Monday, August 05, 2024

நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்

 ✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 12, 2024. 💚திங்கள்கிழமை 💚   வேதாகமத் தியானம் - எண்:- 1,281        


"மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?" ( ரோமர் 6 : 16 )

இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான  பவுல் இரண்டு வித  அடிமைத்தனத்தைக் குறித்துக் கூறுகின்றார்.  ஒன்று, மரணத்துக்கு ஏதுவாக நம்மைச் சிறைப்படுத்தும் பாவ   அடிமைத்தனம். இன்னொன்று, நீதிகேதுவான தேவனுக்கு கீழ்ப்படியும் அடிமைத்தனம்.   

இந்த இரண்டில் எதற்கு நம்மை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கின்றோமோ அதற்கே நாம் அடிமைகளாக  .இருப்போம். நாங்கள் யாருக்கும் அடிமைகள் அல்ல என்று   வாதிட்ட யூதர்களைப்பார்த்து இயேசு  கிறிஸ்து கூறினார், "பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( யோவான் 8 : 34 ) என்று. 

பாவம் நம்மை அடிமைப்படுத்துவது  மட்டுமல்ல அது ஆத்தும மரணத்தையும் ஏற்படுத்துகின்றது. இதனையே நாம் "பாவத்தின் சம்பளம் மரணம்" (ரோமர் 6:23) என்று வாசிக்கின்றோம்.    ஆம் அன்பானவர்களே, இதனாலேயே இன்றைய தியான வசனம் நமக்கு இந்த இரண்டு அடிமைத்தனத்தையும் எடுத்துக்கூறி வாழ்க்கையில் நாம் நமக்கேற்றதை தேர்வு செய்யக் கூறுகின்றது. இந்த இரண்டில் எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா? என்று கேள்வியும் எழுப்புகின்றது. 

மட்டுமல்ல, அப்போஸ்தலராகிய பவுல் நாம் எதனைத் தேர்வுசெய்ய வேண்டும் என்றும் ஆலோசனைக் கூறுகின்றார். ஆம்,  "அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்." ( ரோமர் 6 : 19 ) என்கின்றார். 

ஆலயங்களுக்குச் சென்று ஆராதனை செய்யுமுன் நாம் நம்மையே சீர்தூக்கிப் பார்த்துக்கொண்டு ஆராதனைகளில் கலந்துகொள்ளவேண்டும். பாவத்துக்கு அடிமைகளாக இருந்துகொண்டு ஆராதனையும் செய்வோமானால் அது அர்த்தமற்ற ஆராதனையாகவே இருக்கும். நீதிக்கேதுவான தேவனுக்குக் கீழ்ப்படிதலுள்ளவர்களாக நம்மைத் தேவனுக்கு அடிமைகளாக்கி ஆலய ஆராதனைகளில் கலந்துகொள்வோம். 

ஆம், இப்பொழுது "பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்." 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Saturday, August 03, 2024

வானம் எனக்குச் சிங்காசனம்

 'ஆதவன்' 💚ஆகஸ்ட் 11, 2024.  ஞாயிற்றுக்கிழமை 💚  வேதாகமத் தியானம் - எண்:- 1,280        


"வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதப்படி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது?" ( ஏசாயா 66 : 1 )

இன்றைய தியான வசனம் நாம் பல்வேறுமுறை கேட்ட வசனம்தான். எனினும், இந்த வசனத்தை இதன் முழு அர்த்தம் தெரிய தொடர்ச்சியாக அடுத்த வசனத்தையும் நாம் வாசிக்கவேண்டியது அவசியம். 

அடுத்த வசனம் சொல்கின்றது, "என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்." ( ஏசாயா 66 : 2 ) அதாவது வானம், வானத்திலுள்ள அனைத்துப் படைப்புகளான விண்மீன்கள், கோள்கள், அண்டவெளிகள் இவை அனைத்தையும் நான்தான்  படைத்துள்ளேன். இவை எனக்குச் சிம்மாசனம்போல இருக்கின்றன.  

"ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்." என்று இந்த வசனம் சொல்கின்றது. இதன்பொருள், இப்படி இவையெல்லாம் எனக்குச் சிம்மாசனம்போல இருந்தாலும் இவைகள் அனைத்தையும்விட சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன் என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

இப்படித் தேவன் மனிதர்களை நோக்கிப்பார்க்கக் காரணம், தேவன் மனிதர்களை அவரது மற்ற படைப்புக்களைவிட மேலானவர்களாகக்  கருதுவதால்தான். எனவே தேவனது ஆகாயப் படைப்புக்கள் தேவனுக்குச் சிம்மாசனம்போல இருந்தாலும் அவர் மனிதர்களுக்குள் வசிக்கவே ஆசைப்படுகின்றார். ஆம், "ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 7 : 48 ) அவர் ஆகாயத்திலோ மனிதர்களால் கட்டப்படும் ஆலயங்களில் வசிப்பதையோவிட மனிதர்களுக்குள் வசிக்கவே ஆசைப்படுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, எனவேதான் நாம் நமது உடலை தேவன் வாழும் வகையில் பரிசுத்தமாகக் காத்துக்கொண்டு  வாழவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. 

நினைத்துப்பாருங்கள், பெரிய பெரிய விஞ்ஞானிகளாலும் பகுத்து உணரமுடியாத அண்டசராசரங்களைவிட தேவன் மனிதர்களை அதிகம் விரும்புகின்றார். பூமி அவரது பாதப்படியாக இருந்தாலும் அதில் வாழும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, அவரது வசனத்துக்கு நடுங்குகிறவர்களையே நோக்கிப்பார்க்கின்றார்.  எனவே, நொறுக்கப்பட்ட இதயத்தோடு தேவனது வசனத்துக்கு நடுங்கி வாழ்வோமானால் தேவன் நமக்குள் வந்து தங்குவார். 

தேவன் விண்ணுலகமான சிங்காசனத்தில் அமர்ந்துகொண்டு அதிகாரத்தோடு ஆட்சி செய்வதைவிட பாதப்படியான பூமியில் நம்முடன் வாசிக்கவிரும்புவது எத்தனைப் பெரிய  ஆச்சரியம். அவரது விருப்பத்தை நிறைவு செய்யும் வாழ்க்கை வாழ்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்            

Friday, August 02, 2024

பூரணம்

 ✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 10, 2024. 💚சனிக்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,279                                


"நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவானவளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும் வரைக்கும்,....." ( எபேசியர் 4 : 11 )

சுவிசேஷம் ஏன் உலகுக்கு அறிவிக்கப்படவேண்டும் என்பதனை இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அதாவது இந்த உலகத்தில் வாழக்கூடிய அனைவரும் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசத்தினால் பற்றிக்கொண்டு கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியைப்போல நாமும் வளர்ந்து பூரண மனிதர்களாக வேண்டும். பூரணம் என்பது நிறைவைக் குறிக்கின்றது. நாம் அனைவருமே நம்மில் எந்தக் குறைவுமின்றி கிறிஸ்துவைப்போல மாறவேண்டும். 

எனவேதான், "...சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்." ( எபேசியர் 4 : 12, 13 )

அதாவது, எப்படியாவது மக்கள் கிறிஸ்துவை அறிவதன்மூலம் பூரணம் அடையவேண்டும் என்பதற்காக, அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள் மற்றும் போதகர்கள் என ஐந்துவகை ஊழியங்களை தேவன் ஏற்படுத்தினார் என்று கூறப்பட்டுள்ளது. 

கிறிஸ்துவை வாழ்வில் அறிந்திடாத மக்கள் பலர் இந்த ஐந்து வகை ஊழியங்களில் ஏதாவது ஒன்றினாலும் தொடப்பட்டு கிறிஸ்துவுக்கு நேராகத் திரும்பியுள்ளதை நாம் உலகினில் பார்க்கலாம். அப்போஸ்தல அடையாளங்களான அற்புதங்கள் மூலம் பலரும், தங்கள் உள்ளத்திலுள்ளதை தீர்க்கதரிசனங்களால் வெளிப்படுத்துவதன் மூலம் சிலரும் சுவிசேஷகர்களின் நற்செய்தி  அறிவிப்புகள் மூலம் மற்றும்  மேய்ப்பர்கள், போதகர்கள் இவர்களின் வழிகாட்டுதலின் மூலம் பலரும் கிறிஸ்துவிடம் திரும்பியுள்ளனர். 

ஆம் அன்பானவர்களே, தேவன் எப்படியாவது மக்கள் தன்னை அறிந்து  தன்னைப்போல பூரணர்களாக மாறவேண்டும் என்று இப்படிச் செய்துள்ளார். எனவே இத்தகைய சுவிசேஷ அறிவிப்புகளை நாம் புறக்கணித்துக்கொண்டே இருப்போமானால் நிச்சயம் தண்டனைக்கு நாம் தப்பமுடியாது. 

"முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்." ( எபிரெயர் 2 : 3, 4 )

ஆம் அன்பானவர்களே, சுவிசேஷ அறிவிப்புகளை அற்பமாக எண்ணாமல் அறிவிக்கப்படும் செய்திக்கு நேராக நமது இருதயத்தைத் திரும்புவோம்; கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியைப்போல நாமும் வளர்ந்து பூரண மனிதர்களாவோம்.   

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Thursday, August 01, 2024

உண்மை நட்பு

 ✉'ஆதவன்' ஆகஸ்ட் 09, 2024. வெள்ளிக்கிழமை 💚   வேதாகமத் தியானம் - எண்:- 1,278                                             


  
  

"என் சகோதரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன்; நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய்; உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது; ஸ்திரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது." ( 2 சாமுவேல் 1 : 26 )

தனது நண்பனான யோனத்தான் இறந்துபோனான் என்று கேள்விப்பட்டபோது தாவீது வெளிப்படுத்தின வேதனையின் வார்த்தைகள்தான் இன்றைய தியான வசனம். 

வேதாகமத்தில் உண்மையான நட்புக்கு உதாரணமாக இருந்த இரு நண்பர்கள்தான் தாவீதும் சவுலின் மகன் யோனத்தானும். யோனத்தான்  சவுல் அரசனின் மகன் என்பதால் தகப்பனுக்கு அடுத்தபடி ராஜாவாக  ஆட்சிப்பொறுப்பை ஏற்கும் நிலையில் இருந்தவன். தாவீது சவுலிடம் பணி செய்தவன். ஆனால் சவுல் தாவீதை மிகவும் வெறுத்தான். தாவீதை அழித்து ஒழிக்க முயன்றுகொண்டிருந்தான். காரணம், தாவீதுக்கு இருந்த தைரியம், பலம், அறிவு இவை சவுலைக் கலங்கச் செய்தன. தனக்குப்பின் தனது மகனுக்குப்பதில் ஆட்சிப்பொறுப்பைத் தாவீது கைப்பற்றிவிடுவான் என்று சவுல் அஞ்சினான். 

ஆனால் சவுலின் மகன் யோனத்தான் தாவீதை "தன் உயிரைச் சிநேகித்ததுபோல சிநேகித்தான்." ( 1 சாமுவேல் 20 : 17 ) என்று கூறப்பட்டுள்ளது. இது முரண்பாடுகளுக்குள் எழுந்த நட்பு. ராஜாவான தகப்பன் தாவீதைக் கொன்று ஒழிக்க முயல, அவன் மகனோ அவனைத் தன் உயிரைப்போல நேசிக்கிறான். 

ஒருமுறை சவுல் தனது மகன் யோனத்தானிடம், "ஈசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும், உன் ராஜ்யபாரமானாலும் நிலைப்படுவதில்லை; இப்போதே அவனை அழைப்பித்து, என்னிடத்தில் கொண்டுவா; அவன் சாகவேண்டும் என்றான்." ( 1 சாமுவேல் 20 : 31 ) ஆனால் யோனத்தானோ அப்படி நினைக்கவில்லை. தாவீது அரசன் ஆவான் அப்போது நான் அவனுக்கு அடுத்த நிலையில் இருக்கவும் தயார் எனும் மனநிலையில் இருந்தான் யோனத்தான். இந்த மனநிலையை நாம் நினைத்தும் பார்க்க முடியவில்லை. தனது ராஜ மேன்மையை நண்பனுக்காக விட்டுக்கொடுக்கும் மனநிலை கொண்ட உயரிய நட்பு தாவீதுமேல் யோனத்தான் கொண்ட நட்பு. 

எனவே தன் தகப்பன் சவுலுக்குப் பயந்து காட்டில் ஒளிந்திருந்த தாவீதிடம் சென்று அவனைத் திடப்படுத்தினான் யோனத்தான். "அப்பொழுது சவுலின் குமாரனாகிய யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையைத் திடப்படுத்தி: நீர் பயப்படவேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்கமாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்; அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார் என்றான்." ( 1 சாமுவேல் 23 : 16, 17 )

யோனத்தான் எனும் உலக மனிதனின் அன்பு இப்படி இருக்குமானால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பு எவ்வளவு மேலானதாக இருக்குமென்று எண்ணிப்பாருங்கள். அன்பானவர்களே, இதனைவிட மேலான நட்போடு கூடிய அன்புடன்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மிடம் வந்தார். பரலோக மேன்மையைத் துறந்து நமக்காகத் தனது உயிரையும் கொடுத்தார்.  நம்மைத் தன்னைப்போல உருமாற்ற; பிதாவோடு அவர் கொண்டிருந்த அதே உறவோடு நாமும் அவரோடும் பிதாவோடும்  ஒன்றாக அமர்ந்திட.  (யோவான் 17:20 - 26) அவரையே நாமும் அன்பு செய்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

இரண்டு சாட்சிகள்

 ✉'ஆதவன்' ஆகஸ்ட் 08, 2024. வியாழக்கிழமை          வேதாகமத் தியானம் - எண்:- 1,277                                       


 

"நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்." ( ரோமர் 8 : 16 )

இந்தக் காலத்திலும்கூட எதற்கும் சட்டபூர்வமாக இரண்டு சாட்சிகள் தேவைப்படுகின்றன. ஒரு பத்திரம் பதிவுசெய்யும்போதுகூட இறுதியில் சாட்சிகள் என்று இரண்டுபேர் கையெழுத்திடுவார்கள். திருமண ஒப்பந்தத்திலும்கூட  மணமகன் மணமகள் கையொப்பமிட்ட பின்னர் இரண்டு சாட்சிகள் இறுதியில் கையொப்பமிடுவார்கள். இதற்குப் பொருள் என்னவென்றால், இங்கு கூறப்பட்டுள்ளது அல்லது நடந்தது அனைத்தையும் நாங்கள் பார்த்தோம். அதற்கு நாங்கள்தான் சாட்சிகள் என்று பொருள். 

இப்படியே, நாம் தேவனுடைய பிள்ளைகளாய்த்தான்  இருக்கிறோம் என்பதற்கு இரண்டு சாட்சிகளை அப்போஸ்தலரான பவுல் குறிப்பிடுகின்றார். ஒன்று ஆவியானவர் இன்னொன்று  நம்முடைய சொந்த ஆவி என்று குறிப்பிடுகின்றார். 

நாம் தேவனுக்கேற்ற பிள்ளைகளாக நடக்கின்றோமா என்பதனை ஆவியானவர் நமக்கு முதலில் உணர்த்துகின்றார். நம்மைத் திருத்திக்கொள்ள வழி காட்டுகின்றார். அப்படி நாம் நம்மைத் திருத்திக்கொள்ளாவிட்டால் அவர் துக்கமடைகின்றார். இதனை அப்போஸ்தலரான பவுல், "அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்." ( எபேசியர் 4 : 30 ) என்று குறிப்பிடுகின்றார். 

ஆவியானவரின் உணர்த்துதலின்படி நாம் நம்மைத் திருத்திக்கொள்ளும்போது  நமது ஆவியும் குற்ற உணர்ச்சி இல்லாமல் நாம் தேவனுடைய பிள்ளைகளாய்த்தான் இருக்கின்றோம் என்பதனை உறுதி செய்யும். இப்படி இரண்டு சாட்சிகளும் சரியாக இருக்குமானால் நாம் மெய்யாலுமே தேவனுக்கேற்றவர்கள் ஆகின்றோம்; அவரது பிள்ளைகளாகின்றோம். 

இதனையே இதற்கு அடுத்த வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் குறிப்பிடுகிற்றார். "நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்." ( ரோமர் 8 : 17 )

அதாவது நாம் அவரது பிள்ளைகளாகி ஒரு மகன் அல்லது மகள் எப்படித் தகப்பனது சொத்துக்களில் உரிமை பெறுவார்களோ அதுபோன்ற உரிமையினைப் பெறுவோம். அப்படி உரிமைப்பேறு கிடைக்க நமக்கு மேற்படி இரண்டு சாட்சிகளும் தேவைப்படுகின்றன. நமக்கு இந்த இரண்டு சாட்சிகளும் உண்டுமா என்பதனை நாம் நிதானித்துக்கொள்வோம்.

ஆவியானவர் நம்மைக்குறித்து என்னச் சொல்லுவார்? நமது சொந்த ஆவி நம்மைக் குறித்து என்ன உணர்த்துகின்றது?

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்           

Tuesday, July 30, 2024

1947 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட தாவீதின் புதிய சங்கீதம்

ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் :- 

                              சகோ. எம்.ஜியோ பிரகாஷ் 

1947 ஆம் ஆண்டு கும்ரன் குகையில் ஆடுமேய்த்த சிறுவர்கள் கண்டுபிடித்த மண்பாண்டங்களில் பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட வேதாகம  தோல்சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் தாவீது எழுதிய சங்கீதம் ஒன்றும் இருந்தது. வேதாகமத்தில் இல்லாத அந்தச்  சங்கீதம் இதோ:-  


நிச்சயமாக ஒரு புழு உம்மைத் துதிக்க முடியாது; கல்லறைப் புழு உம்  இரக்கத்தைப் புகழ்ந்திடாது. ஆனால் ஜீவனுள்ளோர் உம்மைத் துதிக்கமுடியும்!!. தள்ளாடுகிறவன்கூட உம்மைப் போற்றிப் புகழ முடியும். 


உமது இரக்கத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தி உமது நீதியால் அவர்களை மகிழ்விக்கின்றீர். ஏனெனில் ஜீவனுள்ளோரின் ஆன்மாக்கள் உமது கரங்களில் உள்ளன. மாம்சமான அனைத்துக்கும் உயிரளித்தவர் நீரே. 


உமது நன்மைக்கேற்ப, உமது இரக்கம் நீதிக்கேற்ப எம்மிடம் செயல்புரியும்.


கர்த்தரின் நாமத்தின்மேல் பற்றுதல் கொள்வோரின் குரலை அவர் கேட்கிறார். தனது இரகத்தினால் அவர்களைக் கைவிடாமல் காக்கின்றார். 


நீதியை நடப்பிக்கும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவரே பரிசுத்தவான்களை  தனது அன்பினாலும் இரகத்தினாலும் முடிசூட்டுகின்றார். 


என் ஆன்மா கர்த்தரது நாமத்தை  உயர்த்திப் போற்றுகின்றது. அவரது அன்பின் கிரியைகளை புகழ்ந்து பாடுகின்றது. உமது நீதியைப் போற்றிப் புகழ்ந்து பாடுவதற்கு முடிவே இல்லை. 


எனது பாவங்களும் மீறுதல்களும் என்னை  மரணத்துக்குச் சமீபமாக இழுத்துச் சென்றன. ஆனால் கர்த்தாவே, உமது மகா கிருபையினாலும்  நீதியினாலும் நீரே என்னை மீட்டுக்கொண்டீர்.


தேவனே! உண்மையிலேயே உமது நாமத்தை நான் நேசிக்கிறேன். உமது பாதுகாப்பில் அடைக்கலம் காண்கிறேன். உமது வல்லமையினை நினைவுகூரும்போது எனது இருதயம் தைரியம் கொள்கின்றது. உமது இரக்கத்தின்மேல் சாய்ந்துகொள்கிறேன்.


என் பாவங்களை மன்னியும், கர்த்தாவே என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். என் ஆத்துமாவை உமது உண்மையிலும் நீதியிலும்  காத்து நான் அழிந்திடாமல் பாதுகாத்தருளும். 


அலகை என்னை மேற்கொள்ளாமலும், அசுத்தஆவி என்னை வேதனைப்படுத்தி  என் எலும்புகளை மேற்கொள்ளாமலும் இருப்பதாக! தேவனே, நீரே என்புகழ்ச்சி; நாள்முழுதும் நீரே என் நம்பிக்கை.


உமது இரக்கத்தின் மேன்மையைக்கண்டு ஆச்சரியப்படும் என் சகோதரர்கள் என்னோடும் என் தகப்பன் வீட்டாரோடும் அக்களிப்பார்களாக. 


தேவனே! நான் எப்போதும் உம்மிலே மகிழ்ந்திருப்பேன்.!

ஓட்டையான தொட்டி

 ✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 07, 2024. 💚புதன்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,276                               

     

"என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்." ( எரேமியா 2 : 13 )

மெய்தேவனாகிய கர்த்தரை அறிந்தபின்பு நாம் அவரைவிட்டுப்  பின்மாறிப் போவோமானால் இன்றைய தியான வசனம் கூறும் நிலையில் நாம் இருக்கின்றோம் என்று பொருள். அதாவது அப்படி நாம் பின்மாறும்போது இரண்டு தீமைகளை செய்தவர்களாகின்றோம். முதலில்,   ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய தேவனை விட்டுவிடுகின்றோம் அடுத்து, தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளை நமக்காக உருவாக்கிக்கொண்டவர்கள் ஆகின்றோம்.      

அதாவது, தமிழில் ஒரு பழமொழி உண்டு. "கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்தாளாம் ஒருத்தி." அன்பானவர்களே, நமது கையில் வெண்ணையான தேவன் இருக்கும்போது அதனைப் பாதுகாத்து உபயோகப்படுத்திடாமல் நாம் நெய்க்காக அலைந்து திரியும் முட்டாள்களாக இருக்கக்  கூடாது. இஸ்ரவேல் மக்கள் இப்படித்தான் செய்தனர். ஜீவத்தண்ணீர் அவர்கள் நடுவில் இருந்தும் அதனை விட்டுவிட்டு தண்ணீர் நிரப்ப வெடிப்புள்ள ஓட்டையான தொட்டிகளைத் தங்களுக்காக உருவாக்கிக்கொண்டனர். 

அன்று இஸ்ரவேலர் செய்த அதே தவறையே இன்றும் கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்வோரில் பலரும் செய்து கொண்டிருக்கின்றனர். ஆம், ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய அவரை முழுமையாகப் பற்றுவதை விட்டுவிட்டு முட்டாள் பெண் நெய்க்கு அலைந்ததுபோல ஏமாற்று ஊழியர்களை நோக்கி ஓடுகின்றனர். ஆம், நாம் பற்றிக்கொள்ளவேண்டியது கிறிஸ்துவையே தவிர ஊழியர்களையல்ல. இவர்களைப்பார்த்து வேதனையுடன் தேவன் கூறுகின்றார், "என் ஜனங்கள் ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள். "

இதுபோலவே கிறிஸ்துவின்மேலுள்ள முழுமையான விசுவாசத்தை விட்டுவிட்டு வேதம் கூறாத முறையில் பல்வேறு புனிதர்களை நாடிப்போகும்போது நாம் ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய அவரை விட்டுவிடுகின்றோம் என்று பொருள். 

அன்பானவர்களே, நமது வீட்டில் தண்ணீர் நிற்காத ஒரு ஓட்டையான தொட்டி இருக்குமானால் அதனால் என்ன பயன்? அது இருப்பதும் ஒன்றுதான் இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான். வேதனையுடன் தேவன் கூறும் இன்றைய வார்த்தைகளுக்குச் செவி கொடுப்போம். நல்ல பலமான ஓட்டையில்லாத தொட்டியை நமக்குத் தந்து அதனை ஜீவத் தண்ணீரால் நிரப்பிட ஆவலுடன் காத்திருக்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அவரிடம் முழு மனதுடன் திரும்புவோம்.

"சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்." ( எபிரெயர் 3 : 12 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - லுூக்கா 11 : 13 / Luke 11:13

" ஆதவன் " தியானம் - 1981 ஜூலை 11, சனி  2026       "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந...