இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Tuesday, April 11, 2023

அருவருப்பானவன் யார்?

ஆதவன் 🌞 805🌻 ஏப்ரல் 12, 2023 புதன்கிழமை
































"மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது."( நீதிமொழிகள் 3 : 32 )

மாறுபாடுள்ளவன் என்பதற்கு,  சொல்லுக்கும் செயலுக்கும் முரணாகச் செயல்படுபவன் என்றும், கபடன், இரட்டை நாவுக்காரன், வெளிவேஷக்காரன், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவன் எனப் பல பொருள்கொள்ளலாம். இத்தகைய மனிதன் கர்த்தருக்கு அருவருப்பானவன் என்று இன்றைய வசனம் சொல்கின்றது. 

மாறுபாடுள்ள குணமுள்ள மனிதன் பிறரிடம் பாராட்டுப் பெறவேண்டும் என்பதற்காக உண்மையை மாற்றிப்பேசுவான். தனது உண்மை குணத்தை மாற்றி நல்லவன்போலச் செயல்படுவான்.  இப்படி இருக்கலாகாது என்று இயேசு கிறிஸ்துவும் கற்பித்தார்.  "உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்." ( மத்தேயு 5 : 37 ) என்றார் அவர். 

உள்ளதை உள்ளதென்றும் இல்லாததை இல்லை என்றும் கூறாமல் மாற்றி கூறுபவன் மாறுபட்டுள்ளவன். எல்லா இடத்திலும் மனத்திலுள்ளதை உள்ளபடியே கூறுபவன் நீதிமானாயிருப்பான். கர்த்தருடைய ரகசியம் அவனிடம் இருக்கிறது என்று இன்றைய வசனம் கூறுகின்றது. கர்த்தருடைய ரகசியம் என்பது என்ன? "கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்." ( கொலோசெயர் 1 : 27 ) என அப்போஸ்தலரான பவுல் அடிகள் கூறுவதுபோல, மாறுபாடு இல்லாதவனின் உள்ளே கிறிஸ்து  இருப்பதுதான் அந்த ரகசியம். 

இன்று பலரும் இந்த உண்மையினை மறந்து தேவனைத்தேடி எங்கெங்கோ ஓடுகின்றோம். அன்பானவர்களே, இன்றைய வசனம் மிக எளிமையான வழியையே நமக்குக் கற்பிக்கின்றது. நமது உள்ளத்தின் நினைவுகளுக்கேற்ப நமது செயல்களை மாற்றிக்கொண்டால்  அவரை நமது உள்ளத்தில்  வரவைத்திடலாம். 

நமது அன்றாட வாழ்வை எண்ணிப் பார்ப்போம். நமது அலுவலகத்தில், நாம் பணி செய்யும் இடங்களில் நாம் எப்படி செயல்படுகின்றோம். சிலர் தாங்கள் நல்லவர்கள் என்பதனை நிரூபிக்கவேண்டி தங்களோடு பணிசெய்யும் இதரப் பணியாளர்களிடம் எப்போதும்  குற்றம் கண்டு பிடித்துக்கொண்டிருப்பார்கள். இதுபற்றி கேட்டால், "நான் தவறு  என மனதில் பட்டதை நேரடியாகச் சொல்கின்றேன்; என்னிடம் கபடமில்லை " என்பார்கள்.  இது சாத்தானின் தவறான போதனை. "பிறரது கண்ணிலுள்ள துரும்பை எடுக்க முயலுமுன் நமது கண்ணிலுள்ள தூணை அகற்ற முயலவேண்டும் என்றார் இயேசு கிறிஸ்து. 

எனவே, நம்மிடமுள்ள மாறுபாடான குணங்களை மாற்றிட முயலுவோம். மாறுபாடுள்ள செயலோ பேச்சோ நம்மிடம் இல்லாதபடி காத்துக்கொள்வோம்.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அத்தகைய உள்ளத்தில்தான் தங்க இருக்க ஆசைப்படுகின்றார். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Sunday, April 09, 2023

ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.

ஆதவன் 🌞 804🌻 ஏப்ரல் 11, 2023 செவ்வாய்க்கிழமை












"நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்"  (மத்தேயு - 28: 20)

உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்துக்குச் செல்லுமுன் தனது சீடர்களுக்குக் கொடுத்த முக்கியமான கட்டளை தான் இன்றைய தியானத்துக்குரிய வசனம். 

இயேசு கிறிஸ்து உலகத்தில் வாழ்ந்தபோது பல்வேறு போதனைகளைக் கொடுத்தார். ஏற்கெனவே  மோசே மூலம் கடவுள் கொடுத்த கட்டளைகளை மேலும் மெருகேறினதாகவும் அர்த்தமுள்ளவையாகவுமாக மாற்றினார். இந்தப் புதிய ஏற்பாட்டுக் கட்டளைகளை நாம் கைக்கொள்ளவேண்டும். பழைய ஏற்பாட்டின் கட்டளைகளின்படி நாம் நீதிமானாக இருப்பதுபோலத் தெரியலாம். ஆனால் இயேசுவின் உள்ளத்தை ஊடுருவும் பார்வையின்முன் நாம் பாவம் செய்தவர்களாக இருக்கலாம். 

இயேசு கிறிஸ்துவின் போதனைகள்  மோசே மூலம் வழங்கப்பட்டக் கட்டளைகளைவிட மேலானவை. உதாரணமாக, ஒருவர் மோசேயின் கட்டளையின்படி விபச்சாரம் செய்யாதவராக இருக்கலாம். ஆனால் இயேசு கிறிஸ்து கூறினார், "ஒரு பெண்ணை இச்சையுடன் பார்க்கும் எவரும் ஏற்கெனவே அவளுடன் விபச்சாரம் செய்தாயிற்று" என்று.  ஆம், எனவே பழைய கட்டளைகளைக் கடைபிடிப்பதால் மட்டும் ஒருவர் நீதிமானாக முடியாது. "எந்த மனுஷனும்  நியாயப்பிரமாணத்தின்  கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப் படுவதில்லை." (ரோமர் - 3:20)  என்கின்றார் பவுல் அடிகள். பழைய ஏற்பாட்டு கட்டளைகள் அனைத்தையுமே இயேசு கிறிஸ்து இப்படி மெருகேற்றினார். 

இப்படி "நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்" என்கின்றார் இயேசு கிறிஸ்து. இன்றைய வசனம் தொடர்ந்து கூறுகின்றது, "இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்"  அதாவது இப்படித் தனது போதனையைக் கடைபிடிக்க பெலன் தரும்படி அவர் உலகம் முடியும்வரை வரப்போகின்ற மனித சந்ததிகளோடு  இருப்பேன் என்கின்றார். 

இயேசுவின் கட்டளைகளை அப்போஸ்தலனாகிய பவுல் ஆவியின் பிரமாணம் என்கின்றார். மோசேயின் கட்டளைகள் பலவீனமானவைகள் கிறிஸ்து அவற்றை பலமுள்ளவையாக்கினார். மட்டுமல்ல, அவைகளை மனிதர்கள் கடைபிடிக்க உதவுவதற்காகவே உலகினில் வந்தார். இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.(ரோமர் -8:3) என்கின்றார்.

"ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை."  (ரோமர் -8:2)

இயேசு கிறிஸ்துவின் இந்த ஆவிக்குரிய கட்டளைகளை மக்கள் கைக்கொள்ளும்படி உபதேசம் பண்ணுங்கள் என்கிறார். உலகம் முடியும்வரை வாழப்போகின்ற மக்களோடு இருந்து அவற்றைக் கடைபிடிக்கும் பலத்தை அவர் தருவார்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா ?

ஆதவன் 🌞 803🌻 ஏப்ரல் 10, 2023 திங்கள்கிழமை













"இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார்." ( யோவான் 21 : 15 )

இயேசு கிறிஸ்துவின் மரணத்துக்குப் பின்னர் அவரது  சீடர்கள் ஒரு கைவிடப்பட்ட நிலையில் இருந்தனர்.  அவர் உயிர்தெழுந்தபின்னர் சீடர்களுக்கு உடனேயே வல்லமையும் பலமும் கிடைக்கவில்லை. பரிசுத்த ஆவியானவரின் பலம் அருளப்படும்வரை அவர்கள் ஒரு நிர்ப்பந்தமான நிலையில் இருந்தனர். தலைவர் இறந்துவிட்டார். இனி வேறு வழியில்லை; நாம் நமது பிழைப்பைப் பார்க்கவேண்டியதுதான் என்று முடிவெடுத்துத் தங்களது பழைய மீன்பிடி தொழிலுக்குத் திரும்பினர். 

"சீமோன்பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படகில் ஏறினார்கள்" ( யோவான் 21 : 3) என்று வாசிக்கின்றோம்.  ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான் அழைத்தவர்களைக் கைவிடுவதில்லை என்பதனை உறுதிப்படுத்தினார். சீடர்களைத் தேடி வந்தார். அதிசயமாய் அவர்களுக்குப் பெரிய மீன்பாடு கிடைக்கும்படிச் செய்தார். ஆம், தான் மரித்தபின்னரும் உயிருடன் இருக்கும்போதிருந்த அதே வல்லமை உடையவராய் இருப்பதை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். 

அன்பானவர்களே, ஒருவேளை இன்று நாமும் இந்தச் சீடர்களைப்போல நம்பிக்கையற்ற நிலையில் இருக்கலாம். நம்மை ஆதரித்தவர்கள், நாம் வெகுவாக நம்பியிருந்தவர்கள் நம்மைவிட்டு விலகியிருக்கலாம். சீடர்களைப்போல எதிர்கால நம்பிக்கையில்லா நிலைமை, துன்பங்கள், தனிமை நம்மை வாட்டிக்கொண்டிருக்கலாம். ஆனால், நாம் நம்பிக்கையிழக்கத் தேவையில்லை.  

இப்படியொரு நிலையில்தான்  அவர் முக்கியமான ஒரு கேள்வியைப் பேதுருவைப்பார்த்துக் கேட்கின்றார். "யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?" உலக மனிதர்கள்,  பொருட்கள் இவைகளைவிட அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?என்று பொருள்படும் கேள்வி இது. பேதுரு அதற்கு,   "ஆம் ஆண்டவரே நான் உம்மை நேசிக்கின்றேன் என்பதை நீர் அறிவீர்" என்று பதில் கூறுகின்றார். இதன்பின் அவர் பேதுருவுக்கு தனது திருச்சபையின் மேய்ப்பர் பொறுப்பைக் கொடுக்கின்றார். 

ஆம், நமது ஆண்டவர் அன்பை விரும்புபவர். அனைத்தையும்விட தன்னை மனிதர்கள் அன்பு செய்வதையே அவர் விருப்புகின்றார். உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து  பேதுருவைப் பார்த்துக் கேட்ட அதே கேள்வியை நம் ஒவ்வொருவரையும் பார்த்துக் கேட்கின்றார். "நீ இவர்களைவிட / இவைகளைவிட என்னிடத்தில் அன்பாய் இருக்கிறாயா? "

அன்பானவர்களே, இயேசுவுக்கு அன்பாய் இருப்பது எப்படி?  "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்" ( 1 யோவான்  5 : 3 ) என எழுதுகின்றார் இயேசுவின் அன்புச் சீடனான யோவான். மேலும் "அவரது வசனத்தைக்  கைக்கொள்ளுகிறவனிடத்தில்  தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்." ( 1 யோவான்  2 : 5 )

சுருங்கக் கூறவேண்டுமானால், அவரது வார்த்தைகளை நாம் வெறுமனே வார்தைகளாகப் பார்க்காமல் அவற்றை வாழ்வாக்கவேண்டும். இதுவே கிறிஸ்துவை அன்பு செய்தல். இதுவே கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை. எனவேதான் அப்போஸ்தலனாகிய பவுல் அடிகள் அழுத்தமாக எழுதுகின்றார், "ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன், கர்த்தர் வருகிறார்." ( 1 கொரிந்தியர் 16 : 22 ) அதாவது, உயிர்த்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நடுவராக வருவதற்குமுன் வசனம் கூறுவதன்படி அவரிடத்திலுள்ள அன்பில் பெருகுவோம் என்கிறார் அவர்.   

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Saturday, April 08, 2023

உயிர்ப்பு இல்லையானால் நமது பிரசங்கம் வீண்

ஆதவன் 🌞 802🌻 ஏப்ரல் 09, 2023 ஞாயிற்றுக்கிழமை













"கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்." ( 1 கொரிந்தியர் 15 : 17 )

கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதற்கு முக்கியமான சாட்சி நமது இரட்சிப்பு அனுபவம். இந்த அனுபவத்தைப் பெறும்போது நமது பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயத்தைப் பெறுகின்றோம். இது வெறும் வசனமல்ல; அனுபவம்.  நம்முடைய பாவங்கள் சாபங்கள் இவை கிறிஸ்துவின் பாடுகளாலும் உயிர்ப்பினாலும் தான் நீக்கப்படுகின்றன. 

"நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்." ( ஏசாயா 53 : 5 ) என்று ஏசாயா கூறுவது உண்மை என்பதை நமது பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயத்தைப் பெறும்போதுதான் நாம் சரியாக உணர்ந்துகொள்ள முடியும். இல்லாவிட்டால் இது வெறும் வசனமாகவே நமக்குப் புரியும்.

நமது மீறுதல்கள் நிமித்தமே அவர் பாடுபட்டார். அவர் அப்படிப் பாடுபட்டுச் சிந்திய இரத்தத்தால் மீட்பு உண்டாயிற்று. இந்தக் கிறிஸ்தவ விசுவாசமே இயேசு கிறிஸ்துவை மற்ற மனிதர்களிடமிருந்து வேறுபடுத்துகின்றது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழவில்லையானால் அவரை நாம் கடவுளாக வழிபடவேண்டிய அவசியமில்லை. இந்த உலகத்தில் நீதி போதனைகள் செய்து மரித்துப்போன சாதாரண மனிதர்களில் ஒருவரைப்போலவே அவரும் இருந்திருப்பார். 

எனவேதான் அப்போஸ்தலரான பவுல் அடிகள், "கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா." ( 1 கொரிந்தியர் 15 : 14 ) என்று கூறுகின்றார். ஆம், கிறிஸ்து உயிர்த்தெழவில்லையானால் நமது நம்பிக்கை, பிரசங்கங்கள் எல்லாமே வீணாயிருக்கும். நாமும் இன்னும் பாவங்களிலேயே வாழ்ந்துகொண்டிருப்போம். சிறிய பாவங்கள் செய்யும்போதும் நமக்குள் உண்டாகும் மனச்சாட்சியின் உறுத்தல்,  தேவனைவிட்டுப் பிரிந்தது போன்ற உணர்வு, அவற்றை தேவனிடம் அறிக்கையிடும்போது கிடைக்கும் மன அமைதி இவை கிறிஸ்துவின் உயிர்தெழுதலால் நமக்குக் கிடைக்கின்றது. 

மேலும், "மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே."( 1 கொரிந்தியர் 15 : 15 ) என்கின்றார் பவுல் அடிகள். இப்படி ஒரு பொய்யைக் கூறவேண்டிய அவசியமென்ன? அதனால் என்ன லாபம்? அந்த லாபம் யாருக்கு? 

இதனை வாசிக்கும் அன்பு சகோதரனே சகோதரியே நீங்கள் கிறிஸ்தவர்களாகவோ கிறிஸ்துவை அறியாத பிற மதத்தைச் சார்ந்தவர்களாகவோ இருக்கலாம்.   யாராக இருந்தாலும் "கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்." ( ரோமர் 10 : 9 ) எனும் வசனத்தின்படி மீட்பு அனுபவம் பெறுவீர்கள். 

கிறிஸ்துவின் உயிர்ப்பு ஒருவேளை உங்களுக்கு சந்தேகிக்கும் விதமாகவும், கட்டுக்கதையுமாகத்  தெரியலாம். அல்லது சிறு குழந்தையாய் இருந்ததுமுதல் கற்றுக்கொடுக்கப்பட்டதால் அதனை பெயரளவுக்கு நம்பிக்கொண்டிருக்கலாம். உண்மையான விசுவாசத்துடன் உள்ளத்தை அவருக்குக் கொடுத்தால் உயிர்ப்பு உண்மை என்பதை உணர்ந்துகொள்வீர்கள். உயிர்த்த இயேசு கிறிஸ்து உங்களை உள்ளத்தில் பேசி நடத்தும் அனுபவத்தைப் பெறுவீர்கள். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Friday, April 07, 2023

அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்

ஆதவன் 🌞 801🌻 ஏப்ரல் 08, 2023 சனிக்கிழமை










"துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்" ( ஏசாயா 53 : 9 )

மரணத்துக்குத் தீர்ப்பிடப்படும் நிலையிலும் பிலாத்துவிடம் , "நான் ராஜாதான் சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்" ( யோவான் 18 : 37 ) என்று அறிக்கையிட்ட இயேசு கிறிஸ்து மிருக்கத்தைப்போல பலியிடப்பட்டாலும் ராஜ மேன்மையுடன் அடக்கம் செய்யப்பட்டதைப் பார்க்கின்றோம். 

இயேசு கிறிஸ்துவை எல்லோரும் துன்மார்க்கனாக எண்ணவேண்டும் எனக்கருதிய யூதர்கள் அவரை இரு கள்வர்களோடு சேர்த்து சிலுவையில் அறைந்தார்கள். அவரை அவமானப்படுத்தவே இந்தக் காரியத்தைச் செய்தார்கள்.   உலகின் பாவங்களைச் சுமந்து தீர்க்கவே அவர் இந்த அளவுக்குத் தன்னைத் தாழ்த்தினாலும் அவர் இறந்த உடனேயே பிதாவாகிய தேவன் அவரை மகிமைப்படுத்தத் துவங்கிவிட்டார். அதனையே இன்றைய வசனம் கூறுகின்றது. 

ஆம் அவர் இறந்தபோது, பெரிய செல்வந்தர்களோடு இருந்தார் என்று ஏசாயா தீர்க்கதரிசனமாகக் கூறியதுபோல, இயேசுவுக்குச் சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்த யோசேப்பு ( மத்தேயு 27 : 57 ) செல்வந்தனான நிக்கொதேமு ( யோவான் 19 : 39 ) ஆகியோர் உடனிருந்தனர். ராஜாக்களை அடக்கம் செய்வதுபோல நறுமணப் பொருட்கள் அவரது உடல்மேல்  பூசப்பட்டது. "ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான்." ( யோவான் 19 : 39 ) என்று கூறப்பட்டுள்ளது. நூறு ராத்தல் என்பது சுமார் 30 கிலோ அளவாகும். விலைமதிப்புள்ள இந்த வாசனைத் திரவியங்கள் ஒரு அரசனது உடல்  மேல் பூசப்படுவதைப்போல இயேசு கிறிஸ்துவின் உடல்மேல் பூசப்பட்டன. 

உலகத்தின் பார்வைக்கு அற்பமாக எண்ணப்பட்டாலும் தேவன் அவரை மகிமைப்படுத்தினார். செல்வந்தர்களோடு அவர் இருந்தார். அன்பானவர்களே, இதனையே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருக்கேற்ற வாழ்க்கை வாழும் எல்லோருக்கும் தேவன் செய்கின்றார். உலகத்தால் அற்பமாக, புறக்கணிக்கப்பட்டவர்களாக நாம் இருந்தாலும் ஏற்ற இடங்களில் தேவன் நம்மை மகிமைப்படுத்திடுவார்.  

இயேசுவின் பாடுகளும் மரணமும் அழிவிற்கானவை அல்ல. மாறாக, மகிமைக்கானவை. எல்லா மனிதர்களும் மரித்து மண்ணோடு மண்ணாகிப்போகும்போது கிறிஸ்து அப்படியல்லாமல் உயிருடன் எழுந்தார்.  உலகத்தில் மட்டுமல்ல, அவர் பரலோக ஐஸ்வர்யவானாக உயர்ந்தார். எனவேதான் ராஜாவுக்குமுன் மண்டியிடும் மனிதர்கள்போல ஒட்டுமொத்த மனுகுலத்தையும் அவர்முன் மண்டியிடச் செய்தார் தேவன். 

ஆம், "இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்." ( பிலிப்பியர் 2 : 10, 11 )

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Thursday, April 06, 2023

மிருகத்தைப்போல அவர் கொல்லப்பட்டார்

ஆதவன் 🌞 800🌻 ஏப்ரல் 07, 2023 வெள்ளிக்கிழமை




"எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப்படும். அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்." ( எபிரெயர் 13 : 11, 12 )

பாவங்களுக்காக மிருகங்களைப் பலியிடும் பழைய ஏற்பாட்டுப்  பலி முறைமை  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மூலம் நிறுத்தப்பட்டது. அவர் தனது சுய இரத்தத்தையே சிந்தி நித்திய மீட்பினை உண்டுபண்ணினார். ஆம், "காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே." ( எபிரெயர் 10 : 4 )

பழைய ஏற்பாட்டில் பாவ நிவாரண பலியாகப் பலியிடும் மிருகங்களின் இரத்தம் ஆசாரியன் மேலும் மக்கள்மேலும் தெளிக்கப்படும். பலியிடப்படும் மிருகங்களின் உடலோ பாளையத்துக்கு வெளியே (மக்கள் வசிக்கும் பகுதிக்கு வெளியே எரிக்கப்படும்.  இதுவே பாவ நிவாரணப் பலியின் முறைமை. இதனை நாம் லேவியராகமத்தில் வாசிக்கலாம். 

"காளை முழுவதையும் பாளயத்துக்குப் புறம்பே சாம்பல் கொட்டுகிற சுத்தமான இடத்திலே கொண்டுபோய், கட்டைகளின்மேல் போட்டு, அக்கினியாலே சுட்டெரிக்கக்கடவன்; சாம்பல் கொட்டியிருக்கிற இடத்திலே அதைச்சுட்டெரிக்கக்கடவன்." ( லேவியராகமம் 4 : 12 ) அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்."

அன்பானவர்களே, ஒரு மிருகத்தைப்போல நமக்காக அவர் கொல்லப்பட்டார். "அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போல அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்." ( ஏசாயா 53 : 7 ) என்கின்றார் ஏசாயா. 

அன்று இயேசுவின் பாடுகளை நேரில் பார்த்த பலர் அவர் தேவனால் தண்டிக்கப்பட்டார் என்று எண்ணிக்கொண்டனர். "மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்." ( ஏசாயா 53 : 4 )


எபிரெய நிருப ஆசிரியர் இந்த உண்மையினை அழகாக நமக்குப் புரிய வைக்கின்றார். பழைய ஏற்பாட்டுக்கு காலத்தில் மிருகங்கள் மனிதர்கள் வசிக்கும் பகுதியைவிட்டு வெளியே கொண்டுபோகப்பட்டு சுட்டெரிக்கப்படுவதைப்போல கிறிஸ்துவும் நகர வாசலுக்குப் புறம்பே சிலுவையில் அறையப்பட்டார். ஆம், அவர் மனிதனாகப் பிறந்தது மட்டுமல்ல, மனிதனைவிடக் கீழான ஒரு மிருகமாகத்  தன்னை மாற்றினார். எதற்காக? நாம் மீட்பு பெறவேண்டும் என்பதற்காக.

எனவே நாம் செய்யவேண்டியது என்ன? அவரது நிந்தனைகளை அவர் பட்ட அவமானங்களை நம்மில் சுமந்துகொண்டு (நமது பாவங்களைச் சுமந்துகொண்டு) அவரிடம் புறப்பட்டுச் செல்லவேண்டும். "ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்." ( எபிரெயர் 13 : 13 )

இந்தச் சத்தியங்களை நாம் ஏற்றுக்கொள்ளும்போது கிறிஸ்துவின்மேல் அன்பு அதிகரிக்கும். நமது பாவங்களை அவர் மன்னிப்பார் எனும் விசுவாசம் ஏற்படும். ஆம் அன்பானவர்களே, "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்." ( ஏசாயா 53 : 5 )

விசுவாசித்து கிறிஸ்துவை மீட்பராக ஏற்றுக்கொள்ளும்போது உலகம் கொடுக்க முடியாத சமாதானத்தையும் இரட்சிப்பையும் பெற்று மகிழலாம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Wednesday, April 05, 2023

இயேசு என்றால் இரட்சகர் என்று பொருள்.

ஆதவன் 🌞 799🌻 ஏப்ரல் 06, 2023 வியாழக்கிழமை









"நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்." ( யோவான் 8 : 24 )

இன்றைய தியானத்துக்குரிய வசனம் இயேசு கிறிஸ்துவின் கோபத்தின் வார்த்தைகளாக இருக்கின்றதுஅதாவது பாவங்களை மன்னிக்க பலி பொருளாக பிதாவினால் அனுப்பப்பட்டு உலகினில் வந்துள்ள தன்னை விசுவாசிக்காவிட்டால் பாவங்களிலே சாவீர்கள் என்று யூதர்களைப் பார்த்து இயேசு கடுமையாகக் கூறுகின்றார்.

தானே உலகத்தில் வரவிருப்பதாக தீர்க்கதரிசிகளால் அறிவிக்கப்பட்ட மேசியா என்பதை யூதர்களுக்கு அவர் தனது வல்லமையான பல செய்கைகளினால் மெய்ப்பித்திருந்தார்ஆனால் யூதர்கள் அவரை விசுவாசிக்கவில்லைவிசுவாசியாத யூதர்களை பார்த்துதான் இயேசு கிறிஸ்து இந்த வார்த்தைகளைக் கூறினார்.

இயேசு எனும் பெயருக்கு இரட்சகர் என்றுதான் பொருள்மக்களது பாவத்திலிருந்து அவர்களை விடுவிக்கவே அவர் மனிதனாக உலகினில் வந்தார்புதிய ஏற்பாட்டின் முதல் வாக்குத்தத்தமே இதுதான். "அவள் ஒரு குமாரனைப் பெறுவாள்அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாகஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்." ( மத்தேயு 1 : 21 )

இன்றைய வசனத்தில் இயேசு கிறிஸ்து குறிப்பிடுவது உடல் மரணத்தையல்லஆத்தும மரணத்தைப் பற்றியேஉலகினில் பிறந்த அனைவருமே ஒருநாளில் இறந்துதான் ஆகவேண்டும்எனவே இயேசு இங்கு உடல் மரணத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்பது தெளிவுபாவத்தை மன்னிக்க அதிகாரம் படைத்தத் தன்னை யூதர்கள் விசுவாசிக்காததால் இயேசு கோபத்தில், "நானே அவர் என்று நீங்கள் விசுவாசியா விட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்என்று கூறினார்.

அன்பானவர்களேநாம் இன்று இயேசு கிறிஸ்துவை எதற்காக விசுவாசிக்கின்றோம் என்று நம்மை நாமே ஆய்வு செய்து பார்க்க வேண்டியுள்ளதுவெறும் உலக ஆசீர்வாதங்களுக்காநமது பிரச்சனைகளிலிருந்து தீர்வு காண்பதற்காநமது நோய்களை குணமாக்குவதற்கா?

பாவத்தின் பிடியிலிருந்து விடுதலைப் பெறவேண்டுமெனும் ஆவலில் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்போமானால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு மீட்பு அனுபவத்தை பெறுவோம்யூதர்களைப்போல வெறும் அதிசயம் அற்புதங்களை மட்டும் அவரிடம் எதிர்பார்த்து வருவோமானால் அவரது இரக்கத்தால் ஒருவேளை அதிசயங்களை பெற்றாலும் நமது ஆத்துமா மன்னிப்பின்றி அழிவையே சந்திக்கும்.

பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறும்போது தான் நாம் தேவனை அறிய முடியும்ஆம் நமது பாவங்கள் தேவனை நாம்  அறிய  முடியாதபடி  நமக்கும்  தேவனுக்கும்  நடுவாக  தடுப்புச்  சுவராக உள்ளதுஇயேசு கிறிஸ்துதான் அந்தப் பாவஅடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவிக்க முடியும்நமது சுய பலத்தால் அது முடியாதுஅவருக்கு  நம்மை  ஒப்புக்கொடுப்போம்.  ஆண்டவரேஇந்தப் பாவ அடிமைத்தனத்திலிருந்து என்னை விடுவித்து உமது இரத்தத்தால் என்னைக் கழுவி இரட்சிப்பை எனக்குத் தந்தருளும் என வேண்டுவோம்.

 "குமாரன் (இயேசுஉங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்," (  யோவான் 8 : 36 )

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com