "மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள்" தேவன் எழுதிக்கொடுத்துள்ள வேதாகமத்தை முற்றிலும்  நம்பாதவர்கள் எந்த வித மேலான ஆவிக்குரிய அனுபவங்களை அதனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் கூறினாலும் நம்பமாட்டார்கள். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்              

துன்மார்க்கன் நீதியைக் கற்றுக்கொள்ளான்

 'ஆதவன்' 💚நவம்பர் 07, 2024. 💚வியாழக்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,369


"துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்." ( ஏசாயா 26 : 10 )

தேவன் தனது இரக்கத்தின் பெருக்கத்தினால் அனைத்து மக்களுக்கும் சில நன்மைகளைச் செய்து கொண்டுதானிருக்கிறார். எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவனுக்கு மட்டுமே நான் நன்மைகள் செய்வேன் என்று அவர் கூறவில்லை. இப்படி தேவன் அனைவருக்கும் நன்மைகளைச்  செய்வதால் துன்மார்க்க வாழ்க்கை வாழ்பவர்கள் நீதி வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவதில்லை. இப்படி அவர்கள் தேவ கிருபையை புறக்கணிக்கிறார்கள். 

துன்மார்க்கன் இப்படி நன்மைகளைப் பெறும்போது அது தனது "அதிஷ்ட்டம்" (luck)  என்று கூறிக்கொள்கிறான். அல்லது தான் வணங்கும் ஏதோ ஒரு தெய்வத்தின் கருணை என்று சொல்லிக்கொள்கிறான். ஆனால் தொடர்ந்து தனது துன்மார்க்கச் செயல்களிலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான். இதனையே, தேவன்  "துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்"  என்று இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார்.    

இன்று உலகினில் வாழும் உலக ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கும் கோடிக்கணக்கான மக்களும் நீதிமான்களல்ல, மாறாக தேவனது கிருபையினால் இந்த ஆசீர்வாதங்களைப் பெற்று அனுபவிக்கின்றனர். இத்தகைய மனிதர்களை எவ்வளவு பெரிய நீதியைக் கடைபிடிக்கும் நாட்டில் கொண்டு வாழவைத்தாலும் அவர்கள் தொடர்ந்து அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறார்கள். 

இன்று உலகின் பணக்கார நாடுகளில் வாழும் மக்கள் நல்ல செலவச் செழிப்புடன் வாழ்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வதில்லை. செழிப்புடன் வாழ்கின்றனர் அவ்வளவே. இப்படி இவர்களுக்குத் தேவன் தயைசெய்திருந்தாலும் அவர்கள் தேவ நீதியை அறிந்துகொள்ளவில்லை. கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதே போகிறார்கள். ஆம் அன்பானவர்களே, உலக ஆசீர்வாதம் என்பது மட்டுமே தேவனை அறியவும் நமது துன்மார்க்கத்தைவிட்டு நாம் திரும்பிடவும் உதவாது. துன்மார்க்க மனம் உள்ளவன் எவ்வளவு நல்ல நிலையில் வாழ்ந்தாலும் தேவ நீதியை அறியாதவனாகவே இருப்பான். 

இன்றும் நாம் உலகினில் பல ஏழை மனிதர்கள் நீதியுள்ள வாழ்க்கை வாழ்வதைப் பார்க்கின்றோம். லட்சக்கணக்கான பணத்தை ஒருவர் ஆட்டோவில் தவறவிட்டுச் சென்றதை ஏழை ஆட்டோ ஓட்டுநர் அப்படியே கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தைச் செய்தி பத்திரிகைகளில் வெளிவந்ததை வாசித்திருப்பீர்கள். ஆனால் அதே நேரத்தில் அரசு பதவியில் இருந்து மாதம் எழுபதாயிரம் எண்பதாயிரம் மாதச் சம்பளம் வாங்கும் மனிதன் ஏமாற்றும் லஞ்சமும் வாங்கி பொருள் குவிக்கிறான். 

தேவனது தண்டனை உடனேயே கிடைக்காததால் தவறு செய்பவர் தன்னை தேவனுக்கேற்றவர் என எண்ணிக்கொள்ளவேண்டாம்.  என்பதையே இன்றைய தியான வசனம் அறிவுறுத்துகின்றது. ஆம், தேவன் தயைசெய்தாலும் அத்தகைய மனிதன் நீதியைக் கற்றுக்கொள்ளான்; தொடர்ந்து அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான் என்பதே உண்மை. கிறிஸ்துவின் வருகையில் இத்தகைய மனிதர்கள் அழுது புலம்புவார்கள். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                

நல்லது செய்யுமுன் நல்லவனாயிரு

 'ஆதவன்' 💚நவம்பர் 06, 2024. 💚புதன்கிழமை              வேதாகமத் தியானம் - எண்:- 1,368

 
"அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்." ( தீத்து 2 : 14 )

இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் தனது சீடன் தீத்துவுக்கு இயேசு கிறிஸ்து உலகத்தில் வந்து பாடுபட்டு மரித்ததன் நோக்கத்தை  நினைவூட்டுகின்றார்.  

அதாவது, நாம் ஏற்கெனவே செய்த பாவங்கள் அக்கிரமங்களிலிருந்து நம்மை விடுவித்து நம்மை அவரது சொந்த மக்களாக மாற்றவேண்டும் என்பதே தேவனின் பிரதான நோக்கம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னமேயே அவரது இவ்வுலக தந்தை யோசேப்புக்கு இது அறிவிக்கப்பட்டது. "அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்" ( மத்தேயு 1 : 21 )

இதனையே பவுல் அப்போஸ்தலர்  தனது சீடனான தீமோத்தேயுவுக்கும் கூறினார். "பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது" ( 1 தீமோத்தேயு 1 : 15 ) என்று. 

இன்றைய தியான வசனம் மேலும் கூறுகின்றது, பாவங்களை நீக்கி நம்மைச் சுத்திகரிப்பது மட்டுமல்ல,  "நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி" என்று. அதாவது நாம் அவர்மேல்கொண்ட பக்தியால் வைராக்கியத்துடன் நற்செயல்  செய்யவேண்டும். அதாவது, நாம் நல்லது செய்யவேண்டுமானால் முதலில் நாமே நல்லவர்களாக மாறவேண்டும். இப்படி மாற்றிடவே கிறிஸ்து உலகினில் வந்தார்.  

வெறுமனே நல்லது செய்வதால் ஒருவர் நல்லவராக முடியாது. காரணம் ஒருவன் துன்மார்க்கமாகச் சம்பாதித்தப் பணத்தைக்கொண்டு நல்ல செயல்களைச் செய்து தொடர்ந்து அதே துன்மார்க்கத்தில் விழுந்து கிடக்கலாம். துன்மார்க்கமாகச்  சம்பாதித்தப் பணத்தினால் நன்மைகள் செய்து மக்களது ஆதரவையும் அன்பையும் பெறலாம். "கொடை வள்ளல்" என்று பெயர் பெறலாம்; இப்படி இந்த உலகத்தையே ஒருவன் தனக்கு ஆதாயமாக்கிக்கொள்ளலாம். ஆனால், "மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?" ( மத்தேயு 16 : 26 ) என்கின்றார் இயேசு கிறிஸ்து. 

ஆம், பாவத்தில் தொடர்ந்து வாழ்ந்துகொண்டு நல்லது செய்வதில் அர்த்தமில்லை. உலக மார்க்கங்கள்,  "நல்லது செய்து நல்லவனாய் இரு" என்று கூறுகின்றன. ஆனால் கிறிஸ்துவோ, "நல்லது செய்யுமுன் நீயே நல்லவனாய் இரு" என்கின்றார். 

இப்படி நம்மை நமது பாவங்களிலிருந்து மீட்டு நாம் தொடர்ந்து இந்த உலகத்தில் நல்லவர்களாக வாழ்ந்து நற்செயல்கள் செய்யவேண்டும் என்பதற்கு நம்மைத் தகுதிப்படுத்தவே கிறிஸ்து இந்த உலகத்தில் வந்தார்.  ஆம் அன்பானவர்களே, வெறுமனே நல்லது செய்வதால் நம்மை நாமே நல்லவர்கள் என்று எண்ணி வாழ்ந்து ஏமாந்துபோகக்கூடாது. முதலில் நாம் மாறவேண்டும். இதனையே "நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கிய முள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. முதலில் கிறிஸ்துவின் இரத்தத்தால் பாவங்கள் கழுவப்பட்டு  நாம் சுத்திகரிக்கப் படவேண்டும்; பின்னர் நற்செயல்கள் செய்யவேண்டும். 

கிறிஸ்து உலகினில் வந்த நோக்கம் நம்மில் நிறைவேறிடத் தகுந்தவர்களாக வாழ்வோம். நமது மீறுதல்கள், பாவங்கள் அனைத்தையும் அவரிடம் அறிக்கையிட்டு அவரது மன்னிப்பை வேண்டுவோம். நல்லவர்களாய் வாழ்ந்து நாம் நற்செயல்கள் செய்ய அவரே நமக்கு உதவிடுவார்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                          

Wednesday, October 30, 2024

யோவான் 3:8

 'ஆதவன்' 💚நவம்பர் 01, 2024. 💚வெள்ளிக்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,363


"காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதன் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான்." (யோவான் 3:8)
ஆவிக்குரிய அனுபவத்துடன் ஒருவர் வாழ்வதை காற்று வீசுவதற்கு ஒப்பிட்டு இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து பேசுகின்றார்.

வெளிப்பார்வைக்கு மற்ற மனிதர்களைப்போல இருந்தாலும் பரிசுத்த ஆவியினால் மறுபடி பிறந்தவர்களது எண்ணங்களும் செயல்பாடுகளும் வித்தியாசமானவையாக இருக்கும். காற்று எங்கிருந்து வருகின்றது எங்கே செல்கின்றது என்று நமக்குத் தெரியாததுபோல் அதனை நாம் அறிய முடியாது. இதனைத்தான் இயேசு கிறிஸ்து இன்றைய வசனத்தில் கூறுகின்றார்.

ஆம் அன்பானவர்களே, ஒன்றைப்பற்றி நாம் முழுவதுமாக அறியவேண்டுமானால் அதுவாக நாம் மாறினால் மட்டுமே முடியும். உதாரணமாக, சாலையோரம் படுத்திருக்கும் மாடு, அல்லது நம்மைநோக்கி வரும் நாய் அல்லது எந்த மிருகமாக இருந்தாலும் அந்த மிருகங்களின் எண்ணம் நமக்குத் தெரியாது. அவை உண்ணும் உணவுகள், அவற்றின் சுவை எதுவுமே நமக்குத் தெரியாது. மிருகங்களின் எண்ணங்களும் சுவைகளும் மனிதர்களிலிருந்து வித்தியாசமானவை. நாமும் அவைகளைப்போல ஒரு மிருகமாக மாறினால்தான் அதனை நம்மால் முற்றிலும் அறிய முடியும்.

இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகளும், " மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்?அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்."( 1 கொரிந்தியர் 2 : 11 ) என்று கூறுகின்றார். "அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்." ( ரோமர் 8 : 5 ) என்று கூறுகின்றார்.

எனவே நம்மைப் புரிந்துகொள்ளாத சிலர் ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் நமது செயல்பாடுகளைக் குறித்து குறைகூறலாம். ஆனால் நாம் கவலைப்படத் தேவையில்லை. தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான் என்று கூறியுள்ளபடி தேவனுடைய ஆவிக்குரிய சித்தப்படி வாழ்பவனையும் உலக மனிதர்கள் அறிய முடியாது. சொந்த குடும்பத்தினர்கூட அறிய முடியாது.

சமாதானத்தையுண்டாக்க வந்த இயேசு கிறிஸ்து "பிரிவினை உண்டாகவே வந்தேன்" என்றும் கூறுவதை ஆவிக்குரிய அனுபவம் இல்லாதவர்கள் புரிந்துகொள்ள முடியாது. ஆம், "எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே." ( மத்தேயு 10 : 35, 36 ) என்றார் இயேசு கிறிஸ்து. இதற்குக் காரணம் ஒரே வீட்டினுள் இருந்தாலும் ஆவியில் பிறந்தவர்களும் மற்றவர்களும் மனதளவில் பல காரியங்களில் பிரிந்தவர்களாகவே இருப்பார்கள்.

ஆவிக்குரிய வழிகளை அறியவும் தேவ வழியில் நடக்கவும் உண்மையான மனதுடன் வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் தங்களை ஒப்புக்கொடுக்கும்போதுதான் இந்தப் பிரிவினை முடிவுக்குவரும். அதுவரை காற்று இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் தெரியாததுபோல நமது நடவடிக்கைகளின் உண்மைத்தன்மை தேவனுக்கு மட்டுமே தெரிவதாக இருக்கும். இதன் அடிப்படையிலேயே தேவன் மனிதர்களை நியாயம் தீர்ப்பார்.

"நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்" ( யோசுவா 24 : 15 ) என்று உறுதியெடுத்து அனைவரும் ஆவிக்குரிய அனுபவத்தினுள் வரும்போது மட்டுமே வீட்டிலுள்ள இந்தப் பிரிவினை மறையும். அதுவரை காற்றினைப்போல நாமும் மற்றவர்களுக்குப் புரியாதவர்களும் புரிந்துகொள்ள முடியாதவர்களுமாகவே இருப்போம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - 2 கொரிந்தியர் 6 : 10 / 2 Corinthians 6:10

" ஆதவன் " தியானம் - 1982 ஜூலை 12, ஞாயிறு 2026       "துக்கப்படுகிறவர்கள் எனப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும...