Tuesday, May 14, 2024

பாவத்துக்கு மரித்து நீதிக்குப் பிழைத்திருத்தல்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,196     💚 மே 18, 2024 💚 சனிக்கிழமை 💚


"கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்." ( ரோமர் 8 : 10 )

நமக்குள் கிறிஸ்து வாழ்கின்றார் என்பதற்கு ஒரு அடையாளம்தான் இன்றைய வசனம்கூறுவது. அதாவது கிறிஸ்து நமக்குள் வாழ்கின்றார் என்றால்  நமது சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், நமது ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும். செத்தவர்கள் பாவம் செய்வதில்லை. அதுபோல நாம் கிறிஸ்துவுக்குள் வாழும்போது நமதுசாரீரம் செத்ததாகின்றது. நாம் அவரோடுகூடச்  சிலுவையில் அறையப்படுகின்றோம். எனவே நமது சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாகின்றது; பாவம் செய்யாத ஒன்றாகின்றது. 

அதேநேரம் நமது ஆவியானது உயிர்ப்படைகின்றது. கிறிஸ்துவைப்போல ஜீவனுள்ளதாக மாறுகின்றது. ஆம், கிறிஸ்துவோடு நாம் பாவத்துக்கு மரித்தோமானால் அவரோடுகூட பிழைத்துமிருப்போம். இதனையே அப்போஸ்தலரான பவுல்,  "ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனே கூடப்பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்." ( ரோமர் 6 : 8 ) என்று கூறுகின்றார். 

கிறிஸ்துவின் ஆவி நமக்குள் இருந்தால் நாம் உடல்சார்ந்தவர்களாக இருக்கமாட்டோம். அதாவது நமது சரீர நன்மைகளுக்காகவே உழைக்கின்றவர்களாக இருக்கமாட்டோம். இன்றைய தியான வசனத்துக்கு முந்தின வசனமாக அப்போஸ்தலரான பவுல் இதனையே குறிப்பிடுகின்றார். "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்ட வர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." ( ரோமர் 8 : 9 )

ஆம் அன்பானவர்களே, நாம் கிறிஸ்தவர்கள் என்று கூறப்படவேண்டுமானால் அவரது ஆவி நமக்குள் இருக்கவேண்டியது அவசியம். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல. அப்படிக் கிறிஸ்துவின் ஆவி நமக்குள் இருக்கும்போது இன்றைய தியான வசனம் குறிப்பிடுவதுபோல, நமது சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.

நாம் மெய்யான ஒரு கிறிஸ்தவ வாழ்வு வாழவேண்டுமானால் தேவனுடைய ஆவியானவர் நமக்குள் இருந்து செயல்படவேண்டும். அப்போதுதான் நமது சாவுக்கேதுவான சரீரம் உயிரடையும். "அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்." ( ரோமர் 8 : 11 )

எனவே நாம் கிறிஸ்துவுக்குள் தூய்மையான வாழ்வு வாழவேண்டுமானால் கிறிஸ்துவின் ஆவி நமக்குள் வந்து செயல்படவேண்டியது அவசியம். அப்படிக்  கிறிஸ்து நமக்குள் இருந்தால் நமது  சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும். ஆராதனைகளில் கலந்துகொண்டு, ஜெபக்கூட்டங்களில் தவறாமல் பங்கேற்று,  வேதாகமத்தை வாசித்து, காணிக்கை அளிப்பதால் மட்டும் நாம் தூய்மையானவர்களாக மாற முடியாது. இத்தகையச் செயல்களை அனைத்து மதத்தினர்களும் அவரவர் முறைமைகளின்படி செய்துகொண்டுதான் இருக்கின்றனர். நாமும் ஆவியானவருக்கு இடஙகொடாமல் இவைகளை மட்டும் செய்து கொண்டிருப்போமானால் வெறும் மதவாதிகளாகவே இருப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

Monday, May 13, 2024

தேவனது பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,195     💚 மே 17, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚


"ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்." ( 1 பேதுரு 5 : 6 )

பெரும்பாலான உலக வேலைகளைச் செய்பவர்களும் ஆவிக்குரிய மக்களும் தங்களை அறியாமலேயே பெருமை எனும் வலையினுள் சிக்கிக்கொள்கின்றனர். அந்தப் பெருமை மற்றவர்களைவிடத் தங்கள் மேலானவர்கள் எனும் எண்ணத்தை அவர்களுக்குள் உருவாக்குவதால் அதனை மற்றவர்களும் உணர வேண்டுமென்று அதனை வெளிப்படுத்த பல்வேறு உபாய காரியங்களைச் செய்கின்றனர். 

இந்த பெருமையும் தன்னைத்தான் உயர்த்தும் குணமும் கிறிஸ்தவ ஊழியர்களிடையே இன்று அதிகமாகப் பரவியுள்ளது மறுக்கமுடியாத உண்மை. எனவே, தங்களைத் தாங்களே உயர்த்தும் உபாயங்களாக "தீர்க்கதரிசன வரம்பெற்ற ஊழியர்" , "குணமாகும் வரம் பெற்றவர்", "கர்த்தருடைய தீர்க்கதரிசி" போன்ற பட்டங்களைத் தங்களது பெயருக்குப்பின் போட்டுக்கொள்கின்றனர்.  பல ஊழியர்கள் கூடும் இடங்களில் மற்றவர்களைவிடத் தான்தான் பெரியவன் என்பதனைக் காட்டிக்கொள்ள அற்பமான பெருமை காரியங்களையும் செய்கின்றனர். 

உலக மனிதர்களும் பெருமைகொண்டு தங்கள் செயலிலும் பேச்சிலும் தங்களை மற்றவர்களைவிட உயர்திக்கொள்கின்றனர். இவர்களைப்பார்த்து தேவன் கூறுகின்றார், உங்களை நீங்களே உயர்திக்கொள்ளாதீர்கள். கர்த்தர் உங்களை உயர்த்தும்படி அவரது கரங்களுக்குள் அடங்கியிருங்கள். அப்போஸ்தலரான பேதுருவும், "...........நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்." ( 1 பேதுரு 5 : 5 ) என எழுதுகின்றார். 

தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள் என்று கூறிய பேதுரு தொடர்ந்து கூறும்போது பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் என்று கூறுவது கவனிக்கத்தக்கது. அதாவது உன்னையே நீ உயர்த்துவது தேவனுக்கு எதிர்த்து நிற்பதுபோன்ற செயல் ஆனால் தாழ்மையோடு இருப்பாயானால் தேவ கிருபையினைப் பெறுவாய் என்று பொருள். 

"ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு."( பிரசங்கி 3 : 1 ) என்று கூறியுள்ளபடி நம்மை உயர்த்துவதற்கு தேவனுக்கேற்ற காலம் ஒன்று உண்டு. அந்தக்காலம் வரும்வரை அவரது பலத்த கைக்குள் நாம் அடங்கியிருக்கவேண்டியது அவசியம். தேவனது கரத்துக்குள் என்று வெறுமனே கூறாமல், "அவரது பலத்த கைகளுக்குள்" என்று கூறப்பட்டுள்ளது. அந்தப் பலத்தக் கரம் ஒரே நொடியில் ஒருவரை உயர்த்தவும் தாழ்த்தவும் வல்லமைபொருந்தியது என்பதனை நாம் மறந்திடக்கூடாது.

எனவே அன்பானவர்களே, பெருமையை நீக்கித் தாழ்மையோடு வாழப் பழகுவோம். உயர்ந்த பதவியோ பணமோ,  அழகோ, பேச்சாற்றலோ மட்டுமே சிறப்பல்ல;  ஒவ்வொருவருக்கும் தேவன் ஏதாவது சிறப்பான காரியத்தைக் கொடுத்திருப்பார். எனவே பெருமையை நீக்கி மனத் தாழ்மையோடு வாழும்போதுதான் தேவ ஆசீர்வாதத்தை நாம் பெறமுடியும். 

"ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்." ( பிலிப்பியர் 2 : 3 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்     

எருசலேமிலிருந்து எரிகோவிற்குச் செல்வது

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,194      💚 மே 16, 2024 💚 வியாழக்கிழமை 💚

"கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்." ( ஓசியா 6 : 1 )

சிறு குழந்தைகளிடமிருந்து நமது வாழ்கைக்குத் தேவையான பல காரியங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். எனவேதான் "சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது." ( லுூக்கா 18 : 16 ) என்று இயேசு கிறிஸ்து கூறினார். 

இந்தச் சிறு பிள்ளைகளுடைய ஒரு முக்கிய குணம் தேவனுக்கு நேராக நாம் வாழ்வதற்கு வழிகாட்டுவதாக உள்ளது. ஒருதாய் குழந்தைத் தவறு செய்யும்போது கோபத்தில் அடித்துவிடுவாள். ஆனால் அந்தக் குழந்தை தாய் தன்னை அடித்ததை மனதினில் வைத்துகொண்டிராது. சற்று நேரத்திலேயே எல்லாவற்றையும் மறந்து தாயைநோக்கிச் செல்லும். ஆம் அன்பானவர்களே, இதனையே இன்றைய தியான வசனம் "கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்." என்று கூறுகின்றது. 

எருசலேமிலிருந்து எரிகோவைநோக்கிச் சென்ற ஒரு மனிதனை இயேசு கிறிஸ்து உவமையாகக் கூறினார். எருசலேம் என்பது பரிசுத்த நகரம். எரிகோ சாபத்தின் நகரம். யோசுவா இந்த நகரத்தைச் சபிப்பதை நாம் பார்க்கலாம். "அக்காலத்திலே யோசுவா: இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது தன் இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன் என்று சாபம் கூறினான்." ( யோசுவா 6 : 26 )

அதாவது இயேசு கிறிஸ்து கூறிய உவமையில் எருசலேமிலிருந்து எரிகோவிற்குச் செல்வது பரிசுத்த வாழ்க்கையிலிருந்து ஒருவன் பாவ வாழ்க்கையினை நோக்கிச் செல்வதைக் குறிக்கின்றது. இப்படிச் செல்பவர்களுக்கு திருடர்களால் துன்பம் வருவதுபோல துன்பங்கள் தொடரும். ஆனால் இப்படித் திருடர்கையில் அகப்பட்டு அடிக்கப்பட்ட மனிதனை சமாரியன் கண்டு உதவுகின்றான்.  சமாரியன் "கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்." ( லுூக்கா 10 : 34 ) என்று வாசிக்கின்றோம்.

எருசலேமிலிருந்து எரிகோவிற்குச் செல்வதுபோல இன்றுநாமும்  பரிசுத்த வாழ்க்கையிலிருந்து பாவ வாழ்க்கையினை நோக்கிச் செல்ல்லும்போது துன்பங்கள் நம்மைத் தொடர்கின்றன. அது நாம் நமது வழியினைத் திருத்திக்கொள்ள தேவன் தரும் அழைப்பு.  காயப்பட்ட மனிதனுக்கு சமாரியன் தானாக வந்து உதவினானென்றால் நல்ல சமாரியானான இயேசு கிறிஸ்து அவரிடம் நாம் திரும்பும்போது எத்தனை அதிகமாக உதவுவார்!!!

ஆம் அன்பானவர்களே, இன்றைய தியான வசனம் நமக்கு கூறுவதுபோல கர்த்தரிடத்தில் திரும்புவோம்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.

வாழ்வில் வரும் துன்பங்களைக் கண்டு மனம் கலங்கிடாமல் அவரிடமே திரும்புவோம். "நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 19 ) என்கிறார் உன்னதமான தேவன். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Sunday, May 12, 2024

ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்பட....

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,193      💚 மே 15, 2024 💚 புதன்கிழமை 💚


"தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கின்றன." ( 2 நாளாகமம் 16 : 9 )

மிகப்பெரிய குப்பைக்கிடங்கில் சிலவேளைகளில் அரிய பொருட்கள் மறைந்து கிடப்பதுண்டு. குப்பைகளைச் சேகரிக்கும் தொழில் செய்யும் மனிதர்கள் சிலவேளைகளில் இந்த விலை உயர்ந்த பொருட்களைக் கண்டுபிடிப்பார்கள். சிலவேளைகளில் தங்க நகைகளும் கிடைப்பதுண்டாம். குப்பை சேகரிக்கும் தொழில் செய்யும் நண்பரொருவர் இதுபற்றி கூறும்போது,  "மற்றவர்களுக்கு குப்பை அருவெறுப்பாகத் தெரிந்தாலும் எங்களது கண்கள் அந்தக் குப்பையினுள் ஏதாவது கிடைக்குமா என்றுதான் பார்க்கும்"  என்று கூறினார். 

ஆம் அன்பானவர்களே, இதுபோலவே இந்த மொத்த உலகமும் பொல்லாங்குக்குள் கிடந்தாலும் தேவனது கண்கள் இந்த பொல்லாத உலகத்தினுள்ளும் தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடு யாராவது இருக்கின்றார்களா என்று பார்த்துத்  தனது வல்லமையினை அவர்களுக்கு வெளிப்படுத்தப்  பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கின்றன.

"வல்லமை" என்று கூறியதும் பலருக்கு அற்புத அதிசயம் செய்வதும், நோய்களைக் குணமாக்குவதும், பேய்களை ஓட்டுவதும், தீர்க்கத்தரிசனம் கூறுவதும்தான் நினைவுக்கு வருகின்றன. ஆனால் மேலான வல்லமை என்பது பாவத்தை மேற்கொள்ளுவதில் இருக்கின்றது. மனித அவலட்சண குணங்களை மேற்கொள்வதைக் குறிக்கின்றது. அதாவது இது உள்ளான மனிதனில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கின்றது. 

இதனையே அப்போஸ்தலரான பவுல், "நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்," ( எபேசியர் 3 : 16 ) என்று குறிப்பிடுகின்றார். தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்கு இந்த வல்லமையை அளித்து அவர்களைப் பரிசுத்தமாக்கும்படி  கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கின்றன.

பாவத்தை மேற்கொள்ளும் வல்லமை சுய கட்டுப்பாட்டால் வருவதல்ல. மாறாக அது தேவனால் வருகின்றது. தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் மண்ணான மனிதனுக்குள் வரும்போது இந்த மகத்துவமான வல்லமை விளங்குகின்றது. இதனையே அப்போஸ்தலரான பவுல், "இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாகியிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்." ( 2 கொரிந்தியர் 4 : 7 ) என்று குறிப்பிடுகின்றார். 

எனவே அன்பானவர்களே, நாம் கர்த்தரை அறியவேண்டுமெனும் உத்தம இருதயத்தோடு இருக்கவேண்டியது அவசியம். கர்த்தரிடம் கிடைக்கும் உலக ஆசீர்வாதங்களுக்கல்ல, அவரை அறியவேண்டுமெனும் உத்தம இருதயம் நமக்கு வேண்டும். அப்படி நாம் வாழும்போது இந்த வல்லமை நம்மில் செயல்படும். இதற்கான தகுதியுள்ளவர்களைத் தேடி கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கின்றன என்று இன்றைய வசனம் கூறுகின்றது. அவரது கண்களில் படும் தகுதியுள்ளவர்களாக வாழ முயற்சியெடுப்போம். 

"கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்." ( எபேசியர் 6 : 10 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Saturday, May 11, 2024

வேறே ஆவியைப் பெற்ற காலேப்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,192      💚 மே 14, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚


"என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றி வந்தபடியினாலும், அவன் போய் வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்." ( எண்ணாகமம் 14 : 24 )

எகிப்திலிருந்து மோசே அழைத்துக்கொண்டு வந்த மக்கள் பாரான் வனாந்தரத்தில் வந்தபோது மோசே இஸ்ரவேல் மக்களினங்களின் 12 கோத்திரத்திலிருந்தும் கோத்திரத்துக்கு ஒருவராகத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துத் தாங்கள்  செல்லவிருந்த கானான் தேசத்தைச் சுற்றிப்பார்த்து அந்தத் தேசம் எப்படிப்பட்டது என்று தகவல் கொண்டுவர அனுப்பினார். அப்படிச் சென்று வந்த மக்கள் தலைவர்கள் மக்கள் மத்தியில் துர்ச்செய்தியைப் பரப்பினார்கள். 

"நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்து வந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள். அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்து வந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்." ( எண்ணாகமம் 13 : 32, 33 ) என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் காலேபும் யோசுவாவும் மட்டும் விசுவாச வார்த்தைகளைக் கூறினார்கள். "அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள்." ( எண்ணாகமம் 14 : 9 ) ஆனால் இஸ்ரவேல் மக்கள் அவர்கள்மேல் கல்லெறிய முயன்றார்கள். 

இப்படி காலேப் கூறக்காரணம் அவரிடமிருந்த "வேறே ஆவி" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது மற்றவர்களிடமிருந்து ஆவியைவிட வேறான ஒரு ஆவி இருந்ததால் காலேப் விசுவாச வார்த்தைகளைக் கூறினார். 

ஹீலியம் வாயு அடைத்த பலூன்களை நாம் திருவிழா கடைகளில் பார்க்கலாம். வெளியில் பார்ப்பதற்கு அவை மற்ற பலூன்களைப்போலவே இருந்தாலும் அவைகளின் உள்ளே இருப்பது வேறு வாயு.  ஆதலால் அவைகளைக் கட்டியுள்ள நூலை நாம் அறுத்துவிட்டால் மேலே எழும்பிச் சென்றுவிடும். மற்ற பலூன்கள் தரையிலேயே கிடக்கும். இதுபோலவே காலேப்பினுள் பரிசுத்தஆவியானவர் இருந்ததால் அவர் மேலான எண்ணமுடையவராக இருந்தார். 

ஆம் அன்பானவர்களே, காலேப் தேவனால் அருளப்பட்டவைகளை அறியும் கிருபை பெற்றிருந்தார். நாமும் உலகத்தின்  ஆவியைப் பெறாமல் வேறே ஆவியைப் பெறவேண்டியது அவசியம். பவுல் அப்போஸ்தலரும் இதனால்தான் "நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்." ( 1 கொரிந்தியர் 2 : 12 ) என்று கூறுகின்றார். 

வேறே ஆவியைப் பெற்ற காலேப் தேவனை உத்தமமாய்ப் பின்பற்றினார். நாமும் பரிசுத்த ஆவியானவரை வாழ்வில் பெறும்போது வித்தியாசமானவர்களாக மாறுவோம்.   "அவன் உத்தமமாய் என்னைப் பின்பற்றி வந்தபடியினாலும், அவன் போய் வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்." என்று கர்த்தர் கூறிய வார்த்தைகள் நமக்கும் பொருந்தும். இந்த ஆவியானவரை இதுவரைப் பெறாமல் வாழ்ந்திருந்தால் நமது ஜெபங்களில் வேண்டுவோம்.  கர்த்தர்தாமே தூய்மையின் ஆவியானவரை நமக்குத் தந்து தூய வழியில் நம்மை நடத்துவார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Thursday, May 09, 2024

"உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போல இருக்கும்."

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,191     💚 மே 13, 2024 💚 திங்கள்கிழமை 💚

"பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே." ( ஏசாயா 48 : 17 )

நமது தேவன் உலக ஆசீர்வாதங்களுக்கு மட்டும் உரியவரல்ல; மாறாக, மறுவுலக வாழ்க்கைக்கும் நித்திய ஜீவனுக்கும் வேண்டிய வழியினை நமக்குக் காண்பித்து நடத்துகின்றவர். அதுவே நமது ஆத்துமாவுக்கு உபயோகரமானது. இதனையே இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே." என்று. 

நமக்கு ஆவிக்குரிய வழியைப் போதித்து நடத்துகின்றவர் தேவனுடைய பரிசுத்த ஆவியானவர்தான். நமது உபயோகத்துக்காக தேவன் பரிசுத்த ஆவியானவரைத் தந்துள்ளார். இதனையே இயேசு கிறிஸ்து கூறினார், "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." ( யோவான் 16 : 13 )

மட்டுமல்ல, "அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்." ( யோவான் 16 : 8 ) என்றார் இயேசு கிறிஸ்து.

எனவே, இன்றைய தியான வசனம் கூறுவது போல, பிரயோஜனமாயிருக்கிறதை நமக்குப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழியிலே நம்மை நடத்துகிற  தேவனாகிய கர்த்தர் காட்டும் வழிகளில் நடக்க நாம் கீழ்ப்படிதலுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம்.  அப்படிக்  கீழ்படிதலுள்ளவர்களாக நாம் நடக்கும்போது நமக்குப் பூரண சமாதானம் கிடைக்கும். இதனையே ஏசாயா மூலம் தேவன் கூறுகின்றார், "ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்." ( ஏசாயா 48 : 18 )

நதியானது அமைதியாக ஓடுகின்றது. மட்டுமல்ல, அதன் கரையோரத்திலுள்ள மரங்களை செழித்து வளரச் செய்கின்றது. அதுபோலவே தேவனது ஆவியானவர் காட்டும் வழியில் நாம் நடக்கும்போது நமது வாழ்க்கை அமைதியானதாகவும் மற்றவர்களுக்கு உதவக்கூடியதாகவும் இருக்கும். மட்டுமல்ல, "உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்." என்று ஏசாயா கூறுகின்றார். அதாவது கடலில் அலைகள் ஓய்வில்லாமல் இருப்பதுபோல நமது நீதி அழிவில்லாத நித்திய நீதியாக இருக்கும்.  

ஆம் அன்பானவர்களே, பிரயோஜனமாயிருக்கிறதை நமக்குப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழியிலே நம்மை நடத்துகிற தேவனாகிய கர்த்தரின் குரலுக்குச் செவிசாய்த்து நடப்போமானால் அதுவே நமக்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாக இருக்கும். உலக ஆசீர்வாதங்களுக்கு முன்னுரிமைகொடுத்து ஜெபிக்காமல் இத்தகைய ஆவிக்குரிய தேவ வழிநடத்துதலுக்கு நாம் ஜெபிக்கும்போது தேவன் நம்மேல் மகிழ்ச்சிக்கொள்வார். சமுத்திரத்தின் அலைகள்போல முடிவில்லாத நீதி நம்மைச் சூழ்ந்துகொள்ளும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்        

தனக்குப் பயந்தவர்களுக்குக் கிருபை செய்கிறார்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,190      💚 மே 12, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚


"அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது." ( லுூக்கா 1 : 50 )

தேவனது கிருபையினை மிகுதியாகப்பெற்ற அன்னை மரியாள் உன்னதனமான ஒரு உண்மையினை உணர்ந்திருந்தார். அதனையே இன்றைய தியான வசனத்தில் நாம் வாசிக்கின்றோம். அதாவது, தேவன் தனக்குப் பயந்து நீதியோடு வாழும் மக்களுக்கு கிருபையினை அளிக்கின்றார். மட்டுமல்ல அப்படி தேவன் அளிக்கும் கிருபை தலைமுறைக்கும் நிலைத்ததாக இருக்கும். 

இன்றைய தியான வசனத்தின் இரண்டு வசனத்துக்கு முன் அன்னை மரியாள் கூறுகின்றார், "அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்." ( லுூக்கா 1 : 48 ) ஆம் அன்பானவர்களே, சர்வ லோகத்தையும் படைத்தாளும் தேவன் அன்னை மரியாளின் வயிற்றில் பிறந்தது எத்தனை பெரிய கிருபை. இரண்டாயிரம் ஆண்டுகளாக இன்றும் நாம் அவரைப் பாக்கியவதி என்று போற்றுகின்றோம்.

இதனைத் தாவீது ராஜாவும் அறிக்கையிடுகின்றார். தேவனுக்குப் பயந்து வாழ்ந்தவர்தான் தாவீது. அவருக்குத் தேவன் அளித்த கிருபை மிகப்பெரியது. நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாவீதின் வம்சத்திலே தோன்றியது மட்டுமல்ல, தாவீதின் மகன் என்றே குறிப்பிடப்படுகின்றார். இது எத்தனை பெரிய கிருபை பாருங்கள்!!! இதனையே, "தாம் ஏற்படுத்தின இராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்." ( சங்கீதம் 18 : 50 ) என்று கூறுகின்றார் அவர். 

அன்பானவர்களே, இதே கிருபையினைத்  தேவன் நமக்கும் நமது சந்ததிக்கும் தருவேன் என்று வாக்களித்துள்ளனர். நாம் செய்யவேண்டியது தேவனுக்குப்பயந்த நீதியுள்ள ஒரு வாழ்க்கை வாழவேண்டியதே.  "உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்." ( ஏசாயா 55 : 3 ) என்கிறார் சர்வ வல்லமையுள்ள தேவன். 

மனிதர்களாகிய நாம் நமது தலைமுறையினர் நல்ல ஒரு வாழ்க்கை வாழவேண்டுமென்ற நோக்கத்தில் பல்வேறு சொத்து சுகங்களைச்  சேர்த்து வைக்கின்றோம். வங்கிகளில் பணங்களை முதலீடு செய்து வைக்கின்றோம். ஆனால் இவை அனைத்தையும்விட   நாம் செய்யவேண்டியது தேவனுக்குப் பயந்த நீதியுள்ள ஒரு வாழ்க்கை வாழவேண்டியதுதான். அப்படி வாழும்போது, "அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது."
என இன்றைய தியான வசனத்தில் கூறியுள்ளபடி  தேவ இரக்கம் நமது தலைமுறை மக்களுக்குச் சொந்தமாகும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - லுூக்கா 11 : 13 / Luke 11:13

" ஆதவன் " தியானம் - 1981 ஜூலை 11, சனி  2026       "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந...