Thursday, July 18, 2024

மேலானவைகளைத் தேடுங்கள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,265      💚 ஜூலை 27, 2024 💚 சனிக்கிழமை 💚

"நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்." ( கொலோசெயர் 3 : 1 )

பாவத்துக்கு மரித்து நீதிக்குப் பிழைத்திருக்கும் வாழ்வே இரட்சிப்பு வாழ்வு. கிறிஸ்து மரித்து உயிர்த்ததைப்போல நாமும் பாவத்துக்கு மரித்து நித்தியஜீவனுக்காக உயிர்த்திருக்கின்றோம். இப்படி நாம் கூறிக்கொள்ளவேண்டுமானால், "கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்." என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். 

ஆனால் இன்று பெரும்பாலான கிறிஸ்தவ சபைகளில் இந்த உலகத்துக்குரிய ஆசீர்வாதங்களே முன்னுரிமைப்படுத்தப்பட்டு பிரசங்கிக்கப்படுகின்றன; மேலான மகிமையான காரியங்கள் மறைக்கப்படுகின்றன. அன்பானவர்களே, இன்றைய தியான வசனம் தெளிவாகக் கூறுகின்றது, "கிறிஸ்து வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்." என்று. அதாவது இந்த உலகத்தில் நாம் வாழும் இலக்கு கிறிஸ்து வீற்றிருக்கும் அந்தப் பிதாவின் இடத்தை அடைந்து அந்த மகிமையினை அனுபவிப்பது. 

இதற்கு நாம் என்னச் செய்யவேண்டும் என்பதனை பவுல் அப்போஸ்தலர் தொடர்ந்து எழுதும்போது   கூறுகின்றார், "ஆகையால், விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்." ( கொலோசெயர் 3 : 5 ) அவயவயங்களை அழிப்பது என்பது இந்தச் செயல்களைச் செய்ய நம்மைத் தூண்டும் உறுப்புகளைக் கட்டுப்படுத்துவது. 

ஆம் அன்பானவர்களே, மேற்படி கூறப்பட்டுள்ள பாவங்களையும் நான் விடமாட்டேன் ஆனால் கிறிஸ்துவையும் ஆராதிப்பேன் என்று நாம் கூறுவோமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாக இருப்போம். அது மெய்யான கிறிஸ்தவன் செய்யும் செயலல்ல. கிறிஸ்துவை அறிவிப்பது என்பதும் ஆராதிப்பது என்பதும்  வெறுமனே, "இயேசு ஆண்டவர் என்று கூறுவதும் அல்லேலூயா" என்றும் அலறுவது அல்ல. 

மெய்யான ஆராதனை என்பது நமது வாழ்க்கையினை பரிசுத்தமாக வாழ்வது. நமது வாழ்வை அவருக்கு ஒப்புக்கொடுப்பது.  "நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை." ( ரோமர் 12 : 1 ) என்று வாசிக்கின்றோம்.

இப்படி நாம் வாழும்போது ஒருவேளை இந்த உலகத்தில் நாம் தரித்திரராக, பாடுகளோடு வாழ்ந்தாலும் பிற்பாடு அது நமக்கு மகிமையான காரியமாக இருக்கும். இதனையே "நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்." ( கொலோசெயர் 3 : 4 ) என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பவுல். 

ஆம், கிறிஸ்துவுடன்கூட எழுந்த நாம் கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளையேத்  தேடுவோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                      

Wednesday, July 17, 2024

குணமாக்கும் ஜெபங்கள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,264     💚 ஜூலை 26, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚


"நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது." ( யாக்கோபு 5 : 16 )

மனிதர்களை நோய்வாய்ப்பட பல காரணங்கள் உண்டு. உதாரணமாக, உடலுக்கு ஏற்பில்லாத உணவுகளை உட்கொள்வது; அளவுக்கு அதிக உணவு உண்பது, ஒழுக்கக் கேடான வாழ்க்கை வாழ்வது,  இவை தவிர, நாம் மற்றவர்களுக்கு எதிராகச் செய்யும் பாவங்கள், நமது அந்தரங்கப் பாவங்கள், முன்னோர்கள் செய்த செயல்களின் சாபங்கள், மற்றவர்களுக்கு எதிராக நாம் செய்யும் தகாத செயல்கள் போன்றவைச் சில. 

இந்தப் பாவங்கள் மன்னிக்கப்படும்போதுதான் நாம் குணமாக முடியும். எனவேதான் இயேசு கிறிஸ்துத் தன்னிடம் வந்த நோயாளிகளுக்கு குணமாக்குமுன் முதலில் அவர்களது பாவங்களை மன்னித்தார். (உதாரணமாக, மத்தேயு 9 : 2, மாற்கு 2 : 5  லுூக்கா 5 : 20) இதுவே யூதர்களுக்கு அவர்மேல் கோபம் வரக்  காரணமாகவும் இருந்தது. ஆம், பாவங்கள் மன்னிக்கப்படாமல் சில நோய்கள் குணமாவதில்லை.
 
இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான யாக்கோபு நமக்கு ஒரு நல்ல படிப்பினையினைத் தருகின்றார். அதாவது, நாம் மறவர்களுக்கு எதிராகத் தகாத செயல்கள் செய்திருப்போமானால் முதலில்  அவற்றுக்காக மனம் வருந்தி மன்னிப்பு வேண்டவேண்டும். நான் எனது போக்கில்தான் இருப்பேன் தேவன் என்னைக் குணமாக்கவேண்டும் என எண்ணுவதும் வேண்டுவதும் ஏற்புடைய செயலல்ல. நமது குற்றங்களை ஆவிக்குரிய நபர்களிடம் அறிக்கையிடும்போது அப்போது அவர்கள் ஜெபம் பண்ணினால் கிடைக்கும். 

ஜெபத்தின்மூலம் சுகம் கிடைக்கவில்லையானால் மறைக்கப்பட்ட பாவங்கள் நம்மிடம் ஏதாகிலும் உண்டுமா என நம்மை நாமே நிதானித்துப்பார்ப்போம். 

நாம் பிறர் மேல் கொள்ளும் பொறாமை, எரிச்சல், கோபம், செய்யும் தவறான செயல்கள் நமக்குள்ளே இருந்து உறுத்தி பல்வேறு உடல் நோய்களை உருவாக்கும் என்று இன்று மருத்துவர்களும் கூறுகின்றனர்.  மனிதர்களது பல நோய்களுக்கும் மனமே காரணம். பிறருக்கு எதிராக நாம் செய்த தவறுகளை அறிக்கையிடும்போது மன ஆறுதல் மட்டுமல்ல நோய்களிலிருந்து விடுதலையும் கிடைக்கின்றது. 

இப்படி மற்றவர்களிடம் பாவங்களை ஒளிவு மறைவின்றி அறிக்கையிட்டு வாழ்பவனே நீதிமான். எனவேதான் இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து யாக்கோபு நீதிமானாகிய எலியாவை நமக்கு உதாரணம் காட்டுகின்றார். "எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்று வருஷமும் ஆறு மாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை. மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது." ( யாக்கோபு 5 : 17, 18 )

இயற்கையையே கட்டுப்படுத்தும் ஆற்றல் எலியாவுக்கு இருந்தாதானால் அவருக்கு குணமாக்கும் ஆற்றலும் இருந்தது என்று பொருள். ஆம் அன்பானவர்களே,  அவரது வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருந்தது. 

சிலர் நோய்களுக்காக மருத்துவரிடமும் பல்வேறு ஊழியர்களிடமும் மாறி மாறிச் சென்றுகொண்டிருப்பார்கள். அன்பானவர்களே, நமக்குள் ஆத்ம சோதனை செய்து பார்ப்போம். யாருக்கு எதிராக நாம் பேசியிருந்தாலும், செயல்பட்டிருந்தாலும் உண்மையான மனஸ்தாபத்துடன் தேவனிடம் மன்னிப்பை வேண்டுவோம்.   நமது பாவங்களும், நோய்களும் அப்போது நம்மைவிட்டு அகலும்.  ஆம், குணமடையும்படிக்கு குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுவோம்.  நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Tuesday, July 16, 2024

உணவினால் தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே.

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,263       💚 ஜூலை 25, 2024 💚 வியாழக்கிழமை 💚

"பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது." ( தானியேல் 1 : 15 ) 

நேபுகாத்நேச்சார் தான்  யூதாவிலிருந்து சிறைபிடித்துக் கொண்டு வந்தவர்களில் அறிவுமிக்கவர்களைத் தனது நாட்டில் பணியமர்த்த விரும்பி அப்படித் திறமையானவர்களைக் கண்டுபிடித்தான். அவர்களுள் தானியேலும் அவரது மூன்று நண்பர்களும் உண்டு. ராஜா இந்த இனைஞர்களுக்கு ராஜ உணவைக்கொடுத்து அந்த நாட்டு மொழியையும் கற்பித்துக்கொடுத்து மூன்று ஆண்டுகளுக்குப்பின் தன்னிடம் அவர்களைக் கொண்டுவரும்படிப் பணித்தான்.

மூன்று வேளையும் ராஜ உணவு கொடுக்க ஏற்பாடானபோதும் தானியேலும்  அவரது மூன்று நண்பர்களும் ராஜாவுணவு தங்களுக்கு வேண்டாம், வெறும் பருப்பும் மரக்கறி உணவுமே போதும் என்று கூறிவிட்டனர். ஆனால் அவர்களைக் கவனிக்க நியமிக்கப்பட்ட ஊழியன் அப்படி நான் கொடுத்தால் ராஜாவுக்குமுன் நான் உங்களை நிறுத்தும்போது நீங்கள் மற்றவர்களைவிட உடல்மெலிந்து காணப்படுவீர்கள், அப்போது  ராஜா என்னிடம் கேள்விகேட்பான் என்று தானியேலின் கோரிக்கையினை நிறைவேற்றத் தயங்கினான்.  

அப்போது தானியேலும் அவரது நண்பர்களும், "பத்துநாள்வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப்பாரும்; எங்களுக்குப் புசிக்க பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து, எங்கள் முகங்களையும் ராஜபோஜனத்தில் புசிக்கிற வாலிபருடைய முகங்களையும் ஒத்துப்பாரும்; பின்பு நீர் காண்கிறபடி உமது அடியாருக்குச் செய்யும்." ( தானியேல் 1 : 12, 13 ) என்றனர்.

இப்படிச் செய்து சோதித்துப்பார்த்த "பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது." ( தானியேல் 1 : 15 ) ஆம், உணவுக்கும் நமது ஆவிக்குரிய வாழ்வுக்கும் தொடர்பு உண்டு. ஆவிக்குரிய மனிதர்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் விருந்துகளிலும்  மற்றவர்களைவிட உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டையும் நிதானத்தையும் காட்டுவார்கள்.  

"நீ ஒரு அதிபதியோடே போஜனம்பண்ண உட்கார்ந்தால், உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய்க் கவனித்துப்பார். நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியைவை. அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே; அவைகள் கள்ளப்போஜனமாமே." ( நீதிமொழிகள் 23 : 1- 3 )

ஒரு வீட்டில் மாலை நேரத்தில் ஜெபிக்கச் சென்ற ஊழியர் ஒருவர் ஜெபித்துவிட்டு வெளியே வந்தபின்னர் தன்னுடன் வந்த சகோதரர்களிடம், "வெறும் காப்பியும் மிச்சரும் தந்து அனுப்பிவிட்டார்கள்"    என்று குறைபட்டுக்கொண்டார். அப்படியானால் இவர் என்ன எதிர்பார்ப்புடன் ஜெபிக்கச் சென்றார்? இப்படிச் சில ஊழியர்கள்!!. மேலும் சிலர் உபவாசம் இருக்கிறேன் என்று சாப்பிடாமல் இருப்பார்கள், ஆனால் அதன்பின்பு ஒட்டகம் நீர் அருந்தி சேமிப்பதைப்போல  கிடைத்தமட்டும் உண்டு தங்கள் வயிற்றை நிரப்புவார்கள். இப்படிச் செய்வதை தேவன் வெறுக்கின்றார்.  நமக்குள் ஆவியானவர் இருப்பாரென்றால் இதனை நமக்கு உணர்த்தித் தருவார். 

அன்பானவர்களே, மூன்று ஆண்டுகள் ராஜ உணவை வெறுத்து வெறும் பருப்பும் காய்கறிகளையும் உண்ட தானியேலின் நண்பர்கள் நெருப்புச் சூளையினுள் போடப்பட்டபின்னரும் உயிருடன் மீண்டனர்; பசித்திருந்த சிங்கங்களின் கெபியினுள் போடப்பட்ட தானியேலை சிங்கங்கள் நெருங்கவில்லை.  மட்டுமல்ல; அனைத்து மறைபொருளையும் இந்நாள் வரையும் உலகம் முடியும்வரையும் நடக்கப்போகும் காரியங்களையும்  தேவன் தானியேலுக்கு வெளிப்படுத்திக்கொடுத்தார். காரணம், அவர்களது தேவனுக்குப் பாயந்த உண்மையுள்ள வாழ்க்கை.

"போஜனத்தினிமித்தம் தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே. எந்தப் பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான்; ஆனாலும் இடறலுண்டாகப் புசிக்கிறவனுக்கு அது தீமையாயிருக்கும்." ( ரோமர் 14 : 20 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

Monday, July 15, 2024

செய்த உதவிகளைப் பிரச்சித்தப்படுத்துவது அற்பகுணம்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,262       💚 ஜூலை 24, 2024 💚 புதன்கிழமை 💚


"மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?" ( நீதிமொழிகள் 20 : 6 )

இன்றைய தியான வசனம் மனிதர்களது அடிப்படைக் குணத்தைக் குறித்துக் கூறுகின்றது. அதாவது, அற்பப் பெருமைக்காகத் தாங்கள் பிறருக்குச் செய்த உதவிகளைப் பிரச்சித்தப்படுத்துவது.  

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் உண்டு. அவர் இப்படித்தான் தானும் தனது மனைவியும் செய்த உதவிகளைப் பெருமையாக எல்லோரிடமும் கூறிக்கொண்டிருப்பார். அதாவது, உண்மையாகத் தான் செய்ததை சற்று மிகைப்படுத்திப் பேசுவார். இப்படி இவர் பேசுவது பொய் என்று தெரிந்தாலும் பலரும் இவரிடம் நேரடியாக எதுவும் கூறுவதில்லை. எனவே இவர் தான் கூறுவதை எல்லோரும் நம்பிவிட்டார்கள் என்று எண்ணிக்கொள்வார். ஆனால் இவருக்குத் தெரியாமல் இவர் கூறியதை தங்களுக்குள் பேசிச்  சிரித்துக்கொள்வார்கள். 

உண்மையான உதவும் மனநிலையில் ஒருவர் பிறருக்கு உதவும்போது அவர் தன்னைப் பிரச்சித்தப்படுத்த மாட்டார். இன்று பலர் தாங்கள் செய்யும் சில சிறு உதவிகளையும்கூட வீடியோ பதிவுசெய்து முகநூலிலும் இதர சமூக ஊடகங்களிலும் வெளியிடுவதை நாம் பார்க்கலாம். இவர்கள் இப்படிச் செய்வதற்குத் தாங்களே அறியாத உள்நோக்கம் இருக்கும். அதாவது, மக்கள் தங்களை நல்லவர்கள் என்று எண்ணவேண்டும் அல்லது இப்படிச் செய்வதன்மூலம் தங்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என்று எண்ணுவது.  

தெரு ஓரத்தில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரருக்கு காசு கொடுப்பது அல்லது ஏதாவது பொருள் உதவி செய்வது இவற்றைக்கூட இப்படிப் பதிவு செய்து மக்களுக்குத் தெரிவிக்கின்றனர். இதனையே, "மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அதாவது, இந்த வசனம் இப்படிச் செய்பவர்கள் உண்மையற்றவர்கள் என்று கூறுகின்றது. எனவேதான், "உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?" என்ற கேள்வியோடு முடிக்கின்றது இன்றைய வசனம். 

இயேசு கிறிஸ்து இதனைக்குறித்து "ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 6 : 2 ) என்று கூறுகின்றார். 

அதாவது, இப்படித்  தாங்கள் செய்வதைப் பிரசித்திப்படுத்துபவர்கள் மாயக்காரர் என்கின்றார். மேலும், "அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." என்கின்றார். நாலுபேர் இவர்கள் சொன்னதை அல்லது செய்ததைப் பார்த்தார்களே அதுதான் இதன்மூலம் இவர்கள் பெற்ற பயன். எனவே, இனிமேல் இவர்கள் தேவனிடம் தங்கள் செயலுக்கு பலனை எதிர்பார்க்க முடியாது என்று பொருள். 

மட்டுமல்ல, எப்படித் தர்மம் அல்லது உதவி செய்யவேண்டும் என்பதனையும் இயேசு கிறிஸ்து கூறினார்.  "நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது." ( மத்தேயு 6 : 3 )

"நான் இப்படிச் செய்வதை வெளியில் கூறும்போது மற்றவர்களும் இதுபோல உதவிகள் செய்வார்கள்" என்று சிலர் உப்புச் சப்பற்ற காரணத்தைக்கூறி தங்கள் செயலுக்கு நியாயம் கற்பிப்பார்கள். அன்பானவர்களே, இந்த விஷயத்தில் தேவன் எல்லோருக்கும் மனச்சாட்சியையும்  இரக்கம் அன்பு போன்ற குணங்களையும்  கொடுத்துள்ளார். ஆகவே அவர்கள் செயலுக்கு அவர்கள் தேவனுக்குக் கணக்குக் கொடுத்துக்கொள்வார்கள். எனவே, மற்றவர்களைத் திருத்துகிறேன் என்று எண்ணி நாம் படுகுழியினுள் விழுந்துவிடக் கூடாது.  

இப்படிச்  சிறு உதவி அல்லது நல்லச் செயல் செய்ததையும் பிரசித்திப்படுத்தும் அற்பமான குணம் நமக்கு இருக்குமானால் நம்மைத் திருத்திக்கொள்வோம். தேவன் கண்டுபிடிக்கும் உண்மையான மனுஷனாக வாழ்வோம்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Sunday, July 14, 2024

எலியாவும் யோனாவும் நமக்குப் படிப்பினைகள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,261     💚 ஜூலை 23, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚


"ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக."  (1 கொரிந்தியர் 15:58)

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்வை நமக்கு வாக்களித்துள்ளார். அந்த இலக்கை அடைந்திடவே நாம் ஆவிக்குரிய வாழ்வைத் தொடருகின்றோம். நித்திய ஜீவன் என்பது அழிவுக்கேதுவான நமது உடல் மறுரூபமாக்கப்பட்டு அழியாமையையும், சாவாமையையும் தரித்துக் கொண்டு பிதாவின் ராஜ்ய மகிமையினுள் நித்தியகாலமாய் வாழ்வதைக் குறிக்கின்றது  

இதனையே அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்துக்கு முன்பு விளக்குகின்றார். இப்படி, "அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ள வேண்டும்.  அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்."  (1 கொரிந்தியர் 15: 53, 54) என்கின்றார். 

இப்படிப்பட்ட மகிமையான எதிர்காலம் நமக்கு இருப்பதால், "எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும்,   அசையாதவர்களாயும்,      கர்த்தருடைய
கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக." என்று கூறுகின்றார்.

அதாவது ஆவிக்குரியவாழ்வு வாழ்ந்தாலும்  நாம் ஒருவேளை இன்று பல்வேறு துன்பங்களைச் சுமந்துகொண்டிருக்கலாம். ஆனால் அந்தத் துன்பங்களைக்கண்டு கலங்கிடாமல் உறுதிகொண்டவர்களாக வாழவேண்டியது அவசியம். மட்டுமல்ல, தொடர்ந்து சோர்ந்துபோகாமல் கர்த்தருக்காக நாம் செய்யும் செயல்பாடுகளிலும் நாம் பெருகுகிறவர்களாகவும் வாழவேண்டியது அவசியம். 

ஆவிக்குரிய வாழ்வில் சோதனைகள் ஏற்படும்போது ஒருவித சலிப்பு எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு.  ஆனால் அந்தச் சலிப்பு கொஞ்சநாட்களுக்குத்தான் என்று நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். அப்படி எனக்கு சலிப்பே வந்ததில்லை என்று கூறுவோமானால் நாம் பொய்யர்கள். காரணம், வானத்திலிருந்து அக்கினி இறங்கச்செய்து அற்புதங்கள் பல செய்த எலியா சோர்வுற்று மனமடிவுண்டாகி, "ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி," ( 1 இராஜாக்கள் 19 : 4 ) புலம்பியதை நாம் வாசித்துள்ளோம்.

இதுபோலவே மிகப்பெரிய தீர்க்கதரிசியாக யோனாவும் மனம் சோர்வுற்று, "இப்போதும் கர்த்தாவே, என் பிராணனை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும்" ( யோனா 4 : 3 ) என்று புலம்பினார். 

ஆனால் தேவன் அவர்களை அப்படியே விட்டுவிடவில்லை. இதுபோல, தேவனுக்குள் நாம் ஆவிக்குரிய வாழ்க்கை வாழும்போது நமக்கும் சோதனைகளும் வேதனைகளும் ஏற்படும். ஆனால் தேவன் நம்மைக் கைவிடமாட்டார்.

"மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்." ( 1 கொரிந்தியர் 10 : 13 )

எனவே கர்த்தருக்குள் நாம்  படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து,  உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய  கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்போமாக. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்      

Saturday, July 13, 2024

இவைபோன்ற சாட்சிகள் மேலானவை அல்ல

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,260      💚 ஜூலை 22, 2024 💚 திங்கள்கிழமை 💚


"கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்." ( 1 பேதுரு 3 : 15 )

கிறிஸ்து இயேசுவின்மேல் நாம் நம்பிக்கைக் கொண்டுள்ளோம் என்பது மெய்யாயினும் மற்ற மத மக்களைப்போல நாம் வெறும் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தால் மட்டும் போதாது. எல்லா மதத்தினரும் தங்கள் வழிபடும் தெய்வத்தின்மேல் நம்பிக்கைக் கொண்டுதான் வாழ்கின்றனர். ஆனால் நம்மைப் பொறுத்தவரை  அந்த நம்பிக்கை நம்மைப் பரிசுத்தப்படுத்துவதாக இருக்கவேண்டியது அவசியம். எனவேதான் இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பேதுரு, "கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்"  என்று கூறுகின்றார். 

இப்படி நாம் பரிசுத்தமான ஒரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, நம்மிடம் நமது விசுவாசத்தைக் குறித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் பதில் சொல்ல  எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று கிறிஸ்தவர்கள் பலரும் கிறிஸ்து தங்கள் வாழ்வில் என்னென்ன அற்புதங்கள் செய்தார் என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். அப்படிக் கிறிஸ்துவைக் குறித்துக் கூறும் பல சாட்சிகள், புகை பிடிப்பதை விட்டுவிட்டேன், வெற்றிலை, குடிப்பழக்கம்  இவற்றிலிருந்து விடுதலையானேன் என்பதுபோலவே இருக்கின்றன. அன்பானவர்களே, இதுபோன்ற சாட்சிகளை எல்லா மதத்தினரும் கூறமுடியும். 

உண்மையாகக் கூறப்போனால், கிறிஸ்துவால் வெற்றிலை, குடி, புகைபிடித்தல் இவற்றிலிருந்து விடுதலை அடைந்தேன் என்று கூறுவது மேலான சாட்சியே அல்ல. காரணம், இயல்பிலேயே இந்தப் பழக்கவழக்கங்கள் எதுவும் இல்லாத பலர் எல்லா மதங்களிலும் இருக்கின்றனர். மட்டுமல்ல, இவற்றைச் சரியான மருத்துவ சிகிர்சை மூலமும், ஆற்றுப்படுத்தல் (Counselling) மூலமும் நிறுத்திவிடமுடியும். மெய்யான மாற்றம் என்பது  நமது உள்ளான மனிதனில் ஏற்படும் மாற்றமே; நமது தனிப்பட்டக் குணங்களில் ஏற்படும் மாற்றமே. அதனைக் கிறிஸ்து இயேசு மூலம் மட்டுமே  நாம் அடைந்திட முடியும். 

எனவே, நம்மிடம் விசாரிப்பவர்களுக்கு நமது விசுவாசத்தைக் குறித்து நாம் அளிக்கும் சாட்சிகள் வேத வசனத்தின் அடிப்படையில் இருக்கவேண்டியது அவசியம். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக." ( கொலோசெயர் 4 : 6 ) என்று கூறுகின்றார். 

எனவே நாம் வேத வசனங்களைத் தெளிவாக அறிந்து வைத்திருக்கவேண்டியது அவசியம். அப்படி அறிந்து வைத்துக்கொண்டு நம்மிடம் விசாரிப்பவர்களுக்கு  சாந்தத்தோடும் வணக்கத்தோடும் பதில் சொல்ல நாம் எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கவேண்டும்.  

எனவே, நாம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தேவையில்லாத காரியங்களில் கவனம் செலுத்திடாமல் வேத வசனங்களை உணவுபோல உட்கொள்ள ஆயத்தமாய் இருக்கவேண்டும். இப்படி நாம் உட்கொள்ளும் வசனங்கள் நமக்கு மற்றவர்களுக்குப் பதில்சொல்லக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும். மட்டுமல்ல, தேவையில்லாத உப்புச் சப்பற்ற சாட்சிகள் போல இல்லாமல் இந்த வசனங்கள் மற்றவர்களது இருதயத்தில் இறங்கி கிரியை செய்யும்.  அவர்களும் மெய்யான தேவனை அறியச்செய்யும். காரணம், அவை உயிருள்ள தேவனது வார்த்தைகள்.

எனவே வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நாம் வேதாகமத்தை வாசிக்கவேண்டியது அவசியம். அட்டவணைப் போட்டு இத்தனை நாட்களுக்குள் வேதாகமத்தை வாசித்து முடிக்கவேண்டுமென்று எண்ணாமல் நிதானமாகவும், தேவனை அறியும் ஆர்வமோடும்  ஆவியானவரின் துணையோடும்  வேதத்தைப் படித்து இருதயத்தில் வசனங்களைப் பாதுகாப்போம். நம்மிடம் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் பதில் சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிப்போம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்              

Thursday, July 11, 2024

கிறிஸ்தவ சபைகள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,259      💚 ஜூலை 21, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 9 : 31 )

வேத அடிப்படையில் பார்ப்போமானால், மீட்பு அனுபவம் பெற்ற விசுவாசிகளின் கூட்டமே சபைகள். ஆனால் இன்று இந்த நிலைமை மாறி, குறிப்பிட்டக்  கிறிஸ்தவ  போதனைகளைப் போதிக்கும் ஆலயங்களில் கூடும் மக்களையும், குறிப்பிட்ட பாஸ்டர்கள், ஊழியர்களை நாடிச் செல்லும் மக்களையும்  சபை என்று கூறிகொண்டிருக்கின்றோம். 

சபை என்பது மக்களை கிறிஸ்துவுக்கு நேராக வழி நடத்துபவையாக இருக்கவேண்டியது அவசியம். அப்படி வழிநடத்தும்போது அங்கு என்ன நடக்கும் என்பதனையே இன்றைய தியான வசனம், "சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின." என்று கூறுகின்றது. 

அதாவது மெய்யான ஒரு சபைகளுக்குச் செல்லும்போது ஒருவருக்குச் சமாதானம் கிடைக்கும். காரணம், அங்கு போதிக்கப்படும் வார்த்தைகள் தேவ வார்த்தைகளாக இருக்கும். தேவ வார்த்தைகளே ஒருவருக்குச் சமாதானத்தைக் கொண்டு வரும். இரண்டாவது, அந்தத் சபைகள் நம்மை பக்திவிருத்தி அடையச் செய்பவையாகவும் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தோடு வளரச்செய்பவையாகவும் இருக்கும். மூன்றாவது, ஆவியானவர் அளிக்கும் ஆறுதல் அந்தச் சபை மக்களுக்குக் கிடைக்கும். 

ஆனால், இன்றைய பல சபைகளில்  கேளிக்கைக் கூடாரங்களில் பாடலும் நடனமும்  முக்கியத்துவம் பெறுவதுபோல இவைகளே முக்கியத்துவம் பெற்று மெய்யான சத்தியம் புறம்தள்ளப்படுவதைக் காண்கின்றோம்.  இதனால் பெரும்பாலான கிறிஸ்தவ சபைகளில் விசுவாசிகளுக்கு மெய்யான சமாதானமோ, அவர்கள் பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தில் வளரும் வாய்ப்போ  பரிசுத்த ஆவியின் ஆறுதலோ இல்லாமலிருக்கின்றது. 

இதனால் விசுவாசிகள் ஒரு சபையைவிட்டு இன்னொரு சபைக்கு ஓடுவதும், ஊழியர்களும் சபைகளும் தங்கள் தவறுகளை உணராமல் ஒருவருக்கொருவர் மாறிமாறிக் குறைகூறி மோதிக்கொள்வதும் நடக்கின்றது. உணவு உட்கொள்ளச் செல்பவர்கள் ஹோட்டலை மாற்றுவதற்குக்  காரணம் ஹோட்டல் சாப்பாடு பிடிக்காததே முக்கிய காரணமாய் இருக்கும் என்பதனை இவர்கள் உணர்ந்து கொள்ளும்போதுதான் இந்த நிலைமைக்கு மாறுதல் உண்டாகும்.   

இன்று வேதாகம அடிப்படையிலான மெய்யான சபைகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் உள்ளன. ஆனால் ஊழியர்களும் போதகர்களும் அளவுக்கு அதிகமாகப் பெருகிவிட்டனர். எனவே இவர்கள் மக்களைத் தங்களிடம் இழுக்கவேண்டி விதவிதமான நவீன யுக்திகளைக் கையாளுகின்றனர்.  மக்களும் திரைப்பட நடிகர்களைத் தேர்வுசெய்வதுபோல தங்களுக்கு ஏற்ற நவீன ஊழியர்களைத் தெரிந்துகொள்கின்றனர். கிறிஸ்துவின் விசுவாசி என்று கூறுவதைவிட்டு குறிப்பிட்ட பாஸ்டர்களின் விசுவாசிகளாகிவிட்டனர்.

அன்பானவர்களே, குறிப்பிட்ட ஊழியர்களையும் குறிப்பிட்ட சபைகளையும் பார்க்காமல் கிறிஸ்துவை நோக்கிப்பார்க்க வேண்டும். நமக்குத் தேவ சமாதானம் அளிக்கும் சபைகள், நாம்  பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் வளர வழிகாட்டும் சபைகள் இவைகளையே நமக்காகத் தெரிந்துகொள்ள வேண்டும். அத்தகைய சபைகளை நமக்கு அடையாளம்காட்ட பரிசுத்த ஆவியானவரிடம் மன்றாடவேண்டியதுதான் இன்றைய காலத்தின் அவசியம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்       

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - லுூக்கா 11 : 13 / Luke 11:13

" ஆதவன் " தியானம் - 1981 ஜூலை 11, சனி  2026       "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந...