Tuesday, August 20, 2024

உடல்நோய் குணமாவதைவிட பாவமன்னிப்பே மேல்

'ஆதவன்' ஆகஸ்ட் 29, 2024. 💚வியாழக்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,298 

"இதோ, சமாதானத்துக்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்." ( ஏசாயா 38 : 17 )

தேவன் எசேக்கியா ராஜாவின் நோயைக் குணமாக்கி அவரது வாழ்நாட்களை பதினைந்து ஆண்டுகள் நீட்டிக்கொடுத்தபோது எசேக்கியா எழுதிவைத்த வார்த்தைகளே இன்றைய தியான வசனம்.  

இங்கு எசேக்கியா தனது நோய் குணமானதைவிட தேவன் தனது பாவங்களை மன்னித்ததையே முக்கியமாக கருதுகின்றார். எனவேதான் அவர் கூறுகின்றார், "தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்." என்று. 

மனிதர்களுக்கும் தேவனுக்குமுள்ள முக்கிய வித்தியாச மனநிலையினை இந்த வசனத்தில் நாம் பார்க்கின்றோம். மனிதர்கள் நாம் ஒருவரை மன்னித்தாலும் அவர்கள்  நமக்கு எதிராகச் செய்த தவறையும் குற்றத்தையும் நாம் எளிதில் மறந்துவிடுவதில்லை. ஆனால் தேவன் அப்படியல்லாமல் நமது பாவங்களை மன்னிப்பதுடன் அவற்றை தனது  முதுகுக்குப் பின்னாக எறிந்து விடுகின்றார் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அவற்றை அவர் திரும்பிப் பார்க்கமாட்டார். 

இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து எசேக்கியா கூறுகின்றார், இப்படிப் பாவங்களை மன்னிக்கும்  மகிமையான தேவனாக அவர் இருப்பதால் அவரது நாமத்தை நான் துதித்துக்கொண்டிருப்பேன். மட்டுமல்ல, இப்படிப் பாவ மன்னிப்பு பெற்றவன் எவனும்  தேவனுடைய இந்தச் சத்தியதைக்குறித்து தனது பிள்ளைகளுக்கும் தெரிவிப்பான் என்கின்றார்.  "பாதாளம் உம்மைத் துதியாது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை. நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன், உயிரோடிருக்கிறவனே, உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான்." ( ஏசாயா 38 : 18, 19 )

அன்பானவர்களே, தனது உடல்நோய் நீங்கியதைவிட பாவ மன்னிப்பு பெற்றுக்கொண்டதையே மேன்மையாகக் கருதும் எசேக்கியாவைப்போல நாம் இருக்கின்றோமா?  

எசேக்கியா இப்படி பாவங்கள் மன்னிக்கப்பட்டதை மேன்மையாகக் கருத முக்கிய காரணமும் இன்றைய தியான வசனத்தில் உள்ளது. அதாவது உடல்நோய் இந்த உலகத்திலிருந்து நம்மைக் கொல்லலாம் ஆனால் பாவம் நமது ஆத்துமாவை நிரந்தரமாகக்  கொல்லும். அதனால் நித்திய நரகத்துக்கு நேராக நாம் செல்லவேண்டியிருக்கும்.  அதனையே அவர், "தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்" என்கின்றார். 

தேவன் நமது ஆத்துமாவை அழிவின் குழிக்குத் தப்புவிக்கவே நமது பாவங்களை மன்னிக்கின்றார். அதற்காகவே பரிகார பலியாக தனது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நியமித்திருக்கின்றார். நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிடுவோம். ஆம் அன்பானவர்களே, அப்போது எசேக்கியா ராஜா குணமானதுபோல நமது உடல்நோய்களும் ஆத்தும பாவங்களும் கழுவப்படும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்      

வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்

'ஆதவன்' 💚ஆகஸ்ட் 28, 2024. 💚புதன்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,297 


"எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்; இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம்." ( ஏசாயா 26 : 13 )

மனம்திரும்பாத வாழ்க்கை வாழும்போது நாம் பல்வேறு உலக பொருள்களுக்கும் பாவங்களுக்கும் அடிமைகளாக இருக்கின்றோம். அதாவது இவைகள் நம்மை ஆண்டுவருகின்றன என்று பொருள்.  அப்போது நாமும் தேவனாகிய கர்த்தரைத் தேடாமலும் அவர் நம்மை ஆட்சிசெய்ய விடாமலும் வாழ்ந்து வருகின்றோம்.  இதனையே, "எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்" என்று இன்றைய வசனத்தில் வாசிக்கின்றோம். 

ஆனால் நாம் கிருபையால் தன்னை அறிந்துகொள்ள தேவன் கிருபை செய்தார்.  வேறு ஆண்டவன்மார்களுக்கு அடிமைகளாக வாழ்ந்த நம்மைத் தேவன் விடுவித்துத் தனக்கு அடிமைகளாக்கினார்.  

இப்படி வேறு ஆண்டவன்மார் தங்களை ஆண்டபோது இஸ்ரவேல் மக்கள் பல்வேறு துன்பங்களுக்குள்ளானதை நாம் நியாயாதிபதிகள் மற்றும், அரசர்கள் நூல்களில் வாசிக்கின்றோம். அதுபோல, அந்த மக்கள் தங்கள் பாவங்களுக்கு மனம்திரும்பி மன்னிப்பு கேட்டபோதெல்லாம் தேவன் அவர்களை மன்னித்து விடுவித்ததையும் பார்க்கின்றோம்.   "தேசத்திலே குடியிருந்த எமோரியர் முதலான சகல ஜனங்களையும் கர்த்தர் நமக்கு முன்பாகத் துரத்தினாரே; ஆகையால் நாங்களும் கர்த்தரைச் சேவிப்போம்." ( யோசுவா 24 : 18 ) என்று இஸ்ரவேல் மக்கள் அறிக்கையிட்டதையும் பார்க்கின்றோம். 

"நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்." ( யோசுவா 24 : 15 ) என்கின்றார் யோசுவா. 

அன்பானவர்களே, இன்று நம்மை அடிமைப்படுத்த உலக அரசர்கள் வருவதில்லை. மாறாக, உலகப் பொருளாசை, புகழாசை, பதவியாசை இவையே அடிமைப்படுத்த முயல்கின்றன.  இவற்றுக்கு நாம் அடிமைகளாகின்றபோது நாம் இவை நம்மை ஆட்சிசெய்யும்படி ஒப்புக்கொடுக்கின்றோம் என்று பொருள். இப்படி இவை நம்மை ஆளவிடாமல் தேவனாகிய கர்த்தரே நம்மை ஆளும்படி ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று இன்றைய வசனம் மூலம் நாம் அறிகின்றோம்.  

ஏசாயா கூறுவதைப்போல, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்; இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம் என்று நம்மை நாம் முற்றிலும் தேவனுக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுக்க வேண்டியது அவசியம். 

இப்படி நாம் பாவங்களுக்கும் அசுத்தமான வாழ்க்கைக்கும் விலகி கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று அப்போஸ்தலராகிய பவுல் நமக்கு அறிவுரைகூறுகின்றார். ஆம், "அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்." ( ரோமர் 6 : 19 )

இப்படி நமது உடலை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுக்கும்போது நாம் இதுவரை நம்மை ஆண்டுவந்த வேறே ஆண்டவன்மார்களை விட்டு விலகுகின்றோம் என்று பொருள். கர்த்தர் நம்மை ஆளும்படி ஒப்புக்கொடுத்த நாம் இனி கர்த்தரையேச் சார்ந்து அவருடைய நாமத்தை மட்டுமே  பிரஸ்தாபப்படுத்துவோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Monday, August 19, 2024

அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை

'ஆதவன்' ஆகஸ்ட் 27, 2024. 💚செவ்வாய்க்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,296 


"நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை." ( புலம்பல் 3 : 22 )

எரேமியா மிகப்பெரிய தீர்க்கதரிசி, அதே வேளையில் மிகப்பெரிய துன்பங்களையும் வாழ்வில் அனுபவித்தவர். புதைகின்ற சேறு நிறைந்த கிணற்றில் போடப்பட்டு அதில்  அழுந்தி பரிதபித்தவர். ஆனால் அவர் தனது அனுபவத்தில் கண்டறிந்த உண்மைதான், "நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை." என்பது. எனவே, இது வெற்று வார்த்தையல்ல. 

மட்டுமல்ல, அவர் தனது அனுபவத்தின்மூலம் துணிந்து கூறுகின்றார், "கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன். தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்". ( புலம்பல் 3 : 24, 25 ) சிறிய சிறிய துன்பங்களை அனுபவித்தவர்; அவற்றிலிருந்து தேவன் அவரை விடுவித்த வல்லமையினை அனுபவித்தவர்; எனவே, பெரிய துன்பம் வந்தபோது கூறுகின்றார், "அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்" என்று.

வேதாகமத்தில் நாம் இத்தகைய வாசகங்களை பல இடங்களில் பல பரிசுத்தவான்கள் அறிக்கையிடுவதை வாசித்திருக்கின்றோம். இத்தகைய வசனங்கள் நமக்கு நம்பிக்கையும் தேவனுக்குக் காத்திருக்கும் பெலத்தையும் அளிக்கின்றன. காரணம், இந்த உலகத்தில் நமக்கு துன்பங்களும் சோதனைகளும் உண்டு என்று இயேசு  கிறிஸ்துவே கூறியிருக்கின்றார். ஆம், "என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்." ( யோவான் 16 : 33 ) அவர் உலகத்தை ஜெயித்ததைப்போல நாமும் ஜெயிக்கவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கின்றார்; எனவே, அதற்கான பலத்தையும் நமக்குத் தருகின்றார். 

சில ஆசீர்வாத ஊழியர்கள் பொய்யாகக்  கூறுவதுபோல, மனம்திரும்பி  இயேசு கிறிஸ்துவிடம் வந்தவுடன் அனைத்துத் துன்பங்களும் மறைந்துவிடும் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. ஆனால்,  ஒன்று நிச்சயம், துன்பங்கள் நெருக்கினாலும்  "ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார். அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்." ( புலம்பல் 3 : 31, 32 ) இதுவே கிறிஸ்தவ நம்பிக்கை. 

ஆம் அன்பானவர்களே, நமது தேவன் கிருபை நிறைந்தவர். எனவே, "நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை." ( புலம்பல் 3 : 22 ) என்று கூறுகின்றார் எரேமியா. 

இதனை வாசிக்கும் அன்பு சகோதரனே, சகோதரியே, இன்று ஒருவேளை நீங்கள் துன்பத்தையும் பாடுகளையும் பிரச்சனைகளையும் சந்தித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அவை நிரந்தரமல்ல. எந்நேரமும் கர்த்தரது கிருபையைச் சார்ந்துகொள்ளவேண்டியதே நாம் செய்யவேண்டியது. அப்படி நாம் தேவ கிருபையினைச் சார்ந்து வாழும்போது நமது பலவீனத்தில் நாம் தேவ பெலனை அனுபவிக்கமுடியும். 

"என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்"   ( 2 கொரிந்தியர் 12 : 9 ) என்று அப்போஸ்தலனாகிய பவுலிடம் கிறிஸ்து கூறவில்லையா? எனவே அவர் கூறுவதுபோல, கிறிஸ்துவின் வல்லமை நம்மேல் தங்கும்படி, நம் பலவீனங்களைக்குறித்து நாம் சந்தோஷமாய் பெருமைகொள்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Saturday, August 17, 2024

தாய் குழந்தையைச் சேர்த்துக்கொள்வதுபோல

 'ஆதவன்' 💚ஆகஸ்ட் 26, 2024. 💚திங்கள்கிழமை        வேதாகமத் தியானம் - எண்:- 1,295 


"அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே, அவருடைய தயவோ ஆயுள் காலம் வரை; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்." ( சங்கீதம் 30 : 5 )

மனிதர்களுடைய பலவீனம் தேவனுக்குத் தெரியும். அவர் எப்போதும் மனிதர்கள்மேல் கோபம் கொள்வதில்லை. எனவே, நமது தப்பிதங்களுக்கு அவர் தண்டனை கொடுத்தாலும் ஒரு தாய் தவறு செய்த குழந்தையை மீண்டும்  சேர்த்துக்கொள்வதுபோல அணைத்துச் சேர்த்துகொள்கின்றார். "நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே." ( ஏசாயா 57 : 16 ) என்று கூறுகின்றார் தேவனாகிய கர்த்தர். 

இதனையே இன்றைய தியான வசனத்தில் நாம் "சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்." என்று வாசிக்கின்றோம்.  ஒரு இரவு முடிந்து பகல் விடிவதைப்போல நமது துக்கங்கள் துயரங்களை அவர் மாற்றுவார். காரணம், "அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது." ( லுூக்கா 1 : 50 ) என்று கூறப்பட்டுள்ளது. அதாவது நாம் தேவனுக்கு பயப்படும் ஒரு வாழ்க்கை வாழும்போது இது சாத்தியமாகின்றது. 

இதனையே நாம் மேலும் ஏசாயா நூலில் வாசிக்கின்றோம், "அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்." ( ஏசாயா 54 : 8 ) ஆம் அன்பானவர்களே, "அவருடைய இரக்கங்கள் மகா பெரியது" (1 நாளாகமம் 21:13) அவரது கோபமோ அற்பகாலம்தான்.

இன்று ஒருவேளை பல்வேறு துன்பங்கள் நம்மை நெருக்கிக்கொண்டிருக்கலாம். ஆனால் அவை நிரந்தரமல்ல. தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வோமானால்  அவரது இரக்கங்கள் நமக்கு நிச்சயம் உண்டு. மனம்திரும்பிய ஒரு வாழ்க்கை வாழ விரும்புவோமானால் அவரது இரக்கம் நமக்கு நிச்சயம் உண்டு.  

இஸ்ரவேல் மக்கள் பல்வேறு முறை தேவனுக்கு எதிராக செயல்பட்டு எதிரி இராஜாக்களிடம் அடிமைகளாக ஒப்புக்கொடுக்கப்பட்டபோதும் அவர்கள் மனம் திரும்பியபோது தேவன் அவர்களை விடுவித்து இரட்சித்தார். அதுபோலவே, இன்று நமது பாவ வாழ்க்கை நமக்குப்  பல்வேறு  துன்பங்களை வாழ்வில் கொண்டு வந்திருக்கலாம். "அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே, அவருடைய தயவோ ஆயுள் காலம் வரை" என்று இன்றைய தியான வசனம் சொல்வதற்கேற்ப நாம் மனம்திரும்பும்போது நமது ஆயுள் காலம்வரை நமக்கு அவர் இரக்கம் காட்டுவார். 

தகப்பன் தன்  பிள்ளையை நேசிப்பதால்தான் தண்டிக்கின்றானேத்தவிர ஒரேயடியாக அழித்துவிடவேண்டுமென்று தண்டிப்பதில்லை. ஆம் அன்பானவர்களே, தேவனிடம் திரும்புவோம்.  அப்போது சாயங்காலத்தில் அழுகை தங்கினாலும்  விடியற்காலத்திலே நமது வாழ்வில் களிப்புண்டாகும்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

கிறிஸ்துவைக்குறித்து வெட்கப்படாமலும் அவரை வெட்கப்படுத்தாமலும்

'ஆதவன்' ஆகஸ்ட் 25, 2024. 💚ஞாயிற்றுக்கிழமை      வேதாகமத் தியானம் - எண்:- 1,294 

"என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்."(லுூக்கா 9 : 26 )

இன்றைய தியான வசனத்தில் தன்னைக்குறித்து வெட்கப்படுதலைப்பற்றி இயேசு கிறிஸ்து கூறுவது ஒரு பெண் வெட்கப்படுவதுபோல வெட்கப்படுவதையல்ல; மாறாக, பிறர் மத்தியிலும் இக்கட்டான நேரங்களிலும் அவரது பெயரை வெளிப்படுத்தவும், அவர் கூறிய வசனங்களை குறிப்பிட்ட நேரங்களில் புறக்கணிப்பதையும்  நாம் அவரை ஏற்றுக்கொண்டுள்ளதை வெளிப்டையாகக் கூறத் தயங்குவதையும் குறிக்கின்றது. 

இன்று பல கிறிஸ்தவர்கள் இப்படியே இருக்கின்றனர். வேலைபார்க்கும் இடங்களில் அல்லது மற்ற மதத்தினரோடு ஒரே இடத்தில சேர்ந்து தங்க நேரிடும்போது தாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதனை வெளிப்படுத்தத் தயங்கி அவர்களைப்போன்ற செயல்பாடுகளைச் செய்வதைக் குறிக்கின்றது. 

மற்றவர்களோடு நாம் ஒற்றுமையாகவும் நண்பர்களாகவும் வாழவேண்டியது அவசியம். ஆனால், ஆவிக்குரிய காரியங்களில் நாம் நமது தனித் தன்மையினை விட்டுவிடக்கூடாது. அப்படி விட்டுவிடுவது கிறிஸ்துவைக்குறித்து வெட்கப்படுவதாகும். 

மேலும், கிறிஸ்துவைக்குறித்தும் அவரது வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படுவது என்பது அவரது வார்த்தைகளுக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவது. இன்று தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பலரும் ஆலய வழிபாடுகளைத் தவிர மற்ற எந்த விதத்திலும் கிறிஸ்துவைப் பின்பற்றுவதில்லை. சாதாரண மனிதர்களைவிடக் கீழானவர்களாக பல வேளைகளில் செயல்படுகின்றனர்.  

கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறேன் என்று கூறிக்கொள்ளும் பலர் கூட ஏமாற்று, லஞ்சம், கொலை, விபச்சாரம், பதுக்கல், பணம் சம்பாதிக்கக் கையாளும் பல்வேறு குறுக்கு வழிகள், சைபர் கிரைம் (cyber crime) போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபடுவதை நாம் செய்தித்தாட்களில் வாசிக்கின்றோம். இவை போன்ற செயல்பாடுகள் செய்யும்போது நாம்  கிறிஸ்துவை வெட்கப்படுத்துகின்றோம்.  

இப்படி "என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்." என்கின்றார் இயேசு கிறிஸ்து. அவர் வெட்கப்படுவார் என்பது மணப்பெண்போல வெட்கப்படுவார் என்று பொருளல்ல; இப்படிச் செய்பவர்களை அருவெறுத்து புறம்பே தள்ளுவார் என்று பொருள்.   

ஆம் அன்பானவர்களே, எனவே இதுபோல கிறிஸ்துவைக்குறித்து வெட்கபடாமலும் கிறிஸ்துவை வெட்கப்படுத்தாமலும் வாழ்வோம். அதனையே அவர் விரும்புகின்றார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

என்னை மட்டாய்த் தாண்டியும்

 'ஆதவன்' 💚ஆகஸ்ட் 24, 2024. 💚சனிக்கிழமை 💚     வேதாகமத் தியானம் - எண்:- 1,293 

"கர்த்தாவே, என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப்போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும்." ( எரேமியா 10 : 24 )

இன்றைய தியான வசனத்தில் எரேமியா தீர்க்கத்தரிசி தேவனுடைய தண்டனைக்குத் தன்னை ஒப்புவித்து ஜெபிக்கின்றார். "நீர் என்னைத் தாண்டியும் ஆனாலும் கடினமான தண்டனை தந்து என்னை அழிந்துவிடாமல் மட்டாய்த் தாண்டியும் என்கின்றார். 

நமது எண்ணங்கள், செயல்பாடுகள் வெற்றிபெறவேண்டுமானால் தேவனது கிருபை அவசியமாய் இருக்கின்றது. நமது வழிகள் நம்மால் ஆவதில்லை. நமது செயல்கள் அனைத்தும் நமது முயற்சியால் வெற்றிபெறுவதில்லை. அதற்கு தேவனுடைய கிருபை தேவையாய் இருக்கின்றது. இப்படி தேவனது கிருபையினைப் பெறுவதற்கு நமது பாவங்களும் தகாத செயல்பாடுகளும் தடையாக இருக்கின்றன. 

இப்படித் தனது செயல்பாடுகள் இருந்துவிடக் கூடாது அப்படி இருக்குமானால் அவற்றுக்கு மட்டான ஒரு தண்டனையினைத் தந்து எனது வழி வாய்க்கும்படிச் செய்யும் என்கின்றார் எரேமியா. இதனையே இன்றைய தியான வசனத்தின் முந்தின வசனத்தில் கூறுகின்றார்,  "கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்." ( எரேமியா 10 : 23 )

அன்பானவர்களே, நாம் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ்ந்தும் நமக்குத் துன்பங்கள் வருமானால் நாம் சோர்ந்துபோகக்கூடாது என்று நாம் எபிரெயர் நிருபத்தில் வாசிக்கின்றோம். அத்தகைய துன்பங்கள்  "சிட்சை" அல்லது "தண்டனை"  என்று கூறப்பட்டுள்ளது. "அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்." ( எபிரெயர் 12 : 5, 6 ) என்று வாசிக்கின்றோம். 

தகப்பன் தன்  பிள்ளையை நேசிப்பதால்தான் தண்டிக்கின்றானேத்தவிர ஒரேயடியாக அழித்துவிடவேண்டுமென்று தண்டிப்பதில்லை. "நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?" ( எபிரெயர் 12 : 7 )

எனவே, இன்றைய தியான வசனத்தில் எரேமியா ஜெபித்ததுபோல நாமும் ஜெபிக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. காரணம், நம்மிடம் தேவனுக்கு ஏற்பில்லாத பல செயல்பாடுகள் உள்ளன. அத்தகைய செயல்பாடுகளுக்கு தேவ மன்னிப்பு பெறும்போது மட்டுமே நமது வழிகள், நமது திட்டங்கள் தேவ கிருபையால் வெற்றிபெறும்.  "கர்த்தாவே, என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப்போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும்." என்று வேண்டுதல் செய்து முதலில் தேவ மன்னிப்பைப் பெறுவோம்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Friday, August 16, 2024

தேவனது பார்வைக்கு மறைவானது ஏதுமில்லை

 'ஆதவன்' 💚ஆகஸ்ட் 23, 2024. 💚வெள்ளிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,292 

 

"அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்." (எபிரெயர் 4:13)

இந்த உலகத்தில் நாம் பலவேளைகளில் பலரையும் ஏமாற்றிவிடலாம். ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்றிவிட முடியாது என்று கூறுவார்கள். இது உண்மையான கூற்றாக இருந்தாலும் தேவனைப் பொறுத்தவரை அவரை நாம் ஒரு சின்ன காரியத்தில்கூட ஏமாற்றிடமுடியாது. 

ஒரு மனிதன் பதினைந்து ஆண்டுகளாக தனது மனைவிக்குத் தெரியாமல் இன்னொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தான். ஆனால் இந்த மனிதன் ஊரிலும் ஆலய காரியங்களிலும் முன்னின்று செயல்படுபவன். ஆண்டு விழாக்களிலும் இதர கூட்டங்களிலும் கலந்துகொள்ளும் அனைத்து பிரமுகர்களும் ஆயர்களும் இவனையும் இவனது பணிகளையும் பாராட்டி, "நமது ஊருக்குக் கிடைத்த பொக்கிஷம் இவர்" என்று கூறுவார்கள். 

ஆம் அன்பானவர்களே, நாம் ஒரு மனிதரது வெளிச் செயல்பாடுகளைப் பார்த்து அவர்களை மதிப்பிடுகின்றோம். ஆனால் தேவனை ஏமாற்றிட முடியாது. "அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்." 

ஒரு மனிதனது வெளிச் செயல்பாடுகளையல்ல, அவனது உள்ளான மனத்தினையும் தேவன் அறிந்திருக்கின்றார். ஆதியாகமம் நூலில் காயின் ஆபேல் சரித்திரத்தை நாம் வாசித்திருக்கின்றோம். காயினது காணிக்கையினை தேவன் அங்கீகரிக்கவில்லை. காரணம், அவனது உள்ளான மனம் நேர்மையானதாக இல்லை; நன்மைசெய்யும் குணமுள்ளதாக இல்லை. எனவே காயினது காணிக்கையினை  தேவன் அங்கீகரிக்கவில்லை  இதனையே, "காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை." ( ஆதியாகமம் 4 : 5 ) என்று வாசிக்கின்றோம். ஆம், காயினை அங்கீகரிக்காததால் அவன் காணிக்கையினையும் அங்கீகரிக்கவில்லை. 

இதனை நாம் தொடர்ந்து வாசிக்கும்போது பார்க்கின்றோம், "அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்." ( ஆதியாகமம் 4 : 6, 7 ) என்றார். காயினது எரிச்சல் அவனுக்குள்ளிருந்த கொலைகார  குணத்தை வெளிப்படுத்துகின்றது. தேவன் அதனை அறிந்திருந்தார். ஆம், அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது. 

நம்மை நாம் நிதானித்துப்பார்ப்போம். தேவனுக்கு அல்லது நம்மோடு வாழும் சக மனிதர்களுக்கு உண்மையில்லாத காரியங்களை நாம் செய்துகொண்டிருப்போமானால் நாம் எவ்வளவுதான் நல்ல காரியங்களை ஆலயத்துக்கென்று செய்தாலும் தேவன் அவற்றை அங்கீகரிக்கமாட்டார். சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது,

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்            
Rephrase with Ginger (Ctrl+Alt+E)

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - லுூக்கா 11 : 13 / Luke 11:13

" ஆதவன் " தியானம் - 1981 ஜூலை 11, சனி  2026       "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந...