Friday, September 06, 2024

என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு

 'ஆதவன்' செப்டம்பர் 15, 2024. ஞாயிற்றுக்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,315


"இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடுண்டாக்கிக்கொண்டாய்; ஆனாலும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு." ( ஓசியா 13 : 9 )

இன்றைய தியான வசனம் தேவனது  அளப்பரிய இரக்கத்தை எடுத்துக் கூறுகின்றது. மனிதர்கள் நாம் வலுவற்றவர்கள். எனவே, நாம் பலவேளைகளில் தவறி தேவனுக்கு எதிரான காரியங்களில் ஈடுபட்டுவிடுகின்றோம். ஆனால் தேவன் நமது வலுவற்ற நிலையினை அறிவார். எனவேதான், நீ எனது  வார்த்தைகளை மீறி உனக்கு நீ கேடுண்டாக்கிக்கொண்டாய் ஆனாலும் என்னிடத்தில் உனக்கு மன்னிப்பு உண்டு என்கின்றார் தேவனாகிய கர்த்தர். 

எப்படி கேடுண்டாகிக்கொண்டார்கள் என்பதனை இன்றைய தியான வசனத்துக்கு  மூன்று வசனங்களுக்குமுன் நாம் வாசிக்கின்றோம், "தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று; அதனால் என்னை மறந்தார்கள்." ( ஓசியா 13 : 6 )

அதாவது, நல்ல ஒரு வேலை, மனம் விரும்புவதை வாங்கக்கூடிய அளவு பணம்,  மற்றவர்களைவிட உயர்ந்த அந்தஸ்து இவை இருப்பதால் அவற்றின்மேலேயே நம்பிக்கைக்கொண்டு தேவனை மறந்தார்கள் என்று பொருள். இதனையே இந்த வசனம், "தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று" என்று கூறப்பட்டுள்ளது. 

ஆனாலும், நீ மனம்திரும்பி என்னிடம் வந்தால் உனக்குச் சகாயம் உண்டு என்கின்றார் தேவனாகிய கர்த்தர். புதிய ஏற்பாட்டின்படி கிறிஸ்துவின் இரத்தத்தால் பாவங்கள் மன்னிக்கப்பட்ட மீட்பு அனுபவம் பெற்ற நாம்தான் ஆவிக்குரிய யூதரும் இஸ்ரவேலருமாய் இருக்கின்றோம்.  உள்ளத்தில் யூதர்களான நாமே யூதர்கள். "ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல. உள்ளத்திலே யூதனானவனே யூதன்" ( ரோமர் 2 : 28, 29 ) என்று கூறப்பட்டுள்ளது. 

இப்படி கிறிஸ்துவை  அறிந்துகொண்ட நாமே யூதரும் இஸ்ரவேலருமாக இருக்கின்றோம். எனவே, நாம் மற்ற உலக மனிதர்கள் உலக செல்வத்தால் திருப்தியாகி தேவனை மறந்து வாழ்வதுபோல வாழக்கூடாது என்று இன்றைய தியான வசனம் உணர்த்துகின்றது.  அப்படி நாம் இதுவரை நமக்கு உள்ள வசதிகள் வாய்ப்புகள், பதவிகள் குறித்து மேன்மைபாராட்டி மற்றவர்களை அற்பமாக எண்ணியிருப்போமானால் நாம் நமக்குக் கேடுண்டாக்கிக்கொண்டுள்ளோம் என்று பொருள். 

ஒருவேளை மனம்திரும்பிய வாழ்க்கை வாழ்ந்தாலும் நம்மை அறியாமலேயே இத்தகைய ஒரு சில பாவங்கள் நம்மை மேற்கொண்டு தேவனைவிட்டு நம்மைப் பிரித்துவிடக்கூடும். ஆனாலும், "என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு." என்கிறார் கர்த்தர். 

ஆம் அன்பானவர்களே, இப்படி நாம் இதுவரை வாழ்ந்திருப்போமானால் தேவனிடம் மன்னிப்பு வேண்டி மன்றாடுவோம். நமது தவறான வழியைவிட்டு விலகுவோம்.  அப்படி நாம் மன்னிப்புக்கேட்டு மனம்திரும்புவோமானால் நமக்கு மன்னிப்பு உண்டு. ஆம்,  "ஆனாலும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு." என்கிறார் கர்த்தராகிய தேவன். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்           

Wednesday, September 04, 2024

நமக்காக ஜெபித்த இயேசு கிறிஸ்து

 'ஆதவன்' செப்டம்பர் 14, 2024. 💚சனிக்கிழமை           வேதாகமத் தியானம் - எண்:- 1,314



"........உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே." ( யோவான் 17 : 9 )

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மை அறிந்த நம் ஒவ்வொருவருக்காகவும் ஏற்கெனவே ஜெபித்துள்ளார். அதனையே இன்றைய தியான வசனத்தில் நாம் பார்க்கின்றோம். இன்று சிலர் ஜெபிப்பதைப்போல மொத்த உலகத்துக்காகவும் அவர் ஜெபிக்கவில்லை. மாறாக, அவரது வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு வாழ்பவர்களுக்காக மட்டும் அவர் ஜெபித்தார். அதனையே, "........உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே." என்று கூறுகின்றார். 

அவர் இப்படி ஜெபிக்க என்ன காரணம் என்பதனையும் அவர் கூறுகின்றார். அதாவது, "நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்." ( யோவான் 17 : 8 )

பிதா தனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன், அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே நான் அவர்களுக்காக ஜெபிக்கிறேன். அவர்கள் உம்முடையவர்களே என்கின்றார். காரணம், பிதாவின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்பவனே பிதாவுக்குரியவன். அவர்களுக்காக மட்டுமே அவர் ஜெபிக்கமுடியும். அவரது வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவன் அவரையும்  ஏற்றுக்கொள்ளாதவனாக இருக்கின்றான். அப்படி அவரை ஏற்றுக்கொள்ளாதவனுக்காக அவர் ஜெபிக்கமுடியாது.  

ஆனால், தேவன் அனைவரையும் அன்பு செய்வதால் எல்லோரும் மனம் திரும்பவேண்டுமென்று விரும்புகின்றார்.  ஆனால் அவர் எவரையும் கட்டாயப்படுத்துவதில்லை. அவரது வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும்போது நாம் அவருக்குரியவர்கள் ஆகின்றோம். 

தன்னை அறியும் சந்தர்ப்பத்தை அனைவருக்கும் தேவன் அளிக்கின்றார்.  அதனை பயன்படுத்திக்கொள்பவர்கள் அவரை அறிகின்றார்கள். அல்லது சத்தியத்தை அறியவேண்டுமென்று விரும்புகின்றவர்கள் அவரை அறிந்துகொள்கின்றனர். உண்மையாக தேவனைத் தேடுபவர்கள் அவரை அறிந்துகொள்கின்றனர். அவர்கள் அனைவரும் அவருடையவர்களாகின்றனர். 

எனவேதான் அவர் இன்றைய தியான வசனத்தின் முந்தைய  வசனத்தில், அவர்கள் உமது வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள் என்று கூறுகின்றார். ஆணடவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் ஏற்றுக்கொள்ளும்போது பிதாவை ஏற்றுக்கொள்கின்றோம். நாம் அவர்களுடையவர்கள் ஆகின்றோம். 

அன்பானவர்களே, கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது என்பது வெறும் வாயினால் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறுவதோ, ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்வதோ, வெறுமனே வேதாகமத்தை வாசிப்பதோ அல்ல, மாறாக அவரது இரத்தத்தால் நமது பாவங்கள் கழுவப்படும்  அனுபவம்.  அந்த அனுபவம் பெற்றவர்களே பிதாவினால் இயேசு கிறிஸ்துவுக்கென்று கொடுக்கப்பட்டவர்கள். அப்படி நாம் இருப்போமானால் நமக்காக இயேசு கிறிஸ்து ஏற்கெனவே ஜெபித்துள்ளதை அறிந்து மகிழ்ச்சியும் மன நிறைவும் சமாதானமும் அடைந்தவர்களாக இருப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்          

துக்கத்தில் மனமகிழ்ச்சி

 'ஆதவன்' செப்டம்பர் 13, 2024. வெள்ளிக்கிழமை        வேதாகமத் தியானம் - எண்:- 1,313 



"உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்."( சங்கீதம் 119 : 92 )

கிறிஸ்துவுக்குள் நாம் ஆவிக்குரிய வாழ்க்கை வாழும்போதும் பலவேளைகளில் துன்பங்கள் நம்மை நெருக்கிச் சோர்ந்துபோகச் செய்துவிடும். அத்தகைய வேளைகளில் தேவனுடைய வார்த்தைகளே நமக்கு ஆறுதலும் மனமகிழ்ச்சியும் தர முடியம். இப்படி ஆவிக்குரிய வாழ்வில் மட்டுமல்ல, சாதாரண மனிதர்கள், கிறிஸ்துவை அறியாத மனிதர்கள் வாழ்விலும் இது உண்மையாகும். ஆம், கிறிஸ்துவை வாழ்வில் அறியாத பலரும்கூட தேவ வார்த்தைகளால் மரணத்துக்குத் தப்பி வாழ்ந்துள்ளனர். 

இதுகுறித்தப் பல சாட்சிகளை நான் கேட்டுள்ளேன். வாழ்வே இருளாகி இனி வாழ்வதில் அர்த்தமில்லை என்று முடிவெடுத்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கும் சூழ்நிலையில் ஏதோ ஒரு  வழியில் தேவனது வார்த்தைகள் அவர்களோடு இடைப்பட்டு  தற்கொலை முடிவினை  கைவிட்டுள்ளதாகப் பலரும் சாட்சி கூறுகின்றனர். ஒருமுறை ஒரு பிராமண நண்பர் என்னிடம், "நான் சுவர்களில் எழுதப்பட்டுள்ள வேத வசனங்களை எங்கு கண்டாலும் வாசித்துப் பார்ப்பேன். காரணம் அவை எனக்குள்ளே புத்துணர்ச்சியைத் தருகின்றன" என்று கூறினார். 

இத்தகைய மகிழ்ச்சி தனக்குள்  இருந்ததால்தான் இன்றைய தியான வசனத்தில் சங்கீத ஆசிரியர், "உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்" என்கின்றார். அதாவது,  உமது வேத வார்த்தைகள் இருப்பதால்தான் நான் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இல்லையானால் அழிந்துபோயிருப்பேன் என்று கூறுகின்றார்.  ஆம் அன்பானவர்களே, வேத வசனங்களில் நாம் காணும் பல வாக்குறுதிகள் நமக்கு எதிர்காலத்தைக்குறித்த நம்பிக்கையினைத் தந்து நம்மை வாழவைக்கின்றன. 

"உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்." ( சங்கீதம் 119 : 103 ) என்றும் "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது." ( சங்கீதம் 119 : 105 ) என்றும் இன்றைய தியான சங்கீதத்தைத் தொடர்ந்து வாசிக்கும்போது கூறப்பட்டுள்ளதை நாம் காணலாம். 

முதலாவது தேவ வார்த்தைகள் நமது வாய்க்கு இனிமையாகவும் தொடர்ந்து நமது வாழ்க்கையினை நாம் சரிபடுத்திக்கொள்ள தீபமாகவும் இருக்கின்றன.  எனவேதான் நாம் வேதாகமத்தை வாசிக்கவும் அதிலுள்ள வசனங்களை நமது இருதயத்தில் பதித்து வைக்கவேண்டியதும் அவசியமாய் இருக்கின்றது. அப்படி நாம் இருப்போமானால் அவை நமக்கு எந்தவித துன்ப வேளையிலும் மனம் சோர்ந்துபோகாமல் இருக்க உதவிடும். 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்." ( யோவான் 15 : 7 ) என்று வாக்குறுதி அளித்துள்ளார். அவரது வார்த்தைகள் நமக்குள் இருக்கவேண்டும்; அவற்றின்படி வாழ நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். எனவே வேத வசனங்களை வாசித்து ஏற்றுக்கொள்வோம். அவரது வேதம் நமது மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், இன்றைய தியான வசனத்தின்படி நமது துக்கத்திலே நாம் அழிந்து போய்விடுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்   

கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாவோம்

 'ஆதவன்' செப்டம்பர் 12, 2024. வியாழக்கிழமை         வேதாகமத் தியானம் - எண்:- 1,312

"என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்." ( சகரியா 14 : 5 )

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைக்குறித்து இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது. தனது பரிசுத்தவான்கள் புடைசூழ அவர் உலகிற்கு வரும்போது நாம் அவருக்கு ஏற்றத் தகுதியுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். ஏனெனில் அவர் நம்மில் தனக்கு உகந்தவர்களாக வாழ்பவர்களை அவரோடுகூட அப்போது எடுத்துக்கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது. 

இயேசு கிறிஸ்து உலகத்தில் வாழ்ந்தபோது இதுகுறித்து பல்வேறுமுறை உவமைகளாகக் கூறியுள்ளார்.  அவற்றில் பத்துக் கன்னியர்  உவமை (மத்தேயு 25), திருமண ஆடை இல்லாத மனிதனைக் குறித்த உவமை (மத்தேயு 22) நாம் பலமுறை படித்து அறிந்தவையே. 

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைக்குறித்து அவர் உயிர்த்து பரலோகம் சென்றவுடனேயே சீடர்களுக்கு அறிவிக்கப்பட்டது. "கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 11 ) என வானதூதர் அவர்களுக்கு அறிவித்தார். 

இயேசு கிறிஸ்துவும் தான் உயிரோடு இருந்த நாட்களில் இதனை வெளிப்படுத்தினார். "அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். அப்பொழுது மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்." ( மத்தேயு 24 : 29, 30 ) என்றார் அவர். 

ஆனால் அந்த நாள் என்று வரும் என்று நமக்குத் தெரியாது. "கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும்." ( 2 பேதுரு 3 : 10 ) என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பேதுரு. மேலும், "இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்!" ( 2 பேதுரு 3 : 11 ) என்று அவர் கூறுகின்றார். 

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை எப்போது நிகழும் என நமக்குத் தெரியாவிட்டாலும் அவர் வருவதற்குமுன் என்னென்ன நிகழும் என வேதாகமம் கூறும் தீர்க்கதரிசனங்கள் பலவும் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. எனவே நாம் அப்போஸ்தலரான பேதுரு கூறுவதுபோல பரிசுத்த நடக்கையுள்ளவர்களாய்  நம்மைக் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். மணவாளனாகிய அவர் வரும்போது அவரோடுகூட பரலோகராஜ்யத்தில் நுழைய முடியாமல் நாம் புறம்தள்ளப்பட்டுவிடக்கூடாது. எனவே எச்சரிக்கையாக ஆவிக்குரிய வாழ்வைத் தொடர்வோம்.  ஆம், "தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; " ( 2 பேதுரு 3 : 12 )

 தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                

Sunday, September 01, 2024

ஏற்ற கனிகளைக் கொடுங்கள்

 'ஆதவன்' செப்டம்பர் 11, 2024. 💚புதன்கிழமை            வேதாகமத் தியானம் - எண்:- 1,311

"மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்...." ( லுூக்கா 3 : 8 )

தேவன் விரும்புகின்ற வாழ்க்கை இருக்கின்றதோ இல்லையோ பல கிறிஸ்தவர்களுக்குள்ளும் தங்களது சபைகளைக்குறித்த வீண் பெருமைமட்டும் அதிக அளவு உள்ளது.  கிறிஸ்துவுக்கேற்ற கனியுள்ள வாழ்க்கை இல்லாமல் இத்தகைய வீண் பெருமைகள் எதற்கும் உதவாது என்று இன்றைய தியான வசனம் நமக்கு உணர்த்துகின்றது. 

யூதர்களுக்கு ஒரு மத வைராக்கியம் இருந்தது. தங்களை ஆபிரகாமின் சந்ததி என்று கூறிக்கொள்வதில் அவர்கள் பெருமை கொண்டிருந்தனர். ஆனால் தேவன்மேல் ஆபிரகாம் கொண்டிருந்த விசுவாசமோ அவர்களுக்கு இல்லை. அவர்கள் கருத்துப்படி ஆபிரகாம்தான் மேலான தகப்பன்.  எனவேதான் அவர்கள் இயேசு கிறிஸ்துவிடம், "எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ எப்படிப்பட்டவனாக்குகிறாய் " ( யோவான் 8 : 53 ) என்றார்கள்.

இன்றும் இப்படி வீண் பெருமைபேசும் மனிதர்கள் உண்டு. மற்ற சபைப் பிரிவினரைவிட தங்களுக்குள் மேன்மையாக இருக்கும் காரியங்களைக் குறித்துப் பெருமையாகப் பேசிக்கொள்கின்றனர். ஆனால் இப்படிப் பேசும் பலரிடமும் தேவன் விரும்பும் நற்குணங்கள் இருப்பதில்லை. மூன்றாம்தர உலக மனிதர்களைப்போல குடித்து, லஞ்சம் வாங்கி, கெட்டவார்த்தைகள்பேசி, தகாத உறவுகள்கொண்டு, சபைத் தேர்தல் நேரங்களில் அரசியல்வாதிகளைவிடக் கேவலமாக நடந்துகொண்டு  வாழும் இவர்கள் தங்களது சபையைக்குறித்து மேன்மையாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். 

இதுபோலவே அன்றைய யூதர்கள் ஆபிரகாமைப்பற்றி பெருமைபேசுபவர்களாக இருந்தனர். இத்தகைய மனிதர்களைப்பார்த்துத்தான் இன்றைய வசனம் கூறுகின்றது,  "மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்...." என்று. 

அப்போஸ்தலரான பவுல் அடிகளும், "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." ( கலாத்தியர் 5 : 22, 23 ) என்கின்றார். 

இன்றைய தியான வசனத்தைக் கூறிய யோவான் ஸ்நானகன் தொடர்ந்து கூறுகின்றார், "இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்." ( லுூக்கா 3 : 9 ) அதாவது மனம்திரும்பி கனிகொடுக்கின்ற வாழ்க்கை இல்லாமல் இருக்குமேயானால் நல்ல கனி கொடாத மரங்களை வெட்டி வீழ்த்துவதுபோல வெட்டி வீழ்த்தப்படுவாய். கோடரியானது அருகே தான் வைக்கப்பட்டுள்ளது. 

ஆம் அன்பானவர்களே, நமது சபை மேன்மையோ, நமது சொந்த பதவி, அதிகார பலமோ நம்மை இறுதி நாட்களில் இரட்சிக்காது. கனியுள்ள வாழ்க்கை வாழும்போது மட்டுமே நாம் தேவனுக்கு உகந்தவர்களாக முடியும்.  அது மட்டுமே நம்மை நித்திய ஜீவனுக்கு நேராகக்  கொண்டுச் செல்ல முடியும்.

"என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்." ( யோவான் 15 : 4 ) என்கின்றார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. 

 தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  
 

வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ?

 'ஆதவன்' செப்டம்பர் 10, 2024. செவ்வாய்க்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,310


".............அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்; அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை". ( தானியேல் 4 : 35 )

வானத்தின் சேனைகள் என்று இங்குக் குறிப்பிடப்படுவது வான்மண்டல கோள்கள் மற்றும் விண்மீன்களைக் குறிக்கின்றது. வானத்துக் கோள்கள் அங்கு சும்மா இருக்கவில்லை, மாறாக ஒன்றையொன்று தங்களது ஈர்ப்புவிசையால் கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கின்றன. இவை அனைத்தையும் கட்டுப்படுத்தி நடத்துபவர்தான் நமது தேவனாகிய கர்த்தர். 

பூமி அந்தரத்தில் குறிப்பிட்ட இலக்குக்குள் தொங்கிக்கொண்டிருக்க வேண்டுமானால் அதற்கென்று ஒரு ஆதாரம் வேண்டும். அது கிரகங்களின் ஈர்ப்புவிசையால் (Magnetic Force) தான் நடைபெறுகின்றது. இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்த இந்த உண்மையினை ஏறக்குறைய ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே பரிசுத்தவான்களுக்குத் தேவன் வெளிப்படுத்தியுள்ளார். எனவேதான் எந்தவித நவீன கருவிகள் இல்லாதகாலத்திலேயே இதனை அவர்கள் கண்டுணர்த்து கூறமுடிந்தது.  

"வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ? அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பந்தத்தை நீ இணைக்கக்கூடுமோ? அல்லது மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ?இராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவாயோ? துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?" ( யோபு 38 : 31 -33 ) என்று தேவன் கேட்கின்றார்.  

அதாவது இப்படி இந்தக் கிரகங்கள், ராசிகள்  பூமியை நிலைநிறுத்த உதவுகின்றன. (பூமியிலுள்ள மக்களையல்ல) இவை செய்யும் எந்த காரியத்தையும் மனிதனால் செய்ய முடியாது. இதனையே மேற்படி வசனத்தில் தேவன், "அறிவாயோ? திட்டம்பண்ணுவாயோ? நீ இணைக்கக்கூடுமோ? கட்டுகளை அவிழ்ப்பாயோ?  வரப்பண்ணுவாயோ? வழிநடத்துவாயோ?" என்று கேட்கின்றார். இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லை தேவனால்தான் முடியம்  என்றுதான் இருக்கமுடியும். 
 
இப்படி தேவன்  தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் மக்களையும் நடத்துகிறார்; அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை. இப்படி நாம் வெறும் தூளும் துரும்புமாக இருப்பதால் அவருக்கு அஞ்சி வாழவேண்டியது அவசியம். அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை. ஒருவனும் இல்லை என்று கூறும்போது எந்த பரிசுத்தவானும் இல்லை என்றுதான் பொருள். 

எனவேதான் நாம் தேவ கிருபையினைச் சார்ந்துகொள்ளவேண்டியது அவசியம். "நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை." ( புலம்பல் 3 : 22 ) என்று வாசிக்கின்றோம். ஆம் அன்பானவர்களே, எனவே நாம் அவரது கிருபையைச் சார்ந்தகொண்டு அவரது சித்தத்தின் வழிநடத்துதலுக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

Saturday, August 31, 2024

ஆவியும் ஜீவனுமாக இருக்கும் அவரையே பற்றிக்கொள்வோம்.

 'ஆதவன்' செப்டம்பர் 09, 2024. திங்கள்கிழமை             வேதாகமத் தியானம் - எண்:- 1,309

"ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கின்றன." ( யோவான் 6 : 63 )

தேவ வசனங்கள் ஆவியாகவும் ஜீவனாகவும் இருக்கின்றன என்று இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார். தேவனது வாயிலிருந்து வரும் வார்த்தைகள் உயிருள்ளவை. எனவேதான் அவை மரித்தவனுக்கு உயிர்கொடுக்கும் வல்லமையும் நோய்களைக் குணமாக்கும் வல்லமையும் கொண்டுள்ளன. அதுபோலவே அந்த வார்த்தைகள் நமக்கு நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்வையும் கொடுக்க வல்லவை. 

இதனையே அப்போஸ்தலரான பேதுரு, "ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே." ( யோவான் 6 : 68 ) என்று இயேசு கிறிஸ்துவிடம் கூறினார். 

இயேசு கிறிஸ்து கூறுவதுபோல ஆவியே உயிர்ப்பிக்கிறது, அவர் கூறும் வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கின்றன. மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது. அதாவது மாம்சகாரியங்கள் ஒன்றுக்கும் பயனற்றவை. ஆனால் இன்று பலரும் ஆவிக்குரிய காரியங்களைவிட மாம்சகாரியங்களையே தேவனிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். தேவனது ஜீவனுள்ள வார்த்தைகளைப் புறக்கணிக்கின்றனர். வார்தையைப் புறக்கணிப்பது என்பது  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே புறக்கணிப்பதாகும். 

காரணம், நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதான் தேவனது வார்த்தை என்று வேதம் கூறுகின்றது. ஆம், "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது." ( யோவான் 1 : 1 ) "அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது." ( யோவான் 1 : 14 ) என்று நாம் வாசிக்கின்றோம். 

எனவே, மெய்யான சுவிசேஷ அறிவிப்பு என்பது நமது ஆண்டவராகிய இயேசுவை அறிவிப்பதுதான். அப்போஸ்தலரான யோவான் கூறுகின்றார், "ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.' ( 1 யோவான்  1 : 1 ) என்று. எனவே, கிறிஸ்துவையும் அவர் தரும்  நித்தியஜீவனையும் அறிவிக்காமல் உலக ஆசீர்வாதங்களையே சுவிசேஷமாக அறிவிப்பது அவரைப் புறக்கணிப்பதாகும்.

ஆம் அன்பானவர்களே, இன்றைய தியான வசனம் கூறுகின்றபடி, ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; அந்த வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கின்றன என்று கூறியுள்ளபடி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே ஆவியாகவும் ஜீவனாகவும் இருக்கின்றார். அவரைப் நமது வாழ்வில் ஏற்றுக்கொள்ளாமல் தள்ளிவிட்டு நாம் நமது மாம்சத்தில் எடுக்கும் முடிவுகள் ஒன்றுக்கும் உதவாதவை. 

எனவே, ஆவியும் ஜீவனுமாக இருக்கும் அவரையே வாழ்வில் பற்றிக்கொள்வோம்.  ஆவியாயும் ஜீவனாயும் இருக்கின்ற அவரே நமக்கு நித்திய ஜீவனையும் தருவார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - லுூக்கா 11 : 13 / Luke 11:13

" ஆதவன் " தியானம் - 1981 ஜூலை 11, சனி  2026       "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந...