Saturday, May 18, 2024

அவரை அறிகிற அறிவின் வாசனை

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,203      💚 மே 25, 2024 💚 சனிக்கிழமை 💚

"கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்." ( 2 கொரிந்தியர் 2 : 14 )

இயேசு கிறிஸ்துவை அறியும் அறிவை நறுமணத்துக்கு ஒப்பிட்டு அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடுகின்றார். தேவன் விசுவாசிகளாகிய நம்மைக்கொண்டு கிறிஸ்துவின் அந்த வாசனையை எல்லா  இடங்களிலும் வெளிப்படச் செய்கின்றார். அதாவது, நமது சாட்சியுள்ள வாழ்வாகிய நறுமணத்தால் இப்படி அவரை அறியும் அறிவின் வாசனையை வெளிப்படுத்துகின்றார். இதனையே, "எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்." என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். 

உன்னதப்பாட்டு  ஆவிக்குரிய மறைபொருளோடு தேவனை மணவாளனாகவும் விசுவாசிகளை மணவாட்டியாகவும் உருவகப்படுத்திப் பாடப்பட்ட நூல். அங்கும் இந்த வாசனையைப் பற்றி நாம் வாசிக்கின்றோம். அவரது பெயரே பரிமளத்தைலம் போன்ற நறுமணம் வீசக்கூடியது. இதனையே, "உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்." ( உன்னதப்பாட்டு 1 : 3 ) என்று வாசிக்கின்றோம்.

இந்த வாசனையை மக்களுக்கு அளிக்கவே தேவன் நம்மை அழைத்துள்ளார். ஆனால் நாம் இந்த வாசனையை வெளிப்படுத்தினாலும் எல்லோரும் இந்த வாசனையை அறிந்துகொள்வதில்லை. ஒரு பன்றியின்முன் மணமான கேக் துண்டையும் மனிதக் கழிவையும் வைத்தால் பன்றி மனிதக் கழிவையே விரும்பும். காரணம் அதற்கு அதுவே நறுமணமாகத் தெரியும். அதுபோலவே கிறிஸ்துவின் பெயரும் அவரது கற்பனைகளும் கெட்டுப்போகிறவர்களுக்கு வாசனையாகத் தெரியாது. இரட்சிப்புக்கு அழைக்கப்பட்டவர்களுக்கோ அது ஜீவ வாசனையாக இருக்கும். 

ஆம் அன்பானவர்களே, ஒரேபொருள் அதனை அறியும் அறிவிற்கேற்ப ஒருவருக்கு நறுமணமாகவும் இன்னொருவருக்கு துர்நாற்றமாகவும் இருக்கின்றது. இதனையே அப்போஸ்தலரான பவுல், "கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம். " ( 2 கொரிந்தியர் 2 : 16 ) என்று குறிப்பிடுகின்றார். 

கிறிஸ்துவை அறியும் அறிவின் வாசனையை மிக அதிகமாக வெளிப்படுத்தியவர் அப்போஸ்தலரான பவுல். இன்று இரண்டாயிரம் ஆண்டுக்களைக் கடந்தபின்னரும் அவரின் எழுத்துக்கள் மூலம் கிறிஸ்துவின் வாசனையை நாம் நுகர முடிகின்றதல்லவா? இத்தகைய வாசனையினை நாமும் வெளிப்படுத்துகின்றவர்களாக வாழ வேண்டுமென்று தேவன் விரும்புகின்றார்.

யார் நம்மை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இன்றைய தியான வசனம் குறிப்பிடுவதுபோல நாம் எல்லா இடங்களிலேயும் நம்மைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிறவர்களாக வாழவேண்டியது அவசியம். சாட்சியற்ற வாழ்வு அவரது வாசனையை பிறருக்கு வெளிக்காட்டாது. நறுமண வாசனை நம்மில் வெளிப்படும்போது நறுமணப் பூவைத்தேடி வண்டுகளும் வண்ணத்துப்பூச்சிகளும் வருவதுபோல கிறிஸ்துவை அறியாதவர்கள் அவரை அறியும் ஆவலில் நெருங்கி வருவார்கள். கிறிஸ்துவை வெளிப்படுத்தும் நறுமணமுள்ளவர்களாக வாழ்வோம். 

நமது வாழ்வு அப்படி மாறும்போது தேவனே நம்மைப்பார்த்துக் கூறுவார்:- "உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே! திராட்சரசத்தைப் பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவு மதுரமாயிருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும் உன் பரிமள தைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!" ( உன்னதப்பாட்டு 4 : 10 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,202       💚 மே 24, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்; யூதா அரணான பட்டணங்களைப் பெருகப்பண்ணுகிறான்; ஆனாலும் நான் அதன் நகரங்களில் அக்கினியை வரப்பண்ணுவேன்; அது அவைகளின் கோவில்களைப் பட்சிக்கும்." ( ஓசியா 8 : 14 )

இன்றைய தியான வசனத்தில் கூறப்பட்டுள்ள இஸ்ரவேல், யூதா என்பவை தேவனுடைய மக்களைக் குறிக்கும். புதிய ஏற்பாட்டின்படி கிறிஸ்துவால் மீட்கப்பட்ட மக்களே இஸ்ரவேலரும் யூதரும். ஆம் புதிய ஏற்பாட்டின்படி நாமே ஆவிக்குரிய இஸ்ரவேலரும் யூதரும். நாமே ஆபிரகாமின் சந்ததி. "ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக." ( கலாத்தியர் 3 : 7 ) என்கிறார் அப்போஸ்தலரான பவுல். 

சரி, இன்றைய தியான வசனம்  கூறும் கருத்துக்கு வருவோம். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட அவரது மக்களாகிய விசுவாசிகள் என்று சொல்லிக்கொள்ளும் நாம்  இன்று பலவேளைகளில் கர்த்தரையும் அவரது கற்பனைகளையும் கடைபிடிக்காமல் அவைகளை மறந்து வெறும் ஆலய காரியங்களுக்கும் வழிபாடுகளுக்கும் முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். உலகச் செல்வங்களைச் சேர்ப்பதிலேயே ஆர்வத்தைக் காட்டுகின்றோம். இதனையே, "இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்; யூதா அரணான பட்டணங்களைப் பெருகப்பண்ணுகிறான்" என்று இன்றைய வசனம் கூறுகின்றது. 

அன்பானவர்களே, நாம் ஆலயக்காரியங்களுக்குக் கொடுக்கும் முன்னுரிமையை நமது உடலாகிய ஆலயத்தைப் பாவமில்லாமல் பேணக்  கொடுக்கவேண்டும். எனவேதான் "உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?" ( 1 கொரிந்தியர் 6 : 19 ) என்றும், "நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?" ( 1 கொரிந்தியர் 3 : 16 ) என்றும் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார். 

நமது வாழ்வில் தேவனை மறந்து நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுக்காமல் இருந்துகொண்டு ஆலயங்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பது அர்த்தமற்றது. ஆசீர்வாதம் கிடைக்குமென்று கோடிக்கணக்கான பணத்தை காணிக்கைப் பெட்டியில் போடும் பலரைப்பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளிவருகின்றதை நாம் வாசித்திருக்கலாம். நாம் இப்படி அறிவிலிகளாக இருக்கலாகாது. தேவனை மறந்து கோவில்களைக் கட்டுவதைவிட்டு தேவனோடு இணைந்து நமது உடலைப் பரிசுத்தமாகக் காத்துக்கொண்டு ஆவிக்குரிய ஆலயத்தைக் கட்டவேண்டும்.  

கோடிக்கணக்கான பணத்தைச் செலவழித்து ஆலயம் கட்டுவது மனிதர்களுக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். ஆனால் தேவன் அப்படி ஆலயம் கட்டக்கூடியவனது தனிப்பட்ட வாழ்க்கையையும் கட்டும் நோக்கத்தையும் பார்க்கின்றார்.  ஆம், மண்ணினாலும் கல்லினாலும் கட்டப்பட்ட ஆலயங்களிலல்ல; நமது உடலாகிய ஆலயத்தில்தான் தேவன் வாசமாயிருக்கின்றார் எனும் சத்தியத்தைப் புரிந்துகொள்வோம். "ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 7 : 48 ) 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்  

Thursday, May 16, 2024

தீர்க்கத்தரிசி, அவனிடம் விசாரிப்பவன் இருவருக்கும் தண்டனை

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,201     💚 மே 23, 2024 💚 வியாழக்கிழமை 💚


"தீர்க்கதரிசியினிடத்தில் விசாரிக்கிறவனுடைய தண்டனை எப்படியோ அப்படியே தீர்க்கதரிசியினுடைய தண்டனையும் இருக்கும்." ( எசேக்கியேல் 14 : 10 )

நமது தேவன் தனது பிள்ளைகள் ஒரு தகப்பனோடுள்ள உறவுபோல தன்னோடு உறவுகொண்டு வாழவேண்டுமென்று விரும்புகின்றார். ஆனால் தங்களை விசுவாசிகள் என்று கூறிக்கொள்ளும் பெரும்பாலான மக்கள் தேவனோடு எந்தத் தனிப்பட்ட உறவும் ஐக்கியமுமின்றி வாழ்கின்றனர். தங்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படும்போது ஊழியர்களைத்தேடி,  அதுவும்  தீர்க்கதரிசன வரம்பெற்ற ஊழியர் என தங்களைத் தாங்களே கூறிக்கொள்ளும் ஊழியர்களைத் தேடி குறிகேட்கச் செல்வதுபோலச் செல்கின்றனர். 

இப்படி தேவ ஐக்கியமற்ற விசுவாசிகளையும் அவர்களுக்கு ஏற்றாற்போல தீர்க்கதரிசனம் கூறும் ஊழியர்களையும் பார்த்து கூறுவதாக இன்றைய தியான வசனம் உள்ளது. ஆம், இத்தகைய தீர்க்கதரிசியினிடத்தில் விசாரிக்கிறவனுடைய தண்டனை எப்படியோ அப்படியே தீர்க்கதரிசியினுடைய தண்டனையும் இருக்கும் என்கின்றார் கர்த்தர். 

ஆம் தேவன் தனது மக்கள் எதனைப்பற்றியும் தன்னிடம் நேரடியாக விசாரித்து அறியவேண்டுமென்று எதிர்பார்க்கின்றார். இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து தேவன் இதன்  காரணத்தையும் பின்வருமாறு கூறுகின்றார்:-  "இஸ்ரவேல் வம்சத்தார் இனி என்னைவிட்டு வழிதப்பிப்போகாமலும், தங்கள் எல்லா மீறுதல்களாலும் இனி அசுசிப்படாமலும் இருக்கும்பொருட்டாக இப்படிச் சம்பவிக்கும்; அப்பொழுது அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்." (எசேக்கியேல் 14 : 11 )

அதாவது தனது ஜனமாகிய இஸ்ரவேலர்கள் (புதிய ஏற்பாட்டு முறைமையில் நாம்தான் ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள்)  தன்னைவிட்டு வழிதப்பிப் போகாமலிருக்கவும் தங்கள் மீறுதலால் தங்களைக் கெடுத்துக்கொள்ளாமலும் இருக்கவேண்டும் என்பதற்காக இப்படிச் சம்பவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  எனவே தீர்க்கத்தரிசிகளிடம் விசாரிக்கும் இத்தகைய முறைகேடான  செயலைச் செய்யாமலிருந்தால் "அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்" என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். 

இன்றைய தியான வசனம் நமக்கு உணர்த்துவது, நாம் தனது மக்களாக இருக்கவேண்டுமென்று தேவன் விரும்புகின்றார். ஒரு தகப்பனிடம் அல்லது தாயிடம் நாம் நமது பிரச்சனைகளைப்  பேசி முடிவுகாண்பதுபோல நாம் அவரிடம் பேசவேண்டுமென்று விரும்புகின்றார். இதற்கு மாறாக நாம் குறுக்கு வழியில் விடைதேடி தீர்க்கதரிசன ஊழியர்களைத் தேடி ஓடினால் நமக்கும் அந்தத் தீர்க்கதரிசிக்கும் தண்டனை உண்டு என்கின்றார் தேவன். 

எனவே அன்பானவர்களே, தேவனோடுள்ள நமது தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ள முயல்வோம். நமது தேவைகள், பிரச்சனைகள் அனைத்தையும் அவரிடமே கூறுவோம். நாம் அப்படி மாறும்போது தேவன் நம்மேல் மகிழ்ச்சியடைவார். தேவனுக்கும் நமக்குமுள்ள இத்தகைய உறவே நிரந்தர உறவு. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்          

சோர்வை மாற்றும் தேவ கிருபை

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,200    💚 மே 22, 2024 💚 புதன்கிழமை 💚


"சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்." ( ஏசாயா 40 : 29 )

மனிதர்கள் நாம் இந்த உலகத்தில் வாழ்வதால் பல்வேறு பாடுகளையும் துன்பங்களையும் அனுபவிக்கின்றோம். இதனால் பல்வேறு சமயங்களில் நாம் சோர்வடைந்துவிடுகின்றோம். இந்தச் சோர்வு உடலளவிலும், மனதளவிலும், ஆவிக்குரிய சோர்வாகவும் பலவேளைகளில் இருக்கின்றது. 

மனச் சோர்விலிருந்து விடுபட உலக மனிதர்கள் பல்வேறு வழிகளில் முயல்கின்றனர்.  திரையரங்குகளுக்குச் செல்வது, சுற்றுலா செல்வது, மது அருந்துவது, மனத்துக்குப் பிடித்த நண்பர்களை அழைத்துத் தங்கள் கவலைகளைப் பகிர்ந்துகொள்வது  எனப்   பல்வேறு முயற்சிகளைச் செய்கின்றனர். மேலும் சிலர் ஆலயங்களுக்குச் சென்று வேண்டுதல்கள் செய்கின்றனர். 

அன்பானவர்களே, இன்றைய தியானவசனம் சொல்கின்றது, "சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்." அதாவது சோர்ந்திருக்கின்றவனுக்கும் பெலனில்லாமலிருக்கின்றவர்களுக்கும்  பெலன் கொடுப்பவர் தேவன் ஒருவரே.  தேவன் அனைத்துச்   சோர்வையும்  மாற்றுகின்றவர் மட்டுமல்ல அவற்றை மேற்கொள்ளும் பெலத்தை (சத்துவத்தை) நம்மில் பெருகப்பண்ணுகின்றவர். 

அப்படியானால் நாம் செய்யவேண்டியது என்ன என்று கேள்வி எழுகின்றது. உடல் சோர்வோ மனச் சோர்வோ ஆவிக்குரிய சோர்வோ எதுவாக இருந்தாலும் நாம் ஆறுதல் அளிக்கும் மனிதர்களையோ கவலை தீர்க்கும் உலகப் பொருட்களையோ நம்பி ஓடாமல் தேவ கிருபையை இறைஞ்சவேண்டியது அவசியம். காரணம்,  நமது தேவன் நமக்கு வாக்களித்துள்ளா, " என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்" ( 2 கொரிந்தியர் 12 : 9 ) என்று.

ஆம் அன்பானவர்களே, நாம் நமது பலவீனங்களை மேற்கொள்ள தேவ கிருபை அவசியம். அவரது கிருபை இல்லாமல் சுய முயற்சியால் நாம் சோர்விலிருந்து நிரந்தர விடுதலை அடைய  முடியாது. சில உலக வழிமுறைகள் தற்காலிக விடுதலையைத் தரலாமே தவிர நிரந்தர விடுதலையைத் தேவன் ஒருவரே நமக்குத் தரமுடியும். எனவே, சோர்ந்துபோகிறவனுக்குப்   பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிற அவரை நாம் பற்றிக்கொள்ளவேண்டியதும் அவரது கிருபைக்கு இறைஞ்சவேண்டியதும்  அவசியம். 

இன்றைய தியான வசனத்தை எழுதிய ஏசாயா தொடர்ந்து எழுதும்போது இரண்டு வசனங்களுக்குப்பின் கூறுகின்றார்,  "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்." ( ஏசாயா 40 : 31 ) ஆம், கர்த்தரை நாம் பற்றிக்கொள்ளும்போது சோர்வு, இளைப்பு எல்லாமே மறைந்துவிடும். நாம் ஓடினாலும் இளைப்படையமாட்டோம்,  நடந்தாலும் சோர்ந்துபோகமாட்டோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

மகிழ்ச்சியோடு கொடுத்தல்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,199       💚 மே 21, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚


"அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்து தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்" ( லுூக்கா 21 : 4 )

இன்று பொதுவாக எல்லா கிறிஸ்தவ சபைகளிலும் ஆலய காரியங்களுக்கு அதிகமாகக் கொடுப்பவர்களுக்கு அதிக மதிப்பும் குறைவாகக் கொடுப்பவர்களுக்கு அற்பமான உபசரிப்பும் உள்ளது நாம் கண்கூடாகக் காணக்கூடிய ஒரு விஷயம். ஆவிக்குரிய சபைகள் என்று கூறப்படும் சபைகளில் இந்த வேறுபாடு அதிகமாகக் காணப்பட்டாலும் பாரம்பரிய சபைகளிலும் இந்த பாரபட்சம் உள்ளது. 

ஆலய காரியங்களுக்கு அதிகமாக் கொடுப்பவர்கள் தான் மேலான நிர்வாகப் பொறுப்புகளுக்கு வரமுடியும். இதற்கு இன்னொரு காரணம் அதிகமாக ஆலய காரியங்களுக்குக் கொடுக்க இயலாதவர்கள் தாங்களாகவே சற்று ஒதுங்கி நின்றுவிடுகின்றனர். பல்வேறு செலவினங்கள் வரும்போது வசதி குறைந்தவர்கள் நிர்வாகத்தில் இருந்தால் அவர்களால் சிறப்பாகச் செயல்பட முடியாது எனும் நிலைமையே இன்று இருக்கின்றது. 

ஆனால், ஆவிக்குரிய முறையில் பார்ப்போமானால் இது தேவனுக்கு ஏற்பில்லாத செயலாகும்.  ஏனெனில்,  ஆவிக்குரிய செயல்பாடுகள் பணத்தின் அடிப்படையில் உள்ளவையல்ல. அது தேவன் பார்க்கக்கூடிய உள்ளான மனித நிலைமை, மனித இருதயத்தின் எண்ணங்களின் அடிப்படையிலானவை. காணிக்கை அதிகமாகக் கொடுக்க முடியாதவர்கள் உண்மையில் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ்பவர்களாக இருக்கலாம். தேவன் அதனையே முக்கியமாகக் கருதுகின்றார். 

எனவேதான் அதிகமாகக் காணிக்கைகளைப் போட்ட மற்றவர்களைவிட இரண்டு காசு காணிக்கைப் பெட்டியில் போட்ட பெண்ணை இயேசு கிறிஸ்து பாராட்டி நாம் அனைவரும் உணர்ந்துகொள்ளும் ஒரு சத்தியத்தை வெளிப்படுத்தினார்.  மற்றவர்கள் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்து தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இந்தப் பெண்ணோ தனது  வறுமை நிலையிலும் தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார் இயேசு கிறிஸ்து. 

இன்று பொதுவாக ஆவிக்குரிய சபைகள் என்று கூறப்படும் பல சபைகளில் தசமபாக காணிக்கையை அதிகம் வலியுறுத்தி பிரசங்கிக்கப்படுகின்றது. ஆனால், பத்தில் ஒன்று காணிக்கையாகச் செலுத்த புதிய ஏற்பாட்டில் காட்டாயப்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.  மாறாக,  நாம் எதனை தேவனுக்கென்று செலுத்தினாலும் மன மகிழ்ச்சியோடு கொடுக்கவேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.

மக்கெதோனியா சபை மக்களைக் குறித்து கொரிந்திய சபையினருக்கு அப்போஸ்தலரான பவுல்  எழுதும்போது, "அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்." ( 2 கொரிந்தியர் 8 : 2 ) என்று கூறுகின்றார். 

ஆம், அவர்கள் தரித்திரர்கள்; அதாவது ஏழைகள். அப்படியிருந்தும் "தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்" என்று கூறப்பட்டுள்ளது. இப்படிச் சந்தோஷமாய்க் கொடுப்பதையே தேவன் விரும்புகின்றார். இயேசு கிறிஸ்து புகழ்ந்து பேசிய இரண்டு காசு காணிக்கைப்பெட்டியில் போட்ட பெண்ணும் இப்படி சந்தோஷத்தோடு கொடுத்தவள்தான். அவளது இருதயத்தை இயேசு கிறிஸ்து அறிந்திருந்தார். 

நாம் அதிகமாக காணிக்கை போடுவதையும் ஆலயங்களுக்கு என அதிகமாகப் பொருளுதவிச் செய்வதையும் மக்கள் வேண்டுமானால் பாராட்டலாம். ஆனால் தேவன் நாம் என்ன மனநிலையில் அதனைச் செலுத்துகின்றோம் என நமது இருதயத்தையும் (மற்றவர்கள் நம்மைப் பெருமையாகப் பார்க்கவேண்டும் எனும் எண்ணம் இருக்கின்றதா என்பதனையும்) நாம் காணிக்கையாகச் செலுத்தும் பணத்தை எப்படிச் சம்பாதித்தோம் என்பதனையும் அறிந்திருக்கின்றார். 

எனவே மற்றவர்களைப்போல் ஆலயங்களுக்கு அதிக காணிக்கைகளையும் பொருளுதவியையும் நம்மால் செய்யமுடியவில்லையே எனும் கவலை வேண்டாம். மகிழ்ச்சியோடு நம்மால் முடிந்ததைச் செய்தால் போதும். அதுபோல, அதிகமாக ஆலயக் காரியங்களுக்குச் செய்பவர்கள் பெருமை இல்லாமல் உண்மையான தேவ அன்போடு, நேர்மையாக சம்பாதித்தவற்றை ஆலயங்களுக்குச்  செய்வோம். கர்த்தர்தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.  
  
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Wednesday, May 15, 2024

முதுகை எனக்குக் காட்டினார்கள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,198      💚 மே 20, 2024 💚 திங்கள்கிழமை 💚

"முகத்தையல்ல, முதுகை எனக்குக் காட்டினார்கள்; நான் ஏற்கனவே அவர்களுக்கு உபதேசித்தும் அவர்கள் புத்தியை ஏற்றுக்கொள்ளச் செவிகொடாமற்போனார்கள்." ( எரேமியா 32 : 33 )

கர்த்தரது வார்த்தைகளுக்குச் செவிகொடாமல் இருப்பது என்பது நமது முதுகை அவருக்குக் காண்பிப்பதுபோல என்று இன்றைய வசனம் கூறுகின்றது. நாம் ஒரு நண்பனிடமோ, உயர் அதிகாரியிடமோ பேசும்போது எப்படி நிற்போம் என்று சிந்தித்துப் பார்ப்போம். அவர்கள் பேசும்போது நாம் மறுபுறம் திரும்பி நமது முதுகைக் காட்டிக்கொண்டிருப்போமானால் எப்படி இருக்கும்? அவர்களிடம் நாம் ஏதாவது பெறமுடியுமா? ஆனால் பெரும்பாலான மக்கள் இப்படியே இருக்கிறார்கள் என்று கூறுகின்றார் கர்த்தர். 

சிலர் தங்களுக்கு விருப்பமில்லாதவர்களை எதிரில் சந்தித்தால் தங்கள் முகத்தைத் திருப்பிக்கொள்வார்கள். சில வேளைகளில் நாம் அவர்கள் நம்மைப் பார்ப்பார்கள் பேசலாம், சிரிக்கலாம் என்று எண்ணுவோம்,  ஆனால் அவர்கள் தொலைவிலிருந்தே நம்மைப் பார்த்து விட்டு அருகில் வந்ததும் நம்மை பார்க்காததுபோல முகத்தைத் திருப்பிக்கொள்வார்கள். இந்த அனுபவம் நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். 

இதுபோலவே நாம் தேவனது கற்பனைகளைப் புறக்கணிக்கும்போது அவருக்குச் செய்கின்றோம். நமது முதுகை அவருக்குக் காட்டுகின்றோம் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. எனவே தேவன் சொல்கிறார் "என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அவர்களுடைய முடிவு எப்படியிருக்கும் என்று பார்ப்பேன்; அவர்கள் மகா மாறுபாடுள்ள சந்ததி; உண்மையில்லாத பிள்ளைகள்." ( உபாகமம் 32 : 20 )

மனிதர்களை நாம் புறக்கணித்துவிடலாம். ஆனால் எப்படியேனும் ஒரு சூழலில்  நாம் தேவனைத் தேடித்தான் ஆகவேண்டும். இப்படி நமது முதுகை அவருக்குக் காட்டியபடி வாழ்ந்துவிட்டு நமக்குத் தேவை ஏற்படும்போது மட்டும் அவரைத் தேடுவோமானால் அவரும் தனது முகத்தை நமக்கு மறைப்பேன் என்கிறார் தேவன். ஆம் அன்பானவர்களே, நமது ஜெபங்களைத் தேவன் கேட்காமல் இருக்க இதுதான் காரணம்.

"அந்நாளிலே நான் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்களைக் கைவிட்டு, என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அதனால் அவர்கள் பட்சிக்கப்படும்படிக்கு அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும்; அந்நாளிலே அவர்கள்: எங்கள் தேவன் எங்கள் நடுவே இராததினாலே அல்லவா இந்தத் தீங்குகள் எங்களைத் தொடர்ந்தது என்பார்கள்." ( உபாகமம் 31 : 17 )

கர்த்தரது இருதயத்துக்குப் பிரியமானவனாக வாழ்ந்த தாவீது கூறுகின்றார், "என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று." ( சங்கீதம் 27 : 8 ) அதாவது நான் எப்போதும் உமது முகத்தையே தேடுவேன். காரணம், என் இருதயம் அப்படித் தேடும்படி என்னிடம் சொல்லிற்று என்கிறார். 

"இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே." ( எபிரெயர் 3 : 15 ) "ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்." ( எபிரெயர் 3 : 7, 8 )

எனவே அன்பானவர்களே, நமது  முதுகை அவருக்குக் காண்பித்து அவரை அவமதிக்காமலும்   நமது இருதயத்தைக் கடினப்படுத்தாமலும் நமது முகத்தை தேவனுக்குக் காண்பித்து வாழ்வோம்.  தாவீது கூறுவதுபோல, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று நமது இருதயமும் சொல்லக்கடவது. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்       

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவரும்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,197      💚 மே 19, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚


"அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து" ( வெளிப்படுத்தின விசேஷம் 5 : 8 )

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தையும், பிதாவிற்குமுன் அவருக்குள்ள உரிமையையும் இன்றைய வசனம் விளக்குவதாக உள்ளது.  சிங்காசனத்தில் வீற்றிருந்தவரது கையிலிருந்த "புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யார் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங்கண்டேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 5 : 2 ) எனக் கூறுகின்றார் யோவான். 

மேலும், "வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின்கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது." ( வெளிப்படுத்தின விசேஷம் 5 : 3 ) என்றுகூறப்பட்டுள்ளது. அப்போது அப்படி ஒருவரும் இல்லையே என்று  நினைத்து யோவான் அழுத்ததாகக் கூறுகின்றார். "அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதன் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 5 : 5 )

ஆம் அன்பானவர்களே, பிதாவின் கையிலுள்ள அதிகாரத்தை  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத்தவிர வேறு எவருக்கும் அவர் கொடுக்கவில்லை. இதனையே, வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின்கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது என்று கூறப்பட்டுள்ளது. பிதாவுக்கு நிகராக இருக்கக்கூடியவர் நமது ஆண்டவாகிய இயேசு கிறிஸ்து ஒருவரே. எனவே அவரைத் தவிர வேறு எவரையும் நாம் துணைக்கு அழைக்க முடியாது. 

இதனையே அப்போஸ்தலரான பவுல், "தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது." ( 1 தீமோத்தேயு 2 : 5, 6 ) என்று கூறுகின்றார். 

அப்போஸ்தலரான பேதுருவும், "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை" என்கின்றார். ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 4 : 12 )

பரலோக மகிமையில் நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும்  பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து வணக்கவேண்டுமானால் அவர் எத்தனை அதிகாரமும் வல்லமையும் உள்ளவராக இருக்கவேண்டும்!!! ஆம் அன்பானவர்களே, இதிலிருந்து எந்த பரிசுத்தவானும் நமக்காக பிதாவாகிய தேவனிடம் பரிந்துபேச முடியாது என்பது தெளிவாகின்றது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே அந்தத் தகுதியுடையவர். 

"நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும், வேண்டிக்கொள்ளுகிறேன்." ( யோவான் 17 : 20 ) என அவர் பூமியில் இருந்த நாட்களிலேயே நமக்காக பிதாவிடம் ஜெபிக்கவில்லையா? எனவே அவரையே நமது துணையாக பற்றிக்கொள்வோம். "இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்." ( வெளிப்படுத்தின விசேஷம் 1 : 8 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - லுூக்கா 11 : 13 / Luke 11:13

" ஆதவன் " தியானம் - 1981 ஜூலை 11, சனி  2026       "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந...