Saturday, July 27, 2024

நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல

 ✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 03, 2024. 💚சனிக்கிழமை      வேதாகமத் தியானம் - எண்:- 1,272                                     

  

"எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது."  (2 கொரிந்தியர் 3:5)

முற்றிலுமாகத்  தன்னை தேவனுக்கு ஒப்புவித்து வாழ்த்த தனது வாழ்க்கையினை அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார். அதாவது, தன்னால் தேவனுடைய உதவியில்லாமல் எதனையும் செய்ய முடியும் என்று தன்னால் எண்ணக்கூட முடியவில்லை என்கின்றார். 

இன்று மனிதர்கள் சிலவேளைகளில், "என்னைத் தெரியுமா? நான் நினைத்தால் எதனையும் செய்துவிடுவேன்" என்பார்கள்.  தன்னம்பிக்கைப்  பேச்சாளர்களும் எழுத்தாளர்களும், "என்னால் முடியும் என்று சொல்லிக்கொண்டே இருங்கள் அப்போது அது உங்களால் முடியும்" என்பார்கள்.  சிலர், "எண்ணம்போலவே வாழ்க்கை; நல்லதை எண்ணினால் நல்லதே நடக்கும்" என்பார்கள்.

ஆனால் இவை எல்லாமே மனித அறிவினால் அவர்கள் எண்ணுவது. தேவனது கிருபை இல்லாமல் நம்மால் எதுவுமே செய்ய முடியாது. அப்போஸ்தலரான யாக்கோபு இதனால்தான், "நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே. ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்." ( யாக்கோபு 4 : 14, 15 ) என்று நமக்கு ஆலோசனைத் தருகின்றார். 

ஆம் அன்பானவர்களே, தன்னம்பிக்கைப் பேச்சாளர்களைப்போல் நம்மையே நம்பாமல் தேவன்மேலேயே முழு நம்பிக்கையை வைப்போம். நம்மால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாம் தகுதியானவர்கள் அல்ல; நம்முடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது. "நூறு வயதுவரை வாழ்வது எப்படி?" எனத் தன்னம்பிக்கைப் புத்தகம் எழுதிய "கல்கண்டு" இதழ்  தமிழ்வாணன் அவர்கள் ஐம்பத்திரெண்டு வயதில் மரித்துப்போனார்.

இப்படிச் சொல்வதால் நாம் எதுவும் செய்யாமல் சும்மா இருந்து கொண்டு தேவனே எல்லாம் செய்வார் என்று எண்ணிக்கொண்டு அமர்ந்திருக்க வேண்டும் என்று பொருளல்ல.  மாறாக, "நான் இதனைச் செய்கிறேன், ஆண்டவருக்குச் சித்தமானால், என்னை வெற்றிபெறச் செய்வார்" என்று தேவனை முன்னிலைப்படுத்திச் செயல்படவேண்டும். நமக்கு பல்வேறு திறமைகளும் தகுதிகளும் இருக்கலாம். ஆனால் திறமைகளும் பல்வேறுத்  தகுதிகளும் உள்ள எல்லோரும் வாழ்வில் வெற்றியடையவில்லை என்பதனையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.  

கிறிஸ்து நமக்குள் இருந்து செயல்படும்போது கிறிஸ்துவுச் சித்தமான செயல்பாடுகளில் நாம் ஈடுபட்டால் நிச்சயம் வெற்றி பெறுவோம் அவரே நமக்கு அதற்கான பெலத்தையும் தருவார். எனவேதான், அத்தகைய செயல்பாடுகள் அனைத்தையும் செய்யத் தனக்கு பெலன் உண்டு என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். ஆம், "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு." ( பிலிப்பியர் 4 : 13 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                 

Thursday, July 25, 2024

பின்மாற்றம்

 ✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 02, 2024. வெள்ளிக்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,271   💚                                                              

"பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;" ( எபிரெயர் 12 : 1 )

இந்த உலகத்தில் வாழும் நமக்குப் பல்வேறு துன்பங்கள் பாடுகள் போன்றவை பாரமான சுமைகளாக நம்மை நெருக்கவே செய்யும். அதுபோல இந்த உலகில் நம்மைப் பாவத்தில் விழத்தள்ளுகின்ற பல்வேறு சூழ்நிலைகள் உள்ளன. ஆனால் நாம் இவற்றை விசுவாசத்தால் மேற்கொண்டு கிறிஸ்துவை நோக்கி நமது ஆவிக்குரிய வாழ்வைத் தொடரவேண்டும். இதனையே இன்றைய தியான வசனம் நமக்குக் கூறுகின்றது.

இப்படி ஆவிக்குரிய வாழ்வில் விசுவாசத்தின் மூலம் துன்பங்களையும் பாவங்களையும் மேற்கொண்ட ஒரு நீண்ட விசுவாசிகளின் பட்டியலை எபிரெய நிரூப ஆசிரியர் முதலில் தருகின்றார். அதன்பின்பு, "ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க" என்று கூறி இன்றைய தியான வார்த்தைகளைக் கூறுகின்றார். 

இந்த வசனத்தில் "விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசு" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது நம்மில் தேவன்மேல் விசுவாசம் ஏற்படக் காரணரும் அதனை நாம் இறுதிவரைக் காத்துக்கொள்ளத் துணைசெய்பவரும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதான். எனவே நாம் நமது துன்பங்களையும் பாவங்களையும் விட்டு விலகி, கிறிஸ்துவை நோக்கி பொறுமையாக ஆவிக்குரிய ஓட்டத்தை ஓடவேண்டியது அவசியம். 

இங்கு பொறுமையாக ஓடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது ஏன் என்று பலரும் எண்ணலாம். சிலர் ஆவிக்குரிய வாழ்க்கையினைக் கண்டுபிடித்த பின் மிகத் தீவிரமாகச் செயல்படுவார்கள். எங்கு ஆவிக்குரிய கூட்டம் நடைபெற்றாலும் முதலில் சென்று இடம்பிடித்துக்கொள்வார்கள். மற்றவர்களைவிடத் தாங்கள் சிறந்தவர்கள் என்று காட்டிட பல்வேறு செயல்பாடுகளைச் செய்வார்கள். ஆனால் கொஞ்சநாட்களில் இவர்கள் பின்மாற்றமடைந்து பழைய பாவ வாழ்க்கையினுள் சென்றுவிடுவார்கள். 

தமிழில் "மெல்லத் தின்றால் பனையையும் தின்னலாம்"  என ஒரு பழமொழி உண்டு. ஆம், எதிலும் நிதானம் அவசியம். ஒருமுறை இப்படிப் பின்மாற்றமடைந்த சகோதரர் ஒருவரைச் சந்தித்தேன். அவரிடம் பேசியபோது அவர், " எல்லா மதமும் ஒன்றுதான் பிரதர்........நானும் முதலில் எனது நண்பர் தூண்டிவிட்ட ஏதோ ஆர்வத்தில் செயல்பட்டேன். இப்போது நான் தெளிவடைந்துவிட்டேன்" என்றார். மீட்பு அனுபவம் பெற்று, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்தபின் இப்போது இவர் கண்டுகொண்டது "எல்லா மதமும் ஒன்றுதான்" என்பது. இதனைத் தான் தெளிவடைந்து விட்டதாகவும் கூறுகின்றார் என்றால் எவ்வளவு பரிதாபம்!!. 

ஆம் அன்பானவர்களே, தேவைக்கதிக ஆர்வம் வேண்டாம். இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். "கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்." ( 2 பேதுரு 2 : 20 ) என்று எச்சரிக்கின்றார் அப்போஸ்தலரான பேதுரு. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்             

Tuesday, July 23, 2024

செவிடனும் ஊமையனும் இருப்பதுபோல இருப்போம்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,270       ஆகஸ்ட் 01, 2024 💚 வியாழக்கிழமை 💚

"காதுகேளாதவனும், தன் வாயில் மறுஉத்தரவுகள் இல்லாதவனுமாயிருக்கிற மனுஷனைப்போலானேன்; கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறுஉத்தரவு கொடுப்பீர்." (சங்கீதம் 38:14, 15 )

இன்றைய தியான வசனமானது தாவீது பாடிய நினைவுகூருதலுக்கான சங்கீதம் என்று கூறப்பட்டுள்ள சங்கீதத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. தாவீது எதன் நினைவாக இதனைப் பாடினார் என்று பார்ப்போமானால்,  அவரது உயிரைப் பறிக்க பலர் முயன்றனர். குறிப்பாக சவுல், சவுலின் படைத்தலைவர்கள், தாவீதின் சொந்த மகன் என பலர் இப்படித் தாவீதைக் கொலை செய்யக்  காத்திருந்தனர். 

ஆனால் இவை எதனையும் பற்றிக் கவலைப்படாமல் ஒரு செவிடனும் ஊமையனும் இருப்பதுபோல நான் இருக்கிறேன் என்கின்றார் தாவீது. காரணம், கர்த்தர் இவர்களுக்கு மறுமொழி கொடுப்பார் என்று தாவீது நம்பியிருந்ததால்தான். எனவே, இப்படிக் காதுகேளாதவனும், தன் வாயில் மறுஉத்தரவுகள் இல்லாதவனுமாயிருக்கிற மனுஷனைப்போல இருக்கிறேன் என்கின்றார் தாவீது. அதாவது இது தாவீது கர்த்தர்மேல் கொண்டிருந்த நம்பிக்கையின் வெளிப்பாடு என்று கூறலாம்.

மேலும் இன்றைய தியான வசனத்துக்கு முந்தின இரு வசனங்களில் அவர் கூறுகின்றார், "என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குப் பொல்லாங்கு தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி, நாள்முழுதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள், நானோ செவிடனைப்போலக் கேளாதவனாகவும், ஊமையனைப் போல வாய்திறவாதவனாகவும் இருக்கிறேன்" (சங்கீதம் 38:12, 13 )

ஆம் அன்பானவர்களே, நம்மை எதிர்த்துச் சிலர் செயல்படும்போது நாம் அமைதியாக இருப்போமானால் இந்த உலகத்தினர் நம்மைக் கோழை என்றும் கையாலாகாதவன் என்றும் கூறலாம் ஆனால் தாவீது கூறுவதுபோல செவிடனும் ஊமையனும் போல இருந்து கர்த்தருக்குக் காத்திருப்போமானால் கர்த்தரே நமக்காக பதில் செய்வார்.  அப்படிக் கர்த்தர் எதிரிகளுக்கு அளிக்கும் பதில் மிகக் கடுமையானதாக இருக்கும்.

இஸ்ரவேலரை அழிக்க முயன்ற பார்வோனின் படைகளைக் கண்டு இஸ்ரவேலர் பயந்தனர். அப்போது மோசே அவர்களை நோக்கி, "பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்." ( யாத்திராகமம் 14 : 13, 14 ) அப்படியே பார்வோனின் அழிவு மிகக் கடுமையானதாக இருந்ததை நாம் வேதத்தில் வாசிக்கின்றோம். 

நமது வாழ்விலும் இதுவே நடக்கும். ஆம் அன்பானவர்களே, நான் அனுபவித்து அறிந்த வேத  சத்தியம் இது. "பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்." ( ரோமர் 12 : 19 )   என்று அப்போஸ்தலரான பவுல் கூறுகின்ற உண்மையும் இதுதான். 

"பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம்." ( எபிரெயர் 10 : 30 ) எனவே நமக்கு எதிராகச் சிலர் செயல்படும்போது ஊமையும் செவிடுமாக இருந்து கர்த்தர் பதிலளிக்கக் காத்திருப்போம்.  

 தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                   

Monday, July 22, 2024

வேதனையுற்று இருக்கிற யாவரையும் கர்த்தர் அழைக்கிறார்.

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,269     💚 ஜூலை 31, 2024 💚 புதன்கிழமை 💚


"கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம்பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார்." ( ஏசாயா 54 : 6 )

கணவனால் கைவிடப்பட்டப் பெண்கள் அதிலும் குறிப்பாக இளம் வயதில் கணவனால் தள்ளப்பட்ட பெண்கள் எவ்வளவு வேதனை அனுபவிப்பார்கள் என்பது நாம் அனைவரும் உணரக்கூடியதே.  அபலைப் பெண்களான அவர்களுக்கு ஆறுதலோ,   உதவியோ, தேறுதலோ எவரும் எளிதில் அளித்திடமுடியாது.

இந்தப் பெண்களைப்போல மனவேதனை அடைந்து வாழக்கூடிய மனிதர்கள் இந்த உலகினில் பலர் உண்டு. ஆனால் அவர்களோ ஆறுதலின் ஊற்றாகிய தேவனை அடையாளம் காணாமல் தவிப்போடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.  அத்தகைய மனவேதனையோடு வாழ்பவர்களைத் தேவன் அழைத்துக் கொண்டிருக்கின்றார். 

ஆனால் அவர்களோ தங்களது பாரம்பரிய மத நம்பிக்கையினாலும், வறட்டுப்  பிடிவாத குணத்தினாலும் தேவனிடம் வராமல் இருக்கின்றார்கள். கிறிஸ்தவர்களில் பலரும்கூட தங்களது குறுகிய மத எண்ணங்களினாலும், தாங்கள் அடிமையாகியுள்ள பாவப் பழக்கங்களிலிருந்து வெளிவர மனதில்லாததாலும்  மெய்யான அவரை அறியாமல் தொடர்ந்து வேதனையிலேயே அமிழ்ந்து கொண்டிருக்கின்றனர். 

ஒருமுறை இப்படி வேதனையில் இருந்த மனிதனிடம் கிறிஸ்துவைப்பற்றி நான்கூறியபோது, "உன் பெந்தெகொஸ்தே போதனையை என்னிடம் திணிக்கப் பார்க்கிறாயா?" என்றார் கோபத்துடன். "நண்பரே, இது பெந்தெகொஸ்தே போதனையல்ல, ஆண்டவரது போதனை" என்று நான் கூறவும், "தயவுசெய்து வேறு ஏதாவது பேசு" என்றார். அவரிடம் என்ன பேசுவது?

அன்பானவர்களே, இதனை வாசிக்கும் நீங்கள் ஒருவேளை கிறிஸ்தவராக இருக்கலாம் அல்லாதவராகவும் இருக்கலாம். ஆனால் நமது தேவன் எல்லோரையும் பார்த்துக் கூறுகின்றார்,  "கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம்பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னை வா என்று அழைக்கிறேன்" என்று .

தேவன் யாரையும் பலவந்தப்படுத்துபவரல்ல; யாரையும் அவர் வற்புறுத்தி மதமாற்றம் செய்பவருமல்ல. அவர் மனிதர்களிடம் மனமாற்றத்தை விரும்புகின்றார். அந்த மனமாற்றம்தான் நாம் அவரிடம் வருவதற்கு அடையாளம். ஆம், எத்தகைய கொடிய வேதனையில் இருந்தாலும் நமது மனம் அவரிடம் திரும்புமானால் அவர் நமக்கு ஆறுதலும் தேறுதலும் தந்து நமது வாழ்வை மாற்ற வல்லவர். 

கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம்பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் வேதனையுற்று இருக்கிற யாவரையும் கர்த்தர் அழைக்கிறார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Saturday, July 20, 2024

"வருந்திய வருஷங்களின் விளைவைத் திரும்ப அளிப்பேன்"

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,268      💚 ஜூலை 30, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚


"தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்." ( யோவேல் 2 : 21 )

நாம் நமது பொல்லாப்புக்களைவிட்டு மனம் திரும்பும்போது கர்த்தர் நமது வாழ்வில் மிகப்பெரிய காரியங்களைச்  செய்து நாம் மகிழ்ந்து களிகூரும்படிசெய்வார். இந்தச் சத்தியத்தை யோவேல் தீர்க்கதரிசி மூலம் தேவன் விளக்குகின்றார். 

நாம் மனம்திரும்பாத, தேவனுக்கு விரோதமான வாழ்க்கை வாழ்ந்தபோது   வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் மரங்களை அழித்து விளைச்சலைக் கெடுப்பதுபோல நமது வாழ்க்கையில் துன்பங்களும், சோதனைகளும் இழப்புக்களும் ஏற்பட்டு ஒரு செழிப்பற்ற வாழ்க்கையை  நமக்கு ஏற்படுத்தும். ஆனால் நாம் தேவனுக்கு நேராகத் திரும்பும்போது  இவற்றுக்கு மாறான மிகப்பெரிய மாற்றம் வாழ்வில் ஏற்படும் என்கின்றார் தேவன்.

எனவே பழைய பாவ வாழ்கையினைவிட்டு மனம் திரும்ப தேவன் நம் ஒவ்வொருவரையும் அழைக்கின்றார். இதனையே, "நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக்கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்." ( யோவேல் 2 : 13 ) என்று நாம் வாசிக்கின்றோம். 

விவசாயிகளுக்கு முன்மாரி பின்மாரி பற்றி நன்றாகத் தெரியும். இந்த மழைகள் எப்படி விளைச்சலை அதிகரிக்கும் என்பது சாதாரண மக்களைவிட விவசயிகளுக்கு நன்றாகத் தெரியும். இப்படியே  விவசாயிகள் மகிழ்வதுபோல நாம் மனம்திரும்பும்போது நாம் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சியடையமுடியும். ஆம், "உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் வருஷிக்கப்பண்ணுவார்." ( யோவேல் 2 : 23 ) 

அப்படி என்ன மாற்றம் ஏற்படும் என்பதனை உவமையாக பின்வருமாறு கூறுகின்றார், "நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்." ( யோவேல் 2 : 25 )

அதாவது, நாம் மனம்திரும்பாத, தேவனுக்கு விரோதமான வாழ்க்கை வாழ்ந்தபோது   வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் மரங்களை அழித்து விளைச்சலைக் கெடுப்பதுபோல நமது வாழ்க்கையில் துன்பங்களும், சோதனைகளும் இழப்புக்களும் ஏற்பட்டு நாம் வருந்திய வருஷங்களின் விளைவை நமக்குத் திரும்ப அளிப்பேன் என்கின்றார் தேவன். 

ஆம் அன்பானவர்களே, தேவனுக்கேற்றபடி நமது வாழ்க்கையை மாற்றிக்கொண்டு  பயப்படாமல், மகிழ்ந்து களிகூருவோம்; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                 

Friday, July 19, 2024

மரங்களைப் பகுத்துணரும் அறிவு

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,267       💚 ஜூலை 29, 2024 💚 திங்கள்கிழமை 💚

"மரம் நல்லதென்றால், அதன் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதன் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதன் கனியினால் அறியப்படும்." ( மத்தேயு 12 : 33 )

மனிதர்கள் நாம் பொதுவாக ஒரு மனிதன் செய்யும் சில வெளிச் செயல்களைக்கொண்டு அவர்களை நல்லவர்கள் என்றும் சிலரைக்  கெட்டவர்கள் என்றும் கூறுகின்றோம். ஆனால், நாம் நல்லவர்கள் என்று கூறும் பலரும் உண்மையில் நல்லவர்களாக இருப்பதில்லை. அவர்கள் செய்யும் ஒரு சில நல்லச் செயல்களல்ல, மாறாக அவர்கள் வாழ்க்கையில்  வெளிப்படுத்தும் நல்ல கனியுள்ள குணங்களே அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பதனை உலகுக்கு வெளிப்படுத்தும். 

இந்த உலகினில் பலவேளைகளில் மக்கள் தாங்கள் நல்லவர்கள் என்று கூறும் மனிதர்கள் மோசமானச்  செயல்களைச் செய்வதை  அறியும்போது,  "என்னால் நம்ப முடியவில்லை...அவரா இப்படிச் செய்தார்?" என்று வாய் பிளப்பார்கள். காரணம், அவர்கள் இதுவரை நல்லவர்கள்  என்று நம்பியவர்கள் செய்த மோசமான செயலை மக்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.  

இதனை எல்லா காரியங்களிலும் நாம் பார்க்கலாம். அரசியல்வாதிகளில்கூடச் சிலரை மக்கள் நல்லவர்கள் என்று எண்ணிக்கொண்டு அவர்கள் மோசமான அரசியல் கட்சியுடன் கூட்டணி அமைக்கும்போது, "ஐயே...இந்த மனிதனுக்கு பைத்தியமா? அவனோடு கூட்டணி அமைத்துள்ளான்" என்பார்கள்.  காரணம், ஊழலையும் அரசின் சில மோசமான மக்கள் விரோத திட்டங்களையும் இதுவரை இந்த மனிதர் எதிர்த்துப் பேசியதுதான். இப்போது பல கோடிகள் கிடைத்தவுடன் தான் இதுவரை எதிர்த்துப் பேசிய கட்சியுடன் சேர்ந்துகொண்டு இதுவரைத் தான் பேசியதை மாற்றிப் பேசுகின்றான்.    

அதாவது இதுவரை இவர் பேசியது மக்கள் மத்தியில் இவரை நல்லவனாக அடையாளம்காட்டியது. ஆனால் மனப்பூர்வமாக இவர் நல்லவரல்ல. இதனையே இயேசு கிறிஸ்து கூறினார், "மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதன் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதன் கனியினால் அறியப்படும்." ஆம் அன்பானவர்களே, ஒருவரது ஒரு செயல்மூலமல்ல மாறாக உளப்பூர்வமாக அவர் செய்வதும் பேசுவதும்தான் அவரை நாம் நல்லவரா கெட்டவரா என்று அடையாளம் காண உதவும்.  

"அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? அப்படியே நல்லமரமெல்லாம் நல்லகனிகளைக் கொடுக்கும்; கெட்டமரமோ கெட்டகனிகளைக் கொடுக்கும்." ( மத்தேயு 7 : 16, 17 )

அன்பானவர்களே, ஆவிக்குரிய வாழ்க்கை வாழும்போது மட்டுமே  இந்த மரங்களைப்பற்றிய (மனிதர்களைப் பற்றிய)  அறிவு நமக்கு வரும். இல்லாவிட்டால் சாதாரண மக்களைப்போல நாமும் சிலரை நல்லவர்கள் என்றும் சிலரைக் கெட்டவர்கள் என்றும் எண்ணிக்கொண்டு வாழ்வோம். ஆம், இதுவே இன்று பலர் குருட்டுத்தனமாக சில ஊழியர்களைப் பின்பற்றக் காரணம். அவர்களது நயவசனிப்பான சத்தியத்துக்கு விரோதமான பிரசங்கம் பல மக்களை அவர்களைநோக்கி இழுக்கின்றது. ஆம் இதனால் மக்கள் முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்க முயலுகின்றனர். 

வேத வசனங்களை பகுத்துணரும் அறிவும் பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியமும் இருந்தால் மட்டுமே நாம் இந்த ஏமாற்று ஊழியர்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும்  தப்பிக்க முடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

கடைசிக்காலத்திலே.........

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,266      💚 ஜூலை 28, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே. இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே." ( யூதா 1 : 18, 19 )

கடைசிகாலத்தைப் பற்றிக் கூறும்போது இயேசு கிறிஸ்து போர்கள், பஞ்சம், கொள்ளை நோய்கள், கடல் சீற்றங்கள் போன்று பல்வேறு அடையாளங்களைக் கூறினார். மட்டுமல்ல, "அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்."  ( மத்தேயு 24 : 11 - 13 ) என்றும் எச்சரித்தார். 

"அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்" என்று இயேசு கிறிஸ்துக் கூறியதையே அப்போஸ்தலரான யூதாவும், "கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள்" என்று கூறுகின்றார். அதாவது, தேவனது சத்தியங்களைப் பரிகாசிக்கும் நூதன போதனைகளைப் போதிக்கும்  "தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர்" என்று கூறுகின்றார். 

இப்படிப் போதிப்பவர்கள், "பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே." என்கின்றார். இவர்கள் தங்கள் மனதின் தோன்றியபடி போதிக்கும் ஜென்ம சுபாவத்தார்கள், இவர்களிடமிருந்து செயல்படுவது பரிசுத்த ஆவியானவருமல்ல என்கின்றார். எனவே இவர்கள் எப்போதும் வேத வசனங்களுக்கு உலக ஆசீர்வாதத்தையே அர்த்தமாகக் கொண்டு உலக ஆசீர்வாதங்களையே போதிப்பவர்களாகவும் இருப்பார்கள். 

இறுதிக் காலம் என்பதற்கு அடையாளமாக இயேசு கிறிஸ்து கூறியபடி இன்று நூற்றுக்கு தொண்ணூறு சதம் உலக ஆசீர்வாதமே சபைகளிலும் பிரபல ஊழியர்களாலும் அவர்கள் நடத்தும் தொலைக்காட்சி வாயிலாகவும் கிறிஸ்தவ உபதேசமாகப் போதிக்கப்படுகின்றது. அன்பானவர்களே, ஆம், நாம் கடைசி காலத்தில் இருக்கின்றோம். தீர்க்கதரிசன ஊழியர்கள் பெருகி, தீர்க்கதரிசன மாநாடுகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.  எனவே வஞ்சிக்கப்படாமல் நம்மைக் காத்துக்கொள்வோம்.  

இன்றைய தியான வசனத்தை எழுதிய யூதா, தொடர்ந்து இவற்றிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள என்ன செய்யவேண்டுமென்றும் தொடர்ந்து கூறுகின்றார். "நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்." ( யூதா 1 : 21 )

நூதன பிரசங்கங்களையும் அப்படிப் போதிப்பவர்களையும் விட்டு விலகி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருக்க வேண்டியதே நாம் செய்யவேண்டியது.  "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்." ( சங்கீதம் 31 : 24 )  ஆம், "கர்த்தருக்குக் காத்திரு, திடமனதாயிரு, அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார், கர்த்தருக்கே காத்திரு." ( சங்கீதம் 27 : 14 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்        

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - லுூக்கா 11 : 13 / Luke 11:13

" ஆதவன் " தியானம் - 1981 ஜூலை 11, சனி  2026       "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந...